![](pmdr0.gif)
மாந்தருக்குள் ஒரு தெய்வம் - முதற் பாகம்
அத்தியாயங்கள் 34-65,
கல்கி (ரா. கிருஷ்ணமூர்த்தி)
mAntarukkuL oru teivam (biography of Mahatma Gandhi)
volume 1, chapters 34-65
by Kalki R. Krishnamurthy
In tamil script, unicode/utf-8 format
-
Acknowledgements:
Our Sincere thanks go to the Tamil Virtual Academy for providing a PDF of this work.
The e-text has been generated using Google OCR online tool.
Sincere thanks also go to Prof. Pas Pasupathy of Toronto for bringing the availability of
a soft PDF version of this work at the TVA.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2019.
to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
are
https://www.projectmadurai.org/
மாந்தருக்குள் ஒரு தெய்வம் - முதற் பாகம்
கல்கி (ரா. கிருஷ்ணமூர்த்தி)
mAntarukkuL oru teivam (biography of Mahatma Gandhi)
volume 1, chapters 34-65, by Kalki R. Krishnamurthy
Source:
மாந்தருக்குள் ஒரு தெய்வம் - முதற் பாகம்
கல்கி (ரா. கிருஷ்ணமூர்த்தி)
மங்கள நூலகம், சென்னை -6
முதற் பதிப்பு : மார்ச்சு 1955
விலை ரூ. 6.
Printed by R. Surianarayanan, at Gnanodaya Press
11, Anderson Street, Madras-1
-------------
பொருளடக்கம்
-
மாந்தருக்குள் ஒரு தெய்வம் - முதற் பாகம்
தென்னாப்பிரிக்காவிலிருந்து இரண்டாவது முறை காந்திஜி கல்கத்தாவுக்குத் திரும்பிய 1901-ஆம் ஆண்டில் இந்திய காங்கிரஸ் மகாசபை கல்கத்தாவில் நடைபெற்றது. ஸர் பிரோஸிஷா மேத்தாவின் தலைமைச் சீடரான ஸ்ரீ டின்ஷா வாச்சாவின் தலைமையில் நடந்தது. காந்திஜி இந்தக் காங்கிரஸுக்குப் போகத் தீர்மானித்திருந்தார். காங்கிரஸில் தென்னாப்பிரிக்கா இந்தியர்களைப் பற்றிய தீர்மானம் கொண்டு வரவும் எண்ணியிருந்தார்.
ஸர் பிரோஸிஷா மேத்தா, ஸ்ரீ டின் ஷா வாச்சா, ஸ்ரீ சிமன் லால் சேதால் வட் ஆகியவர்கள் கல்கத்தா காங்கிரஸுக்குப் பிரயாணம் செய்த அதே ரயிலில் காந்திஜியும் ஏறிக் கொண்டார். ஸர். பி. மேத்தா முதலியவர்கள் விசேஷ வசதிகள் அமைந்த தனி வண்டியில் பிரயாணம் செய்தார்கள். குறிப்பிட்ட இரண்டு ரயில்வே ஸ்டேஷன்களுக்கிடையில் காந்திஜி மேற்படி தனி வண்டிக்கு வந்து ஏறிக்கொண்டு அவர் சொல்ல விரும்பிய விஷயங்களைச் சொல்ல வேண்டும் என்று ஏற்பாடாகி யிருந்தது.
அதன்படியே குறிப்பிட்ட ரயில் நிலையத்தில் காந்திஜி ஸர் பிரோஸிஷாவின் தனி வண்டிக்கு வந்தார். அச்சமயம் மேத்தா, வாச்சா முதலியவர்கள் இந்தியாவின் அர்சியல் நிலைமை பற்றி விவாதித்துக் கொண்டிருந்தார்கள். காந்திஜியைப் பார்த்ததும் மேத்தா, "காந்தி ! உமக்கு நாங்கள் எந்த உதவியும் செய்ய முடியாது. நீர் விரும்புகிறபடி ஒரு தீர்மானத்தை வேண்டுமானால் காங்கிரஸில் நிறைவேற்றி வைக்கிறோம். ஆனால் என்ன உபயோகம்? நம்முடைய சொந்த நாட்டிலேயே நமக்கு அதிகாரமும் இல்லை; உரிமையும் இல்லை, ஐரோப்பியர் குடியேறிய இன்னொரு நாட்டில் இதை விட நல்ல நிலைமையில் இந்தியர் எப்படி இருக்கமுடியும்?" என்றார்.
பிரோஸிஷாவின் அபிப்பிராயத்தைச் சேதால்வட் ஆமோதித்தார். ஸ்ரீ டின்ஷா வாச்சாவோ, "அடடா! நான் என்ன செய்யட்டும்?" என்ற தோரணையில் காந்திஜியைப் பரிதாபமாகப் பார்த்தார். அவர்களிடம் தம் கட்சியை எடுத்துச்சொல்லி வாதிடலாம் என்று காந்திஜி உத்தேசித்தார். ஆனால் அது பலிக்கவில்லை. பம்பாயின் முடிசூடா மன்னரை ஒருவர் வாதிட்டுத் திருப்பி விடுவது முடிகிற காரியமா ? காந்திஜியை அதிகமாகப் பேசுவதற்கே அவர்கள் விடவில்லை. தென்னாப்பிரிக்கா பற்றிய தீர்மானம் கொண்டு வரவாவது அநுமதிக்கிறார்களே என்ற திருப்தியுடன் காந்திஜி அந்த வண்டியிலிருந்து இறங்கித் தம் இடத்துக்குச் சென்றார்.
வண்டி கல்கத்தாவை அடைந்தது. கல்கத்தா காங்கிரஸின் வரவேற்புக் கழகத்தார் காங்கிரஸ் அக்கிராசனரை மிகச் சிறப்பாக அழைத்துச் சென்றார்கள். காந்திஜி தாம் எங்கே போவது என்று ஒரு தொண்டரைக் கேட்டார். பிரதிநிதிகள் பலர் தங்கியிருந்த ரிப்பன் கலாசாலைக் கட்டிடத்துக்குக் காந்திஜியை அத்தொண்டர் அழைத்துச் சென்றார். லோகமான்ய திலகரின் ஜாகை அந்தக் கட்டிடத்திலே தான் என்று அறிந்ததும் காந்திஜிக்கு மகிழ்ச்சி உண்டாயிற்று.
இந்தியாவின் தேசியத் தலைவர்களில் கோகலேக்கு அடுத்த படியாகத் திலகரிடம் காந்திஜி பெருமதிப்புக் கொண்டிருந்தார். லோகமான்யருடைய ஜாகை ஒரு தர்பார் மண்டபத்தைப் போல் விளங்கியது. நண்பர்களும் சீடர்களும் புடை சூழத் திலக பெருமான் ஒரு சக்கரவர்த்தியைப்போல் தம் படுக்கையில் வீற்றிருந்த காட்சி காந்திஜியின் உள்ளத்தில் பதிந்தது. "நான் மட்டும் ஓவியக்காரனாயிருந்தால் அந்தக் காட்சியைப் படமாக எழுதியிருப்பேன்" என்று காந்திஜி தம் சுய சரிதத்தில் எழுதியுள்ளார்.
லோகமான்யரைப் பார்க்க வந்தவர்களில் ஒருவர் "அமிருதபஜார் பத்திரிகை"யின் பிரசித்த பத்திரிகாசிரியரான பாபு மோதிலால் கோஷ். அவ்விருவரும் அதிகார வர்க்கத்தின் தவறுகளைப் பற்றிப் பேசி 'ஓஹோ' என்று சத்தம் போட்டுச் சிரித்தார்கள். ஸ்ரீ மோதிலால் கோஷ் நகைச் சுவைக்குப் பெயர் போன ஆசிரியர் அல்லவா ?
இம்மாதிரி தேசபக்தர்களைப் பார்ப்பதும் அவர்கள் அளவளாவிப் பேசுவதைக் கேட்பதும் காந்திஜிக்கு மகிழ்ச்சி தந்தது. ஆனால் காங்கிரஸ் சம்பந்தமான வேறு சில அம்சங்கள் ஏமாற்றத்தையும் மன வேதனையையும் அளித்தன.
காங்கிரஸ் பிரதிநிதிகள் தங்கியிருந்த விடுதி மிக மோசமான நிலையில் இருந்தது. சுகாதார ஏற்பாடுகள் கொஞ்சமும் செய் யப்படவில்லை. நாலாபுறமும் குப்பைகள். எங்கே பார்த்தாலும் குட்டை குட்டையாகத் தண்ணீர் தேங்கி நின்றது. கக்கூசுகள் மிகக் கொஞ்சம். அவற்றின் துர்நாற்றமோ சகிக்க முடியாதது. காங்கிரஸ் விடுதியில் ஊழியம் செய்வதற்காக அமர்த்தப் பட்டிருந்த தொண்டர்களுக்குத் தொண்டு என்பதே தெரியாது. ஒரு தொண்டரிடம் ஏதேனும் சொன்னால் அதை அவர் இன்னொருவரிடம் சொல்வார். அவர் மூன்றாவது தொண்டரிடம் சொல்வார். காரியம் ஒன்றும் நடைபெறாது. போதாததற்குத் தொண்டர்கள் அடிக்கடி தங்களுக்குள் சச்சரவு இட்டுக் கொண்டிருந்தார்கள். எனவே பிரதிநிதிகள் திக்குத் திசை தெரியாமல் என்ன செய்வது.
தமிழ்நாட்டிலிருந்து வந்திருந்த பிரதிநிதிகள் தங்களுக்கென்று தனிச் சமையலறை ஏற்படுத்திக் கொண்டு அதை நாலாபுறமும் மூடி அமைத்திருந்ததையும் காந்திஜி கவனித்தார். தமிழ்நாட்டுப் பிரதிநிதிகள் தாங்கள் சாப்பிடுவதைப் பிறர் பார்த்தாலும் திருஷ்டி தோஷம் ஏற்படும் என்ற நம்பிக்கை கொண்டிருந்தார்கள். இதனால் சமையல், சாப்பாடு, கையலம்புதல் எல்லாம் ஓர் அறைக்குள்ளேயே நடந்தன. அந்த அறைக்குள் செல்வோர் திக்குமுக்காடிப் போகும்படி சதா காலமும் புகை சூழ்ந்திருந்தது. தமிழ்நாட்டுப் பிரதிநிதிகளின் இந்தப் போலி வர்ணாசிரமம் காந்திஜியின் உள்ளத்தை வருத்தியது. "ராம் ராம் ! காங்கிரஸ் பிரதிநிதிகளாக வரும் தேச பக்தர்களுக்குள்ளேயே இப்படித் தீண்டாமை குடி கொண்டிருந்தால் மற்ற ஜனங்களிடையே எப்படி இராது!" என்று காந்திஜி சொல்லி மிகவும் வருத்தப்பட்டார்.
காங்கிரஸ் விடுதியைச் சுத்தம் செய்யும் விஷயமாகத் தொண்டர்களுடன் பேசிப் பார்த்தார், அவர்களுக்குச் சிரத்தை ஏற்படவில்லை. “இந்தக் குப்பைகளைத் தள்ள வேண்டாமா ?" என்றார் காந்திஜி. "அதெல்லாம் தோட்டிகளின் வேலை !" என்றார்கள் தொண்டர்கள். உண்மைத் தொண்டு செய்யும் முறையை அவர்களுக்குக் காந்திஜி தாமே செய்து காட்டிக் கற்பிக்க விரும்பினார். ஒரு தொண்டரிடம் விளக்குமாறு வேண்டும் என்று கேட்டார். அவர் ஆச்சரியத்தினால் திடுக்கிட்டுக் காந்திஜியை உற்று நோக்கினார். ஆனால் விளக்குமாறு கொண்டு வரவில்லை. கடைசியாக ஒரு விளக்குமாறு சம்பாதித்துக் காந்திஜி தாமே கூட்டிக் காட்டினார். ஆனால் அவரைப் பின்பற்ற யாரும் முன் வரவில்லை. இந்த நிலைமையைக் குறித்துக் காந்திஜி எழுதியிருப்பதாவது:-
"பிரதிநிதிகளில் சிலர் தங்கள் அறைகளின் வெளிப் புறத்துத் தாழ்வாரத்தை இரவு நேரத்தில் அசுத்தம் செய்யவும் பின் வாங்கவில்லை. காலையில் தொண்டர்களிடம் இத்தகைய அசுத்தமான இடங்களைக் காட்டினேன். அவ்விடங்களைச் சுத்தம் செய்ய எவரும் முன்வரவில்லை. அந்தக் கெளரவத்தை என்னுடன் பங்கிட்டுக் கொள்ள ஒருவரும் தயாராயில்லையெனக் கண்டேன். இப்போது நிலைமை பெரிதும் அபிவிருத்தி யடைந்திருக்கிறது. ஆனால் இன்றுகூட காங்கிரஸ் விடுதியில் கண்டவிட மெல்லாம் அசுத்தமாக்கும் பிரதிநிதிகள் இல்லாமற் போகவில்லை. அவ்வாறே அந்த இடங்களைச் சுத்தப்படுத்து வதற்கு எல்லாத் தொண்டர்களும் முன் வருவதில்லை ............
“காங்கிரஸ் மகாசபை இன்னும் சில தினங்கள் நீடித்து நடக்குமானால், கொள்ளை நோய் பரவுவதற்குப் பெரிதும் அது கூலமான நிலைமை ஏற்படும் என்பதைக் கண்டேன்."
காந்திஜி கல்கத்தா சேர்ந்து இரண்டு தினங்களுக்குப் பிறகுதான் காங்கிரஸ் மகாசபை கூடுவதாயிருந்தது. அந்த இரண்டு நாளும் காங்கிரஸ் காரியாலய வேலை ஏதேனும் செய்யலாம் என்று காந்திஜி கருதினார். பாபு பூபேந்திரநாத் போஸும் ஸ்ரீ கோஷால் என்பவரும் அச்சமயம் காங்கிரஸ் மகாசபையின் காரியதரிசிகள். காந்திஜி முதலில் பூபேந்திரநாத் போஸைப் பார்த்தார். அவர் கோஷாலிடம் போகும்படி சொன்னார். கோஷால் காந்திஜியைப் பார்த்துப் புன்னகையுடன், "உமக்கு என்ன வேலை கொடுக்கட்டும் ? குமாஸ்தா வேலை தான் கொடுக்கலாம். செய்கிறீரா?" என்றார். "பேஷாகச் செய்கிறேன் " என்றார் காந்திஜி. கோஷாலுக்கு இது சிறிது வியப்பை யளித்தது. சுற்றி நின்ற தொண்டர்களைப் பார்த்து, ”இவர் சொல்வது உங்கள் செவியில் விழுந்ததா? தொண்டு என்றால் எந்த வேலைக்கும் தயாராயிருக்க வேண்டும். இதுதான் சரியான மனப்பாங்கு" என்றார். பிறகு காந்திஜியைப் பார்த்து, "அதோ ஒரு கட்டுக் கடிதங்கள் கிடக்கின்றன. அவற்றைப் பிரித்துப் பாருங்கள். பெரும்பாலும் உபயோகமற்ற விஷயங்களாக இருக்கும். முக்கியமான விஷயம் - பதில் எழுதவேண்டும் ? என்று தோன்றுகிற கடிதங்களை மட்டும் என்னிடம் கொண்டு வந்து கொடுங்கள்!" என்று சொன்னார்.
கொடுத்த வேலையைக் காந்திஜி திருப்திகரமாகச் செய்து முடித்தார். அதற்குள் காந்திஜியைப் பற்றி விசாரித்து ஸ்ரீ கோஷால் தெரிந்துகொண்டார். "அடடா! உங்களுக்குக் குமாஸ்தா வேலை கொடுத்தேனே !" என்று வருத்தப் பட்டார். காந்திஜி "அதைப்பற்றிக் கவலை வேண்டாம். காங்கிரஸ் தொண்டு எதுவானால் என்ன ? இந்த மாதிரி சில்லரை வேலைகளில் தான் எனக்கு அநுபவம் வேண்டும்!" என்றார்.
கோஷாலும் காந்திஜியும் சிறந்த நண்பர்களானார்கள். அதனால் காங்கிரஸ் நடைமுறைகளையும் காங்கிரஸ் தலைவர்களின் ஆலோசனைகளையும் அருகிலிருந்து கவனிக்கக் காந்திஜிக்குச் சரியான சந்தர்ப்பம் கிட்டியது.
* * * *
காங்கிரஸ் மகாசபை கூடியது. விஸ்தாரமான பந்தலும் அணிவகுத்து நின்ற தொண்டர் படையும் மேடைமீது அமர்ந்திருந்த தலைவர் குழாமும் காந்திஜியைப் பிரமிப்படையச் செய்தன. இந்தியாவில் அப்போது புகழ்பெற்றிருந்த தேசீயத் தலைவர்கள் எல்லாரும் மேடைமீது பிரசந்நமாகி யிருந்தார்கள். அந்த மகாசபையில் தாம் எம்மாத்திரம் என்ற உணர்ச்சியுடன் ஒரு மூலையில் காந்திஜீ அடக்கமாக உட்கார்ந்திருந்தார்.
அந்த நாளில் காங்கிரஸ் அக்கிராசனரின் பிரசங்கம் ஒரு தனிப் புத்தகத்தைப்போல் அவ்வளவு நீளமாயிருக்கும். பிரசங்கம் முழுவதையும் படிப்பது இயலாத காரியம். சில பகுதிகளை மட்டுமே படிப்பார்கள்.
அக்கிராசனப் பிரசங்கம் முடிந்த பிறகு விஷயாலோசனைக் கமிட்டியின் கூட்டம் நடந்தது. அதற்குக் காந்திஜியை கோகலே அழைத்துச் சென்றார். பல தீர்மானங்கள் பீரேரணைக்கு வந்தன. ஒவ்வொன்றையும் ஆதரிக்க ஒரு பெரிய தலைவர் இருந்தார். பேரிகை முழக்கம் போன்ற குரலில் ஆங்கில பாஷையில் பிரசங்கங்கள் நிகழ்ந்தன. நேரமாக ஆக, காந்திஜிக்குத் தம்முடைய தீர்மானத்தைப் பற்றிக் கவலை அதிகமாயிற்று. கடைசியில் வந்த தீர்மானங்கள் மின்னல் வேகத்தில் பைசல் செய்யப்பட்டன. இரவு பதினோரு மணி ஆயிற்று ; எல்லாருக்கும் எழுந்து போக அவசரம். காந்திஜிக்கோ அந்தப் பெரிய கைகளுக்கு முன்னால் பேசத் தயக்கம். கோகலேயின் அருகில் சென்று, "என்னுடைய தீர்மானத்தின் கதி என்ன ? கொஞ்சம் கவனித்துக் கொள்ளுங்கள்" என்று சொன்னார்.
இந்தச் சமயத்தில் ஸர் பிரோஸிஷா மேத்தா, "எல்லாம் முடிந்து விட்டதல்லவா ? கூட்டத்தை இத்துடன் முடித்து விடலாமா ?" என்று கேட்டார். “இல்லை, இல்லை. தென்னாப்பிரிக்கா தீர்மானம் பாக்கியிருக்கி றது. காந்தி வெகு நேரமாய்க் காத்துக் கொண் டிருக்கிறார்!" என்று சத்தம் போட்டுக் கூறினார் கோகலே.
"தீர்மானத்தைத் தாங்கள் பார்த்து விட்டீர்களா?"
"ஓ! பார்த்தேன்."
"தீர்மானம் எப்படி யிருக்கிறது ? "
"மிகவும் நன்றா யிருக்கிறது."
"அப்படியானால் சரி ! எங்கே, காந்தி ! தீர்மானத்தைப் படியுங்கள், கேட்கலாம்!"
காந்திஜி நடுங்கிக் கொண்டே ஈனஸ்வரத்தில் தீர்மானத்தைப் படித்தார். படித்து முடித்ததும், "தீர்மானம் ஏக மனதாக நிறைவேறியது " என்று பலர் கூவினார்கள்.
"காந்தி! இதைக் காங்கிரஸில் பிரேரணை செய்து பேசுவதற்கு உமக்கு ஐந்து நிமிஷம் தரப்படும்" என்றார் அக்கிராசனர் டின் ஷா வாச்சா.
இந்த அவசரக் காரியம் காந்திஜிக்குப் பிடிக்கவில்லை. "தீர்மானம் இன்ன தென்பதையே ஒருவரும் தெரிந்துகொள்ள வில்லையே!" என்று வருத்தப் பட்டார்.
காங்கிரஸில் மேற்படி தீர்மானத்தைப் பிரேரணை செய்து பேச வேண்டியது பற்றியும் கவலைப்பட்டார். ஐந்து நிமிஷத்திற்குள் என்னத்தைச் சொல்வது என்பதே தெரியவில்லை. விஷயமோ மிகச் சிக்கலான து. மற்ற தீர்மானங்களைப் பற்றிப் பேசியவர்களில் சிலர் முக்கால் மணியும் அரைமணியுங் கூடப் பேசினார்கள். ஆனால் காந்தி எழுந்து பேசத் தொடங்கி மூன்று நிமிஷத்திலேயே அக்கிராசனர் வாச்சா மணி அடித்து விட்டார்.
மணிச் சத்தம் கேட்டவுடனே காந்திஜியும் உட்கார்ந்து விட்டார். ஆனால் தீர்மானம் என்னமோ மற்ற எல்லாத் தீர்மானங்களையும் போல் ஏகமனதாக நிறைவேறி விட்டது. காங்கிரஸினால் தீர்மானம் நிறைவேற்றப் பட்டதென்பதே காந்திஜிக்கு ஓரளவு திருப்தியும் மகிழ்ச்சியும் அளித்தது. காங்கிரஸ் ஒப்புக்கொண்டது என்றால், இந்தியா தேசமே ஒப்புக் கொண்டதாகும் அல்லவா ?
--------------------
காங்கிரஸ் முடிந்துவிட்டது. ஆயினும் கல்கத்தாவில் இன் னும் பல பிரமுகர்களைப் பார்த்துப் பேசித் தென்னாப்பிரிக்கா இந்தியர் விஷயத்தில் சிரத்தை உண்டாக்க வேண்டும் என்று காந்திஜி நினைத்தார். இதற்காகக் கல்கத்தாவில் ஒரு மாதம் தங்குவதென்று உத்தேசித்தார். இந்த விவரம் ஸ்ரீ கோகலேக்குத் தெரிந்ததும் காந்திஜி தம்முடைய ஜாகைக்கு வந்து தம்முடன் தங்கியிருக்க வேண்டும் என்று அழைத்தார்.
அப்போது இந்தியா தேசத்துக்குக் கல்கத்தா தலைநகரா யிருந்தது. வைஸ்ராய் சர்வாதிகாரம் படைத்தவராயிருந்த போதிலும் இந்தியச் சட்டசபை ஒன்றும் இருந்தது. அதில் ஸ்ரீ கோகலே அங்கத்தினர். ஆதலால் இந்தியச் சட்டசபை நடக்கும் சமயங்களில் ஸ்ரீ கோகலே கல்கத்தாவில் ஜாகை வைத்துக்கொண்டு வசித்தார்.
சங்கோசத்தினால் இரண்டு தினம் வரையில் காந்திஜி கோகலே வீட்டுக்குப் போக வில்லை. எனவே கோகலேயே ஒரு நாள் வந்தார். "நீர் இந்த நாட்டினர் ; இந்த நாட்டிலே இருந்து பல தொண்டுகள் செய்ய வேண்டியவர். ஆனால் இப்படிச் சங்கோசப்பட்டால் ஒரு காரியமும் நடைபெறாது. எல்லாருடனும் கலந்து பழகக் கற்றுக் கொள்ள வேண்டும்" என்று சொன்னார். அதன் பேரில் கோகலேயின் ஜாகைக்குக் காந்திஜி கிளம்பினார்.
புறப்படுவதற்கு முன்னால் காந்திஜி தங்கியிருந்த இந்தியா கிளப்பில் ஒரு விசித்திரமான சம்பவம் நடைபெற்றது.
அச்சமயம் ஏழாம் எட்வர்டு சக்கரவர்த்தி முடிசூட்டப்பட்டார். அரசரின் பிரதிநிதியான லார்டு கர்ஸான் மேற்படி வைபவத்தை முன்னிட்டு ஒரு தர்பார் நடத்தினார். இந்தியா கிளப்பில் தங்கி யிருந்த ராஜாக்களும் மகாராஜாக்களும் மேற்படி தர்பாருக்குப் போனார்கள். போகும்போது அவர்கள் வங்காளிகள் வழக்கமாக அணியும் வேஷ்டி, சட்டை, அங்கவஸ்திரம் இவற்றுக்குப் பதிலாக, ஆங்கிலேயர் வீட்டில் பணி செய்யும் ஏவலாளரின் உடை போன்ற நீண்ட அங்கி, இடுப்புப் பட்டை, வர்ணத் தலைப்பாகை ஆகியவற்றை அணிந்து சென்றார்கள், காந்திஜி இதைக் கவனித்தார். "அழகிய வேஷ்டி அங்கவஸ்தி ரத்தை விட்டு, இந்தக் குற்றேவல் உடையை ஏன் அணிகிறீர்கள்?" என்று கேட்டார். அதற்கு ஒரு ராஜா சொன்ன பதிலாவது :-- " எங்களுக்கும் குற்றேவலாளிக்கும் வித்தியாசம் ஒன்றுமில்லை. நாங்கள் கர்ஸான் பிரபுவின் குற்றேவலாளர் தான். தர்பாருக்குப் போகாமற் போனால் எங்களுடைய ராஜ்யமே போய்விடும். போனால் இந்த உடை தரித்துத் தான் போக வேண்டும். போகத்தான் போகிறோமே ? வைஸ்ராயிடம் ஒரு வார்த்தை பேச முடியும் என்று நினைக்கிறீர்களா ? அது தான் கிடையாதே! ". இவ்வாறு மனம் விட்டுப் பேசியவரிடம் காந்திஜிக்கு மிகுந்த அநுதாபம் உண்டாயிற்று.
பல வருஷங்களுக்குப் பிறகு இதே மாதிரி சுதேச ராஜாக்களின் ஆடை ஆபரணங்கள் சம்பந்தமாக மகாத்மா காந்தி தம்முடைய மனவேதனையை வெளியிடவேண்டி நேர்ந்தது. லார்ட் ஹார்டிஞ்ச் இந்தியாவின் வைஸ்ராயாக இருந்த காலத்தில் காசியில் ஹிந்து சர்வகலாசாலையின் அஸ்திவார விழா நடை பெற்றது. அப்போதும் வைஸ்ராய் ஹார்டிஞ்ச் ஒரு தர்பார் நடத்தினார். ராஜாக்களும் மகா ராஜாக்களும் ஸ்திரீகளைப் போல் ஆடை ஆபரண அலங்காரங்களுடன் வந்திருந்தார்கள். பட்டாடைகள் தரித்துக்கொண்டு கழுத்தில் முத்துமாலைகளும் கையில் காப்புக் கொலுசுகளும் வாகுவலயங்களும் அணிந்திருந் தார்கள். அவர்களுடைய சிங்காரத் தலைப்பாகைகளில் முத்துக்களும் வைரங்களும் பதித்திருந்தன. இவ்வளவோடு அரைக் கச்சுகளில் பட்டாக் கத்திகளும் தரித்திருந்தார்கள். அந்தப் பட்டாக் கத்திகளின் கைப் பிடிகளில் இரத்தினங்களும் வைரங்களும் ஜொலித்தன. இதை யெல்லாம் பார்த்துக் காந்தி மகானுக்குச் சகிக்கவேயில்லை. விசாரித்ததில் ராஜாக்களில் பலர் அத்தகைய ஆடை அணிகளை மனப் பூர்வமாக வெறுக்கிறார்கள் என்றும் வைஸ்ராயின் தர்பாருக்கு வரும் போது அத்தகைய அணிமணிகளுடனே அவர்கள் வரவேண்டு மென்பது கட்டாயம் என்றும் தெரிய வந்தது.
மேற்படி விழா சம்பந்தமாக நடந்த ஒரு கூட்டத்தில் காந்திஜியைப் பேசும்படி கேட்டுக் கொண்டபோது இதைப் பற்றியே பேசி விட்டார். "நம்முடைய ராஜாக்களும் மகா ராஜாக்களும் எதற்காக இப்படிக் கொலுப் பொம்மைகளைப் போல் அலங்கரித்துக் கொண்டிருக்கிறார்கள் ? இவர்களுக்குத் தன் மதிப்பு உணர்ச்சி வேண்டாமா ? பிரிட்டிஷ் இராஜப் பிரதிநிதியைக் கண்டு எதற்காக இவர்கள் இவ்வளவு பயந்து நடுங்க வேண்டும்? பரம்பரையான இவர்களுடைய தைரியமும் வீரமும் எங்கே ?" என்று இவ்விதம் பேசினார்.
கூட்டத்தி லிருந்தவர்களில் டாக்டர் பெஸண்டு அம்மையும் ஒருவர். காந்திஜி இவ்விதம் தம் மனத்திலிருந்ததை ஒளியாமல் வெளியிட்டது டாக்டர் பெஸண்டு அம்மைக்குக் கோபத்தை உண்டாக்கியது. காந்திஜி மரியாதைக் குறைவாகப் பேசியதைக் கண்டிப்பதற்கு அறிகுறியாக டாக்டர் பெஸண்டு அம்மை எழுந்து வெளியே சென்றார். இன்னும் சிலரும் அவரைத் தொடர்ந்து சென்றார்கள். இதைப் பற்றிப் பெஸண்டு அம்மையார் பத்திரிகைகளுக்கு ஓர் அறிக்கையும் விட்டார். ஆனால் காந்திஜி கூறியது சரிதான் என்று தேச மக்களில் பெரும்பாலோர் ஆமோதித்தார்கள். சுதேச மன்னர்களிலேயே பலர் அதைப் பற்றி மனதிற்குள்ளே மகிழ்ச்சி யடைந்தார்கள். இந்தச் சம்பவத்தினால் காந்திஜியிடம் சுதேச மன்னர்களுடைய மதிப்பு வளர்ந்தது.
------------
ஸ்ரீ கோகலேயின் வீட்டுக்குக் காந்தி மகான் போன முதல் தினமே தம் சொந்த வீட்டில் இருப்பதாக அவர் எண்ணும்படி யிருந்தது. கோகலே அவருடைய செளகரியத்துக்காக அத்தகைய ஏற்பாடுகளைச் செய்திருந்தார். காந்திஜிக்கு அவ்வளவு அதிகமான செளகரியங்களும் வேண்டியதில்லை யல்லவா ? அவருடைய காரியங்களை அவரே செய்து கொள்ளும்படி விட்டு விட்டால் அதுவே அவருக்குப் பெரிய செளகரியம். குற்றேவல் புரிவதற்கு ஆட்கள் அவருக்குத் தேவையில்லை. இதெல்லாம் கோகலேயின் மனத்தைப் பெரிதும் கவர்ந்தது. அடிக்கடி காந்திஜியின் தூய்மையான வழக்க பழக்கங்களைப் புகழ்ந்து பாராட்டி அவர் பேசி வந்தார்.
கோகலே தம்மைப் பார்க்க வந்த பிரமுகர்களை யெல்லாம் காந்திஜிக்கும் அறிமுகப் படுத்தினார். அவர்களுள் ஒருவர் ஆசிரியர் பி. சி. ராய். உயர்ந்த அறிவுக்கும் எளிய வாழ்வுக்கும் சிறந்த தேசபக்திக்கும் ஆசிரியர் பி. சி. ராய் பிரசித்தி பெற்றவர். இரசாயன சாஸ்திர ஆராய்ச்சியில் உலகப் புகழ் அடைந் தவர். தம்முடைய இரசாயன சாஸ்திர அறிவை நாட்டின் நன்மைக்குப் பயன்படுத்த விரும்பி வங்காளத்தில் மிகப் பெரிய மருந்து உற்பத்திச் சாலையை அவர் ஏற்படுத்தி யிருந்தார்.
ஆசிரியர் பி. சி. ராயை ஸ்ரீ கோகலே பின் வருமாறு காந்திஜிக்கு அறிமுகப்படுத்தி வைத்தார் :- "இவர்தான் ஆசிரியர் ராய். மாதம் ரூ. 800 இவருக்குச் சர்வகலாசாலையில் சம்பளம் கொடுக்கிறார்கள். ஆனால் தமக்காக ரூ. 40 மட்டும் வைத்துக் கொண்டு பாக்கியைப் பொது நன்மைக்காகச் செலவிடுகிறார். இன்று வரை இவர் பிரம்மசாரி; கலியாணம் செய்து கொள்ளும் எண்ண மும் இவருக்குக் கிடையாது."
ஸ்ரீ கோகலேக்கும் ஆசிரியர் ராய்க்கும் நடந்த சம்பாஷணைகளைக் கேட்டுக் கொண்டிருப்பது காந்திஜிக்கு மிகவும் பிரியமாயிருந்தது. பொது நன்மைக்குரிய விஷயங்களைப் பற்றியே அவர்கள் பேசுவார்கள். ஆகையால் எவ்வளவு நேரம் கேட்டுக் கொண்டிருந்தாலும் அலுப்பு உண்டாகாது. இன்னும் பேச மாட்டார்களா என்று இருக்கும்.
பிற்காலத்தில் ஆசிரியர் பி. சி. ராய் காந்திஜியின் சிறந்த நண்பர்களில் ஒருவரானார். கதர் இயக்கம் முதலிய நிர்மாண திட்ட வேலைகளுக்கு வங்காளத்தில் பேருதவி புரிந்தார்.
கோகலேயின் பக்கத்தில் இருந்து அவர் வாழ்க்கை நடத்திய முறையையும் பொது வேலை செய்த முறையையும் கவனிப்பதில் காந்திஜிக்குப் பெரு மகிழ்ச்சி உண்டாயிற்று. ஒரு நிமிஷமேனும் கோகலே தம் காலத்தை வீணாக்குவதில்லை. யாருடன் பேசினாலும் பழகினாலும் நட்புக் கொண்டாலும் அதிலெல்லாம் பொது நல நோக்கமே குடி கொண்டிருக்கும். பொய்யும் கபடமும் அவருடைய பேச்சில் அணுவளவும் காண முடியாது. பலர் வந்து பற்பல காரியங்களில் அவரைச் சிரத்தை கொள்ளும்படி செய்ய முயல்வார்கள். ஆனால் கோகலே அதற்கெல்லாம் ஒரே பதில் தான் சொல்வாராம். "தங்களுக்குச் சிரத்தையுள்ள காரியத்தைத் தாங்கள் செய்யுங்கள் ; தேச விடுதலை தான் எனக்கு முக்கியம். அதற்காகவே என்னுடைய முழு கவனத்தையும் நேரத்தையும் செலவிட. வேண்டும். தேசம் விடுதலை பெற்றுவிட்டால் அப்புறம் மற்றக் காரியங்களில் சிரத்தை எடுத்துக் கொள்வேன்" என்பாராம்.
கோகலேக்குத் தம்முடைய குரு ரானடேயிடம் அளவில்லாத பக்தி. எந்த விஷயமானாலும் அதைப்பற்றி ரானடே ஏதாவது அபிப்பிராயம் தெரிவித்திருந்தால் அதுவே கோகலேக்கு முடிவானது வேறு யோசனையே செய்ய மாட்டார். ரானடேயின் குணாதிசயங்களைப் பற்றி ஓயாமல் பேசிக் கொண்டேயிருப்பார். ரானடே ஹைக் கோர்ட் ஜட்ஜாக இருந்த போதிலும் காங்கிரஸ் மகாசபைகளுக்குப் போவதுண்டாம். "அந்த மாதிரி தைரியம் வேறு யாருக்கு வரும்?”என் று அடிக்கடி கோகலே சொல்லுவது வழக்கம்.
சட்டசபைக்கும் மற்ற ஜோலிகளுக்கும் போவதற்குக் கோகலே கோச் வண்டி ஒன்று வைத்திருந்தார். காந்திஜி ஒருநாள் "குதிரை வண்டி எதற்காக வைத்திருக்கிறீர்கள்? டிராம் வண்டியில் போனால் என்ன ? அதனால் தங்களுடைய கெளரவம் குறைந்து போய்விடுமா?” என்று பட்டவர்த்தன மாகக் கேட்டுவிட்டார்.
கோகலே தேசத் தொண்டுக்காகவே தம் வாழ்நாளை அர்ப்பணம் செய்தவர் ; எளிய வாழ்க்கையை மேற்கொண்டு வாழ்ந்து வருபவர். ஆகையினால் தான் காந்திஜி அவரை அவ் விதம் துணிந்து கேட்டார்.
கோகலே அதற்குக் கூ றிய மறுமொழி வருமாறு : * நீங்கள் விருப்பம்போல் டிராம் வண்டியில் போகக் கூடியதா யிருக்கிறது. இது குறித்து நான் பொறாமைப் படுகிறேன். அந்தச் செளகரியம் எனக்குக் கிடையாது. ஜனங்கள் என்னை நன்கறிந்திருப்பதால் டிராம் வண்டியில் போவது காரியத்துக்குக் குந்தகமாயிருக்கும். என்னைப்போல் பொது ஜனங்களால் நன்கு அறியப்படும் துர்ப்பாக்கியம் உங்களுக்கும் ஒரு காலத்தில் வரக்கூடும். அப்போது டிராம் வண்டிப் பிரயாணம் உங்களுகும் கஷ்டமாய்த் தானிருக்கும்.”
கோகலேயின் வாக்கு எவ்வளவு ஆச்சரியமாய்ப் பலித்து விட்டது ? காந்திஜியைப் போல் கோடிக் கணக்கான ஜனங்களால் நன்கு அறியப்பட்டவர் சரித்திரத்திலேயே வேறு யாரும் இல்லை யல்லவா ?
மேற்படி பதில் காந்திஜிக்கு ஒருவாறு திருப்தியளித்தது. ஆனால் இன்னொரு விஷயத்தில் கோகலேயின் சமாதானம் அவருக்குத் திருப்தி தரவில்லை.
"தாங்கள் தேகாப்பியாசமே செய்வதில்லை. உலாவப் போவதுகூட இல்லை. ஓயாமல் தங்களை வியாதி பிடுங்கித் தின்பதில் ஆச்சரியம் என்ன ? பொது ஊழியம் செய்தால் தேகாப் பியாசத்துக்குக் கூடச் சாவகாசம் இல்லாமல் போய் விடுமா?" என்று காந்திஜி கேட்டதற்குக் கோகலே, ”நீங்கள் தான் பார்க்கிறீர்களே ? உலாவப் போவதற்கு எனக்கு நேரம் எங்கே இருக்கிறது?" என்று பதில் அளித்தார்.
இந்தச் சமாதானத்தைக் காந்திஜி ஒப்புக் கொள்ள வில்லை யானாலும் கோகலேயிடம் வைத்திருந்த பெருமதிப்புக் காரணமாகப் பதில் கூறாமல் சும்மா இருந்தார்.
நம்முடைய தேசியத் தலைவர்களில் பெரும்பாலோர் கோகலேயிடம் இருந்த குறைக்கு ஆளாகியிருந்தார்கள். அவர்கள் தங்கள் ஆரோக்கியத்தைச் சரியாகக் கவனித்துக் கொள்வதில்லை. தேகாப்பியாசமும் செய்வதில்லை. இதனால் எத்தனையோ அரும் பெரும் தலைவர்களின் உத்தமச் சேவையைத் தேசம் வெகு சீக்கிரத்தில் இழந்துவிட்டது.
காந்திஜி மட்டும் இறுதிவரையில் தேகாரோக்கியத்தைக் காப்பாற்றி வந்தார். என்ன வேலை யிருந்தாலும் தினம் கொஞ்ச நேரம் விரைவாக நடக்கும் வழக்கத்தைக் கைக் கொண்டிருந் தார். இதனால் அவருடைய வேலை செய்யும் திறமை குறைந்து விடவில்லை; அதிகமாக வளர்ந்தது.
இவ்விதமாகக் கோகலேயுடன் ஒரு மாதம் கழித்த பிறகு காந்திஜி இந்தியா முழுவதிலும் ஒரு முறை மூன்றாம் வகுப்பு ரயில் வண்டியில் பிரயாணம் செய்வ தென்று உத்தேசித்தார். மூன்றாம் வகுப்புப் பிரயாணிகளின் கஷ்டங்களை நன்கு அறிந்து பரிகாரம் தேடவேண்டும் என்பதுதான் அவருடைய நோக்கம். கோகலே முதலில் தடை செய்து பிறகு சம்மதம் கொடுத்தார். பன்னிரண்டு அணா பெறுமான கித்தான் பை ஒன்றைக் காந்திஜி வாங்கிக் கொண்டார். அதில் ஒரு முரட்டுக் கம்பளிச் சட்டை, ஒரு வேஷ்டி, ஒரு துண்டு, ஒரு பனியன் இவற்றை வைத்துக் கொண்டார். இந்தப் பையைத் தவிர ஒரு துப்பட்டி, ஒரு தண்ணீர்க் கூஜா (மண்ணால் ஆனது) இவ்வளவு தான் காந்திஜி மூன்றாம் வகுப்புப் பிரயாணத்துக்காக எடுத்துக் கொண்டவை. கோகலே பிரயாணத்துக்காகப் பூரிகளும் லட்டுகளும் தயா சரித்து ஒரு சிற்றுண்டிப் பாத்திரத்தில் வைத்துக் கொடுத்தார்.
மகாத்மாவை ரயில் ஏற்றி அனுப்ப ஸ்ரீ கோகலேயும் ஆசிரியர் ராயும் புறப்பட்டார்கள். "நீங்கள் எதற்காகச் சிரமப் பட வேண்டும் ? ஸ்டேஷனுக்கு வருவது அவசியம் இல்லை !” என்று காந்திஜி கூறியதை அவர்கள் பொருட்படுத்தவில்லை. ”நீங்கள் முதல் வகுப்பில் பிரயாணம் செய்தால் நான் வர வேண்டிய அவசியமில்லை. மூன்றாம் வகுப்பில் ஏறுவதால் கட்டாயம் நான் ஸ்டேஷனுக்கு வந்தாக வேண்டும்" என்று சொன்னார் கோபால கிருஷ்ண கோகலே. எனவே இருவரும் ஸ்டேஷனுக்குப் போகவே செய்தார்கள். அவர்களுடைய வாழ்த்துக்களைப் பெற்றுக் கொண்டு காந்திஜி பிரயாணம் செய்யத் தொடங்கினார்.
இந்தச் சம்பவங்களிலிருந்து, காந்திஜியின் மேன்மையை ஒருவாறு முன் கூட்டியே அறிந்து பாராட்டிய இந்தியத் தலைவர் ஸ்ரீ கோகலே என்பதாக அறிகிறோம். அதோடு கோகலே எத்தகைய மரியாதைக்காரர் என்பதையும் அவருடைய பண்பாட்டின் உயர்வையும் அறிகிறோம். காந்திஜி எழுதியுள்ள சுய சரிதத்திலிருந்துதான் கோகலேயைப் பற்றி மேற்கண்ட விவரங்கள் நமக்குத் தெரிய வருகின்றன.
-------------
காந்திஜி எதிர்பார்த்தது போலவே, மூன்றாம் வகுப்புப் பிரயாணம் மிக மோசமாயிருந்தது. அதிகாரிகள் மூன்றாம் வகுப்புப் பிரயாணிகளை ஆடுமாடுகள் என்று எண்ணி நடத்தினார்கள். ஆடு மாடுகளுக்குரிய சௌகரியங்கள் தான் மூன்றாவது வகுப்பில் அளிக்கப்பட்டன. இங்கிலாந்திலும் தென்னாப் பிரிக்காவிலும் காந்திஜி ரயில் பிரயாணம் செய்ததுண்டு. அங்கே யெல்லாம் மூன்றாம் வகுப்பு இவ்வளவு மோசமாயில்லை. முதல் வகுப்புக்கும் மூன்றாம் வகுப்புக்கும் இவ்வளவு வித்தியாசமும் கிடையாது. தென்னாப்பிரிக்காவில் மூன்றாம் வகுப்பில் பெரும் பாலும் நீகிரோவர் தான் பிரயாணம் செய்வார்கள். ஆயினும் அங்கே மூன்றாம் வகுப்பில் இதைவிட அதிக வசதி அளிக்கப் பட்டது. சில ரயில்களில் மூன்றாம் வகுப்பில் கூட இரவில் தூங்க இடமும் மெத்தை தைத்த ஆசனமும் ஏற்படுத்தி யிருந்தார்கள். கூட்டம் அளவுக்கு அதிகம் ஆகாமலும் பார்த்துக் கொண்டார்கள். இங்கேயோ நிலைமை எல்லா விதத்திலும் மோசமாயிருந்தது. வசதிகளும் இல்லை ; கூட்டமும் குறிப்பிட்ட எண்ணிக்கையை விட எப்போதும் அதிகம்.
ரயில்வே அதிகாரிகளின் அசட்டையும் அக்கிரமங்களும் ஒருபுறம் இருக்க, பிரயாணிகளும் பெரும் அநியாயங்கள் செய்தார்கள். மற்றப் பிரயாணிகளின் சௌகரியத்தைப் பொருட் படுத்தாமல் குப்பைகளைப் போட்டார்கள் ; சுருட்டுக் குடித்தார்கள்; வெற்றிலை புகையிலை மென்று துப்பி வண்டியை ஒரு எச்சில் குழியாக்கினார்கள். கூச்சல் போடுவதும் ஆபாச மொழிகள் பேசுவதும் அதிகம். இந்தப் பயங்கரமான நிலைமையை எப்படிச் சீர்திருத்துவது என்று மகாத்மா பெரிதும் சிந்தனை செய்தார். படித்த வகுப்பார் மூன்றாம் வகுப்பிலேயே பிரயாணம் செய்வதுதான் அதற்கு வழி என்று தோன்றியது. படித்தவர்கள் மூன்றாம் வகுப்பில் பிரயாணம் செய்து மற்றவர்களின் தர் வழக்கங்களைச் சீர்திருத்த வேண்டும். அவசியம் ஏற்பட்ட போதெல்லாம் வசதிக் குறைவுகளைப் பற்றி அதிகாரிகளுக்குப் புகார் எழுதவேண்டும். சிப்பந்திகளுக்கு லஞ்சம் கொடுத்துத் தங்கள் சொந்த வசதிகளைத் தேடிக் கொள்ளக் கூடாது. விதிகளை யார் மீறி நடந்தாலும் அதைக் கண்டிக்கவேண்டும் ; தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். இப்படி யெல்லாம் செய்தால் ஒருவாறு சீர்திருத்தலாம் என்று எண்ணினார். தாமே இப்படி யெல்லாம் செய்ய வேண்டும் என்றும், அதற்காக ஓர் இயக்கமே நடத்தவேண்டும் என்றும் உத்தேசித்தார். ஆனால் பின்னால் பெரிய பெரிய காரியங்களில் ஈடுபட்டதனால் உத்தேசத்தை நிறைவேற்ற முடியவில்லை.
தம்பி ! காந்திஜியின் மேற்படி அநுபவம் 47 வருஷங்களுக்கு முன்னால் 1901-ல் ஏற்பட்டது. இப்போது இந்தியா சுதந்திரம் அடைந்திருக்கிறது. ரயில்வேக்கள் பொது மக்களின் சொத்தாகிவிட்டன. பொதுஜன மந்திரி ரயில்வேக்களின் பொறுப்பை ஏற்று நடத்துகிறார். ஆயினும் கூட, மூன்றாம் வகுப்புப் பிரயாணம் நரக வேதனையாகவே இருந்து வருகிறது.
* * * *
கல்கத்தாவிலிருந்து இராஜகோட்டை செல்லும் மார்க்கத் தில் காந்திஜி காசி, ஆக்ரா முதலிய நகரங்களில் இறங்கிப் பார்த்துவிட்டுச் சென்றார். காசியில் அவர் கண்ட காட்சிகள் பெரும் ஏமாற்றமளித்தன. பிரசித்தி பெற்ற காசி விசுவநாதர் ஆலயத்துக்குப் போகும் வழி ஒரு குறுகலான சந்து. கோயிலைச் சுற்றியும் கோயிலுக்குள்ளேயும் அமைதி என்பதே கிடையாது. தந்திரசாலிகளான கடைக்காரர்கள் மிட்டாய்களும் புது தினுசு விளையாட்டுக் கருவிகளும் விற்றார்கள். கடைக்காரர்களும், கடைகளில் சாமான் வாங்கிய யாத்ரீகர்களும் ஏகச் சத்தம் போட்டார்கள். எங்கெங்கும் ஈக்கள் மொய்த்தது சகிக்க வொண்ணாததா யிருந்தது. மனங் குவிந்து இறைவனைத் தியானிப்பதற்கு அது ஏற்ற இடமாகவே இல்லை, இவ்வளவு சந்தை இரைச்சலிலும் மெய்மறந்து பக்தி பரவச நிலையில் இருந்த ஒரு சிலர் காணப்பட்டனர். ஆனால் மிகப் பெரும்பாலோருக்கு
அது அசாத்தியமா யிருந்தது.
கோயில் வாசலை அடைந்ததும் அழுகிப்போன பூக்குவியலின் நாற்றம் காந்திஜிக்கு நல்வரவு கூறிற்று. கோயிலின் உட் புறம் நல்ல சலவைக் கல்லால் தள வரிசை போடப்பட்டு விளங்கியது. ஆனால் யாரோ ஒரு பக்தர் அந்தச் சலவைக் கற்களை நடுநடுவே உடைத்து ஆங்காங்கு வெள்ளி ரூபாய்களைப் பதித்திருந்தார். இந்த ரூபாய்கள் அழுக்குச் சேரும் அசுத்த பாண்டங்களாக உபயோகப் பட்டன.
ஆலயத்தைச் சேர்ந்த 'ஞான வாவி' என்னும் புண்ணிய தீர்த்தத்துக்குச் சென்றார். ஞான வாவியைச் சுற்றியுங்கூட ஒரே ஆபாசமும் அழுக்குமாயிருந்தன. காந்திஜிக்கு இதெல்லாம் மிக்க ஆத்திரத்தை அளித்தன. அந்த ஆத்திரத்தை வாவிக் கரையில் இருந்த பண்டாவிடம் காட்டினார். (கோயில் குருக்களின் வேலையும் புரோகிதரின் வேலையும் சேர்த்துச் செய்கிறவர்களுக்கு வட இந்தியாவில் 'பண்டாக்கள்' என்று பெயர்.) பண்டாவுக்குத் தட்சணை கொடுக்க மனம் வரவில்லை. இதற்கு அறிகுறியாக ஒரு தம்பிடி கொடுத்தார். பண்டா , "நீ நேரே நரகத்துக்குப் போவாய்!" என்று சபித்துக் காந்திஜி கொடுத்த தம்பிடியை வீசி எறிந்தார்.
காந்திஜி இதனால் மனம் கலங்கவில்லை. "என்னுடைய கதி எப்படியானாலும் ஆகட்டும்; ஆச்சாரியராகிய தாங்கள் இப்படிப் பேசுதல் தகாது. வேண்டுமென்றால் தம்பிடியை எடுத்துக் கொள்ளுங்கள். இல்லாவிட்டால் அதுவும் போய் விடும்!" என்றார்.
தொலைந்து போ! உன் தம்பிடி இங்கே யாருக்கு வேண்டும் ? " என்று பண்டா மேலும் திட்டினார். "நமக்கு ஒரு தம்பிடி லாபம் ; பண்டாவுக்கு நஷ்டம் " என்று காந்திஜி நினைத்துக் கொண்டு தம்பிடியைத் திருப்பி எடுத்துக் கொண்டு புறப்பட்டார். ஆனால் பண்டாவா விடுகிறவர் ? காந்திஜியைக் கூப்பிட்டு, "நானும் உன்னைப் போல நடந்து கொள்ளலாமா ? அந்தத் தம்பிடியை ஏற்றுக்கொள்ளா விட்டால் உனக்குப் பாவம் சம்பவிக்கும். கொடுத்து விட் டுப் போ !" என்றார்.
காந்திஜி அவ்விதமே கொடுத்து விட்டுத் திரும்பினார்.
இதையெல்லாம் விவரித்து விட்டுக் காந்திஜி தமது காசி யாத்திரையைப் பற்றிக் கடைசியாக எழுதியிருப்பதாவது:-
"ஆண்டவன் கருணையில் யாருக்கேனும் ஐயமிருக்குமாயின் அவர் இத்தகைய புண்ணிய க்ஷேத்திரங்களுக்குப் போய்ப் பார்ப்பாராக. யோகீசுவரனான இறைவன் தன் பெயரால் நடக் கும் எத்துணை அக்கிரமங்களையும் வெளி வேஷங்களையும் பொறுத்துக் கொண்டிருக்கிறான் ! வெகு காலத்துக்கு முன்பே அவன் ' யே யதா மாம் ப்ரபத்யந்தே தாம் ஸ்ததைவ பஜாம்ய ஹம்' என்று திருவாய் மலர்ந்தான். மனிதன் விதைப்பதை அறுக்கிறான். கரும் பயனை அநுபவியாது தப்பித்துக் கொள் ளல் எவராலும் இயலாத காரியம். எனவே இதில் ஆண்டவன் தலையிடுவதற்கு அவசியமே இல்லை. சட்டத்தை இயற்றிவிட்டு அவன் அப்புறம் சென்று விட்டான் என்றே கூறலாம்."
மேற்கண்டவாறு காந்திஜி எழுதி இருபது ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்னமும் காசி நகரமும் விசுவநாதர் ஆலயமும் அவர் பார்த்த இலட்சணமாகவே இருக்கின்றன.
------------
இராஜகோட்டை போய்ச் சேர்ந்த பிறகு காந்திஜி அங்கே வக்கீல் தொழில் ஆரம்பித்தார். தென்னாப்பிரிக்கா அநுபவத்தின் பயனாக இம்முறை கோர்ட்டில் நன்றாகப் பேசும் ஆற்றல் பெற்றிருந்தார். ஏற்றுக் கொண்ட சில வழக்குகளில் வெற்றி யடைந்தார். இதைக் கண்ட அவருடைய நண்பர்கள் பம்பாய்க்குச் சென்று அவர் மறுபடியும் பாரிஸ்டர் தொழில் தொடங்க வேண்டுமென்று சொன்னார்கள். வழக்குகள் வருமா என்ற யோசனை வேண்டாம் என்றும், வேண்டிய வழக்குகள் தாங்களே அனுப்பி வைப்பதாகவும் அவர்கள் சொன்னார்கள்.
காந்திஜியும் அவர்களுடைய யோசனைக்கு இணங்கிப் பம்பாய்க்குச் சென்றார். பாயன் கில்பர்ட்-ஸயானி இவர்களுடைய காரியாலயம் இருந்த கட்டிடத்தில் தாமும் அறைகள் வாடகைக்கு வாங்கிக் கொண்டார்.
பம்பாயில் ஸ்திர வாசம் ஏற்பட்டு விட்டதாகத் தோன்றியது. ஆனால் காந்திஜியின் வாழ்க்கை அமைதியாக நடப்பதில் ஆண்டவனுக்குத் திருவுளம் இல்லை.
மகாத்மாவின் இரண்டாவது புதல்வனான மணிலாலுக்குக் கடுமையான அஸ்தி சுரம் (டைபாய்டு) கண்டது. ஏற்கெனவே மணிலால் வைசூரி போட்டுக் கஷ்டப்பட்டவன். இப்போது அஸ்தி சுரத்தோடு கபவாத சுரமும் கலந்திருந்தது. கடுமையான சுரமாதலால் இரவில் பிதற்றல் முதலிய சேஷ்டைகளும் கடுமையாக இருந்தன.
டாக்டர் ஒருவரைக் காந்திஜி அழைத்து வந்தார். அஸ்தி சுரத்திற்கு மருந்து அதிக பயன் தராது என்று டாக்டர் சொன்னார். கோழி முட்டையும் கோழிக் குஞ்சு ரசமும் கொடுத்து வரும்படியும் கூறினார்.
காந்திஜிக்குச் சைவ உணவு விரதத்தில் அதிகப் பற்று உண்டு என்பதுதான் உனக்குத் தெரியுமே? அந்த விரதத்தைக் கைவிடக் காந்திஜிக்கு விருப்பமில்லை. ஆனால் மணிலாலோ அப்போது பத்து வயதுக் குழந்தைதான். அவனுடைய அபிப் பிராயத்தைக் கேட்டுத் தீர்மானிப்பதற்கில்லை. அவனுக்காகக் காந்திஜியே தீர்மானித்தாக வேண்டும்.
தம்முடைய உறுதியின்படி நடந்தால் மணிலாலின் உயிருக்கு அபாயம் நேரலாம். அவ்விதம் குழந்தையை அபாயத்துக்கு உட்படுத்துவ து தர்மமா ? டாக்டர் பார்ஸி வகுப்பைச் சேர்ந்தவர். "நாங்கள் சாக பட்சணிகள்; தாங்கள் சொன்னவற்றைத் தவிர வேறு ஏதாவது யோசனை சொல்ல முடியுமா?" என்று காந்திஜி கேட்டார்.
"மற்றக் காலங்களில் சாக பட்சண விரதம் சரிதான். ஆனால் புதல்வனுடைய உயிருக்கே அபாயம் நேரலாம் என் றிருக்கும்போது பிடிவாதம் செய்யக் கூடாது. எவ்வளவோ சநாதன ஹிந்து குடும்பங்களில் என்னுடைய யோசனைப்படி செய்திருக்கிறார்கள். தாங்களும் இந்தக் குழந்தை விஷயத்தில் கடின சித்தம் காட்டாமலிருப்பது நலம்" என்றார் டாக்டர்.
அதற்குக் காந்திஜி கூறிய பதிலாவது :- "டாக்டராகிய தாங்கள் தங்களுடைய கடமையைச் செய்து விட்டீர்கள். ஆனால் என்னுடைய பொறுப்பை நான் கைவிட முடியாது. வயது வந்த பையனாயிருந்தால் அவனுடைய அபிப்பிராயத்தைக் கேட்டு அதன்படி செய்ய விட்டிருப்பேன். சிறு குழந்தையா யிருப்பதால் அவனுக்காக நான் தான் முடிவு செய்ய வேண்டி யிருக்கிறது. என்னுடைய மனச்சாட்சிப்படி நான் தான் முடிவு செய்ய வேண்டும். மாமிசமும் முட்டையும் மனிதன் உண்ணக் கூடாது என்பது என்னுடைய திடமான சமயக் கொள்கை. அது சரியோ தவறோ, தெரியாது. ஆனாலும் உயிர் வாழ்வதற்காகக் கூடச் சிற்சில காரியங்களை நாம் செய்யக்கூடாது. இது என் உறுதியான நம்பிக்கை. ஆகையால் தங்களுடைய யோச னையை நான் அனுசரிப்பதற்கில்லை. எனக்குத் தெரிந்திருக்கும் ஜல சிகிச்சை முறைகளைக் கையாளப் போகிறேன். ஆனால் தாது பார்க்கவும், இருதயம்-நுரையீரல் பரிசோதிக்கவும் எனக்குத் தெரியாது. தாங்கள் அவ்வப்போது வந்து இந்தப் பரிசோதனைகள் மட்டும் செய்து சொல்லிவிட்டுப் போனால் மனப்பூர்வமான நன்றி செலுத்துவேன்."
காந்திஜியின் தர்ம சங்கட நிலையை டாக்டர் நன்கு உணர்ந்தார். "அப்படியே ஆகட்டும்!" என்று சொல்லிப் போனார்.
அவர் போன பிறகு காந்திஜி தமக்கும் டாக்டருக்கும் நடந்த சம்பாஷணை விவரத்தை மணிலாலிடம் ஒருவாறு கூறினார், மணிலால் அப்பாவுக்கு ஏற்ற புதல்வன். " எனக்கு முட்டை யும் இறைச்சி ரசமும் வேண்டாம். என்னால் சாப்பிடமுடியாது. தங்களுடைய ஜல வைத்தியமே செய்யுங்கள்!" என்றான்.
ஜெர்மானியரான டாக்டர் கூன் என்பவர் ஜல சிகிச்சை முறையைப் பற்றி ஒரு நூல் எழுதியிருக்கிறார். அதில் ஆசன ஸ்நானம், இடுப்பு ஸ்நானம் ஆகிய முறைகளினால் நோய் தீர்க்கும் விதத்தைப்பற்றி எழுதியிருக்கிறார். காந்திஜி மேற்படி நூலில் கண்ட முறைகளை ஏற்கெனவே சோதனை செய்திருந் தார். இப்போது மணிலாலுக்கு இடுப்பு ஸ்நானம் செய்வித்தார். தொட்டி ஜலத்தில் மூன்று நிமிஷம் முழங்காலுக்கு மேலே தொப்புளுக்குக் கீழே தண்ணீர் இருக்கும்படி உட்காரவைத்து வெளியே எடுத்தார். இதை அடிக்கடி செய்ததுடன் ஆரஞ்சுப் பழ ரசமும் தண்ணீரும் கலந்து உணவாகக் கொடுத்து வந்தார்.
மூன்று நாள் இப்படிச் செய்து வந்தும் பயன் தெரிய வில்லை. 104 டிக்கிரி வரையில் சுரம் அடிக்கடி ஏறிக் கொண் டிருந்தது. காந்திஜி கவலை அடைந்தார். தம்முடைய பிடிவாதம் குழந்தைக்கு ஆபத்தாக முடிந்து விட்டால் என்ன செய்கிறது ? தம்முடைய வைத்தியக் கொள்கையைக் குழந்தை மேல் சுமத்துவது நியாயமாகுமா ? வேறு டாக்டரைக் கூப்பிட்டால் என்ன ? அல்ல து ஆயுர்வேத வைத்தியரை அழைத்துக் காட்டினால் என்ன?
இந்த எண்ணங்களுக்கு இடையிடையே மாறான எண்ணங்களும் தோன்றின. டாக்டர்கள் மட்டும் குணப்படுத்தி விடுவதாக உத்தரவாதம் கொடுக்கிறார்களா? அவர்களும் சோதனை தானே செய்கிறார்கள் ? குழந்தையின் உயிர் ஆண்டவனுடைய சித்தத்தைப் பொறுத்தது. நமக்குச் சரியென்று நிச்சயமாகத் தோன்றுகிறபடி செய்வதுதான் நம் கடமை. அப் புறம் கடவுள் அருள் எப்படியோ அப்படி நடக்கட்டும்.
தாபஜ்வரத்தினால் தவித்துக்கொண்டிருந்த மணிலாலுக்கு அருகில் படுத்துக்கொண்டு காந்திஜி மேற் கண்டவாறெல்லாம் சிந்தனை செய்தார். சட்டென்று ஒரு யோசனை தோன்றியது. எழுந்து ஒரு நீளமான துணியைத் தண்ணீரில் நனைத்துப் பிழிந் தார். அதை மணிலாலின் உடல்மீது தலையை மட்டும் விட்டு விட்டுச் சுற்றினார். தலையில் தனியாக ஓர் ஈரத் துண்டைச் சுற்றினார். பிறகு இரண்டு கனமான கம்பளிகளைப் போட்டுக் குழந்தையைப் போர்த்தி விட்டார். அப்போது பழுக்கக் காய்ச்சிய இரும்பைப்போல் குழந்தையின் உடம்பு கொதித்தது. ஆனால் ஒரே வறட்சி ; லவலேசமும் வியர்வை இல்லை.
மணிலாலைச் சற்று நேரம் அவனுடைய அன்னையிடம் ஒப்பு வித்துவிட்டு வெளியே சிறிது உலாவச் சென்றார். செளபாத்தி கடற்கரைக்குப் போனார். அப்போது இரவு மணி பத்து. கடற் கரையில் இவரைத் தவிர இன்னும் இரண்டொருவரே உலாவிக் கொண்டிருந்தார்கள். காந்திஜி அங்கு மிங்கும் நடந்து கொண்டே கடவுளைப் பிரார்த்தித்தார். "ஆண்டவனே! இந்தச் சோதனை நேரத்தில் என்னுடைய நம்பிக்கையைப் பாதுகாத்தல் உன்னுடைய பொறுப்பு !" என்று முறையிட்டார். அவருடைய உதடுகள் "ராம் ராம் சீதா ராம்" என்று ஜபித்துக் கொண்டிருந்தன. சிறிது நேரம் உலாவிய பிறகு வீட்டுக்குத் திரும்பினார். குழந்தைக்கு எப்படி இருக்கிறதோ, என்னமோ என்று நெஞ்சு கலக்கமுற்றிருந்தது.
வீட்டுக்குள் நுழைந்ததும், "பாபு! வந்து விட்டீர்களா ?" என் று மணிலாலின் குரல் கேட்டது.
"வந்து விட்டேனடா, கண்மணி !" என்று சொல்லிக் கொண்டே போனார்.
"உடம்பு பற்றி எரிகிறது. துணியையும் கம்பளியையும் எடுத்து விடுங்கள்."
"குழந்தாய் ! உடம்பு வியர்த்து விட்டிருக்கிறதா?"
"வியர்வை வெள்ளத்தில் முழுகி யிருக்கிறேன். சீக்கிரம் எடுங்கள்."
குழந்தையின் நெற்றியைக் காந்திஜி தொட்டுப் பார்த்தார். முத்து முத்தாய் வியர்வை துளித்திருந்தது ; சுரமும் குறைந்திருந்தது. காந்திஜி ஆண்டவனுக்கு இதய பூர்வமான நன்றி செலுத்தினார்.
"மணிலால் ! சுரம் இனி நிச்சயமாய்க் குணமாகிவிடும். இன்னும் சிறிது வியர்க்கட்டும்"
"அப்பா! இனி ஒரு நிமிஷமும் இந்த உலைக்களத்தில் என்னால் இருக்கமுடியாது. தயவு செய்து உடனே எடுத்து விடுங்கள். வேண்டுமானால் மறுபடியும் துணி சுற்றிக் கொள்ளலாம்."
பேச்சுக் கொடுத்துக்கொண்டே இன்னும் சில நிமிஷம் வைத்திருந்தார். நெற்றியிலிருந்து வியர்வை வழிந்து அருவியாக ஓடிற்று. பிறகு கம்பளிகளையும் ஈரத் துணியையும் எடுத்து விட்டு உடம்பைத் துடைத்தார்.
மணிலால் தூக்கம் வருகிறது என்றான். காந்திஜிக்கும் தூக்கம் வந்தது. தந்தையும் மகனும் ஒரே படுக்கையில் படுத்துத் தூங்கி விட்டார்கள்.
மறுநாள் காலையில் சுரம் நிரம்பக் குறைந்திருந்தது. ஆனாலும் அடியோடு போகவில்லை. பாலும் பழரசமும் மட்டும் அருந்திக் கொண்டு மணிலால் நாற்பது நாள் படுக்கையில் இருக்கவேண்டி யிருந்தது. ஆயினும் அன்றிரவு சுரம் கட்டுக்குள் வந்து விட்டபடியால் காந்திஜிக்குக் கவலையும் பயமும் இல்லாமற் போயிற்று.
"இன்று என் புதல்வர்களுக்குள்ளே மணிலாலே அதிக தேகாரோக்கியத்தோடு இருக்கிறான். அவன் அந்தக் கண்டத்திலிருந்து தப்பி உயிர் பிழைத்ததற்குக் காரணம் ஜல சிகிச்சையா, ஜாக்கிரதையாக நீர் உணவே கொடுத்துப் பணிவிடை செய்து வந்ததா, அல்லது ஆண்டவனுடைய கருணைதானா என்று யார் நிச்சயமாய்ச் சொல்ல முடியும் ? ஒவ்வொருவரும் தத்தம் நம்பிக்கைக்கு ஏற்ப முடிவு செய்து கொள்ளட்டும். என் வரையில், கருணாமூர்த்தியான ஆண்டவனுடைய அருள் மகிமைதான் மணிலாலுடைய உயிரை ரட்சித்து என்னையும் ஒரு பெரும் சோதனையிலிருந்து காப்பாற்றியது என்று இன்றைக்கும் நம்பி வருகிறேன்!" என்பதாகக் காந்தி மகான் தம் சுய சரிதத்தில் எழுதியுள்ளார்.
-----------
பம்பாயைச் சேர்ந்த ஸாந்தாகிரஸ் என்னும் பகுதியில் சுகாதார வசதியுள்ள ஒரு பங்களாவைக் காந்திஜி வாடகைக்கு அமர்த்தினார். நிலையாகப் பம்பாயில் தங்கி பாரிஸ்டர் தொழில் நடத்துவது என்று உத்தேசித்து வாழ்க்கை தொடங்கினார். பாரிஸ்டர் தொழிலில் நல்ல வருமானமும் வரத்தொடங்கியது.
இதற்கிடையில் ஸ்ரீ கோகலே காந்திஜியை மறந்து விட வில்லை. எப்படியாவது இந்தியாவின் பொது வாழ்க்கையில் காந்திஜியை ஈடுபடச் செய்துவிட வேண்டு மென்று கோகலே எண்ணங் கொண்டிருந்தார். இது காரணமாக வாரத்திற்கு இரண்டு மூன்று தடவை கோகலே காந்திஜியின் பாரிஸ்டர் ஆபீசுக்கு வருவது வழக்கமாயிற்று. மற்றும் சில அரசியல் நண்பர்களையும் சில சமயம் கோகலே அழைத்துக் கொண்டு வருவார். இந்தியாவில் அரசியல் தொண்டு செய்யும் முறைகளைப் பற்றித் திட்டங்கள் போட்டு விவாதிப்பார்கள்.
ஆனால் காந்திஜியைப் பற்றி இறைவனுடைய திட்டம் வேறுவிதமாக இருந்தது. தென்னாப்பிரிக்கா இந்தியர்கள் அவரை விடுகிற வழியாக இல்லை. "சேம்பர்லின் இங்கு வருகிறார். தயவு செய்து உடனே தாங்கள் வந்து சேரவேண்டும்" என்று தந்தி அடித்தார்கள்.
சேம்பர்லின் பிரிட்டிஷ் அரசாங்கத்தில் அப்போது குடியேற்றநாட்டு மந்திரியாயிருந்தார். அவர் தென்னாப்பிரிக்கா வரும் சமயம் இந்தியர்களின் குறைகளை எடுத்துச் சொல்லி நிவர்த்திக்கும்படி கேட்பது அவசியம் அல்லவா ? அதற்குக் காந்திஜி இல்லாவிட்டால் யார் வழி காட்டுவார்கள் ?
தென்னாப்பிரிக்கா இந்தியர்களுடைய அன்பையும் நம்பிக்கையையும் காந்திஜி புறக்கணிக்க முடியவில்லை. ஆதலின் அவர்களுடைய கோரிக்கையை நிறைவேற்றத் தீர்மானித்தார். சீக்கிரம் திரும்பி வந்து விடலாம் என்ற எண்ணத்துடன் பம்பாய் வீட்டைக் காலி செய்யாமல் அதிலேயே குடும்பத்தை இருக்கச் செய்து விட்டுப் புறப்பட்டார். புறப்படும்போது தமக்குத் தெரிந்த இளைஞர்கள் சிலரையும் அழைத்துச் சென்றார். அந்த இளைஞர்களில் ஸ்ரீ மகன்லால் காந்தி ஒருவர். பின்னால் காந்திஜியின் சத்தியப் போராட்டங்களில் அவருக்குப் பெரிதும் உதவியாயிருந்தவர்களில் ஸ்ரீ மகன்லாலும் ஒருவர்.
இவ்விதம் 1903-ம் வருஷத்தில் மூன்றாவது தடவையாகக் காந்திஜி தென்னாப்பிரிக்கா சேர்ந்தார். (இந்த முறை அவர் அங்கேயே நீடித்து இருக்கவேண்டியதாயிற்று. இதன் காரணத்தைப் பின்னால் பார்ப்போம்.) காந்திஜி டர்பன் நகரை அடைந்தது மிகவும் சரியான தருணமாயிருந்தது. டர்பன் இந்தியர்கள் சேம்பர்லினைப் பேட்டி காண்பதற்கு அனுமதி கேட்டுப் பெற்றுக் கொண்டிருந்தார்கள். தேதியும் குறிப்பிட்டாகி விட்டது. காந்திஜி போனதும் சேம்பர்லினிடம் சமர்ப்பிப்பதற்கு ஒரு விஞ்ஞாபனம் தயார் செய்தார். இந்தியப் பிரதி நிதிக் கூட்டத்துக்குத் தலைமை வகித்துச் சேம்பர்லினைப் பேட்டி காண்பதற்குச் சென்றார்.
ஆனால் பிரதிநிதிக் கூட்டம் அடைந்தது ஏமாற்றந்தான். சேம்பர்லின் தென்னாப்பிரிக்காவுக்கு ஒரு முக்கிய நோக்கத்துடன் வந்திருந்தார். போயர் யுத்தத்தின் போது அங்கே டச்சுக்காரர்களுக்கும் இங்கிலீஷ்க்காரர்களுக்கும் மனஸ்தாபம் முற்றியிருந்தது. அதைப் போக்கி இருசாராரையும் சமரசப் படுத்துவதற்கும் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தில் பக்தி கொள்ளும் படிச் செய்வதற்காகவும் சேம்பர்லின் வந்திருந்தார்.
போயர் யுத்தம் முடிந்தவுடனே தென்னாப்பிரிக்கா வெள்ளைக்காரர்களுக்குப் பூரண குடியேற்ற நாட்டுச் சுதந்திரம் பிரிட்டிஷ் சர்க்கார் அளித்து விட்டார்கள். இதைக் குறிப்பிட்டு மிஸ்டர் சேம்பர்லின் இந்தியப் பிரதிநிதி கோஷ்டிக்குப் பதில் சொன்னார். "சுயாட்சி பெற்ற குடியேற்ற நாடுகளின் மீது பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு அதிகாரம் எதுவும் கிடையாது. நீங்கள் குறிப்பிட்டிருக்கும் குறைகள் உண்மையென்றே தோன்றுகின்றன. அவற்றை நிவர்த்திக்க முயன்று பார்க்கிறேன். ஆனால் நான் அதிகமாக ஒன்றும் செய்வதற்கில்லை. இங்குள்ள ஐரோப்பியர்களின் மத்தியில் நீங்கள் வசிப்பதற்கு விரும்பினால் அவர்களுடைய சிநேகத்தைப் பெற முயற்சிக்க வேண்டும்" என்று சேம்பர்லின் கூறினார்.
இதைக் கேட்டதும் இந்தியப் பிரதிநிதிகளின் உற்சாக மெல்லாம் பறந்து விட்டது. காந்திஜியும் ஏமாற்ற மடைந்தார். தென்னாப்பிரிக்கா இந்தியர்களின் உரிமைக்காகத் தீவிரமாகப் போராட வேண்டுமென்றும், இல்லாவிடில் 'வல்லான் வகுத்ததே வாய்க்கால்' என்பது போல் தென்னாப்பிரிக்கா வெள் ளைக்காரர் வைத்ததே சட்டமாகிவிடும் என்றும், இந்தியர் பாடு அதோகதியாகி விடும் என்றும் காந்திஜிக்குத் தோன்றியது. இதைத் தம் சகாக்களிடமும் தெரிவித்தார்.
மிஸ்டர் சேம்பர்லின் நேட்டாலிலிருந்து டிரான்ஸ்வாலுக்குப் போக எண்ணி யிருந்தார். இதை யறிந்த காந்திஜி தாமும் முன்னதாகவே டிரான்ஸ்வாலுக்குப் போக விரும்பினார். டிரான்ஸ்வால் இந்தியர்களும் தங்கள் சார்பாக விண்ணப்பம் எழுதிச் சேம்பர்லினிடம் கொடுப்பதற்குக் காந்திஜியை எதிர் பார்த்தார்கள். ஆனால் நேட்டாலிலிருந்து காந்திஜி டிரான்ஸ் வாலுக்குப் போகச் சட்டத் தடைகள் குறுக்கிட்டன.
போயர் யுத்தம் காரணமாக டிரான்ஸ்வால் மாகாணம் வனாந்தரம் போல் ஆகியிருந்தது. அங்கே போதிய உணவுப் பொருள்களும் துணிமணிகளும் கிடைப்பது அரிதாகி யிருந்தது. இது காரணமாக டிரான்ஸ்வாலுக்குள் வருவோர் ஒவ்வொரு வரும் அநுமதிச் சீட்டுப் பெற வேண்டும் என்று ஏற்படுத்தி யிருந்தார்கள். முன்னம் டிரான்ஸ்வாலில் வசித்தவர்களுக்கும் இந்த விதியை வற்புறுத்தினார்கள். அநுமதிச் சீட்டு ஐரோப்பியர்களுக்கு எளிதில் கிடைத்தது. இந்தியர்களுக்கு இலேசில் கிடைப்பதாயில்லை.
இதற்கிடையில் 'ஆசியாக்காரர் இலாக்கா' என்று ஒரு புது இலாக்கா ஏற்பட்டிருந்தது. போயர் யுத்தத்தின்போது இந்தியாவிலிருந்தும் இலங்கையிலிருந்தும் இராணுவத்தைச் சேர்ந்த வெள்ளைக்காரர் பலர் தென்னாப்பிரிக்காவுக்கு வந்திருந்தார்கள். அவர்களில் அநேகர் தென்னாப்பிரிக்காவிலேயே தங்கிவிட விரும்பினார்கள், இவர்களுக்கு ஏதாவது உத்தியோகம் கொடுக்க வேண்டும் அல்லவா? அதற்காக ஒரு புது இலாக்கா சிருஷ்டி செய்யப்பட்டது. இதற்கு 'ஆசியாக்காரர் இலாக்கா' என்று பெயர். காந்திஜி இந்தியாவிலிருந்து இந்தத் தடவை தென்னாப்பிரிக்கா திரும்புவதற்குள் ஆசியாக்காரர் இலாக்காவின் ஆதிக்கம் பரவி வேரூன்றி விட்டது. ஆசியாக்காரர் யாராவது டிரான்ஸ்வாலுக்குள் பிரவேசிக்க விரும்பினால் மேற்படி இலாக்காவின் மூலமாகவே விண்ணப்பம் செய்ய வேண்டும் என்று ஏற்பட்டிருந்தது.
இந்தியர்கள் விண்ணப்பம் செய்தால் இலேசில் அநுமதிச் சீட்டு கிடைப்பதில்லை. பதில் வருவதற்கு மாதக் கணக்கில் தாமதம் ஆயிற்று. அநுமதிச் சீட்டு வாங்கித் தருவதற்குத் தரகர்கள் ஏற்பட்டார்கள். தரகர்களும் உத்தியோகஸ்தர்களுமாகச் சேர்ந்து ஏழை இந்தியர்களைக் கொள்ளை யடித்தார்கள். சில சமயம் 100 பவுன் வரையில் அநுமதிச் சீட்டுக்காகச் செலவு செய்ய வேண்டி யிருந்தது.
இதை யெல்லாம் காந்திஜி அறிந்த போது மேற்படி இலாக்கா மூலம் அநுமதிச் சீட்டுப் பெறும் எண்ணத்தைக் கைவிட்டார். டர்பன் போலீஸ் தலைவர் மிஸ்டர் அலெக்ஸாண்டர் காந்திஜியின் பழைய நண்பர் அல்லவா? அவரிடம் சென் றார், "நான் ஏற்கெனவே டிரான்ஸ்வாலில் வசித்தவன் என்பது தங்களுக்குத் தெரியுமே? அங்கே நான் போக வேண்டும். எனக்கு அநுமதிச் சீட்டு வாங்கித் தர வேண்டும்" என்று கேட்டார். அவர் உடனே காந்திஜியுடன் புறப்பட்டு வந்து தமது செல்வாக்கை உபயோகித்து அநுமதிச் சீட்டு வாங்கிக் கொடுத்தார். ரயிலுக்கு ஒரு மணி நேரந்தான் பாக்கி யிருந்தது. சாமான்களைக் கட்டித் தயாராய் வைத்திருந்தபடியால் காந்திஜி அவசரமாகச் சென்று ரயில் ஏறினார். பிரிட்டோரியாவுக்குப் போய்ச் சேர்ந்தார்.
ஆசியாக்காரர் இலாக்காவின் கிளைக் காரியாலயம் பிரிட்டோரியாவிலும் இருந்தது. காந்திஜி எப்படி அநுமதிச் சீட்டுப் பெற்று டிரான்ஸ்வாலுக்குள் வந்தார் என்பது அந்த இலாக்கா அதிகாரிகளுக்கு வியப்பை அளித்தது. ஒரு வேளை அநுமதி யில்லாமலே வந்திருப்பாரோ, அப்படியானால் கைது செய்து விடலாம் என்று எண்ணினார்கள். டர்பனுக்குத் தந்தி கொடுத்துக் கேட்டார்கள். அநுமதிச் சீட்டுப் பெற்றே வந்திருக்கிறார் என்று அறிந்ததும் ஏமாற்றமடைந்தார்கள். ஆனால் அத்துடன் சும்மா விடுவார்களா ? காந்திஜி எதற்காக வந்தாரோ, அந்த நோக்கம் நிறைவேறாமல் செய்து விடுவதென்று கங்கணம் கட்டிக் கொண்டார்கள்.
பிரிட்டோரியாவில் சேம்பர்லினைப் பேட்டி காண இந்தியர் அநுமதி கேட்டிருந்தார்கள் அல்லவா ? பிரதிநிதிக் கூட்டத்தில் யார் யார் இருப்பார்கள் என்று முன்ன தாகவே ஜாபிதா கொடுக்க வேண்டுமென்று மேற்படி இலாக்கா அதிகாரிகள் கேட்டார்கள். அவ்விதமே காந்திஜியின் பெயரும் சேர்த்துக் கொடுக்கப்பட்டது. உடனே மேற்படி இலாக்கா தலைமை அதிகாரி தம்மை வந்து சந்திக்கும்படி இந்தியத் தலைவர்களுக்கு எழுதினார். தயாப் சேத் ஹாஜி கானும் காந்திஜியும் இன்னும் சிலரும் போனார்கள். ஆசிய இலாக்காவின் தலைமை அதிகாரி இலங்கையிலிருந்து வந்திருந்த ஐரோப்பியர். அவர் வெகு கடுமையாக, "இந்தக் காந்தி யார்? இவரை எதற்காகப் பிரதிநிதிக் கூட்டத்தில் சேர்த்திருக்கிறீர்கள்?" என்று கேட்டார்.
"இவர் எங்களுக்கு யோசனை சொல்லி உதவும் நண்பர். நாங்கள் அழைத்துத்தான் வந்திருக்கிறார்" என்றார் தயாப் சேத்.
"நாங்கள் எதற்காக இங்கே இருக்கிறோம் ? உங்களைப் பாதுகாப்பதற்காகத் தானே இருக்கிறோம் ? இவ்விடத்து நிலைமை இந்தியாவிலிருந்து வந்த காந்திக்கு என்ன தெரியும் ? இவரைப் பிரதிநிதிக் கூட்டத்தில் சேர்க்க முடியாது!" என்று கண்டிப்பாகச் சொல்லிவிட்டு, காந்திஜியைப் பார்த்து, -"நீர் வைத்திருக்கும் அநுமதிச் சீட்டு உமக்குத் தவறாகக் கொடுக்கப்பட்டது. இங்கே குடியேறிய இந்தியராக உம்மைக் கருத முடியாது. பிரதிநிதிக் கூட்டத்திலும் உம்மைச் சேர்க்க முடியாது. நீர் போகலாம்" என்று கூறினார்.
மேற்கொண்டு பதில் சொல்வதற்கே மேற்படி அதிகாரி அநுமதிக்கவில்லை. எல்லாரும் எரிச்சலுடன் திரும்பினார்கள்.
மேற்படி அவமதிப்பினால் காந்திஜியின் மனம் துடி துடித்தது. ஆயினும் அவர் நிதானத்தை இழந்துவிட வில்லை. இந்த நிலைமையில் என்ன செய்வது என்று யோசித்தார்.
காந்திஜியை அநுமதிக்காவிட்டால் பிரதிநிதிக் கூட்டமே போக வேண்டியதில்லை யென்று மற்றவர்கள் சொன்னார்கள். இதைக் காந்திஜி விரும்பவில்லை. "எழுதவேண்டிய விண்ணப்பத்தை நான் எழுதித் தயாரித்து விடுகிறேன். நீங்கள் கொண்டு போய்ச் சேம்பர்லினிடம் கொடுத்துவிட்டு வாருங்கள் ! மற்ற விஷயங்கள் பிறகு பார்த்துக் கொள்வோம்" என்றார்.
காந்திஜி வற்புறுத்தியதின் பேரில் இந்திய பாரிஸ்டர் ஜார்ஜ் காட்பீரே என்பவரின் தலைமையில் பிரதிநிதிக் கூட்டம் சென் றது. சேம்பர்லினைப் பார்த்துவிட்டு வந்தது. பயன் ஒன் றும் இல்லை.
"நீங்கள் சொன்னதின் பேரில் தானே நாங்கள் போயர் யுத்தத்தின் போது இவர்களுக்கு உதவி செய்தோம் ? அதன் பயனைப் பார்த்தீர்களா?" என்று நண்பர்கள் வருந்தினார்கள்.
"அப்போது நான் அவ்விதம் யோசனை கூறியதற்காக வருந்தவில்லை. போயர் யுத்தத்தின் போது நாம் உதவி செய்தது சரி. அச்சமயம் நம்முடைய கடமை அது. இப்போது. நம்முடைய கடமை என்னவோ அதை யோசித்துச் செய்ய வேண்டும்" என்றார் காந்திஜி.
தம்முடைய கடமை என்ன வென்பதைப் பற்றிக் காந்திஜி அந்த க்ஷணமே முடிவுக்கு வந்தார். இந்தியாவுக்குத் திரும்பு வது பற்றி யோசிப்பதில் பயனில்லை. முன்னே நேட்டாலில் தங்கி இந்தியர்களுக்காகப் போராடியது போல் இப்போது டிரான்ஸ்வாலில் தங்கிப் போராடுவது தம் கடமை என்று தீர்மானித்தார். முக்கியமாக, ஆசிய இலாக்கா என்னும் புதிய அபாயத்தை எதிர்த்துப் போராட வேண்டும். இல்லாவிட்டால் தென்னாப்பிரிக்காவிலுள்ள இந்தியர்கள் எல்லாரையுமே கொள்ளையடித்து அந்த நாட்டை விட்டும் துரத்திவிடுவார்கள்.
காந்திஜி தம் முடிவைத் தெரிவித்ததும் அங்கிருந்த இந்திய நண்பர்கள் மிக்க ஆனந்தம் அடைந்தார்கள். ஒரு விதத்தில் ஆசிய இலாக்கா அதிகாரி செய்த அநீதி நல்லதாய்ப் போயிற்று என் றும் எண்ணினார்கள். அதன் காரணமாகத்தானே காந்திஜி
டிரான்ஸ்வாலில் தங்குவதென்று தீர்மானித்துள்ளார் ?
காந்திஜி ஜோகானிஸ்பர்க்கில் இருந்த ஹைகோர்ட்டில் பாரிஸ்டர் தொழில் தொடங்குவது என்று நிச்சயமாயிற்று. நல்ல வேளையாக ஜோகானிஸ்பர்க் வக்கீல் சங்கத்தார் காந்திஜியின் மனுவை ஆக்ஷேபிக்கவில்லை. மிஸ்டர் ரிச் என்னும் பிரபல வியாபாரியின் உதவியினால் ஜோகானிஸ்பர்க்கில் வக்கீல்கள் வசித்த பகுதியில் ஒரு நல்ல வீடு கிடைத்தது. காந்திஜி அதில் தங்கி பாரிஸ்டர் தொழில் ஆரம்பித்தார்.
----------
ஜோகானிஸ்பர்க்கில் தங்கி வக்கீல் தொழில் நடத்த ஆரம்பித்தவுடனேயே காந்திஜி ஆசிய இலாகாவைக் கவனிக்க ஆரம்பித்தார். அந்த இலாகாவின் தலைமை ஸ்தானம் ஜோகானிஸ்பர்க் நகரந்தான். ஆசிய இலாகாவின் உத்தியோகஸ்தர்கள் இந்தியர்கள் - சீனர்கள் முதலிய ஆசியாக்காரர்களைக் கசக்கிப் பிழிந்து கொண்டிருந்தார்கள். இலாகா நிர்வாகத்தில் லஞ்சப் பேய் தாண்டவமாடிக்கொண்டிருந்தது. தினந்தோறும் காந்திஜியிடம் யாரேனும் வந்து முறையிட்டுக் கொண்டிருந்தார்கள். 'டிரான்ஸ்வாலில் ஏற்கெனவே வசித்தவர்களுக்கு இங்கு வர அநுமதிச் சீட்டுக் கிடைப்பதில்லை. உரிமை யில்லாதவர்கள் நூறு பவுன் லஞ்சம் கொடுத்து விட்டு வந்து விடுகிறார்கள். இந்த அநியாயத்துக்குக் கேள்வி முறை யில்லையா ? தாங்கள் தான் பரிகாரம் தேட வேண்டும்!" என்று முறையீடுகள் வந்து குவிந்தன.
இந்த லஞ்சப் பேயைத் தொலைப்பதற்குக் காந்திஜி கங்கணம் கட்டிக் கொண்டார். ஆசிய இலாகாவைத் தூய்மைப்படுத்தினா லன்றித் தாம் ஜோகானிஸ்பர்க்கில் தங்கியதில் பயன் ஒன்றுமில்லை யென்று கருதினார்.
எனவே ஆசிய இலாகாவின் ஊழல்களைப் பற்றிச் சாட்சியங்கள் திரட்ட ஆரம்பித்தார். போதுமான சாட்சியங்கள் கிடைத்ததும் போலீஸ் கமிஷனரிடம் சென்றார். அதிர்ஷ்ட வசமாக, டர்பன் போலீஸ் தலைவரைப் போல் இங்கேயும் போலீஸ் தலைவர் மனச் சாட்சியுள்ள நீதிமானாக இருந்தார். காந்திஜி கூறியதை யெல்லாம் பொறுமையுடன் செவி கொடுத் துக் கேட்டார். சாட்சியங்களைப் பார்த்தும், சாட்சிகளை அழைத்துக் கேட்டும் திருப்தி செய்து கொண்டார். ஆனாலும் அது சம்பந்தமாக வழக்குத் தொடுக்கும் விஷயத்தில் அவருக்கு உற்சாகம் ஏற்படவில்லை.
இதற்குக் காரணம் என்ன வென்றால், தென்னாப்பிரிக்காவில் குற்ற வழக்குகளின் விஷயத்தில் ஜூரி விசாரணை முறை அமுலில் இருந்தது. அதாவது கோர்ட்டுகளில் குற்ற விசாரணை நடக்கும்போது மாஜிஸ்ட்ரேட்டுக்கு உதவி செய்வதற்காக சமூகப் பிரமுகர்களில் சிலர் ஜூரிகளாக நியமிக்கப்படுவார்கள். எதிரி குற்றவாளியா இல்லையா என்று கடைசியில் ஜூரிகள் தங்கள் அபிப்பிராயத்தைத் தெரிவிப்பார்கள். அந்த அபிப்பிராயத்தை யொட்டியே மாஜிஸ்ட்ரேட் தீர்ப்பளிப்பார்.
வெள்ளைக்காரன் மீது வழக்கு நடந்தால் வெள்ளைக்காரர்களே ஜூரிகளாக வருவார்கள். வெள்ளைக்காரர் மீது கறுப்பு மனிதர் தொடரும் வழக்குகளில் வெள்ளைக்கார ஜூரிகள் வெள்ளைக்காரருக்குச் சாதகமாகவே தீர்ப்பச் சொல்வார் ஆகையால் விசாரணையில் நியாயம் கிடைப்பது கடினம் ; வெள்ளைக்காரக் குற்றவாளி தண்டிக்கப் படுவது கடினம்.
ஆயினும் போலீஸ் கமிஷனர் நடவடிக்கை எடுத்துப் பார்ப்பதாகக் கூறினார். "ஜூரிகள் விடுதலை செய்து விடுவார்கள் என்பதற்காக நாம் இப்பேர்ப்பட்டவர்களைச் சும்மா விட்டு விடக் கூடாது. நம்முடைய கடமையை நாம் செய்து விடுவோம், இயன்றவரை முயற்சித்துப் பார்ப்போம்" என்றார்.
ஆசிய இலாகாவைச் சேர்ந்த பல உத்தியோகஸ்தர்கள் லஞ்சக் குற்றத்துக்கு உள்ளாயிருந்தார்கள். ஆனால் அவர்களில் இரண்டு பேர் மீதுதான் சரியான சாட்சியம் இருந்தது. அவர்களுக்குப் போலீஸ் கமிஷனர் வாரண்டு பிறப்பித்தார்.
காந்திஜி அடிக்கடி போலீஸ் கமிஷனரிடம் போய் விட்டு வருவதை ஆசியா இலாகாவின் ஒற்றர்கள் கவனித்து மேற்படி இலாகா உத்தியோகஸ்தர்களுக்குத் தகவல் கொடுத்து வந்தார்கள். ஆகவே வாரண்டு பிறப்பிக்கப்பட்ட செய்தி அறிந்ததும் உத்தியோகஸ்தர்களில் ஒருவர் ஓடி ஒளிந்து விட்டார். வேறு மாகாணத்திலும் செல்லக்கூடிய வாரண்டு பிறப்பித்துப் போலீஸ் கமிஷனர் அவரைப் பிடித்துக் கொண்டு வந்தார். சாங்கோபாங்கமாக விசாரணை நடந்தது. "உத்தியோகஸ்தர் இருவரும் குற்றவாளிகள் என்று நிரூபிப்பதற்கு வேண்டிய சாட்சியங்கள் விடப்பட்டன. ஆயினும் என்ன பயன்? விசாரணை முடிவில் "இருவரும் குற்றவாளிகள் அல்ல" என்று ஜரர்கள் தீர்ப்புக் கூறிவிட்டார்கள். எதிரிகள் விடுதலை அடைந்தார்கள்.
இதனால் காந்திஜி அடைந்த ஏமாற்றத்துக்கு அளவே யில்லை. போலீஸ் கமிஷனரும் வருத்தப்பட்டார். குற்றத்தை மறைப்பதற்கும் குற்றவாளியைத் தப்பித்துக் கொள்ளச் செய்வதற்கும் வக்கீல்கள் தங்கள் புத்தி கூர்மையை உபயோகப் படுத்துவதை இந்த வழக்கில் காந்திஜி கண்டார். இதனால் வக்கீல் தொழிலின் மீதே காந்திஜிக்கு வெறுப்பு ஏற்பட்டது.
* * * *
நீதிக்கு விரோதமாக வழக்கு முடிந்துவிட்ட போதிலும் அதனால் பலன் ஏற்படாமற் போகவில்லை. வழக்கு விசாரணையின் போது அந்த இரு உத்தியோகஸ்தர்கள் விஷயமும் வெட்ட வெளிச்சமாகி விட்டது. அவர்களை அரசாங்கத்தார் மேலும் வேலைக்கு வைத்துக் கொள்ள முடியவில்லை. இருவரும் வேலை யிலிருந்து நீக்கப்பட்டார்கள். இந்திய சமூகம் சிறிது தைரியம் அடைந்தது. காந்திஜியிடம் இந்தியர்கள் முன்னைக்காட்டிலும் அதிக மதிப்புக் கொண்டார்கள். ஆசிய இலாகா உத்தியோகஸ்தர்களுக்கு லஞ்சம் கொடுப்பதில் இந்தியர்கள் செலவு செய்து கொண்டிருந்த பணத்தில் பெரும் பகுதி மிச்சமாயிற்று.
லஞ்சம் வாங்கிய உத்தியோகஸ்தர்களின் விஷயம் அத்துடன் போய் விடவில்லை. அவர்களுக்கு அரசாங்க உத்தியோகம் போய்விட்ட தென்றாலும் ஜீவனத்துக்கு வேறு வேலை சம்பாதித்துக் கொள்ள விரும்பினார்கள். ஜோகானிஸ்பர்க் நகர சபையில் வேலைக்கு முயற்சி செய்தார்கள். அவர்களுக்கு விரோதமாகக் காந்திஜி மேலும் பிரயத்தனம் செய்வதில்லை யென்றால் நகர சபையில் அவர்களுக்கு உத்தியோகம் கிடைக்கும் என்று தோன்றியது. அந்த உத்தியோகஸ்தர்களின் நண்பர் ஒருவர் அது விஷயமாகப் பேசக் காந்திஜியிடம் வந்து அவருடைய உதவியைக் கோரினார். காந்திஜி தாம் குறுக்கே நிற்பதில்லை யென்று வாக்களித்தார். "அவர்களுடைய லஞ்சம் வாங்கும் வழக்கத்தை நிறுத்தவே நான் விரும்பினேன். சொந்த முறையில் அவர்களின் பேரில் எனக்குத் துவேஷம் எதுவும் இல்லை. அவர்கள் வேறு உத்தியோகத்தில் அமர்ந்து கௌரவ மாக ஜீவனம் நடத்துவதற்கு நான் ஏன் குறுக்கே நிற்க வேண்டும்?" என்று கூறினார். இதன்பேரில் மேற்படி மனிதர்கள் இருவருக்கும் நகர சபையில் உத்தியோகம் கிடைத்தது.
காந்திஜியின் பெருங் குணம் இதுதான், தம்பி ! மனிதர்களுடைய தீய செயல்களை எதிர்த்து மகாத்மா வெகு தீவிரமான போராட்டம் நடத்துகிறபோது, அந்த மனிதர்களிடம் அவருக்குத் துவேஷம் இராது. பிற்காலத்தில் காந்திஜி சத்தியாக் கிரஹம் என்னும் ஒப்பற்ற அஹிம்சைப் போராட்ட முறையை உருப்படுத்தியபோது அதற்கு மேற்படி கொள்கையையே அடிப்படையாகக் கொண்டார். காந்தி மகாத்மா சொல்லி யிருக்கிறார்:- "மனிதன் வேறு, அவனுடைய செயல் வேறு என்பதைச் சத்தியாக்கிரஹி நன்கு அறிந்து கொள்ளவேண்டும். நற்செயலைப் பாராட்டுதலும் தீய செயலைக் கண்டித்தலும் முறையாகும். ஆனால் தீய செயல் செய்பவனிடம் இரக்கங் கொள்ள வேண்டுமே தவிர அவனைப் பகைக்கக் கூடாது. சத்தியத் தேட்டத்தின் அடிப்படை இதுதான். இந்த அஹிம்சை முறையைக் கொள்ளாதவரையில் சத்திய தரிசனம் கிட்டாது. ஒருவன் தீய காரியம் செய்தால் அதை எதிர்த்துத் தாக்க வேண்டும். அம்மாதிரியே தீமையை அடிப்படையாகக் கொண்ட ஏற்பாடுகளையும் ஸ்தாபனங்களையும் தாக்கி ஒழிக்க முயல வேண்டும். ஆனால் அதற்குப் பொறுப்பான மனிதர்களை எதிர்த்துத் தாக்குதல் கூடாது. அப்படிச் செய்தல் நம்மை நாமே தாக்கிக் கொள்வதாகும். நாம் எல்லாரும் ஒரே மண்ணில் செய்த பாண்டங்கள் ; ஒரே கடவுளின் புதல்வர்கள். மனிதர் எல்லாரிடத்தும் தெய்வீக சக்திகள் இருக்கின்றன. ஒரு மனித னுக்குத் தீங்கு செய்தால் அது மனித குலத்துக்கே தீங்கு செய்ததாகும். ஒரு மனிதனை அலட்சியம் செய்ததால் தெய்வத்தை அலட்சியம் செய்ததாகும்.'
----------------
காந்தி மகாத்மா பெரும் பாக்கியம் செய்தவர் ; அதனாலே தான் கஸ்தூரிபாய் அவருடைய வாழ்க்கைத் துணைவியாக வாய்த்தார் என்று சொல்ல வேண்டும். சாதாரணமாக இந்தியப் பெண்மணிகள் மிக்க பொறுமை வாய்ந்தவர்கள். கணவன்மார்களுக்கு இணங்கி நடப்பதற்காக எத்தனையோ கஷ்டங்களைச் சகித்துக் கொள்ளக் கூடியவர்கள். ஆனால் காந்திஜியைப் பதியாகக்கொண்ட பெண்மணிக்குச் சாதாரண ஸ்திரீகளுக்கு உள்ள பொறுமை இருந்தால் போதுமா யிருந்திராது. குடும்ப வாழ்க்கை, சமூக வாழ்க்கை, அரசியல் வாழ்க்கை ஆகியவற்றில் காந்திஜி நடத்திய சோதனைகளுக் கெல்லாம் உடன்பட் டிருப்பதற்கு எல்லையற்ற அசாதாரணப் பொறுமை ஸ்ரீமதி கஸ்தூரிபாய்க்கு இருந்திருக்க வேண்டும்.
காந்தி மகாத்மாவை இந்தியாவின் ஒப்பற்ற தலைவர் என்றும் உலக சிரேஷ்டர் என்றும் பிற்காலத்தில் உலகம் ஒப்புக் கொண்டு கொண்டாடியது. ஆகையால் இக்காலத்தில் நமக்கு "காந்திஜி எவ்வளவு பெரிய மனிதர் ? எப்பேர்ப்பட்ட மகா புருஷர் ? அவரை மணந்து கொண்டது கஸ்தூரிபாயின் பாக்கியம் அல்லவா? அத்தகைய புகழ் வாய்ந்த கணவருக்குக் கஸ்தூரிபாய் ஒத்து நடந்ததில் ஆச்சரியம் என்ன?" என்று தோன்றக் கூடும்.
ஆனால் காந்திஜி வாழ்க்கை தொடங்கிய காலத்திலும் தென்னாப்பிரிக்கா போராட்டத்தை ஆரம்பித்த காலத்திலும் அவர் இவ்வளவு பிரசித்த மடையப்போகிறார், மகாத்மா ஆகப் போகிறார் என்று யாருக்குமே தெரியாதல்லவா ? ஸ்ரீமதி கஸ்தூரி பாய்க்கு அந்த நாளில் "நம்முடைய கணவர் இப்படி ஒரு நிலையாக நில்லாமல் குடும்பத்தைப் பாழாக்குகிறாரே?" என்று தோன்றுவதுதான் இயல்பல்லவா ?
அப்படியிருந்தும் கணவருடைய காரியங்களுக் கெல்லாம் கஸ்தூரிபாய் உடன்பட்டுத்தான் இருந்தார். பல சமயங்களில் அவர்களுக்குள் விவாதங்கள் ஏற்பட்டிருக்கின்றன. காந்திஜியின் சமதர்ம சீர்திருத்த ஆவேசம் கஸ்தூரிபாயைப் பெருந் தொல்லைக்கு ஆளாக்கி யிருக்கிறது. சில சமயம் காந்திஜியைக் கஸ்தூரிபாய் எதிர்த்துப் போராடியதும் உண்டு. ஆயினும் கடைசியாகக் கணவருடைய விருப்பத்தையே முடிவான தீர்ப்பாகக் கொண்டு காரியத்தில் நடந்து கொண்டிருக்கிறார்.
தென்னாப்பிரிக்காவில் காந்திஜி குடித்தனம் நடத்திய காலத்தில் கணவருக்கும் மனைவிக்கும் அத்தகைய போராட்டம் ஒன்று நடைபெற்றது. மிகப் புனிதமான அந்த சம்பவத்தைப் பற்றிக் காந்திஜியின் வாய்மொழியிலேயே நாம் தெரிந்து கொள்வதுதான் உசிதம். அவர் எழுதியுள்ளதை அப்படியே கீழே தந்திருக்கிறேன். அதைப் படிக்கும்போது காந்திஜி உயர்ந்தவரா, கஸ்தூரிபாய் உயர்ந்தவரா என்ற கேள்வி நம் மனத்தில் உதயமாகும். அதைப் பற்றி முடிவு செய்வது அவ்வளவு சுலபமா யிராது.
மேற்படி சம்பவத்தைப் பற்றி, "ஒரு புனித ஞாபகம் " என்ற தலைப்பின் கீழ் காந்திஜி எழுதி யிருக்கிறார் :
"டர்பனில் வக்கீல் தொழில் நடத்திக் கொண்டிருந்த போது என்னுடைய காரியாலய குமாஸ்தாக்கள் பெரும்பாலும் என்னுடன் தங்கி இருப்பது வழக்கம். அவர்களில் ஹிந்துக்களும், கிறிஸ்தவர்களும், குஜராத்திகளும், தமிழர்களும் இருந்தனர். அவர்களை என் குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக நடத்தி வந்தேன். இதற்கு என் மனைவி எப்போதேனும் குறுக்கே நின்றால் அப்போது எங்களுக்குள் மனஸ்தாபம் ஏற்படும்.
என்னுடைய வீடு மேனாட்டு முறையில் கட்டப்பட்டிருந்தது. ஆதலின் அதன் அறைகளிலிருந்து அழுக்குத் தண்ணீர் வெளியே போவதற்குச் சாக்கடைகள் அமைக்கப்படவில்லை. அறைகளில் இவ்வாறு சாக்கடை வைத்தல் கூடாது தான். எனவே, ஒவ்வோர் அறையிலும் அழுக்கு நீர்ப்பாண்டம் ஒன்று வைக்கப்பட்டிருந்தது. இப்பாண்டங்களைச் சுத்தம் செய்வதற்கு வேலைக்காரன் வைப்பதற்குப் பதிலாக நானும், என் மனைவியுமே அவற்றைச் சுத்தம் செய்து வந்தோம். வீட்டில் கொஞ்ச காலம் இருந்து பழகிவிட்ட குமாஸ்தாக்கள், அவரவர்கள் உபயோகித்த பாண்டங்களை அவரவர்களே சுத்தம் செய்து வந்தார்கள், இங்ஙனமிருக்கையில் புதிதாக ஒரு கிறிஸ்தவ குமாஸ்தா வந்து சேர்ந்தார். அவருடைய பெற்றோர்கள் தீண்டா வகுப்பினர். புதிதாக வந்தவராதலின் அவருடைய படுக்கை யறையைச் சுத்தம் செய்தல் எங்களுடைய கடமையா யிருந்தது. என் மனைவி, மற்றவர்களுடைய பாண்டங்களைச் சுத்தம் செய்வதில் எவ்வித ஆட்சேபமும் கூறியது கிடையாது. ஆனால் தீண்டாதார் ஒருவரின் பாண்டத்தைச் சுத்தம் செய்ய வேண்டி வந்தபோது அவளால் பொறுக்க முடியாமல் போயிற்று. இதன் பயனாக எங்களுக்குள் மனஸ்தாபம் விளைந்தது. நான் பாண்டங்களைச் சுத்தம் செய்வதும் அவளால் சகிக்க முடியவில்லை. அவளுக்கும் செய்யப் பிரியமில்லை. கோபத்தினால் சிவந்த கண்களிலிருந்து கண்ணீர் தாரை தாரை யாகப் பெருக அந்தக் கோபப் பார்வையினாலேயே என்னைக் கடிந்தவளாய்க் கையில் பாண்டத்துடன் அவள் ஏணியின் வழியே இறங்கி வந்த காட்சி இப்போதும் என் மனக்கண் முன் நிற்கிறது.
என் மனைவியிடம் நான் வைத்திருந்த அன்பு மிகக் குரூரமான வகையைச் சேர்ந்தது. என்னை அவளுடைய உபாத்தியாயனாகக் கருதி யிருந்தேன். எனவே அவளிடம் எனக்கிருந்த குருட்டுத்தனமான அன்பின் காரணமாக அவளைப் பெரிதும் உபத்திரவப் படுத்தி வந்தேன்.
அவள் பாண்டத்தைத் தூக்கிச் சென்றதனாலேயே நான் திருப்தி யடையவில்லை. அதை அவள் சந்தோஷத்துடனே செய்ய வேண்டும் என்று விரும்பினேன். எனவே, உரத்த சத்தம் போட்டு, "என்னுடைய வீட்டில் இம்மாதிரி மூடத்தனத்தைப் பொறுக்க முடியாது" என்றேன்.
அம்மொழிகள் கூரிய அம்புகளைப்போல் அவளுடைய இதயத்தில் தைத்தன.
' உங்கள் வீட்டை நீங்களே வைத்துக்கொண்டு என்னைத் தொலைத்து விடுங்கள்" என்று அவள் கூச்சலிட்டாள். அப்போது என்னை நானே மறந்து விட்டேன். என் இதயத்திலிருந்த இரக்க ஊற்று வற்றிப் போயிற்று. அவளுடைய கையைப் பிடித்து ஏணிக்கு எதிரே இருந்த வாயிற்படிக்கு, இழுத்துக் கொண்டு போனேன். வெளியே தள்ளுவதற்காகக் கதவைத் திறந்தேன்.
அவள் கன்னங்களின் வழியாய்க் கண்ணீர் தாரை தாரையாய் வழிந்து கொண்டிருந்தது. அவள் கூறியதாவது: 'உங்களுக்கு வெட்கமில்லையா? இப்படிச் சுய உணர்வு போய் விட வேண்டுமா ? எனக்குப் போக்கிட மெங்கே ? தஞ்சமளிப்பதற்கு இங்கு என் பெற்றோர்களாவது, உறவினர்களாவது. இருக்கிறார்களா? நீங்கள் என்னை உதைத்தாலும் நான் பொறுத்துக் கொள்ள வேண்டியதுதான். ஆண்டவன் ஆணை ! கதவைச் சாத்துங்கள். யாராவது சிரிக்கப் போகிறார்கள் !' என்றாள்.
வெளிக்குக் காட்டிக்கொள்ளவில்லை யாயினும் உள்ளுக்குள் மிகவும் வெட்கப்பட்டேன். கதவைச் சாத்தினேன். என் மனைவி என்னை விட்டு எங்கும் போவதற்கில்லை என்றால், நானும் அவளை விட்டுப் பிரிய முடியாது. நாங்கள் எத்தனையோ சண்டை போட்டிருக்கிறோமாயினும், முடிவில் சமாதானம் அடைந்து விடுவோம். அளவற்ற பொறுமை யுடையவளாதலால் என் மனைவியே வெற்றி யடைவாள்.
இன்றைய தினம் பாரபட்சமின்றி மேற்படி நிகழ்ச்சியை நான் கூறக் கூடியவனா-யிருக்கிறேன். இந்தப் புனித நிகழ்ச்சியை நான் கூறியதிலிருந்து தற்போது நானும் என் மனைவியும் தம்பதிகளுக்கு இலக்கியமாயிருப்பதாக யாரும் முடிவு செய்ய வேண்டாம். எங்களுக்குள் பூரண லட்சிய ஒற்றுமை இப் போதும் இல்லை. ஸ்ரீமதி கஸ்தூரிபாய்க்குத் தனியே ஏதேனும் இலட்சியங்கள் உண்டாவென் று ஒருகால் அவளுக்கே தெரியாம லிருக்கலாம்.
ஆனால் கஸ்தூரிபாயிடம் ஓர் அருங்குணம் இருக்கிறது. ஹிந்து மனைவிமார் பெரும்பாலோரிடம் இக்குணம் உண் டென்று சொல்லலாம். அது யாதெனில் விருப்பத்துடனோ விருப்ப மின்றியோ, அறிந்தோ, அறியாமலோ, என் அடிச்சுவட் டைப் பின்பற்றி நடப்பதால் அவள் மேன்மையுறலாம் என்று கருதி வந்திருக்கிறாள். புலனடக்கத்துடன் வாழ்க்கை நடத்த நான் செய்த முயற்சிகளுக்கு அவள் எப்போதும் குறுக்கே நின் றது கிடையாது. ஆதலின் எங்களுடைய அபிப்பிராயங்களில் மிக்க வேற்றுமை இருந்தபோதிலும், எங்களுடைய வாழ்க்கை எப்போதும் திருப்தியும் மகிழ்ச்சியும் வளர்ச்சியும் உடையதாய் இருந்து வந்திருக்கிறது."
------------
இந்தியா தேசத்தில் ஹிந்துக்களாகிய நாம், சமூகத்துக்குச் சிறந்த தொண்டு செய்துவரும் சில வகுப்பாரைத் தீண்டாதார் என்று ஒதுக்கித் தனிப்பட்ட சேரிகளில் வசிக்கும்படி செய்து வந்திருக்கிறோமல்லவா ? இந்தக் கர்மத்தின் பலனைத் தென்னாப்பிரிக்காவில் எல்லா இந்தியர்களுமே அநுபவிக்கும்படி நேர்ந்தது. அந்த நாட்டில் இந்தியர்கள் எல்லாரும் பொதுவாகக் 'கூலிகள்' என்று அழைக்கப் பட்டார்கள். இந்தியாவில் 'தீண்டாதார்' என்பதற்கு என்ன பொருளோ அதே பொருள் : தென்னாப்பிரிக்காவில் 'கூலிகள்' என்பதற்கு ஏற்பட்டிருந்தது. தீண்டாதாருக்கு இந்தியாவில் தனியாகச் சேரிகள் ஏற்பட்டிருப்பதுபோல் தென்னாப்பிரிக்காவில் 'கூலிகள்' என்று சொல்லப்பட்ட இந்தியர்கள் வசிப்பதற்குத் தனிப்பட்ட பகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்தன. அவை 'கூலிச் சேரிகள் ' என்று பெயர் பெற்றிருந்தன.
டிரான்ஸ்வாலின் தலைநகரமான ஜோகானிஸ்பர்க்கில் இந்தியர் வசித்த 'கூலிச் சேரி' ஒன்று இருந்தது. அந்தக் கூலிச் சேரியிலும் இந்தியர் சொந்தமாக நிலம் வாங்கிக்கொள்ள முடியாது. அதில் வசித்த இந்தியர்கள் குடியிருப்பு நிலத்தை ஜோகானிஸ்பர்க் நகர சபையாரிடமிருந்து 99 வருஷக் குத்தகைக்குப் பெற்றிருந்தார்கள், ஜனத்தொகைப் பெருக்கத்துக்குத் தகுந்தாற்போல் சேரியின் விஸ்தீரணம் அதிகரிக்கவில்லை. எனவே மிக நெருக்கடியில் இந்தியர்கள் வசித்து வந்தார்கள். சுகாதார வசதிகளுக்கு நகர சபையார் தக்க ஏற்பாடு செய்ய வில்லை. நல்ல சாலைகள் இல்லை ; விளக்குகள் போடவில்லை. அங்கு வசித்த இந்தியர்கள் பெரும்பாலும் கல்வியறிவில்லாத ஏழைத் தொழிலாளி வகுப்பைச் சேர்ந்தவர்கள். அவர்கள் சுகாதார விதிகளை அறிந்திருக்க-வில்லை. இந்தியர்களின் அறியாமையும் நகர சபையின் அசட்டையும் சேர்ந்து மேற்படி ’கூலிச்சேரி'யைச் சுகாதாரக் கேடான நரகமாகச் செய்திருந்தன. நகர சபையார் தங்களுடைய அசட்டையினால் நேர்ந் திருந்த இந்தத் தீமையை நிவர்த்திக்க முயல்வதற்குப் பதிலாக, அதையே காரணமாகக் கொண்டு இந்தியர்களை அவ்விட மிருந்தே விரட்டிவிட யத்தனித்தார்கள். இந்தியர்கள் 99 வருஷக் குத்தகைக்குப் பெற்றிருந்த நிலத்தைப் பெயருக்கு நஷ்ட ஈடு என்று கொடுத்து பறித்துக் கொள்ளத் தொடங்கினார்கள்.
நகரசபை நிர்ணயிக்கும் நஷ்ட ஈட்டுப் பணத்தை ஒப்புக் கொள்ளத் தயாராயில்லாத இந்தியர்கள் 'அப்பீல் செய்து' கொள்ள ஏற்பாடு இருந்தது. இதற்காக விசேஷக் கோர்ட்டு ஒன்று நியமிக்கப்பட்டது. இந்தக் கோர்ட்டில் இந்தியர்கள் பலர் அப்பீல் செய்து கொண்டார்கள். அவர்களுக்காகக் காந்திஜி ஆஜராகிப் பேசினார். வழக்குகள் ஜெயித்தாலும் தோற்றாலும் பத்து பவுனுக்குமேல் 'பீஸ் ' பெற்றுக்கொள்வதில்லை யென்றும், அத்தொகையிலும் பாதியை ஏழை இந்தியர்களின் உதவிக்கு ஒதுக்கி வைப்பதென்றும், காந்திஜி தீர்மானித்தார்.
மொத்தம் எழுபது வழக்குகளில் காந்திஜி ஆஜரானார். அவற்றில் ஒரு வழக்குதான் தோல்வி யடைந்தது. மற்றவை ஜயித்தன. இந்த வழக்குகளில் காந்திஜி இரவு பகல் கஷ்டப்பட்டு உழைத்தார். இதனால் ஏழை இந்தியர்களின் அன்புக்குப் பெரிதும் பாத்திரமானார். அதே சமயத்தில் வருமானமும் நிறையக் கிடைத்தது. ஆனால் அப்போது காந்திஜி தென் னாப்பிரிக்கா இந்தியர்களின் உரிமைகளை வற்புறுத்துவதற்காக "இண்டியன் ஒபீனியன் " என்ற பத்திரிகையை ஆரம்பித்திருந் தார். ஆரம்ப நாட்களில் பத்திரிகை நடத்துவதில் ஏராளமான நஷ்டம் ஏற்பட்டு வந்தது. அந்த நஷ்டத்தை யெல்லாம் காந்திஜி தம் சொந்த வருமானத்திலிருந்தே ஈடு செய்தார். மொத்தம் 1600 பவுன் வரையில் காந்திஜி மேற்படி பத்திரிகை யின் நஷ்டத்தைச் சரிக்கட்டக் கொடுத்ததாகத் தமது சுய சரித்திரத்தில் குறிப்பிட்டிருக்கிறார். இந்தப் பண நஷ்டத்தை யெல்லாம் ஈடு செய்யுமாறு இந்திய சமூகத்தின் அன்பைக் காந்திஜி பெற்று வந்தார்.
அதற்கு அறிகுறியாக எல்லா இந்தியர்களும் அவரைப் ’பாய் என்று அழைக்கத் தொடங்கினார்கள். 'பாய்' என்ற ஹிந்தி வார்த்தைக்கு ' அண்ணா' என்று பொருள். இவ்விதம் தம் மோடு தென்னாப்பிரிக்கா இந்தியர்கள் எல்லாரும் உறவு உரிமை கொண்டாடியது காந்திஜிக்கு மிக்க மகிழ்ச்சி தந்தது.
இந்தியர் வசித்த கூலிச் சேரி முழுதும் நகர சபைக்குச் சொந்தமாகிவிட்டது. ஆனாலும் அவர்களுக்கு வேறு இடம் கண்டு பிடித்துக் கொடுக்கும் வரையில் அங்கேயே வசிக்கும் படி விட்டு வைக்க நேர்ந்தது. இது காரணமாகச் சுகாதாரக் கேடு மேலும் அதிகமாயிற்று. வீடும் நிலமும் சொந்தமாயிருந்த வரையில் இந்தியர்கள் ஓரள வா வது சுத்தப்படுத்தி வந்தார்கள். நகர சபைக்குச் சொந்தமான பிறகு அதுவும் போயிற்று. நகர சபையும் சுகாதாரத்துக்காக ஏற்பாடு எதுவும் செய்யவில்லை.
இத்தகைய கேவலமான நிலைமையில் கூலிச் சேரி இருந்த போது ஒரு பெரிய விபத்து ஏற்பட்டது. ஜோகானிஸ்பர்க்கில் அருகில் இருந்த தங்கச் சுரங்கம் ஒன்றில் கருமகாமாரி (Black Plague) என்னும் பயங்கரக் கொள்ளை நோய் ஆரம்பித்தது. சுரங்கத்தில் வேலை செய்தவர்கள் பெரும்பாலும் நீக்ரோக்கள். சில இந்தியர்களும் அங்கே வேலை செய்து கொண்டிருந்தனர். இவர்களில் 23 பேரைத் திடீரென்று ஒரு நாள் கருமகாமாரி பற்றியது. அவர்கள் கூலிச்சேரியில் தங்கள் இருப்பிடத்துக்கு வந்து சேர்ந்தனர். காந்திஜியின் சகாக்களில் ஒருவரான ஸ்ரீ மதன் ஜித் என்பவர் 'இண்டியன் ஒபீனியன்' பத்திரிகைக்குச் சந்தா வசூலிப்பதற்காக அன்று அங்கே தற்செயலாகப் போயிருந்தார். கொள்ளை நோயினால் பீடிக்கப்பட்ட மனிதர்களை அவர் பார்த்தார். உடனே காந்திஜிக்கு ஒரு குறிப்பு எழுதி அனுப்பினார் :- "இங்கே கருமகாமாரி தோன்றியிருக்கிறது. உடனே தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் இந்திய சமூகம் பெரும் விபத்துக்கு உள்ளாகும். தயவு செய்து உடனே புறப்பட்டு வாருங்கள்."
இவ்விதம் காந்திஜிக்கு எழுதி அனுப்பிவிட்டு ஸ்ரீ மதன் ஜித் காலியாயிருந்த ஒரு வீட்டின் பூட்டை உடைத்துத் திறந்தார். நோயாளிகளை யெல்லாம் அந்த வீட்டில் வந்து இருக்கும்படி செய்தார். இதற்குள் காந்திஜியும் சைக்கிள் வண்டியில் ஏறித் துரிதமாக வந்து சேர்ந்தார். ஜோகானிஸ்பர்க்கில் வைத்தியத் தொழில் செய்து கொண்டிருந்த டாக்டர் வில்லியம் காட்பிரே என் னும் இந்தியக் கிறிஸ்துவரும் மேற்படி செய்தியைக் கேட்டு விரைந்து வந்தார். இந்த மூன்று பேருமாக நோயாளிகளுக்குப் பணிவிடை செய்யத் தொடங்கினார்கள். ஆனால் அவ்வளவு நோயாளிகளையும் கவனித்துக்கொள்ள மூன்று பேர் போத வில்லை. காந்திஜியின் காரியாலயத்தில் அப்போது நாலு இந்திய இளைஞர்கள் வேலை செய்துகொண்டிருந்தனர். கல்யாண் தாஸ், மானக்லால், குன் வந்தராய் ஆகிய மூவரையும் இன்னொருவரை பயும் நோயாளிகளுக்குத் தொண்டு செய்யச் சம்மதமா என்று காந்திஜி கேட்டார். அது பெரிய அபாயகரமான காரியம் என்றும் உயிரை இழக்கவும் நேரிடலாம் என்றும் காந்திஜி சொன்னார். நால்வரும் சிறிதும் தயங்காமல் ஒப்புக்கொண்டார்கள். ”தாங்கள் எங்கே இருக்கிறீர்களோ அங்கே நாங்களும் இருப்போம் !" என்று பதில் தந்தார்கள். அந்தக் காலத்திலேயே காந்திஜியின் செல்வாக்குக்கு உட்பட்டவர்கள் சகல பரித் தியாகங்களையும் செய்வதற்கு தயாராகி யிருந்தார்கள்.
இரவெல்லாம் கண் விழித்து மேற்சொன்ன ஏழு பேரும் நோயாளிகளுக்குப் பணிவிடை செய்து வந்தார்கள். அவ்வப் போது மருந்து கொடுத்தார்கள். நோயாளிகளையும் அவர்களுடைய படுக்கைகளையும் அடிக்கடி சுத்தம் செய்தார்கள். நோயாளிகளுக்குத் தைரியம் கூறி உற்சாகப்படுத்தி வந்தார்கள்.
காலி வீட்டைப் பூட்டை உடைத்துத் திறந்தது பற்றி நகர சபைக்கு உடனே காந்திஜி எழுதி விட்டார். அதற்குப் பதிலும் வந்தது. நகரசபைக் காரியஸ்தர் காந்திஜிக்கும் அவருடைய சகாக்களுக்கும் சமயத்தில் சரியான காரியம் செய்த தற்காக நன்றி செலுத்தினார். மறுநாள் நகர சபையின் உத்தரவுப்படி காலியாயிருந்த கிடங்கு ஒன்று காந்திஜியிடம் ஒப்புவிக்கப் பட்டது. நோயாளிகளை அந்தக் கிடங்குக்கு மாற்ற வேண்டும் என்று உத்தரவும் பிறந்தது. ஆனால் நோயாளிகளுக்கு வேண்டிய வசதி ஒன்றும் அங்கே இல்லை. அசுத்தமாயிருந்த அந்த கிடங்கைக் காந்திஜியும் அவருடைய சகாக்களும் சுத்தப் படுத்தினார்கள். சில படுக்கைகளையும் வைத்திய சாதனங்களையும் சம்பாதித்துக் கொண்டு வந்தார்கள்.
நகர சபையார் அனுப்பிய ஒரு தாதியும் வந்து சேர்ந்தாள். தாதி அன்பு உள்ளம் கொண்டவள். நோயாளிகளுக்குத் தானே பணிவிடை செய்வதாகச் சொன்னாள். ஆனால் நோயாளிகளை அவள் தொடும்படியே மற்றவர்கள் விடவில்லை.
'கருமகாமாரி’க்குப் பிராந்தி ஒரு மருந்து என்று கருதப்பட் டது. நோயாளிகளுக்கு அடிக்கடி கொடுக்க வேண்டும் என் றும் பணிவிடை செய்கிறவர்களும் அடிக்கடி பிராந்தி சாப்பிட வேண்டும் என்றும் சொல்லப்பட்டது. தாதி அவ்விதமே அடிக்கடி பிராந்தி குடித்துக் கொண்டிருந்தாள். ஆனால் காந்திஜி முதலியோர் பிராந்தியைத் தொடவில்லை.
நோயாளிகளில் மூன்றுபேர் பிராந்தி குடிக்காமல் சிகிச்சை பெற இணங்கினார்கள். அவர்களுக்குக் காந்திஜி தலையிலும் மார்பிலும் ஈர மண்ணை வைத்துக் கட்டினார். மூன்று பேரில் இருவர் பிழைத்தார்கள். ஒருவர் இறந்து விட்டார். வழக்கமான சிகிச்சை பெற்ற இருபது பேரும் மாண்டு போனார்கள்.
இதற்கிடையில் நகரசபையார் ஜோகானிஸ்பர்க்குக்கு ஏழு மைல் தூரத்தில் ஓர் இடத்தைக் குறிப்பிட்டுத் தொற்று நோயாளிகளை அங்கே கொண்டு போக வேண்டும் என்றார்கள். இறந்தவர்கள் போக உயிரோடிருந்த இருவரும் அங்கே கொண்டு போய்ச் சேர்க்கப் பட்டனர். புதிதாக யாருக்காவது நோய் கண்டால் அவர்களையும் உடனே அவ்விடத்துக்கு அனுப்ப ஏற் பாடு செய்யப் பட்டது.
பாவம் ! பிராந்தி குடித்துத் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள விரும்பிய தாதி கொள்ளை நோயினால் பீடிக்கப்பட்டு இறந்து போனாள். காந்திஜியையும் அவருடைய சகாக்களையும் தொற்றுநோய் பீடிக்கவில்லை. இதிலிருந்து பிராந்தியை மருந்தாகச் சில சமயங்களில் உபயோகப்படுத்துவது முழுத் தவறு என்ற முடிவுக்குக் காந்திஜி வந்தார்; ஈர மண் சிகிச்சையில் அவருடைய நம்பிக்கையும் அதிகமாயிற்று.
நோயாளிகளின் பொறுப்புத் தீர்ந்த பிற்பாடும், காந்திஜிக்கு வேறு ஒரு பெரிய பொறுப்பு ஏற்பட்டது. ”கூலிச் சேரி” விஷயத்தில் ஏற்கெனவே அலட்சியமாக இருந்த நகரசபையார் கருமகாமாரி நோய் வந்த பிறகு, அது வெள்ளைக்காரர்களையும் பற்றி விடக்கூடாதே என்று மிகவும் கவலை காட்டினார்கள் ; தாராளமாகப் பணமும் செலவழித்தார்கள். மேற்படி கொள்ளை நோயை அடியோடு ஒழிப்பதற்குக் கூலிச் சேரியை முழுதும் எரித்துவிட வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. இதற்காக இந்தியர்கள் எல்லாரையும் அங்கிருந்து வெளியேற்ற வேண்டியிருந்தது. காந்திஜியின் உதவி யில்லா விட்டால் இந்த வேலை மிகவும் கஷ்டமாய்ப் போயிருக்கும். ஆனால் காந்திஜி பொது நலத்தை முன்னிட்டு அதிகாரிகளுடன் ஒத்துழைக்க முன் வந்தார். கூலிச் சேரியில் வசித்த இந்தியர்கள் அனைவரும் ஜோகானிஸ்பர்க்குக்கு பதின் மூன்று மைல் தூரத்தில் இருந்த திறந்த வெளியில் சென்று இருபத்தோரு நாள் வசிக்க வேண்டும் என்றும், எல்லாரும் புறப்பட்டுச் சென்ற பிறகு கூலிச் சேரியை எரித்துவிட வேண்டும் என்றும் ஏற்பாடு. வெகு நாளாக வசித்த இடத்திலிருந்து ஜனங்களைக் கிளப்புவது இலேசான காரியமா? தாங்கள் கிளம்புவதுடன் உணவுப் பொருள்களையும் மற்றும் அவசியமான சாமான்களையும் எடுத்துப்போக வேண்டும். அதிக உபயோகமில்லாத தட்டுமுட்டுச் சாமான்களை அக்கினி பகவானுக்கு இரையாகும்படி விட்டுவிட்டுப் போக வேண்டும். எவ்வளவு பயனற்ற சாமான்களாயிருந்த போதிலும் பல காலமாகச் சேர்த்து வைத்திருந்தவர்களுக்கு அவற்றை விட்டுப் போக மனம் வராதல்லவா ?-போகிற இடத்திலாவது வீடு வாசல் உண்டா ? திறந்த வெளியில் மூன்று வாரம் வசிக்கவேண்டும். ஆயினும் காந்திஜியும் அவருடைய சகாக்களும் கேட்டுக் கொண்டதின் பேரில் கூலிச்சேரியில் இருந்த அவ்வளவு இந்தியர்களும் புறப்படச் சித்தமானார்கள். ஆனால் ஒரு விஷயத்தில் அவர்களுக்குக் கவலை ஏற்பட்டது.
அவரவர்களும் வெகுகாலமாகப் பாடுபட்டுத் தேடி ஏதோ கொஞ்சம் பணம் மீத்து வைத்திருந்தார்கள். பணத்தைப் பாங்கியில் போடுவதென்பது அந்த ஏழைத் தொழிலாளிகளுக்குத் தெரியவே தெரியாது. அவரவர்கள் வசித்த குடிசையில் தரையைத் தோண்டிப் புதைத்து வைத்திருந்தார்கள். மேற்படி சிறு தொகைகளை யெல்லாம் என்ன செய்வது என்பது பற்றிக் கவலை உண்டாயிற்று. திறந்த வெளியில் வசிக்கப் போகும் இடத்துக்குப் பணத்தைக் கொண்டு போக அவர்களுக்கு மனம் இல்லை. திருட்டுப் போய்விட்டால் என்ன செய்கிறது ? காந்திஜியிடம் இது விஷயமாக முறையிட்டார்கள். "பாங்கியில் போடுங்கள்!" என்று காந்திஜி சொன்னார். "எங்களுக்குப் பாங்கியில் போடத் தெரியாது. போட்டால் திரும்பி வருமோ என்னமோ, யார் கண்டது ? பாங்கியின் பக்கம் போவதே எங்களுக்குக் கஷ்டம்!" என்றார்கள். அவர்களில் ஒருவர், "உங்களிடமே கொடுத்து வைக்கிறோம்; நீங்கள் வைத்திருந்து திருப்பிக் கொடுங்கள்" என்றார். எல்லா இந்தியர்களும் அப்படியே சொன்னார்கள். "உங்களிடம் பணம் இருந்தால் எங்களுக்குக் கவலையில்லை" என்றார்கள். அந்த ஏழைத் தொழிலாளிகள் தம்மிடத்தில் காட்டிய நம்பிக்கை காந்தி மகாத்மாவின் உள்ளத்தை உருக்கியது. அவர்களுடைய பாங்கியாக இருந்து உதவ ஒப்புக் கொண்டார். இது சாதாரண விஷயமல்ல. நூற்றுக்கணக்கான இந்தியர்கள் தங்களுடைய சேமிப்புப் பணத்தைக் கொண்டுவந்து கொடுத்தார்கள். பெரும்பாலும் செப்புக் காசுகளும் வெள்ளி நாணயங் களுமாக வந்து குவிந்தன. இவற்றை யெல்லாம் எண்ணி எடுத்துக் கொண்டு அவரவர்கள் பேரில் கணக்கு எழுதவேண்டும். அவ்வளவு நாணயங்களையும் காந்திஜி என்ன செய்ய முடியும் ? தம்முடைய பெயரில் பாங்கிக்குத் தான் அனுப்பவேண்டும். பிளேக் நோய்ப் பகுதியிலிருந்து வந்தவை யென்று பாங்கிக்காரர்கள் எடுக்க மறுத்து விடக் கூடும். பாங்க் மானேஜரிடம் பேசிக் காந்திஜி சரிக்கட்டினார். நாணயங்களை யெல்லாம் மருந்து ஜலம் விட்டுச் சுத்தம் செய்து பாங்கிக்கு அனுப்பினார். இவ்விதம் இந்தியர்கள் சிறிது சிறிதாகச் சேர்த்து வைத்திருந்த தொகைகள் சேர்ந்து மொத்தம் அறுபதினாயிரம் பவுன் காந்திஜியிடம் ஒப்படைக்கப்பட்டது. அவ்வளவையும் பாங்கியில் பத்திரப்படுத்தி, சரியாகக் கணக்கு வைத்திருந்து, பிற்பாடு காந்திஜி திருப்பிக் கொடுத்தார் !
பிற்காலத்தில் காந்திஜி இந்தியாவில் பல பொதுக்காரியங்களுக்குப் பணம் வசூல் செய்தார். ஜோகானிஸ்பர்க்கில் ஏழை இந்தியர்கள் காந்திஜியிடம் எப்படிப் பூரண நம்பிக்கை வைத்திருந்தார்களோ அப்படியே இந்தியர்கள் எல்லாரும் அவரிடம் நம்பிக்கைக் காட்டினார்கள். பல காரியங்களுக்கு லட்சக்கணக்கான தொகை கொடுத்தார்கள். அவ்வளவையும் இந்திய ஏழை மக்களின் பணமாகவே காந்திஜி கருதிப் பத்திரப்படுத்தி அந்த ஏழை மக்களுக்கே பயன்படும் முறையில் உபயோகப் படுத்தினார். நிற்க.
'கூலிச் சேரி’யில் இந்தியர் அனைவரும் தனி ரயில் வண்டிகளில் ஏற்றப்பட்டு நகரத்துக்கு பதின் மூன்று மைல் தூரத்தி லிருந்த கிளிப்ஸ் கேட் பண்ணைக்குக் கொண்டுபோகப் பட்டார்கள். அங்கே கூடாரங்கள் சில போடப்பட்டிருந்தன. திறந்த வெளியிலும் கூடாரங்களிலும் வசித்துப் பழக்கமில்லாதவர்களாதலால் இந்தியர்கள் முதலில் கஷ்டப்பட்டார்கள். இருபத்துநாலு மணி நேரத்துக்குள் அவர்கள் தங்கள் தொல்லைகளை மறந்து குதூகலமா யிருக்கத் தொடங்கினார்கள். ஒவ்வொரு நாளும் காந்திஜி சைக்கிளில் அங்கே சென்று அவர்களுடைய சுக துக்கங்களை விசாரித்து விட்டு வந்தார். இது அவர்களுடைய கவலையைப் போக்குவதற்கு உதவியாயிருந்தது. சில நாளைக்கெல்லாம் அவர்கள் ஆடிப்பாடிச் சிரித்துக் களிக்கத் தொடங்கி விட்டார்கள். மூன்று வாரம் திறந்த வெளியில் வசித்ததால் அவர்களுடைய தேக ஆரோக்கியமும் அபிவிருத்தி யடைந்தது.
இந்தியர்கள் காலி செய்து விட்டுப் போன மறுநாளே கூலிச் சேரிக்குத் தீ வைக்கப் பட்டது. இதே சமயத்தில் நகர சபையின் மார்க்கெட்டில் செத்த எலி விழுந்தது காரணமாக மார்க்கெட்டும் கொளுத்தப்பட்டது. நகரசபைக்குப் பத்தாயிரம் பவுனுக்கு மேல் நஷ்டமாயிற்று. ஆயினும் நகரத்தில் கொள்ளை நோய் மேலும் பரவாமல் தடுக்கப்பட்டது.
-----------
தென்னாப்பிரிக்காவில் காந்திஜி வசித்த காலத்தில் சில சிறந்த ஆங்கில நண்பர்கள் அவருக்குக் கிடைத்தார்கள். அவர்களில் ஒருவர் மிஸ்டர் வெஸ்ட்; இன்னொருவர் மிஸ்டர் போலக். இந்த இரண்டு பேரும் ஜோகானிஸ்பர்க்கில் இருந்த சைவ போஜன சாலையில் காந்திஜிக்குப் பழக்கமானவர்கள்.
இவர்களுள் முதலில் சிநேகமானவர் மிஸ்டர் வெஸ்ட். இவரும் காந்திஜியும் தினந்தோறும் மாலையில் சைவ போஜன சாலையில் சந்திப்பது வழக்கம். கொள்ளை நோய்க்காரர்களுக்குப் பணிவிடை செய்ய ஆரம்பித்ததிலிருந்து காந்திஜி மேற்படி சைவ போஜன சாலைக்குப் போகவில்லை; தம் மூலமாகத் தொற்றுநோய் மற்றவர்களிடம் பரவாமலிருக்கும் பொருட்டுத் தான். ஆனால் காந்திஜி வராதது பற்றி மிஸ்டர் வெஸ்ட் கவலை கொண்டார். ஒரு நாள் அதிகாலையில் காந்திஜியின் வீட்டுக்கு வந்து கதவை இடித்தார். அப்போது காந்திஜி வெளியில் உலாவப் புறப்பட்டுக் கொண்டிருந்தார். இருவரும் நடந்து கொண்டே சம்பாஷித்தனர்.
காந்திஜி கொள்ளை நோய்க்காரர்களுக்குப் பணிவிடை செய்து கொண்டிருப்பதாய் அறிந்த மிஸ்டர் வெஸ்ட், "நானும் உங்களுடன் வந்து நோயாளிகளுக்குத் தொண்டு செய்ய விரும்புகிறேன். என்னை நம்பி வாழ்க்கை நடத்துகிறவர்கள் யாரும் இல்லை என்பதுதான் உங்களுக்குத் தெரியுமே?” என்றார்.
"ஆனாலும் உங்களை நான் அபாயத்துக்கு உட்படுத்தப் போவதில்லை. இரண்டொரு நாளில் எங்களுக்கே அந்த வேலை யில்லாமற் போய்விடும். ஆனால் முக்கியமான வேறு வேலை யொன்று இருக்கிறது. அதை நீங்கள் செய்கிறதா யிருந்தால் சொல்கிறேன் " என்றார் காந்திஜி.
"பேஷாகச் செய்கிறேன். சொல்லுங்கள் ! " என்றார் மிஸ்டர் வெஸ்ட்.
"நேட்டாலில் இந்தியருக்காக ”இண்டியன் ஒபீனியன் " என்னும் பத்திரிகை நடத்தி வருகிறோம் அல்லவா ? பத்திரிகையையும் பத்திரிகை அச்சடிக்கும் அச்சுக் கூடத்தையும் பார்த்துக்கொள்ள ஒருவர் தேவை. இதுவரை ஸ்ரீ மதன் ஜித் அந்தப் பொருப்பை வகித்து வந்தார். இப்போது அவருக்கு இங்கே வேலை இருக்கிறது. நீங்கள் போக முடியுமா ?"
ஜோகானிஸ்பர்க்கில் இருந்த ஓர் அச்சுக் கூடத்துக்கு மிஸ்டர் வெஸ்ட் பாதி சொந்தக்காரர். அச்சுக்கூட அனுபவம் அவருக்கு இருந்தது. சொந்தக் காரியத்தை விட்டு விட்டு டர்பனுக்குப் போகச் சம்மதித்தார். மறுநாளே பிரயாணமானார். அன்று முதல் காந்திஜி தென்னாபிரிக்காவில் இருந்த வரையில் காந்திஜியின் சுக துக்கங்களில் எல்லாம் வெஸ்டும் பங்காளியாயிருந்து வந்தார்.
'கூலிச் சேரி' விஷயமாகவும் கருமகாமாரி விஷயமாகவும் ஜோகானிஸ்பர்க் நகர சபையார் அலட்சியமாயிருந்ததைக் கண்டித்துக் காந்திஜி பத்திரிகைகளுக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். 'கிரிடிக்' என்னும் பத்திரிகையில் உதவி ஆசிரியராயிருந்த மிஸ்டர் போலக் மேற்படி கடிதத்தைப் படித்தார். படித்த உடனே அந்தக் கடிதம் எழுதிய காந்திஜியை நேரில் சந்திக்க வேணும் என்ற விருப்பம் அவருக்கு உண்டாயிற்று.
ஒருநாள் மாலை காந்திஜியைச் சைவ போஜன சாலையில் சந்தித்துப் பேசினார். காந்திஜியிடம் அவருடைய மதிப்பு அதிக மாயிற்று. வாழ்க்கையைப் பற்றிய இருவருடைய கொள்கை களும் ஒத்திருந்தன. போலக் எளிய வாழ்க்கையில் பற்றுக் கொண்டவர். புத்தி ஒப்புக் கொள்ளும் எந்தக் காரியத்தையும் நடத்தையில் கடைப் பிடிக்கும் உறுதி கொண்டவர். காந்திஜி மேற்கொள்ளும் பொதுக் காரியங்களில் அவருடன் தாமும் ஒத்துழைக்க விரும்புவதாக மிஸ்டர் போலக் கூறினார்.
இதற்கிடையில் டர்பனுக்குச் சென்றிருந்த மிஸ்டர் வெஸ்ட் ஒரு கடிதம் எழுதியிருந்தார். அது 'இந்தியன் ஒபீனியன்' பத்திரிகையையும் அச்சுக் கூடத்தையும் பற்றிக் கவலை உண்டாக்குவதா யிருந்தது.
"தாங்கள் எதிர்பார்க்கிறபடி லாபம் வராது ; நஷ்டம் வரலாம். கணக்குகள் ஒழுங்கில்லை. நிலுவை பாக்கி ஏராளம். ஆனால் சரியான விவரம் இல்லை. என்னாலியன்ற வரையில் நிலைமையைச் சீர்ப்படுத்த முயல்கிறேன்" என்பது மிஸ்டர் வெஸ்ட் கடிதத்தின் சாராம்சம்.
இதைப் படித்தவுடனே காந்திஜி டர்பனுக்கு நேரில் போக விரும்பினார். இது வரையில் பிறர் பேச்சை நம்பி ஏமாந்து போனோம் என்று உணர்ந்தார். டர்பனுக்குப் பிரயாணப் பட்டார்,
காந்திஜியை ரயிலில் ஏற்றி அனுப்புவதற்கு வந்த மிஸ்டர் போலக் கையில் ஒரு புத்தகம் கொண்டு வந்திருந்தார். ரஸ்கின் என் னும் பிரசித்த ஆங்கில அறிஞர் எழுதிய “Unto this Last” என்னும் புத்தகம் அது. பிரயாணத்தின் போது படிப்பதற்காக அந்தப் புத்தகத்தைக் கொடுத்தார். காந்திஜி அதைப் படிக்கத் தொடங்கிய பிறகு நிறுத்தவே யில்லை. காந்திஜியின் மனப் போக்கை அது பிரதிபலித்தது. மனித வாழ்க்கையின் இலட்சியங்கள் எப்படி யிருக்க வேண்டும் என்று தெளிவுபடுத்திக் கூறியது. பின் வரும் சித்தாந்தங்கள் முக்கியமாக அந்த நூலில் கூறப்பட்டிருந்தன :
1. மனிதனின் நன்மை சர்வஜன நன்மையில் அடங்கியது.
2. வக்கீலின் உழைப்பும், நாவிதனுடைய உழைப்பும் ஒரே பெறுமான முள்ளவைதான். ஏனெனில் அனைவருக்கும் தங்கள் உழைப்பினால் ஜீவனோபாயம் சம்பாதிக்கும் உரிமை சமமாக உண்டு.
3. உடலை உழைத்து வாழும் வாழ்வே, அதாவது குடியானவனுடைய அல்லது கைத்தொழிலாளியின் வாழ்க்கையே மேன்மையான வாழ்க்கையாகும்.
முதல் இரு சித்தாந்தங்களையும் பற்றிக் காந்திஜி ஏற்கனவே நன்கு அறிந்திருந்தார். ஆனால் மூன்றாவது கொள்கை அவருக்குப் புதிதாக இருந்தது. ஆயினும் அது உண்மை, - மிக முக்கியமான உண்மை - என்பது இப்போது நன்கு தெளிவாயிற்று. அந்தக் கொள்கைக்கு இணங்கத் தம் வாழ்க்கையைச் செப்பனிடுவது பற்றிச் சிந்திக்கத் தொடங்கினார். அன்றிரவெல்லாம் ரயில் பிரயாணத்தின்போது தூங்காமல் சிந்தனை செய்து கொண்டிருந்தார். சிந்தனை டர்பன் நகரம் போய்ச் சேர்ந்தவுடனே காரியமாக உருக்கொண்டது.
ரஸ்கின் புத்தகத்தினால் தம் மனோநிலையில் ஏற்பட்ட மாறுதலைப் பற்றிக் காந்திஜி மிஸ்டர் வெஸ்டுக்குச் சொன்னார்.
"நாம் எல்லாரும் ஒரு விவசாயப் பண்ணைக்குப் போய்ப் புதிய வாழ்வு தொடங்க வேண்டும். அச்சுக்கூடத்தை நம்முடன் கொண்டுபோய் விடுவோம். விவசாய வேலை செய்து ஒழிந்த வேளைகளில் அச்சுக்கூட வேலையைப் பார்ப்போம். பண்ணையில் வசிப்பவர்கள் எல்லாரும் சமமாக மாதம் மூன்று பவுன் சம்பளம் வாங்கிக் கொள்வோம்" என்றார் காந்திஜி. மிஸ்டர் வெஸ்ட் உடனே உற்சாகமாகச் சம்மதித்து விட்டார். ஆனால் அச்சுக்கூடத்தில் வேலை செய்த பன்னிரண்டு தொழிலாளிகளும் என்ன செய்வார்கள்? அவர்கள் மேற்படித் திட்டத்தின் கீழ் வேலை செய்யச் சம்மதிப்பார்களா ?
அச்சுக்கூடத் தொழிலாளிகளோடு காந்திஜி கலந்து பேசினார். அவர்களில் இயந்திர வேலைக்காரரான கோவிந்தசாமி என்னும் தமிழர் மட்டும் அந்த யோசனைக்கு முழுதும் இணங்கினார். மற்றவர்கள் அச்சுக்கூடம் எங்கே போனாலும் அங்கே தாங்களும் வருவதாகவும், ஆனால் வழக்கம்போல் சம்பளம் கொடுக்கவேண்டும் என்றும் சொன்னார்கள்.
உடனே காந்திஜி "டர்பனுக்குச் சுற்றுப் புறத்தில் ஏதேனும் ஒரு ரயில்வே நிலையத்தை யடுத்த இடத்தில் நிலம் விலைக்குத் தேவை" என்று பத்திரிகைகளில் விளம்பரம் செய்தார். போனிக்ஸ் ஸ்டேஷனுக்குச் சமீபத்தில் நிலம் விற்பனைக்குக் கிடைக்கும் என்று பதில் கிடைத்தது. டர்பனிலிருந்து போனிக்ஸ் 13 மைல். காந்திஜியும் மிஸ்டர் வெஸ்டும் நிலத்தைப் போய்ப் பார்த்தார்கள். நிலம் அவர்களுக்குப் பிடித்திருந்தது. முதலில் இருபது ஏக்கரா நிலமும் பிறகு எண்பது ஏக்கரா கிலமும் வாங்கினார்கள். வாங்கிய நிலத்தில் ஒரு இனிய நீர் ஊற்றும் சில மாமரங்களும் ஆரஞ்சுச் செடிகளும் இருந்தன.
போனிக்ஸ் திட்டத்தைப் பற்றிக் கேள்விப்பட்ட காந்திஜியின் நண்பர் ஸ்ரீ ரஸ்டம் ஜி உற்சாகத்துடன் உதவி செய்ய முன் வந்தார். ஒரு பெரிய கிடங்குக்குக் கூரை போடப்பட்டிருந்த தகரத் தகடுகளையும் மற்றும் கட்டிட சாமான்களையும் கொடுத்தார். போயர் யுத்தத்தின்போது காந்திஜியுடன் தொண்டு செய்த சில தச்சர்களும் கொத்தர்களும் போனிக்ஸுக்கு வந்து அச்சுக்கூடம் வைப்பதற்குக் கொட்டகை போட்டுக் கொடுத்தார்கள். எல்லாரும் உற்சாகத்துடன் வேலை செய்தபடியால் 76 அடி நீளமும் 50 அடி அகலமும் உள்ள தகரக் கொட்டகை ஒரே மாதத்தில் கட்டி முடிந்து விட்டது.
அந்தப் பிரதேசத்தில் ஏராளமாக அடர்ந்த புல் முளைத்துப் பரவிக் கிடந்தது. பாம்புகள் தாராளமாக அந்தப் புல் புதர் களில் குடிபுகுந்து வசித்து வந்தன. அதுவரையில் அங்கே மனித சஞ்சாரமே கிடையாது. கூடாரம் போட்டுக் கொண்டு அங்கு வசித்த காந்திஜியும் தச்சர், கொத்தர் முதலிய தொழி லாளிகளும் மிக்க அபாயத்துக்கு உட்பட்டிருந்தார்கள்.
கொட்டகை கட்டி முடிந்ததும் டர்பனிலிருந்த அச்சுக் கூடம் போனிக்ஸுக்குக் கொண்டு வரப்பட்டது. புதிய இடத்துக்கு வந்த பிறகு இண்டியன் ஒபீனியன்' முதல் இதழ் அச்சிடுவதில் ஒரு பெரும் நெருக்கடி ஏற்பட்டது.
அந்த நெருக்கடி பற்றியும் அது தீர்ந்த விதத்தைப் பற்றியும் மகாத்மாவின் வாய் மொழியாகவே தெரிந்து கொள்வோம் :
ஆரம்பத்தில், பத்திரிகை வெளியாவதற்கு முந்தின இரவுகளில் நாங்கள் எல்லாரும் கண் விழித்து வேலை செய்ய வேண்டியிருந்தது. இளைஞர், விருத்தர் அனைவரும் பத்திரிகை மடிப். பதில் உதவி செய்வார்கள். இரவு பத்து மணியிலிருந்து நடு நிசிக்குள் வேலை முடிவது வழக்கம்.
ஆனால் முதல் இதழ் வெளியாக வேண்டிய தினத்துக்கு முன்னிரவு நாங்கள் பெற்ற அநுபவம் என்றும் மறக்கக் கூடாத தொன்றாகும். அச்சுக் கோத்து முடிந்து இயந்திரத்தில் பொருத் தியாகி விட்டது. ஆனால் என்ஜின் வேலை செய்யவில்லை. என்ஜினை அமைத்து ஓட்டித் தருவதற்கு டர்பனிலிருந்து என்ஜினியரை வரவழைத்திருந்தோம். அவரும் வெஸ்டும் தங்களால் இயன்றவரை பார்த்ததும் என்ஜினை ஓடச் செய்ய முடியவில்லை. வெஸ்ட் துக்கத்தில் ஆழ்ந்தவராய்க் கண்ணில் நீர் ததும்ப என்னிடம் வந்து, "என்ஜின் ஓடவில்லை; நாளை பத்திரிகை வெளிவராது" என்றார். அவருக்குச் சமாதானமாக நான் கூறியதாவது:
' அதற்கு நாம் என்ன செய்யலாம் ? கண்ணீர் விடுவதில் பயனில்லை. மனிதப் பிரயத்தனத்தில் ஆகக்கூடிய தெல்லாம் செய்து பார்த்து விடுவோம். கைச் சக்கரத்தின் விஷய மென்ன ?
"கைச் சக்கரம் இருக்கிறது. அதைச் சுற்ற ஆட்களுக்கு எங்கே போவது ? நம்மால் முடியும் காரியமல்ல. நான்கு, பேராய் மாற்றி மாற்றிச் சுற்ற வேண்டும். நமது ஆட்களோ ஏற்கனவே களைத்துப் போயிருக்கிறார்கள்" என்றார் வெஸ்ட்.
கட்டிட வேலை இன்னும் முழுதும் முடியவில்லை. ஆதலின் தச்சர்கள் எங்களுடன் இருந்தார்கள். அவர்கள் அச்சுக்கூடத் திலே படுத்து தங்கினார்கள். அவர்களைச் சுட்டிக் காட்டி, ’இந்தத் தச்சர்களை நாம் உபயோகப்படுத்திக் கொள்ளக் கூடாதா ? அவர்களும் சேர்ந்தால் இரவு முழுதும் நாம் வேலை செய்யலாம். இந்த உபாயம் ஒன்று பாக்கி யிருக்கிறதே!' என்றேன் நான்.
"தச்சர்களை எழுப்ப எனக்குத் துணிவில்லை. நமது ஆட்களோ களைத்துப் போயிருக்கிறார்கள்" என்றார் வெஸ்ட்,
"அந்தக் கவலை உங்களுக்கு வேண்டாம்; அவர்களுடன் பேசி முடிப்பதற்கு நான் இருக்கிறேன்" என்றேன்.
“ அப்படியானால் வேலை நடந்து விடும்" என்றார் வெஸ்ட்.
தச்சர்களை எழுப்பி அவர்களை இவ்வேலையில் உதவி செய்யும்படிக் கேட்டுக் கொண்டேன். அதிகமாக அவர்களை வற்புறுத்தவே அவசியமில்லாமலிருந்தது. ”அவசரத்தில் உதவி செய்யவில்லை யென்றால் நாங்கள் இருந்து என்ன பயன் ? நீங்கள் இளைப்பாறுங்கள். நாங்கள் அந்த வேலையைப் பார்த்துக் கொள்கிறோம். எங்களுக்கு அது எளியது" என்றார்கள். எங்கள் சொந்த ஆட்கள் வேலைக்குத் தயாராய் இருந்தார்கள் என்று சொல்ல வேண்டுவதில்லை.
வெஸ்ட் மிகுந்த ஆனந்தங் கொண்டார். வேலை ஆரம்பித்த போது அவர் தோத்திரப் பாட்டு ஒன்று பாடத்தொடங்கினார். தச்சர்களைப் பிரித்து விட்டேன். முறைப்படி மற்றவர்களும் வேலை செய்தார்கள். இவ்வாறு காலை ஏழு மணி வரையில் வேலை செய்தோம். ஆனால் இன்னும் வேலை நிறைய பாக்கி யிருந்தது. இப்போது மீண்டும் என்ஜினியரை எழுப்பி என்ஜினை ஓட்டச் சொல்லிப் பார்க்கலா மென்று மிஸ்டர் வெஸ்டினிடம் சொன்னேன். இம் முறையேனும் அவர் வெற்றி பெற்றால் வேலை காலத்தில் முடிந்துவிடும்.
அவ்வாறே வெஸ்ட் அவரை எழுப்பினார். அவர் உடனே என்ஜின் அறைக்குச் சென்றார். என்ன விந்தை! என்ஜினைத் தொட்டவுடனே அது ஓட ஆரம்பித்தது ! அச்சுக்கூடம் முழுவதிலும் ஆனந்தகோஷம் நிரம்பியது. இதன் காரணம் என்ன? நேற்றிரவு நாம் எவ்வளவோ முயன்றும் பயன்படாமற் போயிருக்க, இன்று காலை கோளாறு ஒன்றுமே இல்லாததுபோல் ஓடத் தொடங்கிவிட்டதே ?" என்று நான் கேட்டேன்.
வெஸ்டோ , என்ஜினியரோ- நன்றாக நினைவில்லை-கூறியதாவது : "இதற்குக் காரணம் கூறுதல் கஷ்டம். இயந்திரங்கள் சில சமயம் நடந்துகொள்வதைப் பார்த்தால் நம்மைப் போலவே அவற்றிற்கும் ஓய்வு தேவை என்று காணப்படுகிறது.” என்ஜின் வேலை செய்ய மறுத்தது எங்களுக்கு ஏற்பட்ட சோதனை என்றே எனக்குத் தோன்றிற்று. நல்ல சமயத்தில் அது மீண்டும் ஓடத் தொடங்கியது, எங்கள் உண்மையான, மனப்பூர்வமான உழைப்பின் பயன் என்று கருதினேன். பத்திரிகைப் பிரதிகளைக் காலத்தில் தபாலுக்கு அனுப்பினோம். எல்லோருக்கும் சந்தோஷமாயிருந்தது.
இந்த ஆரம்பப் பிடிவாதமானது பின்னால் பத்திரிகை ஒழுங்காக வெளியாகும் என்பதை உறுதிப்படுத்திற்று. பின்னால் ஒரு காலத்தில் வேண்டு மென்றே நாங்கள் என்ஜின் உபயோகிப்பதை நிறுத்திக் கையினால் வேலை செய்தோம். போனிக்ஸ் குடியேற்ற வாசிகள் தார்மீக உந்நத நிலையை எய்தியிருந்த நாட்கள் அந்நாட்களே என்பது என் கருத்து.
------------
போனிக்ஸ் ஆசிரமப் பண்ணையைத் தொடங்கியபோது, காந்திஜி கூடிய சீக்கிரத்தில் அங்கே தாமும் போய் வசிக்க வேண்டும் என்ற நோக்கம் கொண்டிருந்தார். போனிக்ஸ் ஆசிரமத்தில் வசிக்கத் தீர்மானித்த ஒவ்வொருவருக்கும் மூன்று மூன்று ஏக்கரா நிலம் பிரித்துக் கொடுக்கப்பட்டது. அந்தந்த நிலத்தை அவரவர்களே உழுது பயிர் செய்ய வேண்டும் என்றும், சொந்த உடலுழைப்பைக் கொண்டு. ஜீவனம் நடத்த வேண்டும் என்றும் திட்டம் போடப் பட்டது. காந்திஜியின் பங்குக்கு மூன்று ஏக்கர் நிலமும் ஒதுக்கப்பட்டது.
ஆனால் காந்திஜி போனிக்ஸ் பண்ணைக்கு நிரந்தரமாகக் குடிப் போகுதல் பின்னால் நிகழ்ந்த பல சம்பவங்களினால் முடியாத தாயிற்று. ஆரம்பத்தில் ஆசிரமத்தை நல்ல முறையில் அமைக்கவும் "இண்டியன் ஒபீனியன்" பத்திரிகை நடத்தவும் பணம் வேண்டியதா யிருந்தது. மேலும் பாரிஸ்டர் தொழிலை இத்தனை நாளும் நடத்தி வந்து திடீரென்று நிறுத்துவதால் கட்சிக்காரர்கள் பலர் கஷ்டத்துக்குள்ளாக நேரிடும். ஆகையால் ஆரம்ப நாட்களில் சில காலம் போனிக்ஸிலும் சில காலம் ஜோகானிஸ்-பர்க்கிலுமாக வசிக்கக் காந்திஜி உத்தேசித்தார்.
போனிக்ஸ் ஆசிரமப் பண்ணையை ஸ்தாபித்து விட்டு ஜோகானிஸ்பர்க் போனதும் காந்திஜி மிஸ்டர் போலக்கைச் சந்தித்துப் புதுஏற்பாடுகளைப் பற்றிச் சொன்னார். தாம் கொடுத்த புத்தகம் இவ்வளவு பெரும் பயனை அளித்ததை அறிந்து மிஸ்டர் போலக் அளவிலாத மகிழ்ச்சி யடைந்தார். தாமும் காந்திஜியின் புதிய சோதனையில் அவருடன் ஈடுபட விரும்புவதாகக் கூறினார். காந்திஜி சம்மதம் கொடுத்ததும் 'கிரிடிக்' பத்திரிகையில் தாம் பார்த்த உத்தியோகத்தை ராஜினாமா செய்துவிட்டுப் போனிக்ஸ் வந்து சேர்ந்தார். அவ்விடத்திய எளிய வாழ்வு போலக்குக்குப் பெரிதும் பிடித்திருந்தது. ஆனால் அவரும் அதிக காலம் அங்கே இருக்க - முடியவில்லை. காந்திஜிக்குப் பாரிஸ்டர் தொழிலில் உதவி செய்து கொண்டிருந்த மிஸ்டர் ரீட்ச் என்பவர் இங்கிலாந்து "போக வேண்டியதா யிருந்தது. அப்போது ஜோகானிஸ்பர்க் குக்கு வந்து தமக்கு உதவி செய்யும்படி போலக்கைக் காந்திஜி அழைத்தார். சீக்கிரத்தில் பாரிஸ்டர் தொழிலுக்கு மங்களம் பாடிவிட்டு இரண்டு பேருமாகப் போனிக்ஸ் ஆசிரமத்துக்கு நிரந்தரமாகப் போய் விடலாமென்று தெரிவித்திருந்தார்.
போலக் தங்கமான மனிதர். நண்பர்களிடம் நம்பிக்கை வைத்து விட்டால் வெறுமனே வாதம் செய்து கொண்டிராமல் அவர்களுடன் ஒத்துப் போக முயலும் சுபாவம் உடையவர். ஆகையால் காந்திஜிக்குப் பின்வருமாறு எழுதினார்: "போனிக்ஸ் வாழ்க்கை எனக்கு மிகவும் பிரியமாயிருக் கிறது. இங்கே சந்தோஷமாய்க் காலங் கழிக்கிறேன். பண்ணையை அபிவிருத்தி செய்யலா மென்ற நம்பிக்கை யிருக்கிறது. ஆயினும் தற்சமயம் இதை விட்டுத் தங்கள் காரியாலயத்துக்கு வருவதால் நமது இலட்சியங்கள் விரைவில் கைகூடுமெனத் தாங்கள் கருதும் பட்சத்தில், அவ்வாறே செய்யத் தயாராயிருக்கிறேன்."
காந்திஜி முடிவாக எழுதியதன் பேரில் போனிக்ஸ் பண்ணையிலிருந்து போலக் ஜோகானிஸ்பர்க் வந்து அட்டர்னி தொழிலில் பயிற்சி பெறலானார். இதே சமயத்தில் மிஸ்டர் மாக்கிஸ்டர் என்னும் ஒரு ஸ்காத்லாந்து தேசத்தவரையும் காந்திஜி வேலைக்கு
அமர்த்திக் கொண்டார்.
போனிக்ஸுக்கு விரைவிலேயே போய்க் குடியேறி விட வேண்டும் என்ற ஆவலினாலேயே பாரிஸ்டர் தொழிலைக் காந்திஜி அதிமாகக் கவனிக்கும்படி நேர்ந்தது.
போலக்கைக் காந்திஜி தமது வீட்டிலேயே வசிக்கும்படி கூறினார். இருவரும் ஒரு தாய் வயிற்றுச் சோதரர் போலப் பழகினார்கள். சில வருஷங்களுக்கு முன்பே போலக்குக்குக் கலியாணம் நிச்சயமாகி யிருந்தது என்பதைக் காந்திஜி அறிந் தார். அப்படியானால் கலியாணத்தை ஏன் இன்னும் நடத்தாமல் காலங் கடத்த வேண்டும் என்று கேட்டார்.
"இன்னும் கொஞ்சம் பணம் சேர்த்துக் கொண்டபிறகு கலியாணம் செய்து கொள்ள விரும்புகிறேன்" என்றார் போலக், இந்தக் காரணத்தை காந்திஜி ஒப்புக் கொள்ள வில்லை. "ரஸ்கினுடைய புத்தகத்தைப் படித்து அதிலுள்ள இலட்சியங்களை ஒப்புக் கொண்டுள்ள உங்களுக்குப் பணத்தைப் பற்றி என்ன கவலை? இதய ஒற்றுமை ஏற்பட்ட பிறகு பணம் இல்லை என்ற காரணத்துக்காகக் கலியாணத்தை ஒத்திப் போடுவது தவறு. பணம் இல்லை யென்பது கலியாணத்துக்கு ஒரு தடையானால் ஏழைகள் எப்படிக் கலியாணம் செய்து கொள்ள முடியும் ? மேலும் நீங்கள் இப்போது என்னுடன் வசிப்பதால் வீட்டுச் செலவைப்பற்றிய கவலை இல்லை. ஆகையால் கலியாணத்தைத் தள்ளிப் போட எவ்வித நியாயமு மில்லை" என்றார் காந்திஜி.
சினேக தர்மத்தில் அபார நம்பிக்கை கொண்ட மிஸ்டர் போலக்கும் உடனே இங்கிலாந்தில் அவருக்காகக் காத்திருந்த பெண்மணிக்குக் கடிதம் எழுதினார். அவள் உடனே புறப்பட்டு வந்து சேர்ந்தாள். கலியாணத்தை ஆடம்பரங்களும் பணச் செலவும் இல்லாமல் செய்து முடிக்க எல்லாரும் ஏக மனதாகத் தீர்மானித்தார்கள். போலக் யூதர் ; அவரை மணக்க வந்த பெண்மணி கிறிஸ்துவ மதத்தினள். ஆகையால் கலியாணத்தை ரிஜிஸ்ட்ரார் ஆபீஸில் பதிவு செய்ய வேண்டியதா யிருந்தது. பதிவு செய்வதற்கு மாப்பிள்ளைத் தோழராக யாராவது சென்று சாட்சிக் கையொப்பம் போட வேண்டும். இதற்குக் காந்திஜிதான் வரவேண்டும் என்று போலக் வற்புறுத்தினார். அவ்விதமே காந்திஜியும் சென்றார். ஆனால் விவாக ரிஜிஸ்டரார் ஆபீசில் எதிர்பாராத தடை ஒன்று குறுக்கிட்டது. காந்திஜி மாப்பிள்ளைத் தோழனாக வந்திருப்பதைப் பார்த்துவிட்டு மண மகனும் மணமகளும் உண்மையான வெள்ளைக்காரர்கள் தானா என்று ரிஜிஸ்ட்ராருக்குச் சந்தேகம் வந்து விட்டது! விசாரித்து உண்மையறியும் வரையில் விவாகப் பதிவைத் தள்ளிப் போட வேண்டும் என்று சொன்னார். காந்திஜி தமக்குத் தெரிந்திருந்த பெரிய உத்தியோகஸ்தரிடம் போய் அவரிடமிருந்து கடிதம் வாங்கிக் கொண்டு வந்த பிறகு தான் கலியாணம் பதிவு செய்யப்பட்டது,
முன்பின் தெரியாத ஓர் ஆங்கிலப் பெண் இப்போது, காந்திஜியின் வீட்டில் வசிக்கலானாள். இதனால் எவ்விதக் கஷ்டமும் ஏற்படவில்லை. காந்திஜி சொல்லுகிறார் :
"போலக் தம்பதிகளுடன் எனக்கு எப்போதேனும் வேற்றுமை நேரிட்டதாகவே ஞாபகமில்லை. மிஸ்ஸஸ் போலக்குக்கும் என் மனைவிக்கும் சிற்சில வித்தியாசங்கள் அவ்வப்போது நேரிடுவதுண்டு. ஆனால் அவை மிக ஒழுங்காக நடத்தப்படும் தனிக் குடும்பங்களிலும் நேரிடுபவையேயாகும். என் குடும்பமோ பல்வேறு சாதியாரும், பல்வேறு குணாதிசயங்களை உடையவர்களும் சேர்ந்த கலப்புக் குடும்பம். நன்றாகச் சிந்தித்துப் பார்த்தோமாயின், சாதி, இனம் என்னும் வித்தியாசங்கள் வெறும் கற்பனை உண்மையில் மாந்தர் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களே யாவோம்."
போலக்கைக் கலியாணம் செய்துகொள்ளத் தூண்டியது போல் மிஸ்டர் வெஸ்ட் என்னும் ஆங்கில நண்பரையும் காந்திஜி விவாகம் செய்து கொள்ளத் தூண்டினார். அவரும் அவ்விதமே மணம் புரிந்து கொண்டார். இந்தத் தம்பதிகள் போனிக்ஸில் வசிக்கத் தொடங்கினார்கள்.
இந்திய நண்பர்கள் சிலருக்கும் காந்திஜி கலியாணம் செய்து வைத்தார். ஆனால் இப்படி யெல்லாம் நண்பர்களுக்குக் கலியாணம் பண்ணிவைத்த காந்திஜி சில நாளைக் கெல்லாம் தமது இல்வாழ்க்கையில் பரிபூரண பிரம்மசரிய விரதத்தைக் கடைப்பிடிப்ப தென்று தீர்மானித்தார். இது எப்படி என்று பார்ப்போம்.
தென்னாப்பிரிக்காவில் இனிமேல் அமைதியான வாழ்க்கை நடத்தலாம் என்று காந்திஜி முடிவு செய்திருந்த சமயத்தில் எதிர்பாராத சம்பவம் ஒன்று நிகழ்ந்தது. நேட்டாலில் ஸலூக்களின் கலகம் ஏற்பட்டது. ஆப்பிரிக்காவின் பூர்வீகக் குடிகளில் ஒரு இனத்தார் ஸலூக்காரர். நாகரிகமும் அறிவு வளர்ச் சியும் இல்லாத சாதியார் தான். ஆயினும் அவர்கள் ஆப்பிரிக்கா நாட்டுக்குரிய ஆதிக் குடிகள். அவர்கள் கலகம் ஆரம்பித்திருக்கிறார்கள் என்று இங்கிலீஷ்காரர்கள் கூறினார்கள். உண்மையில் 'கலகம்' என்று சொல்லக்கூடியதாக ஒன்றும் நடை பெறவில்லை. ஸலூக்காரர் மீது ஒரு புதிய வரியை நேட்டால் சர்க்கார் விதித்தனர். அந்தப் புது வரியைக் கொடுக்க வேண்டாம் என்று ஸலூத் தலைவன் ஒருவன் கூறினானாம்! வரி வசூல் செய்யப் போன சார்ஜண்ட் ஒருவன் ஈட்டியினால் குத்தப் பட்டானாம்! இந்தச் சம்பவங்களுக்கு நேட்டால் சர்க்கார் 'கலகம்' என்று பெயர் கொடுத்துவிட்டார்கள். அந்தக் கலகத்தை அடக்க படைகளையும் அனுப்பி வைத்தார்கள்.
முதலில் காந்திஜிக்கு மேற்படி கலகம் பற்றிய உண்மை விவரம் அவ்வளவாகத் தெரிந்திருக்கவில்லை. ஆயினும் எந்த சர்க்காரின் கீழ் வாழ்கிறோமோ அந்த சர்க்காருக்கு அபாயம் வந்த காலத்தில் வலிய உதவி செய்யவேண்டும் என்பது காந்திஜியின் கொள்கை. எனவே, ஸலூக் கலகம் சம்பந்தமான போர் நிகழ்ச்சிகளில் காயம் பட்டவர்களுக்குச் சிகிச்சை செய்ய இந்திய சேவைப் படை ஒன்றை அமைக்கத் தயார் என்று கேட்டால் கவர்னருக்குக் காந்திஜி கடிதம் எழுதினார். காந்திஜியின் சேவையை ஏற்றுக்கொண்டிருப்பதாகக் கவர்னரிடமிருந்து உடனே பதில் வந்தது. இவ்வளவு சீக்கிரம் பதில் வரும் என்று காந்திஜி எதிர்பார்க்க வில்லை யானாலும் வேண்டிய முன் ஏற்பாடுகளை யோசனை செய்து வைத்திருந்தார். போலக் தமது மனைவியுடன் சிறு வீடு ஒன்றுக்குக் குடி போனார். ஸ்ரீமதி கஸ்தூரிபாயையும் குழந்தைகளையும் போனிக்ஸ் பண்ணைக்குக் காந்திஜி அனுப்பினார். ஜோகானிஸ்பர்க் வீட்டையும் காலி செய்து விட்டுச் சொந்தக்காரனிடம் ஒப்புவித்தார். பிறகு டர்பனுக்குச் சென்று இருபத்துநாலு இந்தியர் அடங்கிய சேவைப் படை ஒன்றை அமைத்தார். இந்த சேவைப் படையின் தலைவர் என்ற முறையில் காந்திஜிக்கு 'ஸார்ஜெண்ட் மேஜர்' என்ற பட்டம் அளிக்கப்பட்டது.
கலகப் பிரதேசத்துக்குப் போய்ச் சேர்ந்தபோது உண்மையில் அங்கே பெரிய கலகம் ஒன்றும் நடைபெறவில்லை யென்று காந்திஜி கண்டார். ஆனால் சர்க்கார் படைகளின் கடுமையான நடவடிக்கைகளினால் ஸலூக்கள் பலர் காயம் பட்டுக் கிடந்தனர். அவர்களுக்குச் சிகிச்சை செய்யும் பணிதான் காந்திஜிக்கும் அவருடைய சகாக்களுக்கும் கிடைத்தது. இது காந்திஜிக்கு ஓரளவு திருப்தி யளித்தது. அந்தத் திக்கற்ற அநாதை ஸுலூக்களுக்குப் பணிவிடை செய்யக் கடவுளே தம்மை அனுப்பியதாகக் காந்திஜி கருதினார். காயம்பட்ட ஸலூக் களும் தங்களைக் கவனித்து உதவி புரிவதற்குக் காந்திஜி தம் சகாக்களுடன் வந்தது பற்றி மகிழ்ச்சி தெரிவித்தனர்.
சுற்றிலும் வேலிக் கம்பி போட்டுத் தாற்காலிகமாக வைத்தியசாலை அமைக்கப்-பட்டிருந்தது. அதில் காந்திஜியும் அவருடன் வந்தவர்களும் ஸலூக்களுக்குப் பணிவிடை செய்த போது வேலிக்கு வெளியில் வெள்ளைக்கார ஸோல்ஜர்கள் நின்று அவர்களைப் பரிகசித்தார்கள். 'ஸலூக்களுக்குப் பணி விடை செய்ய வேண்டாம்' என்றும் சொல்லிப் பார்த்தார்கள். இது பலியாமற் போகவே ஸலூக்களைத் திட்டினார்கள்.
காந்திஜி அந்த வெள்ளைக்கார ஸோல்ஜர்களுடனும் கலந்து பழக ஆரம்பித்தபோது அவர்களுடைய மனப்பான்மை மாறியது. கர்னல் ஸ்பார்க்ஸ், கர்னல் வைலி என் னும் இராணுவ உத்தியோகஸ்தர்கள் காந்திஜியைச் சந்தித்து அவருடைய சேவைக்காக வந்தனமும் கூறினார்கள். இவ்விருவரும் ஏற்கெனவே டர்பனில் காந்திஜிக்கு விரோதமான கிளர்ச்சியில் தீவிரமாக ஈடுபட்டிருந்தவர்கள்.
சர்க்காரை எதிர்த்தவர்களைத் தவிரச் சந்தேகத்தின் பேரில் பல ஸஹலூக்கள் கைது செய்யப்பட்டுக் கசையடி கொடுக்கப் பட்டிருந்தார்கள். கசையடியினால் உண்டாகியிருந்த புண்களுக்குக் காந்திஜி சிகிச்சை செய்ய நேர்ந்தது. இதுமட்டு மல்லாமல் கலகப் பிரதேசத்தில் அடிக்கடி நெடுந்தூரப் பிரயாணம் செய்ய நேர்ந்தது. கல்கத்தை அடக் கச் சர்க்கார் குதிரைப் படை அனுப்பியிருந்தனர். அந்தப் படையைப் பின் தொடர்ந்து காயம் பட்டவர்களைப் பல்லக்கில் வைத்துச் சுமந்து கொண்டு தினம் நாற்பது மைல் வரையில் காந்திஜி கால் நடையாகப் பிரயாணம் செய்ய நேர்ந்தது. அது கலகமும் அல்ல ; கலகத்தை அடக்கும் யுத்தமும் அல்ல; வெறும் மனித வேட்டைதான் என்று காந்திஜி இப்போது நன்கு உணர்ந்திருந்தார். தினந்தோறும் குற்றமற்ற ஜனங்க ளின் குடிசைகளில் வெள்ளைக்கார ஸோல்ஜர்கள் துப்பாக்கி வெடி தீர்க்கும் சத்தத்தைக் கேட்பது காந்திஜியின் மனதுக்குப் பெரும் வேதனையளித்தது. ஆயினும் காயமடைந்த ஸலூக்களுக்குச் சேவை செய்யும் சந்தர்ப்பம் கிடைத்ததை எண்ணி, எண்ணி மன ஆறுதல் பெற்றார்.
கள்ளங் கபடற்ற 'அநாகரிக' ஸலூக்களின் குடிசைகள் குன்றுகளிலும் பள்ளத்தாக்குகளிலும் வெகு தூரத்துக்கு வெகு தூரம் சிதறிக் கிடந்தன. இத்தகைய வழிகளில் காந்திஜி நடந்து செல்கையில் அவருடைய உள்ளம் சிந்தனை செய்து கொண்டிருந்தது.
இம்மாதிரி மனித குலத்துக்குச் சேவை செய்வதே தமது வாழ்வின் பிரதான இலட்சியமா யிருக்கவேண்டும் என்று எண்ணினார். அப்படி முழு நேரமும் மக்களுக்குத் தொண்டு புரிவதிலேயே கழிக்க வேண்டுமானால் குடும்பத்தைப் பெருக்கிக்கொண்டே போவதில் பயனில்லை யென்றும் இல்லறத்திலேயே இனிமேல் பிரம்மசரியத்தை அனுஷ்டிக்க வேண்டும் என்றும் தோன்றியது. இல்வாழ்க்கையின் சிற்றின்பத்தில் ஈடு படுவது ஆத்ம சாதனத்துக்குத் தடையாகும் என்ற கருத்து காந்திஜி மனதில் சில காலமாக இடம் பெற்றிருந்தது. அதோடு, குடும்ப சம்ரக்ஷணையிலும் குழந்தைகள் பெற்று வளர்ப்பதிலும் அதிகம் ஈடுபட்டால் மனித குலத்துக்குத் தொண்டு செய்ய நேரும் சந்தர்ப்பங்களைச் சரிவரப் பயன்படுத்திக்கொள்ள முடியாது என்று இப்போது அவருக்குத் தோன்றியது.
நீண்ட யோசனைகளின் பயனாக இனிமேல் வாழ்நாள் முழுவதும் பிரம்மசரியத்தைக் கடைப்பிடிப்பது என்று விரதம் கொள்ளத் தீர்மானித்தார்.
ஒருவாறு 'கலகம்' அடக்கப் பட்டது. காந்திஜிக்கு நேட்டால் கவர்னர் வந்தனக் கடிதம் எழுதி இனி அவரும் அவருடைய சகாக்களும் சேவைப் படையைக் கலைத்துவிட்டு வீட்டுக்குப் போகலாம் என்று தெரியப்படுத்தினார்.
காந்திஜி போனிக்ஸ் போய்ச் சேர்ந்ததும் கஸ்தூரிபாய் அம்மையிடமும் மற்றும் தமது அத்தியந்த சகாக்களான சகன்லால், மகன்லால், வெஸ்ட் ஆகியவர்களிடமும் தமது கருத்தைத் தெரிவித்துவிட்டு, இனி முழுதும் பிரம்மசரியத்தைக் கடைப்பிடிப்பதாக விரதம் எடுத்துக்கொண்டார். இன்னும் சில சகாக்களும் அவ்விதமே விரதம் எடுத்துக் கொண்டார்கள்.
காந்திஜியின் வாழ்க்கையில் இந்தச் சம்பவம் 1906-ம் ஆண்டில் நடந்தது.
--------
தம்பி! உனக்குத் தெரியும் அல்லவா ? காந்தி மகான் தம்முடைய சரித்திரத்தைத் தாமே எழுதினார். அதற்குச் “சத்திய சோதனை" என்று பெயர் கொடுத்தார். தம்முடைய வாழ்க்கை முழுவதும் ஒவ்வொரு காரியத்தையும் 'இது சத்தி யத்துக்கு ஒட்டியதா ?' என்று யோசித்தே செய்தார். சத்தியத்தைக் கடைப்பிடிப்பதற்காக மற்றவர்கள் செய்யத் துணியாத பல காரியங்களைச் செய்தார். எல்லாரும் செல்லும் ராஜ பாட்டையை விட்டுக் கல்லும் முள்ளும் நிறைந்த காட்டு வழியில் சென்றார். எல்லாம் சத்தியத்துக்காகத்தான்,
காந்திஜி தமது குடும்ப வாழ்க்கையிலும் பல முறை சத்திய சோதனை செய்ய வேண்டியதாயிற்று. சத்தியத்திற்காக மற்றக் குடும்பஸ்தர்கள் செய்யத் துணியாத காரியங்களைச் செய்ய வேண்டியதா யிருந்தது.
எந்தத் தகப்பனாரும் தம் பிள்ளைகளைப் படிக்கவைக்க வேண்டும் என்று விரும்புவது இயற்கை. 'படிப்பு' என்று சாதாரணமாக இந்த நாளில் பள்ளிக்கூடங்களில் படிக்கும் இங்கிலீஷ் படிப்பபைத் தானே சொல்கிறோம் ? இங்கிலீஷ் படிப்பில் மோகம் அந்நாளில் இப்போதைக் காட்டிலும் அதிகமா யிருந்தது. உலக நிலைமை அறிந்த எந்த மனிதரும் தம் குமாரர்கள் இங்கிலீஷ் படிப்புப் படித்துப் பெரிய உத்தியோகத்துக்கு வரவேண்டும் என்று விரும்புவது சாதாரணம்.
ஆனால் காந்தி மகானோ இதற்கு நேர் விரோதமான கருத் துக் கொண்டிருந்தார். தென்னாப்பிரிக்காவில் வசித்தபோது தம் புதல்வர்களை அங்கிருந்த இங்கிலீஷ் பள்ளிக்கூடங்களுக்கு அனுப்ப அவர் விரும்பவில்லை. இந்தியாவுக்கு அனுப்பிப் படிக்க வைக்கவும் ஏற்பாடு செய்யவில்லை. தம்முடனே தம் புதல்வர்களை வைத்துக்கொண்டு தாம் செய்யும் சத்திய சோதனைகளில் அவர்களையும் பங்கு பெறச் செய்வதுதான் அவர்களுக்குச் சிறந்த படிப்பு என்று கருதினார்.
போனிக்ஸில் ஏற்படுத்திய ஆசிரமத்துக்குக் காந்திஜி உடனே போக முடியவில்லை. எனினும் ஜோகானிஸ்பர்க்கில் தமது சொந்த வீட்டிலேயே ஆசிரம வாழ்க்கையின் இலட்சியங்களை அமுலுக்குக் கொண்டுவர ஆரம்பித்தார். குடும்பத்தைச் சேர்ந்தவர் ஒவ்வொருவரும் மெய் வருந்தி உழைக்கும் வேலை ஏதேனும் செய்தாக வேண்டும் என்று சொன்னார். தம் குழந்தைகளையும் இந்த வழியில் பயில்விக்கத் தொடங்கினார்.
அதுவரையில் குடும்பத்துக்கு வேண்டிய ரொட்டிகளை யெல்லாம் கடைகளிலே வாங்கிக் கொண்டிருந்தார்கள். இனி வீட்டிலேயே ரொட்டி தயாரித்துக் கொள்ள வேண்டும் என்று ஏற்பாடாயிற்று. ரொட்டிக்கு மாவுகூடக் கடையிலிருந்து வாங்காமல் கோதுமை வாங்கிக் கை இயந்திரத்தில் அரைத்துக் கொள்வது என்று தீர்மானிக்கப்பட்டது. அவ்விதமே கையால் மாவு அரைக்கும் இயந்திரம் ஒன்று வாங்கினார்கள். அதன் இரும்புச் சக்கரத்தை இரண்டு பேர் சேர்ந்து சுற்ற வேண்டும். காந்திஜியும் அவருடைய புதல்வர்களான மணிலால், ராமதாஸ், தேவதாஸ் ஆகியவர்களும், போலக்கும் அவருடைய மனைவி யும் மேற்படி இயந்திரத்தை முறை போட்டுக்கொண்டு சுற்றி மாவு அரைத்தார்கள். கஸ்தூரிபாய் அம்மைக்குச் சமையலறையில் செய்யவேண்டிய வேலையே சரியாயிருந்தது.
வேலைக்காரன் ஒருவன் அவர்களுடைய வீட்டில் இருந்தான். ஆனால் அவனை வேலைக்காரன் என்று யாரும் கருதுவ தில்லை. குடும்பத்தில் ஒருவனாகவே அவனையும் எண்ணினார்கள். எல்லாரையும் போல் அவனும் தனக்கு உரிய வேலையைச் செய்தான். காந்திஜியின் புதல்வர்கள் வீட்டுக் கக்கூசு களைச் சுத்தம் செய்வது முதற்கொண்டு சகல வேலைகளையும் தாங்களே செய்துகொள்ளப் பயிற்சி பெற்று வந்தார்கள்.
காந்திஜியின் புதல்வர்களில் மூத்தவராகிய ஸ்ரீ ஹரிலால் காந்திக்குத் தம் தந்தைமீது மிக்க கோபம். நாடு நகரங்களில் உள்ள மற்றப் பிள்ளைகளைப்போல் தமக்குத் தம் தந்தை காலேஜ் படிப்பு அளிக்காதது பற்றித்தான். இதைக் குறித்து அவர் பகிரங்கமாகக் காந்திஜியின் மீது குறை கூறினார். பத்திரிகைகளிலும் எழுதினார். கடைசியாகத் தந்தையை விட்டு அடியோடு பிரிந்து தம் வாழ்க்கையைச் சுதந்திரமாக நடத்திக் கொள்வதாகச் சொல்லிப் போய்விட்டார். இதனால் ஸ்ரீ ஹரி லால் காந்தி அவ்வளவாக நன்மை யடைந்ததாகச் சொல்வதற் கில்லை. அவர் பிற்கால வாழ்க்கை ரஸமானதாக இல்லை. மற்ற மூன்று புதல்வர்களும் தந்தையின் வாக்குத்தான் வேதவாக்கு, அவருடன் இருப்பது தங்கள் பாக்கியம், அவர் இட்ட பணியைச் செய்வதே தங்களுக்குச் சிறந்த படிப்பு என்று பூரணமாக நம்பி அதற்கேற்ப நடந்து கொண்டார்கள்.
பிள்ளைகளுக்குப் புத்தகப் படிப்பே வேண்டியதில்லை யென்று காந்திஜி கருதவில்லை. அந்தக் காலங்களில் பள்ளிக் கூடங்களிலும் கலாசாலைகளிலும் கற்பிக்கப்பட்ட புத்தகக் கல்வி முறையை அவர் வெறுத்தார். தாமே தம் புதல்வர்களுக்கு இலக்கியக் கல்வி கற்பிக்க விரும்பினார். வீட்டிலே சாவகாசமாக உட்கார்ந்து படிப்புச் சொல்லிக் கொடுக்க வசதியில்லை. காந்திஜியின் வீட்டுக்கும் அவருடைய காரியாலயத்துக்கும் இரண்டரை மைல் தூரம் இருந்தது. தம்முடனே புதல்வர்கள் காரியாலயத்துக்கு நடந்து வந்து தம்முடனே திரும்பி நடந்து வரவேண்டும் என்று ஏற்பாடு செய்தார். போகவர ஐந்து மைல் நடை. நல்ல தேகாப்பியாசம் ஆயிற்று. இப்படி நடக்கும்போது புத்தகங்களில் படிக்கவேண்டிய விஷயங்களை யெல்லாம் தாமே வாய்மொழியாகக் கற்பித்துவிடுவது என்று திட்டம் போட்டார்.
நம் பெரியோர்கள் படிக்கும் முறையைக் 'கல்வி' என்றும், 'கேள்வி ' என்றும் இரு விதமாக வகுத்திருக்கிறார்கள். ஏட்டில் படித்துப் பெறுகிற அறிவைக் 'கல்வி' என்றார்கள், ஆசிரியர்களிடமிருந்தோ பெரியோர்களிடமிருந்தோ காதினால் கேட்டுப் பெறும் அறிவைக் 'கேள்வி' என்று சொன்னார்கள்,
அறிவை வளர்த்துக் கொள்வதற்குக் 'கல்வி 'யை விடக் 'கேள்வி'யே சிறந்த முறை என்றும் கூறினார்கள். "கற்றலிற் கேட்டலே நன்று" என்பது முது மொழி அல்லவா ?
இதே கொள்கையைக் கடைப்பிடித்துக் காந்திஜி தம் புதல்வர்களுக்குக் கல்வி கற்பித்து வந்தார். ஆனால் இது ஒழுங்காக நீடித்து நடைபெற வில்லை. உலகத்துக்கு ஒளிகாட்டப் பிறந்த மகான் தம் புதல்வர்களின் கல்வியைப் பற்றி மட்டும் கவனம் செலுத்திக் கொண்டிருக்க முடியுமா ? உலகங் காணாத அதிசயமான "சத்தியாக்கிரஹம் " என்னும் போர் முறை அப்போதுதான் உருவாகிக்கொண்டு வந்தது. தென்னாப்பிரிக்கா இந்தியர்களின் கதிமோட்சத்துக்காக ஒரு மகத்தான போராட்டம் ஆரம்பமாக இருந்தது. எனவே, பிள்ளைகளுக்குத் தந்தை கல்வி யளிப்பதும் தடைப்பட்டது.இது விஷயமாகக் காந்திஜி தம் சுய சரித்திரத்தில் எழுதியிருப்பதைக் கேள் :
"தக்க இலக்கியக் கல்வி என் புதல்வர்களுக்குத் தர முடியாமல் போன து அவர்களுக்கும் எனக்கும் துயரந்தரும் விஷயமே யாகும். என் மூத்த புதல்வன் ஹரிலால் இந்தக் குறையை என்முன் தனிமையிலும், பத்திரிகைகளில் பகிரங்க மாகவும் வெளியிட்டிருக்கிறான். மற்றப் புதல்வர்கள், விலக்க முடியாத காரணங்களினாலேயே நான் அவர்களுக்கு இலக்கியக் கல்வி யளிக்கவில்லை யென்பதை உணர்ந்து தயாளத்துடன் என்னை மன்னித்து விட்டார்கள். எனினும் அவர்கள் இலக்கியக் கல்வி பெறாதபடியால் குடிமுழுகிப் போய் விட்டதாக எண்ணி நான் துக்க சாகரத்தில் மூழ்கி விடவில்லை. தந்தை யொருவன் எப்படி யிருக்க வேண்டு மென்பது என் இலட்சியமோ, அவ்வாறு நான் இல்லையே யென்ற வருத்தத்தைத் தவிர வேறு வருத்தம் எனக்குக் கிடையாது. சமூக நன்மையை முன்னிட்டே அவர்களுடைய இலக்கியக் கல்வியைப் பலி கொடுத்ததாக நான் கருதுகிறேன். இந்த நம்பிக்கை தவறா யிருக்கலாம். எனினும் மனப்பூர்வமாக அவ்வாறு நம்பினேன் என்பதில் ஐயமில்லை. ஆனால் அவர்களுக்கு நல்லொழுக்கப் பயிற்சி யளிப்பதில் நான் எள்ளளவும் அசட்டை காட்டியது கிடையாது. இப் பயிற்சிக்கு ஏற்பாடு செய்வதுதான் பெற்றோர்களின் முதன்மையான கடமை யென்பது என்னுடைய கருத்து.
குழந்தைகளுக்கு ஆங்கிலக் கல்வி அளிக்க வேண்டுமா, வேண்டாமா வென்பதைப்பற்றி நானும் போலக்கும் அடிக்கடி தீவிரமாக விவாதம் செய்வதுண்டு. இவ்விஷயமாக நான் எப்போதும் உறுதியான கொள்கை யுடையவன். இளம் வயதிலிருந்து குழந்தைகளை ஆங்கிலத்திலேயே எண்ணவும் பேசவும் பயில்விக்கும் இந்தியர்கள் தங்கள் குழந்தைகளுக்கும் தேசத்துக்கும் பெரிய துரோகம் செய்கிறார்கள் என்பது என் கொள்கை. இதனால் அக்குழந்தைகள் நாட்டின் பரம்பரையான பாரமார்த்திக சமுதாயச் செல்வங்களை இழந்து விடுகிறார்கள். அந்த அளவில் அவர்கள் தேச சேவைக்குத் தகுதி யற்றவர்கள் ளாகிறார்கள். இத்தகைய உறுதி கொண்டவனாதலின், குழந்தை களிடம் நான் எப்போதும் குஜராத்தியிலேயே பேசி வந்தேன். போலக்குக்கு இது பிடிக்கவில்லை. அவர்களுடைய வருங்கால வாழ்வை நான் கெடுத்து வருவதாக அவர் நினைத்தார். பூரண அன்புடன் தமது முழு வலிமையையும் காட்டி அவர் என்னுடன் வாதிப்பார். ஆங்கிலம் உலக முழுவதும் பரவியுள்ள பாஷை யென்றும், சிறுபிராயத்தில் அதைக் கற்றுக்கொள்வோர் வாழ்க்கைப் போராட்டத்தில் மற்றவர்களைவிடப் பெரிய அநுகூலம் பெற்றவர்களாவார்கள் என்றும் அவர் கூறினார். என்றாலும், என் உறுதியை அவரால் மாற்ற முடியவில்லை. என்னுடைய கட்சிதான் நியாயமான தென்று அவர் ஒப்புக் கொண்டாரா, அல்லது நான் சுத்த பிடிவாதக்காரன் என்று விட்டுவிட்டாரா என்பது இப்போது ஞாபகமில்லை. இது இருபது ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம். அதற்குப் பின் நான் பெற்றுள்ள அனுபவங்களினால் இவ்விஷயத்தில் என் உறுதி இன்னும் வலிமை பெற்றிருக்கிறது. இலக்கியக் கல்வி பூரணமாய்ப் பெறாத குறைபாடு என் குமாரர்களிடம் இருப்பினும் தாய்பாஷையில் அவர்கள் பெற்ற பயிற்சி அவர்களுக்கும் நாட்டுக்கும் பெரும் நன்மை யளித்து வருகிறது."
இவ்விதம் காந்திமகாத்மா இருபது வருஷத்துக்கு முன்னால் எழுதினார். அவருடைய வாக்கு இன்றுவரை பலித்து வந்திருக்கிறது. காந்தி மகாத்மாவின் மூன்று புதல்வர்களும் நாட்டுக்கு அருந்தொண்டுகள் செய்து வருகிறார்கள். தென்னாப்பிரிக்கா இந்தியர்களின் நலத்தைப் பாதுகாப்பதற்காகக் காந்திமகான் ஆரம்பித்த "இண்டியன் ஒபீனியன் " என்னும் பத்திரிகையை இன்றைக்கும் மணிலால் காந்தி நடத்தி வருகிறார்.
---------------
தென்னாப்பிரிக்காவில் காந்தி மகான் உலகம் வியக்குமாறு சத்தியாக்கிரஹ இயக்கம் தொடங்கி நடத்திய வரலாற்றைத் தொடங்குவதற்கு முன்னால் அவரது குடும்ப வாழ்க்கை சம்பந்தமான இன்னும் ஒரு முக்கிய சம்பவத்தைச் சொல்லிவிட வேண்டும். அன்னை கஸ்தூரிபாய் எத்தகைய மன உறுதி படைத்தவர் என்பதை இந்தச் சம்பவம் நன்கு விளக்குவதாகும். கஸ்தூரிபாய்க்கு ஒரு சமயம் அடிக்கடி இரத்த நஷ்டம் ஏற்பட்டு அதனால் உடல் நலம் குன்றி யிருந்தது. இரண சிகிச்சை செய்துகொள்ள வேண்டும் என்று வைத்தியர்கள் அபிப்பிராயப்பட்டார்கள். டர்பனில் ஒரு பிரபல வைத்தியரின் சிகிச்சைச் சாலையில் இரண சிகிச்சை நடந்தது. உடல் மெலிவு காரணமாக மயக்க மருந்து கொடாமலே சிகிச்சை செய்ய வேண்டியிருந்தது. இதனால் ஏற்பட்ட பெருந் துன்பத்தை அன்னை கஸ்தூரிபாய் ஆச்சரியமான தைரியத்துடன் சகித்துக் கொண்டார். சிகிச்சை செய்த டாக்டரும், தாதியாகப் பணி செய்த அவருடைய மனைவியும் கஸ்தூரிபாயை நன்கு கவனித்துக் கொண்டார்கள். இனி ஒன்றும் கவலை இல்லை என்ற நிலைமை ஏற்பட்டதும் கஸ்தூரிபாயை மேற்படி வைத்தியரின் வசத்தில் விட்டு விட்டு மகாத்மா ஜோகானிஸ்பர்க் சென்றார்.
ஆனால் சில தினங்களுக்கெல்லாம் கவலைக்கிடமான செய்தி வந்தது. கஸ்தூரிபாய் மிக்க பலவீனமடைந்து படுக்கையில் எழுந்து உட்காரவும் முடியாத நிலையை யடைந்திருக்கிறார் என்று தெரிந்தது. வைத்தியம் பார்த்த டாக்டர் டெலிபோனில் காந்திஜியைக் கூப்பிட்டு "நிலைமை நெருக்கடியாகி இருக்கிறது. நோயாளிக்கு மாட்டிறைச்சி ரஸம் உடனே கொடுத்தால் பிழைப்பார். அதற்குத் தங்கள் அனுமதி வேண்டும்" என்றார். மது மாமிசங்களைப் பற்றி மகாத்மாவின் கடுமையான கொள்கை தெரிந்திருந்தபடியால் டாக்டர் இந்த அநுமதி கேட்டார். மகாத்மாவோ, "நான் அத்தகைய அநுமதி கொடுக்கமுடியாது. கஸ்தூரிபாயையே கேளுங்கள். அவள் சிந்தித்துப் பதில் சொல்லக்கூடிய நிலையில் இருந்தால் அவள் விருப்பம்போல் செய்யுங்கள் !" என்றார். "அதெல்லாம் முடியாது. நோயாளியிடம் அபிப்பிராயம் கேட்பது தவறு. என் இஷ்டப்படி உணவு கொடுக்கக் கூடாது என்றால் நோயாளியின் உயிருக்கு நான் பொறுப்பாளியல்ல. உடனே தாங்கள் புறப்பட்டு வந்து பொறுப்பை ஏற்றுக்கொள்ளவும்" என்றார் டாக்டர்.
காந்திஜி அடுத்த ரயிலில் புறப்பட்டு டர்பனுக்குப் போனார். டாக்டரைப் பார்த்ததும், "கஸ்தூரிபாய் விரும்பினாலன்றி அவளுக்கு மாட்டிறைச்சி ரஸம் கொடுக்க நான் ஒருநாளும் சம்மதியேன். அதனால் உயிருக்கு அபாயம் வருவதாயிருந்தாலும் சரிதான் !" என்று உறுதியாகச் சொன்னார்.
"அப்படியானால் உம் மனைவியை இங்கிருந்து அகற்றிக் கொண்டு போய்விடும். அவர் என் வீட்டில் மரணமடைவதை நான் பார்த்துக் கொண்டிருக்க முடியாது!" என்றார் டாக்டர்.
"உடனே அகற்றி விடவேண்டும் என்கிறீர்களா? " என்று மகாத்மா கேட்டார்.
டாக்டர் கோபத்துடன், "இது என்ன கேள்வி? அகற்றி விடவேண்டும் என்று எப்போது சொன்னேன்? சிகிச்சை விஷயத்தில் எனக்குப் பூரண சுதந்திரம் கொடுக்க வேண்டும் என்று தானே கேட்கிறேன்? அப்படிக் கொடுத்தால் நானும் என் மனைவியும் கூடியதை யெல்லாம் செய்யத் தயாரா யிருக்கிறோம். இந்தச் சின்ன விஷயத்தை உம்மால் அறிந்துகொள்ள முடியவில்லையே!" என்றார்.
நயத்தினாலும் பயத்தினாலும் டாக்டர் கூறியது ஒன்றும் மகாத்மாவிடம் பலிக்கவில்லை. அவர் உடனே கஸ்தூரிபாய் அம்மையிடம் சென்றார். மிகப் பலவீன முற்ற நிலையில் இருந்த போதிலும் அவரிடம் கேட்டுவிட வேண்டும் என்று தீர்மானித்து டாக்டரின் கருத்தைத் தெரிவித்தார். டாக்டருக்கும் தமக்கும் நடந்த சம்பாஷணை விவரத்தையும் கூறினார்.
அன்னை கஸ்தூரிபாய் உறுதியான குரலில் பதில் சொன்ன தாவது : "மாட்டிறைச்சி ரசம் எனக்கு வேண்டாம். ஒரு நாளும் சாப்பிட மாட்டேன். மானிட ஜன்மம் கிடைத்தல் அரிது. அப்படிக் கிடைத்த ஜன்மத்தை இம்மாதிரி காரியத்தினால் அசுத்தப்படுத்திக் கொள்ள வேண்டுமா? கூடவே கூடாது. அதைக் காட்டிலும் தங்கள் மடியில் படுத்து நிம்மதி யாய் உயிரை விடுவேன். இந்தச் சமயத்தில் நீங்கள் வந்து சேர்ந்தீர்களே, அதுவே எனக்குப் போதும்."
காந்திஜி கொஞ்சம் வாதம் செய்து பார்த்தார். இது விஷயத்தில் தம்முடைய அபிப்பிராயத்துக்காகக் கஸ்தூரிபாய் தீர்மானம் செய்யக்கூடாது என்று எடுத்துச் சொன்னார். வைதிக ஹிந்துக்களில் சிலர் சிகிச்சையை முன்னிட்டு மது மாமிசம் அருந்தியிருப்பதை உதாரணமாக எடுத்துக் காட்டினார். அதெல்லாம் கஸ்தூரிபாயின் மன உறுதியை அசைக்கவில்லை. "முடியாது, முடியாது. என்னை இந்த இடத்திலிருந்து உடனே அப்புறப்படுத்துங்கள். இங்கே இருக்கவே நான் விரும்ப வில்லை" என்றார்.
கஸ்தூரிபாயின் தைரியம் மகாத்மாவுக்கு மிக்க மகிழ்ச்சி தந்தது. ஆயினும் பொறுப்பின் பாரம் அதிகமாயிற்று. கஸ்தூரி பாயின் கருத்தை டாக்டரிடம் கூறியபோது அவர் மேலும் கடுமையாகப் பேசினார்.
" எத்தகைய ஈவிரக்கமற்ற மனிதர் நீர் ? நோயாளியிடம் இதைப் பற்றிக் கேட்க உமக்கு வெட்கமா யில்லையா ? அப்புறப் படுத்தக்கூடிய நிலையில் உம் மனைவி இல்லை. ஒரு வேளை வழியிலேயே மரணமடைந்தாலும் அடையலாம். நான் சொல்ல வேண்டியதைச் சொல்லிவிட்டேன். என் கடமை தீர்ந்தது. அப்புறம் உம் இஷ்டப்படி செய்து கொள்ளும்!" என்றார் டாக்டர்.
கஸ்தூரிபாய் அம்மையை எப்படியாவது காப்பாற்ற விரும்பிய இந்த வெள்ளைக்கார டாக்டரை நாம் பாராட்டா மலிருக்க முடியாது. "அவர் சொன்னபடி இந்த காந்திஜி கேட்டால்தான் என்ன ? " என்று நமக்குத் தோன்றுவதும் இயல்புதான். "ஆபத்துக்குப் பாவமில்லை" என்ற பழமொழியின் மேல் பாரத்தைப் போடவும் நம்மில் பலர் தயார்தான்.
ஆனால் காந்தி மகானுடைய மனப்போக்கும் கஸ்தூரிபாயின் பிடிவாதமும் வேறு விதமாயிருந்தன. "உயிர் போனாலும் கொள்கையைக் கை விடக்கூடாது" என்பதில் அவர்கள் இருவரும் உறுதி கொண்டிருந்தார்கள். அதைத் தீவரமாகக் கடைப் பிடிப்பதில் ஒருவரை ஒருவர் மிஞ்சப் பார்த்தார்கள், ஆகவே உடனே அங்கிருந்து புறப்பட்டுப் போனிக்ஸ் ஆசிரமத்துக்குப் போகத் தீர்மானித்தார்கள்.
அப்போது சிறு தூற்றல் தூறிக் கொண்டிருந்தது. காந்திஜி ஒரு ரிக்ஷா வண்டி கொண்டு வந்தார். அதில் கஸ்தூரிபாயை ஏற்றி ரயில்வே ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றார். மிக்க அபாயமான காரியம் என்ற எண்ணத்தினால் காந்திஜியின் நெஞ்சம் படபடத்தது. கஸ்தூரிபாய்க்குத் தைரியம் சொல்லக் கூடிய நிலைமையில் அவர் இல்லை. அதற்கு மாறாகக் கஸ்தூரி பாய் "எனக்கு ஒன்றும் நேராது ; கவலைப் படாதீர்கள்!" என்று காந்திஜிக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டு வந்தார்.
பல நாளாக உணவு அருந்தா தபடியால் கஸ்தூரிபாய் உடல் மெலிந்து எலும்புந் தோலுமா யிருந்தார். நடப்பது என்பது முடியாத காரியம். ரிக்ஷாவை ரயில்வே பிளாட்பாரத்துக்குள் கொண்டுபோக முடியாது. எனவே காந்திஜி தம் கரங்களினால் கஸ்தூரிபாயை ரிக்ஷா வண்டியிலிருந்து எடுத்துப் பிளாட்பாரத்துக்குள் தூக்கிக்கொண்டு போய் ரயில் வண்டியில் கிடத்தினார். ரயிலும் புறப்பட்டது.
போனிக்ஸ் ரயில்வே ஸ்டேஷனிலிருந்து ஆசிரமம் இரண்டரை மைல் தூரத்தில் இருந்தது. முன்னாடியே ஆள் அனுப்பியிருந்ததால் மிஸ்டர் பெஸ்ட் ஸ்டேஷனுக்கு வந்திருந்தார். வலைப் பல்லக்கும் சூடான பாலும் வெந்நீரும் கொண்டு வந்திருந்தார். வலைப் பல்லக்கைத் தூக்க ஆறு ஆட்களும் வந்திருந்தார்கள், ஆசிரமத்துக்குப் பத்திரமாகக் கொண்டு போய்ச் சேர்த்தார்கள். ஆசிரமம் சென்ற பிறகு காந்திஜி கஸ்தூரிபாய்க்கு ஜல சிகிச்சை செய்தார். உடம்பு சிறிது சிறிதாகத் தேறி வந்தது. ஜல சிகிச்சையைக் காட்டிலும் கஸ்தூரிபாயின் மன உறுதியே அவர் உடம்பு தேறுவதற்குக் காரணமாயிருந்தது.
இந்தச் சமயத்தில் காவி உடை தரித்த இந்தியச் சாமியார் ஒருவர் வந்து சேர்ந்தார். டர்பனில் நடந்த சம்பவத்தைக் கேள்விப்பட்டுக் காந்திஜியின் மனத்தையும் கஸ்தூரிபாயின் மனத்தையும் திருப்புவதற்காக அவர் வந்தார். புலால் உண்பதில் தவறு இல்லையென்று ஸ்தாபிதம் செய்ய ஆரம்பித்தார். மனுதர்ம சாஸ்திரத்திலிருந்து மேற் கோள்களும் சொன்னார். காந்திஜியின் புதல்வர்கள் மணிலாலும் ராமதாஸும் அங்கே அச்சமயம் இருந்தார்கள். சாமியாருடைய வாதங்களை யெல்லாம் அவர்களே தவிடு பொடி செய்து விட்டார்கள். கஸ்தூரிபாயிடமும் சாமியார் வாதம் செய்து பார்த்தார். கஸ்தூரிபாய் ஒரே பேச்சில் சாமியாரின் வாயடங்கச் செய்துவிட்டார்:- "சுவாமி! தாங்கள் என்ன சொன்னாலும் என் விஷயத்தில் பிரயோஜனப் படாது. சாஸ்திரத்தில் என்ன சொல்லியிருக்கிறதோ எனக்குத் தெரியாது. ஆனால் ஜீவ ஹிம்சை கூடாது என்று எனக்குத் தெரியும். இறைச்சி உணவு கூடாது என்பதும் எனக்குத் தெரியும். என் விரதத்தைக் கைவிட்டாவது உயிர் வாழ்ந்திருக்க எனக்கு விருப்பமில்லை. ஆகையால் என்னைத் தொந்தரவு செய்யவேண்டாம்!"
போலிச் சாமியார் வந்த வழியைப் பார்த்துக் கொண்டு போய்ச் சேர்ந்தார். அன்னை கஸ்தூரிபாயின் தேகநிலையும் வர வர அபிவிருத்தியடைந்து வந்தது.
---------------
தம்பி! காந்தி மகாத்மாவினுடைய வாழ்க்கையில் மிக முக்கியமான கட்டத்துக்கு இப்போது வந்திருக்கிறோம். தென்னாப்பிரிக்காவில் சத்தியாக்கிரஹ இயக்கம் எப்படி ஆரம்பமா யிற்று என்று பார்க்கப் போகிறோம். உலக சரித்திரத்தில் இடம் பெறவேண்டிய அந்தச் சம்பவத்துக்குப் போகுமுன், தென்னாப்பிரிக்காவின் பழைய சரித்திரத்தைக் கொஞ்சம் ஞாபகப் படுத்திக் கொள்ளலாம்.
ஆப்பிரிக்காக் கண்டம் என்று வழங்கும் பூப்பிரதேசம் மிக விஸ்தாரமான து. ஆசியாவுக்கு அடுத்தபடியானது. இந்தியாவைப் பெரிய தேசம் என்று சொல்கிறோமல்லவா ? பல இந்தியாக்களை ஆப்பிரிக்காவிற்குள் வைத்து அடக்கிவிடலாம். ஆப்பிரிக்காவில் தென்னாப்பிரிக்கா என்று வழங்கும் பகுதி மட் டும் ஏறக்குறைய இந்தியா அவ்வளவு பெரிதானது.
ஆப்பிரிக்காவின் பூர்வீகக் குடிகள் நீக்ரோவர் என்னும் சாதியார். நீக்ரோ சாதியில் பல உட்பிரிவுகள் உண்டு. அவர் களில் ஸ லூக்கள் எனப்படுவோர் தென்னாப்பிரிக்காவில் வசித் தனர். ஸலூக்களிடம் சில சிறந்த குணங்கள் உண்டு. ஆயினும் அவர்கள் கல்வி யறிவும் பகுத்தறிவும் இல்லாத அநாகரிக மக்கள். மனிதனுடைய அறிவுக்கு எட்டாத கடவுள் என்னும் மகாசக்தி ஒன்று உண்டு என்பதை அவர்கள் ஒருவாறு உணர்ந்திருந்தார்கள். ஆனால் கடவுளை வணங்குவதற்கு அவர்கள் கடைப்பிடித்த முறைகள் அநாகரிகமானவை. பகுத்தறிவுக்கு ஒவ்வாதவை. வேட்டையாடிக் கொன்ற மிருகங்களின் மாமிசமே அவர்களுடைய முக்கியமான உணவு. குருட்டு நம்பிக்கைகள் அவர்களுக்கு ரொம்பவும் அதிகம். இதனால் மூர்க்க வீரம் உள்ள பலசாலிகளானாலும் பயப் பிராந்தி உடையவர்களா யிருந்தார்கள். வெள்ளைக்காரர்கள் துப்பாக்கி உபயோகித்துச் சுட்டதை முதன் முதலில் பார்த்ததும் ஏதோ ஒரு மர்மமான சக்தி அவர்களிடம் இருப்பதாக எண்ணிக் கொண்டார்கள்-
அதன் காரணமாக வெள்ளைக்காரர்களிடம் பயப் பிராந்தி கொண்டார்கள். இந்தக் குருட்டு நம்பிக்கை அவர்களை விட்டு அகலவே யில்லை. ராட்சதனைப்போல் தேக பலமுள்ள ஸலு ஒரு சிறு வெள்ளைக்காரக் குழந்தையைக்கண்டு நடுங்குவான்.
போர்ச்சுகல் தேசத்தைச் சேர்ந்த வாஸ்கோடி காமா என்பவன் இந்தியாவைத் தேடிக் கொண்டு கப்பலில் வந்த போது கேப் ஆப் குட்ஹோப் என்று வழங்கும் ஆப்பிரிக்காவின் தெற்கு முனையைக் கண்டுபிடித்தான். அந்த நாட்டின் இயற்கை வளங்களையும் செல்வங்களையும் பற்றிய விவரங்கள் ஐரோப்பாவில் பரவின. அது முதல் ஐரோப்பிய சாதியார் பலர் தென்னாப்பிரிக்காவுக்கு வந்து குடியேறினார்கள். அப்படிக் குடியேறியவர்களில் மிகவும் முக்கியமானவர்கள். ஆங்கிலேயரும் டச்சுக்காரரும். முதன் முதலில் கேப் காலனி, நேட்டால் என்னும் மாகாணங்கள் ஏற்பட்டன. இரண்டும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கு உட்பட்டிருந்தன. இந்த மாகாணங் களில் குடியேறி யிருந்த டச்சுக்காரர்களுக்குப் 'போயர்கள்' என்ற பெயர் ஏற்பட்டது. ஆங்கிலேயருக்கும் போயர்களுக்கும் அடிக்கடி தகராறுகள் ஏற்பட்டு வந்தன. இந்தத் தகராறுகளில் பிரிட்டிஷ் ஏகாதிபத்திய சர்க்கார் ஆங்கிலேயருக்குச் சாதகமாக இருப்பதே இயல்பு அல்லவா? இதனால் போயர்களுக்கு ஆத்திரமும் அருவருப்பும் உண்டாயின. அவர்கள் தாங்கள் அதுவரை வசித்து வந்த இடங்களை விட்டு விட்டு, தென்னாப்பிரிக்காவில் பிரிட்டிஷ் ஆதிக்கியத்துக்கு அப்பால் இருந்த புதிய பிரதேசங்களுக்குச் சென்று குடியேறிச் சுதந்திரக் குடியரசுகளை ஏற்படுத்திக் கொண்டார்கள். இப்படி ஏற்பட்ட சுதந்திர போயர் குடியரசுகளுக்கு டிரான்ஸ்வால் என்றும், ஆரஞ்சு பிரீ ஸ்டேட் என்றும் பெயர்கள் ஏற்பட்டன.
"போயர்கள் தனிக் குடியரசுகள் ஏற்படுத்திக் கொண்டதை ஆங்கிலேயர் விரும்பவில்லை. டிரான்ஸ்வால் மாகாணத்தில் தங்கச் சுரங்கங்களும் வைரச் சுரங்கங்களும் ஏராளமாகக் கண்டுபிடிக்கப் பட்டன. இதற்குப் பிறகு ஆங்கிலேயரின் வயிற்றெரிச்சலும் ஆத்திரமும் அதிகமாயின. சில இங்கிலீஷ்காரர்கள் தங்களுடைய சொந்தப் பொறுப்பில் இரகசியமாக ஒரு படை தயார் செய்துகொண்டு, ஜோகானிஸ்பர்க் வைரச் சுரங்கங்களைப் பலாத்காரமாகக் கைப்பற்றுவதற்காகச் சென்றார்கள். அப்போது டிரான்ஸ்வால் குடியரசின் தலைவராயிருந்த பிரஸிடெண்ட் குரூகர் மகா சாமர்த்திய சாலி. படை யெடுப்பின் விஷயம் அவருக்கு ஏற்கெனவே தெரிந்திருந்தது. எனவே படையெடுத்து வந்த ஆங்கிலேயரின் படையைப் படும் தோல்வி அடையச் செய்தார். ஜோகானிஸ்பர்க்கில் சில இங்கிலீஷ் முதலாளிகளும் இருந்தார்கள். அவர்கள் படையெடுத்து வந்த இங்கிலீஷ் படைக்குச் சாதகமாகக் கலகம் செய்யத் தயாரா யிருந்தார்கள் என்று கண்டுபிடித்து அவர்களையும் குரூகர் கைது செய்தார். அந்த முதலாளிகளுக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. அவர்கள் பேரில் கருணை காட்டவேண்டும் என்று பிரிட்டிஷ் ஏகாதிபத்திய மந்திரிகள் போயர் சர்க்காருக்குத் தந்தி அடித்தார்கள். பிரசிடெண்டு குருகரும் தம்முடைய கட்சி பூரண வெற்றியடைந்து விட்டபடியால் கலகக்காரர்களை மன்னித்து விட்டு விட்டார்.
விஷயம் இத்துடன் முடிவடைந்து விடவில்லை. ஆங்கிலேயர் தங்களுக்கு ஏற்பட்ட தோல்வியையும் அவமானத்தையும் மறக்கவில்லை. பிரிட்டிஷ் ஏகாதிபத்திய சர்க்காரும் அப்படித் தான். எனவே டிரான்ஸ்வாலிலும் ஆரஞ்சு ஸ்டேட்டிலும் இருந்த சுதந்திர போயர் அரசாங்கங்களை பிரிட்டிஷார் பலவிதத்திலும் நெருக்க ஆரம்பித்தார்கள். நாளுக்குநாள் நெருக்கடி முற்றிக்கொண்டு வந்தது. யுத்தம் மூண்டுதான் தீரும் என்ற நிலைமை ஏற்பட்டபோது போயர்கள் பிரிட்டிஷார் யுத்தம் தொடங்கும் வரையில் காத்திருக்க விரும்பவில்லை. தாங்கள் முந்திக் கொள்ள விரும்பினார்கள். ஆரம்பத்தில் போயர்கள் படையெடுத்துத் தாக்கியது பிரிட்டிஷாரைத்திக்கு முக்காடச் செய்தது. போயர் சைனியம் வெற்றிமேல் வெற்றி அடைந்து வந்தது. பிறகு இங்கிலாந்திலிருந்து பிரசித்தி பெற்ற தளபதியான லார்ட் கிச்சனர் வந்து சேர்ந்தார். சில நாளைக்கெல்லாம் யுத்தப்போக்கு திரும்பியது. போயர் சைனியம் முறியடிக்கப் பட்டது. ஆயினும் போயர்களின் உறுதிமட்டும் தளரவில்லை. தோல்விக்குப் பிறகும் பணிய மறுத்தார்கள். போயர் ஸ்திரீகள் ஆண் பிள்ளைகளைக் காட்டிலும் தீரம் காட்டினார்கள், எனவே, ஆயிரக்கணக்கான போயர் ஆண்களையும் பெண்களையும் ஒன்று திரட்டி இரும்பு முள் வேலிக்குள் அடைத்துக் காவல் போட்டு வைக்க வேண்டி நேர்ந்தது. காவலுக்குள் இருந்தவர்கள் சொல்ல முடியாத கஷ்டங்களுக்கு உள்ளானார்கள். இங்கிலாந்தில் இருந்த சில ஆங்கிலப் பெரியார்களுக்கு இது பொறுக்கவில்லை. மிஸ்டர் ஸ்டெட் என்பவர் "தென்னாப்பிரிக்காவில் இங்கிலீஷ் படை தோற்கவேண்டும்" என்று பகிரங்கமாகப் பிரார்த்தனை செய்தார். பிரிட்டிஷ் பொது மக்களின் அபிப்பிராயமும் அந்தப் பக்கம் திரும்பியது. இதன் பலனாக, ஜயித்த பிரிட்டிஷ் சர்க்கார் வலியச் சென்று தோற்ற போயர்களுடன் சமரசம் பேச வேண்டிய அவசியம் நேர்ந்தது. கடைசியில் ஒரு சமாதான உடன்படிக்கை 'வெரீ நிகில் ' என்ற இடத்தில் ஏற்பட்டது. இதன்படி போயர் குடியரசுகள் பெயரளவில் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்துடன் தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டு மென்றும் மற்றப்படி பூரண சுதந்திரத்துடன் ஆட்சி நடத்தலாம் என்றும் ஏற்பட்டது.
தென்னாப்பிரிக்காவுக்குப் பூரண சுதந்திரம் என்று சொல்லும்போது அங்கேயிருந்த ஆங்கிலேயருக்கும் போயருக்கும் பூரண சுதந்திரம் என்றுதான் பொருள். பூர்வீகக் குடிகளான நீக்ரோவர்களுக்குச் சுதந்திரம் கிடையாது ; இங்கிலீஷ்காரர்களைப் போலவே வந்து குடியேறிய இந்தியர்களுக்கும் சுதந்திரம் கிடையாது.
இந்தியர்கள் தென்னாப்பிரிக்காவில் வந்து குடியேறிய வரலாறு பற்றியும் இங்கே ஞாபகப்படுத்திக் கொள்ளலாம். முதன் முதலில் தென்னாப்பிரிக்காவில் குடியேறிய ஐரோப்பியர்கள் ஏராளமான பூப்பிரதேசங்களைத் தங்களுக்குச் சொந்தமென்று வளைத்துக் கட்டிக் கொண்டார்கள். ஆனால் அந்த நிலங்களைப் பண்படுத்திச் சாகுபடி செய்ய அவர்களுக்குக் கூலியாட்கள் தேவையா யிருந்தது. ஆப்பிரிக்கா சுதேசிகளோ சரியாக வேலை செய்யமாட்டார்கள். இந்தியர்கள் நல்ல உழைப்பாளிகள் என்பது பிரசித்தம். ஆகையால் இந்தியாவிலிருந்து ஐந்து, வருஷம் வெள்ளைக்காரர் கீழ் வேலை செய்வது என்னும் ஒப் பந்தத்தின் பேரில் ஆட்களைக் கொண்டுவர அவர்கள் விரும்பினார்கள். ஐந்து வருஷம் ஆன பிறகு அந்தக் கூலி இந்தியர்கள் தென்னாப்பிரிக்காவில் நிலம் வாங்கிக்கொண்டு சுதந்திரமாக வாழலாம் என்று ஆசை காட்டினார்கள். அப்போது இந்தியாவை பிரிட்டிஷார் ஏறக்குறைய யதேச்சாதிகாரத்துடன் ஆண்டார்கள். தென்னாப்பிரிக்கா வெள்ளைக்காரர்களுக்கு உதவி செய்ய இந்தியாவின் பிரிட்டிஷ் சர்க்கார் விரும்பினார்கள், ஒப்பந்தக் கூலி முறைக்குச் சம்மதித்தார்கள். இதன்படி 1860-ம் வருஷத்தில் முதன் முதலாக இந்தியத் தொழிலாளிகள் ஒப்பந்தக் கூலி முறையின் கீழ் தென்னாப்பிரிக்கா சென்றார்கள், நாளடைவில் அதிகமாகச் சென்றார்கள். ஒப்பந்தத் தவணை முடிந்த பிறகு பலர் சுதந்திரமாக வாழவும் ஆரம்பித்தார்கள். பாட்டாளி இந்தியர்களைத் தொடர்ந்து இந்திய வியாபாரிகளும் அவர்களுடைய குமாஸ்தாக்களும் தென்னாப்பிரிக்கா சென்றார் கள். அவர்கள் தொழிலாளி இந்தியர்களுடனும் ஆப்பிரிக்காவின் சுதேசிகளுடனும் வியாபாரம் செய்தார்கள். வெள்ளைக்கார வியாபாரிகள் இது தங்களுடைய தொழிலுக்குப் போட்டி என்பதாக ஆத்திரம் கொண்டார்கள்.
தொழிலாளி இந்தியர்கள் சொந்தமாக நிலம் வாங்கிப் பயிர் செய்வது பற்றியும் பொதுவாக வெள்ளைக்காரர்களுக்கு அசூயை ஏற்பட்டது. இப்படியே விட்டுக் கொண்டுபோனால் ஆப்பிரிக்காவில் வெள்ளைக்காரர்களின் ஆதிக்கத்துக்கு ஆபத்து வந்துவிடும் என்றும் கறுப்பு மனிதர்களின் கை ஓங்கிவிடும் என்றும் வெள்ளைக்காரர்கள் எண்ணினார்கள். எனவே, இந்திய வியாபாரிகளுக்கும், ஒப்பந்தத் தவணை முடிந்து சுதந்திர வாழ்க்கை தொடங்கிய இந்தியத் தொழிலாளிகளுக்கும் பல இடையூறுகள் விளைவிக்கத் தொடங் கினார்கள். வெள்ளைக்காரர்கள் தனிப்பட்ட ஹோதாவிலும் இந்தியர்களுக்குத் தொல்லை கொடுத்தார்கள். சர்க்கார் என்ற முறையில் இந்தியர்களுக்கு விரோதமான சட்டதிட்டங்களும் செய்தார்கள். இப்படி இந்தியர்களுக்கு அநீதி இழைப்பதில், பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தைச் சேர்ந்த நேட்டால்-கேப் காலனி மாகாணங்களோடு டிரான்ஸ்வால்-ஆரஞ்சு பிரீ ஸ்டேட் மாகா ணங்களில் இருந்த போயர் குடியரசுகள் போட்டியிட்டன. ஆங்கிலேயரை விடப் போயர்கள் இந்தியர்கள் விஷயத்தில் அதிகக் கடுமையா யிருந்தார்கள்.
இத்தகைய நிலைமையில் 1893-ம் வருஷத்தில் தெய்வ சங்கல்பத்தினால் காந்தி மகாத்மா தென்னாப்பிரிக்கா போய்ச் சேர்ந்தார். தாதா அப்துல்லா கம்பெனியார் சார்பில் டிரான்ஸ் வாலில் நடந்து வந்த ஒரு வழக்கில் உதவி செய்வதற்காகக் காந்திஜி போனார். ஆனால் போன உடனேயே அவர் அடைந்த அநுபவங்கள் தென்னாப்பிரிக்கா இந்தியர்களின் பரிதாப நிலையை அவருக்கு உணர்த்தின. நேட்டால் காங்கிரஸ் ஏற்படுத்தி இந்தியரின் வோட்டுரிமையை நிலைநாட்டக் கிளர்ச்சி நடத்தினார். ஒப்பந்தம் நீங்கிய இந்தியத் தொழிலாளிகளின் மீது விதிக்கப்பட்ட தலைவரியை எதிர்த்துக் கிளர்ச்சி நடத்தினார். மற்றும் இந்தியர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள், எல்லாவற்றையும் எதிர்த்துப் போராடினார். ஆனால் இதுவரையில் கையாண்ட போராட்ட முறைகள் மகஜர் அனுப்புவது, மகாநாடு கூட்டுவது, பத்திரிகைகளில் எழுதுவது, வெளிநாட்டில் பிரசாரம் செய்வது ஆகிய காரியங்களோடு நின்றன.
1899 - ஆம் ஆண்டில் போயர் யுத்தம் ஆரம்பித்தபோது காந்திஜி பிரிட்டிஷ் தரப்பில் இந்தியர்கள் உதவி செய்யவேண்டு மென்று கருதினார். அதற்காக ஒரு சைனிய சேவைப்படை அமைத்து, அதற்குத் தலைமை வகித்துப் போர்க்களம் சென்றார்.
இவ்விதம் நெருக்கடியான சமயத்தில் உதவி செய்ததினால் எதிர்பார்த்த பலன் கிட்டவில்லை. போயர் யுத்தத்துக்குப் பிறகு டிரான்வாலில் ஆசிய இலாகா என்பதாக ஒன்று ஏற்பட்டது. இந்த இலாகாவினால் இந்தியர்களுக்கு ஏற்பட்ட தொல்லைகளை நீக்கக் காந்திஜி பாடுபட்டார். ஓரளவு வெற்றியும் கிடைத்தது. பின்னர் ஸலூ கலகத்தின் போதும் காந்திஜியின் தலைமையில் இந்திய சேவைப்படை தொண்டு செய்தது.
இதனால் தென்னாப்பிரிக்காவில் இந்தியர்களின் குறைகள் நீங்கும் என்றும் அவர்களுடைய அந்தஸ்து உயரும் என்றும் எதிர்பார்க்கப் பட்டது. இப்பேர்ப்பட்ட சமயத்திலே தான் டிரான்ஸ்வாலை ஆண்ட போயர் சர்க்கார் இந்தியரின் தலையிலே போடுவதற்கு ஒரு பெரிய வெடிகுண்டைத் தயாரித்தார்கள். மிஸ்டர் லயனல் கர்ட்டிஸ் என்ற ஒரு ஆங்கிலேய 'மகான்' அப்போது. தென்னாப்பிரிக்காவுக்கு வந்திருந்தார். இந்தியர்கள் கை ஓங்குவதற்கு இடங் கொடுத்தால் தென்னாப்பிரிக்காவில் ஐரோப்பியரின் வாழ்வுக்கே அபாயம் வந்துவிடும் என்று அவர் சொன்னார். அதைத் தடுப்பதற்குச் சில யோசனைகளைச் சொன்னார்.
இந்த யோசனைகளை டிரான்ஸ்வால் சர்க்கார் ஏற்றுக்கொண்டு அவற்றை அநுசரித்த ஆசியச் சட்டத் திருத்த மசோதா ஒன்றைத் தயாரித்தார்கள், இந்த மசோதாவின் முக்கியமான நிபந்தனை என்ன வென்றால், டிரான்ஸ்வாலில் அப்போது வசித்த ஒவ்வொரு இந்தியரும் தாங்கள் டிரான்ஸ்வாலில் வசிப்பதற்குப் புதிதாக அநுமதிச் சீட்டுப் பெறவேண்டும். அதற்காக விண்ணப்பம் போடவேண்டும். விண்ணப்பத்தில் பெயர், சாதி, வயது, இருப்பிடம் ஆகியவை குறிப்பிடவேண்டும். அது மட்டும் போதுமா? போதாது. விண்ணப்பத்தை அங்கீகரிக்க வேண்டிய ரிஜிஸ்ட்ரார், ஆசாமியின் அங்க அடையாளங்களைக் குறித்துக் கொள்வார். இது மட்டுமல்லாமல் ஒவ்வொரு இந்தியரும் தங்களுடைய பத்து விரல்களையும் கறுப்பு மையில் தோய்த்து ரேகை அடையாளம் கொடுக்க வேண்டும். இப்படிப் பதிவு செய்து கொள்ளாதவர்களுக்கு டிரான்ஸ்வாலில் வசிக்கும் உரிமை கிடையாது.
குழந்தைகளுக்காகப் பெற்றோர்கள் விண்ணப்பம் போடவேண்டும். ஸ்திரீகளும் குழந்தைகளும் கூட ரிஜிஸ்ட்டிரார் காரியாலத்துக்குப் போய்ப் பத்து விரல்களின் அடையாளத்தையும் பதிவு செய்ய வேண்டும், விண்ணப்பத்தின் பேரில் கிடைக்கும் அநுமதிச் சீட்டை இந்தியர்கள் எப்போதும் கையில் கொண்டு போகவேண்டும். எந்தப் போலீஸ்காரன் எப்போது கேட்டாலும் காட்ட வேண்டும். காட்டாவிட்டால் அபராதமோ சிறைவாசமோ விதிக்கப்படும். இத்தகைய அவமானகரமான நிபந்தனைகள் அடங்கிய நகல் மசோதா 1906-ல் டிரான்ஸ்வால் சர்க்கார் கெஜட்டில் பிரிசுரிக்கப்பட்டது. இந்தியர்கள் புதிதாக டிரான்ஸ் வாலுக்குள் வருவதைத் தடுப்பதற்காக இந்த ஏற்பாடு செய்யப்படுகிறது என்று காரணம் சொன்னார்கள்.
ஸ்லூக் கலகத்தில் காந்திஜி சேவை செய்து கொண்டிருந்த சமயத்தில் இந்த மசோதா வெளியாயிற்று. அதை உடனே சில நண்பர்கள் காந்திஜிக்கு அனுப்பினார்கள், அதைப் படித்துப் பார்த்தபோது காந்திஜியின் உள்ளம் கொதித்தது. இந்தியர்கள் இத்தகைய அவமானங்களுக்கு உட்படுத்தப் படுவதைக் கண்டு ஆத்திரப்பட்டார். அச்சமயம் டிரான்ஸ் வாலில் வசித்த சுமார் பதினையாயிரம் இந்தியர்களை மட்டும் அது பாதிப்பதாகக் காந்தி மகான் கருதவில்லை. இந்தச் சட்டத்துக்கு இடங் கொடுத்தால் தென்னாப்பிரிக்காவிலுள்ள இந்தியர்கள் எல்லாருடைய வாழ்வையுமே அது பாதிக்கும் என்று காந்திஜி கருதினார். இதைப் பார்த்து மற்ற மாகாணங்களும் அதுமாதிரியான சட்டங்களைச் செய்யக்கூடும் அல்லவா ?
நேட்டாலில் சுதந்திரம் பெற்ற ஒப்பந்தக் கூலிகளை மட்டும் பாதிக்கும் சில சட்டங்கள் அமுலில் இருந்தன. ஆனால் இந்த டிரான்ஸ்வால் சட்டமோ, எல்லா இந்தியர்களையும் பாதிப்பது; அதோடு நேட்டால் சட்டங்களை விடக் கடுமையானது, அவ மானகரமானது. ஆகவே இந்தக் கொடிய சட்டத்தைக் 'கறுப்புச் சட்டம் ' என்று காந்திஜி அழைத்தார்.
ஜோகானிஸ்பர்க் வந்த மறுதினமே சில பிரபல இந்தியர்களின் கூட்டம் ஒன்று கூட்டினார். அதில் மசோதாவின் நிபந்தனைகளை ஒவ்வொன்றாக எடுத்து விளக்கினார். அதை யெல்லாம் கேட்டுத் தெரிந்து கொண்டவர்கள் எல்லாரும், "இவ்வளவு மோசமான நிபந்தனைகளா?" என்று ஆச்சரியப்பட்டார்கள். ஒருவர் மிக்க ஆத்திரத்துடன், "யாராவது என் மனைவியிடம் வந்து ரிஜிஸ்ட்ரேஷன் சர்டிபிகேட் எங்கே என்று கேட்டால் அவனை உடனே நான் சுட்டுத் தள்ளிவிடுவேன். அதனால் ஏற்படும் பலாபலன்களை அனுபவிப்பேன் !" என்றார். காந்திஜி அவரைச் சமாதானப்படுத்தினார். இப்படிப் படபடப்பாகப் பேசுவதினால் பயனில்லை என்றும், இந்திய சமூகம் ஒருமுகமாக இந்தக் கறுப்பு மசோதாவை எதிர்த்துப் போராட வேண்டும் என்றும், நிதானமாகவும் தீர்க்கமாகவும் ஆலோசித்து நடவடிக் கைகளைப் பற்றித் தீர்மானிக்க வேண்டும் என்றார். எல்லாரும் அதற்கு இணங்கினார்கள். எனவே டிரான்ஸ்வால் இந்தியர் களின் பொதுக் கூட்டம் ஒன்று கூட்டி அதில் மேல் நடவடிக்கைகளைப் பற்றி முடிவு செய்வது என்று தீர்மானமாயிற்று.
-------
எம்பயர் தியேட்டர் என்னும் நாடகக் கொட்டகையில் 1906-ம் வருஷம் செப்டம்பர் மீ 11 டிரான்ஸ்வால் மாகாணத்தின் பல பகுதிகளிலிருந்தும் வந்த இந்தியர்கள் கூடினார்கள். கொட்டகையில் எள்ளுப் போட்டால் தரையில் விழாது. அவ்வளவு நெருங்கிய கூட்டம். சுமார் மூவாயிரம் பேர் இருக்கும். ஜனாப் அப்துல் கனி என்னும் வர்த்தகப் பிரமுகர் கூட்டத்துக்குத் தலைமை வகித்தார். பொதுத் தீர்மானங்கள் மூன்றுக்குப் பிறகு கறுப்பு மசோதாவைப் பற்றிய நாலாவது தீர்மானம் வந்தது. கறுப்புச் சட்டம் அமுலுக்கு வரும் பட்சத்தில் அதற்கு இந்தியர்கள் உட்படுவதில்லையென்றும், உட்படத்தினால் விளையும் கஷ்டங்கள் எல்லாவற்றையும் பொறுமையுடன் சகித்துக் கொள்வதென்றும் அந்தத் தீர்மானம் சொல்லிற்று.
கறுப்புச் சட்டத்தின் கொடுமைகளைக் காந்திஜி விளக்கிச் சொல்லித் தீர்மானத்தைப் பிரேரித்த பிறகு பலர் அதை ஆமோதித்துப் பேசினார்கள். அப்படிப் பேசியவர்களில் ஒருவர் சேத் ஹாஜி ஹபீப். அவர் 'ஆண்டவன் ஆணை' யாக மேற்படி தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்று சொன்னதுடன், தாமே கடவுள் பேரில் ஆணைவைத்து. "என்ன நேர்ந்தாலும் நான் கறுப்புச் சட்டத்துக்கு உட்படேன்" என்று கூறினார். இதைக் கேட்டதும் காந்திஜி தம்முடைய பொறுப்பை நன்கு உணர்ந்தார். தீர்மானத்தை நிறைவேற்றும் விஷயத்தில் இன்னும் முன் ஜாக்கிரதையா யிருக்கவேண்டும் என்று கருதினார்.
சாதாரணமாகப் பொதுக்கூட்டங்களிலும் மகாநாடுகளிலும் பல தீர்மானங்கள் செய்வதுண்டு. பிற்பாடு அத்தீர்மானங்களை மாற்றுவதும் உண்டு. தீர்மானத்தை மாற்றாவிட்டா லும், அதை அனுசரித்து நடவாமல் இருப்பதும் உண்டு. பல மகாநாடுகளின் தீர்மானங்கள் காகித அளவிலும் பேச்சளவிலும் நின்றுவிடுகின்றன.
ஆனால் இப்போது டிரான்ஸ்வால் இந்தியர்கள் நிறைவேற்றுவதற்கிருந்த தீர்மானம் அந்த ரகத்தைச் சேர்ந்ததல்ல, அது வெறும் தீர்மானம் மட்டுமல்ல; ஆண்டவன் சாட்சியாகச் சபதம் கொள்வதாகும். இந்த விதத்தில் ஒருமுறை சபதம் செய்துவிட்டால் பிறகு அதைக் கடைப்பிடித்தே தீரவேண்டும் என்று காந்திஜி கருதினார். இதை அங்குள்ளவர்களுக் கெல்லாம் நன்கு விளக்கிக்கூற விரும்பி, பொதுக்கூட்ட அக்கிராசனரின் அநுமதி பெற்று, இரண்டாம் முறையும் பேசலுற்றார். அவ்வாறு காந்திஜி பேசியதன் சாராம்சம் பின்வருமாறு:
"இதற்கு முன்னால், நாம் நிறைவேற்றிய தீர்மானங்களுக்கும் இந்தத் தீர்மானத்துக்கும் வித்தியாசம் அதிகம் உண்டு. இந்தத் தீர்மானத்தை நாம் கடைப்பிடிப்பதைப் பொறுத்தே இந்த நாட்டில் நமது வருங்கால வாழ்வு ஏற்படும். நம்முடைய நண்பர் ஹாஜி ஹபீப் கூறிய யோசனைப்படி நாம் செய்தோமானால், இது தீர்மானமாக மட்டுமல்லாமல் ஆண்டவன் சாட்சியாக எடுத்துக்கொண்ட பிரதிக்ஞையாகும். இந்த முறையில் தீர்மானத்தை நிறைவேற்றுகிற உத்தேசத்துடன் இக்கூட்டத் துக்கு நான் வரவில்லை. ஆனால் ஹாஜி ஹபீப் கூறியதைக் கேட்ட பிறகு பிரதிக்ஞை எடுத்துக்கொள்ள வேண்டுமென்றே நானும் கருதுகிறேன். ஆனால் அப்படி எடுத்துக்கொள்வதில் ஏற்படும் பொறுப்பை உங்களுக்கு நான் நன்கு எடுத்துக் காட்டுவது என் கடமையாகும்.
"நாம் அனைவரும் - ஹிந்துக்களும் முஸ்லிம்களும் - கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள். கடவுள் சாட்சியாக எடுத்துக் கொண்ட விரதத்துக்குப் பங்கம் செய்தோமானால் கடவுள் முன்னிலையிலும் மனிதர் முன்னிலையிலும் குற்றவாளிகள் ஆவோம். காசுகளில் செல்லாக் காசு எப்படித் தள்ளுபடியோ, அவ்விதமே விரதபங்கம் செய்கிறவன் மனிதத் தன்மையை இழந்தவனாகிறான். ஆகையால் நன்றாக யோசனை செய்து மிக முக்கியமான சந்தர்ப்பங்களில் மட்டும் விரதம் எடுத்துக்கொண்ட பிறகு என்ன நேர்ந்தாலும் விரதத்தைக் காப்பாற்ற வேண்டும்.
"தென்னாப்பிரிக்கா இந்திய சமூகத்துக்கு இப்போது அத்தகைய மிக நெருக்கடியான சந்தர்ப்பம் நேர்ந்திருப்பதாகவே நான் நம்புகிறேன். கடவுள் சாட்சியாகப் பிரதிக்ஞை எடுத்துக்கொள்ள வேண்டிய சந்தர்ப்பம் இதைக் காட்டிலும் வேறு ஒன்று இருக்க முடியாது. ஆனால் அப்படிப் பிரதிக்ஞை எடுத்துக்கொள்ளுமுன் அதனால் ஏற்படக்கூடிய விளைவுகளை யோசித்துப் பார்க்க வேண்டும். ஒவ்வொருவரும் தங்களுடைய அந்தரங்கத்தைச் சோதித்துப் பார்க்க வேண்டும். நாம் இந்தத் தீர்மானம் செய்த மாத்திரத்தில் தென்னாப்பிரிக்கா அரசாங்கத் தார் வழிக்கு வந்துவிடுவார்கள் என்ற நம்பிக்கையின் பேரில் தீர்மானம் நிறைவேற்றக்கூடாது. ஒருவேளை அப்படி நேர்ந்தாலும் நேரலாம். ஆனால் அதற்கு நேர்மாறாக நமக்குப் பல விதமான கஷ்டங்கள் ஏற்படவும் கூடும். இங்கே நாம் மூவாயிரம் இந்தியர்கள் கூடியிருக்கிறோம். இந்தக் கூட்டத்துக்கு வராத இந்தியர்கள் வெளியில் பதினாயிரம் பேர் இருக்கிறார்கள். அவர்கள் இந்தத் தீர்மானத்தை ஒப்புக்கொள்ளாமல் கறுப்புச் சட்டத்துக்குத் கீழ்ப்படிந்து நடத்தல் சாத்தியமே. அப்போது. நம்முடைய கஷ்டங்கள் மேலும் அதிகமாகும். நம்மைச் சிறைக்கு அனுப்புவார்கள். சிறையில் நம்மை அவமதிப்பார்கள். கடுங்காவல் விதித்துக் கடினமான வேலை செய்யப் பண்ணுவார்கள். முரட்டு வார்டர்கள் கசையினால் நம்மை அடிப்பார்கள். பட்டினி கிடக்க நேரிடும். கடுங்குளிரினாலும் கொடிய வெப்பத்தினாலும் கஷ்டப்பட நேரிடும். பெருந் தொகை அபராதம் விதித்து நம்முடைய சொத்துக்களை யெல்லாம் பறிமுதல் செய்தாலும் செய்வார்கள். இந்த நாட்டைவிட்டு அப்புறப்-படுத்துவார்கள். இவ்வளவு கஷ்டங்களுக்கும் உள்ளானாலும் எடுத்துக்கொண்ட பிரதிக்ஞையைக் கைவிடுவ தில்லை யென்ற உறுதியோடு இருக்க முடியுமானால் தான் இந்தத் தீர்மானத்தைக் கடவுள் சாட்சியாகப் பிரதிக்ஞை செய்து. நிறைவேற்றுவதில் அர்த்தம் உண்டு.
"இன்னும் ஒரு முக்கியமான விஷயம். இங்கே இப்போது பிரதிக்ஞை செய்து கொள்கிறவர்களில் சிலர் மனோ திடம் இழந்து பிரதிக்ஞையைக் கைவிட்டு விடுவதாக வைத்துக் கொள்ளலாம். அதனால் மற்றவர்களுடைய பொறுப்புத் தீர்ந்துவிடாது. நாம் ஒவ்வொருவரும் தனித்தனியாகப் பிரதிக்ஞை செய்வதாகவே எண்ண வேண்டும். மற்ற எல்லாரும் கைவிட்டாலும் நான் கைவிடுவதில்லை' என்று ஒவ்வொருவரும் உறுதிகொள்ள வேண்டும். இந்திய சமூகம் முழுதும் ஒரேமுகமாக ஒற்றுமையுட னிருந்தால் நம்முடைய நோக்கம் விரைவில் கைகூடும். நம்மில் பலர் உறுதி இழந்து விட்டால் போராட்டம் நீடித்து நடக்க வேண்டியதாயிருக்கும். ஆனால் ஒரு சிலராவது எல்லாக் கஷ்டங்களுக்கும் துணிந்து உறுதியுடன் இருந்து வருவார்களானால் இறுதியில் நமக்கு வெற்றி கைகூடும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. என்னைப் பொறுத்த வரையில், நான் இந்தப் பிரதிக்ஞை எடுத்துக்கொண்டு விட்டால், பிறகு நீங்கள் எல்லாரும் கைவிட்டுப் போய் நான் ஒருவனே தன்னந்தனியாக நிற்க நேர்ந்தாலும் என்னுடைய உறுதியைக் கைவிடமாட்டேன். இதைக் கர்வம் காரணமாக நான் சொல்லவில்லை. உங்களுக்கு எச்சரிக்கையா யிருப்பதற்காகவும், நீங்கள் ஒவ்வொருவரும் அத்தகைய மன உறுதி கொள்ளவும் வேண்டியே கூறினேன்."
இவ்விதம் காந்திஜி சொல்லிவிட்டு உட்கார்ந்தார். சபையோர் மிகக் கவனமாகக் கேட்டுக்கொண்டிருந்தார்கள். காந்திஜிக்குப் பிற்பாடு பேசியவர்களும், அவருடைய கருத்தை யொட்டிச் சபையோரின் பொறுப்பை எடுத்துக்காட்டிப் பேசினார்கள். கடைசியாக, கூட்டத்தின் அக்கிராசனர் எழுந்தார். அவரும் விஷயத்தைத் தெளிவுபடுத்திவிட்டுச் சபையோரின் அபிப்பிராயத்தைக் கேட்டார். சபையோர் ஒரு முகமாகத் தீர்மானத்தை நிறைவேற்றுவதற்குச் சாதகமான அபிப்பிராயம் தெரிவித்தார்கள். மூவாயிரம் இந்தியர்களும் எழுந்து நின்று கடவுள் சாட்சியாகக் கறுப்புச் சட்டத்துக்கு உட்படுவதில்லை யென்று சபதம் செய்தார்கள்.
இவ்விதமாக, 1906-ம் வருஷம் செப்டம்பர் 11௳, உலக சரித்திரத்தில் ஒரு புதிய அத்தியாயம் ஆரம்பமாயிற்று. "சத்தியாக்கிரஹம் " என்னும் அற்புதமான புதிய ஆயுதம் அன்று கண்டு பிடிக்கப்பட்டது. அதற்குச் "சத்தியாக்கிரஹம் " என்னும் பெயர் உடனே ஏற்பட்டு விடவில்லை. கொஞ்ச காலத்துக்குப் பிறகுதான் நாமகரணம் செய்யப்பட்டது.
முதலில் சிலகாலம் தென்னாப்பிரிக்கா இந்தியர்களின் இயக்கம் 'பாஸிவ் ரிஸிஸ்டன்ஸ்' என்னும் ஆங்கிலப் பெயராலேயே குறிப்பிடப்பட்டது. அந்தக் காலத்துத் தமிழ்ப் பத்திரிகைகளில் அதை எதிர்க்காமல் எதிர்க்கும் முறை என்றும், 'சாத்வீக எதிர்ப்பு' என்றும் மொழி பெயர்த்து வந்தார்கள். இந்தியர்கள் நடத்தும் தார்மிக இயக்கத்தை ஆங்கிலப் பெயராலேயே குறிப்பிட்டு வந்தது காந்திஜிக்குப் பிடிக்கவில்லை. புதிய இந்திய பாஷைப் பெயர் கொடுக்க வேண்டும் என்பதற்கு வேறொரு முக்கியமான காரணமும் ஏற்பட்டது. ஒரு பொதுக் கூட்டத்தில் தென்னாபிரிக்கா இந்தியர்களின் கட்சியை ஆதரித்துப் பேசிய ஓர் ஆங்கிலேயர், "இந்தியர்கள் சிறுதொகையினர் ; பலமற்றவர்கள். அதனால் 'பாஸிவ் ரிஸிஸ்டன்ஸ் ' முறையைக் கையாளுகிறார்கள். பலவீனர்கள் வேறு என்ன செய்ய முடி யும்? " என்று பேசினார். இதைக் காந்திஜி கேட்டுக் கொண்டிருந்தார். தாம் கைக்கொண்ட போர்முறை பலவீனங் காரணமாக ஏற்பட்டதல்ல என்பது காந்திஜியின் உறுதியாகும். எனவே, 'பாஸிவ் ரிஸிஸ்டன்ஸ்' பலவீனர்களுடைய இயக்கம் என்று கருதப்பட்டபடியால், தம் இயக்கத்தின் பெயரை உடனே மாற்றிவிடவேண்டும் என்று தீர்மானித்தார். புதிய பெயர் கண்டுபிடித்துச் சொல்கிறவர்களுக்கு ஒரு சிறு பரிசு வழங்கப்படும் என்று "இண்டியன் ஒபீனியன்" பத்திரிகையில் விளம்பரம் செய்தார். இந்த அதிசயமான பரிசுப் போட்டியில் கலந்து கொண்டவர்களில் ஒருவர் ஸ்ரீ மகன்லால் காந்தி. இவர் 'சத்காரியத்தில் உறுதி ' என்னும் பொருள் படும் 'சதாக்கிரஹம்' என்னும் பெயரைக் குறிப்பிட்டார். எல்லாப் பெயர்களிலும் இது காந்திஜிக்குப் பிடித்திருந்தது. ஆனால் பூரண திருப்தி அளிக்கவில்லை. மேலும் யோசனை செய்து 'சதாக்கிரஹம் ' என்னும் பெயரைச் 'சத்தியாக்கிரஹம் ' என்று மாற்றினார்,
சத்தியம் என்பதில் அன்பும் அஹிம்சையும் அடங்கியுள்ளன என்பது காந்திஜியின் நம்பிக்கை. எனவே காந்திமகான் உலகத்துக்குக் கண்டு பிடித்துக் கொடுத்த புதிய போர்முறைக்குச் “சத்தியாக்கிரஹம்' என்னும் பெயரே நிலை பெற்று விளங்குகிறது.
---------------
கறுப்புச் சட்டத்தை எதிர்த்து நிற்பது என்று தீர்மானித்த பிறகு முதலில் சமாதான வழிகள் எல்லாவற்றையும் கையாண்டு பார்த்துவிடுவது என்று காந்திஜி தீர்மானித்தார். எனவே, இன்னும் சில இந்தியர்களையும் சேர்த்துக்கொண்டு சர்க்கார் காரிய தரிசியான மிஸ்டர் டன்கன் என்பவரைப் போய்ப் பார்த்தார். இந்திய சமூகம் செய்திருக்கும் தீர்மானத்தைப் பற்றி எடுத்துச் சொன்னார். மிஸ்டர் டன்கன் கூறிய பதிலாவது :- ஸ்திரீகளைப் பொறுத்த வரையில் சட்டத்தில் விலக்கு அளித்து விடுவது என்று சர்க்கார் முடிவு செய்திருக்கிறார்கள். மற்றப்படி சட்டத்தை நிறைவேற்றிக் கண்டிப்பாக அமுல் நடத்த வேண்டுமென்று முடிவாகத் தீர்மானித்து விட்டார்கள். இதைப்பற்றி நீங்கள் வீண் கிளர்ச்சி செய்வதில் யாதொரு பயனும் இல்லை. ஜெனரல் போதாவும் ஜெனரல் ஸ்மட்ஸம் நீங்கள் இந்தச் சட்டத்துக்கு உட்பட வேண்டும் என்று விரும்புகிறார்கள். உட்பட்டால், சில்லரை விஷயங்களில் உங்களுடைய யோசனைகள் கவனிக்கப்படும். ஆனால் சட்டம் அமுலுக்கு வந்தே தீரும்."
இந்த பதிலைத் தெரிந்துகொண்ட இந்திய சமூகத்துக்கு ஒரு விதத்தில் உற்சாகம் அதிகமாயிற்று. ஸ்திரீகள் விஷயத்தில் சர்க்கார் விலக்குச் செய்ய ஒப்புக்கொண்டது தங்களுடைய சாத்வீக எதிர்ப்பு இயக்கத்தின் பலனே என்று கருதினார்கள். ஆயினும் சட்டம் முழுவதையும் எதிர்த்தே தீருவதென்று உறுதி கொண்டார்கள். ஸ்திரீகளின் விஷயத்தில் விலக்குச் செய்ய முன் வந்ததற்காகச் சர்க்கார் காரியதரிசிக்கு நன்றி தெரிவித்து விட்டு, எனினும் கறுப்புச் சட்டத்துக்குத் தாங்கள் உட்பட முடியாது என்று சொல்லிவிட்டுத் திரும்பினார்கள்.
சமாதான முறைகள் இத்துடன் தீர்ந்து போய்விடவில்லை. இங்கிலாந்துக்குச் சென்று பிரிட்டிஷ் சர்க்காரைப் பேட்டி காண்பதினால் ஏதேனும் பயன் விளையலாம். எனவே, இங்கிலாந்துக்குத் தூதுகோஷ்டி அனுப்புவதென்று தீர்மானமாயிற்று. அதற்கு வேண்டிய செலவுக்கு உடனே பணம் திரட்டியாகி விட்டது. ஆனால் பிரதிநிதிக் கூட்டத்தில் யார் போவது என்பதில் சிறிது தகராறு நேர்ந்தது. காந்திஜி போகவேண்டும் என்பது எல்லாருக்கும் சம்மதம். அவரைத் தவிர இன்னும் பலர் போக எண்ணினார்கள். ஆனால் காந்திஜி அந்தப் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். அதிகப்பேர் போவதினால் காரியம் ஒன்றும் ஆகாது என்று எடுத்துக் காட்டினார். கடைசியில் காந்திஜியையும் ஜனாப் எச். ஓ. அலி என்னும் முஸ்லிமையும் மட் டும் அனுப்புவதென்று தீர்மானிக்கப்பட்டது.
மகாத்மாவும் ஜனாப் அலியும் இங்கிலாந்துக்குச் சென்றார்கள். போகும்போதே கப்பலில், குடியேற்ற நாட்டு மந்திரி லார்ட் எல்ஜினிடம் சமர்ப்பிக்க ஒரு விண்ணப்பத்தைத் தயாரித்துக் கொண்டார்கள். இங்கிலாந்து சென்றதும் இந்தியா மந்திரி மார்லியைப் பேட்டி கண்டு பேசினார்கள். இந்திய காங்கிரஸ் மகாசபைக்கு அப்போது லண்டனில் கிளைக் கமிட்டி ஒன்று இருந்தது. ஸ்ரீ தாதாபாய் நௌரோஜி மூலம் மேற்படி கமிட்டி அங்கத்தினரைப் பார்த்துப் பேசினார்கள். பிறகு பார்லிமெண்ட் அங்கத்தினர் பலரையும் சந்தித்துப் பேசினார்கள். இங்கிலாந்தில் எந்த ஒரு முக்கியமான பொது விஷயத்தையும் ஏதேனும் ஒரு விருந்து வைத்துத்தான் ஆரம்பிப்பது என்ற சம்பிரதாயம் உண்டு. அதுபோலவே இவர்களும் ஒரு விருந்து நடத்தி அதற்குப் பிரமுகர்கள் பலரையும் அழைத்தார்கள், இந்த விருந்தின் போது தென்னாப்பிரிக்கா இந்தியர்களின் கட்சியைக் கவனித்துக் கொள்வதற்காக ஆங்கிலேயரும் இந்தியரும் அடங்கிய ஒரு கமிட்டி ஏற்படுத்தப் பட்டது.
குடியேற்ற நாட்டு மந்திரி லார்ட் எல்ஜினைப் பேட்டி கண்டு விஷயத்தைச் சொன்னபோது அவர் எல்லாவற்றையும் கவனமாகக் கேட்டார். தம் அநுதாபத்தையும் தெரிவித்தார். தம்மால் முடிந்ததை யெல்லாம் செய்வதாகவும் சொன்னார்.
கூடியவரையில் திருப்திகரமாகத் தோன்றிய இந்த பதிலைப் பெற்றுக்கொண்டு காந்திஜியும் ஜனாப் அலியும் தென்னாப்பிரிக்கா திரும்பினார்கள். திரும்பும் வழியில் மதீரா என்னும் துறைமுகத்தில் கப்பல் நின்றபோது அவர்களுக்கு ஒரு தந்தி வந்தது. இங்கிலாந்தில் இருந்த சமயம் அவர்களுக்குக் காரியதரிசியாக வேலை பார்த்த மிஸ்டர் ரிட்ச் என்பவர் தந்தி கொடுத்திருந்தார், "டிரான்ஸ்வால் சர்க்காரின் ஆசிய மசோதாவுக்கு அரசரின் அநுமதி கிடைக்காது. அதைச் சிபார்சு செய்ய லார்ட் எல்ஜின் மறுத்து விட்டார்!" என்று அந்தத் தந்தியில் கண்டிருந் தது. காந்திஜி அடைந்த மகிழ்ச்சிக்கு அளவில்லை. இங்கிலாந்துக்குத் தூது போன நோக்கம் பூரண வெற்றியடைந்து விட் டது! இனிமேல் சத்தியாக்கிரஹப் போராட்டம் ஆரம்பித்து நடத்தவேண்டிய அவசியமேயில்லை. - இவ்விதம் எண்ணிக் குதூகலம் அடைந்தார் மகாத்மா. மதீராவிலிருந்து கேப் டவுன் துறைமுகத்துக்கு அந்தக் காலத்தில் பதினைந்து நாள் பிரயாணம். இந்தப் பதினைந்து தினங்களும் பற்பல ஆகாசக் கோட்டைகள் கட்டிக் கொண்டு யாத்திரை செய்தார். ஆனால் கேப் டவுனில் இறங்கியதும் தெரிந்த சமாசாரம் ஆகாசக் கோட்டைகளைத் தகர்த்து எறிந்து விட்டன. லார்ட் எல்ஜின் "ஆசியாச் சட்டத்துக்கு அநுமதி யில்லை" என்று சொன்னதில் ஒரு வஞ்சக தந்திரம் இருந்தது என்று வெளியாயிற்று. அதன் விவரம் என்ன வென்றால் போயர் யுத்தத்துக்குப் பிறகு மிஸ்டர் சேம்பர்லின் டிரான்ஸ்வாலுக்கு வந்து போயர்களைச் சமரசப்படுத்தப் பெருமுயற்சி செய்தார். டிரான்ஸ்வாலுக்குப் பூரண சுயாட்சி கொடுத்து விடுவதாக அவர்களுக்கு வாக்களித்திருந்தார். இது பிரிட்டிஷ் பொது மக்களின் விருப்பத்துக்கு ஒத்திருந்தது; பார்க்கப் போனால், போயர்களும் வெள்ளை நிறத்தவர்கள் தான்; ஐரோப்பியர்கள் தான்; ஏகாதிபத்தியத்துக்குள் அவர்களை எதிரிகளாக வைத்துக்கொண்டிருக்க பிரிட்டிஷார் விரும்பவில்லை.
எனினும், டிரான்ஸ்வாலுக்குப் பூரண சுயாட்சி கொடுப்பது சம்பந்தமான சட்டங்களும் சம்பிரதாயங்களும் இன்னும் பூர்த்தியாகி விடவில்லை. 1906-ம் வருஷத்தில் கூட டிரான்ஸ்வால் மாகாணம் பிரிட்டிஷ் 'கிரெளன் காலனி ' யாகவே இருந்தது. அதாவது அந்த நாட்டின் ஆட்சிக்கு பிரிட்டிஷ் அரசர் நேரில் பொறுப்பு வகிப்பதாக ஐதீகம். காரியாம்சத்தில் பிரிட்டிஷ் மந்திரி சபை பொறுப்பு வகித்து வந்தது.
பூரண சுயாட்சி டிரான்ஸ்வாலில் 1907-ம் வருஷம் ஜன வரிமீ 15௳ அமுலுக்கு வருவதாக இருந்தது. ஆகவே, லார்ட் எல்ஜின் லண்டனில் இருந்த டிரான்ஸ்வால் ஏஜெண்டிடம் என்ன சொன்னார் என்றால், "தற்சமயம் பிரிட்டிஷ் சர்க்கார் இந்தியாவையும் ஆளுகிறார்கள் ; டிரான்ஸ்வாலையும் ஆளுகிறார்கள். ஆகையால் இந்திய நாட்டின் பிரஜைகளுக்கு டிரான்ஸ்வாலில் தடைகள் ஏற்படுத்துவதை அனுமதிக்க முடியாது. சீக்கிரத்தில் உங்களுக்கு, அதாவது டிரான்ஸ்வாலுக்குப் பூரண சுயாட்சி வரப்போகிறது. இப்போது இந்த மசோதாவைக் கைவிட்டு விட்டுச் சுயாட்சி வந்ததும் அப்புறம் புதிதாகக் கொண்டுவந்து நிறைவேற்றுங்கள். சுயாட்சி பெற்ற நாடுகளின் சட்டங்களில் பிரிட்டிஷ் மந்திரி சபை குறுக்கிட உரிமை யில்லை. எந்தச் சட்டத்தை நிறைவேற்றினாலும் அரசரின் அநுமதி கிடைத்துவிடும். இப்போது எதற்காக வீண் தொல்லை? "
இந்த யோசனைக்கு டிரான்வால் ஏஜெண்டு சம்மதித்து டிரான்ஸ்வால் சர்க்காருக்குத் தெரிவித்து விட்டார். அவர்களும் ஒப்புக்கொண்டார்கள். இந்த விவரமெல்லாம் மிஸ்டர் ரிட்சுக்குத் தெரியாது. "சட்டத்துக்குக் கையெழுத்து ஆக வில்லை" என்பதை மட்டும் அவர் அறிந்து காந்திஜிக்குத் தந்தி கொடுத்து விட்டார்.
லார்ட் எல்ஜின் செய்தது நேர்மையான காரியம் அல்ல வென்று காந்திஜி அபிப்பிராயப் பட்டார். ஒரு அற்ப தந்திரத்தைக் கையாண்டு இந்திய சமூகத்தை ஏமாற்றி விட்டதாகவே கருதினார். டிரான்ஸ்வால் சுயாட்சி பெற்றுவிட்டால் மட்டும் என்ன ? பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்துக்கு அது உள்ளடங்கி இருக்கும் வரையில் இந்தியர்களுடைய உரிமைகளை வற்புறுத்திப் பாதுகாப்பது பிரிட்டிஷ் சர்க்காரின் கடமை யல்லவா?
காந்திஜியைப் போலவே இந்திய சமூகமும் கொதிப் படைந்தது. யாருடைய உதவியையும் எதிர்பாராமல் போராட் டத்துக்குத் தயார் செய்யத் தொடங்கினார்கள்.
குறிப்பிட்ட தேதியில் அதாவது 1907 ஜனவரிt 1௳ டிரான்ஸ்வாலில் சுயாட்சி அமுலுக்கு வந்தது. மார்ச்சு மாதம் 21௳ பழைய கறுப்புச் சட்டத்தைப் புதிய உருவத்தில் கொண்டு வந்து புதிய பார்லிமெண்டில் நிறைவேற்றினார்கள். ஜூலைமீ 1௳ -யிலிருந்து சட்டம் அமுலுக்கு வரும் என்றும், ஜூலை 31-க்குள் எல்லா இந்தியர்களும் பதிவு விண்ணப்பம் போட்டு விட வேண்டும் என்றும் உத்தரவு பிறந்தது. இதற்காகப் பாரங்கள் அச்சிடப் பட்டன. ஆபீஸ்களும் திறக்கப்பட்டன.
அதே சமயத்தில் காந்திஜியின் தலைமையில் டிரான்ஸ்வால் இந்தியர்களும் சத்தியாக்கிரகப் போராட்டத்துக்குத் தயார் செய்து கொண்டிருந்தார்கள். ஆங்காங்கே பொதுக்கூட்டங்கள் நடந்தன. சாத்வீக எதிர்ப்புச் சபதத்தில் மீண்டும் ஒரு முறை கையெழுத்து வாங்கப்பட்டது. 'முன்னே சபதம் எடுத்துக்கொண்டபோது அமுலுக்கு வரவிருந்த சட்டந்தான் ரத்தாகி விட்டதே! இது புதிய சட்டந்தானே ? அந்தச் சட்டம் இதற்குக் கட்டுப் படுத்தாது!" என்ற யுக்தி வாதத்தைச் சொல்லி ஒரு சில இந்தியர்கள் நழுவிக் கொள்ளப் பார்த்தார்கள். ஆகவே இரண்டாவது தடவையும் சாத்வீக எதிர்ப்புச் சபதத்தில் கையெழுத்து வாங்குவது அவசியமாயிற்று.
பதிவு செய்வதற்குக் கடைசித் தவணைத் தேதி நெருங்கி வந்து கொண்டிருந்த சமயத்தில் மற்றொரு பெரிய பொதுக் கூட்டம் கூட்டினார்கள். பிரிட்டோரியாவில் உள்ள மசூதியைச் சேர்ந்த திறந்த வெளியில் கூட்டம் நடந்தது. அதற்கு ஜனாப் யூசப் இஸ்மேல் மியான் தலைமை வகித்தார்.
தேதி நெருங்க நெருங்க இந்தியர்களுடைய கவலை அதிகமான துபோல் டிரான்ஸ்வால் சர்க்காருடைய கவலையும் அதிகமாகி வந்தது. எனவே ஜெனரல் போதா மேற்படி கூட்டத்துக்குத் தம்முடைய தூதராக மிஸ்டர் வில்லியம் ஹாஸ்கென் என்பவரை அனுப்பி வைத்தார். மிஸ்டர் ஹாஸ்கென் கூட் டத்தில் பேசினார். “நான் உங்களுடைய நண்பன், உங்களுடைய நன்மைக்காகவே சொல்கிறேன். டிரான்ஸ்வால் ஐரோப்பியர்கள் பொதுவாக உங்கள் விஷயத்தில் விரோத பாவங் கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய விருப்பத்தை டிரான்ஸ்வால் சர்க்கார் புறக்கணிக்க முடி யாது. ஆகையால் இந்தச் சட்டத்தை நடத்தியே தீருவதென்று சர்க்கார் உறுதிகொண்டு விட்டார்கள். நீங்கள் இச்சட்டத்தை எதிர்ப்பது வீண். சுவரில் முட்டிக் கொள்வது போலாகும். ஏதாவது சில்லரை விஷயங்களில் திருத்தம் வேண்டினால் ஜெனரல் ஸ்மட்ஸ் கவனிப்பார். ஆனால் சட்டத்தை மாற்ற முடியாது. சட்டத்தை ஒழிக்கும் வீண் முயற்சியில் இறங்கி உங்களை நீங்களே அழித்துக் கொள்ள வேண்டாம்!"
மிஸ்டர் ஹாஸ்கென் இவ்விதம் பேசிய பிறகு இந்தியர்கள் சிலர் பேசினார்கள். அவர்களில் ஜனாப் அஹமத் முகம்மத் கச்சாலியா ஒருவர். கச்சாலியா சேத் சுருக்கமாகவே பேசினார். அதன் கருத்து வருமாறு :- "ஹாஸ்கென் கூறியதை யெல்லாம் கவனமாகக் கேட்டேன். அதனால் என்னுடைய உறுதி வலுப் பெற்றிருக்கிறது. டிரான்ஸ்வால் சர்க்கார் எவ்வளவு பலமுள்ளவர்கள் என்பதை நாம் அறிவோம். நம்மைச் சிறையில் அடைப்பார்கள்; நம்முடைய சொத்துக்களைப் பறிமுதல் செய்வார்கள் ; நாட்டை விட்டு வெளியேற்றுவார்கள்; தூக்கிலேயும் போடுவார்கள் ! இவ்வளவையும் நாம் சகித்துக் கொள்வோமே தவிர இந்தச் சட்டத்துக்குப் பணிய மாட்டோம். ஆண்டவன் ஆணையாகச் சொல்கிறேன். என்னைத் தூக்கிலே போட்டாலும் சரி, நான் இந்த சட்டத்துக்கு உட்படேன்."
கச்சாலியா சேத் கடைசி வாக்கியத்தைச் சொன்ன போது அவருடைய கை விரல்களினால் கழுத்தைத் தொட்டுக் காட்டினார். கூட்டத்திலிருந்த சிலர் இதைப் பார்த்துப் புன்னகை புரிந்தார்கள். 'தூக்கிலே போட்டாலும் பணியமாட்டேன்' என்று அவர் சொல்வது வெறும் வீறாப்புப் பேச்சு என்று அவர்கள் கருதினார்கள், ஆனால் அவர்களுடைய சந்தேகந்தான் பிசகான து என்பதைக் கச்சாலியா சாகிப் பிற்காலத்தில் நிருபித்தார். போராட்டத்தில் அவர் அடைந்த கஷ்ட நஷ்டங்களைச் சொல்லி முடியாது. ஆயினும் அவர் இறுதிவரையில் ஒரே உறுதியாக இருந்து வந்தார்.
தம்பி ! கச்சாலியா சேத்தின் தியாகத்தையும் தீரத்தையும் குறித்துக் காந்திமகான் "தென்னாப்பிரிக்கா சத்தியாக்கிரஹம் " என் னும் நூலில் ஒரு முழு அத்தியாயம் எழுதியிருக்கிறார். தென்னாப்பிரிக்காவில் காந்திஜியின் இயக்கத்துக்குத் துணை நின்ற பிரமுகர்கள் பலர் முஸ்லிம்கள் என்பதை நீ இதற்குள் கவனித் திருப்பாய் என்று நம்புகிறேன். ஹிந்து-முஸ்லிம் ஒற்றுமையில் காந்திஜி கடைசி வரையில் சலியாத நம்பிக்கை கொண்டிருந்தது ஏன் என்பதையும் நாம் ஊகிக்கலாமல்லவா ?
----------------
1907- ம் வருஷம் ஜூலை மாதம் முதல் தேதி வந்தது. அன்று டிரான்ஸ்வால் எங்கும் இந்தியர்கள் பெயரைப் பதிவு செய்துகொண்டு அநுமதிச் சீட்டுப் பெறும் காரியாலயங்கள் திறக்கப்பட்டன. இந்தக் காரியாலயங்களுக்கு அருகில் சத்தியாக் கிரஹத் தொண்டர்கள் நிறுத்தி வைக்கப்பட்டார்கள்.. விஷயம் தெரியாததினாலோ அல்லது பயத்தினாலோ பதிவு செய்து கொள்ள வரும் இந்தியர்களுக்குச் சாத்வீக முறையில் எச்சரிக்கை செய்வதற்காகவே தொண்டர்கள் நிறுத்தி வைக்கப் பட்டார்கள். தொண்டர்களுக்கென்று தனியாக ஒரு அடை யாளம் கொடுக்கப் பட்டிருந்தது. முரட்டுத்தனமாகவோ அவமரியாதையாகவோ பேசக் கூடாதென்றும், லவலேசமும் பலாத்காரத்தைக் கையாளக் கூடாதென்றும் தொண்டர்களுக்குக் கண்டிப்பாகச் சொல்லப் பட்டிருந்தது. கறுப்புச் சட்டத் துக்கு உட்படுவதால் இன்னின்ன தீமைகள் விளையும் என்பதைக் கூறும் அச்சுப் பிரசுரத்தைக் கொடுத்து விட்டு, அதில் கண்ட விவரங்களை விளக்கிச் சொல்வதே தொண்டர்களின் கடமை. இந்தக் கடமையை நிறைவேற்றுவதில் போலீஸார் தலையிட்டுத் தொண்டர்களை வைதாலும் அடித்தாலும் தொண்டர்கள் பொறுமையாகப் பொறுத்துக் கொள்ள வேண்டும். அப்படிப் பொறுக்க முடியாமற் போய்விட்டால் அங்கிருந்து அப்புறம் போய்விட வேண்டும். போலீஸார் கைது செய்தால் சந்தோஷமாகச் சிறைக்குப் போக வேண்டும்.
இவ்விதமாக, சாத்வீக மறியல் என்னும் ஆயுதமான து 1907-ம் வருஷத்திலேயே காந்திஜியினால் உருவாக்கப்பட்டது. இந்த ஆயுதத்தைக் காந்திஜி பிற்காலத்தில் இந்தியாவில் பற்பல துறைகளிலும் உபயோகப்படுத்தினார். கள்ளுக்கடை மறியல், விதேசி ஜவுளிக் கடை மறியல் முதலியவை நடந்தன. இந்தச் சாத்வீக மறியல் முறையினாலேயே இந்தியா சுதந்திரம் அடைந்தது என்று சொல்வது மிகையாகாது. ஆனால் தென்னாப்பிரிக்காவில் இந்த முறையை ஆரம்பித்த போது அது முற்றும் புதுமையா யிருந்தபடியால் பல தொல்லைகள் ஏற்பட்டன. "வெறுமனே 'அப்பா ஐயா!' என்று கெஞ்சினால் யார் கேட்பார்கள் ? " என்று எண்ணிய இந்தியர்கள் சிலர் இருந்தார்கள். இவர்கள் இரகசியமாகப் பயமுறுத்தல் முறைகளைக் கையாண்டார்கள். பயமுறுத்தலுக்கு உள்ளானவர்கள் உடனே சர்க்காரின் பாதுகாப்பைக் கோரினார்கள். சர்க்காரின் பாதுகாப்பு உடனே கிடைத்தது. இது காரணமாக இந்திய சமூகத்தில் பலவீனமும் பிளவும் ஏற்பட்டன. சில பிரபல வியாபாரிகள் இராத்திரி பத்து மணிக்கு மேலே பதிவுக் காரியாலயங்களுக்குச் சென்று பதிவு செய்து கொண்டார்கள். இம்மாதிரி சுமார் ஐந்நூ று இந்தியர்கள் வரையில் பதிவு செய்து கொண்டு அநுமதிச் சீட்டுப் பெற்றார்கள்.
ஆனால் டிரான்ஸ்வால் சர்க்கார் இதனால் திருப்தி அடைய வில்லை. சட்டம் அமுலுக்கு வந்து சில மாதங்கள் ஆகியும், சுமார் பன்னிரண்டாயிரம் இந்தியர்களில் ஐந்நூறு பேர் தான் புதிய சட்டத்துக்கு உட்பட்டார்கள் என்பது சர்க்காருக்கு அவமானந் தரும் நிலைமை அல்லவா ? ஆகவே அடக்கு முறையைக் கையாள வேண்டியதுதான் என்று அதிகாரிகள் தீர்மானித்தார்கள்.
முதன் முதலில் அத்தகைய அதிர்ஷ்டம் கிடைக்கப் பெற்றவரின் பெயர் பண்டித ராமசுந்தரம். இவர் வட இந்தியர், பிரசங்கத் திறமை வாய்ந்தவர். சம்ஸ்கிருத சுலோகங்களும் துளசிதாஸ் ராமாயணப் பாடல்களும் சொல்லக் கூடியவர். ஜெர்மிஸ்டன் என்னுமிடத்தில் இவர் இருந்தார். அந்த ஊரில் வசித்த இந்தியர்களிடையில் மிக்க செல்வாக்குப் பெற்றிருந் தார். அந்த ஊரிலிருந்த இந்தியர்கள் இவராலேதான் பதிவு செய்து கொள்ள முன்வரவில்லை யென்று அதிகாரிகள் கருதி இவரைக் கைது செய்தார்கள். கோர்ட்டில் விசாரணை நடந்து ஒரு மாதம் சிறைத்தண்டனை விதிக்கப் பட்டது. தென்னாப் பிரிக்கா முழுவதும் இவருடைய பெயர் பிரசித்தியாயிற்று. இந்தச் சம்பவத்தின் பயனாக இந்தியர்களின் உறுதியும் உற்சாகமும் அதிகமாயினவே தவிரக் குறையவில்லை. நூற்றுக்கணக்கான இந்தியர்கள் சிறைக்குப் போகத் தயாரானார்கள். ஜெர்மிஸ்டனில் ஒரு இந்தியர்கூடப் பதிவு செய்து கொள்ளவில்லை.
அதிகாரிகளின் கோபம் அதிகமாயிற்று. ஜோகானிஸ்பர்க்கில் இருந்து இயக்கத்தை நடத்தி வைத்த முக்கியமான தலைவர்கள் பேரில் நடவடிக்கை எடுத்தாலன்றிச் சட்டத்தை அமுல் நடத்த முடியாது என்று தீர்மானித்தார்கள். எனவே சில முக்கியமான இந்தியத் தலைவர்களைப் பொறுக்கி எடுத்து, 1907-ம் வருஷம் டிசம்பர் 28௳ கோர்ட்டில் ஆஜராகி, அவர்கள் பேரில் ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்பதற்குக் காரணம் காட்டவேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார்கள்.
இப்படிப் பொறுக்கி எடுக்கப்பட்ட தலைவர்களில் காந்திஜி ஒருவர் என்று சொல்ல வேண்டியதில்லை. இன்னொருவர் குவின் என்னும் சீனர். இந்தியர்களைப் போலவே சீனர்களும் கறுப்புச் சட்டத்துக்கு உட்படுத்தப் பட்டார்கள். ஆகையால் சீனர்களும் சட்டமறுப்பு இயக்கத்தில் சேர்ந்திருந்தார்கள்.
இன்னொரு தலைவர் பெயர் தம்பி நாயுடு. இவருடைய பெற்றோர்கள் தமிழ்-நாட்டிலிருந்து மோர்சி எனப்படும் மொரீஷஸ் தீவுக்குச் சென்று குடியேறியவர்கள். அந்தத் தீவில் பிறந்தவர் தம்பி நாயுடு. இந்தியா தேசத்தை அவர் பார்த்ததே யில்லை. ஆயினும் தாய்நாடாகிய இந்தியா மீது அவர் கொண்டிருந்த பக்திக்கு அளவேயில்லை யென்று காந்தி மகாத்மா எழுதியிருக்கிறார். இன்னும் அவருடைய குணாதிசயங்களைப் பற்றி மிக வியந்து எழுதியிருக்கிறார். இங்கிலீஷ், தமிழ், தெலுங்கு, ஹிந்துஸ்தானி முதலிய பல பாஷைகள் தம்பி நாயுடுவுக்குத் தெரியுமாம். நீகிரோ பாஷைகூடத் தெரியுமாம். எந்த வேலையையும் மட்டமான து என்று அவர் நினைக்க மாட்டாராம். பொது கூட்டத்துக்குத் தலைமை வகிக்க நேர்ந்தாலும் வகிப்பாராம். தலையில் மூட்டை தூக்கிக் கொண்டு சாலையில் போக வேண்டி வந்தாலும் போவாராம். சமூகத்துக்காகச் சர்வ பரித் தியாகமும் செய்வதற்குத் தயாராயிருந்தாராம். இரவு பகல் என்று பாராது பொது வேலைகளில் ஈடுபடுவாராம். "தென்னாப்பிரிக்கா சத்தியாக்கிரக இயக்கத்தின் சரித்திரத்தில் தம்பி நாயுடுவின் பெயர் எப்போதும் நிலைபெற்று விளங்கும்" என்கிறார் காந்தி மகான்.
குறிப்பிட்ட தினத்தில் 'நோட்டீசு' கிடைத்தவர்கள் எல்லாரும் கோர்ட்டுக்குப் போனார்கள். யாரும் எதிர் வழக்கு ஆடவில்லை. ஆகவே, 'இரண்டு வாரத்திற்குள் அவர்கள் கறுப்புச் சட்டத்தின்படி பதிவு செய்து கொள்ள வேண்டும், அல்லது டிரான்ஸ்வாலை விட்டுப் போய்விடவேண்டும்' என்று மாஜிஸ்ட்டிரேட் தீர்ப்பு அளித்தார்.
ஆனால் அந்தத் தீர்ப்பின்படி ஒருவரும் பதிவு செய்து கொள்ளவும் இல்லை; டிரான்ஸ்வாலை விட்டுப் போகவும் இல்லை. 1908-ம் வருஷம் ஜனவரி 10-ம் தேதி தவணை தீர்ந்தது. அன்று எல்லோரும் மறுபடியும் கோர்ட்டுக்கு வரவழைக்கப்-பட்டார்கள். மாஜிஸ்ட்டிரேட்டின் உத்திரவை மீறிய குற்றத்தைச் செய்ததாக எல்லாரும் ஒப்புக் கொண்டார்கள்.
கோர்ட்டில் இந்த விசாரணை ஆரம்பமாகிக்கொண்டிருந்த சமயத்தில் பிரிட்டோரியாவிலிருந்து ஒரு செய்தி வந்தது. அங்கேயும் சில இந்தியத் தலைவர்கள் இதே மாதிரி விசாரணை செய்யப்பட்டு மூன்று மாதம் கடுங்காவல் தண்டனையும் அதைத் தவிரப் பெருந் தொகை அபராதமும் விதிக்கப்பட்டனர் என்று தெரிந்தது. உடனே காந்திஜி தாம் ஒரு வாக்கு மூலம் கொடுக்க விரும்புவதாகவும் அதற்குக் கோர்ட்டார் அநுமதி கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
இதுவரை ஒன்றுமே சொல்வதற்கில்லை யென்று சொல்லி வந்த காந்திஜி இப்போது வாக்குமூலம் கொடுப்பதாகச் சொன்னதும் மாஜிஸ்ட்ரேட்டுக்குச் சிறிது வியப்பா யிருந்தது. ஒரு வேளை, காந்திஜி பயந்துபோய்ப் பணிந்து விடுவதாகச் சொல்லப் போகிறாரோ என்று எண்ணினார். அவருடைய கோரிக்கையின்படி வாக்குமூலம் கொடுக்க அநுமதி தந்தார். காந்திஜியின் சகாக்களும் மற்றும் விசாரணையைக் கவனிப்பதற்காகக் கோர்ட்டில் கூடியிருந்த நூற்றுக் கணக்கான இந்தியர்களும் "காந்திஜி என்ன சொல்லப் போகிறாரோ?" என்று ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
காந்திஜி கொடுத்த வாக்குமூலத்தின் சாராம்சம் இது தான் :- "கறுப்புச் சட்டத்துக்கு இந்தியர்கள் உட்படக் கூடாது என்கிற இயக்கத்தை ஆரம்பித்தவனும் அதற்குத் தலைமை வகித்து இதுவரை நடத்தி வந்தவனும் நான். ஆகையால் சட்டத்தை மீறிய மற்றவர்களைக் காட்டிலும் எனக்கு அதிகமாகவும் கடுமையாகவும் தண்டனை கொடுக்கும்படி கோர்ட்டாரைக் கேட்டுக் கொள்கிறேன்."
இதைக் கேட்ட மாஜிஸ்ட்ரேட் திணறிப்போனார். காந்திஜியைத் தண்டிக்க அவருக்கு மனம் வரவில்லை. தண்டியாமலிருக்கச் சட்டம் இடந்தரவில்லை. எனினும் காந்திஜியின் கோரிக்கையை நிறைவேற்ற அவர் மறுத்து இரண்டு மாதம் வெறுங்காவல் தண்டனை அளித்தார். அவ்விதம் தீர்ப்பு அளிக்கப்பட்டவுடனே காந்திஜியைப் போலீசார் சூழ்ந்து சிறைச்சாலைக்குக் கொண்டுபோனார்கள்.
இவ்விதமாக, 1908-ம் வருஷம் ஜனவரி-10 உலக சரித்திரத்தில் ஒரு புதிய சகாப்தம் ஆரம்பமாயிற்று.
--------------
முதல் முறையாகச் சிறையில் அடைக்கப்பட்டவுடனே காந்திஜி சிந்தனையில் ஆழ்ந்தார். என்ன விதமான சிந்தனை என்பதைக் காந்திஜியே எழுதியிருக்கிறார் :
"வீடு, கோர்ட்டு, பொதுக்கூட்டம் எல்லாம் கனவிலே தோன்றுவதுபோல் என் மனத்தில் தோன்றி மறைந்தன. நான் இப்போது ஒரு கைதி. இரண்டு மாதம் சிறைத்தண்டனை பெற்றவன். இந்த இரண்டு மாதத்துக்குள் என்ன நடக்கும்? இரண்டு மாதமும் நான் சிறையிலேயே கழிக்க வேண்டி நேரிடுமா? ஜனங்கள் பொதுக்கூட்டத்தில் சபதம் செய்ததற்கு இணங்க நடந்து கொண்டால், வெகு சீக்கிரத்தில் சிறைகளை நிரப்பிவிடுவார்கள். அப்போது தண்டனையை முழுதும் அநுபவிக்க வேண்டியிராது. விரைவிலேயே விடுதலை கிடைக்கும்? ஆனால் ஜனங்கள் சும்மா இருந்து விட்டால்?......
இந்தச் சிறையில் இரண்டு மாத காலம் எப்படிக் கழிப்பது ? இரண்டு மாதம் இரண்டு யுகம்போலத் தோன்றும். இந்த எண்ணங்க ளெல்லாம் மின்னல் வேகத்தில் ஒரு நொடிப்பொழுதில் தோன்றிச் சென்றன. அடுத்த நிமிஷம், மேற்கண்ட விதமான எண்ணங்கள் என் மனத்தில் தோன்றியது குறித்து வெட்கம் அடைந் தேன். விடுதலையைப் பற்றி நான் ஏன் சிந்திக்க வேண்டும் ? ஜனங்களுக்கெல்லாம் நான் உபதேசம் செய்ததென்ன ? இப்போ து சிந்திப்பது என்ன ? சிறைச்சாலைகளை அரசாங்கத்தின் விருந்து விடுதிகளாகக் கருதவேண்டும் என்றும், கருப்புச் சட்டத்துக்கு உட்படுவதைக் காட்டிலும் சிறைவாசம் சொர்க்கலோகத்துக்கு இணையாகும் என்றும், கறுப்புச் சட் டத்தை எதிர்க்கச் சகல பரித்தியாகங்களும் செய்யச் சித்தமா யிருக்க வேண்டும் என்றும் பேசி வந்தேன். இப்போது ஏன் விடுதலையைப் பற்றியோ சிறைவாசத்தின் பலா பலன்களைப் பற்றியோ நான் கருத வேண்டும் ?- இந்த இரண்டாவது எண்ணத்தினால் என் மனம் தெளிவடைந்தது."
காந்திஜி இவ்விதமான சிந்தனைகளில் ஈடுபட்டிருக்கையில், வெளியே ஜோகானிஸ்பர்க் நகரில் ஏக அமர்க்களமா யிருந்தது. காந்திஜி சிறைப்பட்ட செய்தியை அறிந்ததும் இந்தியர்கள் பலர் மனக்கிளர்ச்சி அடைந்தார்கள். கையில் கறுப்புக் கொடிகளைப் பிடித்துக்கொண்டு அவர்கள் வீதிகளில் ஊர்வலமாகச் சென்றார்கள். வரவர ஊர்வலத்தில் கூட்டம் அதிகமாகிக் கொண்டு வந்தது. போலீஸார் தலையிட்டார்கள். ஊர்வலத்தைப் பலாத்காரமாகக் கலைத்தார்கள். ஊர்வலத்தில் சேர்ந்திருந்த பல இந்தியர்கள் போலீஸாரின் பிரம்படிக்கு உள்ளானார்கள்.
காந்திஜிக்குப் பிறகு அவருடைய சகாக்களையும் மாஜிஸ்ட் ரேட் தண்டித்துச் சிறைக்கு அனுப்பினார். அப்படித் தண்டனை அடைந்தவர்கள் அனைவரையும் காந்திஜி இருந்த கொட்டடிக்கே கொண்டுவந்து அடைத்தார்கள். ஒரே இடத்தில் அடைக்கப்பட்டதனால் எல்லாருக்கும் உற்சாகமாக இருந்தது. காந்திஜி சிறைக்கு வந்த பிறகு நடந்த சம்பவங்களைப் பின்னால் வந்தவர்கள் அவருக்குத் தெரியப்படுத்தினார்கள்.
ஆறு மணிக்குச் சிறைக் கொட்டடியின் கதவைப் பூட்டி விட்டார்கள். அது இரும்புக்கம்பிக் கதவு அல்ல. முழுதும் இரும்புத் தகட்டினால் அடைத்திருந்த கதவு. சுவரில் உச்சியில் ஒரு சிறு ஜன்னல் மட்டுந்தான் இருந் தது. மற்றப்படி அவர்களை ஒரு பெரிய இரும்புப் பெட்டி யில் போட்டுப் பூட்டி விட்டது போலத் தோன்றியது. ஆயினும் காந்திஜியாவது அவருடைய சகாக்களாவது மனந்தளரவில்லை. இதைப்போல் இன்னும் பல பயங்கரமான கஷ்டங்களுக்கும் அவர்கள் தங்கள் மனத்தைப் பக்குவப்படுத்திக் கொண்டிருந்தார்கள்.
முதன் முதலில் சத்தியாக்கிரஹக் கைதியான பண்டிதர் ராமசுந்தரம் என்பவருக்குச் சிறையில் சகல செளகரியங்களும் செய்து கொடுக்கப் பட்டன. அவர் முதல் கைதி; அதோடு தனிக் கைதி. ஆனால் காந்திஜியும் அவருடைய சகாக்களும் கூட்டமாக வந்தபடியால் சிறையில் அவர்களுக்கு எவ்வித வசதியும் அளிக்கப்படவில்லை.
தென்னாப்பிரிக்கா சிறைச்சாலைகளுக்குள்ளேயும் வெள்ளைக் கைதிகள் - கறுப்புக் கைதிகள் என்று இரு பிரிவுகள் இருந்தன. இதுவரை கறுப்புக் கைதிகள் என்றால் நீக்ரோக் கைதிகளாகவே இருந்தனர். இப்போது, இந்தியர்களும் நீக்ரோப் பகுதியில் சேர்க்கப் பட்டனர்.
சிறையில் உள்ள கஷ்டங்களுக்கு மேலே காந்திஜி அதிகப்படி கஷ்டங்களை தேடிக்கொண்டார். வெறுங்காவல் கைதிகள் தங்கள் சொந்த உடைகளை உடுத்திக்கொள்ளலாம் என்பது சிறைச்சாலை விதி. இந்தியக் கைதிகளில் வெறுங்காவல் கைதிகளும் இருந்தார்கள் ; கடுங்காவல் கைதிகளும் இருந்தார்கள். பின்னால் தண்டிக்கப் பட்டவர்கள் எல்லாரும் கடுங்காவல் தண்டனையே பெற்றார்கள். காந்திஜி கடுங்காவல் கைதிகளைப்போலச் சிறைச்சாலை உடையே தரிப்பேன் என்று வற்புறுத்தினார். அதன்படியே அவருக்குக் கடுங்காவல் உடை கொடுக்கப் பட்டது.
அடுத்த சில தினங்களில் மேலும் பல இந்திய சத்தியாக் கிரஹக் கைதிகள் சிறைக்கு வந்தார்கள். இவர்களில் பெரும் பாலோர் வீதி வியாபாரிகள். அதாவது துணி மூட்டையோ அல்லது வேறு சாமானோ தெருத்தெருவாய்க் கொண்டு போய் விற்கிறவர்கள். இவர்களிடம் போலீஸார் லைஸென்ஸ் காட் டும்படி கேட்டதும், இவர்கள் 'இல்லை' என்று பதில் சொன் னார்கள். உடனே இவர்களைப் போலீஸார் கைது செய்து கோர்ட்டில் நிறுத்தித் தண்டித்துச் சிறைக்கு அனுப்பினார்கள். இப்படியாக ஒரு வாரத்திற்குள் சத்தியாக்கிரஹக் கைதிகள் நூற்றெண்பது பேர் சிறைக்கு வந்து விட்டார்கள்.
சிறையில் கொடுத்த சாப்பாடு மிகவும் மோசமாயிருந்தது. சமைக்கும் விதம் அதைவிடக் கேவலமாயிருந்தது. உணவுத் திட்டத்தை அபிவிருத்தி செய்ய முயன்றும் முடியவில்லை. கடைசியில் "கொடுக்கிற சாமானைக் கொண்டு நாங்களே சமைத்துக் கொள்கிறோம்" என்று கேட்டார்கள். அந்த உரிமை அளிக்கப் பட்டது. தம்பி நாயுடு சமையல் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதற்குப் பிறகு சிறைச் சாப்பாடு கொஞ்சம் சுமாராயிற்று.
காந்திஜி சிறை புகுந்து இரண்டு வாரம் ஆன பிறகு, புதிதாகச் சிறைக்கு வந்தவர்கள் வெளியில் ஏதோ ராஜிப் பேச்சு நடை பெறுவதாகச் செய்தி கொண்டுவந்தார்கள். ராஜிப் பேச்சு ஆரம்பமாகியிருந்தது உண்மைதான். "டிரான்ஸ்வால் லீடர்" என்னும் பத்திரிகை ஆசிரியரான மிஸ்டர் அல்பர்ட் கார்ட்ரைட் என்பவர் மேற்படி ராஜிப் பேச்சுக்குக் காரண பூதரா யிருந்தார். மிஸ்டர் அல்பர்ட் கார்ட்ரைட் கெட்டிக் காரர் ; அத்துடன் விசால உள்ளம் படைத்தவர். ஏற்கெனவே காந்திஜியுடன் பழகி அவருடைய மேன்மைக் குணங்களை அறிந்திருந்தார். தம் பத்திரிகையில் இந்தியரின் கட்சியை ஓரளவு ஆதரித்தும் எழுதி வந்தார். காந்திஜி சிறை புகுந்த பிறகு மிஸ்டர் கார்ட்ரைட் தளபதி ஸ்மட்ஸைப் பார்க்கச் சென்றார். இந்தியத் தலைவர்களுடன் எப்படியாவது ராஜியாகப் போகவேண்டும் என்று வற்புறுத்தினார். தளபதி ஸ்மட்ஸ் அதற்கிணங்கியதோடு, "நீரே சமாதானத் தூதராகச் சென்று இந்தியத் தலைவர்களுடன் பேசும். அவர்கள் ராஜிக்கு வருகிறார்களா என்று கேட்டுப் பாரும்" என்றார்.
மிஸ்டர் கார்ட்ரைட் முதலில் வெளியிலிருந்த தலைவர்களைப் போய்ப் பார்த்தார். அவர்கள், "எங்களைக் கேட்டுப் பயனில்லை. ராஜி பேசும் உரிமை உள்ளவர் காந்திஜிதான். அவர் எந்த ஏற்பாட்டை ஒப்புக்கொண்டாலும் அதை நாங்களும் ஒப்புக் கொள்ளத் தயார்!" என்றார்கள்.
அதன்மேல் மிஸ்டர் கார்ட்ரைட் சிறைக்குள் சென்று காந்திஜியைப் பார்த்துப் பேசத் தீர்மானித்தார். அதற்கு முன்னால் தளபதி ஸ்மட்ஸுடன் கலந்து ஆலோசித்துச் சில ராஜி நிபந்தனைகளைத் தயாரித்துக் கொண்டார். ராஜி நிபந்தனைகளில் முக்கியமான அம்சம் என்னவென்றால் : இந்தியர்கள் தாங்களாகவே வலுவில் சென்று தங்களுடைய பெயர் முதலிய விவரங்களைப் பதிவு செய்து கொள்ள வேண்டியது. அப்படிச் செய்ய சம்மதித்தால் கறுப்புச் சட்டத்தை டிரான்ஸ்வால் சர்க்கார் ரத்து செய்துவிடுவார்கள்.
மிஸ்டர் கார்ட்ரைட் சிறைக்குள் சென்று இந்த ராஜி நிபந்தனையைக் காந்திஜியிடம் தெரிவித்தார். அதை இந்தியர்கள் ஒப்புக்கொள்ள வேண்டும் என்றும் வற்புறுத்தினார். "கறுப்புச் சட்டம் இந்திய சமூகத்தை இழிவு செய்கிறது என்பது தானே உங்களுடைய ஆட்சேபம் ? சட்டத்தை எடுத்துவிட்டால் அந்த ஆட்சேபம் போய்விடுகிறதல்லவா? இந்தியர்கள் புதிதாக டிரான்ஸ்வாலுக்குள் வருவதைக் கட்டுப்படுத்தவே டிரான்ஸ்வால் சர்க்கார் விரும்புகிறார்கள். அதற்காக ஏற்கெனவேயுள்ள இந்தியர்களைப்பற்றி எல்லா விவரங்களும் ஊர்ஜிதமாகத் தெரிந்திருக்கவேண்டும் என்று எண்ணுகிறார்கள். நீங்களாகவே இந்தக் காரியத்தைச் செய்துவிடுவதில் உங்களுக்கு என்ன ஆட்சேபம் ? " என்று வாதம் செய்தார்.
காந்திஜி இதை ஒப்புக்கொண்டார். ஆனால் ராஜி நிபந்தனைகளின் வாசகத்தில் சில திருத்தங்களைச் செய்யவேண்டும் என்று சொன்னார். மிஸ்டர் கார்ட்ரைட் முதலில், "அதெல்லாம் முடியாது ; இதில் திருத்தம் எதையும் ஸ்மட்ஸ் ஒப்புக் கொள்ள மாட்டார்" என்றார். அதற்குக் காந்திஜி, 'ராஜி நிபந்தனை வாசகத்தில் சந்தேகத்துக்கு இடம் இருக்கக்கூடா தல்லவா ? கொஞ்சங்கூட மாற்றக்கூடாது என்றால், அதற்கு ராஜி என்று என்ன பெயர்?" என்று கேட்டார். கடைசியாக, “சரி ; உங்கள் விருப்பத்தின்படியே திருத்திக் கையெழுத்திட்டுக் கொடுங்கள். ஸ்மட்ஸிடம் போய்ப் பார்க்கிறேன்" என்றார் மிஸ்டர் கார்ட்ரைட்.
தம்பி! இந்தமாதிரி ராஜி நிபந்தனையைக் காந்திஜி ஒப்புக் கொண்டதுபற்றி உனக்கு ஆச்சரியம் ஏற்படலாம். "சட்டப்படி பதிவு செய்துகொண்டால் என்ன ? சட்டமில்லாமல் பதிவு செய்து கொண்டால் என்ன ? காரியாம்சத்தில் இரண்டும் ஒன்றுதானே ?" என்று உனக்குத் தோன்றலாம்.
உண்மையில், இரண்டுக்கும் மிக்க வித்தியாசம் உண்டு, நாமே சுயமாகச் செய்யக்கூடிய காரியமா யிருந்தபோதிலும், பிறர் அதைச் செய்யும்படி நம்மைக் கட்டாயப் படுத்துவதற்கு உட்பட்டால் அது நம்முடைய சுயமதிப்புக்குப் பங்கமாகிறது. அடுத்த வீட்டுக்காரனுடைய சௌகரியத்தை முன்னிட்டு நம்மை நாமே சில நிர்ப்பந்தங்களுக்கு உட்படுத்திக்கொள்ளச் சம்மதிக்கலாம். ஆனால் அடுத்த வீட்டுக்காரன் நம்மைப் பல வந்தப் படுத்தினால் அதற்கு உட்படுவ தற்கு நாம் விரும்ப மாட்டோமல்லவா ?
இன்னொரு விஷயத்தையும் நீ நன்கு தெரிந்துகொள்ள வேண்டும். காந்திஜியின் அஹிம்சைப் போர் முறைக்கும் மற்றவர்களின் பலாத்காரப் போர் முறைக்கும் ராஜிப் பேச்சு விஷயத்தில் மிக்க வித்தியாசம் உண்டு. பலாத்கார முறையில் எதிரியைத் தோற்கடித்துச் சரணாகதி அடையும்படி செய்கிறார்கள் ; அல்ல து அடியோடு அழித்துவிடுகிறார்கள். அஹிம்சைப் போர் முறையில் அப்படியல்ல. எதிரியின் மனத்தை மாற்றுவதுதான் அஹிம்சை முறையின் முக்கிய நோக்கம். எதிரியின் மனம் சிறிதளவு மாறியிருப்பதாகத் தெரிந்தாலும் அஹிம்சை வீரன் திருப்தியடைகிறான் ; ராஜி பேசுவதற்குத் தயாராகிறான் ; எதிரியின் மனம் வேதனையடையாத வகையில், அவனுடைய சரணாகதியை எதிர்பாராமல், விட்டுக்கொடுத்து ராஜி செய்துகொள்ள எப்போதும் சித்தமாயிருக்கிறான். இதனால் எதிரியின் உள்ளம் மேலும் மாறுதலடையும் என்று நம்புகிறான்.
எதிரியை அடியோடு அழித்து வெற்றியடைவது பலாத் காரப் போரின் நோக்கம். எதிரியைச் சிநேகிதனாக்கிக்கொண்டு வெற்றியடைவது அஹிம்சை முறையின் நோக்கம். எனவே, அஹிம்சை முறையைப் பின்பற்றுவோர் ஒவ்வொரு கட்டத்திலும் எதிரியுடன் ராஜி செய்து கொள்வதற்குச் சித்தமாயிருக்க வேண்டும். சட்டத்தை எடுத்துவிடுகிறோம் என்று சொல்லும் அளவுக்குத் தளபதி ஸ்மட்ஸ் இறங்கி வந்தது அஹிம்சையின் வெற்றி என்று காந்திஜி கருதினார். சட்டத்தின் கட்டாயம் இல்லாமல் நாமாகச் சில கட்டுப்பாடுகளுக்கு உட்படுவதில் தம் மதிப்புக்குப் பங்கம் ஒன்றும் இல்லையென்றும் கருதினார், ஆகையினாலேதான் மகாத்மா ராஜிப் பேச்சுக்கு உடன்பட்டார், மிஸ்டர் கார்ட்ரைட் கொண்டு வந்திருந்த நகல் ராஜி நிபந்தனைகளில் தாம் அவசியமெனக் கருதிய திருத்தங்களைச் செய்து கையொப்பமிட்டார். மிஸ்டர் குவின், ஸ்ரீ தம்பி நாயுடு இவர்களும் கையெழுத்திட்டுக் கொடுத்தார்கள்.
மிஸ்டர் கார்ட்ரைட் வந்துபோன இரண்டு நாளைக்கெல் லாம் ஜோகானிஸ்பர்க் போலீஸ் தலைவர் மிஸ்டர் வெர்னன் வந்து காந்திஜியைச் சிறையிலிருந்து விடுவித்துப் பிரிடோரியாவுக்கு அழைத்துப் போனார். அங்கே காந்திஜி தளபதி ஸ்மட்ஸைச் சந்தித்தார். ஸ்மட்ஸ் மிக்க பவ்யமாகப் பேசினார். "நீங்கள் சிறைக்குப் போன பிறகும் இந்திய சமூகம் இவ்வளவு உறுதியுடனிருந்ததை நான் பாராட்டுகிறேன். இந்திய சமூகத்தின் பேரில் எனக்கு வெறுப்பு என்பதே கிடையாது. ஆனால் இங்கேயுள்ள ஐரோப்பியர்கள் பெரும்பாலோரின் அபிப்பிராயத்தை யொட்டி நான் என் கடமையைச் செய்யவேண்டி யிருக்கிறது. நகல் நிபந்தனைகளில் நீங்கள் செய்துள்ள திருத்தங்களை ஒப்புக்கொள்கிறேன். உங்களில் பலர் சுயமாகப் பதிவு செய்துகொண்டதாகத் தெரிந்ததும் சட்டத்தை ரத்து செய்வதாக உறுதி கூறுகிறேன். இனிமேல் இந்த மாதிரி சங்க டமே ஏற்படக்கூடாது என்பது என் விருப்பம் ! இனி நீங்கள் போகலாம்!" என்றார் தளபதி ஸ்மட்ஸ்.
"நான் எங்கே போகட்டும் ? மற்றக் கைதிகளின் விஷயம் என்ன ?" என்று காந்தி மகாத்மா கேட்டார்.
"நீங்கள் இந்த நிமிஷத்திலிருந்து சுயேச்சை யடைந்துவிட் டீர்கள். இனி எங்கே வேண்டுமானாலும் நீங்கள் போகலாம். மற்றக் கைதிகள் எல்லாரையும் நாளைக் காலையில் விடுதலை செய்துவிடுவார்கள்!" என்றார் தளபதி ஸ்மட்ஸ்.
அப்போது மாலை ஏழு மணி இவ்வளவு லகுவாகத் தமக்கு விடுதலை கிடைத்துவிடும் என்று காந்திஜி எதிர்பார்க்கவேயில்லை - அவர் கையிலோ காலணா இல்லை. ஜோகானிஸ்பர்க்குக்குப் போக ரயில் சத்தம் தளபதி ஸ்மட்ஸின் காரியதரிசியிடமிருந்து காந்திஜி பெற்றுக்கொண்டார். பிரிடோரியாவிலிருந்து ஜோகானிஸ்பர்க் போக ஒரே ஒரு வண்டி தான் பாக்கியிருந்தது. காந்தி விரைவாகச் சென்று அந்த வண்டியைப் பிடித்து ஏறினார்.
-----------
தம்பி ! இந்த வருஷம் ஜனவரி மாதம் 30ந் தேதி டில்லியில் நடந்த மகா பாதகச் செயலின் விவரங்களை நீ மறந்திருக்க மாட் டாய். கொலைபாதகன் ஒருவன் காந்தி மகாத்மாவுக்கு அஞ்சலி செய்ய வந்தவனைப் போல நடித்து அவர்மீது நாலு குண்டுகளைச் சுட்டான். முதல் குண்டு பட்டதும் மகாத்மா "ஹே ராம்!" என்று சொல்லிக்கொண்டு தரையில் விழுந்தார். இதெல்லாம் உனக்கு நினைவிருக்கிறதல்லவா ?
தென்னாப்பிரிக்காவில் 1908-ம் வருஷத்தில் ஒருமுறை காந்தி மகாத்மா "ஹே ராம் !" என்று சொல்லிக்கொண்டு தரையில் விழும்படி நேர்ந்தது. முரட்டுப் பட்டாணியன் ஒருவன் அவரைத் தடியினால் மண்டையில் அடித்ததினால் அவ்விதம் அவர் விழும்படி ஆயிற்று. உலகத்தின் பாக்கிய வசத்தினால் அம்முறை காந்தி மகானின் உயிருக்கு ஆபத்து நேரவில்லை. மூர்ச்சையடையும்படியாக மட்டும் ஏற்பட்டது. அந்த அற்புத சம்பவத்தைப்பற்றி இப்போது நீ தெரிந்துகொள்ளப்போகிறாய்,
பிரிடோரியாவில் ரயில் ஏறிய காந்திஜி இரவு ஒன்பது மணிக்கு ஜோஹானிஸ்பர்க் வந்து சேர்ந்தார். சத்தியாக்கிரஹ சபையின் தலைவரான சேத் எஸ்ஸப் மியான் என்பவரின் வீட் டுக்கு நேரே போனார். ராஜிப்பேச்சைப்பற்றி எஸ்ஸப் மியானும் மற்ற இந்திய நண்பர்களும் அறிந்திருந்த போதிலும் இவ்வளவு விரைவில் காந்திஜி விடுதலையடைந்து போலீஸ் பாராவும் சிறை வார்டரும் இல்லாமல் வந்து சேர்வார் என்று நினைக்கவில்லை. எல்லாரும் அதிசயமும் மகிழ்ச்சியும் அடைந்தார்கள். அன்று இரவு பன்னிரண்டு மணிக்குப் பொதுக் கூட்டம் கூட்டுவ தென்று தீர்மானிக்கப்பட்டது. இதற்கிடையில் இந்தியப் பிரமுகர்களும் சிநேகிதர்களும் வந்து சேர்ந்தார்கள்.
அவர்களுக்கு ராஜி நிபந்தனைகளைப்பற்றிக் காந்திஜி விவரமாக எடுத்துக் கூறினார். பெரும்பாலோர் திருப்தி அடைந்தார்கள். இரண்டொருவர் ராஜியை எதிர்த்துப் பேசித் தங்கள் சந்தேகங்களை வெளியிட்டார்கள். "சட்டத்தின்படி பதிவு செய்து கொள்வதற்கும் நாமாகப் பதிவு செய்து கொள்வதற்கும் அப்படி என்ன வித்தியாசம் ? மேலும் கறுப்புச் சட்டத்தை எடுத்த பிறகு நாமாகப் பதிவு செய்துகொண்டாலும் அர்த்தம் உண்டு. நாம் பதிவு செய்துகொண்ட பிறகு கறுப்புச் சட்டம் ரத்து செய்யப்படும் என்பது என்ன நிச்சயம் ? ஸ்மட்ஸ் வாக் குறுதி பிறழ்ந்துவிட்டால் நாம் என்ன செய்யமுடியும் ? " என்று, கேட்டார்கள். அவர்களுக்குச் சந்தேகம் தீர்ந்து ராஜியை ஒப்புக் கொள்ளுமாறு காந்திஜி பதில் சொன்னார். அதன் விவரம் பின் வருமாறு:
"இத்தகைய ஆட்சேபத்தைக் கிளப்புவது நியாயந்தான். கறுப்புச் சட்டத்தை ரத்து செய்த பிறகு நாம் வலியச் சென்று பதிவு செய்து கொள்வது என்று ஏற்பாடாகியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனால் ராஜி என்று ஏற்படும் போது இரண்டு கட்சியாரும் கொஞ்சம் விட்டுக் கொடுத்தே தீரவேண்டும். கொள்கைப் பற்றிய விஷயங்களில் விட்டுக் கொடுக்கக் கூடாதே தவிர மற்ற அம்சங்களில் விட்டுக் கொடுத்தால் தான் அது ராஜியாகும். 'கறுப்புச் சட்டத்துக்கு உட்படக் கூடாது' என்பது நம்முடைய அடிப்படையான கொள்கை. வேறு விதத்தில் ஆட்சேபமில்லாத காரியங்களைக் கூடச் சட்டத்தின் பலவந்தத்துக்காக நாம் செய்யத் தயாரா யில்லை. சர்க்காரின் அடிப்படையான கொள்கையோ, 'புதிய இந்தியர்கள் சட்ட விரோதமாக டிரான்ஸ்வாலுக்குள் நுழையக் கூடாது ; இதைத் தடுக்க வேண்டுமானால் ஏற்கெனவே யுள்ள இந்தியர்கள் சர்க்காரிடம் சர்டிபிகேட் வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும்' என்பது. ஒருவருடைய சர்டிபிகேட்டை இன்னொருவர் சட்ட விரோதமாக உபயோகிக்க இடமில்லாதபடி சர்டிபிகேட்டில் தகுந்த அடையாளங்கள் இருக்க வேண்டும் என்றும் அவர்கள் கேட்கிறார்கள். சர்க்காருடைய இந்தக் கொள்கையை நாம் ஒப்புக் கொண்டு அதற்கு அநுகுணமாக நடந்து வருவதாகச் சொல்லி யிருக்கிறோம். சட்டம் இயற்றுவதைத்தான் ஆட்சேபித்திருக்கிறோம். ஓர் உதாரணம் சொல்கிறேன். யாராவது ஒருவரை நாம் சந்தித்தவுடனே 'நமஸ்காரம்' என்று சொல்லி வணங்குகிறோம். இது நாமாகச் செய்வது. ஆனால், என்னைக் கண்டதும் நீ வணங்கி நமஸ்காரம் செய்யவேண்டும் என்று பலவந்தம் செய்தால், அதற்கு இணங்க நாம் உட்படுவோமா ? மாட்டோம்' என்று தான் சொல்லுவோம். இதுபோலவே கறுப்புச் சட்டத்துக்கு உட்பட மறுத்ததற்கும் இப்போது நாமாகப் பதிவு செய்து கொள்வதற்கும் வித்தியாசம் உண்டு. தளபதி ஸ்மட்ஸ் வாக்குறுதி பிறழ்ந்து விட்டால் என்ன செய்வது என்பது இன்னொரு கேள்வி. தன்னுடைய கட்சியின் நியாயத்தில் நம்பிக்கையுள்ள சத்தியாக்கிரஹிக்கு இத்தகைய சந்தேகம் உதவாது. எதிராளி சத்தியத்துக்குக் கட்டுப்பட்டு நடப்பான் என்றே நாம் நம்ப வேண்டும். அப்படி எதிராளி வாக்குறுதி மீறும் பட்சத்தில் நம்மிடமுள்ள சாத்தியாக்கிரஹ ஆயுதம் எங்கே போகிறது ? மறுபடியும் அதே ஆயுதத்தைக் கையாண்டு வெற்றி பெறுவோம்."
காந்திஜி இவ்வாறு விளக்கிச் சொன்ன பிற்பாடு முதலில் சந்தேகப் பட்டவர்களும் ராஜியை ஒப்புக் கொண்டார்கள்.
ஆனால் இரவு பன்னிரண்டு மணிக்கு நடந்த பொதுக் கூட்டத்தில் இவ்வளவு சுலபமாகக் காரியம் நடக்கவில்லை. சுமார் ஆயிரம் இந்தியர்கள் பொதுக் கூட்டத்துக்கு வந்திருந்தார்கள். இவர்களில் பட்டாணி முஸ்லிம்கள் சிலரும் இருந்தார்கள். நண்பர்களிடம் கூறிய விஷயத்தை யெல்லாம் பொதுக் கூட்டத்திலும் காந்திஜி எடுத்துக் கூறினார். அவருடைய பேச்சு முடிந்ததும் கூட்டத்தில் ஒரு பட்டாணி முஸ்லிம் எழுந்து நின்றார்.
"உங்களுடைய ராஜி ஒப்பந்தப்படி பதிவு செய்து கொள்வோர் பத்து விரல் அடையாளம் கொடுக்க வேண்டுமா? வேண்டாமா ?" என்று கேட்டார்,
"கொடுக்க வேண்டும் என்பது என்னுடைய சொந்த அபிப்பிராயம். ஆனால் அப்படிக் கொடுப்பது தன்மதிப்புக்கு விரோதம் என்று எண்ணுகிறவர்கள் கொடுக்க வேண்டிய தில்லை" என்று காந்திஜி பதில் கூறினார்.
"நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் ? பத்து விரல் அடையாளம் கொடுப்பீர்களா? மாட்டீர்களா ? " என்று அந்தப் பட்டாணியர் மீண்டும் கேட்டார்.
"நான் கொடுக்கத்தான் போகிறேன்" என்றார் காந்திஜி.
"அது எப்படி? பத்து விரல் அடையாளம் கொடுப்பது. அவமானம் என்றும், குற்றவாளிகளிடந்தான் அப்படி விரல் அடையாளம் வாங்குவது வழக்கம் என்றும் நீங்கள் தானே சொன்னீர்கள் ? இப்போது நீங்களே பத்துவிரல் அடையாளம் கொடுப்பது எப்படிச் சரியாகும்?" என்று கேட்டார் பட்டாணியர்.
இதற்குப் பதிலாகக் காந்திஜி, கட்டாயத்தின் பேரில் ஒன்றைச் செய்வதற்கும் சொந்தமாகச் செய்வதற்கும் உள்ள வித்தியாசத்தை விளக்கிக் கூறினார். ஆனால் அவர் கூறியது அந்தப் பட்டாணியருடைய காதில் ஏறவேயில்லை.
"நீங்கள் சொல்வது ஒன்றும் சரியில்லை. தளபதி ஸ்மட்ஸிடம் பதினையாயிரம் பவுன் லஞ்சம் வாங்கிக் கொண்டு இந்திய சமூகத்தை நீங்கள் காட்டிக் கொடுத்து விட்டதாகக் கேள்விப் படுகிறோம். இதைப் பற்றி எங்களுக்குக் கவலையில்லை. ஆனால் நாங்கள் ஒருநாளும் விரல் அடையாளம் கொடுக்கப் போவதில்லை. யார் ஒருவன் முதன் முதலில் விரல் அடையாளம் கொடுப்பதற்குப் போகிறானோ அவனை நான் கொன்று போட்டு விடப் போகிறேன். அல்லாமீது ஆணையாகச் சொல்கிறேன். ஜாக்கிரதை! "
பட்டாணியர் இவ்விதம் கூறியதைக் கேட்டதும் கூட்டத்திலிருந்தவர்கள் கலங்கிப் போனார்கள். ஆனால் காந்திஜி மட்டும் எவ்விதக் கலக்கமும் அடையவில்லை. அவர் அமைதியாகக் கூறியதாவது:
“பட்டாணிய நண்பர் ஆத்திரங் கொண்டு பேசினார். அவருடைய ஆத்திரத்துக்குக் காரண மிருக்கிறது. ஆனால் பணத்துக்காக இந்திய சமூகத்தை நான் காட்டிக் கொடுத்து விட்டேன் என்பதை யாரும் நம்ப மாட்டார்கள் என்று நம்புகிறேன். பத்து விரல் அடையாளம் கொடுப்பது சுய மதிப்புக்குப் பங்கம் என்று கருதுகிறவர்கள் அவ்விதம் கொடுக்க வேண்டியதில்லை என்று முன்னமே சொன்னேன். அவர்கள் விஷயத்தில் பத்து விரல் அடையாளம் இல்லாமலே சர்டிபிகேட் வாங்கிக் கொடுக்கும் பொறுப்பு என்னுடையது. ஆனால் விரல் அடையாளம் கொடுப்பவரைக் கொன்றுவிடுவதாக அவர் பயமுறுத்தியது பெருந்தவறு. அதிலும் ஆண்டவன் பெயரைச் சொல்லி யாரையும் கொல்லப் போவதாகச் சபதம் செய்யக் கூடாது. ஏதோ ஆத்திரப்பட்டு அவ்விதம் அவர் சொன்னார் என்றே கருதுகிறேன். அவர் தாம் பயமுறுத்தியபடி காரியத்தில் செய்வதா யிருந்தாலும் நான் என்னுடைய கொள்கையிலிருந்து பிறழ முடியாது. இதுவரை இயக்கத்தை நடத்தி வந்தவனாகிய நான் தான் இப்போது முதலில் சென்று விரல் அடையாளம் கொடுக்க வேண்டும். அப்படிக் கொடுக்கத்தான் போகிறேன். உலகத்தில் பிறந்தவர்கள் எல்லாருக்கும் மரணம் உண்டு. வியாதியினாலோ முதுமையினாலோ இறப்பதைக் காட்டிலும் சகோதரன் ஒருவனுடைய கையினால் கொல்லப்பட்டு இறப்பது மேலானது. அதற்காக வருத்தப்பட வேண்டியதில்லை; அப்படி என்னைக் கொல்லவரும் சகோதரனிடத்திலும் கோபமோ துவேஷமோ இல்லாமல் நான் இறந்தேனானால், அதுவே நான் பெறக் கூடிய பெரும் பேறாகும். அதுதான் என் ஆத்மாவுக்கு நற்கதி அளிக்கும். என்னைக் கொல்லும் பொருட்டுத் தாக்கிய சகோதரனும் பிற்காலத்தில் கட்டாயம் நான் குற்றமற்றவன் என்பதை உணர்ந்து கொள்வான்."
தம்பி! இவ்விதம் காந்திஜி தென்னாப்பிரிக்காவில் ஜோகா னிஸ்பர்க்கில் 1908-ம் வருஷம் ஜனவரி 30௳ இரவு கூறினார். அப்படிக் கூறிய விவரத்தை அவரே 1924-ம் வருஷம் ஏரவாடா சிறையில் எழுதிய "தென்னாப்பிரிக்கா சத்தியாக்கிரஹம்" என்னும் நூலில் எழுதியிருக்கிறார்.
காந்தி மகாத்மாவின் வாக்கு நினைக்கவும் பயங்கரமா யிருக் கும் முறையில் நாற்பது வருஷத்துக்குப் பிறகு பலித்துவிட்டது ! அவருடைய மனோரதம் நிறைவேறிவிட்டது. சரியாக நாற்பது வருஷத்துக்குப் பிறகு 1948-ம் வருஷம் ஜனவரி 30௳ மாலை காந்தி மகான் அவருடைய சகோதரன் ' ஒருவனுடைய கையினால் இறக்கும் பெரும் பாக்கியத்தை அடைந்தார். 'சகோதரன் ' என்று குறிப்பிடுவதற்கு எனக்குக் கை கூசுகிறது. 'சண்டாளப் பாதகன்' என்று எழுதத் தோன்றுகிறது. ஆனால் காந்தி மகாத்மாவின் வாக்கின்படி அந்தப் பாதகனும் தன்னுடைய தவறை உணர்ந்து வருந்துவானா ? ஆண்டவனுக்குத் தான் தெரியும்!
பிறகு நிகழ்ந்ததைச் சொல்லுவதற்கு முன்னால் அந்தப் பட்டாணியன் அவ்விதம் ஆத்திரங்கொண்டு பேசியதின் காரணத்தை உனக்குக் கூறவேண்டும். டிரான்ஸ்வாலில் அப்போது சுமார் 50 பட்டாணியர்கள் இருந்தார்கள். பட்டாணியர்களின் இயல்பைப் பற்றிக் கொஞ்சம் உனக்குத் தெரியுமல்லவா? இந்தியாவின் வடமேற்கு எல்லையில் வசிக்கும் சாதியார் பட்டாணியர். முரட்டுத்தனத்துக்கும் பலாத்காரச் செயல்களுக்கும் பெயர் போனவர்கள். கொல்லுவதும் கொலையுண்பதும் அவர்களுக்குச் சர்வ சாதாரணம். இரத்தம் என்பது அவர்களுக்குத் தண்ணீர் பட்டபாடு. அதிக முன்கோபம் உடையவர்கள். அடிக்கடி தங்களுக்குள்ளேயே சண்டை போட்டுக் கொள்வார்கள். சண்டை என்றால் அநேகமாகக் கொலையிலே தான் முடியும்.
'எல்லைப்புற காந்தி' என்று பெயர் பெற்ற கான் அப்துல் கபூர்கான் ஒரு பட்டாணியர் தான். தம்முடைய சாதியாரை முரட்டுத்தனத்தையும் பலாத்காரத்தையும் விட்டு அஹிம்சா வாதிகளாக்க அவர் எவ்வளவோ பாடுபட்டார். சிலகாலம் ஏதோ பலித்திருப்பதாகத் தோன்றியது. ஆனால் நிரந்தரமாக நிற்க வில்லை. காஷ்மீரில் கொள்ளை யடிக்கலாம் என்று கேள்விப் பட்டதும் எல்லைப்புறப் பட்டாணியர் அந்த அழகிய தேசத்தில் புகுந்து அட்டூழியங்கள் செய்ய ஆரம்பித்து விட்டார்கள். 'எல்லைப்புற காந்தி' யாகிய கான் அப்துல் கபூர்கானும் அவருடைய சகோதரரும் சிறையிலே பல்லாண்டு இருந்தனர்.
இதனால் பட்டாணியர்களிடம் நல்ல குணங்களே இல்லை யென்று நினைத்துவிடக் கூடாது. எவ்வளவோ நல்ல குணங்கள் அவர்களிடம் இருக்கின்றன. ஆனால் முரட்டுத்தனமும் பலாத்காரப் பற்றும் அவர்களிடமுள்ள பல நல்ல குணங்களை மறைத்து வருகின்றன.
அதோடு சூது வாது அதிகம் இல்லாத சாதியாராகையால் அவர்களை ஏமாற்றுவது மிகவும் சுலபம். தென்னாப்பிரிக்காவிலிருந்த பட்டாணியர்கள் அந்த மாதிரிதான் ஏமாற்றப் பட்டிருந்தார்கள்.
அவர்களை ஏமாற்றி காந்திஜியின் மேல் குரோதம் மூளும் படி செய்தவர்கள் யார் என்று இப்போது பார்க்கலாம். சில இந்தியர்கள் அநுமதிச் சீட்டு இல்லாமல் சட்டத்துக்குப் புறம்பாக டிரான்ஸ்வாலுக்குள் நுழைந்திருந்தார்கள்.
இவ்விதம் அநுமதிச் சீட்டு இல்லாமலோ பொய் அநுமதிச் சீட்டுடனோ இந்தியர்களை டிரான்ஸ்வாலுக்குள் கொண்டு வருவதற்காகவே ஒரு கோஷ்டி வேலை செய்து கொண்டிருந்தது. இந்த வேலையின் மூலம் மேற்படி கோஷ்டி லாபம் சம்பாதித்துக் கொண்டிருந்தது. இந்தக் கோஷ்டியாருக்குச் சத்தியத்திலோ அஹிம்சையிலோ நம்பிக்கை கிடையாது. காந்திஜி ஆரம்பித்த சத்தியாக்கிரக இயக்கத்தைப் பயன்படுத்திக் கொண்டு தங்களுடைய முறை தவறிய காரியங்களைச் செய்து கொண்டு போகலாம் என்று எண்ணி யிருந்தார்கள். இயக்கம் நடந்து கொண்டிருக்கும் வரையில் யாரும் எந்த விதமான அநுமதிச் சீட்டும் காட்ட வேண்டியதில்லை யல்லவா ? ஆகையால் இயக்கம் நடக்கும் வரையில் இவர்களுக்குச் சௌகரியம் ; இயக்கம் நின்றுவிட்டால் இவர்கள் தங்கள் தொழிலை நடத்த முடியாது. இந்தக் கோஷ்டியார் தான் "காந்திஜி ஸ்மட்ஸிடம் லஞ்சம் வாங்கிக் கொண்டார் " என்ற கதையைக் கட்டி விட்டு, பட்டாணியருக்கும் தூபம் போட்டு விட்டிருந்தார்கள்.
பொதுக் கூட்டத்தில் பட்டாணியரின் கேள்விகளையும் காந்திஜியின் பதில்களையும் ஜனங்கள் பொறுமையுடன் கேட்டுக் கொண்டிருந்தார்கள். பிறகு பொதுக் கூட்டத்தின் தலைவரும் ராஜி ஏற்பாட்டை ஆதரித்துத் தமது அபிப்பிராயத்தைச் சொல்லிவிட்டு, கூட்டத்தின் கருத்தைக் கேட்டார். கூட்டத்திலிருந்த சுமார் ஆயிரம் இந்தியர்களில் பட்டாணியர் இரண்டு பேரைத் தவிர மற்றவர்கள் எல்லாரும் ராஜி ஏற்பாட்டை ஒப்புக் கொண்டு கையைத் தூக்கித் தங்கள் மனப்பூர்வமான சம்மதத்தைத் தெரிவித்தார்கள்.
இரவு மூன்று மணிக்குக் காந்திஜி வீடு போய்ச் சேர்ந்தார். அப்புறமும் தூக்கம் வரவில்லை. மறுநாள் உதயத்தில் மற்ற சத்தியாக்கிரஹக் கைதிகளை வரவேற்பதற்காகச் சிறைச்சாலை வாசலில் அவர் போய்க் காத்திருக்க வேண்டுமல்லவா ?
சிறைச்சாலைத் தலைவருக்கு முதல் நாள் இரவே உத்தரவு வந்து விட்டது. காலை ஏழு மணிக்குக் காந்திஜி சிறைவாச லுக்கு வந்து சேர்ந்ததும் சிறைக்குள்ளிருந்த சத்தியாக்கிரகக் கைதிகள் வெளியே வர ஆரம்பித்தனர். ஒரு மணி நேரத்துக்குள் எல்லோரும் விடுதலை செய்யப் பட்டார்கள். அப்புறம் இரண்டுநாள், விடுதலையடைந்த சத்தியாக்கிரகிகளுக்கு வரவேற்பும் விருந்தும் கொண்டாட்டமுமாக இருந்தது.
ராஜி ஏற்பாட்டின் ஷரத்துக்கள் இந்தியர்களுக்கு நன்றாக எடுத்துச் சொல்லப்பட்டன. ஆயினும் ஏற்கெனவே அதிருப்தி யடைந்தவர்களைத் திருப்தி செய்ய முடியவில்லை. அவர்கள் தங்கள் துவேஷப் பிரசாரத்தை விடாமல் செய்து வந்தார்கள். பொதுவாகப் பெரும்பாலான இந்தியர்கள் விஷயத்தில் அவர்களுடைய பிரசாரம் பலன் தரவில்லை. ஆனால் பட்டாணியர்களின் ஆத்திரம் மட்டும் வளர்ந்து கொண்டு வந்தது.
இந்தியர்கள் தாங்களாகவே சென்று பதிவு செய்வதற்குரிய பாரங்களை சர்க்கார் அதிகாரிகள் இந்தியத் தலைவர்களைக் கலந்து கொண்டு தயாரித்தார்கள்.
பிப்ரவரி 10௳ இந்திய சமூகத்தின் தலைவர்கள் முதன் முதலாகச் சென்று பதிவு செய்து கொள்ளவேண்டும் என்று தீர்மானமாயிற்று. தலைவர்கள் வழிகாட்டினால் தான் மற்றவர்கள் சங்கோசமில்லாமல் சென்று பதிவு செய்து கொள்ள முடியும். அதோடு சர்க்கார் அதிகாரிகள் பதிவு செய்து கொள்ள வருகிறவர்களை மரியாதையாக நடத்துகிறார்களா என்று கவனித்துக் கொள்ளுதலும் சாத்தியமாகும்.
பிப்ரவரி 10 காலையில் காந்திஜி வீட்டை விட்டுக் கிளம்பித் தம் காரியாலயத்துக்குச் சென்றார். அவருடைய காரியாலயத்திலேயே தான் சத்தியாக்கிரஹ காரியாலயமும் இருந்தது. காரியாலயத்தின் வாசலில் மீர் ஆலம் என்னும் பட்டாணியரும் அவருடைய தோழர்கள் சிலரும் நின்று கொண்டிருந்தார்கள். மீர் ஆலம் ஏற்கெனவே காந்திஜியிடம் தொழில் முறையில் ஆலோசனை கேட்கப் பலதடவை வந்திருக்கும் கட்சிக்காரர். ஆறு அடி உயரமும் திடகாத்திர தேகமும் படைத்தவர். காந்திஜியைச் சந்தித்தவுடனே சலாம் செய்து முகமன் கூறுவது அவருடைய வழக்கம். ஆனால் இன்றைக்கு அவர் சலாம் செய்யவில்லை. அவருடைய முகத்தில் வழக்கமான புன்னகையும் இல்லை. காந்திஜி "என்ன சேதி ? செளக்யமா?" என்று கேட்டதற்கு அவர் சரியாய் பதில் சொல்லவும் இல்லை. அவருடைய கண்களில் கோபம் கொதித்ததைக் காந்திஜி கவனித்துக் கொண்டார். ஏதோ ஒரு விபரீத சம்பவம் இன்றைக்கு நடக்கப்போகிறது என்று அவருடைய உள்ளுணர்வு கூறியது.
காரியாலயத்துக்குக் காந்திஜி வந்து சேர்ந்த சில நிமிஷங்களுக் கெல்லாம் சத்தியாக்கிரஹக் கமிட்டித் தலைவர் ஜனாப் எஸ்ஸப்மியானும் மற்றப் பிரமுகர்களும் வந்து சேர்ந்தார்கள். எல்லாரும் பதிவு செய்யும் ஆபீஸுக்குப் புறப்பட்டார்கள்.
காந்திஜியின் காரியாலயத்தி லிருந்து மேற்படி ஆபீஸ் ஏறக்குறைய முக்கால் மைல் தூரத்தில் இருந்தது. எல்லாரும் நடந்தே சென்றார்கள். அவர்களை மீர் ஆலமும் அவருடைய பட்டாணியத் தோழர்களும் பின்தொடர்ந்தார்கள்.
பதிவு செய்யும் சர்க்கார் ஆபீசுக்குச் சில கெஜ தூரத்தில் அர்னாட் கிப்ஸன் என்னும் அட்டர்னிகளின் ஆபீஸ் இருந்தது. அந்தக் கட்டிடத்தின் வாசலில் மீர் ஆலம் காந்திஜியின் அருகில் நெருங்கி வந்து "எங்கே போகிறீர்?" என்று கேட்டார்.
"என் பெயரைப் பதிவு செய்து அனுமதிப் பத்திரம் பெறுவதற்காகப் போகிறேன். பத்து விரல் அடையாளமும் கொடுக்கப் போகிறேன்!" என்று காந்திஜி சொன்னார்.
அவ்வளவு தான்; பின் புறத்திலிருந்து ஒரு பெரிய குண்டாந்தடி காந்திஜியின் தலையில் விழுந்தது. “ஹே ராம்!" என்று சொல்லிக் கொண்டே காந்தி மகாத்மா தரையில் சாய்ந்து மூர்ச்சை யடைந்தார்.
-----------------
காந்திஜி தரையில் விழுந்து மூர்ச்சை யடைந்த பிறகும் மீர் ஆலமும் அவருடைய நண்பர்களும் சும்மா விடவில்லை. மேலும் அவரைத் தாக்கி அடித்தார்கள். எஸ்ஸப் மியானும் தம்பி நாயுடுவும் காந்திஜி மீது அடி விழாமல் தடுக்க முயன்றபோது, அவர்களும் அடிக்கும் உதைக்கும் பாத்திரமானார்கள். இந்தக் காட்சியைச் சாலையிலே போய்க் கொண்டிருந்த சில ஐரோப்பி யர்கள் பார்த்து விட்டு விரைந்து வந்தார்கள். அவர்கள் சமீபித்ததும் மீர் ஆலமும் அவருடைய தோழர்களும் தப்பி ஓடப் பார்த்தார்கள். ஆனால் அவர்களுடைய முயற்சி பலிக்கவில்லை. அவர்களை ஐரோப்பியர்கள் கைப்பிடியாகப் பிடித்துக் கொண்டார்கள். இன்னும் சிலர் காந்திஜியைத் தூக்கி எடுத்து மிஸ்டர் கிப்ஸனுடைய ஆபீஸ் அறைக்குக் கொண்டு போனார்கள். மூர்ச்சை தெளிவதற்குரிய சிகிச்சையும் செய்யப்பட்டது. காந்திஜி கண் விழித்தபோது, ரெவரண்ட் டோக் என்னும் நண்பர் தம்மைக் குனிந்து பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டார்.
"இப்போது உடம்பு எப்படி யிருக்கிறது ? " என்று டோக் கேட்டார்.
"உடம்பு சரியாய்த் தானிருக்கிறது. பல்லிலும் விலாவிலும் மட்டும் வலி யிருக்கிறது. மீர் ஆலம் எங்கே ?" என்று காந்தி மகான் கேட்டார். "அவனும் அவனுடைய சகாக்களும் கைது செய்யப்பட் டனர்" என்றார் டோக் பாதிரியார்.
"அது எப்படி ? கூடவே கூடாது ! அவர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும்!" என்றார் மகாத்மா காந்தி.
"அதைப்பற்றி இப்போது என்ன ? பிறகு பார்த்துக் கொள்ளலாம். உங்களுடைய உதடு, கன்னம் எல்லாம் காயமாகி இரத்த விளாறாக இருக்கிறது. முதலிலே சிகிச்சையைப் பற்றிக் கவனிக்க வேண்டும். போலீஸார் உங்களை ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போகத் தயாராயிருக்கிறார்கள். ஆனால் என்னுடைய ஜாகைக்குத் தாங்கள் வருவது நலம். வந்தால் நானும் என் மனைவியும் எங்களால் இயன்ற செளகரியங்கள் செய்து கொடுக்கிறோம்."
"போலீஸாருக்கு வந்தனம். ஆனால் நான் ஆஸ்பத்திரிக்குப் போக விரும்பவில்லை. உங்களுடைய வீட்டுக்கே வருகிறேன். என்னை அழைத்துப் போங்கள்." இவ்வாறு காந்திஜி கூறியதற்குக் காரணம் டோக் பாதிரியாரிடம் மகாத்மாவுக்கு இருந்த அன்பும் நம்பிக்கையுந்தான்.
ரெவரண்ட் டோக் நியூஸிலாந்து தேசத்திலிருந்து தென் னாப்பிரிக்காவுக்கு வந்தவர். காந்திஜியைப் பற்றியும் அவருடைய அஹிம்சா இயக்கத்தைப் பற்றியும் நன்கு அறிந்திருந்தவர்.
மேற்படி சம்பவம் நடந்ததற்கு ஆறு மாதத்துக்கு முன்னால் டோக் பாதிரியார் காந்திஜியை நேரில் சந்தித்து அறிமுகம் செய்து கொள்வதற்காகச் சென்றார். "ரெவரண்டு டோக்" என்ற பெயரைப் பார்த்ததும், அவர் தம்மைக் கிறிஸ்துவ மதத்தில் சேர்க்க வந்திருப்பதாக மகாத்மா நினைத்தார். ஆயினும் அவரைச் சந்திக்க இசைந்தார். டோக் பாதிரியாருடன் சில நிமிஷம் சம்பாஷிப்பதற்குள்ளேயே அவர் எப்பேர்ப்பட்ட உத்தம புருஷர் என்பதைக் காந்திஜி தெரிந்து கொண்டார், "உங்களுடைய போராட்டத்தில் என்னை உங்கள் நண்பனாகக் கருதுங்கள். என்னால் முடிந்த அளவு தங்களுக்கு உதவி செய்வது என் கடமை " என்றார் டோக்.
ரெவரண்டு டோக் கிறிஸ்துவ மதத்தில் பாப்டிஸ்ட் மிஷன் என்ற உட்பிரிவைச் சேர்ந்தவர். அந்த உட்பிரிவைச் சேர்ந்த வெள்ளைக்காரக் கிறிஸ்துவர்களுக்கு மத போதனை செய்து அதற்காக அவர்களிட மிருந்து வருமானம் பெற்று வந்தார். சத்தியாக்கிரஹ இயக்கத்துக்கு ஆதரவு தருவதின் காரணமாக அவருடைய ஜீவனோபாயத்துக்கு ஆபத்து நேரிடலாம் என்று காந்திஜி கருதினார். அதாவது வெள்ளைக்காரக் கிறிஸ்துவர்கள், "உங்களுடைய போதனை எங்களுக்குத் தேவையில்லை" என்று சொல்லி விடலாம் அல்லவா ? இது பற்றி மகாத்மா பிரஸ்தாபித்த போது, டோக் பாதிரியார், "அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை. ஏசுநாதருடைய உண்மையான தர்மத்தைப் பின்பற்றி நான் நடக்கிறேன். வெள்ளைக்காரக் கிறிஸ்துவர்கள் என்னைக் கைவிட்டால் விடட்டும். என்னைக் காப்பாற்றுவதற்குக் கடவுள் இருக்கிறார்!" என்றார்.
இதுமுதல் காந்தி மகானுக்கும் டோக் பாதிரியாருக்கும் அத்தியந்த சிநேகம் ஏற்பட்டு வளர்ந்திருந்தது. ஆகையினாலே தான், படுகாயப்பட்டிருந்த காந்திஜி ஆஸ்பத்திரிக்குப் போவ தற்குப் பதிலாக டோக் பாதிரியாரின் வீட்டுக்குப் போக இசைந்தார்.
டோக் வீட்டுக்குப் போய்ச் சேர்ந்ததும் டாக்டருக்குச் சொல்லியனுப்பினார்கள். இதற்கிடையில், ஆசியாக்காரர்களைப் பதிவு செய்யும் உத்தியோகஸ்தர் மிஸ்டர் சாம்னி காந்திஜியைப் பார்க்க வந்தார். மிஸ்டர் சாம்னியின் காரியாலத்துக்குக் கொஞ்ச தூரத்திலேதான் மகாத்மா அடிபட்டு விழுந்த சம்பவம் நடந்ததல்லவா ? ஆகையால், காந்திஜியின் தேக நிலைமையைப் பற்றி நேரில் தெரிந்துகொண்டு போவதற்காகவும் அநுதாபம் தெரிவிப்பதற்காகவும் மிஸ்டர் சாம்னி வந்தார்.
அவரைப் பார்த்ததும் காந்திஜி கூறியதாவது :-"தங்களுடைய காரியாலயத்துக்கு நான் வந்து கொண்டிருந்தேன். விரல் அடையாளம் கொடுத்துப் பதிவுப் பத்திரம் பெறுவதற்காகவே வந்தேன். வழியில் இப்படி நடந்துவிட்டது. அதனால் பாதகமில்லை. அவசியமான பத்திரங்களை உடனே எடுத்துக் கொண்டு வந்து என்னிடம் இங்கேயே பெயர்ப் பதிவு பெற்றுக் கொள்ளக் கோருகிறேன். எனக்கு முன்னால் வேறு எந்த இந்தியரையும் பதிவு செய்யக்கூடாது. முதலில் பதிவு செய்வது நானாக இருக்க வேண்டும்."
இவ்விதம் மகாத்மா கூறியதைக் கேட்ட மிஸ்டர் சாம்னி, "அதற்கென்ன அவசரம் வந்தது? இப்போது டாக்டர் வரப் போகிறார். அவர் உங்களைப் பார்த்துச் சிகிச்சை செய்யட்டும், நிம்மதியாக ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு ரிஜிஸ்டரின் தலைப்பிலே இடம் விட்டு விட்டு, மற்றவர்களைப் பதிவு செய்கிறேன். உடம்பு நன்றாய்க் குணமான பிறகு பதிவு செய்து கொள்ளலாம் " என்றார்.
"இல்லை இல்லை ; முதன் முதலில் நான் பதிவு செய்து, கொள்வதாகச் சபதம் செய்திருக்கிறேன். கடவுள் என்னை உயிரோடு வைத்திருப்பதால் அந்தச் சபதத்தை நிறைவேற் றியே தீரவேண்டும். தயவு செய்து இவ்விடமே கொண்டு வாருங்கள்!"
அதற்குமேல் மறுத்துச் சொல்ல இயலாமல் ரிஜிஸ்டரையும் பத்திரங்களையும் எடுத்து வர மிஸ்டர் சாம்னி சென்றார்.
அடுத்தபடியாக, சர்க்காரின் அட்டர்னி ஜெனரலுக்கு மகாத்மா பின் வரும் தந்தியை அனுப்பினார்:- "மீர் ஆலத்தின் பேரிலும் அவருடைய தோழர்கள் பேரிலும் நான் குற்றம் சாட்டவில்லை. அவர்கள் மேல் வழக்குத் தொடரப்படுவதையும் விரும்பவில்லை. தயவு செய்து எனக்காக அவர்களை உடனே விடுதலை செய்துவிட வேண்டும்!"
போலீஸார் ஏற்கெனவே மீர் ஆலம் கோஷ்டியைக் கைது செய்திருந்தார்கள். காந்தி மகாத்மாவின் மேற்படி தந்தியின் பேரில், அட்டர்னி ஜெனரல் உத்தரவுப்படி, அவர்கள் விடுதலை செய்யப்பட்டார்கள். ஆனால் ஜோகானிஸ்பர்க் ஐரோப்பியர்கள் அதை விரும்பவில்லை. அவர்களில் சிலர் அட்டர்னி ஜெனரலுக்கு ஒரு கடுமையான கடிதம் எழுதினார்கள்.
"குற்றவாளிகளைத் தண்டிப்பது பற்றிக் காந்திஜியின் கொள்கைகள் ஒரு மாதிரியாக இருக்கலாம். அந்தக் கொள்கைகளை அரசாங்கம் ஏற்றுக் கொள்ள முடியாது. காந்தியை அடித்த சம்பவம் அவருடைய சொந்த இடத்தில் நடக்க வில்லை ; பொதுச் சாலையில் நடந்தது. ஆகையால் அது பொது ஜன விரோதமான குற்றம். சம்பவத்தை நேரில் பார்த்த பல ஐரோப்பியர்கள் சாட்சி சொல்லத் தயாராயிருக்கிறார்கள், ஆகையால் குற்றவாளிகளைக் கட்டாயம் கைது செய்து விசாரணை நடத்தித் தண்டிக்க வேண்டும்."
பிரபல ஐரோப்பியர்கள் கையொப்பமிட்டிருந்த இந்தக் கடிதத்தின் பேரில் அட்டர்னி ஜெனரல் மறுபடியும் மீர் ஆலம் கோஷ்டியைக் கைது செய்ய உத்தரவிட்டார். விசாரணை நடந்து குற்றவாளிகளுக்கு மூன்று மாதம் கடுங்காவல் தண் டனையும் கிடைத்தது. ஆனால் காந்திஜியின் கொள்கையை மதித்து, அவரைச் சாட்சி சொல்வதற்குக் கேர்ட்டுக்கு அழைக் காமல் விட்டு விட்டார்கள்.
டாக்டர் வந்து காந்திஜியைப் பார்த்தார். கன்னத்திலும் மேல் உதட்டிலும் பட்டிருந்த பெருங் காயங்களுக்குத் தையல் போட்டுக் கட்டினார். விலாக்களுக்கு மருந்து தடவினார் தையலை எடுக்கும் வரையில் பேசக்கூடாது என்றும், திரவ பதார்த்தந்தான் சாப்பிடலாம் என்றும் கண்டிப்பாகச் சொன்னார். ஒரு வாரம் படுக்கையை விட்டு நகரக் கூடாதென்றும் அப்புறம் இரண்டு மாதம் வேலை எதுவும் செய்யக் கூடாது என் றும் கூறினார்.
ஆகவே, காந்திஜி கட்டாயமாக மெளன விரதம் கைக் கொள்ள வேண்டியதாயிற்று. ஆனால் முக்கியமான காரியம் ஒன்று பாக்கியிருந்தது. நல்ல வேளையாகக் கையிலே எழுதும் சக்தி இருந்தது. காகிதம் பேனா தருவித்து இந்திய சமூகத்துக்குப் பின் வரும் வேண்டுகோளை எழுதினார்:
"டோக் பாதிரியாரின் வீட்டில் பத்திரமாயிருக்கிறேன். டோக்கும் அவருடைய மனைவியும் என்னை நன்றாய்ப் பாதுகாத்து வருகிறார்கள். என்னைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம்.
" என்னை அடித்தவர்கள் தாங்கள் செய்த காரியத்தின் பலா பலனை உணர்ந்து செய்யவில்லை. நான் தவறு செய்வதாக நினைத்தார்கள். தங்களுக்குத் தெரிந்த ஒரே முறையைக் கையாண்டு என்னைத் திருத்தப் பார்த்தார்கள். ஆகையால் அவர்கள் பேரில் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன்.
'முஸல்மான்கள்' என்னை அடித்து விட்டார்கள் என்ற காரணத்தினால் ஹிந்துக்கள் முஸ்லிம்கள் பேரில் கோபங்கொண்டால், அது பெருந்தவறாகும். நான் இன்று சிந்திய இரத்தம் இரண்டு சமூகங்களையும் நிரந்தரமாக ஒன்று பிணைப்பதற்குச் சாதனமா யிருக்க வேண்டும். இதுவே என்னுடைய மன மார்ந்த பிரார்த்தனை. ஆண்டவன் அருள் புரியட்டும்.
"நடந்து விட்ட சம்பவத்தின் காரணமாக இந்திய சமூகத் துக்கு நான் கூறிய யோசனையில் மாறுதல் எதுவும் இல்லை. ஆசியாக்காரர்கள் தாங்களே வலியச் சென்று பதிவு செய்து சர்டிபி கேட் வாங்கிக்கொள்ள வேண்டும். விரல் அடையாளம் கொடுப்பதற்கு மனச்சாட்சி இடங் கொடாதவர்கள் அவ்விதம் சொல்லி சர்க்காரிட மிருந்து விலக்குப் பெறலாம். மற்றவர்கள் எல்லாரும் இந்திய சமூகத்தின் தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும்.
"சத்தியாக்கிரஹ தத்துவத்தை நன்கு உணர்ந்தவர்கள் கட வுளைத் தவிர வேறு யாருக்கும் பயப்பட வேண்டிய தில்லை. இந்தியர்கள் யாராவது ஏதாவது சொல்வார்களோ ? ' என்ற கோழைப் பயம் காரணமாகத் தங்கள் கடமையைச் செய்யத் தவறக் கூடாது. நாமாகப் பதிவு செய்து கொண்டால் கறுப்புச் சட்டம் ரத்தாகும் என்று சர்க்கார் வாக்குக் கொடுத்திருக்கின்றனர். ராஜி ஒப்பந்தத்தில் நமக்குரிய பகுதியை நிறை வேற்றி வைப்பது நம்முடைய கடமையாகும்."
இவ்விதம் இந்திய சமூகத்துக்குக் காந்திஜி விக்ஞாபனம் எழுதி முடித்ததற்கும் மிஸ்டர் சாம்னி ரிஜிஸ்டர்களையும் பத்திரங்களையும் கொண்டு வருவதற்கும் சரியா யிருந்தது. காந்திஜி கஷ்டப்பட்டு வலியைப் பொறுத்துக்கொண்டு கையெழுத்துப் போட்டு விரல் அடையாளமும் கொடுத்தார். இதைப் பார்த்துக் கொண்டிருந்த மிஸ்டர் சாம்னியின் கண்களில் கண்ணீர் ததும்பியது.
இவ்வளவு காரியங்களும் அரைமணி நேரத்துக்குள் முடிந்து விட்டது. ஆயினும் காந்திஜி இம்மாதிரி தம்மைச் சிரமப் படுத்திக் கொள்வதைப் பார்த்து மிஸ்டர் டோக்கும் அவருடைய மனைவியும் வருத்த மடைந்தார்கள். காந்திஜி குணமடைவதற்கு இடையூறாகலாம் என்றும் பயந்தார்கள். பிறகு, டோக் பாதிரியார் அந்த அறையிலிருந்தவர்களை யெல்லாம் சமிக்ஞை மூலம் அப்புறப் படுத்தினார். இனிமேல் ஒன்றும் எழுதவும் கூடாது, உடம்பை அசைக்கவும் கூடாது என்று காந்திஜியை வற்புறுத்தினார். அதன் பேரில் காந்திஜி இன்னும் ஒரு விஷயம் எழுதிக் காட்டினார். "அருள் ஒளியே! வழி காட்டுவாய்!" என்று தொடங்கும் கிறிஸ்துவப் பிரார்த்தனை கீதத்தை யாராவது பாடினால் தமது மனம் நிம்மதி அடையும் என்று எழுதினார். டோக் தம்பதிகளின் குமாரி, ஆலிவ் என் னும் சிறுமி, அந்த அறையின் வாசற்படியில் நின்று மேற்படி கீதத்தை இனிய குரலில் பாடினாள். அதைக் கேட்டு காந்திஜி மன அமைதி பெற்றார்.
டோக் குடும்பத்தார் அச்சமயம் காந்திஜிக்குச் செய்த சேவையின் பெருமையைச் சொல்லி முடியாது. குடும்பத்தைச் சேர்ந்த யாராவது ஒருவர் எப்போதும் காந்திஜியின் பக்கத்தில் இருந்து பணிவிடை செய்தார்கள். அந்த வீட்டில் காந்திஜி படுத்திருந்தவரையில் வீடு ஏதோ சத்திரம் சாவடி என்று சொல் லும்படி ஆயிற்று. காந்திஜியின் நிலைமை பற்றி விசாரிப்பதற்காக ஓயாமல் இந்தியர்கள் வந்துகொண்டிருந்தார்கள். அவரை மற்றவர்கள் பார்க்கலாம் என்று டாக்டர் அநுமதித்த பிறகு கூட்டம் இன்னும் அதிகமாயிற்று. ஜவுளி மூட்டை தூக்கிச் சென்று தெருவிலே விற்கும் இந்தியர்கள் உள்படப் பெரிய முத லாளிகள் வரையில் எல்லாரும் வந்துகொண்டிருந்தார்கள். டோக் தம்பதிகள் அனைவரையும் அன்புடன் முகமன் கூறி வரவேற்று, டிராயிங் அறையில் உட்காரச் செய்து, சமயம் அறிந்து மகாத்மாவைப் பார்க்க அனுமதித்து வந்தார்கள். காந்திஜி இது விஷயமாக எழுதியிருக்கிறார் :
"நான் அவருடைய வீட்டில் இருந்த வரையில் என்னைக் கவனிப்பதும் என்னைப் பார்க்க வந்தவர்களைக் கவனிப்பதுமே அவருக்கு வேலையா யிருந்தது. இராத்திரி நேரத்தில் கூட இரண்டு மூன்று தடவை டோக் என் அறைக்கு மெள்ள நடந்து வந்து எட்டிப் பார்த்துவிட்டுப் போவார். அவருடைய வீட்டில் வசித்த காலமெல்லாம் அது என்னுடைய வீடு என்ற எண்ணமே என் மனத்தில் குடி கொண்டிருந்தது. இன்னொருவர் வீட்டில் இருக்கிறோம் என்ற எண்ணமே தோன்றவில்லை. என்னுடைய சொந்த உற்றார் உறவினர் யாரும் டோக் தம்பதிகளைக் காட்டிலும் அதிகப் பரிவுடன் என்னைப் பராமரித்திருக்க முடியாது.
காந்திஜிக்கும் டோக் பாதிரியாருக்கும் ஏற்பட்ட சிநேகம் பிற்காலத்தில் அணுவளவும் மாறவில்லை. மறுபடியும் காந்திஜி சத்தியாக்கிரஹப் போர் ஆரம்பிக்க நேர்ந்த போது, டோக் பாதிரியின் சீடர்களான ஐரோப்பியக் கிறிஸ்துவர்கள் டோக் மீது கோபங் கொண்டார்கள். அதனால் டோக் கஷ்டப்பட வும் நேர்ந்தது. ஆயினும் அவர் எள்ளளவும் மனம் சலிக்கவில்லை .
சத்தியாக்கிரஹப் போர் தீவிர நிலையை அடைந்திருந்த சமயத்தில், டோக் பாதிரியார் ரோடீஷியாவில் காலமானார். அவருடைய மரணம், அவரை எதிர்த்தவர்களின் மனத்தைக்கூட மாற்றிவிட்டது. பாப்டிஸ்ட் தேவாலயத்தில் வெள்ளைக்காரக் கிறிஸ்துவர்கள் அநுதாபக் கூட்டம் நடத்தினார்கள். காந்திஜி, கச்சாலியா சாகிப் முதலிய இந்தியர்களை மேற்படி அநுதாபக் கூட்டத்துக்கு அழைத்துப் பேசும்படியும் செய்தார்கள்.
காந்தி மகாத்மாவின் அஹிம்சையின் மகிமைக்கு டோக் குடும்பம் சிறந்த உதாரணம் ஆகும். வெறும் பலாத்கார இயக்கமாயிருந்தால், எதிரிகளின் கூட்டத்திலிருந்து இத்தகைய அருமையான ரத்தினம் போன்ற சிநேகிதர்கள் கிடைக்கக் கூடுமா ?
--------
காந்தி மகான் அடிபட்டு டோக் பாதிரியாரின் வீட்டில் சிகிச்சை பெற்று வந்த காலத்தில் காந்தியின் குடும்பத்தார் போனிக்ஸில் வசித்து வந்தார்கள். ஸ்ரீமதி கஸ்தூரிபாயும் குழந்தைகளும் காந்திஜி அடிபட்ட செய்தி அறிந்ததும் அளவில்லாத கவலை அடைந்தார்கள். உடனே பறந்து சென்று காத்திஜியைப் பார்க்கவேண்டுமென்று அவர்களுடைய உள்ளம் துடித்தது. ஆனால் அது சாத்தியப்படவில்லை. போனிக்ஸி லிருந்து ஜோகானிஸ்பர்க் போவதற்கு வேண்டிய ரயில் சத்தப் பணம் அவர்களிடம் இல்லை !
காந்திஜிக்கு உடம்பு குணமாகிப் பிரயாணம் தொடங்கலாம் என்று ஏற்பட்டதும் உடனே போனிக்ஸக்குப் போக விரும்பினார். போனிக்ஸ், நேட்டால் மாகாணத்தில் டர்பனுக்குக் கொஞ்ச தூரத்தில் உள்ளது என்பது நினைவிருக்கலாம். காந்திஜி நேட்டாலுக்குப் போகவேண்டிய அவசியமும் ஏற்பட்டிருந்தது.
கறுப்புச் சட்டமான து, டிரான்ஸ்வால் மாகாணத்தில் செய்யப்பட்டது. 'டிரான்ஸ்வாலைச் சேர்ந்த 13,000 இந்தியர்களையே அது பாதித்தது. நேட்டாலை அந்தச் சட்டம் பாதிக்க வில்லை. ஆயினும் கறுப்புச் சட்டத்தை எதிர்த்து காந்திஜி நடத்திய இயக்கத்தில் நேட்டாலிலும் கேப்டவுனிலும் தென் னாப்பிரிக்கா முழுவதிலுமுள்ள எல்லா இந்தியர்களுக்கும் சிரத்தை இல்லாமற் போகவில்லை. அந்த இயக்கத்தின் போக்கை எல்லா இந்தியர்களும் கவனித்துக்கொண்டு வந்தார்கள். ஏனெனில் இன்றைக்கு டிரான்ஸ்வாலில் ஏற்பட்ட சட்டத்தைப்போல் நாளைக்கு மற்ற மாகாணங்களிலும் ஏற்படலா மல்லவா ? டிரான்ஸ்வாலில் கறுப்புச் சட்டத்தை எதிர்த்து இந்தியர்கள் வெற்றிபெற்றால் அது நேட்டால் இந்தியர்களின் பலத்தையும் வளர்க்கும். டிரான்ஸ்வால் சத்தியாக்கிரஹம் தோல்வி யடைந்தால் தென்னாப்பிரிக்கா இந்தியர்கள் அனைவரையும் அது பலவீனப்படுத்தும்.
தளபதி ஸ்மட்ஸுடன் செய்துகொண்ட ராஜி ஏற்பாடு நேட்டால் இந்தியர்களின் மனத்திலும் சந்தேகங்களையும் கலக்கங்களையும் உண்டாக்கி யிருப்பதாகக் காந்திஜி அறிந்தார். முதன் முதலில் காந்தி மகாத்மாவை ஆதரித்து நின்றவர்கள் டர்பன் இந்தியர்களே யல்லவா ? ஆகையால் நேரே டர்பனுக்குப் போய் அங்குள்ள இந்தியர்களைப் பார்த்துப் பேசி அவர்களுடைய சந்தேகங்களைத் தீர்த்துவிட்டுப் பிறகு போனிக்ஸக்குப் போகக் காந்திஜி தீர்மானித்தார்.
டர்பனுக்குக் காந்திஜி போய்ச் சேர்ந்த அன்று அங்கே ஒரு பொதுக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இங்கேயும் பட்டாணியர்களால் ஏதேனும் தொல்லை நேரலாம் என்று காந்திஜியின் நண்பர்கள் சந்தேகித்தார்கள். எனவே, தக்க முன்னேற்பாடு செய்திருந்ததுடன், டர்பன் போலீஸ் தலைவரான பழைய அலெக்ஸாண்டருக்கும் தெரிவித்திருந்தார்கள்.
இன்னும் சில நண்பர்கள் காந்திஜிக்கு எச்சரிக்கை செய்தார்கள். பொதுக் கூட்டத்தில் அவர் தாக்கப்படலாமென்றும் ஆகையால் கூட்டத்துக்கே அவர் வரவேண்டாம் என்றும், கூட்டத்தை ரத்து செய்து விடலாம் என்றும் சொன்னார்கள். ஆனால் மகாத்மா இந்த யோசனைகளை ஒப்புக்கொள்ள வில்லை. "பொது ஊழியம் செய்ய வருகிறவன் புகழ்ச்சியைப் பெறுவதற்குத் தயாராயிருப்பது போலவே இகழ்ச்சிக்கும் தயாரா யிருக்கவேண்டும். பூமாலைக்கும் தயாரா இருக்கவேண்டும் ; கல்மாரிக்கும் சித்தமாயிருக்க வேண்டும். பொது மக்களின் கண்டனத்துக்குத் தப்பி ஓட முயலுதல் கூடாது. நான் கூட் டத்துக்கு அவசியம் போய்த்தான் தீருவேன். கடவுளுடைய விருப்பம் போல நடக்கும்" என்று சொல்லிவிட்டார்.
மாலை எட்டு மணிக்குப் பொதுக்கூட்டம் ஆரம்பமாயிற்று. காஸ் விளக்குகள் போடப்பட்டிருந்தன. சேத் தாவுத் முகம்மது என்பவர் தலைமை வகித்தார். இந்தியர்களுடைய நியாயமான சந்தேகங்கள் எல்லாம் தீரும்படியாக மகாத்மா தாம் ராஜிக்கு ஒப்புக்கொண்டதன் காரணங்களை விளக்கிக் கூறினார். காந்திஜியின் பேச்சு முடிந்து தலைவர் முடிவுரை கூறிக் கொண்டிருக்கும் சமயத்தில் ஒரு பட்டாணியன் கையில் ஒரு பெரிய தடியுடன் மேடையை நோக்கி ஓடி வந்தான். அதே சமயத்தில் விளக்குகள் எல்லாம் அணைக்கப்பட்டன. கூட்டத்தில் பெருங் குழப்பம் உண்டாயிற்று. ஆனால் மேடையில் இருந்த பிரமுகர்கள் - தலைவர் தாவுத் முகம்மது உள்பட- காந்திஜியைத் தங்களுக்கு மத்தியில் நிறுத்திச் சூழ்ந்து நின்று பாதுகாத்தார்கள். காந்திஜியின் நண்பர்களில் ஒருவர் இம்மாதிரி நேரும் என்று எதிர்பார்த்து கைத்துப்பாக்கி ஒன்று கொண்டு வந்திருந் தார். அதை அவர் எடுத்து ஆகாயத்தை நோக்கி வெற்று வேட்டு ஒன்று போட்டார். இதனால் கூட்டத்தில் குழப்பம் இன்னும் அதிகமாயிற்று.
பார்ஸி ரஸ்டம்ஜியின் முன் யோசனையின் பயனாகச் சில நிமிஷ நேரத்தில் சூபரின்டென்டெண்ட் அலெக்ஸாண்டர் அனுப்பிய போலீஸ் படையினர் வந்து சேர்ந்தனர். அவர்கள் காந்திஜியைச் சூழ்ந்து நின்று கூட்டத்தின் வழியாகப் புகுந்து அவரைப் பார்ஸி ரஸ்டம்ஜியின் வீட்டுக்குக் கொண்டுபோய்ச் சேர்த்தனர்.
மறுநாள் காலையில் மகாத்மாவின் யோசனையின்படி பார்ஸி ரஸ்டம்ஜி டர்பனிலிருந்த பட்டாணியர்களை யெல்லாம் தம்முடைய வீட்டுக்கு வரவழைத்தார். காந்திஜியிடம், நேரே அவர்களுடைய சந்தேகங்களைக் கேட்டுத் தீர்த்துக்கொள்ளும்படி சொன்னார். மகாத்மாவும் அவர்களுக்கு எவ்வளவோ விளக்கமாக உண்மையை எடுத்துரைத்தார். ஆயினும் பயன் ஏற்படவில்லை. காந்திஜி ஏதோ துரோகம் செய்துவிட்டார் என்ற எண்ணம் அந்தப் பட்டாணியர்களின் உள்ளத்தில் குடி கொண்டிருந்தது. அதை அசைக்கவே முடியவில்லை.
தம்பி! நம்முடைய காலத்தில் ஹிந்துக்களிலே சில மகா மூடர்கள் மகாத்மா காந்தி ஹிந்து சமூகத்துக்குத் துரோகம் செய் து விட்டதாக நினைத்தார்கள் அல்லவா ? அதன் விபரீத பலனை இவ்வருஷம் 1948 ஜனவரி 30ந் தேதி கண்டோம் அல் லவா ? இன்னமும் கூட அத்தகைய பரம முட்டாள் தனமான எண்ணத்தைப் போக்கிக்கொள்ளாத அறிவிலிகள் சிலர் இருப் பதை நாம் காண்கிறோ மல்லவா ?
இப்படியிருக்கும்போது முரட்டுப் பட்டாணியர்களின் மனத்திலிருந்த சந்தேகம் போகாததில் வியப்பு என்ன ?
எவ்வளவு விளக்கிச் சொல்லியும் பயனில்லை எனக் கண்ட மகாத்மா, "இந்த மாதிரி சந்தேகம் என்கிற வியாதி ஒருவருடைய மன தில் ஏற்பட்டு விட்டால், அதை வெறும் பேச்சினாலோ விவாதத்தினாலோ மாற்ற முடியாது. செய்யும் செயலினாலேதான் சந்தேகத்தைத் தீர்க்கவேண்டும்" என்னும் முடிவுக்கு வந்தார்.
அத்தகைய செயல் புரிவதற்குரிய சந்தர்ப்பமும் கூடிய விரைவில் வந்தது. அந்த விஷயத்துக்குப் போவதற்கு முன்னால் மகாத்மா காந்தியின் போனிக்ஸ் பிரயாணத்தைப்பற்றிச் சொல்லிவிடுகிறேன்.
டர்பன் பொதுக்கூட்டம் நடந்த மறு நாள் மாலை காந்திஜி போனிக்ஸுக்குப் புறப்பட்டார். முதல்நாள் அவரைப் பொதுக் கூட்டத்தில் பாதுகாக்க முஸ்தீபு செய்திருந்தவர்கள், இப்போது போனிக்ஸுக்கும் தாங்கள் வரவேண்டும் என்றார்கள். அவர்களை வரவேண்டியதில்லை யென்று காந்திஜி சொல்லிப் பார்த்தார்;
அவர்களுக்குப் போனிக்ஸில் நல்ல சாப்பாடு கிடைப்பது துர்லபம் என்றும் எச்சரிக்கை செய்தார். அந்த நண்பர்கள் "சாப்பாடே கிடைக்கா விட்டாலும் பாதகமில்லை. இந்தச் சமயத்தில் தங்களைப் பிரிந்திருக்க முடியாது!" என்றார்கள். காந்திஜியும் வேறு வழியின்றிச் சம்மதம் கொடுத்தார்.
இவ்விதம் காந்திஜியைப் பாதுகாக்கப் புறப்பட்ட கூட்டத் தின் தலைவர் யார் தெரியுமா ? அவர் ஒரு தமிழர் ! நேட்டாலில் பிறந்த கிறிஸ்துவத் தமிழர்! அவருடைய பெயர், ஜாக் முதலியார். குஸ்திச் சண்டையில் அவர் கைதேர்ந்தவர். தென்னாப் பிரிக்காவிலுள்ள யாரும் - வெள்ளைக்காரனாயினும் கறுப்பு மனிதனாயினும் - குஸ்திச் சண்டையில் ஜாக் முதலியை ஜயிக்க முடியாது என்று அச்சமயம் அவருக்குப் புகழ் ஏற்பட் டிருந்தது.
"தங்களுடன் இருக்கும்போது எங்களுடைய கைவரிசை ஒன்றையும் காண்பிக்க மாட்டோம்!" என்று வாக்குறுதி கொடுத்துவிட்டு ஜாக் முதலியாரும் அவருடைய தோழர்களும் போனிக்ஸுக்குப் புறப்பட்டுச் சென்றார்கள்.
தென்னாப்பிரிக்காவில் மழை இல்லாத காலங்களில் எல்லாம் காந்திமகான் திறந்த வெளியிலே தூங்குவது வழக்கம். போனிக்ஸ் ஆசிரமத்திலும் திறந்த வெளியிலேயே படுத்துத் தூங்கினார். ஜாக் முதலியாரும் அவருடைய தோழர்களும் முறை போட்டுக்கொண்டு இரவெல்லாம் காந்திஜியைக் காவல் புரிந்தார்கள். பட்டாணியர்கள் இராத்திரியில் கள்ளத்தனமாக வந்து தூங்குகிற காந்திஜியைத் தாக்கிவிடப் போகிறார்களே என்பதற்காகத்தான். " என்னுடைய உயிர் எனக்கு அவ்வ ளவு பெரிதன்று. என்னுடைய சகோதரர் கையினால் சாக நேர்ந்தால் அதுவே என் பாக்கியமாகும்" என்று காந்திஜி சொன்னார். இதையெல்லாம் ஜாக் முதலியார் கோஷ்டி கேட்கவில்லை. "உங்களுக்கென்ன கவலை? நீங்கள் பாட்டுக்குத் தூக்கம் வரும்போது தூங்குங்கள்!" என்று சொல்லி விட்டு, காந்திஜியின் கண்ணில் படாமல் தூரத்தில் நின்று அவர்கள் காவல் புரிந்தார்கள்.
தம்பி ! இதைப் படிக்கும்போது, காட்டிலே இராமரும் சீதையும் தூங்குங்கால் இலங்மணன் கண் விழித்துக் காவல் புரிந்தது நினைவு வருகிறதல்லவா?
போனிக்ஸில் காந்திஜி வசித்த நாட்களில் தளபதி ஸ்மட் ஸுடன் செய்துகொண்ட ராஜியைப்பற்றி “இண்டியன் ஒபினியன் " பத்திரிகையில் பல கட்டுரைகள் எழுதினார். கேள்வி பதில் ரூபத்தில், ஆட்சேபங்களைக் குறிப்பிட்டுச் சமாதானமும் எடுத்துக் கூறினார். டிரான்ஸ்வால் இந்தியர்கள் சம்பந்தப் பட்ட வரையில், அவர்கள் காந்திஜியிடம் பூரண நம்பிக்கை வைத்து அவர் காட்டிய வழியை மனப்பூர்வமாகப் பின்பற்றி னார்கள் என்று சீக்கிரத்திலேயே தெரியவந்தது. மிகச் சில தினங்களுக்குள்ளே டிரான்ஸ்வால் இந்தியர்கள் அனை வரும். தாங்களே வலியச் சென்று பதிவு செய்துகொண்டு விட்டார்கள். எனவே, ராஜி உடன்படிக்கையில் இந்தியர்கள் தங்களுடைய பங்கை நிறைவேற்றி விட்டார்கள்.
ஆனால் டிரான்ஸ்வால் சர்க்கார் தங்களுடைய பங்கை நிறைவேற்றினார்களா என்றால், அது தான் இல்லை. தளபதி ஸ்மட்ஸ் மோசம் செய்துவிட்டார் !
தளபதி ஸ்மட்ஸ் பெரிய கைகாரர். உலகத்து மகா இராஜ தந்திரிகளில் ஒருவர். 1907-ம் வருஷத்தில் டிரான்ஸ்வால் அரசாங்கம் அவருடைய கைக்குப் போயிற்று. மிஸ்டர் மாலன் தேர்தலில் ஜயிக்கும் வரையில் சுமார் 40 வருஷ காலம் தென்னாப்பிரிக்கா சர்க்காருக்கு அவரே தலைவராயிருந்து வந்தார். அவருடைய இராஜ தந்திரத்தையும் தீர்க்காலோசனையையும் பற்றி இன்றைக்கு உலகமெல்லாம் புகழ் பரவியிருக்கிறது.
அப்படிப்பட்ட தளபதி ஸ்மட்ஸ் தமது அரசியல் வாழ்க்கையின் ஆரம்பத்தில் காந்திஜியின் சத்தியாக்கிரஹ ஆயுதத்துடன் போராட நேர்ந்தது. சத்தியாக்கிரஹத்தை வெற்றி கொள்வதற்கு தளபதி ஸ்மட்ஸ் அரசியல் தந்திரத்தையும் சூழ்ச்சியையும் கையாண்டார். காந்திஜியிடம் மிக மரியாதை யாகப் பேசி ராஜி ஏற்பாட்டுக்கு இணங்கச் செய்தார். காரியம் முடிந்த பிறகு, மோசடியான சூழ்ச்சியைக் கையாண்டு வாக்குறுதிக்குப் பங்கம் செய்தார்.
ஆனால், "வாக்குறுதியை மீறுகிறேன்" என்றோ , "மோசடி செய்கிறேன்" என்றோ பட்டவர்த்தனமாகச் சொன்னாரா ? பெரிய இராஜ தந்திரியாயிற்றே ? தாம் சரியான காரியத்தையே செய்வதாகப் பாவனை காட்டிக்கொண்டு வாக்குறுதியை மீறினார்.
எல்லா இந்தியர்களும் பதிவு செய்துகொண்டானதும், கறுப்புச் சட்டத்தை ரத்து செய்வதாகச் சொல்லியிருந்தார் அல்லவா ? அதன்படி அவர் செய்யவில்லை. கறுப்புச் சட்டத்தை அப்படியே வைத்துக் கொண்டு வேறு இரண்டு மசோதாக்களைச் சட்டசபையில் கொண்டுவந்தார்.
இவற்றில் ஒரு மசோதா, தாங்களாகப் பதிவு செய்து கொண்ட இந்தியர்களின் பதிவுப் பத்திரத்தை அங்கீகரித்துக் கொண்டு ஆசியாக்காரர் சட்டத்தின் விதிகளிலிருந்து அவர்களுக்கு விலக்கு அளித்தது.
இன்னொரு மசோதா, இனிமேல் ஆசியாக்காரர்கள் பதிவு செய்துகொள்வதற்கு வேண்டிய விதி முறைகளை வகுத்தது. தளபதி ஸ்மட்ஸின் சூழ்ச்சித் திறமை இப்போது தெரிகிறதல்லவா ?
"தாங்களே பதிவு செய்து கொண்ட இந்தியர்களைக் கறுப்புச் சட்டம் பாதியாமல் செய்து விட்டேன். இனிமேல் வரும் இந்தியர்கள் சம்பந்தமாக நான் எந்த நிபந்தனையையும் ஒப்புக் கொள்ள வில்லையே ? " என்று ஸ்மட்ஸ் சொல்லிவிடலா மல்லவா ?
தளபதி ஸ்மட்ஸின் இந்த இராஜ தந்திரம் காந்தி மகானுக்கு அர்த்தமாகவில்லை. கறுப்புச் சட்டம் அடியோடு ரத்து செய்யப்படும் என்று காந்திஜியும் மற்ற டிரான்ஸ்வால் இந்தியர்களும் நம்பினார்கள். அந்த நம்பிக்கை பொய்யாகி விட்டது. அதற்கு விரோதமாக ஸ்மட்ஸ் காரியம் செய்தார். ஸ்மட்ஸின் அந்தக் காரியத்தை மோசடி என்றே மகாத்மாவும் மற்ற இந்தியர் களும் அச்சமயம் கருதினார்கள். இதைப் பற்றிக் காந்தி மகான் எழுதியிருப்பதாவது:
"தளபதி ஸ்மட்ஸ் மிக்க தந்திரசாலி என்றும் அவரை நம்ப வேண்டாம் என்றும் சில இங்கிலீஷ் நண்பர்கள் எனக்கு எச்சரிக்கை செய்திருந்தார்கள். இரண்டு கட்சியும் தங்களுக்குச் சாதகம் என்பதாக நினைத்துக் கொள்ளும்படி அவர் வாசகங்களைப் புனைவார் என்றும், பிறகு தனக்கு இஷ்டமான ஒரு புதிய பொருளைக் கற்பிப்பார் என்றும் சொல்லி யிருந்தார்கள். அவர்களுடைய எச்சரிக்கை உண்மை தான் என்று இப்போது தெரிந் தது. தளபதி ஸ்மட்ஸ் எங்களை மோசம் செய்து விட்டதாகவே அப்போது நானும் மற்ற இந்தியர்களும் நம்பினோம். ஆனால் இப்போது யோசித்துப் பார்க்கும்போது 'மோசடி' என்று சொல்வதில் சந்தேகம் ஏற்படுகிறது. நோக்கத்தில் மோசடி இல்லா தவரையில் அதை மோசடி என்று சொல்ல முடியா தல்லவா ? 1913 - 14 -ம் வருஷத்தில் ஸ்மட்ஸிடம் எனக்கு ஏற்பட்ட அநுபவம் அவர் பேரில் நல்ல எண்ணம் உண்டாக்கியது. அவர் 'யோக்கியர்' என்றும் 'நாணயவான்' என்றும் இன்றைக்கும் நான் கருதி வருகிறேன். ஆகையால் 1908-ம் ஆண்டில் ஸ்மட்ஸ் வேண்டுமென்று மோசடி செய்ததாக இப்போது நான் சொல்ல முடியாது."
1924 -ம் வருஷத்தில் மகாத்மா மேற் கண்டவாறு எழுதினார். ஆனால் 1908-ம் ஆண்டில் மகாத்மா காந்திக்கும் மற்ற டிரான்ஸ்வால் இந்தியர்களுக்கும் ஸ்மட்ஸ் செய்த மோசடி ? பெரும் வியப்பையும் கலக்கத்தையும் அளித்தது.
நிலைமை இன்னதென்று தெரிந்தவுடனே காந்திஜி சத்தியாக் கிரஹக் கமிட்டியின் கூட்டத்தைக் கூட்டினார். கூட்டத்தில் சிலர், "முன்னமே சொன்னோமே, கேட்டீர்களா ? இப்படித் தான் நீங்கள் யாரையும் சுலபத்தில் நம்பிவிடுகிறீர்கள். பிறகு ஏமாந்து போகிறீர்கள் !" என்றார்கள்.
அவர்களுக்குக் காந்திஜி தமது கட்சியை எடுத்துச் சொன்னார். " எதிரியை நம்புவது சத்தியாக்கிரஹத்தின் முதல் தர்மம். பிறகு எதிரி வாக்கை மீறினால் அதற்குத் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படியில்லாமல், உலகத்திலே எல்லாருமே அயோக்கியர்கள் என்று எண்ணிக் கொண்டு சத்தியாக்கிரஹத்தைக் கையாள முடியாது. பிறரை நம்புவது என்னிடமுள்ள குறை என்று நீங்கள் நினைக்கலாம். அப்படி நினைத்தால், அந்தக் குறையுடனேயே என்னை உங்கள் தலைவனாக ஏற்றுக் கொள்ள வேண்டும். என்ன சொல்கிறீர்கள் ?" என்று கேட்டார். எல்லாரும் ஒருமுகமாகக் காந்திஜியை மீண்டும் தலைமை ஏற்கும்படியும், போரைத் திருப்பத் தொடங்கி நடத்தும்படியும் கேட்டுக் கொண்டார்கள்.
-------
டிரான்ஸ்வால் முழுவதிலும் வசித்த இந்தியர்களிடையே மறுபடியும் பிரசாரம் ஆரம்பமாயிற்று. எல்லா இடங்களிலும் பொதுக் கூட்டங்கள் போட்டுத் தளபதி ஸ்மட்ஸ் செய்த மோசத்தைப் பற்றி எடுத்துச் சொல்லப்பட்டது. இந்தியர்கள் எல்லாரும் ஒருமுகமான உற்சாகம் காட்டினார்கள். மீண்டும் போராட்டத்தைத் தொடங்கவும் சிறை செல்லவும் சித்தமா யிருப்பதாகத் தெரிவித்தார்கள். தாங்களாகப் பதிவு செய்து கொண்டவர்களிடமிருந்து, பதிவுப் பத்திரங்கள் வாங்கிச் சேகரிக்கப்பட்டன. டிரான்ஸ்வால் சர்க்காருடன் காந்திஜி நடத்தி வந்த கடிதப் போக்குவரவில் பலனில்லாவிட்டால், மேற்படி பதிவுப் பத்திரங்களை யெல்லாம் ஓரிடத்தில் சேர்த்து வைத்துச் சொக்கப்பானை கொளுத்திவிடுவது என்று தீர்மானிக் கப்பட்டது.
தளபதி ஸ்மட்ஸ் வாக்களித்தபடி ஆசியாக்காரர் சட் டத்தை ரத்து செய்யவேண் டும் என்றும், புதுச் சட்டம் கொண்டு வரக்கூடாதென்றும் இந்தியரின் சார்பாக டிரான்ஸ் வால் சட்ட சபைக்கு மகஜர் அனுப்பப்பட்டது. அது பயனளிக்கவில்லை. மசோதாவைச் சீக்கிரத்தில் சட்டமாக்குவதற்கு நடவடிக்கை நடந்து கொண்டிருந்தன. எனவே, கடைசி கடைசியாகச் சத்தியாக்கிரஹிகள் டிரான்ஸ்வால் சர்க்காருக்கு ஒரு 'அல்ட்டிமேட்டம் ' - அதாவது, இறுதி எச்சரிக்கை - அனுப்பினார்கள்.
மேற்படி கடைசிக் கடிதத்தில் இந்தியர்கள் தங்களைச் 46 சத்தியாக்கிரஹிகள் என்பதாகக் குறிப்பிட்டுக் கொள்ள வில்லை. அதை ' இறுதி எச்சரிக்கை' (அல்ட்டிமேட்டம்) என்று குறிப்பிடவும் இல்லை. தளபதி ஸ்மட்ஸ் அவர்கள் தான் மேற்படி கடிதத்துக்கு 'இந்திய சத்தியாக்கிரஹிகளின் இறுதி எச்சரிக்கை' - என்று நாமகரணம் சூட்டினார்.
"சர்க்காரை இந்திய சத்தியாக்கிரஹிகள் இப்படி பய முறுத்தப் பார்க்கிறார்கள். இவர்களுடைய துணிச்சலை என்ன வென்று சொல்வது ? டிரான்ஸ்வால் அரசாங்கம் இந்தப் பயமுறுத்தலுக்கு இணங்கிவிடுமா ? டிரான்ஸ்வால் அரசாங்கத்தின் பலம் இவ்வளவு என்று தெரியாமல் இந்தக் கிளர்ச்சிக் காரர்கள் காரியம் செய்கிறார்கள். இவர்களுடைய பேச்சைக் கேட்டு நடந்தால் ஏழை இந்தியர்கள் அடியோடு அழிந்துபோக வேண்டியதுதான்!" என்று சொன்னார் தளபதி ஸ்மட்ஸ். இந்தியர்கள் இறுதி எச்சரிக்கை விடத் துணிந்த விஷயம் டிரான்ஸ்வால் சட்டசபை அங்கத்தினர்களுக்கு அளவில்லாத ஆத்திரத்தை மூட்டியது. இந்த ஆத்திரங் காரணமாக மேற்படி சட்டசபை அங்கத்தினர்கள் தளபதி ஸ்மட்ஸின் புதிய மசோதாவை ஒருமுகமாகவும் உற்சாகமாகவும் நிறைவேற்றி வைத்தார்கள்.
மேற்படி அங்கத்தினருக்கு இவ்வளவு கோபத்தை உண்டாக்கிய இந்தியர்களின் இறுதிக் கடிதத்தில் என்ன தான் எழுதி யிருந்தது என்று இப்போது கவனிக்கலாம். அதன் சாராம்சம் பின் வருமாறு:
'தளபதி ஸ்மட்ஸுக்கும் இந்தியர்களுக்கும் ஏற்பட்ட ராஜி உடன்பாட்டின் முக்கியமான அம்சம், இந்தியர்கள் தாங்களாகவே பதிவு செய்து கொள்ளும் பட்சத்தில், அதை அங்கீகரித்துக் கொண்டு ஆசியாக்காரர் சட்டத்தை ரத்து செய்யவேண்டும் என்பதே. அரசாங்கத்தார் திருப்தியடையும் முறையில் இந்தியர்கள் பெரும்பாலோர் தாங்களாகவே முன் வந்து பதிவு செய்து கொண்டிருக்கிறார்கள். ஆகையால் ஆசியாக்காரர் சட்டத்தை இப்போது ரத்து செய்வது தான் முறை யாகும். இதை ஞாபகப்படுத்தித் தளபதி ஸ்மட்ஸுக்கு இந்தியர்கள் பல கடிதங்கள் எழுதியும் பயன் விளையவில்லை.
தளபதியிடமிருந்து இதுவரையில் பதிலே கிடைக்கவில்லை. இன்னும், சட்ட முறைக்கு உட்பட்டுச் செய்யக்கூடிய முயற்சிகளை யெல்லாம் செய்து பார்த்து விட்டோம். ஒன்றிலும் பயனில்லை. இது காரணமாக இந்திய சமூகத்தினிடையே பெரும் அதிருப்தியும் ஆத்திரமும் உண்டாகி வளர்ந்து வருகிறதென் பதைச் சட்டசபை அங்கத்தினருக்குத் தெரியப்படுத்த விரும்புகிறோம். ராஜி உடன்பாட்டின் நிபந்தனையின் பிரகாரம் ஆசியாக்காரர் சட்டத்தை உடனே ரத்து செய்ய வேண்டு மென்று வற்புறுத்துகிறோம். அவ்விதம் ஆசியாக்காரர் சட் டத்தை ரத்து செய்துவிட்டதாக ஆகஸ்டு 16-ந் தேதிக்குள் அரசாங்கத்தாரிடமிருந்து தகவல் கிடைக்கா விட்டால், இந்தி யர்கள் தாங்களாகப் பதிவு செய்து கொண்டு பெற்ற சர்டிபி கேட்டுகளை யெல்லாம் கொளுத்தி விடுவதென்று இந்திய சமூகம் முடிவு செய்திருக்கிறது. இந்தக் காரியத்தின் விளைவாக ஏற்படும் பலாபலன் களை இந்திய சமூகம் அநுபவிக்கத் தயாரா யிருக்கிறது என்பதைப் பணிவுடன் தெரிவித்துக் கொள் கிறோம்."- மேற்படி கடிதத்தில் பதில் கிடைப்பதற்கு ஆகஸ்டு 16௳ என்று தவணை குறிப்பிட்டிருந்த காரணத்தினால் அதை இறுதிக் கடிதம் என்றும், எச்சரிக்கை என்றும், பயமுறுத்தல் என்றும் வெள்ளைக்காரர்கள் கருத நேர்ந்தது. இந்தக் கடிதத்தை அ னுப்புவதற்கு முன்னால் இந்தியத் தலைவர்களுக்குள்ளே சாங்கோபாங்கமாக விவாதம் நடந்து, ஆட்சேப சமாதானங்கள் சொல்லி முடிந்து, அதற்குப் பிறகு தான் எப்படியும் கடிதத்தை அனுப்பியே தீர்வது என்று தீர்மானிக்கப்பட்டது. ஆகையால் வெள்ளைக்காரர்கள் பலர் ஆத்திரங் கொண்டது பற்றி இந்தியர்கள் கவலைப்படவில்லை. தங்களுக்குச் சரியாகத் தோன்றும் காரியத்தைச் செய்வதற்காக எந்த விதமான கஷ்டம் ஏற்பட்டாலும் சகித்துக் கொள்ள இந்தியர்கள் சித்தமாயிருந்தார்கள்.
டிரான்ஸ்வால் சட்டசபையில் என்றைய தினம் புதிய ஆசியாக்காரர் மசோதாவை நிறைவேற்றுவதற்காகக் குறிப் பிட்டிருந்தார்களோ அதே தேதியில் இந்தியர்கள் ஸ்மட்ஸ் சர்க்காருக்கு விடுத்த இறுதிக் கடிதத்தில் குறிப்பிட்ட தவணையும் முடிவாயிற்று.
அன்றைய தினம் அதாவது 1908-ம் வருஷம் ஆகஸ்டு 16௳ ஜோகானிஸ்பர்க் ஹமீதியா மசூதியைச் சேர்ந்த மைதானத்தில் மாலை நாலு மணிக்குப் பொதுக்கூட்டம் போட்டிருந்தது. அரசாங்கத்தாரிட மிருந்து பதில் எதுவும் வராது என்றே காந்தி மகாத்மாவும் மற்ற இந்தியர்களும் எண்ணினார்கள். ஆயினும் ஒரு வேளை, கடைசி நிமிஷத்தில் அரசாங்கத்தின் மனம் மாறித் தந்தி மூலம் ஏதேனும் பதில் வந்தால், அதை உடனே பொதுக் கூட்டம் நடக்கும் இடத்துக்குக் கொண்டு வர ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது.
குறிப்பிட்ட காலத்துக்கு மிக முன்னதாகவே ஹமீதியா மசூதி மைதானத்தில் இந்தியர்கள் வந்து கூடி விட்டார்கள். ஒரு அங்குல இடமும் மிச்சம் வைக்காமல் கூட்டம் கூடி விட்டது. காந்திஜி முதலிய தலைவர்களும் முன்னதாகவே வந்து விட்டார்கள். மைதானத்தின் ஒரு மூலையில் ஒரு மேடை அமைக்கப்பட்டிருந்தது. நீகிரோவர்கள் சமூக விருந்து சமைத்துச் சாப்பிடுவதற்கு, நாலு கால்கள் உடைய பெரிய கொப் பறைகளை உபயோகிப்பது உண்டு. அத்தகைய பிரம்மாண்டமான கொப்பறை ஒன்றை இந்திய வியாபாரி ஒருவரிடமிருந்து வாங்கி வந்து மேடையின்பேரில் ஏற்றி யிருந்தார்கள். குறிப்பிட்ட காலத்துக்குள் சர்க்காரிடமிருந்து தகவல் வராவிட்டால், சர்டிபிகேட்டுகளை யெல்லாம் அந்தக் கொப்பறையில் போட்டுக் கொளுத்தி விடுவது என்று திட்டமாகி யிருந்தது.
பொதுக் கூட்டம் ஆரம்பிக்கும் தறுவாயில் தொண்டர் ஒருவர் சைகிளில் ஏறி விரைந்து வந்தார். அத் தொண்டர் கொண்டுவந்த தந்தி காந்திஜியிடம் கொடுக்கப்பட்டது. அரசாங்கத்தாரிடமிருந்து வந்த தந்திதான் அது. தந்திக்குள்ளே என்ன எழுதி யிருக்கும் ? சாதகமான பதில் இருக்குமா ? இந்த எண்ணத்தினால் ஏற்பட்ட பரபரப்புடன் காந்திஜி தந்தியைப் பிரித்துப் படித்தார். "இந்திய சமூகம் மேற் கொள்ள எண்ணியிருக்கும் நடவடிக்கைக்காக மிகவும் வருந்துகிறோம். அதற்காக அரசாங்கத்தின் உத்தேசத்தை மாற்றிக்கொள்ள முடியாது" என்று தந்தியில் எழுதி யிருந்தது. உடனே பொதுக் கூட்டத்தில் கூடியிருந்த ஜனங்களுக்குச் சர்க்காரிடமிருந்து வந்த பதில் படித்துக் காட்டப்பட்டது.
அதைக் கேட்டார்களோ இல்லையோ, மைதானத்தில் கூடியிருந்த அவ்வளவு ஜனங்களும் அளவில்லா உற்சாகத்துடன் பலத்த கரகோஷம் செய்தார்கள். அரசாங்கத்திடமிருந்து 'இல்லை' என்று வந்த பதில்தான் அவர்களுக்கு அத்தனை உற்சாகம் அளித்தது. சாதகமான பதில் வந்திருந்தால், சர்டிபி கேட்டுகளை எரிப்பதற்காகச் செய்த ஏற்பாடு வீணாகி விடு மல்லவா ? இந்தியர்கள் போராட்டம் நடத்துவதில் அவ்வளவு ஆர்வம் கொண்டிருந்தபடியால், சர்க்காரிடமிருந்து சாதகமான பதில் வருவதை விரும்பவில்லை என்று தோன்றியது. இந்தியர்கள் தங்களுடைய வலிமையை உணர்ந்திருந்தார்கள் என்பதற்கு அந்தக் கரகோஷ ஆரவாரம் அறிகுறியாக இருந்தது.
பொதுக் கூட்டம் ஆரம்பமாயிற்று. கூட்டத்தின் தலைவர் சொல்லவேண்டியதை யெல்லாம் சொல்லி, “போராட்டம் என் றால் விளையாட்டு அல்ல ; பல கஷ்ட நஷ்டங்களுக்குத் தயாரா யிருக்கவேண்டும்" என்று எச்சரித்தார். மற்றும் பலர் பேசினார்கள், தீர்மானங்களும் நிறைவேற்றப் பட்டன. கடைசியாகக் காந்தி மகான் பேச எழுந்தார். ராஜி ஏற்பாட்டின் நிபந்தனைகளை விளக்கமாகச் சொன்னார். அந்த நிபந்தனைகளைச் சர்க்கார் நிறைவேற்ற மறுத்ததையும், நிறைவேற்றும்படி செய்வதற்கு இந்திய சமூகம் செய்த பிரயத்தனங்களையும் எடுத்துச் சொன்னார். கடைசியாகக் காந்தி மகான் கூறியதாவது: "உங்களில் பெரும்பாலோர் சர்டிபிகேட்டுகளை எரிப்பதற்காகக் கொடுத்திருக்கிறீர்கள். கொடுத்த பிறகு யாருக்காவது மனம் மாறியிருந்தால், சர்டிபிகேட்டை எரிக்காமல் வைத்துக் கொள்ள வேண்டும் என்று இஷ்டப்பட்டால், உடனே எழுந்து இந்த மேடைக்கு வரலாம் ; சர்டிபிகேட் அவருக்குத் திருப்பிக் கொடுக்கப்படும். வெறுமனே சர்டிபிகேட்டை எரித்து விட்டால் மட்டும் போதாது. அதன் பிறகு நடக்கும் போராட்டத்தில் உறுதியாக நிற்க வேண்டும். இப்போது சர்டிபிகேட்டைத் திருப்பி வாங்கிக் கொள்வதில் தவறு ஒன்றுமில்லை; அவமானமும் இல்லை. ஆனால் இன்றைக்கு எரித்துவிட்டு நாளைக்கு மறுபடியும் போய்ப் பதிவு செய்து சர்டிபிகேட் வாங்கினால் அதைக்காட்டிலும் இந்திய சமூகத்துக்கு ஒரு இந்தியர் செய்யக் கூடிய துரோகம் வேறு ஒன்றும் கிடையாது. ஆகையால் தீர்க்கமாக ஆலோசித்துச் சொல்லுங்கள். இஷ்டப்பட்டவர் கள் இப்போதுகூடச் சர்டிபிகேட்டுகளைத் திருப்பி வாங்கிக் கொண்டு விடலாம்!"
காந்திஜி இவ்விதம் பேசிக் கொண்டிருக்கையிலேயே கூட் டத்தில், "எங்களுக்கு சர்டிபிகேட் வேண்டாம் ; எரித்து விடுங்கள்!" என்ற கூச்சல் எழுந்தது. காந்திஜியின் பேச்சு முடிந்ததும் ஒரே குரலாகக் கூட்டத்தார் அதே பதிலைச் சொன்னார்கள். மகாத்மாவைத் தடியால் அடித்த மீர் ஆலம் என்னும் பட்டாணியனும் கூட்டத்துக்கு வந்திருந்தான். அவன் திடீரென்று எழுந்து நின்றதும் என்ன சொல்லப் போகிறானோ என்று அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்தனர். "நான் தங்களை அடித்தது பெரும் பிசகு. அதற்காக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன், என்பேரில் கோபம் வைத்துக்கொள்ள வேண்டாம்!" என்று சொல்லிவிட்டு, தன்னுடைய சர்டிபிகேட்டையும் எரிப்பதற்காகக் கொண்டு வந்து கொடுத்தான் ! கூட்டத்தில் காது செவிடு படும்படியான கரகோஷம் எழுந்தது. காந்திஜி மீர் ஆலத்தின் கையைப் பிடித்துக் குலுக்கி, "அப்பனே ! உன் பேரில் எப்போதுமே எனக்குக் கோபம் இருந்ததில்லையே !" என்றார்.
அதுவரை சத்தியாக்கிரஹக் கமிட்டியார் இரண்டாயிரம் சர்டிபிகேட்டுகள் சேகரித்திருந்தார்கள். அவ்வளவும் கொப் பறையில் போடப்பட்டன. அவற்றின் மேல் மண்ணெண்ணெய் ஊற்றப்பட்டது. ஜனாப் எஸ்ஸப்மியான் தீக்குச்சியைக் கிழித்துக் கொப்பறைக்குள் போட்டார். தீப்பிடித்துக் கொண்டது. சில நிமிஷத்துக்கெல்லாம் ஜூவாலை விட்டு எரியத் தொடங்கியது. ஏற்கெனவே சர்டிபிகேட்டுகளைக் கொடாதவர்கள் பலர் கையோடு சர்டிபிகேட்டுகளைக் கொண்டு வந்தார்கள். அவர்கள் ஒவ்வொருவராக மேடைக் குச் சென்று தங்கள் சர்டிபிகேட்டுகளை நெருப்பிலே போட்டார்கள். ஒவ்வொருவரும் சர்டிபிகேட்டைக் கொண்டுவந்து போட்டபோது கரகோஷம் வானை அளாவியது. இவ்விதமாக அளவில்லா உற்சாகத்தினிடையே சர்டிபிகேட் தகனம் நடந்து முடிந்தது.
இதை யெல்லாம் ஆங்கிலப் பத்திரிகைகளின் பிரதிநிதிகள் சிலர் வந்து பார்த்துக் கொண்டிருந்தார்கள். நடந்ததை யெல்லாம் விவரமாகப் பத்திரிகைகளுக்கு எழுதினார்கள். லண்டன் 'டெயிலி மெயில்' பத்திரிகையின் நிருபர் ஒருவரும் வந்திருந்தார். அவரும் இந்த நிகழ்ச்சியைப் பற்றி விவரமான செய்தியைத் தம் பத்திரிகைக்கு அனுப்பினார், அமெரிக்க சுதந்திரப் போரின் ஆரம்பத்தில் பாஸ்டன் துறைமுகத்திற்கு வந்த பிரிட்டிஷ் கப்பலில் அமெரிக்கர்கள் ஏறி அதிலிருந்த தேயிலைச் சரக்கையெல்லாம் கடலில் தள்ளிய சரித்திரப் பிரசித்தியான சம்பவத்தோடு டிரான்ஸ்வால் இந்தியர்கள் சர்டிபிகேட்டுகளை எரித்ததை மேற்படி நிருபர் ஒப்பிட்டிருந்தார்.
உவமானம் அவ்வளவு பொருத்தமில்லை தான். சுதந்திரத்துக்காக ஆங்கிலேயருடன் போர் தொடங்கிய அமெரிக்கர்கள் பெருந்தொகையினர். அதோடு அவர்களிடம் சகலவிதமான ஆயுதங்களும் பயிற்சி பெற்ற சைன்யமும் இருந்தன.
ஆனால் டிரான்ஸ்வால் இந்தியர்களோ சொற்பத் தொகையினர். அவர்களிடம் ஆயுதம் ஒன்றும் இல்லை; ஆயுதத்தை அவர்கள் விரும்பவும் இல்லை. சத்தியத்தையும் அஹிம்சையையுமே ஆயுதங்களாகக் கொண்டு வலிமை மிக்க டிரான்ஸ்வால் சர்க்காருடன் இந்தியர்கள் போர் தொடங்கினார்கள்.
-------------
இந்தியர்கள் பதிவுப் பத்திரங்களை எரித்த சம்பவம் தென் னாப்பிரிக்கா வெள்ளைக்காரர்களுக்கும் டிரான்ஸ்வால் அரசாங்கத்துக்கும் பெரிதும் ஆத்திரத்தை உண்டாக்கிய து. ஆனால் பெரிய இராஜ தந்திரியான தளபதி ஸ்மட்ஸ் அதனால் நிதானம் இழந்து விடவில்லை. "பதிவுப் பத்திரங்களை எரித்தால் எரித்து விட்டுப் போகட்டும். அது நடவடிக்கை எடுக்கத் தக்க குற்ற மாகாது. இந்தியர்கள் மேலே என்ன செய்கிறார்கள் என்று பார்க்கலாம்" என்று சொல்லிவிட்டுச் சும்மா இருந்தார். சர்க்கார் சிறிது காலம் சும்மா இருந்தால் இந்தியர்களுடைய கிளர்ச்சி அடங்கிவிடும் என்பது அவருடைய எண்ணம்.
அதே சமயத்தில் புதிய இந்தியர்கள் டிரான்ஸ்வாலுக்குள் வருவதைத் தடுக்கும் வேறு ஒரு சட்டம் டிரான்ஸ்வால் சட்ட சபையில் கொண்டு வந்து நிறைவேற்றினார். இது பொதுப் படையாக டிரான்ஸ்வாலுக்குள் புதுமனிதர்கள் வருவதைக் கட்டுப்படுத்தும் சட்டந்தான். ஆனால் போட்டிருந்த நிபந்தனைகள் காரியாம்சத்தில் இந்தியர்கள் வருவதை மட்டுமே தடுத்தன. உதாரணமாக, ஐரோப்பிய பாஷை ஏதாவது ஒன்று தெரிந்திராதவர் டிரான்ஸ்வாலுக்குள் வரக்கூடாது என்பது ஒரு நிபந்தனை.
காந்திஜியின் யோசனைப்படி மேற்படி புதிய குடியேற்றக் கட்டுப்பாட்டுச் சட்டத்தையும் எதிர்த்துச் சத்தியாக்கிரஹம் செய்வது என்று இந்தியர்கள் தீர்மானித்தார்கள்.
"பார்த்தீர்களா, இந்தியர்களின் போக்கை ? முதலிலே ஆசியாக்காரர் சட்டத்தை மட்டும் ஆட்சேபிப்பதாகச் சொன்னார்கள். இப்போது குடியேற்றத்தைக் கட்டுப்பாடு செய்யும் சட்டத்தையும் எதிர்த்துச் சத்தியாக்கிரஹம் செய்யப் போவதாகச் சொல்கிறார்கள். இந்தியர்கள் இடத்தைக் கொடுத்தால் மடத்தைப் பிடுங்கப் பார்ப்பார்கள் என்பது இதிலிருந்தே தெரியவில்லையா ? ” என் று தளபதி ஸ்மட்ஸ் பிரசாரம் செய்தார்.
ஸ்மட்ஸின் பிரசாரத்துக்கு இந்தியர்கள் பயந்து விடவில்லை. “எங்களுடைய உரிமைகளைப் பறிக்கும் எந்தச் சட்டத்தையும் ஆட்சேபித்துச் சத்தியாக்கிரஹம் செய்ய எங்களுக்கு உரிமை உண்டு" என்று பதில் சொன்னார்கள்.
புதிய சட்டத்தை எதிர்த்து எப்படிச் சத்தியாக்கிரஹம் செய்வது என்னும் கேள்வி பிறந்தது. அதற்குக் காந்திஜி தக்க யோசனை கூறினார். நேட்டால் மாகாணத்திலிருந்து சில இந்தியர்கள் டிரான்ஸ்வாலுக்குள் பிரவேசிக்க வேண்டும் என்றும் அதன் விளைவு என்ன ஆகிறது என்று பார்க்க வேண்டும் என் றும் கூறினார். நேட்டாலில் வசித்த ஸோராப்ஜி ஷாபூர்ஜி அதா ஜேனியா என்னும் பார்ஸி இளைஞரை முதன் முதல் சத்தியாக் கிரஹம் செய்வதற்குக் காந்திஜி தேர்ந்தெடுத்தார்.
அவ்விதமே ஸோராப்ஜி தாம் டிரான்ஸ்வாலுக்குள் குறிப்பிட்ட தேதியில் பிரவேசிக்கப் போவதாக டிரான்ஸ்வால் சர்க்காருக்கு அறிவித்துவிட்டு அந்தத் தேதியில் ரயில் ஏறி வந்தார். டிரான்ஸ்வால் எல்லையிலேயே அவர் கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவ்விதம் நடைபெற வில்லை. "சட்டத்தைச் சோதிப்பதற்காக வருகிறேன்" என்று பகிரங்கமாகச் சொல்லிவிட்டு வருகிற மனிதரை என்ன செய்வது என்று குடியேற்றக் கட்டுப்பாடு அதிகாரிக்குத் தெரியவில்லை. ஆகையால் எல்லைப்புறத்தில் ஸோராப்ஜியைத் தடை செய்யாமல் விட்டுவிட்டார்.
ஜோகானிஸ்பர்க்குக்கு ஸோராப்ஜி வந்ததும் அவரை இந்தி யர்கள் உற்சாகமாக வரவேற்றார்கள். சில இந்திய இளைஞர்கள், "ஸ்மட்ஸ் சர்க்கார் தோல்வியடைந்து விட்டனர்; இனி மேல் அவர்கள் ராஜிக்கு வரவேண்டியதுதான்" என்றுகூட நினைத்தார்கள். ஆனால் சீக்கிரத்திலேயே அவர்கள் தங்கள் தவறை உணர்ந்தார்கள். ஸோராப்ஜியைப்போல் எத்தனையோ இளைஞர்கள் இந்தியரின் உரிமைகளுக்காகத் தங்களைத் தியாகம் செய்யவேண்டி யிருக்கும் என்று தெரிந்துகொண்டார்கள்.
ஜோகானிஸ்பர்க் போலீஸ் சூபரின்டெண்டுக்கு ஸோராப்ஜி தம் வரலாற்றைப் பற்றித் தெருவித்தார். டிரான்ஸ்வாலிலேயே இருக்க உத்தேசத்திருப்பதாகவும் தமக்கு இங்கிலீஷ் பாஷை தெரியும் என்றும் தம்மைப் பரீட்சித்துக் கொள்ளலாம் என்றும் எழுதியிருந்தார். குறிப்பிட்ட தேதியில் கோர்ட்டில் வந்து ஆஜராகும்படி அவருக்கு ஸம்மன் வந்தது. கோர்ட்டில் விசாரணை ஆரம்பமான போது, காந்திஜி ஸோராப்ஜியின் கட்சியில் ஆஜராகி எதிர் வழக்காடினார். சட்டப்படி ஸோராப்ஜி குற்றம் செய்ய வில்லை யென்றும் அவரை உடனே விடுதலை செய்ய வேண்டும் என்றும் வற்புறுத்தினார். காந்திஜியின் வாதத்தை ஒப்புக் கொண்டு நீதிபதி ஸோராப்ஜியை விடுதலை செய்தார்.
ஆனால் மறுநாளே ஸோராப்ஜிக்கு இன்னொரு உத்தரவு வந்தது. ஏழு நாளைக்குள் ஸோராப்ஜி டிரான்ஸ்வாலை விட்டு வெளியேற வேண்டும் என்று உத்தரவில் கண்டிருந்தது. "நான் அப்படி வெளியேறப் போவதில்லை" என்று ஸோராப்ஜி உறுதியாகத் தெரிவித்தார். ஆகவே, அவர் மறுபடியும் கோர்ட்டுக்குப் போகவேண்டிய தாயிற்று. இந்தத் தடவை மாஜிஸ் ட்ரேட்டின் உத்தரவை மீறியதற்காக ஒரு மாதம் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.
ஸோராப்ஜி தண்டனை யடைந்ததைத் தொடர்ந்து நேட்டாலிலிருந்து இன்னும் பல இந்தியப் பிரமுகர்கள் வரத் தொடங்கினார்கள். இவர்கள் நேட்டாலில் நிலையாகத் தங்கி வியாபாரம் முதலிய தொழில்களைச் செய்து வந்தவர்கள். ஆகவே டிரான்ஸ்வாலுக்கு வரவேண்டிய அவசியம் ஒன்றும் இவர்களுக்குக் கிடையாது. டிரான்ஸ்வாலுக்குள் வர இந்தியர்களுக்கு உரிமையுண்டு என்பதை ஸ்தாபிப்பதற்காகவே இவர் கள் வந்தார்கள். இப்படி வந்தவர்களில் சேத் தாவூத் முகம் மதுவும், பார்ஸி ரஸ்டம்ஜியும் பெரிய வியாபாரிகள். சுரேந்திர ராய், கண்டுபாய் தேஸாய், ரதன் ஸிமூல்வி, ஹரிலால் காந்தி ஆகியவர்கள் இன்னும் சிலர்.
இப்படிக் கூட்டமாக வந்தவர்களைச் சட்டத்தை மீறி டிரான்ஸ்வா லுக்குள் வரும்படி விட்டுவிட்டால் டிரான்ஸ்வால் சர்க்காரின் மதிப்பு என்ன ஆகிறது ? எனவே அவர்களைக் கைது செய்து மாஜிஸ்ட்ரேட் முன்னிலையில் கொண்டுவந்தார்கள். ஏழு நாளைக்குள் அவர்கள் டிரான்ஸ்வாலை விட்டு வெளியேற வேண்டும் என்று மாஜிஸ்ட்ரேட் உத்தரவு போட்டார். அவர்கள் உத்தரவை மீறி டிரான்வாலிலேயே இருந்தார்கள். பிரிட்டோரியாவில் அவர்களை மறுபடியும் போலீஸார் கைது செய்து விசாரணை ஒன்று மில்லாமல் டிரான்ஸ்வாலுக்கு வெளியிலே கொண்டுபோய் விட்டார்கள். அப்படி விடப்பட்ட வர்கள் இரண்டாவது தடவையும் டிரான்ஸ்வாலுக்குள்ளே பிரவேசித்தார்கள். இதன் பேரில் அவர்கள் கைது செய்யப் பட்டனர். விசாரணை நடந்து, "ஐம்பது பவுன் அபராதம் அல்லது மூன்று மாதம் கடுங்காவல் " என்று தீர்ப்பு அளிக்கப் பட்டது. சேத் தாவூத் முதலியவர்கள் அபராதம் கட்ட மறுத்துக் குதூகலத்துடன் சிறைக்குச் சென்றார்கள்.
இப்படி நேட்டால் இந்தியப் பிரமுகர்கள் டிரான்ஸ்வாலுக்குப் படையெடுத்து வந்து சத்தியாக்கிரஹம் செய்து சிறைக்குப் போய்க்கொண்டிருக்கும்போது டிரான்ஸ்வால் இந்தியர்கள் சும்மா இருக்க முடியுமா ? சர்ட்டிபிகேட்டை எரித்து விட்டதற்காகச் சர்க்கார் அவர்களை ஒன்றும் செய்கிற தாகக் காணோம். எனவே, சிறை செல்லுவதற்கு வேறு வழிகளைக் கண்டுபிடிக்க வேண்டிய தாயிற்று. சிலர் டிரான்ஸ்வாலிலிருந்து வெளியேறிச் சென்று மறுபடி டிரான்ஸ்வாலுக்குத் திரும்பி வந்தார்கள். இப்படித் திரும்பி வரும்போது சர்ட்டிபிகேட்டைக் காட்டியாக வேண்டும். எரிந்துபோன சர்ட்டிபிகேட் திரும்ப எப்படி வரும்? எனவே அவர்களைப் போலீஸார் கைது செய்தனர்.
சிறை புகுவதற்கு இன்னொரு வழியும் கண்டுபிடிக்கப் பட்டது. இந்தியர்கள் பதிவுப் பத்திரத்தைக் காட்டினால் தான் வியாபார லைசென்ஸ் கிடைக்கும். வியாபார லைசென்ஸ் இல்லாமல் வியாபாரம் செய்வது சட்டப்படி குற்றமாகும். ஆகவே சில இந்தியர்கள் ஏற்கெனவே வியாபாரிகளா யில்லா விட்டாலும் சத்தியாக்கிரஹம் செய்து சிறை புகுவதற்காக ஏதாவது ஒரு சாமானை எடுத்துக்கொண்டு தெருவில் விற்பனை செய்தார்கள். அவர்களையும் கைது செய்து சிறைக்கு அனுப்ப வேண்டியதாயிற்று. இப்படிப் புதிதாகத் தெரு விற்பனை செய்து சிறை புகுந்தவர்களில் இமாம் சாகிப் என்னும் முஸ்லிம் பெரியார் ஒருவர். ஜோசப் ராயப்பன் என்னும் பாரிஸ்டர் இன் னொருவர். பாரிஸ்டர் ராயப்பன் நிறையப் பணம் சம்பாதித்து ஆங்கில முறையில் வாழ்க்கை நடத்தியவர். வீட்டுக்குள்ளே கூட பூட்ஸ் போட்டுக் கொண்டுதான் நடப்பார். அப்படிப் பட்டவர் ஒரு கூடையில் கறிகாய்களை நிரப்பிக்கொண்டு தெருவில் விற்பனை செய்யச் சென்று கைதியானார்!
இப்படியாக நேட்டால் இந்தியர்களும் டிரான்ஸ்வால் இந்தியர்களும் போட்டி போட்டுக்கொண்டு டிரான்ஸ்வால் சிறைகளை நிரப்பினார்கள். காந்திஜியும் கைதியானார். சில காலம் காந்திஜியை மற்ற இந்தியக் கைதிகளோடு சேர்த்து வைத்திருந்தார்கள். அப்புறம் அவரைத் தனியாய்ப் பிரித்து விட வேண்டும் என்று கருதிப் பிரிடோரியா சிறைக்குக் கொண்டு போய் அபாயகரமான கைதிகளுக்காக ஏற்பட்ட, தனிக் கொட்டடி யில் அடைத்து வைத்தார்கள்.
ஆயினும் சத்தியாக்கிரஹ இயக்கம் ஓய்கிற வழியாயில்லை. எத்தனை இந்தியர்களைச் சிறைப்படுத்துவது ? எத்தனை நாள் வைத்திருப்பது? இதற்குச் செலவு வேறு சர்க்காருக்கு ஆகிக் கொண்டிருந்தது. எனவே, இயக்கத்தை அடக்கச் சர்க்கார் வேறு வழி தேடத் தொடங்கினார்கள்.
முதலில் டிரான்ஸ்வால் மாகாணத்திலிருந்து வெளியே கொண்டுவிடும் முறையைச் சிலர் விஷயத்தில் கையாண்டார்கள் அல்லவா ? டிரான்ஸ்வால் எல்லையைத் தாண்டி நேட்டால் அல்லது ஆரஞ்சு பிரீஸ்டேட்டில் விடப்பட்ட சத்தியாக் கிரஹிகளுக்கு அது ஒரு தமாஷா யிருந்தது. உடனே சட்டத்தை மீறி மறுபடி டிரான்ஸ்வாலுக்குள் அவர்கள் பிரவேசிப்பதற்கு வசதியாகவும் இருந்தது. இந்த மாதிரி இந்தியர்களை வெளி யேற்றுவதில் பயனில்லை யென்று கண்ட டிரான்ஸ்வால் சர்க்கார் சத்தியாக்கிரஹிகளை டர்பன் துறைமுகத்துக்குக் கொண்டுபோய் அங்கே கப்பலில் ஏற்றி இந்தியாவிலேயே கொண்டு விட்டுவிடுவது என்று தீர்மானித்தார்கள். இது மிகவும் கொடுமையான தண்டனையாகும். ஏனெனில், இப்படிக் கப்பல் ஏற்றப்பட்ட இந்தியர்களில் பலர் தென்னாப்பிரிக்காவில் பிறந்து வளர்ந்தவர்கள்; இந்தியாவை அவர்கள் பார்த்ததே யில்லை. அவர்களில் பலருக்குத் தென்னாப்பிரிக்காவில் கொஞ்சம் சொத்து இருந்தது ; சிலருக்குக் கடை இருந்தது ; வேறு சிலர் குடும்பஸ்தர்கள். கடன் பட்டிருந்தவர்களும் உண்டு. இப்படித் தென்னாப்பிரிக்காவிலேயே வேரூன்றியவர்களைத் திடீ ரென்று பிடித்துக் கப்பலில் ஏற்றி ஆயிரக்கணக்கான மைலுக்கு அப்பால் கொண்டு போய்விட்டால் அவர்கள் என்ன செய்வார்கள் ? அதோடு, கப்பல் பிரயாணத்தின் போது எத்தனையோ கஷ்டங்கள் காத்திருந்தன. அவர்கள் கையில் பணங் காசு இல்லை. கப்பல் அதிகாரிகள் கொடுத்த உணவைச் சாப்பிட்டு விட்டுக் கப்பல் மேல் தட்டில் விழுந்து கிடக்க வேண்டும்.
இவ்விதம் முதல் கோஷ்டி இந்தியர்களைக் குறிப்பிட்ட கப்பலில் ஏற்றி அனுப்புகிறார்கள் என்று தெரிய வந்ததும் காந்திஜி பெரிதும் கலக்கமடைந்தார். அவர்களுக்கு எந்த விதத்தில் உதவி செய்வது என்று ஆலோசித்தார். பண உதவி செய்யலாம் என்பதற்குக் கையில் போதிய பணமும் இல்லை. அதோடு, பண உதவி செய்யும் வழக்கம் ஏற்பட்டுவிட்டால் இயக்கத்தின் தியாக சக்தி போய்விடும் என்றும் விரும்பத் தகாதவர்கள் இயக்கத்தில் வந்து சேர்ந்து விடுவார்கள் என்றும் மகாத்மா எண்ணினார். கடைசியில், ஒரு யோசனை தோன்றியது. யாராவது ஒரு இந்தியப் பிரமுகரை அதே கப்பலில் அனுப்பி வைத்தால் தண்டனையின் பேரில் வெளியேற்றப் படுகிறவர்களுக்கு ஆறுதலா யிருக்கும். இந்தியாவில் போய் இறங்கியதும் அவர்களுக்கு அவசியமான உதவி கிடைப்பதற்கு அந்தப் பிரமுகர் ஏற்பாடு செய்யக் கூடுமல்லவா ?
சத்தியாக்கிரஹப் போரின் முன்னணியில் நின்றவர்களில் ஒருவரான ஸ்ரீ பி. கே, நாயுடுவை அவ்வாறு கப்பல் துணையாக அனுப்பக் காந்திஜி விரும்பினார். உடனே ஸ்ரீ பி. கே. நாயுடு வைக் கூப்பிட்டு, "கப்பலேற்றிக் கட்டாயமாக அனுப்பப்படும் ஏழைச் சகோதரர்களோடு நீங்களும் இந்தியாவுக்குப் போகமுடியுமா ? " என்று கேட்டார்.
"பேஷாக முடியும்" என்றார் நாயுடு.
"கப்பல் இன்னும் சற்று நேரத்தில் புறப்படப் போகிறதே ? "
"அதனால் என்ன ? இந்த நிமிஷமே நான் புறப்படத் தயார்."
“ இரண்டாவது உடுப்பு வேண்டாமா? வழியில் சாப்பாட் டுக்கு என்ன செய்வீர்?”
"நான் இப்போது அணிந்திருக்கும் உடுப்பே போதும். கப்பலில் எல்லாருக்கும் கொடுக்கும் சாப்பாட்டை நானும் சாப்பிட்டுக் கொள்கிறேன்."
டர்பனில் பார்ஸி ரஸ்டம்ஜி வீட்டில் மேற்படி சம்பாஷணை நடந்தது. காந்திஜி இரண்டாவது தடவை சிறை வாசத்தை முடித்து வெளிவந்த பிறகு, இந்தியர்களைக் கப்பலேற்றி அனுப்பப் போகிற விஷயம் தெரிந்து அதற்காகவே டர்பனுக்கு வந்திருந்தார். ஸ்ரீ பி. கே. நாயுடுவின் பதில் காந்திஜிக்கு எல்லை யற்ற மகிழ்ச்சியை அளித்தது. உடனே கொஞ்சம் உடைகளும் கம்பளிப் போர்வைகளும் சம்பாதித்து ஸ்ரீ பி. கே. நாயுடுவிடம் கொடுத்தார்.
"இந்த ஏழைச் சகோதரர்களை உங்கள் வசத்தில் ஒப்புவித்திருக்கிறேன். முதலில் அவர்களுடைய சௌகரியங்களைக் கவனித்துவிட்டு அப்புறம் உங்களுடைய சௌகரியத்தைப் பார்க்க வேண்டும்!" என்று காந்திஜி சொல்லி அனுப்பினார். ஸ்ரீ பி. கே., நாயுடு மகாத்மாவின் வார்த்தையை அப்படியே நிறைவேற்றி வைத்தார்.
-------------
டிரான்ஸ்வால் சர்க்கார் இந்தியர்களைக் கப்பலேற்றி இந்தியாவுக்குப் பலாத்காரமாக அனுப்பியது சட்ட விரோதமான காரியம். அதோடு, இரக்கமற்ற கொடுமையான காரியம். இந்தியாவைப் பார்த்தே அறியாதவர்களும் டிரான்ஸ்வாலிலேயே பிறந்து வளர்ந்து பிள்ளை குட்டி குடும்பம் உள்ளவர்களையும் திடீரென்று பிடித்துக் கப்பலேற்றி அனுப்பினால் அவர்கள் இந் தியாவுக்குச் சென்று திக்குத் திசை தெரியாமல் தவிப்பது இயற்கையே யல்லவா ? இது எவ்விதம் நியாயமாக முடியும் ? எந்தச் சட்டந்தான் அதற்கு இடம் கொடுக்கும் ?
எனவே, தென்னாப்பிரிக்காவிலும் இந்தியாவிலும் டிரான்ஸ்வால் சர்க்காரின் மேற்படி செயலைப் பற்றித் தீவிரமான கண்டனங்கள் எழுந்தன. கொஞ்ச நாளைக்குப் பிறகு டிரான்ஸ்வால் சர்க்கார் மேற்படி சட்ட விரோதமான முறையைக் கை விட வேண்டியதாயிற்று. ஆனால் அதற்குள்ளே டிரான்ஸ்வால் சர்க்காரின் நோக்கம் ஓரளவு நிறைவேறிவிட்டது. "கப்பல் ஏற்றி இந்தியாவுக்கு அனுப்புகிறார்கள் " என்று தெரிந்த பிறகு சத்தியாக்கிரஹ இயக்கத்தில் சேர்ந்த இந்தியர்கள் பலர் பின் வாங்கத் தொடங்கி விட்டார்கள்.
இந்திய சத்தியாக்கிரஹிகளின் உறுதியைக் குலைப்பதற்கு டிரான்ஸ்வால் சர்க்கார் வேறு கடுமையான முறைகளையும் கையாண்டார்கள். இதுவரையில் எல்லா இந்திய சத்தியாக் கிரஹிகளையும் ஒரே சிறையில் போட்டிருந்ததற்குப் பதிலாக வெவ்வேறு சிறைகளுக்குப் பிரித்து அனுப்பினார்கள். கடுமை யான வேலைகள் செய்யும்படி கட்டாயப் படுத்தினார்கள். டிரான்ஸ்வாலில் குளிர்காலத்தில் குளிர் மிகக் கடுமையாயிருக்கும். வேலை செய்யும் கைகள் உறைந்து செயலற்றுப் போகும்.
புதிய சாலை போடும் வேலை நடந்த ஓர் இடத்திற்குச் சில இந்திய சத்தியாக் கிரஹிகளைக் கொண்டு போய்க் கடுமையாக வேலை வாங்கினார்கள். இவர்களில் ஒரு சத்தியாக் கிரஹியின் பெயர் சாமி நாகப்பன். அவன் பதினெட்டு வயது இளம் பிள்ளை. அதிகாலையில் அவனை எழுந்திருக்கப் பண்ணிச் சாலை போடும் வேலை செய்யப் பண்ணினார்கள். சாமி நாகப்பன் கஷ் டத்தைப் பொருட்படுத்தாமல் சொன்ன வேலையைச் செய்து கொண்டிருந்தான். ஒரு நாள் அதிகாலையில் வேலை செய்த போது குளிரினால் 'டபிள் நிமோனியா' என்னும் அபாயகரமான சுரம் வந்துவிட்டது, அதிலிருந்து அவன் தேறவேயில்லை. அந் திய காலம் நெருங்கி விட்டது என்று அறிந்த பிறகு அவனை விடுதலை செய்தார்கள். 1909 ஜூலை 7௳ சாமி நாகப்பன் இவ்வுலக வாழ்வை நீத்தான்.
காந்தி மகாத்மா எழுதியிருக்கிறார் ;-- "நாகப்பனுக்குக் கடைசி மூச்சு இருந்த வரையில் சத்தியாக்கிரஹ இயக்கமே நினைவா யிருந்தான். அதைப் பற்றியே பேசினான். சுரத்திலும் சத்தியாக்கிரஹத்தைப் பற்றியே பிதற்றினான். இயக்கத்தில் சேர்ந்து சிறை சென்றது பற்றி அவன் வருத்தப்படவே யில்லை. நண்பனை அன்புடன் தழுவி வரவேற்பது போல் அவன் மரணத்தை வரவேற்றான். தற்காலத்தில் 'படித்தவன் ' என்பதற்கு நாம் பொருள் கொள்ளும் முறையில் நாகப்பன் படித்தவன் என்று சொல்ல முடியாது. ஆனால் அவனுடைய பொறுமையும் தேசபக்தியும் தியாக உணர்ச்சியும் மன உறுதியும் இணையின்றி விளங்கின. சாமி நாகப்பனைப் போன்ற பலர் இயக்கத்தில் சேர்ந்திரா விட்டால் சத்தியாக்கிரஹம் நடத்தி யிருக்கவே முடியாது."
இந்தியர்களின் மன உறுதியைக் குலைப்பதற்கு டிரான்ஸ்வால் சர்க்கார் இன்னும் பல கொடுமையான முறைகளையும் கையாண்டார்கள். அபாயகரமான முரட்டுக் கைதிகளை வைப் பதற்கு என்று டிரான்ஸ்வாலில் ஒரு தனிச் சிறைச்சாலை இருந் தது. இதற்குப் பெயர் 'டீப்கு லூப்' சிறை. இந்தச் சிறையின் அதிகாரியாக முரட்டுத்தனத்துக்குப் பெயர்போன ஜெயிலர் ஒருவர் இருந்தார். சாதுக்களான இந்திய சத்தியாக்கிரஹிகள் சிலரை இந்த 'டீப்கு லூப்' சிறைக்கு அனுப்பினார்கள். இங்கே ஜெயிலர் கொடுத்த கடுமையான வேலைகளை யெல்லாம் இந்தியர்கள் செய்தார்கள். ஜெயிலர் எந்த அளவு வேலை கொடுத்தாரோ அந்த அளவைப் பூர்த்தி செய்தார்கள். அப்படியும் ஜெயிலருக்குத் திருப்தி உண்டாகவில்லை. இந்தியர்களுடைய உறுதியைக் குலையச் செய்வது அல்லவா அங்கே அவர்களை அனுப்பியதின் நோக்கம் ? எனவே, இந்தியர்களைக் கடுமையாக வேலை வாங்கியது போதாது என்று ஜெயிலர் அவர்களை அவமதிப்பதும் திட்டுவதும் அதிகமாகி வந்தது. இதை இந்தியர்களால் பொறுக்க முடியவில்லை. "ஒன்று, எங்களை இந்தச் சிறையிலிருந்து மாற்றவேண்டும்; அல்லது ஜெயிலரை மாற்ற வேண்டும்" என்று கோரிக்கை செய்துவிட்டு, உண்ணாவிரதம் இருக்கத் தொடங்கினார்கள். அந்த நாளில் தென்னாப்பிரிக்கா சிறையில் அடைக்கப்பட்ட இந்திய சத்தி யாக்கிரஹிகளுக்குப் பரிகாரம் தேட வேறு உபாயமே கிடை யாது. சிறைக்கு உள்ளே என்ன நடக்கிறதென்பது வெளியே உள்ளவர்களுக்குத் தெரியாது. கைதிகளை வெளியார் சென்று பார்க்கவும் முடியாது. ஆகவே வெளியில் பொதுஜனக் கிளர்ச்சி ஏற்படுவதற்கு வழியில்லை.
உண்ணாவிரதம் இருப்பதாகச் சொல்லிவிட்டு இந்தக் காலத்தில் சிலர் இரகசியமாகக் கொஞ்சம் சாப்பிட்டுக்கொண்டு நெடுநாள் காலங்கழிப்பது உண்டு. இந்த மாதிரி மோசடி செய்வதற்குத் தென்னாப்பிரிக்காவில் மார்க்கமே யில்லை. பட்டினி என்றால், முழுப் பட்டினி தான். "பட்டினி கிடந்து சாகட்டும்" என்று சிறை அதிகாரிகள் பிடிவாதமாக இருந்திருந்தால் சாகவேண்டியதுதான், அவர்கள் இறந்துபோன விவரங்கள் கூட வெளியில் உள்ளவர்களுக்கு உடனே தெரிவதற்கு வழி யில்லை. இப்படி யெல்லா மிருந்தும், 'டீப்குலூப்' சிறையிலிருந்த இந்திய சத்தியாக் கிரஹிகள் உண்ணாவிரதம் தொடங்கி அந்த விரதத்தில் உறுதியாக நின்றார்கள். காந்தி மகாத்மாவின் ஆத்ம சக்தி அவர்களை ஆட்கொண்டு அத்தகைய மனோதிடத்தை அவர்களுக்கு அளித்திருந்தது. சத்தியத்துக்கும் அஹிம்சைக்கும் எள்ளளவும் மாறு படாத அந்த சத்தியாக்கிர ஹிகளின் உண்ணாவிரதம் கடைசியாகப் பூரண வெற்றி அளித்தது. ஏழு நாள் விரதம் இருந்த பிறகு அவர்களை அந்தச் சிறையிலிருந்து வேறு சிறைக்கு மாற்றச் சர்க்காரிடமிருந்து உத்தரவு வந்தது. சத்தியாக்கிரஹப் போர் இவ்வாறு நடந்து வருகையில் தென்னாப்பிரிக்காவின் அரசியலில் ஒரு பெரிய மாறுதல் நிகழ்வதற்கு ஆயத்தங்கள் நடந்து கொண்டிருந்தன.
இதுவரையில் டிரான்ஸ்வால், நேட்டால், ஆரஞ்சு பிரீ ஸ்டேட் முதலிய மாகாணங்கள் தனித்தனி அரசியலுடன் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத் தோடு நேராகப் பிணைக்கப்பட்டிருந்தன. தென்னாப்பிரிக்காவிலுள்ள எல்லா மாகாணங்களையும் ஓர் ஐக்கிய சர்க்காருக்கு உட்படுத்தி, பிரிட்டிஷ் சர்க்காரோடு ஒருமுக சம்பந்தம் வைத்துக் கொள்வது பற்றி யோசனைகள் நடந்தன. தென்னாப்பிரிக் காவில் வசித்த இங்கிலீஷ்காரர்கள், போயர்கள் - ஆகிய இரு சாராரும் மேற்படி யோசனையை ஒப்புக்கொண்டு பிரயத்தனம் தொடங்கினார்கள். இப்படி ஐக்கியப்பட்டு ஏக அரசாங்கம் ஆவதினால் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தில் தென்னாப்பிரிக்காவின் அந்தஸ்து உயரும் என்று கருதினார்கள். இந்த யோசனைக்கு நல்ல ஆதரவு இருப்பதாகத் தெரிந்ததும் போயர்களின் சார்பாகவும் ஆங்கிலேயர் சார்பாகவும் இங்கிலாந்துக்குத் தூது கோஷ்டிகள் சென்றன. ஜெனரல் போதாவும் ஜெனரல் ஸ்மட்ஸும் போயர் கோஷ்டிக்குத் தலைமை வகித்துச் சென்றார்கள்,
தென்னாப்பிரிக்கா மாகாணங்கள் ஓர் அரசாங்கமாக ஐக்கியப்படும்போது இந்தியர் நிலைமை மேலும் மோசமாகலாம் என்று காந்திஜி கருதினார். இப்போது ஒவ்வொரு மாகாணத்திலும் சிற்சில சட்டங்கள் இந்தியருக்குப் பாதகமா யிருந்தன.
தென்னாப்பிரிக்கா ஐக்கியப்பட்டு விட்டால், இந்தியருக்கு விரோதமாக ஒவ்வொரு மாகாணத்திலும் உள்ள சட்டங்கள் எல்லாம் சேர்ந்து தென்னாப்பிரிக்கா முழுவதிலும் அமுலுக்கு வரலாம். இந்தியர்களின் கஷ்டம் மேலும் அதிகமாகலாம். எனவே, தென்னாப்பிரிக்கா அரசியல் நிலைமை இங்கிலாந்தில் விவாதிக்கப்படும் சமயத்தில் இந்தியர்களின் சார்பாக அங்கு யாராவது இருக்கவேண்டும் என்று காந்திஜியும் மற்றத் தலைவர்களும் கருதினார்கள். இந்தத் தடவை காந்திஜியும் சேத் ஹாஜி ஹபீப் என்னும் முஸ்லிம் வர்த்தகரும் இங்கிலாந்துக்குப் போவது என்று நிச்சயமாயிற்று. அப்படியே 1909-ம் வருஷம் ஜூன் மீ 23௳ கேப் டவுனிலிருந்து புறப்பட்ட 'கெனில் வொர்த் காஸில்' என்ற கப்பலில் காந்திஜி, சேத் ஹாஜி ஹபீப் இருவரும் புறப்பட்டார்கள்.
--------------
காந்திஜி முதன் முறை இங்கிலாந்து சென்றிருந்த போது தென்னாப்பிரிக்கா இந்தியர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்காக அங்கே ஒரு சங்கம் ஸ்தாபித்துவிட்டு வந்தார் அல்லவா ? அந்தச் சங்கத்தின் தலைவர் லார்ட் ஆம்த்தில் காந்திஜி இப்போது இங்கிலாந்து வந்ததின் நோக்கத்தைக் கேட்டுத் தெரிந்து கொண்டு ஜெனரல் போதா முதலியவர்களைக் கண்டு பேசினார். ராஜி செய்து வைப்பதற்கு அவர் பெரு முயற்சி செய்தார். ஆனால் வெற்றி காணவில்லை. காரியாம்சத்தில் இந்தியர்களுடைய நன்மைகளைக் கவனித்துக் கொள்வதாகவும், ஆனால் நிறவேற்றுமையை எடுத்து விடுவது முடியாத காரியம் என்றும் போயர் தலைவர்கள் சொன்னார்கள். ஆசியாக்காரர் சட்டம், குடியேற்றத் தடைச் சட்டம் - இவற்றை எடுக்கவே முடியாது என்று சொல்லி விட்டார்கள்.
இந்தப் பதிலை லார்ட் ஆம்த்தில் காந்திஜிக்கும் ஹாஜி ஹபீப் சேத்துக்கும் தெரியப்படுத்தினார். "காரியாம்சத்தில் நீங்கள் கேட்கும் வசதிகள் எல்லாம் கிடைத்து விடும். ஆனால் சட்டத்திலேயுள்ள நிற வித்தியாசம் இருந்து கொண்டிருக்கும். இந்த உலகத்தில் நாம் கோருவதெல்லாம் கிடைத்துவிடுவதில்லை. சில சமயம் விட்டுப் பிடித்தேயாக வேண்டும். ஆகையால் யோசனை செய்யுங்கள். வெறும் கொள்கைக்காகப் போராட்டத்தை நடத்திக் கொண்டு போவது அவசியமா என்று நன்றாய்ச் சிந்தித்து முடிவு செய்யுங்கள். கூடிய சீக்கிரத்தில் பதில் சொல்லுங்கள்" என்று லார்ட் ஆம்த்தில் கூறினார்.
சேத் ஹாஜி ஹபீப் வெறும் கொள்கைக்காகப் போராடுவதில் அர்த்தமில்லை என்று நினைத்தார். அவர் கூறியதாவது:
"ஜெனரல் போதா சொல்வதை நான் ஒப்புக் கொள்கிறேன் என்று தெரியப்படுத்துங்கள். தாங்கள் கூறியபடி அவர் இந்திய சமூகத்துக்குச் சௌகரியங்களை அளித்தால் இப்போதைக்கு நான் திருப்தி யடைவேன். இந்தியர்கள் சமரசக் கட்சியின் சார்பாக நான் பேசுகிறேன். தென்னாப்பிரிக்கா இந்திய சமூகத்தில் பெரும்பாலோர் நாங்களே. சமூகத்தில் பண வசதியுள்ளவர்களும் நாங்களே. இதற்கு மேலே இந்திய சமூகம் கஷ்டப்படுவதை நாங்கள் விரும்பவில்லை. கொள்கைக்காகப் போராடுவதைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம்."
ஹாஜி ஹபீப் குஜராத்தியில் பேசினார். அதை வார்த்தை வார்த்தையாகக் காந்திஜி மொழி பெயர்த்துக் கூறினார். கூறி விட்டு மகாத்மா தமது அபிப்பிராயத்தைத் தெரிவித்தார் : தாங்கள் எடுத்துக் கொண்ட முயற்சிக்காக நன்றி செலுத்துகிறேன். சேத் ஹாஜி ஹபீப் இந்திய சமூகத்தில் பெரும்பாலோரின் பிரதிநிதி என்பதும் செல்வர்களின் பிரதிநிதி என்பதும் உண்மை. ஏழை இந்தியர்கள் - சிறுபான்மையோர் சார்பாக நான் பேசுகிறேன். நானும் என்னைச் சேர்ந்தவர்களும் உடனே கிடைக்கக்கூடிய வசதிகளுக்காக மட்டும் போராடவில்லை ; கொள்கைக்காக உயிரைக் கொடுத்துப் போராடத் தயாரா யிருக்கிறோம். தற்கால அநுகூலம், கொள்கை, இந்த இரண்டில் ஒன்றைக் கைவிட வேண்டுமானால் தற்கால அ நுகூலத்தையே நாங்கள் கைவிடுவோம். ஜெனரல் போதாவின் வலிமையை நாங்கள் உணர்ந்திருக்கிறோம். ஆயினும் எங்களுடைய பிரதிக்ஞையை நாங்கள் கைவிட முடியாது. ஆண்டவன் மீது பாரத்தைப் போட்டு விட்டு, என்ன நேருவதா யிருந்தாலும் பொறுமையுடன் கொள்கையைக் கடைப்பிடித்து வருவோம். எங்களுக்காக நீங்கள் மிகவும் பிரயாசை எடுத்திருக்கிறீர்கள். அதை நாங்கள் ஒருநாளும் மறக்க மாட்டோம். ஆனாலும். தங்களுடைய புத்திமதியை நாங்கள் ஏற்க முடியவில்லை, ஜெனரல் போதாவிடம் ஹாஜி ஹபீப் கூறிய பதிலையும் நான் கூறும் பதிலையும் தனித்தனியே தெரிவித்து விடுங்கள். அதற்குப் பிறகு தாங்கள் எங்களுக்கு உதவி செய்ய வேண்டும் மென எதிர்பார்க்க மாட்டோம்."
இதற்கு லார்ட் ஆம்த்தில், "அப்படி நீங்கள் நினைக்க வேண்டாம். கொள்கைக்காக நீங்கள் போராடுவதென்று தீர்மானிக்கும் பட்சத்தில் அதற்காக உங்களுக்கு உதவி செய்வதை நிறுத்த மாட்டேன். இங்கேயுள்ள கமிட்டியின் தலைவனாக இருந்து என்னாலியன்றவரை மேலும் உங்களுக்கு உதவி செய் து வருவேன். இங்கே எனக்கு உள்ள செல்வாக்கை யெல்லாம் உங்களுக்கு உதவி செய்யப் பயன்படுத்துவேன்" என்று சொன்னார்.
இந்தச் சம்பாஷணையிலிருந்து காந்திஜியின் குணாதிசயத்தில் இரண்டு அம்சங்கள் தெளிவாகின்றன அல்லவா ? ஹாஜி ஹபீப் சேத்தும் காந்திஜியும் வெவ்வேறு அபிப்பிராயம் கொண்டிருந்தார்கள். எனினும் அவர்களுடைய சிநேகிதத்துக்கு எந்தவிதமான குந்தகமும் ஏற்படவில்லை. ஹாஜி ஹபீப் காந்திஜியிடம் பூரண நம்பிக்கை வைத்திருந்தார். அதனாலேயே தம் அபிப்பிராயத்தை மொழிபெயர்த்துச் சொல்லும்படி மகாத்மாவைக் கேட்டுக் கொண்டார். மகாத்மாவும் தம் அபிப்பிராயத்துக்கு மாறுபட்ட அபிப்பிராயத்தை உள்ளது உள்ளபடி மொழி பெயர்த்துச் சொல்வதற்குத் தயங்கவில்லை.
லார்ட் ஆம்த்தில் ஆங்கிலேயராயிருந்தும் அவர் உதவி செய்வதாக முன் வந்ததைக் காந்திஜி மகிழ்ச்சியுடன் வர வேற்று நன்றி செலுத்தினார். அவரிடம் காந்திஜி வைத்த நம்பிக்கை வீண் போகவில்லை. இறுதிவரை லார்ட் ஆம்த்தில் தென்னாப்பிரிக்கா இந்தியரின் கட்சியில் நின்று தம்மாலான உதவிகளைச் செய்து கொண்டிருந்தார். போராட்டம் நடந்து கொண்டிருந்த வரையில் காந்திஜியுடன் அவர் மிக்க சிநேக பாவத்துடன் பழகி வந்தார்.
* * *
இங்கிலாந்துக்குத் தூது போன காரியத்தில் வெற்றி பெறாமல் காந்திஜி தென்னாப்பிரிக்கா திரும்பினார். ஆனால் வேறொரு விதத்தில் அந்தப் பிரயாணம் அளவில்லாத பயனை அளித்தது. இங்கிலாந்தில் தங்கியிருந்தபோது இந்தியாவின் சுதந்திரத்தில் பற்றுக்கொண்ட சில இந்திய இளைஞர்களை மகாத்மா சந்தித்தார். அவர்களுடன் கலந்து பேசினார். அந்த இளைஞர்கள் பலாத்காரத்தில் நம்பிக்கை கொண்ட புரட்சிக் காரர்கள். இந்தியாவின் சுதந்திரத்துக்காக எதுவும் செய்ய அவர்கள் தயாரா இருந்தார்கள். அவர்களுடன் பேசியதிலிருந்து காந்திஜிக்கு இந்தியாவின் சுதந்திரப் பிரச்னையைப் பற்றி அறிந்து சிந்தனை செய்ய வசதி ஏற்பட்டது. "இந்தியா சுய ராஜ்யம் பெற்றே தீர வேண்டும். ஆனால் பலாத்காரமும் அரா ஜகமும் அதற்கு வழியல்ல ; அஹிம்சையும் சத்தியாக்கிரஹமும் தான் வழிகள் என்ற முடிவுக்குக் காந்திஜி வந்தார். இந்த முடிவுகளை ஆதாரமாகக் கொண்டு “ஹிண்ட் ஸ்வராஜ் "(இண்டியன் ஹோம் ரூல்) என்ற புத்தகத்தை இங்கிலாந்திலிருந்து தென்னாப்பிரிக்காவுக்குத் திரும்பி வரும்போது கப்பலில் எழுதி முடித்தார்.
* * *
தென்னாப்பிரிக்காப் போராட்டத்தை இனித் தொடர்ந்து நடத்தும் முறையைப் பற்றியும் கப்பலில் காந்திஜி சிந்தனை செய்தார். போராட்டம் இலகுவில் முடிகிறதாயில்லை. நீடித்த காலம் நடந்தே தீரவேண்டும். பணக்கார வியாபாரிகளின் ஆதரவு இனிமேல் இயக்கத்துக்கு கிடைப்பது துர்லபம். ஏழை இந்தியர்களை வைத்துக் கொண்டே நடத்த வேண்டும். அவர்களிலும் எத்தனை பேர் நிலைத்து நிற்பார்கள் என்று தெரியாது. ஆனால் சத்தியாக்கிரஹத்தின் சக்தியைப் பற்றி மகாத்மாவுக்கு இதற்குள்ளே மகத்தான நம்பிக்கை ஏற்பட்டிருந்தது. சத்தியாக்கிரஹத்தின் சக்தி ஆள்களின் தொகையைப் பொறுத்த தல்ல வென்றும், அதைக் கடைப்பிடிப்போர் ஒரு சிலராயிருந் தாலும் அவர்களுடைய உறுதியைப் பொறுத்தது என்றும் மகாத்மா நிச்சயம் பெற்றிருந்தார். ஆகையால் எத்தனை பேர் போராட்டத்தில் நிலைத்து நிற்பார்கள் என்பதைப் பற்றிக் காந்திஜி கவலைப்படவில்லை. ஆனால் போராட்டத்தில் கலந்து கொண்ட ஏழைக் குடும்பங்களின் கதி என்ன என்பது மகாத்மாவுக்குப் பெரும் கவலை அளித்தது. அவர்களுக்கு உண்ண உணவும் தங்க இடமும் கொடுத்து உதவ வேண்டாமா?
தென்னாப்பிரிக்கா சேர்ந்ததும் இதைப் பற்றிச் சில நண்பர்களுடன் கலந்து ஆலோசித்து ஒரு முடிவுக்கு வந்தார். டர்பனுக்குப் பக்கத்தில் போனிக்ஸ் பண்ணை ஏற்படுத்தியது போல் ஜோகானிஸ்பர்க்குக்குச் சமீபமாக 'டால்ஸ்டாய் பண்ணை ' என்பதாக ஒரு ஆசிரமம் ஸ்தாபிக்கத் தீர்மானித்தார். காந்திஜியின் அத்தியந்த நண்பர்களில் ஒருவரான மிஸ்டர் காலன்பாக் என்னும் ஜெர்மானியர் 1,100 ஏக்ரா விஸ்தீரணமுள்ள ஒரு விவசாயப் பண்ணையை வாங்கியிருந்தார். அந்த இடத்தில் 1910-ம் வருஷம் மே மாதம் 10-ம் தேதி டால்ஸ்டாய் பண்ணை ஸ்தாபிக்கப்பட்டது.
சத்தியாக்கிரஹ இயக்கத்தில் சேர்ந்த காரணத்தினால் ஜீவனோபாயத்தை இழந்த சத்தியாக்கிரஹிகளும் அவர்களுடைய குடும்பத்தினரும் டால்ஸ்டாய் பண்ணையில் குடியேறினார்கள். எல்லாரும் கையால் உழைத்துப் பாடுபட வேண்டும் என்றும் வீட்டு வேலைக்காக வேலைக்காரர்கள் வைத்துக் கொள்ளக் கூடாது என்றும் நியதி ஏற்பட்டது. குடியிருப்பு இடத்திலிருந்து ஐந்நூறு கஜ தூரத்தில் இருந்த நீர் ஊற்றிலிருந்து தண்ணீர் கொண்டு வரவேண்டி யிருந்தது. ஆசிரம வாசிகள் காவடிகட்டித் தோள் மீது சுமந்து தண்ணீர் கொண்டு வந்தார்கள். ஸ்திரீகள் சமையல் வேலையின் பொறுப்பை ஏற்றார்கள். இப்படியே பாத்திரங்கள் துலக்குதல், இருப்பிடத்தைச் சுத்தம் செய்தல், தெருக் கூட்டுதல் முதலிய சகல வேலைகளையும் ஆசிரம வாசிகள் பகிர்ந்து கொண்டு செய்தார்கள். ஆசிரமத்தில் மிக எளிய உணவே அளிக்கப்படும் என்று ஏற்பாடு. ஆனாலும் உணவு விஷயத்தில் ஒரு சிக்கலான பிரச்னை ஏற்பட்டது. ஆசிரமத்தில் வந்து குடியேறியவர்களில் குஜராத்தியர், தமிழர், ஆந்திரர், மற்ற வட மாகாணத்தார் எல்லாரும் இருந்தனர். அவ்விதமே ஹிந்துக்கள், முஸ்லிம்கள், பார்ஸிகள், கிறிஸ்துவர்கள் ஆகிய நாலு மதத்தினரும் இருந்தார்கள். கிறிஸ்துவர்களும் முஸ்லிம்களும் புலால் உண்பவர்கள். அவர்கள் புலால் உணவு வேண்டும் என்று சொல்லும் பட்சத்தில் இரண்டு சமையல் அறைகளும் இரண்டு விதமான சமையல்களும் அவசியமாகும். எனினும் புலால் உணவு அருந்திப் பழக் கப்பட்டவர்களைத் தாவர உணவுதான் அருந்த வேண்டும் என்று கட்டாயப்படுத்தக் காந்திஜி விரும்பவில்லை. அவர்கள் விரும்பினால் புலால் உணவுக்கு ஏற்பாடு செய்யத் தயாராயிருந் தார். ஆயினும் அதனால் ஏற்படக்கூடிய அசௌகரியங்களை அவர்களுக்குக் காந்திஜி எடுத்துச் சொல்லி, கறிகாய் உணவுடன் திருப்தி அடைய முடியுமா என்று கேட்டார். கிறிஸ்துவர்களும் முஸ்லிம்களும் - ஸ்திரீகள் உள்பட- பொது செளகரியத்தை முன்னிட்டுப் புலால் உணவு தங்களுக்கு வேண்டிய தில்லை யென்று உறுதியாகச் சொல்லி விட்டார்கள்."
-------------
ருஷியா தேசத்து மகான் டால்ஸ்டாய் எழுதிய "ஆண்ட வன் ராஜ்யம் உனக்குள்ளே" என்ற புத்தகம் மகாத்மா காந்தியின் மனத்தைப் பெரிதும் கவர்ந்தது என்பதை முன்னமே பார்த்தோமல்லவா ? டால்ஸ்டாயின் கொள்கைகள் காந்திஜியின் வாழ்க்கையின் போக்கையே மாற்றி அமைத்தன என்று கூறலாம். காந்திஜிக்கு டால்ஸ்டாயிடம் ஏற்பட்டிருந்த மரியாதை காரணமாகவே தென்னாப்பிரிக்காவில் அவர் ஸ்தாபித்த இரண்டாவது ஆசிரமத்துக்கு 'டால்ஸ்டாய் பண்ணை' என்று பெயர் வைத்தார்.
டால்ஸ்டாய் பண்ணையில் காந்திஜி வசித்த காலத்தில் பல கடினமான பிரச்னைகளும் சோதனைகளும் ஏற்பட்டன. அவற்றில் சிலவற்றை இப்போது பார்க்கலாம்.
டால்ஸ்டாய் பண்ணையில் வாலிபர்களும் கன்னிகைகளும் வசித்தார்கள். எல்லாரும் வித்தியாசமில்லாமல் பேசிப் பழகிக் கொண்டிருந்தார்கள். இத்தகைய கல்மிஷமில்லாத வாழ்க்கை அவர்கள் நடத்தவேண்டு மென்பதுதான் காந்திஜியின் விருப்பம். இதில் தவறு ஒன்றும் நேர்ந்துவிடாது என்ற பூரண நம்பிக்கை காந்திஜிக்கு இருந்தது. ஆயினும் ஆசிரமத்தில் வசித்த இளம் பெண்களின் பாதுகாப்புக்குத் தாம் பொறுப்பு என்பதை உணர்ந்து அவர்களுடைய நடவடிக்கைகளைக் கண்ணும் கருத்துமாய்க் கவனித்து வந்தார்.
ஒரு சமயம் காந்திஜியின் மனதுக்கு மிகவும் ஆயாசம் தரும் படியான சம்பவம் ஒன்று நேரிட்டு விட்டது. அதாவது ஆசிரமத்து வாலிபர்கள் சிலர் இரண்டு இளம் பெண்களிடம் பரிகாச வார்த்தையாடினார்கள் என்று தெரிந்தது. இந்தமாதிரி மறுபடி நேராதிருப்பதற்கு என்ன வழி என்று காந்தியே சிந்தனை செய்தார். அந்த இளைஞர்களை அழைத்துக் கண்டித்துப் புத்திமதி கூறினார். இதனால் அவருடைய உள்ளம் திருப்தியடையவில்லை, இலங்கையில் தன்னந்தனியே சிறையிருந்த சீதா தேவியை இராவணன் நெருங்கவும் அஞ்சியது மகாத்மாவுக்கு அடிக்கடி நினைவு வந்து கொண்டிருந்தது. சீதை அத்தகைய கடுந்தவ விரதத்தை மேற் கொண்டிருந்ததினால் அல்லவோ, இராவணன் சீதா தேவியிடம் நெருங்கவும் தயங்கினான் ? அவ்விதமே டால்ஸ்டாய் பண்ணையில் குடியேறி ஆசிரம வாழ்க்கையை மேற் கொண்ட பெண்களும் தவ விரதத்தை மேற்கொள்ள வேண்டு மென்று மகாத்மா எண்ணினார். அவர்கள் தவ விரதம் மேற் கொண்டிருப்பதோடு, அதற்கு வெளிப்படையான அறிகுறியும் இருக்கவேண்டும். அந்த அறிகுறியான து பரிகாசப் பேச்சுப் பேச விரும்பும் வாலிபர்களுக்குப் புத்தி புகட்டி எச்சரிக்கை செய்யக் கூடியதா யிருக்கவேண்டும்.
ஒரு நாள் இரவெல்லாம் காந்தி மகாத்மா ஒரு கண நேரங் கூடத் தூங்காமல் மேற்கூறிய விஷயத்தைப் பற்றி யோசனை செய்தார். பொழுது புலரும் சமயத்தில் ஒரு முடிவுக்கு வந்தார். பொழுது நன்றாக விடிந்ததும் அந்த இரு பெண்களையும் கூப்பிட்டார். "என் அருமைக் குழந்தைகளே ! நேற்று உங்களைப் பார்த்துச் சில வாலிபர்கள் பரிகாச வார்த்தை பேசினார்கள். இதை எண்ணி நேற்று இரவெல்லாம் எனக்குத் தூக்கமே வரவில்லை. அவர்களுக்குப் புத்தி கற்பிக்க வேண்டும். மற்றவர்களுக்கும் எச்சரிக்கையாயிருக்கவேண்டும். இதற்காக உங்களை ஒரு தியாகம் செய்யும்படி கோருகிறேன். உங்களுடைய தலையில் உள்ள அழகான நீண்ட கூந்தலை வெட்டி விட விரும்புகிறேன். அப்படி வெட்டி விட்டால், உங்களைப் பார்க்கும்போதெல்லாம் அந்த வாலிபர்கள் தங்கள் தவறை நினைந்து வருத்தப்படுவார்கள். ஆசிரமத்தில் மறுபடியும் இம் மாதிரி தவறு நேராது. ஆசிரமத்தின் நன்மைக்காக உங்களை இந்தக் கடினமான சோதனைக்கு உட்படுத்த விரும்புகிறேன். உங்களுக்குச் சம்மதமா ? என் சொல்லுக்காக இந்தத் தியாகத்தைச் செய்வீர்களா ? " என்று கேட்டார்.
இந்தியப் பெண்களுக்குத் தங்கள் கூந்தல் நீளமாயிருக்க வேண்டு மென்பதில் மிக்க ஆசை உண்டு அல்லவா? எந்த இளம்பெண் மணிதான் காந்தி மகான் கூறிய சோதனைக்குத் தயங்காமல் உட்படுவாள்?
அந்தப் பெண்கள் இருவரும் திடுக்கிட்டுப் போனார்கள், அவர்களுடைய தாய்மார்களுக்கு இது தெரிந்தபோது அவர்களும் வந்து காந்திஜியிடம் மன்றாடினார்கள். மகாத்மா, "உங்களைக் கட்டாயப் படுத்த எனக்கு இஷ்டமில்லை ; வேண்டாம் என்றால் வேண்டாம்" என்று கூறி மறுபடியும் தம்முடைய நோக்கம் என்ன வென்பதை விளக்கிச் சொன்னார். கடைசியில் அந்தப் பெண்கள் இருவரும், 'பாபு ! உங்கள் விருப்பத்துக்கு நாங்கள் மாறு சொல்ல வில்லை. தங்கள் கட்டளைப் படி நடக்கிறோம்!" என்று சம்மதம் கொடுத்தார்கள். தாய் மார்களும் சம்மதித்தார்கள்.
காந்தி மகாத்மா எழுதுகிறார் :-"இந்த நிகழ்ச்சியை இன்று எழுதும் இதே கையினால் கத்திரிக்கோலை எடுத்து அந்தப் பெண்களின் கூந்தலை வெட்டி எறிந்தேன். அந்த இரு பெண்களும் உத்தம குண வதிகள் ; நல்ல புத்திசாலிகள். அவர்களில் ஒருத்தி பிற்காலத்தில் இம் மண்ணுலக வாழ்வை நீத்துச் சென்றாள். இன்னொருத்தி இன்று ஒரு பெரிய குடும்பத்தின் தலைவியா யிருக்கிறாள். அவர்களுடைய கூந்தலை வெட்டி விட்ட பிறகு, நான் நடத்தி வந்த வகுப்பில் அதன் காரணத்தை எடுத்து விளக்கமாகக் கூறினேன். இதனால் மிகவும் நல்ல பலன் ஏற்பட்டது. அதற்குப் பிறகு டால்ஸ்டாய் பண்ணையில் எந்தப் பெண்ணிடமும் யாரும் பரிகாசமாகப் பேசியது கிடையாது!" மேற்கண்டவாறு சம்பவத்தைப் பற்றி எழுதிவிட்டு மகாத்மா ஓர் எச்சரிக்கையும் தந்திருக்கிறார். இம்மாதிரி கடின சோதனைகளைத் தகுதியற்றவர்கள் கையாளக் கூடாது என்பதுதான், காந்திஜி எழுதியிருப்பதாவது:
"இந்தச் சம்பவத்தை நான் சொல்லியிருப்பது மற்றவர்கள் இதைப் பின்பற்ற வேண்டும் என்பதற்காக அல்ல. இம் மாதிரி சோதனையைக் கையாளுவதில் பெரும் அபாயம் இருக்கிறது. நாங்கள் மேற்கொண்டிருந்த சத்தியாக்கிரஹம் எத்தனை தூய்மையானது என்பதைக் காட்டுவதற்காகவே இந்த நிகழ்ச்சியைச் சொன்னேன். இத்தகைய தூய்மையினாலே தான் இயக்கம் வெற்றிபெறும் என்னும் நிச்சயம் எனக்கு இருந்தது. இப்படிப்பட்ட கடுமையான சோதனையை ஒருவர் கையாளுவதாயிருந்தால், தம் வசத்தில் ஒப்புவிக்கப்பட்ட குழந்தைகளிடம் சொந்தத் தாயும் தகப்பனும் செலுத்தும் அன்பைத் தாமும் செலுத்தப் பழகியிருக்க வேண்டும். சொந்தக் குழந்தைகளின் விஷயத்திலும் அதே மாதிரி செய்வோம் என்ற திட நம்பிக்கை இருக்கவேண்டும். சோதனையில் தவறிப் போனால் அதற்கேற்ற பிராயச்சித்தம் செய்து கொள்ள எப்பொழுதும் தயாராயிருக்க வேண்டும்."
* * *
காந்தி மகாத்மா உருக்கமாக விவரித்திருக்கும் மேற்படி சம்பவத்துக்குப் பிறகு டால்ஸ்டாய் பண்ணையின் வாழ்க்கை மேலும் தூய்மையடைந்தது ; எளிமையும் பெற்றது. அது வரையில் ஆசிரமத்தில் வசித்த இந்தியர்கள் ஐரோப்பிய கனவான்களைப் போல் உடைதரித்து வந்தார்கள். இனி எல்லாரும் எளிய தொழிலாளிகளின் உடை தரிக்க வேண்டும் என்று தீர்மானமாயிற்று. சிறைக் கைதிகளுக்கு அளிக்கப்படும் உடையை ஓரளவு பின்பற்றி நீல நிற முரட்டுத் துணியில் கால் சட்டையும் அரைக்கைப் பனியன்களும் தைத்துக் கொண்டார்கள். ஆசிரமத்து ஸ்திரீகள் தையல் வேலை கற்றுக் கொண்டு ஆடவர்களுக்கு வேண்டிய சட்டைகளை யெல்லாம் தாங்களே தைத்துக் கொடுத்தார்கள்.
இம்மாதிரியே ஆசிரம வாசிகளின் உணவும் முன்னைவிட எளிய உணவாயிற்று. பிற்காலத்தில் காந்தி மகாத்மாவின் வாழ்க்கையில் முக்கியத்துவம் அடைந்த பல காரியங்கள் டால்ஸ்டாய் பண்ணையில் ஆரம்பமாயின. தினந்தோறும் மாலை ஏழு மணிக்கு அனைவரும் கூடிப் பிரார்த்தனை செய்யும் வழக்கம் டால்ஸ்டாய் பண்ணையில் ஆரம்பித்ததுதான். இந்தப் பிரார்த்தனைக் கூட்டங்களில் பஜனை கீதங்கள் பாடப்பட்டன. இராமாயணம், குர்ஆன், பைபிள் ஆகிய மத நூல்களிலிருந்து சிற்சில பகுதிகள் படிக்கப்பட்டன.
காந்திஜிக்கு ஏற்கெனவே இயற்கை வைத்திய முறைகளிலும் உணவுப் பரிசோதனை-களிலும் ஆர்வம் உண்டு. டால்ஸ்டாய் பண்ணையில் அச்சோதனைகளை நடத்த வேண்டிய வசதிகள் இருந்தன. பண்ணையில் யாருக்கு என்ன நோய் வந்தாலும் டாக்டரைக் கூப்பிடுவதில்லை. சமீபத்தில் கூப்பிடும்படியாக டாக்டரும் இல்லை. காந்திஜி இயற்கை வைத்திய முறைகளைக் கொண்டே எல்லா நோய்களையும் குணப்படுத்தி வந்தார். ஆசிரமத்துக்கு வெளியே அக்கம் பக்கத்திலிருந்து கூட மகாத்மாவிடம் இயற்கை வைத்தியம் செய்துகொள்ள ஜனங்கள் வந்தார்கள். டால்ஸ்டாய் பண்ணைக்குச் சற்று தூரத்தில் ரயில்வே ஸ்டேஷன் ஒன்று இருந்தது. ஸ்டேஷன் மாஸ்டரின் குழந்தை - இரண்டு வயதுப் பிள்ளைக்கு - டைபாய்டு சுரம் கண்டது. அதை இயற்கை வைத்திய முறையைக் கையாண்டு குணப்படுத்தினார். இயற்கை வைத்திய முறையில் தம்முடைய அநுபவங்களைக் கொண்டு காந்தி மகாத்மா "ஆரோக்கிய வழி " என்னும் ஒரு அருமையான நூலை எழுதியிருக்கிறார்.
ஆனால் இந்தத் துறையிலேயும் மகாத்மா எழுதியுள்ள எச்சரிக்கையை நாம் கவனித்து மனத்தில் வைத்துக் கொள்வது. அவசியம். அந்த எச்சரிக்கை வருமாறு:- "இம்மாதிரி பல சோதனைகளை டால்ஸ்டாய் பண்ணையில் நான் நடத்தினேன், ஒன் றிலாவது தோல்வியடைய வில்லை. ஆனால் நான் கைக் கொண்ட முறைகளில் அப்போதிருந்த உறுதி இப்போது எனக்குக் கிடையாது. 1918-ம் வருஷத்தில் இந்தியாவுக்குத் திரும்பிய பிறகு எனக்கு வயிற்றுக் கடுப்பு நோய் வந்தது. அதை என்னால் குணப்படுத்திக் கொள்ள முடியவில்லை. அதற்குக் காரணம் என்னுடைய நம்பிக்கை குறைந்து போனதா அல்லது சீதோஷ்ண நிலையில் வித்தியாசமா என்று சொல்ல முடியாது. தென்னாப்பிரிக்காவில் வெற்றியளித்த சில முறைகள் இந்தியாவில் எனக்கு வெற்றி தர வில்லை யென்று மட்டும் சொல்லுவேன்."
இயற்கை வைத்திய முறைகளில் சோதனை நடத்தியது போல் மகாத்மா உணவுப் பரிசோதனைகளும் செய்து வந்தார். மகாத்மாவின் சோதனைகளில் அவருக்கு உற்ற துணையாக இருந்து வந்தவர் மிஸ்டர் காலன் பாக் என்னும் ஜெர்மானியர். இருவரும் ஒரு தடவை கல்கத்தாவில் பசுமாடுகளை நிறையப் பால் கறக்கும்படி செய்வதற்காகக் கையாளும் கொடூர முறைகளைப் பற்றி ஒரு பத்திரிகையில் படித்தார்கள். "பால் சாப்பிடாமல் என் வாழ்க்கை நடத்தக் கூடாது?" என்று காந்திஜி கேட்டார். உடனே, தாம் பால் உணவை விட்டு விடத் தயார் என்றார் மிஸ்டர் காலன் பாக். அவ்விதமே இருவரும் பால் அருந்துவதை நிறுத்தினார்கள். கொஞ்சநாளைக் கெல்லாம் சமைத்த உணவு எல்லாவற்றையுமே விலக்கி விட்டுக் கனி உண வு சாப்பிட ஆரம்பித்தார்கள். புதிய பழங்களையும் உலர்ந்த பழங்களையுமே சாப்பிட்டுக் காலங் கழித்தார்கள்.
"தனித்த பழ உணவு மட்டுமே அருந்திய ஐந்து வருஷம் நான் சுகமாயிருந்தது போல் வேறு எந்தக் காலத்திலும் ஆரோக்கியமா யிருந்ததில்லை. அதே காலத்தில் தான் உடல் உழைப்புச் சக்தி எனக்குப் பூரணமா யிருந்தது. நாள் ஒன்றுக்குச் சர்வ சாதாரணமாய் நாற்பது மைல் நடப்பேன். குறிப்பிட்ட ஒரு தினத்தில் ஐம்பத்தைந்து மைல் நடந்திருக்கிறேன். இவ்விதம் உடலுக்கு ஏற்பட்ட நலத்தையல்லாமல், கனி உணவு என்னுடைய ஆத்மீக வளர்ச்சிக்கும் உறுதுணையா யிருந்தது என்று உறுதியாகக் கூறுவேன். இந்தியாவுக்குத் திரும்பி வந்த பிறகு, தனித்த பழ உணவு மட்டும் சாப்பிட முடியாமல் வேறு உணவும் சேர்த்துக் கொள்ளும்படி நேரிட் டது. அதை எப்போது நினைத்தாலும் எனக்கு வருத்தம் உண்டாகாம லிருப்பதில்லை" என்று காந்தி எழுதியிருக்கிறார்.
-------------
காந்திஜியும் அவருக்குத் துணை செய்த சத்தியாக்கிரஹிகளும் டால்ஸ்டாய் பண்ணையில் வாழ்ந்து வந்தபோது, சத்தியாக்கிரஹ இயக்கம் சில சமயம் தீவிரமாயும் சில சமயம் சாதாரணமாயும் நடந்து வந்தது. இயக்கம் எப்போது முடிவுறும் என்று யாராலும் ஊகிக்க முடியவில்லை. இதைப் பற்றிக் காந்திஜி கவலைப்படவுமில்லை. சத்தியத்தை உறுதியாகக் கடைப் பிடிப்பது சத்தியாக்கிர ஹியின் கடமை. பலனைப் பற்றிச் சத்தியாக்கிர ஹி கவலைப்படக் கூடாது. கடவுள் துணையைத் தவிர வேறு யாருடைய உதவியையும் எதிர்பார்க்கவும் கூடாது. இத்தகைய நம்பிக்கையுடன் காந்திஜி இயக்கத்தை நடத்தி வருகையில் உதவி எதிர்பாராத முறையில் கிடைத்தது.
ஸ்ரீ கோபால கிருஷ்ண கோகலேயிடம் மகாத்மா மிக்க மதிப்புக் கொண்டவர் என்பதை முன்னமே பார்த்திருக்கிறோம். ஸ்ரீ கோகலேயுடன் காந்திஜி தொடர்ந்து கடிதப் போக்குவரவு நடத்தி வந்தார். கோகலேயும் தென்னாப்பிரிக்கா இந்தியர்களின் நிலைமையில் கவனம் செலுத்தி வந்தார். 1910-ம் வருஷம் பிப்ரவரி 25௳ இந்தியா சட்ட சபையில் ஸ்ரீ கோகலே நேட்டாலுக்கு ஒப்பந்தக் கூலிகள் அனுப்புவதை உடனே நிறுத்தவேண்டு மென்று ஒரு தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றினார்.
1911-ம் வருஷத்தில் ஸ்ரீ கோகலே இங்கிலாந்துக்குச் சென்றார். அவர் தென்னாப்பிரிக்காவுக்கு ஒருமுறை விஜயம் செய்து நிலைமையை நேரில் தெரிந்து கொள்ள வேண்டும் என்று காந்திஜி அடிக்கடி அவருக்குக் கடிதம் எழுதியிருந்தார். அதன்படி ஸ்ரீ கோகலே இப்போது இங்கிலாந்திலிருந்து தென்னாப்பிரிக்கா செல்வது என்று உத்தேசித்து, இந்தியா மந்திரியிடம் தம் விருப்பத்தைத் தெரிவித்தார். இந்தியா மந்திரி ஆட்சேபம் சொல்லாமல் அநுமதி கொடுத்ததும் ஸ்ரீ கோகலே காந்திஜிக்குத் தகவல் தெரிவித்தார். ஆறு வார காலம் தென்னாப் பிரிக்காவில் தங்கலாம் என்றும் அதற்கு ஒரு சுற்றுப் பிரயாண த் திட்டம் தயாரிக்கும்படியும் காந்திஜியைக் கேட்டுக் கொண்டார்.
இந்தக் கடிதத்தினால் காந்திஜியும் மற்ற இந்தியர்களும் அடைந்த குதூகலத்துக்கு அள வில்லை. இதுவரை இந்தியாவிலிருந்து எந்தத் தலைவரும் தென்னாப்பிரிக்காவுக்கு வந்தது கிடை யாது. ஆகையால் கோகலேயின் வரவு எவ்வளவு முக்கியமானது என்பதை உணர்ந்து அவருக்கு மகத்தான வரவேற்பு அளிக்கவும் தென்னாப்பிரிக்காவின் முக்கிய நகரங்களுக் கெல்லாம் அவரை அழைத்துச் செல்லவும் தீர்மானித்தார்கள். சத்தியாக்கிரஹிகள் சத்தியாக்கிரஹத்தில் ஈடுபடாத இந்தியர்கள் எல்லாருமே வரவேற்பு முயற்சிகளில் முனைந்தார்கள். வரவேற்புக் கமிட்டிகளில் இருக்கும்படி ஐரோப்பியரும் கேட்டுக் கொள்ளப் பட்டனர். பலர் அதற்கு இணங்கினார்கள். ஒவ்வொரு முக்கிய நகரிலும் பிரதான டவுன்ஹால் மண்டபத்தில் கூட்டம் நடத்துவது என்றும், கூட்டத்துக்குத் தலைமை வகிக்க அந்தந்த நகரத்தின் மேயரை அழைப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது. முக்கியமான ஒவ்வொரு ரயில்வே ஸ்டேஷனையும் அலங்கரிக்கத் தீர்மானிக்கப்பட்டது. சாதாரணமாக இதற்கு அனுமதி கொடுப்பதில்லை. ஆயினும் இந்தியர்களுடைய மகத்தான உற்சாகத்தைப் பார்த்துவிட்டு ரயில்வே அதிகாரிகள் உத்தரவு கொடுத்து விட்டார்கள். ஜோகானிஸ்பர்க் ரயில்வே ஸ்டேஷனை அலங்காரம் செய்யவும், ஸ்டேஷனில் ஒரு பெரிய வரவேற்பு வளைவு நிர்மாணிக்கவும் பதினைந்து தினங்கள் பிடித்தன. இதிலிருந்து வரவேற்பு ஏற்பாடுகள் பிரமாதமாகச் செய்யப்பட்டன என்பதை அறியலாம்.
அங்கே இங்கிலாந்திலிருந்து கோகலே தென்னாப்பிரிக்கா பிரயாணத்துக்கு வேண்டிய ஆயத்தங்கள் செய்து கொண்டிருந்தார். இந்தியா மந்திரியின் காரியாலயத்தினர் தென்னாப் பிரிக்கா சர்க்காருக்கு பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தில் ஸ்ரீ கோகலே எவ்வளவு உன்னதமான பதவி வகிக்கிறவர் என்று தெரிவித்திருந்தனர். ஆயினும் ஆரம்பத்திலேயே பிரயாணத்துக்கு ஒரு முட்டுக்கட்டை ஏற்பட்டது. தென்னாப்பிரிக்கா செல்லும் கப்பலில் வசதியான தனிஅறை ஒன்று கோகலேக்கு வேண்டும் என்று கேட்கப்பட்டது. "கிடையாது" என்று கப்பல் கம்பெனியின் பதில் வந்தது. இதை யறிந்த கோகலேயின் நண்பர் ஒருவர் இந்தியா மந்திரி காரியாலயத்துக்கு விஷயத்தைத் தெரியப்படுத்தினார். மேற்படி காரியாலயத்திலிருந்து ஒரு கடிதம் கப்பல் கம்பெனிக்குப் போயிற்று. அவ்வளவு தான் ; கோகலே கேட்டபடி தனி அறை கிடைத்தது. கப்பல் தலைவனுக்குக் கோகலேயைச் சரியான மரியாதையுடன் நடத் தும்படியாகக் கட்டளையும் பிறந்தது.
தென்னாப்பிரிக்காவின் மத்திய சர்க்காரும் கோகலேக்கு மரியாதை செய்யத் தீர்மானித்தார்கள். பிரிடோரியாவில் இருக்கும்போது அரசாங்க விருந்தாளியாக அவர் தங்கவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள். அரசாங்கத்துக்காக ஏற்பட்ட ரயில்வே ஸலூன் ஒன்றை அவருடைய பிரயாணத்துக்காகக் கொடுத்தார்கள். சர்க்கார் கொடுக்கும் இந்த வசதிகளைப் பெற்றுக் கொள்ளவேண்டும் என்று காந்திஜி வற்புறுத்தியதன் பேரில் கோகலே அதற்கு இசைந்தார்.
1912-ம் வருஷம் அக்டோபர் 22௳ கோகலே தென்னா பிரிக்கா சேர்ந்து கேப்டவுன் துறைமுகத்தில் கப்பலிலிருந்து இறங்கினார். கேப்டவுன் நகரத்தில் பெரிய "பொதுக் கூட்டம் ஒன்று நடைபெற்றது. ஸெனட்டர் ஷிரீன் என்பவர் தலைமை வகித்து ஸ்ரீ கோகலேயை வரவேற்றுப் பேசினார். ஸ்ரீகோகலே இந்த முதல் பொதுக் கூட்டத்தில் உறுதியாகவும் நியாயமாகவும் நிதானமாகவும் பேசியது இந்தியர்கள் - ஐரோப்பியர்கள் எல்லாருடைய மனத்தையும் ஒருங்கே கவர்ந்தது.
கேப்டவுனிலிருந்து ஜோகானிஸ்பர்க் இரண்டு நாள் பிரயாணம். வழியில் இந்தியர்கள் வசித்த பட்டணங்களில் எல்லாம் கோகலே இறங்கி அங்கங்கே உபசாரங்களைப் பெற்றுக்கொண்டு ஸ்பெஷல் ரயிலில் ஜோகானிஸ்பர்க் வந்து சேர்ந்தார். ஜோகானிஸ்பர்க்கில் நடந்த வரவேற்பு பிரமாதமா யிருந்தது. முதல் உபசாரக் கூட்டம் ஸ்டேஷனிலேயே நடை பெற்றது. ரொடீஷியாவில் உற்பத்தியாகும் உயர்ந்த தேக்குமரச் சட்டத்தில் தங்கத் தகடு அடித்து அதில் உபசாரப் பத்திரம் எழுதி கோகலேக்கு அளித்தார்கள். அந்தத் தகடு இந்தியாவும் இலங்கையும் சேர்ந்த தேச படத்தின் வடிவம் பெற்றுத் திகழ்ந்தது.
ஆரம்ப உபசாரக் கூட்டத்துக்குப் பிறகு கோகலே தனித்தனியாகப் பல பிரமுகர்களைப் பார்த்தார். பலரும் அவரை வந்து பார்த்தார்கள், ஐரோப்பியர்களும் இந்தியர்களுமாக 400 பேருக்கு ஒரு பெரிய விருந்து நடந்தது. இந்த விருந்திலேதான் கோகலே தென்னாப்பிரிக்கா இந்தியர்களின் நிலைமையைப் பற்றித் தமது முக்கியமான பிரசங்கத்தைச் செய்தார். இதைத் தவிர இந்தியர்கள் மட்டும் அடங்கிய பொதுக் கூட்டம் ஒன்று நடந்தது. இதுவரையில் ஸ்ரீ கோகலே ஆங்கிலத்திலேதான் பேசி வந்தார். ஆங்கில பாஷையில் கோகலே பெரிய நிபுணர். ஆனால் இந்த முக்கியமான இந்தியர்களின் கூட்டத்தில் ஸ்ரீ கோகலே அவருடைய தாய் பாஷையாகிய மராத்தியில் பேச வேண்டும் என்று காந்திஜி கேட்டுக் கொண்டார். அதைத் தாம் ஹிந்தியில் மொழிபெயர்த்துச் சொல்வதாகவும் கூறினார். அந்தக் காலத்தில் அரசியலில் ஈடுபட்ட இந்தியர்கள் ஆங்கில பாஷையில் பேசுவது வழக்கமாயிருந்தது. ஆங்கில பாஷையிலேதான் அவர்களுடைய வாக்கு வன்மை நன்றாகப் பிரகாசிக்கும். ஆகையால் காந்திஜியின் யோசனையைக் கோகலே ஆட்சேபித்தார். காந்திஜியும் பிடிவாதமாயிருந்தார். கடைசியாக ஸ்ரீ கோகலே, "இங்கே நான் உங்களுக்காகவே வந்திருக்கிறேன். ஆகையால் உங்கள் இஷ்டப்படி நடக்க வேண்டியதுதான் !" என்று சொல்லி மராத்தி பாஷையில் பேசினார்.
ஜோகானிஸ்பர்க் நகரிலிருந்து ஸ்ரீ கோகலே பிரிட்டோரி யாவுக்குப் போனார். பிரிட்டோரியாவில் ஜெனரல் போதா ஜெனரல் ஸ்மட்ஸ் முதலிய அரசாங்க மந்திரிகளை ஸ்ரீ கோகலே சந்திப்பதாக ஏற்பாடு ஆகியிருந்தது. கோகலே மந்திரிகளைச் சந்திக்கப் போகும்போது தனியாகவே போகவேண்டுமென்று காந்திஜி கருதினார். தாம் பின்னோடு சென்றால் காரியத்துக்கு. இடையூறாயிருக்குமென்று சொன்னார். மந்திரிகள் காந்திஜி மீது கொண்டிருந்த கோபத்தினால் கோகலேயின் பேச்சுக்குச் சரியானபடி செவி கொடுக்காமல் போகலாமல்லவா ?
அதே சமயத்தில் கோகலே தனியாக மந்திரிகளைச் சந்திப்பதில் சில கஷ்டங்களும் இருந்தன. இவருக்குத் தெரிந்திராத ஏதாவது ஒரு விஷயத்தைப் பற்றி அவர்கள் பிரஸ்தாபிக்கலாம். அதற்கு இவர் சரியான பதில் சொல்ல முடியாமற் போகலாம். மேலும் சர்க்கார் மந்திரிகள் ஏதாவது சில பிரேரணைகளைச் சொல்லி அவற்றை இந்தியரின் சார்பாக ஒப்புக்கொள்ளும்படி கேட்டால், ஸ்ரீ கோகலே உடனே பதில் சொல்லுவது சாத்தியமா யிருக்குமா ?
இந்தத் தடங்கல்களை யெல்லாம் போக்குவதற்காக, காந்திஜி தென்னாப்பிரிக்கா நிலைமை பற்றிச் சாங்கோபாங்கமாக ஓர் அறிக்கை தயாரிப்பது என்றும், அதை ஸ்ரீ கோகலே நன் றாகப் படித்துக்கொண்டு போவதென்றும் ஏற்பாடாயிற்று. காந்திஜி அறிக்கை தயாரித்தார். கோகலே அதைப் படித்தார்; ஆனால் திருப்தியடையவில்லை. விஷயங்களைத் தெளிவு செய்து கொள்ளப் பல கேள்விகள் கேட்டார். காந்திஜி பதில் சொன்னார். இவ்விதமாக, கோகலே மந்திரிகளைப் பார்ப்பதற்காகக் குறிப்பிட்ட தினத்துக்கு முதல் நாள் இரவு முழுதும் அவர்களுக்குள் பேச்சு நடந்து கொண்டிருந்தது. ஒரு நிமிஷங்கூட இருவரும் தூங்கவில்லை !
குறிப்பிட்ட சமயத்தில் ஸ்ரீகோபால கோகலே தென்னாப் பிரிக்கா மந்திரிகளைச் சந்தித்தார். சுமார் இரண்டு மணி நேரம் பேசினார். பேசி விட்டுத் திரும்பி வந்ததும் சந்தோஷமான செய்தியைச் சொன்னார்.
"எல்லாம் முடிவாகிவிட்டது. கறுப்புச் சட்டத்தை எடுத்து விடுவார்கள். குடியேற்றச் சட்டத்தில் நிறம் பற்றிய தடையை நீக்கிவிடுவார்கள். மூன்று பவுன் தலைவரியும் எடுக்கப்பட்டு விடும். ஆகையால் நீங்கள் இனிமேல் இங்கே இருக்க வேண்டிய அவசியமே இல்லை. ஒரு வருஷத்துக்குள் இந்தியா வுக்குத் திரும்பி வந்து விடவேண்டும்!" என்றார். செய்தி சந்தோஷமானதுதான். ஆனால் காந்திஜிக்கு நம்பிக்கை மட்டும் உண்டாகவில்லை. அவர் கூறியதாவது :
"நீங்கள் உறுதியாகச் சொல்கிறீர்கள். ஆயினும் எனக்கு நம்பிக்கை ஏற்படவில்லை. இந்தத் தேசத்து மந்திரிகளை நான் அறிந்திருப்பது போல நீங்கள் அறியவில்லையல்லவா? ஏற்கெனவே இவ்வாறு அவர்களுடைய பேச்சைப் பலமுறை நம்பி ஏமாற்றமடைந் திருக்கிறேன். ஆயினும் தாங்கள் மந்திரிகளிடம் பெற்றுக்கொண்டு வந்த வாக்குறுதி மிகவும் முக்கியமானது என்பதில் சந்தேகம் இல்லை. அவர்கள் அந்தப்படி செய்யாவிட்டால் எங்களுடைய போராட்டத்துக்கு இன்னும் பலம் அதிகம் ஏற்படும். தாங்கள் பெற்று வந்த வாக்குறுதி எங்களுடைய போராட்டத்தின் நியாயத்தில் எங்களுக்கு அதிக நம்பிக்கையை ஊட்டும். ஒரு வருஷத்துக்குள் நான் திரும்ப முடியும் என்று தோன்றவில்லை. நானும் என் சகாக்களும் இன்னும் பல முறை சிறை புக நேருமென்று கருதுகிறேன்."
இதற்குக் கோகலே, "நீங்கள் பயப்படுகிறபடி ஒருநாளும் நடவாது. கறுப்புச் சட்டத்தை ரத்துச் செய்து விடுவதாகவும் மூன்று பவுன் தலைவரியை எடுத்துவிடுவதாகவும் ஜெனரல் போதா எனக்கு வாக்குக் கொடுத்திருக்கிறார். அதை நிறை வேற்றியே தீருவார் நீங்கள் சால்ஜாப்புச் சொல்லாமல் ஒரு வருஷத்துக்குள் இந்தியாவுக்குத் திரும்பி வந்துவிட வேண்டியதுதான் !" என்று சொன்னார்.
பின்னர் கோகலே டர்பன், மேரிட்ஸ்பர்க் முதலிய இடங்களுக்குச் சென்றார். அங்கே யெல்லாம் அவருக்கு நடந்த உபசரிப்புகளிலும் விருந்துகளிலும் ஐரோப்பியர்கள் தாராளமாய்க் கலந்துகொண்டார்கள். இவ்விதம் தென்னாப்பிரிக்கா இந்தியர்களுடைய உள்ளத்தையும் ஐரோப்பியர்களின் இதயத்தையும் வெற்றிகொண்ட பிறகு 1912-ம் வருஷம் நவம்பர் மாதம் 17-ந் தேதி ஸ்ரீ கோகலே தாய்நாட்டுக்குக் கப்பல் ஏறினார். அவரை வழி அனுப்புவதற்குக் காந்திஜியும் மிஸ்டர் காலன் பாக்கும் கப்பல் ஏறி ஸான்ஸிபார் வரையில் சென்றார்கள். கப்பலில் இந்தியாவின் அரசியல் நிலைமையைப் பற்றியும் இந்திய அரசியல் தலைவர்களின் குணாதிசயங்களைப் பற்றியும் கோகலே காந்திக்கு விஸ்தாரமாய் எடுத்துச் சொன்னார். கோகலே கூறிய ஒவ்வொரு வார்த்தையும் உண்மையாகவும் தேசபக்தி ததும்பியும் இருந்ததைக் கண்டு காந்திஜி வியந்தார். கோகலேயிடம் காந்திஜிக்கு இருந்த அன்பும் பக்தியும் மேலும் அதிகமாயின. ஸான்ஸிபாரில் கோகலேயுடன் பிரிய முடியாமல் பிரிந்து வருத்தத்துடன் விடைபெற்றுக்கொண்டு காந்தி மகான் தென்னாப்பிரிக்காவுக்குத் திரும்பினார்.
--------
கோகலேயின் நம்பிக்கை நிறைவேற வில்லை. காந்திஜி பயந்தபடியே தான் காரியம் நடந்தது. ஒரு வருஷத்திற்குள் மூன்று பவுன் தலைவரி எடுக்கப்பட்டு விடும் என்றும், அதற்குரிய மசோதா அடுத்த சட்டசபைக் கூட்டத்தில் கொண்டு வரப்படும் என்றும் ஸ்ரீ கோகலேயிடம் தென்னாப்பிரிக்கா மந்திரிகள் சொல்லியிருந்தார்கள். அந்த மாதிரி நடைபெறவில்லை. அதற்குப் பதிலாக ஜெனரல் ஸ்மட்ஸ், “நேட்டால் அங்கத்தினர்கள் மூன்று பவுன் தலைவரியை எடுப்பதற்கு விரோதமா யிருப்பதால் அதைப் பற்றி ஒன்றும் செய்வதற்கில்லை" என்று சொல்லி விட்டார். இம்மாதிரி நேட்டால் ஐரோப்பியர் மீது தளபதி ஸ்மட்ஸ் பாரத்தைப் போட்டதற்கு நியாயம் ஒன்றும் கிடையாது. ஏனெனில் அச்சமயம் நாலு மாகாணங்களுக்கும் சேர்ந்த மத்திய சட்டசபை ஏற்பட்டிருந்தது. மற்ற மாகாண அங்கத்தினர் ஆதரவு கொடுத்தால் பெரும்பான்மை வோட்டுகளால் மசோதா நிறைவேறிவிடும். எனவே, கோகலேயிடம் கொடுத்த வாக்குறுதியை மீறுவதற்கு ஜெனரல் ஸ்மட்ஸ் நேட்டால் ஐரோப்பியரின் எதிர்ப்பை ஒரு வியாஜமாக உபயோகித்தார் என்றே சொல்லவேண்டும்.
இவ்வாறு ஸ்ரீ கோகலேயின் நம்பிக்கை நிறைவேறா விட்டாலும் அவர் தென்னாப்பிரிக்காவுக்கு விஜயம் செய்தது இந்தியர்களுக்கு ஒரு பெரும் நன்மையைச் செய்தது. இதுகாறும் காந்தி மகாத்மா அங்கே நடத்திய இயக்கம், நிறவேற்றுமை காரணமான தடைச் சட்டங்களை எதிர்த்தே நடந்தது. மேற்படி சட்டங்களினால் அதிகமாய்ப் பாதிக்கப்பட்டவர்கள் இந்திய வியாபாரிகள், குமாஸ்தாக்கள் முதலியோர்தான். ஆகையால் காந்திஜியின் இயக்கத்தை ஆதரித்தவர்களும் மேற்கூறிய படித்த வகுப்பினரே யாகும். இவர்களும் நாளடைவில் மனம் சோர்ந்து விட்டார்கள். ஒரு சிலரே உறுதியாக நின்றார்கள்,
தென்னாப்பிரிக்கா மந்திரிகளை ஸ்ரீகோகலே பார்த்துப் பேசியபோது நிறத் தனிச் சட்டங்களுடன் மூன்று பவுன் தலை வரி விஷயமாகவும் பேசினார். அந்தத் தலைவரியின் அநியாயத்தை எடுத்துச் சொல்லி மந்திரிகளிடமிருந்து அதை ரத்து செய்வதாக வாக்குறுதியும் பெற்றார். ஆகவே, கோகலேக்கு மந்திரிகள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்ற காரணத்தின் பேரில் மூன்று பவுன் தலைவரியை எதிர்த்துச் சத்தியாக்கிரஹத்தைத் தொடங்குவது சாத்தியமாயிற்று.
மூன்று பவுன் தலைவரி, ஏற்கெனவே ஒப்பந்தத் தொழிலாளிகளாக வந்து ஒப்பந்தம் நீங்கிய பிறகு தென்னாப்பிரிக்காவில் தங்கிய இந்தியத் தொழிலாளிகளையும் அவர்களுடைய குடும்பங்களையும் பாதித்தது. இந்த வரி 1885-ம் வருஷத்திலிருந்து அமுலில் இருந்து வந்தது. அப்படியிருக்க 1907-ம் வருஷத்தில் ஆசியாக்காரர் சட்டத்தை எதிர்ப்பதற்காக ஆரம்பித்த இயக்கத்தில் மேற்படி தலைவரி விஷயத்தைச் சேர்த்துக் கொள்ள முடியவில்லை. ஸ்ரீ கோகலே வந்து விட்டுப் போன தன் பயனாக, அதையும் சத்தியாக்கிரக இயக்கத்தின் நோக்கங்களில் ஒன்றாகச் சேர்த்துக் கொள்ள முடிந்தது.
அப்படிச் சேர்த்துக் கொண்டதினால் இயக்கம் அடைந்த நன்மையைச் சொல்லி முடியாது. தென்னாப்பிரிக்கா விலிருந்த இந்தியத் தொழிலாளிகள் இதுவரையில் மகாத்மாவின் இயக்கத்தைப் பொதுவாக ஆதரித்து வந்தார்களே தவிர, அதில் நேரடியாகக் கலந்து கொள்ள வில்லை. கலந்து கொள்வதற்குச் சந்தர்ப்பமும் கிட்டவில்லை. இப்போது அத்தகைய சந்தர்ப்பம் கிட்டியது. மூன்று பவுன் தலைவரியை எதிர்க்கும் போராட்டத்தில் இந்தியத் தொழிலாளிகள் ஆயிரக்கணக்கானவர்கள் நேர்முகமாகக் கலந்து கொள்வதற்கு வசதி ஏற்பட்டது.
* * *
மறுபடியும் போராட்டம் தொடங்குவதைத் தவிர வேறு வழியில்லை என்று காந்திஜிக்குத் தெரிந்தவுடனே ஸ்ரீ கோகலேக்குக் கடிதம் எழுதினார். தமக்குக் கொடுத்த வாக்குறுதி பங்கமடைந்ததை அறிந்து ஸ்ரீ கோகலே மிக்க வருத்தமடைந்தார். மேலே நடக்கவேண்டியதைப் பற்றித் தமது கவலையையும் தெரிவித்தார். "நீங்கள் கவலைப்பட வேண்டாம். இங்கே நாங்கள் உயிரைக் கொடுத்துப் போராடுவ தென்று கங்கணம் கட்டிக் கொண்டு விட்டோம். மூன்று பவுன் தலைவரியை ரத்து செய்யும் வரையில் போராடுவோம்!" என்று மகாத்மா பதில் எழுதினார். இதற்கு மேல் கோகலே, "சத்தியாக்கிரஹ இயக்கத்தில் குறைந்த பட்சம் எவ்வளவு பேர் சேரக்கூடும் ? அதிகபட்சம் எவ்வளவு பேர் சேரலாம்? அவர்களுடைய பெயர்கள், குடும்பங்கள் முதலிய விவரங்களைப்பற்றித் தெரிவிக்கவும் " என்று கேட்டார்.
காந்தி மகான் எப்போதும் தமது சக்தியை அதிகப்படுத்தி கணக்கிடுவ தில்லை. கொஞ்சம் குறைவாகவேதான் மதிப்பிடுவது வழக்கம். சத்தியாக்கிரஹத்தில் ஈடுபடக் கூடிய 66 பேரின் ஜாபிதாவை காந்திஜி எழுதி அனுப்பினார். இவர்களில் குறைந்த பட்சம் 16 பேர் கடைசி வரையில் நின்று நிலைத்துப் போராடுவார்கள் என்று தெரியப்படுத்தினார். அதோடு இந்த விவரங்களை யெல்லாம் கோகலே கேட்டிருப்பதின் காரணத்தை ஊகித்துத் தெரிந்து கொண்டு, "எங்களுக்குப் பண உதவி அனுப்புவது பற்றித் தாங்கள் கவலைப்பட வேண்டாம். நாங்கள் எப்படியாவது சமாளித்துக் கொள்கிறோம். தங்களுடைய உடல் நிலையைப் பார்த்துக் கொள்ளவும்" என்று மகாத்மா எழுதினார். அப்போது கோகலேயின் உடல் நிலை சரியாக இருக்கவில்லை. ஆனாலும் மகாத்மாவுக்குக் கோகலே கண்டிப்பான பதில் ஒன்று எழுதினார். "உங்களுடைய கடமையை அங்கே நீங்கள் செய்யுங்கள். எங்களுடைய கடமையை இந்தியாவில் நாங்கள் செய்கிறோம். இங்கே நாங்கள் செய்ய வேண்டியதைப் பற்றி உங்களுடைய யோசனை தேவை யில்லை !" என்று சிறிது கோபமாகவே எழுதினார்.
தென்னாப்பிரிக்காவில் காந்தி மகான் இறுதிப் போராட்டம் தொடங்கி நடத்தியபோது இந்தியாவில் ஸ்ரீ கோகலே பெருங்கிளர்ச்சி ஆரம்பித்துத் தென்னாப்பிரிக்கா இந்தியர்களுக்குச் சாதகமாகப் பொது ஜன அபிப்பிராயத்தைத் திரட்டி வந்தார். இதன் பலன் என்ன என்பதைப் பின்னால் பார்ப்போம்.
* * *
மீண்டும் சத்தியாக்கிரஹப் போர் தொடங்குவதற்கு மகாத்மா காந்தி ஏற்பாடுகளைச் செய்துகொண்டிருந்தபோது, இந்திய சமூகத்தின் தலையில் எதிர்பாராத இன்னொரு பாறாங்கல் வந்து விழுந்தது. அந்தப் பாறாங்கல்லைப் போட்டவர் கேப் டவுன் உயர் தர நீதி மன்றத்தின் நீதிபதி ஸியரல் என்பவர்.
இந்தியாவிலிருந்து தென்னாப்பிரிக்காவுக்குச் சென்ற இந்தியர் பலர் கலியாணம் செய்து கொண்டு மனைவி மக்களுடன் சென்றார்கள். வேறு பலர் தென்னாப்பிரிக்காவிலேயே மணம் புரிந்து கொண்டார்கள். இவர்களில் ஹிந்துக்கள் ஹிந்து சம்பிரதாயத்தின்படியும் முஸ்லிம்கள் முஸ்லிம் வழக்கத்தை ஒட்டியும் சடங்குகள் நடத்திக் கலியாணம் செய்து கொண்டிருப்பதே இயல்பல்லவா? நாற்பது வருஷ காலமாக மேற்படி கலியாணங்கள் தென்னாப்பிரிக்காவில் அங்கீகரிக்கப்பட்டு வந்தன. திடீரென்று மேற்படி கலியாணங்கள் எல்லாம் தென்னாப்பிரிக்காவில் செல்லுபடியாகா என்று ஏற்பட்டால் இந்தியர்களின் மனோ நிலைமை எப்படி யிருக்கும் ? கேப்டவுன் கோர்ட் டில் நீதிபதி ஸியரல் விசாரணை செய்த ஒரு வழக்கு சம்பந்தமாக மேற்கண்டவாறு தீர்ப்பு அளித்துவிட்டார். அதாவது கிறிஸ் துவ சம்பிரதாயப்படி கலியாணம் நடந்து விவாக ரிஜிஸ்ட்ரார் ஆபீஸில் ரிஜிஸ்டர் செய்யப்பட்ட கலியாணங்கள் தான் சட்டப் படி செல்லும் என்றும் மற்றவை யெல்லாம் செல்லுபடியாகா என்றும் மேற்படி நீதிபதி தீர்ப்பு அளித்தார். அந்தத் தீர்ப்பு ஊர்ஜிதம் ஆகும் பட்சத்தில் ஆயிரக்கணக்கான இந்தியக் குடும் பங்களில் மனைவிமார்கள் 'மனைவி ' என்னும் உரிமையை இழந்துவிட வேண்டியதாகும். அப்படியானால் அந்த 'மனைவி'யில்லாத ஸ்திரீக்கும் அவளுடைய புருஷனுக்கும் பிறந்த குழந்தைகள் சட்டப்படி அவர்களுடைய வார்ஸுகள் ஆக மாட்டார்கள். பெற்றோர்களின் சொத்துக்குக் குழந்தைகளுக்கு உரிமை யில்லாமல் போய் விடும். தென்னாப்பிரிக்கா இந்தியர்களுக்கு இது எவ்வளவு கேவலமான-பயங்கரமான - நிலைமை என்று சொல்லவேண்டியதில்லை யல்லவா ?
மேற்படி தீர்ப்பினால் இந்திய சமூகத்தில் ஏற்பட்ட கலக்கத்தைச் சொல்லி முடியாது. காந்திஜி தமது வழக்கப்படி சர்க்காருக்கு உடனே ஒரு கடிதம் எழுதினார். "நீதிபதி ஸியரல் தீர்ப்பு சரியானதா ? இப்போதுள் ள சட்டப்படி அது சரி என்று ஏற்படும் பட்சத்தில், சட்டத்தை உடனே திருத்தி இந்தியர்கள் தங்கள் மத சம்பிரதாயப்படி செய்து கொண்ட கலியாணங்களைச் சட்ட ரீதியாகச் செல்லும்படி செய்யப் போகிறீர்களா ?" என்று காந்திஜி கேட்டிருந்தார். ஆனால் இறுமாப்பின் சிகரத்தில் வீற்றிருந்த தென்னாப்பிரிக்கா சர்க்கார் மேற்படி கடிதத்தின் பேரில் எந்தவித நடவடிக்கையும் எடுத்துக் கொள்ளத் தயாராயில்லை.
இனிமேல் காலந் தாழ்த்துவது முறையல்ல என்று காந்திஜி தீர்மானித்தார். சத்தியாக்கிரஹக் கமிட்டியைக் கூட்டினார். உடனே சத்தியாக்கிரஹப் போரைத் தீவிரமாக ஆரம்பிக்க வேண்டும் என்று கமிட்டி தீர்மானித்தது. இதுவரையில் ஆண் மக்கள் மட்டுந்தான் போரில் கலந்து கொண்டார்கள். பெண்களைக் கஷ்டத்துக்கு உள்ளாக்குவதை யாரும் விரும்பவில்லை, இப்போது இந்தியப் பெண் குலத்துக்கு இத்தகைய அவமானமும் அநீதியும் இழைக்கப்பட்டிருக்கும் போது, பெண்களைப் போரில் சேரவேண்டாம் என்று தடுப்பது எப்படி நியாயம் ஆகும் ? அதற்குப் பதிலாக, "ஸ்திரீகளும் இந்தப் போரில் சேர வேண்டும்" என்று கேட்டுக் கொண்டு கமிட்டியார் தீர்மானம் செய்தனர்.
முதலில் டால்ஸ்டாய் பண்ணையில் வசித்த ஸ்திரீகளைச் சத்தியாக்கிரஹப் போரில் சேருகிறீர்களா என்று காந்திஜி கேட்டார். அவர்கள் உற்சாகத்துடன் அதற்கு இணங்கினார்கள்.
"போராட்டத்தின் போதும் சிறைச்சாலையிலும் பல கஷ்டங்களுக்கு உள்ளாக நேரலாம்" என்று மகாத்மா எச்சரிக்கை செய்தார். எந்தவிதமான கஷ்டத்துக்கும் தயார் என்று அந்தச் சகோதரிகள் சொன்னார்கள். அவர்களில் ஆறு பேர் கைக் குழந்தைக் காரிகள். ஒரு ஸ்திரீ கர்ப்பிணி. இப்படி யெல்லாமிருந்தும் அவர்கள் சிறிதும் தயங்கவில்லை.
"போராட்டத்தில் ஈடுபட்டே தீருவோம் என்று முன்வந்த அந்தச் சகோதரிகள் அவ்வளவு பேரும் தமிழ்நாட்டுப் பெண்கள்" என்று மகாத்மா மகிழ்ச்சியுடனேயே குறிப்பிட்டிருக்கிறார். அவர்களுடைய பெயர்களையும் எழுதி யிருக்கிறார் : 1. ஸ்ரீமதி தம்பி நாயுடு, 2. ஸ்ரீமதி என். பிள்ளை, 3. ஸ்ரீமதி கே. முருகேச பிள்ளை, 4. ஸ்ரீமதி பெருமாள் நாயுடு, 5. ஸ்ரீமதி பி. கே. நாயுடு, 6. ஸ்ரீமதி கே. சின்ன சாமி பிள்ளை, 7. ஸ்ரீமதி என். எஸ். பிள்ளை, 8. ஸ்ரீமதி ஆர். ஏ. பூதலிங்கம், 9. ஸ்ரீமதி பவானி தயால், 10. குமாரி மீனாட்சிப் பிள்ளை, 11. குமாரி முருகேச பிள்ளை.
மேலே கண்ட பெயர்களைக் காந்திஜி "தென்னாப்பிரிக்கா சத்தியாக்கிரஹம்" என்ற நூலில் குறிப்பிட்டிருக்கிறார். பெண்களுடைய பெயர் ஞாபகமில்லாதபடியால் பெரும்பாலும் அவரவர்களுடைய கணவன்மார்களுடைய பெயரால் இங்கிலீஷ் முறைப்படி 'மிஸ்ஸஸ்' என்ற அடைமொழி சேர்த்திருக்கிறார்.
"சத்தியாக்கிரஹத்தில் சேர முன்வந்த பெண்மணிகள் அனைவரும் தமிழ்நாட்டுப் பெண்களே !" என்று மகாத்மா எழுதியிருப்பதைப் படிக்கும் தமிழன் - எவ னுக்குத்தான் தோள் பூரியாமல் இருக்கும் ? இதைப் படித்த பிறகு, பழைய தமிழ் நூல்களில் தமிழ்நாட்டு வீரத் தாய்மார்களின் அரு பெருஞ் செயல்களைப்பற்றிப் படிக்கும்போது, அவை முன்னைக் காட்டிலும் உண்மை ஒளி அதிகம் பெற்று விளங்கும் அல்லவா?
* * *
காந்தி மகான் டால்ஸ்டாய் பண்ணை யிலிருந்து போனிக்ஸ் ஆசிரமத்துக்குச் சென்றார். அங்கிருந்தவர்களில் 'இந்தியன் ஒப்பீனியன்' பத்திரிகை நடத்துவதற்காக இரண்டொருவரையும் குழந்தைகளையும் தவிர மற்றவர்கள் எல்லாரும் சத்தியாக்கிரஹப் போரில் ஈடுபட வேண்டும் என்று சொன்னார். ஆண்மக்கள் உடனே சம்மதித்தார்கள், பிறகு அங்கிருந்த சகோதரிகளை அழைத்து மகாத்மா பேசினார். போனிக்ஸ் ஆசிரமத்தில் வசித்த குஜராத்திப் பெண்கள் வெளி உலகிலே சென்று பழகியவர்கள் அல்ல ; சத்தியாக்கிரம இயக்கத்தில் அவர்களுக்குப் பயிற்சியும் கிடையாது. ஆயினும் மகாத்மா அவர்களை ஓரிடத்தில் சேர்த்து டால்ஸ்டாய் பண்ணையில் வசித்த தமிழ் நாட்டுப் பெண்மணிகளின் தீரத்தை உதாரணமாக எடுத்துச் சொன்னார். சத்தியாக்கிரஹத்தில் சேர்வதினால் ஏற்படக்கூடிய கஷ்டங்களையும் கூறினார். அந்த ஸ்திரீகளில் பலர் மகாத்மாவுக்கு உறவினர். 'எனக்காக நீங்கள் இந்தக் காரியத்தில் இறங்க வேண்டாம். மனத்தில் பரிபூரண உறுதியிருந்தால் இந்தப் போராட்டத்தில் சேருங்கள். இல்லாவிடில் சும்மா இருந்து விடுங்கள். ஒரு தடவை போரில் சேர்ந்த பிறகு சோர்ந்துபோய்ப் பின் வாங்கினால் எனக்கு அதைக் காட்டிலும் துன்பம் வேறு ஒன்றும் இல்லை.
இயக்கத்துக்கும் அதனால் பெருந் தீமை விளையும்" என்று எச்சரித்தார். எல்லாவற்றையும் கேட்ட பிறகு அச்சகோதரிகள் "நாங்களும் இயக்கத்தில் சேர்ந்தே தீருவோம்" என்று தீர்மானமாகக் கூறினார்கள்.
போனிக்ஸில் வசித்த பெண்களில் பலர் காந்தி மகானின் உறவினர் என்று பார்த்தோம் அல்லவா ? அந்த உறவினருக்குள்ளே மிக நெருங்கிய உறவினர் ஒருவர் இருந்தார். அவர் தான் மகாத்மாவின் வாழ்க்கைத் துணைவியான ஸ்ரீமதி கஸ்தூரிபாய். எல்லாப் பெண்களையும் காந்திஜி அழைத்துப் பேசியபோது கஸ்தூரிபாயை மட்டும் கூப்பிடவில்லை. அவரிடம் இந்த விஷயத்தைப் பற்றி பிரஸ்தாபிக்கவும் காந்திஜி விரும்பவில்லை. ஸ்ரீமதி கஸ்தூரிபாயின் குணசீலத்தை நன்கு அறிந்தவராதலால், தாம் சொல்லுகிற காரியத்தை அவர் உடனே ஒப்புக்கொண்டு விடுவார் என்றும் அது நல்லதல்ல வென்றும் மகாத்மா கருதினார்.
மற்றச் சகோதரிகளை அழைத்து மகாத்மா பேசிய விஷயம் ஸ்ரீமதி கஸ்தூரிபாயின் காதில் விழுந்தது. அவர் உடனே காந்திஜியிடம் வந்து, "என்னை மட்டும் எதற்காக ஒதுக்கி வைத்தீர்கள்? என்னிடம் என்ன குற்றத்தைக் கண்டீர்கள் ? தாங்கள் மற்றவர்களுக்குக் காட்டுகிற வழியில் நான் அல்லவா முதலில் நடந்து காட்டவேண்டும் ? என்னை நீங்கள் இவ்விதம் ஒதுக்கிவிட்டதை எண்ணினால் எனக்கு ரொம்பவும் வருத்தமா யிருக்கிறது!" என்று சொன்னார்.
அதற்கு மகாத்மா காந்தி கூறியதாவது :- 'உனக்கு வருத்தம் கொடுப்பதில் எனக்கு ஒன்றும் சந்தோஷமில்லை. வேண்டுமென்று அப்படிச் செய்ய மாட்டேன். நீ சத்தியாக்கிரஹப் போரில் சேர்ந்து சிறைக்குச் சென்றால் எனக்கு அளவில்லாத மகிழ்ச்சி உண்டாகும். ஆனால் நான் சொல்வதற்காக நீ சிறைக்குச் செல்வது என்பது கூடாது. இந்த மாதிரி இயக்கங்களில் அவரவர்கள் தங்கள் சொந்த அபிப்பிராயத்தின்படி, சொந்த பலத்தையே நம்பி, ஈடுபட வேண்டும். என்னுடைய வார்த்தைக்காக நீ இப்போது இயக்கத்தில் சேர்ந்துவிட்டு அப்புறம் கோர்ட்டில் நிற்கும்போது பயப்பட்டாலும், சிறைக் கஷ்டங்களைப் பார்த்துப் பின் வாங்கினாலும், என்னுடைய நிலைமை என்ன ஆகும் என்று பார் ! அப்படி நடந்துவிட்டால் பிறகு உன் முகத்தை எப்படி நான் பார்ப்பேன் ? உலகத்தின் முன்னிலையில் எப்படி நான் நிமிர்ந்து நிற்கமுடியும் ? மற்ற ஸ்திரீகளுக்கும் உனக்கும் இந்த வித்தியாசம் இருப்பதினாலேயே நான் உன்னைச் சிறைக்குப் போகும்படி கேட்கவில்லை."
கஸ்தூரிபாய் என்னும் தெய்வப் பெண்மணி பதில் கூறினார்:- "நீங்கள் அனுபவிக்கிற கஷ்டம் எதுவாயிருந்தாலும் அதை நானும் பகிர்ந்து அனுபவிப்பேன். என்னுடைய குழந்தைகள் சிறைச்சாலை சென்று அடையும் கஷ்டங்களை நானும் அடைவேன். கோர்ட்டிலோ சிறைச்சாலையிலோ நான் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு விடுதலை யடைந்தால், அப்புறம் என் முகத்திலேயே நீங்கள் விழிக்க வேண்டாம்; நான் உங்களுடைய பத்தினி அல்லவென் று நிராகரித்து விடுங்கள் !"
இந்தப் பதிலினால் மகாத்மா எல்லையற்ற மகிழ்ச்சி யடைந்தார். ஆயினும் இன்னும் ஒரு முறை எச்சரிக்கை செய்தார் : “நீ இவ்வளவு பிடிவாதமாகச் சொல்லுகிறபோது நான் உன்னைச் சேர்த்துக்கொண்டே ஆகவேண்டும். ஆனால் இன்ன முங்கூட நீ யோசிப்பதற்கு அவகாசம் இருக்கிறது. உன்னுடைய தீர்மானத்தை மாற்றிக் கொள்வதில் அவமானம் ஒன்றும் இல்லை. நன்றாக மறுபடியும் யோசித்துச் சொல்லு." "இனிமேல் யோசிப்பதற்கு ஒன்றுமேயில்லை. முடிவான தீர்மானம் செய்து விட்டேன். ஒருநாளும் மாறமாட்டேன் " என் றர் கஸ்தூரிபாய்.
தமது வாழ்நாள் இறுதி வரையில் ஸ்ரீமதி கஸ்தூரிபாய் மாறவேயில்லை. மகாத்மாவின் ஒவ்வொரு இயக்கத்திலும் அவர் சேர்ந்து சிறை சென்று தாங்கொணா கஷ்டங்களைப் பட்டார், கடைசியாக, சிறைச் சாலைக்குள்ளேயே கணவருடைய மடியில் படுத்துக் கொண்டு உயிர் நீத்தார். இந்தியப் பெண் குலத்தின் சலியாத மன உறுதிக்கு ஸ்ரீமதி கஸ்தூரிபாயைப் போன்ற சிறந்த உதாரணம் வேறு ஏது ?
-------
டிரான்ஸ்வால் மாகாணத்திலிருந்த டால்ஸ்டாய் பண்ணையிலும், நேட்டால் மாகாணத்திலிருந்த போனிக்ஸ் ஆசிரமத்திலும் வசித்த பெண்கள் எல்லாரும் சத்தியாக்கிரஹப் போரில் ஈடுபட ஆயத்தமாகி விட்டார்கள். ஆனால் எந்த முறையில் சத்தியாக்கிரஹம் செய்வது? - இது முக்கியமான பிரச்னை ஆயிற்று. ஏனென்றால், சத்தியாக்கிரஹத்தின் இயல்பை அறிந்த பிறகு தென்னாப்பிரிக்கா சர்க்கார் காந்திமகானைச் சேர்ந்தவர்களைக் கைது செய்வதில்லை யென்று சண்டித்தனம் செய்தார்கள். சாதாரண இந்தியர்கள் சட்டத்திலிருந்து அணுவளவு வழுவி நடந்தாலும் கைது செய்யப்பட்டார்கள். ஆனால் மகாத்மாவின் சத்தியாக்கிரஹப் படையைச் சேர்ந்தவர்கள் என்ன தான் சட்டத்தை மீறி நடந்தாலும் கைது செய்யப்படுவது தில்லை.
டால்ஸ்டாய் பண்ணையைச் சேர்ந்த சகோதரிகள் லைஸென்ஸ் சட்டத்தை மீறித் தெருத் தெருவாகப் பண்டங்களைக் கொண்டுபோய் விற்றார்கள். ஆனாலும் அவர்களைக் கைது செய்யவில்லை.
இதன் பேரில் மகாத்மா காந்தி தீர்க்கமாக ஆலோசித்துச் சத்தியாக்கிரஹத்துக்கு ஒரு திட்டம் வகுத்தார்.
ஆசியாக்காரர் சட்டத்தின்படி ஒரு மாகாணத்திலுள்ள இந்தியர்கள் இன்னொரு மாகாணத்துக்கு அநுமதிச் சீட்டு இல்லாமல் போகக் கூடாதல்லவா ? ஆகையால் டால்ஸ்டாய் பண்ணையைச் சேர்ந்த சகோதரிகளைப் பார்த்து, "நீங்கள் டிரான்ஸ்வால் எல்லையைத் தாண்டி நேட்டால் மாகாணத்துக்குள் பிரவேசியுங்கள். எல்லையில் உங்கள் பெயர்களைக் கேட்டால் சொல்லவேண்டாம். அப்படியும் உங்களைக் கைது செய்யாவிட்டால் நேட்டால் மாகாணத்துக்குள் இருக்கும் 'நியூகாஸில்' என்னும் பட்டணத்தை நோக்கிச் செல்லுங்கள். நியூகாஸில் பட்டணத்தில் உள்ள நிலக்கரிச் சுரங்கங்களில் இந்தியத் தொழிலாளிகள் ஆயிரக்கணக்கானவர்கள் வேலை செய்கிறார்கள். அவர்கள் மூன்று பவுன் தலைவரியினால் பாதிக்கப்பட்டவர்கள்; பெரும்பாலோர் சென்னை மாகாணத்தைச் சேர்ந்தவர்கள், நீங்கள் நியூகாஸில் பட்டணத்தை அடைந்து அங்கேயுள்ள தொழிலாளிகளிடம் வேலை நிறுத்தம் செய்யும்படி கேட்டுக் கொள்ளுங்கள். அதற்குமேல் என்ன நடக்கிற தென்று பார்த்துக்கொண்டு நிலைமைக்குத் தக்கபடி யோசனை சொல்கிறேன் !" என்றார் காந்திஜி.
அதன்படியே டால்ஸ்டாய் பண்ணையைச் சேர்ந்த தமிழ்ப் பெண்மணிகள் நியூகாஸிலை நோக்கி யாத்திரை கிளம்பினார்கள்.
அதே சமயத்தில் காந்திஜியின் யோசனைப்படி போனிக்ஸ் ஆசிரமப் பெண்மணிகள் டிரான்ஸ்வாலை நோக்கிப் புறப்பட் டார்கள். அவர்கள் நேட்டால் எல்லையைத் தாண்டும் சமயத்தில் அதிகாரிகள் அவர்களிடம், "அநுமதிச் சீட்டு எங்கே?" என்று கேட்டார்கள்.
போனிக்ஸ் சகோதரிகள், "அநுமதிச் சீட்டு இல்லை" என் று சொன்னார்கள்.
"உங்கள் பெயர் என்ன? " என்று அதிகாரிகள் கேட்டார்கள். அதற்கும் பதில் சொல்ல அந்தச் சகோதரிகள் மறுத்தார்கள். அந்தப் பெண்மணிகள் காந்தி மகானைச் சேர்ந்த சத்தியாக்கிரஹிகள் என்று அதிகாரிகளுக்குத் தெரியாது. எனவே, அவர்கள் கைது செய்யப்பட்டார்கள், கோர்ட்டில் விசாரணையும் நடந்தது. தலைக்கு மூன்று மாதம் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. தண்டனை யடைந்தவர்களில் ஸ்ரீமதி கஸ்தூரிபாயும் ஒருவர். 1913 செப்டம்பர்மீ 23 இச்சம்பவம் நடந்தது.
ஆனால் டால்ஸ்டாய் ஆசிரமப் பெண்மணிகளுக்கு அவ்வளவு சுலபத்தில் அதிர்ஷ்டம் கிட்டவில்லை. அவர்கள் சத்தியாக்கிரஹிகள் என்பதை அதிகாரிகள் தெரிந்து கொண்டு கைது செய்யாமல் விட்டார்கள். எனவே அவர்கள் மகாத்மாவின் யோசனைப்படி நியூகாஸில் பட்டணத்துக்குச் சென்றார்கள். நிலக்கரிச் சுரங்கத்தில் வேலை செய்த இந்தியத் தொழிலாளிகளிடம் மூன்று பவுன் தலைவரி, கலியாணரத்துத் தீர்ப்பு, ஆசியாக்காரர் தடை முதலிய அநீதிகளைப் பற்றிச் சொல்லி வேலை நிறுத்தம் செய்யும்படி கேட்டுக் கொண்டார்கள். மேற்கூறிய அநீதிகளினால் ஏற்கெனவே உள்ளம் கொதித்துக்கொண்டிருந்த இந்தியத் தொழிலாளிகள் மேற்படி சகோதரிகளின் வார்த்தைகளினால் உணர்ச்சி வசப்பட்டு வேலை நிறுத்தம் செய்தார்கள். ஆயிரக்கணக்கான தொழிலாளிகள் வேலை நிறுத்தம் செய்தபடியினால் சுரங்கங்களில் வேலை அடியோடு நின்று விட்டது. இந்த விபரீதத்தைக் கண்டதும் அதிகாரிகள் விழித்துக் கொண்டார்கள். டால்ஸ்டாய் பண்ணைப் பெண்மணிகளைச் சும்மா விட்டது தவறு என்று உணர்ந்து அவர்களைக் கைது செய்தார்கள். அவர்களுக்கும் கோர்ட்டில் மூன்று மாதக் கடுங்காவல் தண் டனை விதிக்கப்பட்டது. 1913-ம் வருஷம் அக்டோபர் 21-ந் தேதி இது நடந்தது.
இவ்விதமாகப் பெண்மணிகள் சிறை புகுந்த சம்பவம் தென்னாப்பிரிக்காவிலிருந்த சகல இந்தியர்களின் உணர்ச்சியையும் எழுப்பி விட்டது. தாய் நாடாகிய இந்தியாவிலும் பெரும் பரபரப்பை உண்டாக்கியது. இதுவரையில் தென்னாப்பிரிக்கா விஷயமாகச் சிரத்தை காட்டாதவர்கள் எல்லாம் இப்போது சிரத்தை கொண்டார்கள். ஸர் பிரோஸிஷா மேத்தா 1901-ம் வருஷத்தில் காந்திஜியிடம் "நீர் தென்னாப்பிரிக்காவுக்குப் போக வேண்டாம்!" என்று புத்திமதி கூறினார். “இந்தியா சுதந்திரம் அடையாதவரையில் தென்னாப்பிரிக்கா இந்தியருக்கு நாம் என்ன உதவி செய்ய முடியும்?" என்று சொன்னார். இதுவரையில் தென்னாப்பிரிக்கா சத்தியாக்கிரஹத்தில் அவர் அநுதாபமே காட்டவில்லை. ஆனால் பெண்கள் சிறை புகுந்த செய்தி அவர் மனத்தைக் கலக்கிவிட்டது. பம்பாய் டவுன் ஹாலில் நடந்த பொதுக் கூட்டத்தில் அவர் பேசும் போது, "உத்தமிகளான இந்திய சகோதரிகள் கொலைக்காரர்களும் திருடர்களும் அடைக்கப்படும் சிறையில் கிடந்து வாடுகிறார்கள் என்பதை எண்ணினால் இரத்தம் கொதிக்கிறது!" என்று அலறினார்.
தண்டனை விதிக்கப்பட்ட எல்லாப் பெண்மணிகளும் மோட்ஸ்பர்க் சிறையில் வைக்கப்பட்டார்கள். அவர்கள் சிறையில் பட்ட கஷ்டங்களை விவரித்தால் கல்லும் உருகிவிடும். அவர்களுக்குக் கொடுத்த உணவு வாயில் வைக்க முடியாது. சிறைக் கைதிகளின் துணி வெளுக்கும் வேலை அவர்களுக்குக் கொடுக்கப்பட்டது. சிறை புகுந்த பெண்களில் அநேகர் வெளியில் வரும்போது எலும்புந் தோலுமாக வந்தார்கள்.
முதற் படையில் சேர்ந்த பெண்மணிகளைத் தவிர வேறு சிலரும் பிற்பாடு சேர்ந்தார்கள். இவர்களில் குமாரி வள்ளியம்மை பதினாறு பிராயத்து இளம் பெண். மூன்று மாதம் சிறையி லிருந்துவிட்டு வெளிவந்தபோது வள்ளியம்மை மிக மெலிந்து எலும்புக் கூடாகக் காட்சி தந்தாள். காந்தி மகாத்மா அந்த வீரத் தமிழ்ப் பெண்ணைப் பார்ப்பதற்காக வந்தார்.
"வள்ளியம்மா ! நீ சிறை சென்றது பற்றி வருத்தப்படும் கிறாயா?" என்று மகாத்மா கேட்டார்.
"வருத்தமா? மறுபடியும் என்னைக் கைது செய்தால் சிறைக்குப் போகத் தயார்!" என்றாள் வள்ளியம்மாள்.
"ஒருவேளை உன் உயிருக்கு ஆபத்து வரலாம் என்பதை யோசித்துப் பார்த்தாயா?" என்று காந்திஜி கேட்டார்.
"வந்தால் வரட்டும். தாய்நாட்டின் மானத்தைக் காப்பதற்காக உயிர்த்தியாகம் செய்வது பெரிய பாக்கியம் அல்லவா?” என்றாள் அந்தப் பதினாறு பிராயத்துப் பெண்.
இந்தச் சம்பாஷணை நடந்த சில நாளைக்கெல்லாம் வள்ளியம்மை இந்த மண்ணுலகை நீத்துச் சென்றாள். வள்ளியம்மையின் மகா தியாகத்தைப்பற்றியும் பொதுவாக இந்திய சகோதரிகளின் சிறைவாசத்தைப் பற்றியும் மகாத்மா காந்தி எழுதி யிருப்பதாவது:
"வள்ளியம்மையின் உடல் மறைந்துவிட்டது. ஆனால் வள்ளியம்மையின் பெயர் சிரஞ்சீவித்வம் பெற்றிருக்கிறது. வள்ளியம்மையின் ஞாபகம் இன்றைக்கும் அநேக இருதயங்களில் குடி கொண்டிருக்கிறது. இந்தியா தேசம் உள்ள அளவும் தென்னாப்பிரிக்கா சத்தியாக்கிரஹத்தின் சரித்திரம் மறக்கப்பட மாட்டாது. தென்னாப்பிரிக்கா சத்தியாக்கிரஹ சரித்திரம் உள்ள வரையில் வள்ளியம்மையின் புகழும் நிலை பெற்றிருக்கும்.
"தென்னாப்பிரிக்கா சத்தியாக்கிரஹத்தில் ஈடுபட்ட சகோதரிகளின் தியாகத்தை எவ்வளவு பாராட்டினாலும் அது மிகைப் படுத்துவ தாகாது. அந்தச் சகோதரிகளில் பலர் தாய் நாடாகிய இந்தியாவைப் பார்த்ததேயில்லை. அவர்களுக்கு இந்தியா என்பது ஒரு பெயர் தான். அவர்கள் பத்திரிகை படிப்பவர்களும் அல்ல. அவர்களுடைய தேச பக்தி நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டது. இந்தியாவின் கெளரவத்துக்குப் பங்கம் இழைக்கப்படுகிறது என்பதை மட்டும் அவர்கள் அறிந்திருந்தார்கள். அந்த கெளரவத்தை நிலை நாட்டுவதற்காக எத்தகைய தியாகத்தையும் செய்ய முன் வந்தார்கள். அவர்கள் சிறை சென்றது மகா பரிசுத்தமான தியாகமாகும். அத்தகைய தூய்மையான தியாகமே கடவுளுக்கு உகந்தது. எனவே, அப்படிப்பட்ட தியாகம் ஒருநாளும் வீண்போகாது. தென்னாப்பிரிக்கா சகோதரிகளின் தியாகம் சிறந்த பலன் அளித்தது என்பதில் சந்தேகமில்லை."
இவ்விதம் மகாத்மா காந்தி நம் தமிழ் நாட்டுச் சகோதரிகளின் தியாகத்தை வியந்து பாராட்டி எழுதியிருக்கிறார். அச் சகோதரிகளின் தியாகம் எந்த முறையில் பலன் அளித்தது என்பதை அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்.
-----------
டால்ஸ்டாய் பண்ணையிலிருந்து புறப்பட்டுவந்த பெண்மணிகள் நியூகாஸில் பட்டணத்தில் கைது செய்யப்பட்டார்கள் அல்லவா ? அந்தப் பட்டணத்தை அடுத்திருந்த சுரங்கங்களில் ஆயிரக்கணக்கான இந்தியத் தொழிலாளிகள் வேலை செய்து கொண்டிருந்தார்கள். மேற்கூறிய பெண்மணிகளின் தியாகம் இந்தியத் தொழிலாளரின் உணர்ச்சியைத் தூண்டி விடவே அவர்கள் வேலை நிறுத்தம் செய்துவிட்டுக் கூட்டம் கூட்டமாய் நியூகாஸில் பட்டணத்துக்குள் பிரவேசிக்கத் தொடங்கினார்கள்.
இதற்கிடையில் காந்தி மகாத்மாவும் நியூகாஸிலுக்கு வந்து சேர்ந்திருந்தார். மிஸ்டர் டி. லாஸரஸ் என்னும் தமிழ்க் கிறிஸ்துவரின் வீட்டில் அவர் தங்கினார். நியூகாலில் பட்டணத்தில் பணக்கார இந்திய வியாபாரிகள் சிலர் இருந்தனர். முன் தடவைகளில் மகாத்மா நியூகாஸில் வந்தபோது அந்த வியா பாரிகள் வீட்டில் தங்குவது வழக்கம். ஆனால் இந்தத் தடவை போராட்டம் நடந்துகொண்டிருந்தபடியால் வியாபாரிகள் பயப்பட்டார்கள். மிஸ்டர் லாஸரஸ் பணக்காரர் அல்ல, கொஞ்சம் நிலமும் அதன் மத்தியில் ஒரு சிறிய வீடும் அவருடைய உடைமைகள். ஒப்பந்தத் தொழிலாளியாக வந்த குடும்பத்தை அவர் சேர்ந்தவர்.
அவரும் அவருடைய குடும்பத்தாரும் மூன்று பவுன் தலைவரி கொடுத்து வந்தார்கள். ஆகையால், ஏழைத் தொழிலாளிகளின் கஷ்டங்களை மிஸ்டர் லாஸரஸ் நன்கு அறிந்திருந் தார். டால்ஸ்டாய் பண்ணையிலிருந்து வந்த ஸ்திரீ சத்தியாக் கிரஹிகளை அவர்தான் வரவேற்று உபசரித்துத் தமது வீட்டில் தங்குவதற்கு இடம் கொடுத்தவர். இப்போது காந்தி மகானு அவருடைய வீட்டிலேயே தங்கினார். இது காரணமாக லாஸரஸ் வீட்டுக்கு வருவோரும் போவோரும் பலர் ஆயினர். அவ்வளவு பேருக்கும் லாஸரஸ் தம்பதிகள் முகமலர்ச்சியுடன் உணவு அளித்து உபசரித்தார்கள்.
எனினும், தொழிலாளிகள் ஆயிரக்கணக்கில் வரத் தொடங் கிய பிறகு லாஸரஸின் சிறிய வீட்டில் எப்படி எல்லாருக்கும் இடம் இருக்கும் ?
* * *
சுரங்கங்களில் வேலை செய்த இந்தியத் தொழிலாளருக்குச் சொந்த வீடு கிடையாது. சுரங்கச் சொந்தக்காரர்கள் கட்டிக் கொடுத்திருந்த சிறிய குடிசைகளில் அவர்கள் வசித்து வந்தார்கள். அவர்கள் வசித்த வீதிகளில் விளக்குப் போட்டவர்களும் தண்ணீர்க் குழாய்கள் வைத்துத் தந்தவர்களும் சுரங்கச் சொந் தக்காரர்களே. தொழிலாளிகள் வேலை நிறுத்தம் செய்தவுடனே வீதிகளில் போட்டிருந்த விளக்குகள் அணைக்கப் பட்டன. குழாய்த் தண்ணீர் நிறுத்தப்பட்டது. குடிசைகளைக் காலி செய்யும்படி உத்தரவும் பிறந்தது. உடனே காலி செய்யாதவர்களுடைய சாமான்கள் தெருக்களில் வீசி எறியப் பட்டன. அப்படி எறிவதைத் தடுக்க முயன்றவர்கள் அடிக்கப் பட்டார்கள். ஆனால் தென்னாப்பிரிக்காவில் வசித்த இந்தியர்கள் அனைவரும் இதற்குள்ளே மகாத்மாவின் அஹிம்சைத் தத்துவத்தைப் பற்றித் தெரிந்துகொண்டிருந்தபடியால் தொழிலாளி யாரும் பலாத்காரத்தைக் கையாள வில்லை. அதிகாரிகளின் பலாத்காரத்தைப் பொறுமையுடன் சகித்துக் கொண்டிருந்தார்கள்.
அப்படிச் சகித்துக் கொண்டிருந்த ஸையது இப்ராஹிம் என்னும் பட்டாணியர் ஒருவர் மகாத்மாவிடம் வந்து தம் முதுகைக் காட்டினார். " என்னை எப்படி அடித்திருக்கிறார்கள், பாருங்கள் ! நான் பட்டாணியன். அடியைப் பொறுத்துக் கொண்டு சும்மாயிருப்பது எனக்கு வழக்கமில்லை. ஆயினும் உங்களுடைய வார்த்தைக்குக் கட்டுப்பட்டுச் சும்மாயிருக்கிறேன்!" என்று சொன்னார்,
"உங்களுடைய பொறுமையைப் பாராட்டுகிறேன். உண்மையான தைரியம் இதுதான். உங்களைப் போன்றவர்களின் தீரத்தினால் நிச்சயம் வெற்றியடைவோம் !" என்றார் மகாத்மா.
ஆனால் இந்தப் பட்டாணியருக்கு நேர்ந்தது மற்ற எல்லாத் தொழிலாளருக்கும் நேரும் பட்சத்தில் இயக்கம் எத்தனை நாள் நடக்கும் என்ற சந்தேகம் மகாத்மாவுக்கு உதித்தது. அவர்களுக்கு ஏதாவது ஒரு வழி சொல்லியாக வேண்டும். மகாத்மா கவலையுடன் யோசித்துக் கடைசியில் ஒரு முடிவுக்கு வந்தார். இந்தியத் தொழிலாளிகள் சுரங்க முதலாளிகள் வீடுகளைக் காலி செய் துவிட்டு, அநாவசியமான சாமான்களை யெல்லாம் தூர எறிந்துவிட்டு, அவசியமாக வேண்டிய துணிமணிகளையும் பாத்திரங்களையும் மட்டும் எடுத்துக் கொண்டு வந்துவிட வேண்டும் என்றார். இதற்குத் துணிச்சல் இல்லாதவர்கள் வேலைக்குத் திரும்பிப் போய்விடலாம் என்றும் கூறினார்.
ஆனால் ஒருவராவது திரும்பிப் போகவில்லை. தொழிலாளிகளும் அவர்களுடைய குடும்பத்தாருமாக ஆயிரக்கணக்கானவர்கள் காந்தி மகாத்மா காட்டிய வழியில் நடப்பதற்குத் தயாராக வந்துவிட்டார்கள்.
அவ்வளவு பேருக்கும் உணவும் தங்க இடமும் கொடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. இந்தச் சமயத்தில் இந்திய வியாபாரிகள் உதவி செய்வதற்குத் தாங்களாகவே முன் வந்தார்கள். மூட்டை மூட்டையாக அரிசியும் பருப்பும் சமையல் பாத்திரங்களும் மற்ற அவசியமான பண்டங்களும் சேகரித்துத் தந்தார்கள். பண வசதி இல்லாதவர்கள் தொண்டு செய்வதற்கு முன் வந்தார்கள். எனவே, வேலையையும் விட்டு, வீட்டையும் விட்டு வெளிவந்த தொழிலாளிகளுக்குச் சாப்பாடு போடுவது சாத்தியமாயிற்று.
நல்ல வேளையாக அப்போது மழை காலமோ, குளிர் காலமோ இல்லை யாதலால், திறந்த வெளியிலேயே தொழி லாளர் எல்லாரும் தங்கி யிருக்க முடிந்தது.
நாளுக்கு நாள் அத்தொழிலாளிகளின் கூட்டம் அதிகமாகிக் கொண்டு வந்தது. ஐயாயிரம் பேர் வரையில் சேர்ந்துவிட்டார்கள். அத்தனை பேரையும் எத்தனை நாளைக்கு வேலையில்லாமல் வைத்துக் கொண்டிருக்க முடியும் ? மேலும் அந்த ஏழைத் தொழிலாளிகள் கல்வியறிவு இல்லாதவர்கள் ; சுகாதார விதிகளை அறியாதவர்கள். தங்குகிற இடத்தைச் சுத்தமாக வைத்திருக்க அவர்களுக்குத் தெரியவில்லை. சுற்றுப் புறத்தில் எங்கே பார்த் தாலும் ஆபாசம் அதிகமாகிக் கொண்டு வந்தது தொற்று வியாதி தொடர்ந்து விட்டால் அபாயமாகப் போய்விடும்.
மேலும் அவ்வளவு பேருக்கும் மூன்று வேளை உணவு கொடுத்து எத்தனை நாளைக்கு வைத்துக் கொண்டிருக்க முடியும் ? எவ்வளவு காலம் திறந்த வெளியிலேயே அவர்கள் வசிக்க முடியும் ?
எனவே, காந்தி மகாத்மா கவலையுடன் சிந்தனை செய்து கடைசியில் ஒரு வழி கண்டுபிடித்தார். இந்தப் பெரிய தொழிலாளர் படையைக் கால் நடையாக டிரான்ஸ்வாலுக்கு அழைத்துச் செல்வது என்று தீர்மானித்தார்.
ஐயாயிரம் பேர் அடங்கிய சத்தியாக்கிரஹிகள் படை ஒரு மாகாணத்திலிருந்து இன்னொரு மாகாணம் செல்லும்போது சர்க்காருடைய நிலைமை என்னவா யிருக்கும்? அவ்வளவு பேரையும் சர்க்கார் கைது செய்வார்களா? கைது செய்து தான் தீரவேண்டும்; அல்லது ராஜி செய்து கொள்ள முன்வர வேண்டும்.
நியூகாஸில் நேட்டால், மாகாணத்தில் இருந்தது. அங்கிருந்து டிரான்ஸ்வால் மாகாண எல்லைக்கு 36 மைல். எல்லைப் புறத்தில் கைது செய்யாவிட்டால் அப்புறம் டால்ஸ்டாய் பண்ணை வரையில் நடத்தி அழைத்துப் போக மகாத்மா எண் ணியிருந்தார். அவ்வளவு தூரம் நடப்பதற்கு யாருக்காவது ஆட்சேபம் உண்டா என்று காந்திஜி இந்தியத் தொழிலாளரைக் கேட்டார். ஆட்சேபம் உள்ளவர்கள் திரும்பி வேலைக்குப் போய்விடலாம் என்றும் சொன்னார். ஒருவரும் திரும்பிப் போக முன் வரவில்லை. எல்லாரும் சத்தியாக்கிரஹ யாத்திரைக்குத் தயார் என்று சொன்னார்கள்.
* * *
யாத்திரைக்கு வேண்டிய ஆயத்தங்கள் செய்யப்பட்டு வந்த காலத்தில் டர்பனிலிருந்த சுரங்க முதலாளிகளிட மிருந்து மகாத்மாவுக்கு ஓர் அழைப்பு வந்தது. மகாத்மாவும் உடனே புறப்பட்டுச் சென்றார். முதலாளிகளின் தலைவர் மகாத்மாவைக் கடிந்து பேசினார். மூன்று பவுன் தலைவர் அரசியல் சம்பந்தமான பிரச்னை என்றும், தங்களுக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லையென்றும், ஆகையால் தொழிலாளிகளின் வேலை நிறுத்தம் சரியல்ல வென்றும், அவர்களை உடனே வேலைக்குத் திரும்பிப் போகும்படி செய்ய வேண்டும் என்றும் கூறினார்.
அரசாங்கத்தின் காரியத்துக்கு முதலாளிகளுக்கும் பொறுப்பு உண்டு என்றும், முதலாளிகளுக்கு வேலை செய்ய ஆட்கள் வேண்டி யிருப்பதினாலேயே ஒப்பந்தத் தொழிலாளி முறை ஏற்பட்ட தென் றும், ஆகையால் மூன்று பவுன் தலைவரியை எடுக்கும்படி முதலாளிகள் சர்க்காரை வற்புறுத்த வேண்டுமென்றும் காந்திஜி கூறினார். இந்த விவாதத்தினால் உடன்பாடு ஒன்றும் ஏற்படவில்லை. எனினும் பலன் இல்லாமற் போகவில்லை, சுரங்க முதலாளிகள் சர்க்காரோடு கடிதப் போக்குவரவு தொடங்கினார்கள்.
காந்திஜி நியூகாஸில் நகருக்குத் திரும்பி வந்ததும் படை கிளம்புவதற்கு வேண்டிய ஏற்பாடுகள் முடிவடைந்தன.
புறப்படுவதற்கு முன்னால், பிரயாணத்தின்போது அனுசரிக்க வேண்டிய விதிமுறைகளை இந்தியத் தொழிலாளிகளுக்கு மகாத்மா நன்கு எடுத்துக் கூறினார். வழியில் தலைக்கு ஒன்றரை பராத்தல் ரொட்டியும் ஒரு அவுன்ஸ் சர்க்கரையுந்தான் கொடுக் கப்படும் ; அத்துடன் திருப்தி அடையவேண்டும். அவசியமான துணிகளைத் தவிர அதிகமாகக் கொண்டு வரக் கூடாது. ஒருவர் இன்னொருவருடைய சாமான்களைத் தொடக்கூடாது. வழியில் ஐரோப்பியர்கள் செய்யும் தொந்தரவுகளையும் பொறுமையுடன் சகித்துக்கொள்ள வேண்டும். அதிகாரிகள் கைது செய்தால் முக மலர்ச்சியுடன் செல்ல வேண்டும், காந்திஜி மட்டும் கைது செய்யப்பட்டால் மற்றவர்கள் நின்றுவிடாமலும் கலைந்து விடாமலும் யாத்திரையைத் தொடர்ந்து டால்ஸ்டாய் பண்ணை வரையிலும் போய்த்தான் நிற்கவேண்டும். டால்ஸ்டாய் பண்ணையிலும் கைது செய்யப் படாவிட்டால், அங்கே விவசாய வேலை செய்து ஜீவனம் தேடிக்கொள்ள வேண்டும்.
இந்த நிபந்தனைகளை யெல்லாம் அத்தனை தொழிலாளிகளும் அறிந்துகொண்டு அவற்றின்படி நடக்க ஒப்புக்கொண்டார் கள். இதன்பேரில், 1913-ம் வருஷம் அக்டோபர் மீ 28 மகாத்மாவின் தலைமையில் ஆண்களும் பெண்களும் குழந்தைகளுமாகச் சுமார் ஐயாயிரம் பேருக்குமேல் அடங்கிய சத்தியாக்கிரஹப் படையின் யாத்திரை தொடங்கியது.
டிரான்ஸ்வால் எல்லைக்குச் சமீபத்திலிருந்த சார்லஸ்டவுன் என்னும் ஊர் வரையில் எல்லாரும் பத்திரமாகப் போய்ச் சேர்ந்தார்கள். அந்தப் பட்டணத்தில் சில நாள் தங்குவது என்று மகாத்மா உத்தேசித்திருந்தார். ஏனெனில் அங்கிருந்து சர்க்காருக்கு ஒரு கடிதம் எழுதிப் பதில் வருகிறதா என்று பார்க்க விரும்பினார். சார்லஸ்டவுன் மிகவும் சிறிய ஊர். அங்கே குடியேறியிருந்த இந்திய வியாபாரிகள் சத்தியாக்கிர ஹிகளுக்கு வேண் டிய அரிசியும் பருப்பும் கொடுத்து உதவ முன் வந்தார் கள். திறந்த வெளியிலேயே எல்லாரும் தங்க வேண்டி யிருந்தது. சமையல் செய்தல், பரிமாறுதல், தங்கும் இடத்தைச் சுத்தமாக வைத்திருத்தல் ஆகிய காரியங்களை நடத்துவதில் பெரும் சிரமம் ஏற்பட்டது. காந்திஜியே முன்னின்று இந்தக் காரியங்களைச் செய்தபடியினால் தான் சமாளிக்க முடிந்தது. மற்றவர்களை வேலை செய்யும்படி ஏவுவதுடன் மகாத்மா திருப்தி யடையவில்லை. அவரும் அவருடைய பிரதம சகாக்களும் குப்பையைப் பெருக்கித் தள்ளித் தங்குமிடத்தைச் சுத்தமாக்குவதில் முதன்மையாக நின்றார்கள்.
சமையல் விஷயத்திலும் பரிமாறும் விஷயத்திலும் அடிக்கடி சண்டை சச்சரவு நேர்வதா யிருந்தது. காந்திஜியே பரிமாறும் வேலையின் முழுப் பொறுப்பையும் ஒப்புக்கொண்டார். அதற்குப் பிறகு சமையல் 'நன்றாயில்லை' என்றோ, 'சாப்பாடு போதவில்லை' என்றோ புகார் செய்யத் தயங்கினார்கள். யாராவ து புகார் செய்தாலும் காந்திஜியின் சாந்தமான பதிலைக் கேட்டு அடங்கினார்கள்.
இதற்கிடையில் தென்னாப்பிரிக்காவின் மத்திய சர்க்காருக்கு மகாத்மா காந்தி கடிதம் எழுதினார். "ஐயாயிரத்துக்கு மேற்பட்ட தொழிலாளிகளுடன் டிரான்ஸ்வால் எல்லைக்கருகில் வந்திருக்கிறேன். டிரான்ஸ்வாலில் நிலையாகத் தங்கும் உத்தேசம் இல்லை. மூன்று பவுன் தலைவரியைக் கண்டிப்பதற்கு அறிகுறியாகவே மாகாணத் தடைச் சட்டத்தை மீறி டிரான்ஸ்வாலுக்குள் புகப்போகிறோம். எல்லைப்புறத்திலேயே எல்லாரையும் சர்க்கார் கைது செய்ய முன் வந்தால் அதற்குத் தயாராயிருக்கிறோம். திருட்டுத்தனமாகச் சட்டத்தை மீறும் எண்ணம் கிடையாது. பகிரங்கமாகவே மீறப்போகிறோம். மூன்று பவுன் தலைவரியை ரத்து செய்ய சர்க்கார் ஒப்புக்கொண்டால் தொழிலாளிகள் உடனே திரும்பிச்சென்று பழையபடி சுரங்க வேலையில் ஈடுபடுவார்கள்."- இதுதான் மகாத்மா காந்தி எழுதிய கடிதத்தின் சாராம்சம்.- கடிதத்தை எழுதிவிட்டு மகாத்மா சில நாள் பதிலுக்காகக் காத்திருந்தார். பதில் ஒன்றும் வரவில்லை. தந்தி கொடுத்திருந்தார், அதற்கும் பதில் இல்லை. மகாத்மா மேலும் ஒரு முயற்சி செய்ய எண்ணி, பிரிடோரியாவில் இருந்த தளபதி ஸ்மட்ஸின் காரியதரிசியை டெலிபோனில் கூப்பிட்டுப் பேசினார். கடிதத்தில் எழுதிய விஷயத்தை ஞாபகப்படுத்திப் பதில் வேண்டும் என்று கேட்டார். கடைசியாக, டெலிபோனில் பதில் வந்தது. "தளபதி ஸ்மட்ஸ் உம்முடன் எந்தவித சம்பந்தமும் வைத்துக்கொள்ள விரும்பவில்லை. உம்முடைய இஷ்டம்போல் நீர் செய்யலாம்" என்பதுதான் பதில்.
இதற்கு மேலே உத்தேசித்த காரியத்தை நடத்துவதைத் தவிர வேறு வழியில்லை. எனவே 1913-ம் வருஷம் நவம்பர் மாதம் 63 அதிகாலையில் கடவுளுக்குப் பிரார்த்தனை செலுத்தி விட்டு மகாத்மா சத்தியாக்கிரஹப் படையுடன் சட்டத்தை மீறி மாகாணத்தின் எல்லையைக் கடப்பதற்குப் புறப்பட்டார்.
------------
சார்லஸ்டவுன் பட்டணத்திலிருந்து ஒரு மைல் சென்றதும் ஒரு சிறு மதகு இருந்தது. அதைத் தாண்டியதும் டிரான்ஸ்வால் மாகாணந்தான். அந்த மாகாணத்தில் முதல் பட்டணத்தின் பெயர் வோக்ஸ்ரஸ்ட் என்பது. இந்தப் பட்டணத்திலிருந்த ஐரோப்பியர்கள் இரண்டு நாளைக்கு முன்பு ஒரு பொதுக்கூட்டம் கூட்டியிருந்தார்கள். காந்திஜியின் நண்பரான மிஸ்டர் காலன்பாக் கூட்டத்துக்குப் போயிருந்தார். கூட்டத்தில் பேசிய ஐரோப்பியர்கள் இந்தியர்களின் சத்தியாக்கிரஹ இயக்கத்தை மிகவும் கண்டித்துத் தாக்கிப் பேசினார்கள். டிரான்ஸ்வாலுக்குள் இந்தியர்கள் நுழைந்தால் அவர்களைச் சுட்டுத் தள்ளிவிடுவதாகப் பயமுறுத்தினார்கள். அப்படிப் பேசியவர்களை எதிர்த்து மிஸ்டர் காலன்பாக் பேசினார். இந்தியர்களின் கட்சி நியாயமான து என்று வற்புறுத்தினார். இதற்காக மிஸ்டர் காலன்பாக் மீது எல்லாரும் எரிந்து விழுந்தார்கள். அவர்களில் ஒருவர் தம்முடன் துவந்த யுத்தத்துக்கு வரும்படி அறை கூவினார். மிஸ்டர் காலன்பாக் நல்ல தீரர். அவர் மேற்படி மிரட்டலுக்குப் பயப்படவில்லை.
இந்தக் கூட்டத்தைப்பற்றிக் காந்திஜி தெரிந்து கொண்டிருந்த படியால் டிரான்ஸ்வாலுக்குள் பிரவேசித்ததும் ஐரோப்பியர்களால் தொல்லை ஏற்படக்கூடும் என்று எதிர்பார்த்து முன் ஜாக்கிரதையுடன் இருந்தார். எல்லைமதகுக்கு அப்பால் குதிரைப் படைப் போலீஸார் நின்றுகொண்டிருப்பதைப் பார்த்தார். இந்தியர்களிடம் தாம் சமிக்ஞை செய்ததும் அமைதியாக மதகைக் கடந்து வரும்படி சொல்லிவிட்டுத் தாம் மட்டும் முதலில் சென்று போலீஸாரிடம் பேசிக்கொண்டிருந்தார். பேச்சு முடிவதற்குள்ளேயே இந்தியர்கள் கட்டுப்பாட்டைக் காற்றிலே பறக்கவிட்டுத் தடதடவென்று பாலத்தைத் தாண்டி வரத் தொடங்கினார்கள். போலீஸார் விரைந்து சென்று அவர்களைச் சூழ்ந்தார்கள். ஒரு நிமிஷம் என்ன விபரீதம் ஏற்படுமோ என்ற கவலை ஏற்பட்டது. ஆனால் காந்திஜி இந்தியர்களின் முன்னிலையில் வந்து கையமர்த்திச் சில வார்த்தைகள் சொன்னதும் அமைதி ஏற்பட்டது. பின்னர் மகாத்மாவின் கட்டளைப்படி இந்தியர்கள் நாலு நாலு பேராக வரிசைப் படுத் திக்கொண்டு நடந்தார்கள். சத்தியாக்கிரஹப் படை எல்லையைத் தாண்டியது ; சட்டமறுப்பு யாத்திரை ஆரம்பமாகியது.
போலீஸார் இந்தியர்களைக் கைது செய்யவில்லை ; தடை செய்யவும் இல்லை. இந்தியர்கள் அமைதியாகவும் ஒழுங்காகவும் யாத்திரை செய்ததைப் பார்த்த வோக்ஸ்ரஸ்ட் பட்டணத்து ஐரோப்பியர்களும் ஒன்றும் செய்யவில்லை. இவ்விதம் எட்டு மைல் பிரயாணம் செய்து பாம்போர்டு என்னும் இடத்தில் முதல் நாள் இரவு இந்தியர்கள் தங்கினார்கள். எல்லாரும் தங்களுடன் கொண்டுவந்திருந்த சொற்ப உணவை உட்கொண்டார்கள். ராமநாம பஜனை செய்தார்கள். இரவு முதல் ஜாமம் ஆனதும் எல்லாரும் படுத்துத் தூங்கலானார்கள்.
மகாத்மா ஜியும் முதல் நாள் யாத்திரை அசம்பாவிதம் எதுவும் இல்லாமல் நடந்து முடிந்தது குறித்து ஆண்டவனுக்கு நன்றி செலுத்திவிட்டுப் படுத்துத் தூங்குவதற்கு ஆயத்தம் செய்யலானார். அச்சமயம் கையில் லாந்தருடன் ஐரோப்பியர் ஒருவர் வருவதைக் கண்டார். அதன் காரணம் மகாத்மாஜிக் குத் தெரிந்துவிட்டது. வந்தவர் போலீஸ் அதிகாரிதான்.
காந்திஜியின் அருகில் அவர் வந்து, "உங்களைக் கைது செய்ய வாரண்டு கொண்டு வந்திருக்கிறேன். என்னுடன் வருக !" என்று சொன்னார்.
உடனே மகாத்மா தம் அருகில் படுத்துத் தூங்கிய ஸ்ரீ பி. கே. நாயுடுவை எழுப்பி, விஷயத்தைக் கூறினார். மற்ற யாருக்கும் இதைப் பற்றி இப்போது சொல்லவேண்டாம் என்றும், அதிகாலையில் சூரியோதயத்துக்கு முன்னால் எழுந்து யாத்திரை தொடங்கவேண்டும் என்றும், மத்தியானம் சாப்பிடுவதற்காகத் தங்கும் இடத்தில் தாம் கைதியானதுபற்றி எல்லாருக்கும் சொன்னால் போதும் என்றும் கூறினார். வழியில் இந்தியர்கள் எல்லோரையும் கைது செய்தால் சிறைக்குப் போகவேண்டும் என்றும், இல்லாவிட்டால், யாத்திரையை உத்தேசத் திட்டத்தின்படி டால்ஸ்டாய் பண்ணையில் போய்த்தான் நிறுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார். காந்திஜியின் கட்டளையை நிறைவேற்றிவைப்பதாக ஸ்ரீ. பி. கே. நாயுடு ஒப்புக்கொண்டார்.
மகாத்மாவைப் போலீஸ் அதிகாரி வோக்ஸ்ரஸ்ட் பட்டணத்துக்கு அழைத்துச் சென்றார். அங்கே மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டில் அவரைக் கொண்டுபோய் நிறுத்தினார். சாட்சியம் தயாராக வில்லை யாதலால் வாய்தா கொடுக்க வேண்டும் என்று சர்க்கார் வக்கீல் கேட்டார். மாஜிஸ்ட்ரேட் வாய்தா கொடுத்தார். மகாத்மாஜி தாம் ஆயிரக் கணக்கான இந்தியர்களுக்குப் பொறுப்பு வகிப்பதால் ஜாமீனில் விடவேண்டும் என்று கேட் டார். சர்க்கார் வக்கீல் அதை எதிர்த்தார். ஆனால் மாஜிஸ்ட் ரேட் ஜாமீனில் விட உத்தர விட்டார். மிஸ்டர் காலன் பாக் ஜாமீன் கொடுத்து மகாத்மாவை விடுதலை செய்தார். உடனே காந்திஜி புறப்பட்டு அன்று சாயங்காலத்துக்குள் சத்தியாக் கிரஹ யாத்திரீகர்களை அடைந்தார்.
இதே மாதிரி ஸ்டாண்டர்டன் என்னுமிடத்தில் மறுபடியும் காந்திஜியைக் கைது செய்துகொண்டு போனார்கள். இங்கே யும் மாஜிஸ்ட்ரேட் காந்திஜியை ஜாமீனில் விட்டு விட்டார். சத்தியாக்கிரஹ யாத்திரீகர்கள் மூன்று மைல் தூரம் போவதற்குள் மகாத்மா அவர்களோடு சேர்ந்துவிட்டார். - இதனால் டால்ஸ்டாய் பண்ணை வரையில் யாத்திரை தடைப் படாமல் நடந்து பூர்த்தி யடைந்துவிடும் என்ற நம்பிக்கை மகாத்மாவுக்கு ஏற்பட்டது. ஆனால் காந்தி மகாத்மாவின் அந்த நம்பிக்கை நிறைவேறவில்லை.
யாத்திரையைப் பூர்த்தி செய்யும்படி விட்டு விட்டால் தங்களுடைய மதிப்பு ரொம்பவும் குறைந்து விடும் என்று அரசாங்கத்தார் கருதினார்கள். இரண்டு தடவை காந்திஜியைக் கைது செய்ததினால் மற்ற இந்தியர்கள் பீதி அடைந்து சிதறிப்போய் விடவில்லை என்பதையும் கண்டுகொண்டார்கள். இந்தியர்கள் எங்கேயாவது பலாத்காரத்தைக் கையாண்டிருந்தால் அதை ஒரு வியாஜமாக வைத்துக்கொண்டு கடும் நடவடிக்கை எடுத்திருக்கலாம். இந்தியர்கள் அமைதியாக யாத்திரை செய்தது சர்க்காருக்குப் பெருந்தொல்லை அளித்தது. ஜெனரல் ஸ்மட்ஸ் இதை வெளிப்படையாகவே சொன்னார்.
கடைசியாக ஏதேனும் கடுமையான நடவடிக்கை எடுத்து யாத்திரையைத் தடுத்தே தீரவேண்டும் என்று தளபதி ஸ்மட்ஸ் முடிவு செய்தார்.
மகாத்மா காந்தி அந்த யாத்திரையின் போது மூன்றாவது தடவையாகக் கைது செய்யப்பட்டார். முதலில் ஹெயிடல் பர்க் என்னும் இடத்துக்கு அவரைக் கொண்டு போனார்கள். அந்த ஊர் மாஜிஸ்ட்ரேட்டிடமும் காந்திஜி முன் தடவைகளில் கேட்டதுபோல் ஜாமீனில் விடும்படி கேட்டார். ஆனால் இந்தத் தடவை அவருடைய கோரிக்கை மறுக்கப் பட்டது. அவரை ஜாமீனில் விடத் தமக்கு அதிகாரம் இல்லை என்றும் சர்க்கார் அநுமதி வேண்டும் என்றும் சொல்லிவிட்டார். நேட்டாலில் உள்ள டண்டி என்னுமிடத்திலிருந்து இந்த மூன்றா வது வாரண்டு வந்திருந்தது. ஒப்பந்தத் தொழிலாளிகளை ஒப்பந்தத்தை மீறும்படி தூண்டியதாகக் குற்றம் சாட்டப்பட் டிருந்தது. எனவே, காந்திஜியை அன்றைக்கே ரயிலில் ஏற்றி டண்டிக்குக் கொண்டுபோனார்கள்.
விசாரணை சட்பட்டென்று முடிந்தது. மகாத்மாவுக்கு ஒன்பது மாதம் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. பிறகு இன்னொரு வழக்கு விசாரணைக்காக வோக்ஸ்ரஸ்ட் கோர்ட்டுக்கு மகாத்மாவை அழைத்துச் சென்றார்கள். இங்கே மகாத்மாவுடன் மிஸ்டர் காலன்டாக், மிஸ்டர் போலக் ஆகியவர்களும் விசாரிக்கப் பட்டார்கள். மூவருக்கும் தலைக்கு மூன்று மாதம் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. சில காலம் வோக்ஸ்ரஸ்ட் சிறைச்சாலையில் மூன்று பேரும் சந்தோஷமா யிருந்தார்கள். இன்னும் சில சத்தியாக்கிரஹத் தலைவர்களும் இதே சிறைக்கு வந்துசேர்ந்தார்கள். இப்படிக் காந்திஜியையும் மற்றவர்களையும் அதிக காலம் ஒரே சிறையில் விட்டு வைக்க சர்க்கார் விரும்பவில்லை. காந்தி மகானைத் தனிமைப் படுத்தி புளோம்பாண்டீன் என்னும் இடத்திலிருந்த சிறைக்குக் கொண்டுபோனார்கள். இங்கே காந்திஜியைத் தவிர வேறு இந்தியக் கைதி யாரும் இல்லை. மற்றவர்கள் எல்லாரும் ஐரோப்பியர்களும் நீக்ரோவர்களுந்தான். இந்தக் கடும் சிறையில் காந்திஜி தனி அறையில் பூட்டி வைக்கப்பட்டார். இன்னும் எத்தனையோ அசெளகரியங்கள் இந்தச் சிறை வாசத்தில் அவருக்கு நேரிட்டன. அவற்றை யெல்லாம் மகாத்மா சிறிதும் பொருட்படுத்தவில்லை. “சத்தியமே ஜயம்" என்ற பூரண நம்பிக்கையுடன் தனிச் சிறையில் காலங்கழித்தார்.
காந்திஜியைக் கைது செய்ததற்கு மறுநாள் பெரும் போலீஸ் படையினர் வந்து இந்திய சத்தியாக்கிரஹ யாத்திரீகர்களைச் சூழ்ந்து கொண்டனர். எல்லாரையும் கைது செய்திருப்பதாகச் சொல்லி ரயிலில் ஏற்றி நேட்டாலுக்குக் கொண்டு போனார்கள். வழிப் பிரயாணத்தில் அவர்களுக்கு உணவு அளிக்கக்கூட ஏற்பாடு செய்யவில்லை.
அவ்வளவு இந்தியர்களையும் சிறையில் அடைத்து உணவு அளிப்பதென்பது கஷ்டமான காரியம் அல்லவா ? இதற்காக ஒரு கேவலமான யுக்தியைக் கையாண்டார்கள். அவ்வளவு பேரையும் நியூகாஸில் பட்டணத்துக்குக் கொண்டுபோனார்கள். அங்கே நிலக்கரிச் சுரங்கங்களைச் சுற்றி இரும்பு வேலி எடுத்து, "இது தான் சிறைச்சாலை!" என்று சொன்னார்கள். கடுங்காவல் கைதிகள் வேலை செய்யவேண்டும் அல்லவா ? "முன்னே ஒப்பந்தத் தொழிலாளிகளாகச் செய்து கொண்டிருந்த அதே வேலையைக் கைதிகளாகச் செய்யுங்கள்!" என்றார்கள்.
இது அநியாயம் என்று கருதிய இந்தியத் தொழிலாளிகள் கண்டிப்பாக வேலை செய்ய மறுத்து விட்டார்கள். இதன் பலனாக அவர்கள் சவுக்கடி முதலிய பல கொடுமைகளுக்கு உள்ளாக நேர்ந்தது. எல்லாக் கொடுமைகளையும் தொழிலாளிகள் பொறுமையுடன் சகித்துக் கொண்டிருந்தார்கள். ஆனாலும் சுரங்கங்களில் வேலை செய்ய அவர்கள் இணங்கவில்லை.
இந்த அநீதிகளையும் கொடுமைகளையும் பற்றி ஸ்ரீ கோகலேக்குத் தந்திச் செய்திகள் போய்க்கொண்டிருந்தன. ஸ்ரீ கோகலேயின் உடல்நலம் அப்போது குன்றி யிருந்தும் அதைப் பொருட்படுத்தாமல் அவர் பெருங்கிளர்ச்சி நடத்தினார். இதனால் இந்தியா தேசமெங்கும் கொதிப்பு ஏற்பட்டது. அச்சமயம் இந்தியாவில் வைஸ்ராய் பதவி வகித்த லார்ட் ஹார்டிஞ்சு நல்ல மனிதர். தென்னாப்பிரிக்காவில் இந்தியர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளையும் கொடுமைகளையும் பற்றி லார்ட் ஹார்டிஞ்சு பகிரங்கமாகக் கண்டித்துப் பேசினார். இதைக் குறித்து இங்கிலாந்தில் அவர் கண்டனத்துக்கு உள்ளானார். அதை அவர் பொருட் படுத்தாமல் மேலும் உறுதியாகப் பேசினார். தென்னாப்பிரிக்கா சர்க்காரைக் கண்டித்ததோடல்லாமல், இந்தியர்களின் சத்தியாக்கிரஹ இயக்கத்தைப் பலமாக ஆதரித்துப் பிரசங்கமும் செய்தார். இதனால் விளைந்த பலன் என்ன வென்பதை அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்.
நியூகாஸில் சுரங்கங்களில் வேலை செய்த இந்தியத் தொழிலாளிகள் மொத்தம் ஆறாயிரம் பேர் இருக்கலாம். ஆனால் தென்னாப்பிரிக்கா முழுவதிலும் அறுபதினாயிரம் இந்தியத் தொழிலாளிகள் வேலை செய்து வந்தனர். அவர்களில் பெரும்பாலோர் கடற்கரை ஓரத்தில் வேலை செய்து வந்தவர்கள். நியூகாஸில் தொழிலாளிகள் வேலை நிறுத்தம் செய்ததிலிருந்து நடந்த சம்பவங்கள் எல்லா இடங்களுக்கும் பரவின. இதன் காரணமாக ஆங்காங்கே ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் திடீர் திடீரென்று வேலை நிறுத்தம் செய்தார்கள். அப்போது தென்னாப் பிரிக்கா சர்க்காரின் அடக்குமுறை மிகவும் கொடுமையாயிற்று. குதிரைப் போலீஸார் தொழிலாளிகளைத் துரத்தித் துரத்தி அவர்கள் வேலை செய்யும் இடத்தில் கொண்டு வந்து சேர்த்தார்கள். பலவந்தப்படுத்தி வேலை வாங்கினார்கள். எங்கேயாவது ஒரு சிறு கலவரம் ஏற்பட்டாலும் துப்பாக்கிப் பிரயோகம் சர்வ சாதாரணமாக நடந்தது. பலர் இறந்தார்கள்; பலர் காய மடைந்தார்கள். மேலும் மேலும் அடக்கு முறை வலுத்தது. விவரிக்க முடியாத கொடுமைகளைச் சர்க்கார் கையாண்டனர். அவ்வளவையும் இந்தியத் தொழிலாளிகள் தாங்கிக்கொண்டு உறுதியைக் கைவிடா திருந்தார்கள். இத்தகைய மிகக் கடுமையான அக்கினி பரீட்சையில் இந்தியர்கள் தேறிய பிறகு போராட்டத்தின் இறுதிக் காலமும் நெருங்கி வந்தது.
----------------
ஸ்ரீமதி கஸ்தூரிபாய் முதலிய ஸ்திரீ சத்தியாக்கிரஹிகள் 1913-ம் வருஷம் செப்டம்பர் மாதம் 23-ந் தேதி சிறைத் தண்டனை விதிக்கப் பட்டார்கள். அதிலிருந்து மூன்று மாத காலம் தென்னாப்பிரிக்கா சத்தியாக்கிரஹ இயக்கம் தீவிரமாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான தொழிலாளிகள் சட்ட மறுப்புச் செய்து அளவற்ற கஷ்ட நஷ்டங்களை அநுபவித்தார்கள். இயக்கத்தின் தலைவர்கள் அனைவரும் சிறை புகுந்தார்கள். ஆயினும் இயக்கத்தின் வேகம் குன்றவில்லை ; கொந்தளிப்பு அதிகமாகிக் கொண்டிருந்தது. இந்தியாவில் ஸ்ரீ கோகலேயின் முயற்சியினால் பெருங் கிளர்ச்சி ஏற்பட்டிருந்தது: இந்தியாவின் பிரிட்டிஷ் வைஸ்ராய் ஹார்டிஞ்ச் தென்னாப் பிரிக்கா சர்க்காரின் செயலைப் பகிரங்கமாகக் கண்டனம் செய்தார். உலகம் தென்னாப்பிரிக்காவில் நடந்த அதிசயமான போராட்டத்தைக் கவனிக்க ஆரம்பித்தது.
"சத்தியமே ஜயம்" என்னும் மகா வாக்கியத்தின் உண்மை உலகமறிய ஸ்தாபிக்கப்படும் காலம் வந்தது. தென்னாப்பிரிக்கா மந்திரிகளின் பிடிவாதம் தளர்ந்தது. தளபதி ஸ்மட்ஸின் மனம் இளகியது. இந்தியர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை நிவர்த்தி செய்தே ஆகவேண்டும் என்ற முடிவுக்கு வந்தார். தம்முடைய அரசாங்கத்தின் மதிப்புக் குறையாமல் அதைச் செய்வதற்கு வழி என்ன என்று தேடினார்.
இந்த மாதிரியான சந்தர்ப்பங்களில், அதாவது சர்க்கார் பொதுஜனக் கிளர்ச்சிக்கு விட்டுக் கொடுக்க வேண்டிய நிர்ப் பந்தம் ஏற்படும் போதெல்லாம், ஒரு விசாரணைக் கமிஷனை நியமிப்பது அரசியல் துறையில் அனுசரிக்கப்படும் உபாயம் மாகும். அதே உபாயத்தைத் தளபதி ஸ்மட்ஸ் இப்போது கடைப்பிடித்தார்.
இந்தியர்களுடைய குறைகளைப் பற்றி விசாரித்துத் தக்க சிபார்சுகளைச் செய்வதற்காக மூன்று பேர் அடங்கிய ஒரு கமிஷனை நியமனம் செய்தார்.
இந்தக் கமிஷனின் முதல் கூட்டத்தில், "விசாரணை சரியான முறையில் நடைபெறுவதற்காகக் காந்தி, காலன்பாக், போலக் இந்த மூவரையும் நிபந்தனை யின்றி விடுதலை செய்ய வேண்டும்" என்று சிபார்சு செய்யப்பட்டது. அதன்படியே 1913-ம் வருஷம் டிசம்பர் மாதம் 18 காந்திஜியும் அவருடைய துணைவர்கள் இருவரும் விடுதலை-யானார்கள்.
காந்திஜி சிறையிலிருந்து வெளி வந்ததும் கமிஷன் நியமனத்தைப் பற்றித் தெரிந்து கொண்டார். நண்பர்களுடன் கலந்து ஆலோசித்தார். இரண்டு நிபந்தனைகள் பூர்த்தியானால் தான் மேற்படி கமிஷனுடன் இந்தியர்கள் ஒத்துழைக்க முடியும் என்று தீர்மானித்தார். அதாவது, (1) கமிஷனில் இந்தியர்களின் சார்பாக ஒரு அங்கத்தினராவது சேர்க்கப்பட வேண்டும் ; (2) சிறையில் உள்ள சத்தியாக்கிரஹிகள் எல்லாரையும் விடுதலை செய்ய வேண்டும். இந்த இரண்டு நிபந்தனைகளையும் குறிப்பிட்டுத் தளபதி ஸ்மட்ஸுக்குக் கடிதம் எழுதினார்.
இதற்கிடையில், தென்னாப்பிரிக்காவில் நடந்த சத்தியாக் கிரஹ இயக்கத்தைக் கவனிப்பதற்காகவும் உதவி செய்வதற்காகவும் இரண்டு உத்தம புருஷர்கள் இந்தியாவிலிருந்து வந் திருந்தார்கள். ஒருவர் தீனபந்து ஆண்ட்ரூஸ் ; இன்னொருவர் அவருடைய ஆத்ம சிநேகிதர் பியர்ஸன். இருவரும் ஐரோப்பியர்கள் தான் ; ஆனால் இந்தியாவிடத்திலும் இந்தியர்களிடத்தி லும் அன்பு கொண்டவர்கள்.
தென்னாப்பிரிக்காவில் நடந்த இயக்கத்தைப் பற்றி காந்திஜியின் ஐரோப்பிய நண்பர் மிஸ்டர் வெஸ்ட் அவ்வப்போது ஸ்ரீ கோகலேக்குத் தகவல் தெரிவித்து வந்தார். இந்தத் தொண்டு செய்வதற்காகவே காந்திஜியின் விருப்பத்தின் படி அவர் போராட்டத்தில் சேராமலிருந்தார். ஆனால் தென்னாப்பிரிக்கா சர்க்கார் அவரைச் சும்மா விட்டிருக்க வில்லை. கைது செய்து சிறைக்கு அனுப்பிவிட்டார்கள். இந்தச் செய்தி அறிந்ததும் ஸ்ரீ கோகலே மேற்கூறிய இருவரையும் தென்னாப்பிரிக்காவுக்கு அனுப்பிவைத்தார். அவர்கள் வந்து சேர்ந்தபோது காந்திஜி சிறையிலிருந்து விடுதலை அடைந்து விட்டபடியால் டர்பனுக்குச் சென்று அவர்களை நேரில் வரவேற்றார்.
இந்த நண்பர்கள் வந்து சேர்ந்த இரண்டு நாளைக் கெல்லாம் தளபதி ஸ்மட்ஸின் பதில் வந்தது. கமிஷனில் புதிய அங்கத்தினர் யாரையும் சேர்த்துக்கொள்ள முடியாது என்றும், சர்க் கார் தங்களுடைய கொள்கையின்படி விசாரணைக் கமிஷன் நியமித்திருக்-கிறார்களே யல்லாமல் எந்தக் கட்சியையும் திருப்தி செய்வதற்காக நியமிக்கவில்லை யென்றும் பதிலில் கண்டிருந்தது.
எனவே 1914ல் ஜனவரி 15 மறுபடியும் டர்பனிலிருந்து காந்திஜியும் அவருடைய சகாக்களும் சட்ட மறுப்பு யாத்திரை தொடங்க வேண்டும் என்று தீர்மானமாயிற்று.
இவ்விதம் தீர்மானித்த பிறகு காந்திஜி தளபதி ஸ்மட்ஸ்க்கு இன்னொரு கடிதம் எழுதினார். கடிதம் எழுதுவதற்குக் காரணமா யமைந்தது ஸ்மட்ஸின் பதிலில் காணப்பட்ட ஒரு வாக்கியம். "பாரபட்சமில்லாத கமிஷனை நாங்கள் நியமித்திருக்கிறோம். கமிஷன் நியமனத்தில் இந்தியர்களைக் கலந்து கொள்ளவில்லை யென்றால், தோட்ட முதலாளிகளையும் சுரங்க முதலாளிகளையும் கூடக் கலந்து கொள்ள வில்லை" என்று ஸ்மட்ஸ் எழுதியிருந்தார். காந்திஜி இதைக் குறிப்பிட்டு, "இந்தியர்களுக்கு நியாயம் செய்வது சர்க்காரின் நோக்கமா யிருந்தால் தங்களை நேரில் கண்டு சில உண்மைகளைத் தெரி வித்துக் கொள்ள விரும்புகிறேன்" என்று எழுதினார்.
அவ்வாறே காந்திஜியை நேரில் பார்க்கச் சம்மதிப்பதாக தளபதி ஸ்மட்ஸிடமிருந்து பதில் வந்தது. எனவே, அந்தப் பேட்டி முடியும் வரையில் டர்பனிலிருந்து யாத்திரை கிளம்புவதை ஒத்தி வைப்பதென்று தீர்மானம் ஆயிற்று.
இதற்கிடையில் இந்தியாவிலிருந்து ஸ்ரீ கோகலே காந்திஜிக்கு ஒரு நீண்ட தந்திச் செய்தி அனுப்பினார். மறுபடியும் சட்டமறுப்பு யாத்திரை ஆரம்பிப்பது உசிதமல்லவென்றும் லார்ட் ஹார்டிஞ்சும் தாமும் செய்து வரும் முயற்சிகளுக்கு அதனால் குந்தகம் ஏற்படும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
மகாத்மா இதற்குப் பதில் தந்தி அனுப்பினார்:- "தங்களுக்கு மன வருத்தம் அளிக்கச் சிறிதும் விரும்பவில்லை. ஆனால் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் ஆண்டவன் சாட்சியாக எடுத்துக் கொண்ட சபதத்தின் அடிப்படையில் சத்தியாக்கிரஹ இயக்கம் நடைபெறுகிறது. அந்தச் சபதத்தைக் கைவிடுவது சரியாகுமா ? ஆகையால் இயக்கத்துக்குத் தங்களுடைய ஆசியை யும் ஆதரவையும் கோருகிறோம்."
இந்தத் தந்தியினால் ஸ்ரீ கோகலேயின் உடல் நிலை பாதகம் அடைந்தது. ஆயினும் அவருடைய உற்சாகம் குறையவில்லை. காந்திஜியையும் தென்னாப்பிரிக்கா இந்தியர்களையும் அவர் கைவிடத் தீர்மானிக்கவும் இல்லை. முன்னைக் காட்டிலும் அதிக ஊக்கத்துடன் காந்திஜியின் கட்சியை ஆதரித்து நின்றார்.
இந்தச் சமயத்தில் தென்னாப்பிரிக்கா ரயில்வேக்களின் ஐரோப்பிய ஊழியர்கள் பெரும் வேலை நிறுத்தம் செய்தார்கள். இதனால் தென்னாப்பிரிக்கா சர்க்கார் பெரும் கஷ்டத்துக்கு ஆளானார்கள். சர்க்கார் கஷ்டத்துக்கு ஆளாயிருக்கும் சமயத் தில் இந்தியர்கள் சட்ட மறுப்பு யாத்திரை தொடங்கிவிட வேண்டும் என்று சிலர் சொன்னார்கள். காந்திஜி இதற்கு உடன்படவில்லை. வேலை நிறுத்தம் சம்பந்தமான சர்க்காரின் கஷ்டம் தீர்ந்த பிறகுதான் இந்தியர்கள் சத்தியாக்கிரஹம் ஆரம் பிக்க வேண்டும் என்றும், எதிராளிகளின் கஷ்டத்தைப் பயன் படுத்திக் கொள்வது சத்தியாக்கிரஹம் அல்ல வென்றும் கூறி விட்டார்.
இந்த முடிவு இங்கிலாந்தில் நல்ல பயனை அளித்தது. இந்தியர்களுடைய பெருந்தன்மையைப் பாராட்டி லார்ட் ஆம்த்தில் வாழ்த்துத் தந்தி கொடுத்தார்.
இத்தகைய சூழ்நிலையில் காந்திஜி தளபதி ஸ்மட்ஸைப் பேட்டி காண்பதற்குப் பிரிடோரியா சென்றார். அவருடன் ஸ்ரீ ஆண்ட்ரூஸம் போனார்.
இந்தத் தடவை ஜெனரல் ஸ்மட்ஸ் முன்னெல்லாம் அகம்பாவமாய் நடந்து கொண்டதுபோல் நடந்து கொள்ளவில்லை. சமரச தோரணையில் பேசினார். அவர் காந்திஜியிடம் கூறியதாவது :- 'கமிஷனில் புதிதாக அங்கத்தினரைச் சேர்த்துக் கொள்வது முடியாத காரியம். அவ்விதம் செய்தால் அரசாங்கத்தின் கௌரவத்துக்கு ஹானி ஏற்படும். அப்படி ஏற்பட் டால் நான் செய்ய விரும்புகிற சீர்திருத்தங்களைச் செய்ய முடியாமற் போய்விடும். கமிஷனைப்பற்றி உங்களுக்கு என்ன கவலை ? அரசாங்கம் உங்களுடைய கோரிக்கைகளை ஒப்புக் கொள்ளத் தீர்மானித்து விட்டது. அதற்குக் கமிஷனுடைய சிபார்சுகள் தேவை. இப்போது கமிஷனில் அங்கத்தினரா யிருப்பவர்கள் இந்தியர்களுக்கு விரோதமானவர்கள் என்று பெயர் பெற்றவர்கள். அவர்களே மூன்று பவுன் தலைவரியை எடுக்க வேண்டும் என்று சிபார்சு செய்துவிட்டால் அரசாங்கத்தின் பளு குறைந்துவிடும். உத்தேசித்திருக்கும் காரியங்களைச் சுலபமாகச் செய்துவிடலாம். உங்களுடைய நிலைமையையும் நான் அறிந்திருக்கிறேன். இந்தக் கமிஷன் முன்னிலையில் நீங்கள் சாட்சியம் விட விரும்பவில்லை யென்றால், விடவேண்டிய தில்லை. ஆனால் எதிர்ப் பிரசாரம் செய்யாமலிருங்கள் ; சத்தியாக்கிரஹத்தை நிறுத்திவையுங்கள். இதனால் உங்களுடைய நோக்கம் நிறைவேறுவதற்கு அநுகூலம் ஏற்படும் ! ”
தளபதி ஸ்மட்ஸ் இவ்வாறு சமரசமாகப் பேசினார். அத்துடன் சர்க்காரின் நோக்கம் இன்னதென்பதையும் தெரியப் படுத்திவிட்டார். இதற்குமேல் போராட்டத்தை நடத்துவதில் அர்த்தமில்லை. காரியம் ஆகவேண்டியதுதான் முக்கியம். கமிஷன் அமைப்பு எப்படி யிருந்தால் என்ன ? கமிஷன் முன்பு சாட்சியம் விடவேண்டியதுதான் என்ன முக்கியம்?
சாட்சியம் விடாவிட்டால் ஒரு காரியத்துக்குக் குந்தகம் ஏற்படும். வேலை நிறுத்தம் செய்த தொழிலாளிகளைப் போலீஸாரும் இராணுவத்தாரும் கொடுமையாக நடத்தினார்கள் என்று இந்தியத் தலைவர்கள் புகார் செய்திருக்கிறார்கள். அதைப்பற்றி விசாரிக்கவும் கமிஷனுக்கு அதிகாரம் தரப்பட்டிருந்தது, சாட்சியம் விடாமற் போனால் மேற்படி கொடுமைகளை நிரூபிக்க முடியாமற் போய்விடும். ஆனால் இதை ஒரு முக்கிய விஷயமாகக் காந்திஜி கருதவில்லை. முதலாவது, போலீஸ் கொடுமைகளைப் பற்றிச் சாட்சியம் தயாரித்து நிரூபிப்பது மிகவும் கடினமான காரியம். அந்த மாதிரி நிரூபித்துப் பழிக்குப் பழி வாங்குவது சத்தியாக்கிரஹ தர்மமும் அல்ல. சத்தியாக்கிரஹிகள் கஷ்டப் படுவதென்றே கங்கணம் கட்டிக்கொண்டவர்கள். அதைப் பற்றி இப்போது புகார் சொல்லுவதில் என்ன லாபம் ?-புகார் சொல்லாம லிருந்தால் காரியசித்திக்கு அதிக அநுகூலம் ஏற்படும்; இதை யெல்லாம் காந்திஜி யோசித்து, கமிஷன் விசாரணையில் கலந்து கொள்வது மில்லை, விசாரணை முடிவு வெளியாகும் வரையில் சத்தியாக்கிரஹம் தொடங்குவது மில்லை என்ற முடிவுக்கு வந்தார்.
மறுபடியும் சில முறை ஸ்மட்ஸம் காந்திஜியும் சந்தித்துப் பேசினார்கள். சந்திப்புகளின் முடிவில் காந்திஜி பின்னால் தகராறு ஏற்படுவதற்கு இடமில்லாமல் செய்யும் பொருட்டு தளபதி ஸ்மட்ஸுக்கு ஒரு கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்தின் சாராம்சம் பின் வருமாறு:
"இப்போது அமைக்கப்பட்டிருக்கும் கமிஷன் முன்னிலையில் சாட்சியம் விடுவதற்கு இந்தியர்களின் மனச்சாட்சியைப் பொறுத்த காரணங்கள் தடை செய்கின்றன. ஆனால் இந்தியர்களுடன் கலந்தாலோசிப்பது என்ற கொள்கையைத் தாங்கள் ஒப்புக் கொண்டிருக்கிறீர்கள். ஆகையால் கமிட்டியின் சிபார்சுகளும் அவற்றின் பேரில் சர்க்காரின் முடிவுகளும் வெளியாகும் வரையில் சத்தியாக்கிரஹத்தை நிறுத்திவைக்கவும், கமிஷனுக்கு எதிரான பிரசாரம் செய்யாம லிருக்கவும் இந்தியர்களுக்கு யோசனை சொல்லத் தயாரா யிருக்கிறேன்.
சத்தியாக்கிரஹத்தை நாங்கள் நிறுத்தி வைக்கிறபடியால் சிறையிலுள்ள சத்தியாக்கிர ஹிகளைச் சர்க்கார் விடுதலை செய்ய வேண்டு மென்று கோருகிறேன்.
இந்தியர்கள் எந்தெந்தத் துறைகளில் நியாயம் வேண்டு மென் று கோருகிறார்கள் என்பதை இங்கே வரிசைப்படுத்தித் தெரிவிக்க விரும்புகிறேன் :
(1) மூன்று பவுன் தலைவரியை எடுத்துவிட வேண்டும்.
(2) ஹிந்து மத வழக்கப்படியும், இஸ்லாமிய மத வழக்கப் படியும் நடந்த கலியாணங்களைச் சட்ட பூர்வமாக அங்கீகரித்து அமுல் செய்ய வேண்டும்.
(3) படித்த இந்தியர்கள் சம்பந்தமான தடைகள் நீக்கப் படவேண்டும்.
(4) ஒரு மாகாணத்தில் இந்தியர்களுக்குள்ள உரிமைகள் மற்ற மாகாணங்களிலும் ஒப்புக்கொள்ளப்பட வேண்டும்.
(5) இந்தியர்களைப் பாதிக்கும் சட்டங்கள் நியாயமாகவும் மாமூல் உரிமைகளுக்குக் குந்தக மில்லாமலும் அமுல் நடத்தப் படவேண்டும்.
மேலே கண்ட கோரிக்கைகளைத் தாங்கள் அநுகூலமாகக் கவனிப்பதாயிருந்தால் இந்தக் கடிதத்தின் ஆரம்பத்தில் கூறியபடி இந்தியர்களுக்கு நான் யோசனை சொல்லக் கூடும்."
காந்திஜி எழுதிய மேற்படி கடிதத்துக்குத் தளபதி ஸ்மட்ஸ் பதிலின் சாராம்சம் வருமாறு:
"கமிஷன் முன்னால் நீங்கள் சாட்சியம் விட முடியாதது பற்றி வருந்துகிறேன். பழைய புண்களைக் கிளறவேண்டாம் என்கிற தங்களுடைய நோக்கத்தைப் பாராட்டுகிறேன். உங்களுடைய கடிதம் வருவதற்கு முன்பே எல்லாச் சத்தியாக்கிரஹக் கைதிகளையும் விடுதலை செய்யச் சர்க்கார் உத்தரவு பிறப்பித்தாகி விட்டது. நீங்கள் குறிப்பிட்டிருக்கும் கோரிக்கைகளைப் பொறுத்தவரையில் விசாரணைக் கமிஷனுடைய சிபார்சுகளைப் பார்த்து சர்க்கார் தக்க நடவடிக்கை எடுப்பார்கள்."
மேற்கண்ட இரண்டு கடிதங்களும் ஸ்மட்ஸ் - காந்தி ஒப்பந்தம் என்று தென்னாப்பிரிக்கா சரித்திரத்தில் பிரசித்தி பெற்றன. ஏன், உலக சரித்திரத்திலேயே பிரசித்தி பெற்றன என்றும் சொல்லலாம். சர்வாதிகாரமும் இராணுவ பலமும் படைத்த ஒரு சர்க்காரை நிராயுதபாணிகளான மக்கள் பலாத்காரத்தைக் கையாளாமல் அஹிம்சை முறையினால் எதிர்த்துப் போராடிச் சமரசத்துக்கு இணங்கும்படி செய்தது உலக சரித்திரத்திலேயே ஓர் அற்புதம் அல்லவா ?
காந்திஜி இத்தகைய சமரசம் செய்து கொண்டதுபற்றி அவர் பேரில் சிலர் புகார் சொல்லாமல் விடவில்லை. 1908-ம் வருஷத்தில் இதேமாதிரி, தளபதி ஸ்மட்ஸின் பேச்சை நம்பி மோசம் போனதை எடுத்துக் காட்டினார்கள். மறுபடியும் அதே கதிதான் நேரிடும் என்றார்கள். இப்போது சத்தியாக் கிரஹத்தை நிறுத்தினால் மறுபடி இயக்கத்தை ஆரம்பிக்கவே முடியாது என்று எச்சரித்தார்கள்.
இதற்கெல்லாம் தக்க சமாதானம் காந்தி மகான் கூறினார். எதிராளிகளிடம் நம்பிக்கை வைப்பது சத்தியாக்கிரஹ தர்மத்தின் அடிப்படை என்று சுட்டிக் காட்டினார். எத்தனை தடவை ஏமாந்தாலும் மறுபடி நம்பியே தீரவேண்டும் என்று சொன்னார். மேலும் இந்தத் தடவை சமரசப் பேச்சுகளின் போது ஸ்ரீ சி. எப். ஆண்ட்ரூஸ் கூட இருந்திருப்பதாலும், இந்திய சர்க்காரின் சார்பாக வந்திருக்கும் ஸர் பெஞ்சமின் ராபர்ட் ஸன் நிலைமையைக் கவனித்து வருவதாலும், மோசம் போக இடமில்லை என்றும் தைரியம் கூறினார். கடைசியாக இந்தியர்கள் அனைவரும் காந்தி மகாத்மாவின் யோசனைகளை ஏகோபித்து ஒப்புக் கொண்டார்.
கமிஷனுடைய சிபார்சுகள் வெகு சீக்கிரத்தில் வெளியாகி விட்டன. எதிர்பார்த்ததுபோல் அவை இந்தியர்களுக்குச் சாதகமாகவே இருந்தன. மூன்று பவுன் தலைவரியை எடுக்க வேண்டும் என்றும் இந்தியர்களின் கலியாணங்களை அங்கீகரிக்கச் சட்டம் செய்ய வேண்டும் என்றும் கூறியதுடன், இந்தியர்களுக்குச் சாதகமான இன்னும் சில சில்லறைச் சிபார்சுகளும் செய்திருந்தார்கள். ஸ்மட்ஸ் கூ றியது உண்மையாயிற்று. மேற்படி சிபார்சுகளை யொட்டிப் பார்லிமெண்டில் சட்டங்கள் சீக்கிரத்தில் நிறைவேற்றப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்தச் செய்தியைத் தெரிந்துகொண்டு ஸ்ரீ ஆண்ட்ரூஸ் இங்கிலாந்துக்கும் ஸர் பெஞ்சமின் ராபர்ட்ஸன் இந்தியாவுக்கும் பிரயாணமானார்கள்.
கமிஷன் அறிக்கை வெளியான சில தினங்களில் இந்தியர் குறை நிவாரண மசோதா என்ற பெயருடன் சர்க்கார் மசோதா அரசாங்க கெஜட்டில் பிரசுரமாயிற்று. அதில் ஒன்பது பிரிவுகள் இருந்தன. ஒரு பிரிவின் மூலம் மாஜி ஒப்பந்தத் தொழிலாளரின் மீது விதிக்கப்பட்டிருந்த மூன்று பவுன் தலைவரி நீக்கப்பட்டது. மற்றொரு பிரிவின் மூலம் ஹிந்து - முஸ்லிம் மத சம்பிரதாயப்படி செய்த கலியாணங்கள் சட்டபூர்வமானவை என்று ஒப்புக் கொள்ளப்பட்டது. நேட்டாலில் ஒரு தடவை கொடுக்கப்பட்ட சர்ட்டிபிகேட் தென்னாப்பிரிக்கா முழுவதி லும் செல்லும் என்று அங்கீகரிக்கப் பட்டது. மாகாணத்துக்கு மாகாணம் இந்தியர்கள் செல்வதில் உள்ள தடைகள் நீக்கப் பட்டன.
தென்னாப்பிரிக்கா பார்லிமெண்டில் மசோதா விவாதத் துக்கு வந்தபோது காந்தி மகாத்மா கேப் டவுனுக்குச் சென் றிருந்தார். விவாதம் நல்ல முறையில் நடந்து, மசோதா வெற்றி கரமாக நிறைவேறியது.
இதற்குப் பிறகு தளபதி ஸ்மட்ஸ் காந்திஜிக்கு எழுதிய கடி தத்தில், "இந்தியர் சம்பந்தமான சட்டங்களெல்லாம் தர்ம நியாயமாக அமுல் நடத்தப்படும் " என்று உறுதி கூறினார்.
இவ்விதமாக 1906-ம் ஆண்டில் ஆரம்பமான சத்தியாக் கிரஹப் போராட்டம் 1914-ம் ஆண்டில் மகத்தான வெற்றியுடன் முடிவடைந்தது. காந்திஜி ஸ்ரீ கோகலேக்கு வாக்குக் கொடுத்திருந்தபடி தாய்நாட்டின் தொண்டில் ஈடுபடுவதற்காக இந்தியாவுக்குப் பிரயாணப்படத் தீர்மானித்தார். இருபது வருஷ காலம் வசித்து, இன்ப துன்பங்களை அநுபவித்து, வாழ்க்கை இலட்சியத்தைக் கண்டு, பெரும்போர் நடத்தி வெற்றி பெற்ற நாட்டிலிருந்து புறப்படுவது எளிதாக இல்லை. அத்தனை நாளும் கலந்து பழகிச் சிநேகங் கொண்டிருந்த நண் பர்களிடமிருந்து பிரிவதும் கஷ்டமாகத்தான் இருந்தது. ஆயினும் காந்திஜி மனத்தைத் திடப்படுத்திக் கொண்டு, 1914- ஜூலை 18 தென்னாப்பிரிக்கா இந்தியரிடம் முடிவாக விடைபெற்றுக் கொண்டு பிரயாணமானார்.
அச்சமயம் ஸ்ரீ கோகலே இங்கிலாந்தில் இருந்தார். அவருடைய விருப்பத்தின் படி இங்கிலாந்து சென்று அவரைப் பார்த்துவிட்டு இந்தியா போகலாம் என்று எண்ணி இங்கிலாந்து சென்ற கப்பலில் மகாத்மா ஏறினார்.
காந்தி மகாத்மா தென்னாப்பிரிக்காவில் நடத்திய மகத்தான சத்தியப்போரின் சரித்திரம் இத்துடன் முடிவடைகிறது. இதைப் படிக்கும்போது நமக்குத் தற்சமயம் தென்னாப்பிரிக்காவிலுள்ள இந்தியரின் நிலைமை ஞாபகம் வராமல் இராது. ( இன்னும் தென்னாப்பிரிக்கா இந்தியர்கள் கஷ்டப்பட்டுக் கொண் டுதானே இருக்கின்றார்கள் ? அவர்களுடைய துயரங். கள் தீர்ந்த பாடாக இல்லையே ? " என்று தோன்றும்.
ஆனால் ஒரு வித்தியாசத்தை ஞாபகப்படுத்திக்கொள்ள வேண்டும். அந்தக் காலத்தில் தென்னாப்பிரிக்கா இந்தியர்களின் கஷ்டம் வேறு, இப்போதுள்ள கஷ்டங்கள் வேறு.
அன்றைய நிலைமையில் மகாத்மா காந்தி போராட்டம் நடத்தி வெற்றி அடைந்திராவிடில், இப்போது தென்னாப்பிரிக்காவில் இந்தியர்களே இருந்திருக்க மாட்டார்கள். மூன்று பவுன் தலைவரி, கலியாண ரத்துத் தீர்ப்பு, கட்டாயப் பதிவுச் சட்டம் முதலியவற்றின் கொடுமையினால் இந்தியர்கள் ஒன்று இந்தியாவுக்குத் திரும்பி வந்திருப்பார்கள் ; அல்லது அடியோடு தென்னாப்பிரிக்காவில் அழிந்திருப்பார்கள்.
மகாத்மா தென்னாப்பிரிக்காவை விட்டுப் புறப்பட்டு இப்போது முப்பத்தைந்து வருஷம் ஆகிறது. இந்த முப்பத்தைந்து வருஷத்தில் அங்கே இந்தியர்கள் வாழ்ந்து, தொழில் செய்து, பொருள் தேடி, பல்கிப் பெருகியிருக்கிறார்கள். இதன் காரணமாகவே ஐரோப்பியர்கள் -ஆப்பிரிக்கர்கள் ஆகிய இரு சாராரின் பொறாமைக்கும், துவேஷத்துக்கும் ஆளாகியிருக்கிறார்கள். எனினும், எதிர்த்து நின்று போராடும் சக்தி இன்று தென் னாப்பிரிக்கா இந்தியர்களுக்கு இருக்கிறது. அந்த சக்தியை அவர்களுக்கு அளித்தது காந்தி மகாத்மாவும் அவருடைய சத்தி யாக்கிரஹ இயக்கமுந்தான்.
காந்திஜியுடன் ஒப்பந்தம் செய்துகொண்ட தளபதி ஸ்மட்ஸ் பிறகு தம் வாக்குறுதியிலிருந்து மாறவில்லை யென்பதை முக்கியமாகக் குறிப்பிடவேண்டும்.
இன்றைய தினம் நிறத்துவேஷ இனத்துவேஷ வெறி கொண்டு காரியம் செய்யும் டாக்டர் மலான் சர்க்காரை எதிர்ப்பவர்களில் தளபதி ஸ்மட்ஸ் முதன்மையாக இருக்கிறார். இதனால் தென்னாப்பிரிக்கா இந்தியர்களின் கட்சிக்கு இன்று உலக மெங்கும் ஆதரவு ஏற்பட்டு வருகிறது. இதற்கு மூலகாரணம் காந்தி மகாத்மா நடத்திய மகத்தான போராட்டத்தான் என் பதில் எள்ளளவும் ஐயமில்லை.
இப்போதும் டாக்டர் மலான் சர்க்கார் இந்தியர்களைத் தென்னாப்பிரிக்காவிலிருந்து துரத்திவிடும் நோக்கத்துடனேயே காரியம் செய்கிறார்கள். இதற்காகச் சட்ட பூர்வமான நிர்ப் பந்தங்களைக் கையாளுவதுடன் ஆப்பிரிக்காவின் சுதேசிகளையும் இந்தியர்கள் மீது கிளப்பி விட்டிருக்கிறார்கள், ஆனால் காந்திஜி காட்டிய சத்தியப் போர் முறையைத் தென்னாப்பிரிக்கா இந்தியர்கள் கையாண்டு, வெற்றி பெறலாம்.
தளபதி ஸ்மட்ஸை வென்ற ஆயுதத்தினால் டாக்டர் மலானையும் வெல்லலாம் என்பதில் சந்தேகம் என்ன ?
----------
மாந்தருக்குள் ஒரு தெய்வம் - முதற் பாகம்
கல்கி (ரா. கிருஷ்ணமூர்த்தி)
மங்கள நூலகம், சென்னை -6
முதற் பதிப்பு : மார்ச்சு 1955
விலை ரூ. 6.
Printed by R. Surianarayanan, at Gnanodaya Press
11, Anderson Street, Madras-1
-------------
34. கல்கத்தா காங்கிரஸ் | 50. முதல் தண்டனை |
35. கர்ஸான் தர்பார் | 51. முதல் ராஜி |
36. கோகலே யின் விருந்தாளி | 52. ஹே ராம் ! |
37. காசியில் ஏமாற்றம் | 53. சாந்த மூர்த்தி |
38. நம்பிக்கைச் சோதனை | 54. ஸ்மட்ஸ் மோசடி |
39. சேம்பர்லின் பேட்டி | 55. ஏறுதே , தீ ! |
40. லஞ்சப் பேய். | 56. ஏ று கப்ப ல் ! |
41. கஸ்தூரிபாய்த் தெய்வம் | 57. உண்ணாவிரத வெற்றி |
42. 'கூலிச் சேரி'யில் கொள்ளை நோய் | 58. டால்ஸ்டாய் பண்ணை |
43. போனிக்ஸ் பண்ணை | 59. கடின சோதனைகள் |
44. பிரம்மசரியம் | 60. கோகலே விஜயம் |
45. பிள்ளைகளின் கல்வி | 61. வீரத் தமிழ்ப் பெண்மணிகள் |
46. அன்னையின் மன உறுதி | 62. வள்ளியம்மை |
47. கறுப்புச் சட்டம் | 63. தொழிலாளர் தியாகம் |
48. சத்தியாக்கிரஹ உதயம் | 64. அக்னி பரீட்சை |
49. அஹமத்தின் சபதம் | 65. சத்தியமே ஜயம் |
-
மாந்தருக்குள் ஒரு தெய்வம் - முதற் பாகம்
கல்கி (ரா. கிருஷ்ணமூர்த்தி)
34. கல்கத்தா காங்கிரஸ்
தென்னாப்பிரிக்காவிலிருந்து இரண்டாவது முறை காந்திஜி கல்கத்தாவுக்குத் திரும்பிய 1901-ஆம் ஆண்டில் இந்திய காங்கிரஸ் மகாசபை கல்கத்தாவில் நடைபெற்றது. ஸர் பிரோஸிஷா மேத்தாவின் தலைமைச் சீடரான ஸ்ரீ டின்ஷா வாச்சாவின் தலைமையில் நடந்தது. காந்திஜி இந்தக் காங்கிரஸுக்குப் போகத் தீர்மானித்திருந்தார். காங்கிரஸில் தென்னாப்பிரிக்கா இந்தியர்களைப் பற்றிய தீர்மானம் கொண்டு வரவும் எண்ணியிருந்தார்.
ஸர் பிரோஸிஷா மேத்தா, ஸ்ரீ டின் ஷா வாச்சா, ஸ்ரீ சிமன் லால் சேதால் வட் ஆகியவர்கள் கல்கத்தா காங்கிரஸுக்குப் பிரயாணம் செய்த அதே ரயிலில் காந்திஜியும் ஏறிக் கொண்டார். ஸர். பி. மேத்தா முதலியவர்கள் விசேஷ வசதிகள் அமைந்த தனி வண்டியில் பிரயாணம் செய்தார்கள். குறிப்பிட்ட இரண்டு ரயில்வே ஸ்டேஷன்களுக்கிடையில் காந்திஜி மேற்படி தனி வண்டிக்கு வந்து ஏறிக்கொண்டு அவர் சொல்ல விரும்பிய விஷயங்களைச் சொல்ல வேண்டும் என்று ஏற்பாடாகி யிருந்தது.
அதன்படியே குறிப்பிட்ட ரயில் நிலையத்தில் காந்திஜி ஸர் பிரோஸிஷாவின் தனி வண்டிக்கு வந்தார். அச்சமயம் மேத்தா, வாச்சா முதலியவர்கள் இந்தியாவின் அர்சியல் நிலைமை பற்றி விவாதித்துக் கொண்டிருந்தார்கள். காந்திஜியைப் பார்த்ததும் மேத்தா, "காந்தி ! உமக்கு நாங்கள் எந்த உதவியும் செய்ய முடியாது. நீர் விரும்புகிறபடி ஒரு தீர்மானத்தை வேண்டுமானால் காங்கிரஸில் நிறைவேற்றி வைக்கிறோம். ஆனால் என்ன உபயோகம்? நம்முடைய சொந்த நாட்டிலேயே நமக்கு அதிகாரமும் இல்லை; உரிமையும் இல்லை, ஐரோப்பியர் குடியேறிய இன்னொரு நாட்டில் இதை விட நல்ல நிலைமையில் இந்தியர் எப்படி இருக்கமுடியும்?" என்றார்.
பிரோஸிஷாவின் அபிப்பிராயத்தைச் சேதால்வட் ஆமோதித்தார். ஸ்ரீ டின்ஷா வாச்சாவோ, "அடடா! நான் என்ன செய்யட்டும்?" என்ற தோரணையில் காந்திஜியைப் பரிதாபமாகப் பார்த்தார். அவர்களிடம் தம் கட்சியை எடுத்துச்சொல்லி வாதிடலாம் என்று காந்திஜி உத்தேசித்தார். ஆனால் அது பலிக்கவில்லை. பம்பாயின் முடிசூடா மன்னரை ஒருவர் வாதிட்டுத் திருப்பி விடுவது முடிகிற காரியமா ? காந்திஜியை அதிகமாகப் பேசுவதற்கே அவர்கள் விடவில்லை. தென்னாப்பிரிக்கா பற்றிய தீர்மானம் கொண்டு வரவாவது அநுமதிக்கிறார்களே என்ற திருப்தியுடன் காந்திஜி அந்த வண்டியிலிருந்து இறங்கித் தம் இடத்துக்குச் சென்றார்.
வண்டி கல்கத்தாவை அடைந்தது. கல்கத்தா காங்கிரஸின் வரவேற்புக் கழகத்தார் காங்கிரஸ் அக்கிராசனரை மிகச் சிறப்பாக அழைத்துச் சென்றார்கள். காந்திஜி தாம் எங்கே போவது என்று ஒரு தொண்டரைக் கேட்டார். பிரதிநிதிகள் பலர் தங்கியிருந்த ரிப்பன் கலாசாலைக் கட்டிடத்துக்குக் காந்திஜியை அத்தொண்டர் அழைத்துச் சென்றார். லோகமான்ய திலகரின் ஜாகை அந்தக் கட்டிடத்திலே தான் என்று அறிந்ததும் காந்திஜிக்கு மகிழ்ச்சி உண்டாயிற்று.
இந்தியாவின் தேசியத் தலைவர்களில் கோகலேக்கு அடுத்த படியாகத் திலகரிடம் காந்திஜி பெருமதிப்புக் கொண்டிருந்தார். லோகமான்யருடைய ஜாகை ஒரு தர்பார் மண்டபத்தைப் போல் விளங்கியது. நண்பர்களும் சீடர்களும் புடை சூழத் திலக பெருமான் ஒரு சக்கரவர்த்தியைப்போல் தம் படுக்கையில் வீற்றிருந்த காட்சி காந்திஜியின் உள்ளத்தில் பதிந்தது. "நான் மட்டும் ஓவியக்காரனாயிருந்தால் அந்தக் காட்சியைப் படமாக எழுதியிருப்பேன்" என்று காந்திஜி தம் சுய சரிதத்தில் எழுதியுள்ளார்.
லோகமான்யரைப் பார்க்க வந்தவர்களில் ஒருவர் "அமிருதபஜார் பத்திரிகை"யின் பிரசித்த பத்திரிகாசிரியரான பாபு மோதிலால் கோஷ். அவ்விருவரும் அதிகார வர்க்கத்தின் தவறுகளைப் பற்றிப் பேசி 'ஓஹோ' என்று சத்தம் போட்டுச் சிரித்தார்கள். ஸ்ரீ மோதிலால் கோஷ் நகைச் சுவைக்குப் பெயர் போன ஆசிரியர் அல்லவா ?
இம்மாதிரி தேசபக்தர்களைப் பார்ப்பதும் அவர்கள் அளவளாவிப் பேசுவதைக் கேட்பதும் காந்திஜிக்கு மகிழ்ச்சி தந்தது. ஆனால் காங்கிரஸ் சம்பந்தமான வேறு சில அம்சங்கள் ஏமாற்றத்தையும் மன வேதனையையும் அளித்தன.
காங்கிரஸ் பிரதிநிதிகள் தங்கியிருந்த விடுதி மிக மோசமான நிலையில் இருந்தது. சுகாதார ஏற்பாடுகள் கொஞ்சமும் செய் யப்படவில்லை. நாலாபுறமும் குப்பைகள். எங்கே பார்த்தாலும் குட்டை குட்டையாகத் தண்ணீர் தேங்கி நின்றது. கக்கூசுகள் மிகக் கொஞ்சம். அவற்றின் துர்நாற்றமோ சகிக்க முடியாதது. காங்கிரஸ் விடுதியில் ஊழியம் செய்வதற்காக அமர்த்தப் பட்டிருந்த தொண்டர்களுக்குத் தொண்டு என்பதே தெரியாது. ஒரு தொண்டரிடம் ஏதேனும் சொன்னால் அதை அவர் இன்னொருவரிடம் சொல்வார். அவர் மூன்றாவது தொண்டரிடம் சொல்வார். காரியம் ஒன்றும் நடைபெறாது. போதாததற்குத் தொண்டர்கள் அடிக்கடி தங்களுக்குள் சச்சரவு இட்டுக் கொண்டிருந்தார்கள். எனவே பிரதிநிதிகள் திக்குத் திசை தெரியாமல் என்ன செய்வது.
தமிழ்நாட்டிலிருந்து வந்திருந்த பிரதிநிதிகள் தங்களுக்கென்று தனிச் சமையலறை ஏற்படுத்திக் கொண்டு அதை நாலாபுறமும் மூடி அமைத்திருந்ததையும் காந்திஜி கவனித்தார். தமிழ்நாட்டுப் பிரதிநிதிகள் தாங்கள் சாப்பிடுவதைப் பிறர் பார்த்தாலும் திருஷ்டி தோஷம் ஏற்படும் என்ற நம்பிக்கை கொண்டிருந்தார்கள். இதனால் சமையல், சாப்பாடு, கையலம்புதல் எல்லாம் ஓர் அறைக்குள்ளேயே நடந்தன. அந்த அறைக்குள் செல்வோர் திக்குமுக்காடிப் போகும்படி சதா காலமும் புகை சூழ்ந்திருந்தது. தமிழ்நாட்டுப் பிரதிநிதிகளின் இந்தப் போலி வர்ணாசிரமம் காந்திஜியின் உள்ளத்தை வருத்தியது. "ராம் ராம் ! காங்கிரஸ் பிரதிநிதிகளாக வரும் தேச பக்தர்களுக்குள்ளேயே இப்படித் தீண்டாமை குடி கொண்டிருந்தால் மற்ற ஜனங்களிடையே எப்படி இராது!" என்று காந்திஜி சொல்லி மிகவும் வருத்தப்பட்டார்.
காங்கிரஸ் விடுதியைச் சுத்தம் செய்யும் விஷயமாகத் தொண்டர்களுடன் பேசிப் பார்த்தார், அவர்களுக்குச் சிரத்தை ஏற்படவில்லை. “இந்தக் குப்பைகளைத் தள்ள வேண்டாமா ?" என்றார் காந்திஜி. "அதெல்லாம் தோட்டிகளின் வேலை !" என்றார்கள் தொண்டர்கள். உண்மைத் தொண்டு செய்யும் முறையை அவர்களுக்குக் காந்திஜி தாமே செய்து காட்டிக் கற்பிக்க விரும்பினார். ஒரு தொண்டரிடம் விளக்குமாறு வேண்டும் என்று கேட்டார். அவர் ஆச்சரியத்தினால் திடுக்கிட்டுக் காந்திஜியை உற்று நோக்கினார். ஆனால் விளக்குமாறு கொண்டு வரவில்லை. கடைசியாக ஒரு விளக்குமாறு சம்பாதித்துக் காந்திஜி தாமே கூட்டிக் காட்டினார். ஆனால் அவரைப் பின்பற்ற யாரும் முன் வரவில்லை. இந்த நிலைமையைக் குறித்துக் காந்திஜி எழுதியிருப்பதாவது:-
"பிரதிநிதிகளில் சிலர் தங்கள் அறைகளின் வெளிப் புறத்துத் தாழ்வாரத்தை இரவு நேரத்தில் அசுத்தம் செய்யவும் பின் வாங்கவில்லை. காலையில் தொண்டர்களிடம் இத்தகைய அசுத்தமான இடங்களைக் காட்டினேன். அவ்விடங்களைச் சுத்தம் செய்ய எவரும் முன்வரவில்லை. அந்தக் கெளரவத்தை என்னுடன் பங்கிட்டுக் கொள்ள ஒருவரும் தயாராயில்லையெனக் கண்டேன். இப்போது நிலைமை பெரிதும் அபிவிருத்தி யடைந்திருக்கிறது. ஆனால் இன்றுகூட காங்கிரஸ் விடுதியில் கண்டவிட மெல்லாம் அசுத்தமாக்கும் பிரதிநிதிகள் இல்லாமற் போகவில்லை. அவ்வாறே அந்த இடங்களைச் சுத்தப்படுத்து வதற்கு எல்லாத் தொண்டர்களும் முன் வருவதில்லை ............
“காங்கிரஸ் மகாசபை இன்னும் சில தினங்கள் நீடித்து நடக்குமானால், கொள்ளை நோய் பரவுவதற்குப் பெரிதும் அது கூலமான நிலைமை ஏற்படும் என்பதைக் கண்டேன்."
காந்திஜி கல்கத்தா சேர்ந்து இரண்டு தினங்களுக்குப் பிறகுதான் காங்கிரஸ் மகாசபை கூடுவதாயிருந்தது. அந்த இரண்டு நாளும் காங்கிரஸ் காரியாலய வேலை ஏதேனும் செய்யலாம் என்று காந்திஜி கருதினார். பாபு பூபேந்திரநாத் போஸும் ஸ்ரீ கோஷால் என்பவரும் அச்சமயம் காங்கிரஸ் மகாசபையின் காரியதரிசிகள். காந்திஜி முதலில் பூபேந்திரநாத் போஸைப் பார்த்தார். அவர் கோஷாலிடம் போகும்படி சொன்னார். கோஷால் காந்திஜியைப் பார்த்துப் புன்னகையுடன், "உமக்கு என்ன வேலை கொடுக்கட்டும் ? குமாஸ்தா வேலை தான் கொடுக்கலாம். செய்கிறீரா?" என்றார். "பேஷாகச் செய்கிறேன் " என்றார் காந்திஜி. கோஷாலுக்கு இது சிறிது வியப்பை யளித்தது. சுற்றி நின்ற தொண்டர்களைப் பார்த்து, ”இவர் சொல்வது உங்கள் செவியில் விழுந்ததா? தொண்டு என்றால் எந்த வேலைக்கும் தயாராயிருக்க வேண்டும். இதுதான் சரியான மனப்பாங்கு" என்றார். பிறகு காந்திஜியைப் பார்த்து, "அதோ ஒரு கட்டுக் கடிதங்கள் கிடக்கின்றன. அவற்றைப் பிரித்துப் பாருங்கள். பெரும்பாலும் உபயோகமற்ற விஷயங்களாக இருக்கும். முக்கியமான விஷயம் - பதில் எழுதவேண்டும் ? என்று தோன்றுகிற கடிதங்களை மட்டும் என்னிடம் கொண்டு வந்து கொடுங்கள்!" என்று சொன்னார்.
கொடுத்த வேலையைக் காந்திஜி திருப்திகரமாகச் செய்து முடித்தார். அதற்குள் காந்திஜியைப் பற்றி விசாரித்து ஸ்ரீ கோஷால் தெரிந்துகொண்டார். "அடடா! உங்களுக்குக் குமாஸ்தா வேலை கொடுத்தேனே !" என்று வருத்தப் பட்டார். காந்திஜி "அதைப்பற்றிக் கவலை வேண்டாம். காங்கிரஸ் தொண்டு எதுவானால் என்ன ? இந்த மாதிரி சில்லரை வேலைகளில் தான் எனக்கு அநுபவம் வேண்டும்!" என்றார்.
கோஷாலும் காந்திஜியும் சிறந்த நண்பர்களானார்கள். அதனால் காங்கிரஸ் நடைமுறைகளையும் காங்கிரஸ் தலைவர்களின் ஆலோசனைகளையும் அருகிலிருந்து கவனிக்கக் காந்திஜிக்குச் சரியான சந்தர்ப்பம் கிட்டியது.
* * * *
காங்கிரஸ் மகாசபை கூடியது. விஸ்தாரமான பந்தலும் அணிவகுத்து நின்ற தொண்டர் படையும் மேடைமீது அமர்ந்திருந்த தலைவர் குழாமும் காந்திஜியைப் பிரமிப்படையச் செய்தன. இந்தியாவில் அப்போது புகழ்பெற்றிருந்த தேசீயத் தலைவர்கள் எல்லாரும் மேடைமீது பிரசந்நமாகி யிருந்தார்கள். அந்த மகாசபையில் தாம் எம்மாத்திரம் என்ற உணர்ச்சியுடன் ஒரு மூலையில் காந்திஜீ அடக்கமாக உட்கார்ந்திருந்தார்.
அந்த நாளில் காங்கிரஸ் அக்கிராசனரின் பிரசங்கம் ஒரு தனிப் புத்தகத்தைப்போல் அவ்வளவு நீளமாயிருக்கும். பிரசங்கம் முழுவதையும் படிப்பது இயலாத காரியம். சில பகுதிகளை மட்டுமே படிப்பார்கள்.
அக்கிராசனப் பிரசங்கம் முடிந்த பிறகு விஷயாலோசனைக் கமிட்டியின் கூட்டம் நடந்தது. அதற்குக் காந்திஜியை கோகலே அழைத்துச் சென்றார். பல தீர்மானங்கள் பீரேரணைக்கு வந்தன. ஒவ்வொன்றையும் ஆதரிக்க ஒரு பெரிய தலைவர் இருந்தார். பேரிகை முழக்கம் போன்ற குரலில் ஆங்கில பாஷையில் பிரசங்கங்கள் நிகழ்ந்தன. நேரமாக ஆக, காந்திஜிக்குத் தம்முடைய தீர்மானத்தைப் பற்றிக் கவலை அதிகமாயிற்று. கடைசியில் வந்த தீர்மானங்கள் மின்னல் வேகத்தில் பைசல் செய்யப்பட்டன. இரவு பதினோரு மணி ஆயிற்று ; எல்லாருக்கும் எழுந்து போக அவசரம். காந்திஜிக்கோ அந்தப் பெரிய கைகளுக்கு முன்னால் பேசத் தயக்கம். கோகலேயின் அருகில் சென்று, "என்னுடைய தீர்மானத்தின் கதி என்ன ? கொஞ்சம் கவனித்துக் கொள்ளுங்கள்" என்று சொன்னார்.
இந்தச் சமயத்தில் ஸர் பிரோஸிஷா மேத்தா, "எல்லாம் முடிந்து விட்டதல்லவா ? கூட்டத்தை இத்துடன் முடித்து விடலாமா ?" என்று கேட்டார். “இல்லை, இல்லை. தென்னாப்பிரிக்கா தீர்மானம் பாக்கியிருக்கி றது. காந்தி வெகு நேரமாய்க் காத்துக் கொண் டிருக்கிறார்!" என்று சத்தம் போட்டுக் கூறினார் கோகலே.
"தீர்மானத்தைத் தாங்கள் பார்த்து விட்டீர்களா?"
"ஓ! பார்த்தேன்."
"தீர்மானம் எப்படி யிருக்கிறது ? "
"மிகவும் நன்றா யிருக்கிறது."
"அப்படியானால் சரி ! எங்கே, காந்தி ! தீர்மானத்தைப் படியுங்கள், கேட்கலாம்!"
காந்திஜி நடுங்கிக் கொண்டே ஈனஸ்வரத்தில் தீர்மானத்தைப் படித்தார். படித்து முடித்ததும், "தீர்மானம் ஏக மனதாக நிறைவேறியது " என்று பலர் கூவினார்கள்.
"காந்தி! இதைக் காங்கிரஸில் பிரேரணை செய்து பேசுவதற்கு உமக்கு ஐந்து நிமிஷம் தரப்படும்" என்றார் அக்கிராசனர் டின் ஷா வாச்சா.
இந்த அவசரக் காரியம் காந்திஜிக்குப் பிடிக்கவில்லை. "தீர்மானம் இன்ன தென்பதையே ஒருவரும் தெரிந்துகொள்ள வில்லையே!" என்று வருத்தப் பட்டார்.
காங்கிரஸில் மேற்படி தீர்மானத்தைப் பிரேரணை செய்து பேச வேண்டியது பற்றியும் கவலைப்பட்டார். ஐந்து நிமிஷத்திற்குள் என்னத்தைச் சொல்வது என்பதே தெரியவில்லை. விஷயமோ மிகச் சிக்கலான து. மற்ற தீர்மானங்களைப் பற்றிப் பேசியவர்களில் சிலர் முக்கால் மணியும் அரைமணியுங் கூடப் பேசினார்கள். ஆனால் காந்தி எழுந்து பேசத் தொடங்கி மூன்று நிமிஷத்திலேயே அக்கிராசனர் வாச்சா மணி அடித்து விட்டார்.
மணிச் சத்தம் கேட்டவுடனே காந்திஜியும் உட்கார்ந்து விட்டார். ஆனால் தீர்மானம் என்னமோ மற்ற எல்லாத் தீர்மானங்களையும் போல் ஏகமனதாக நிறைவேறி விட்டது. காங்கிரஸினால் தீர்மானம் நிறைவேற்றப் பட்டதென்பதே காந்திஜிக்கு ஓரளவு திருப்தியும் மகிழ்ச்சியும் அளித்தது. காங்கிரஸ் ஒப்புக்கொண்டது என்றால், இந்தியா தேசமே ஒப்புக் கொண்டதாகும் அல்லவா ?
--------------------
35. கர்ஸான் தர்பார்
காங்கிரஸ் முடிந்துவிட்டது. ஆயினும் கல்கத்தாவில் இன் னும் பல பிரமுகர்களைப் பார்த்துப் பேசித் தென்னாப்பிரிக்கா இந்தியர் விஷயத்தில் சிரத்தை உண்டாக்க வேண்டும் என்று காந்திஜி நினைத்தார். இதற்காகக் கல்கத்தாவில் ஒரு மாதம் தங்குவதென்று உத்தேசித்தார். இந்த விவரம் ஸ்ரீ கோகலேக்குத் தெரிந்ததும் காந்திஜி தம்முடைய ஜாகைக்கு வந்து தம்முடன் தங்கியிருக்க வேண்டும் என்று அழைத்தார்.
அப்போது இந்தியா தேசத்துக்குக் கல்கத்தா தலைநகரா யிருந்தது. வைஸ்ராய் சர்வாதிகாரம் படைத்தவராயிருந்த போதிலும் இந்தியச் சட்டசபை ஒன்றும் இருந்தது. அதில் ஸ்ரீ கோகலே அங்கத்தினர். ஆதலால் இந்தியச் சட்டசபை நடக்கும் சமயங்களில் ஸ்ரீ கோகலே கல்கத்தாவில் ஜாகை வைத்துக்கொண்டு வசித்தார்.
சங்கோசத்தினால் இரண்டு தினம் வரையில் காந்திஜி கோகலே வீட்டுக்குப் போக வில்லை. எனவே கோகலேயே ஒரு நாள் வந்தார். "நீர் இந்த நாட்டினர் ; இந்த நாட்டிலே இருந்து பல தொண்டுகள் செய்ய வேண்டியவர். ஆனால் இப்படிச் சங்கோசப்பட்டால் ஒரு காரியமும் நடைபெறாது. எல்லாருடனும் கலந்து பழகக் கற்றுக் கொள்ள வேண்டும்" என்று சொன்னார். அதன் பேரில் கோகலேயின் ஜாகைக்குக் காந்திஜி கிளம்பினார்.
புறப்படுவதற்கு முன்னால் காந்திஜி தங்கியிருந்த இந்தியா கிளப்பில் ஒரு விசித்திரமான சம்பவம் நடைபெற்றது.
அச்சமயம் ஏழாம் எட்வர்டு சக்கரவர்த்தி முடிசூட்டப்பட்டார். அரசரின் பிரதிநிதியான லார்டு கர்ஸான் மேற்படி வைபவத்தை முன்னிட்டு ஒரு தர்பார் நடத்தினார். இந்தியா கிளப்பில் தங்கி யிருந்த ராஜாக்களும் மகாராஜாக்களும் மேற்படி தர்பாருக்குப் போனார்கள். போகும்போது அவர்கள் வங்காளிகள் வழக்கமாக அணியும் வேஷ்டி, சட்டை, அங்கவஸ்திரம் இவற்றுக்குப் பதிலாக, ஆங்கிலேயர் வீட்டில் பணி செய்யும் ஏவலாளரின் உடை போன்ற நீண்ட அங்கி, இடுப்புப் பட்டை, வர்ணத் தலைப்பாகை ஆகியவற்றை அணிந்து சென்றார்கள், காந்திஜி இதைக் கவனித்தார். "அழகிய வேஷ்டி அங்கவஸ்தி ரத்தை விட்டு, இந்தக் குற்றேவல் உடையை ஏன் அணிகிறீர்கள்?" என்று கேட்டார். அதற்கு ஒரு ராஜா சொன்ன பதிலாவது :-- " எங்களுக்கும் குற்றேவலாளிக்கும் வித்தியாசம் ஒன்றுமில்லை. நாங்கள் கர்ஸான் பிரபுவின் குற்றேவலாளர் தான். தர்பாருக்குப் போகாமற் போனால் எங்களுடைய ராஜ்யமே போய்விடும். போனால் இந்த உடை தரித்துத் தான் போக வேண்டும். போகத்தான் போகிறோமே ? வைஸ்ராயிடம் ஒரு வார்த்தை பேச முடியும் என்று நினைக்கிறீர்களா ? அது தான் கிடையாதே! ". இவ்வாறு மனம் விட்டுப் பேசியவரிடம் காந்திஜிக்கு மிகுந்த அநுதாபம் உண்டாயிற்று.
பல வருஷங்களுக்குப் பிறகு இதே மாதிரி சுதேச ராஜாக்களின் ஆடை ஆபரணங்கள் சம்பந்தமாக மகாத்மா காந்தி தம்முடைய மனவேதனையை வெளியிடவேண்டி நேர்ந்தது. லார்ட் ஹார்டிஞ்ச் இந்தியாவின் வைஸ்ராயாக இருந்த காலத்தில் காசியில் ஹிந்து சர்வகலாசாலையின் அஸ்திவார விழா நடை பெற்றது. அப்போதும் வைஸ்ராய் ஹார்டிஞ்ச் ஒரு தர்பார் நடத்தினார். ராஜாக்களும் மகா ராஜாக்களும் ஸ்திரீகளைப் போல் ஆடை ஆபரண அலங்காரங்களுடன் வந்திருந்தார்கள். பட்டாடைகள் தரித்துக்கொண்டு கழுத்தில் முத்துமாலைகளும் கையில் காப்புக் கொலுசுகளும் வாகுவலயங்களும் அணிந்திருந் தார்கள். அவர்களுடைய சிங்காரத் தலைப்பாகைகளில் முத்துக்களும் வைரங்களும் பதித்திருந்தன. இவ்வளவோடு அரைக் கச்சுகளில் பட்டாக் கத்திகளும் தரித்திருந்தார்கள். அந்தப் பட்டாக் கத்திகளின் கைப் பிடிகளில் இரத்தினங்களும் வைரங்களும் ஜொலித்தன. இதை யெல்லாம் பார்த்துக் காந்தி மகானுக்குச் சகிக்கவேயில்லை. விசாரித்ததில் ராஜாக்களில் பலர் அத்தகைய ஆடை அணிகளை மனப் பூர்வமாக வெறுக்கிறார்கள் என்றும் வைஸ்ராயின் தர்பாருக்கு வரும் போது அத்தகைய அணிமணிகளுடனே அவர்கள் வரவேண்டு மென்பது கட்டாயம் என்றும் தெரிய வந்தது.
மேற்படி விழா சம்பந்தமாக நடந்த ஒரு கூட்டத்தில் காந்திஜியைப் பேசும்படி கேட்டுக் கொண்டபோது இதைப் பற்றியே பேசி விட்டார். "நம்முடைய ராஜாக்களும் மகா ராஜாக்களும் எதற்காக இப்படிக் கொலுப் பொம்மைகளைப் போல் அலங்கரித்துக் கொண்டிருக்கிறார்கள் ? இவர்களுக்குத் தன் மதிப்பு உணர்ச்சி வேண்டாமா ? பிரிட்டிஷ் இராஜப் பிரதிநிதியைக் கண்டு எதற்காக இவர்கள் இவ்வளவு பயந்து நடுங்க வேண்டும்? பரம்பரையான இவர்களுடைய தைரியமும் வீரமும் எங்கே ?" என்று இவ்விதம் பேசினார்.
கூட்டத்தி லிருந்தவர்களில் டாக்டர் பெஸண்டு அம்மையும் ஒருவர். காந்திஜி இவ்விதம் தம் மனத்திலிருந்ததை ஒளியாமல் வெளியிட்டது டாக்டர் பெஸண்டு அம்மைக்குக் கோபத்தை உண்டாக்கியது. காந்திஜி மரியாதைக் குறைவாகப் பேசியதைக் கண்டிப்பதற்கு அறிகுறியாக டாக்டர் பெஸண்டு அம்மை எழுந்து வெளியே சென்றார். இன்னும் சிலரும் அவரைத் தொடர்ந்து சென்றார்கள். இதைப் பற்றிப் பெஸண்டு அம்மையார் பத்திரிகைகளுக்கு ஓர் அறிக்கையும் விட்டார். ஆனால் காந்திஜி கூறியது சரிதான் என்று தேச மக்களில் பெரும்பாலோர் ஆமோதித்தார்கள். சுதேச மன்னர்களிலேயே பலர் அதைப் பற்றி மனதிற்குள்ளே மகிழ்ச்சி யடைந்தார்கள். இந்தச் சம்பவத்தினால் காந்திஜியிடம் சுதேச மன்னர்களுடைய மதிப்பு வளர்ந்தது.
------------
36. கோகலேயின் விருந்தாளி
ஸ்ரீ கோகலேயின் வீட்டுக்குக் காந்தி மகான் போன முதல் தினமே தம் சொந்த வீட்டில் இருப்பதாக அவர் எண்ணும்படி யிருந்தது. கோகலே அவருடைய செளகரியத்துக்காக அத்தகைய ஏற்பாடுகளைச் செய்திருந்தார். காந்திஜிக்கு அவ்வளவு அதிகமான செளகரியங்களும் வேண்டியதில்லை யல்லவா ? அவருடைய காரியங்களை அவரே செய்து கொள்ளும்படி விட்டு விட்டால் அதுவே அவருக்குப் பெரிய செளகரியம். குற்றேவல் புரிவதற்கு ஆட்கள் அவருக்குத் தேவையில்லை. இதெல்லாம் கோகலேயின் மனத்தைப் பெரிதும் கவர்ந்தது. அடிக்கடி காந்திஜியின் தூய்மையான வழக்க பழக்கங்களைப் புகழ்ந்து பாராட்டி அவர் பேசி வந்தார்.
கோகலே தம்மைப் பார்க்க வந்த பிரமுகர்களை யெல்லாம் காந்திஜிக்கும் அறிமுகப் படுத்தினார். அவர்களுள் ஒருவர் ஆசிரியர் பி. சி. ராய். உயர்ந்த அறிவுக்கும் எளிய வாழ்வுக்கும் சிறந்த தேசபக்திக்கும் ஆசிரியர் பி. சி. ராய் பிரசித்தி பெற்றவர். இரசாயன சாஸ்திர ஆராய்ச்சியில் உலகப் புகழ் அடைந் தவர். தம்முடைய இரசாயன சாஸ்திர அறிவை நாட்டின் நன்மைக்குப் பயன்படுத்த விரும்பி வங்காளத்தில் மிகப் பெரிய மருந்து உற்பத்திச் சாலையை அவர் ஏற்படுத்தி யிருந்தார்.
ஆசிரியர் பி. சி. ராயை ஸ்ரீ கோகலே பின் வருமாறு காந்திஜிக்கு அறிமுகப்படுத்தி வைத்தார் :- "இவர்தான் ஆசிரியர் ராய். மாதம் ரூ. 800 இவருக்குச் சர்வகலாசாலையில் சம்பளம் கொடுக்கிறார்கள். ஆனால் தமக்காக ரூ. 40 மட்டும் வைத்துக் கொண்டு பாக்கியைப் பொது நன்மைக்காகச் செலவிடுகிறார். இன்று வரை இவர் பிரம்மசாரி; கலியாணம் செய்து கொள்ளும் எண்ண மும் இவருக்குக் கிடையாது."
ஸ்ரீ கோகலேக்கும் ஆசிரியர் ராய்க்கும் நடந்த சம்பாஷணைகளைக் கேட்டுக் கொண்டிருப்பது காந்திஜிக்கு மிகவும் பிரியமாயிருந்தது. பொது நன்மைக்குரிய விஷயங்களைப் பற்றியே அவர்கள் பேசுவார்கள். ஆகையால் எவ்வளவு நேரம் கேட்டுக் கொண்டிருந்தாலும் அலுப்பு உண்டாகாது. இன்னும் பேச மாட்டார்களா என்று இருக்கும்.
பிற்காலத்தில் ஆசிரியர் பி. சி. ராய் காந்திஜியின் சிறந்த நண்பர்களில் ஒருவரானார். கதர் இயக்கம் முதலிய நிர்மாண திட்ட வேலைகளுக்கு வங்காளத்தில் பேருதவி புரிந்தார்.
கோகலேயின் பக்கத்தில் இருந்து அவர் வாழ்க்கை நடத்திய முறையையும் பொது வேலை செய்த முறையையும் கவனிப்பதில் காந்திஜிக்குப் பெரு மகிழ்ச்சி உண்டாயிற்று. ஒரு நிமிஷமேனும் கோகலே தம் காலத்தை வீணாக்குவதில்லை. யாருடன் பேசினாலும் பழகினாலும் நட்புக் கொண்டாலும் அதிலெல்லாம் பொது நல நோக்கமே குடி கொண்டிருக்கும். பொய்யும் கபடமும் அவருடைய பேச்சில் அணுவளவும் காண முடியாது. பலர் வந்து பற்பல காரியங்களில் அவரைச் சிரத்தை கொள்ளும்படி செய்ய முயல்வார்கள். ஆனால் கோகலே அதற்கெல்லாம் ஒரே பதில் தான் சொல்வாராம். "தங்களுக்குச் சிரத்தையுள்ள காரியத்தைத் தாங்கள் செய்யுங்கள் ; தேச விடுதலை தான் எனக்கு முக்கியம். அதற்காகவே என்னுடைய முழு கவனத்தையும் நேரத்தையும் செலவிட. வேண்டும். தேசம் விடுதலை பெற்றுவிட்டால் அப்புறம் மற்றக் காரியங்களில் சிரத்தை எடுத்துக் கொள்வேன்" என்பாராம்.
கோகலேக்குத் தம்முடைய குரு ரானடேயிடம் அளவில்லாத பக்தி. எந்த விஷயமானாலும் அதைப்பற்றி ரானடே ஏதாவது அபிப்பிராயம் தெரிவித்திருந்தால் அதுவே கோகலேக்கு முடிவானது வேறு யோசனையே செய்ய மாட்டார். ரானடேயின் குணாதிசயங்களைப் பற்றி ஓயாமல் பேசிக் கொண்டேயிருப்பார். ரானடே ஹைக் கோர்ட் ஜட்ஜாக இருந்த போதிலும் காங்கிரஸ் மகாசபைகளுக்குப் போவதுண்டாம். "அந்த மாதிரி தைரியம் வேறு யாருக்கு வரும்?”என் று அடிக்கடி கோகலே சொல்லுவது வழக்கம்.
சட்டசபைக்கும் மற்ற ஜோலிகளுக்கும் போவதற்குக் கோகலே கோச் வண்டி ஒன்று வைத்திருந்தார். காந்திஜி ஒருநாள் "குதிரை வண்டி எதற்காக வைத்திருக்கிறீர்கள்? டிராம் வண்டியில் போனால் என்ன ? அதனால் தங்களுடைய கெளரவம் குறைந்து போய்விடுமா?” என்று பட்டவர்த்தன மாகக் கேட்டுவிட்டார்.
கோகலே தேசத் தொண்டுக்காகவே தம் வாழ்நாளை அர்ப்பணம் செய்தவர் ; எளிய வாழ்க்கையை மேற்கொண்டு வாழ்ந்து வருபவர். ஆகையினால் தான் காந்திஜி அவரை அவ் விதம் துணிந்து கேட்டார்.
கோகலே அதற்குக் கூ றிய மறுமொழி வருமாறு : * நீங்கள் விருப்பம்போல் டிராம் வண்டியில் போகக் கூடியதா யிருக்கிறது. இது குறித்து நான் பொறாமைப் படுகிறேன். அந்தச் செளகரியம் எனக்குக் கிடையாது. ஜனங்கள் என்னை நன்கறிந்திருப்பதால் டிராம் வண்டியில் போவது காரியத்துக்குக் குந்தகமாயிருக்கும். என்னைப்போல் பொது ஜனங்களால் நன்கு அறியப்படும் துர்ப்பாக்கியம் உங்களுக்கும் ஒரு காலத்தில் வரக்கூடும். அப்போது டிராம் வண்டிப் பிரயாணம் உங்களுகும் கஷ்டமாய்த் தானிருக்கும்.”
கோகலேயின் வாக்கு எவ்வளவு ஆச்சரியமாய்ப் பலித்து விட்டது ? காந்திஜியைப் போல் கோடிக் கணக்கான ஜனங்களால் நன்கு அறியப்பட்டவர் சரித்திரத்திலேயே வேறு யாரும் இல்லை யல்லவா ?
மேற்படி பதில் காந்திஜிக்கு ஒருவாறு திருப்தியளித்தது. ஆனால் இன்னொரு விஷயத்தில் கோகலேயின் சமாதானம் அவருக்குத் திருப்தி தரவில்லை.
"தாங்கள் தேகாப்பியாசமே செய்வதில்லை. உலாவப் போவதுகூட இல்லை. ஓயாமல் தங்களை வியாதி பிடுங்கித் தின்பதில் ஆச்சரியம் என்ன ? பொது ஊழியம் செய்தால் தேகாப் பியாசத்துக்குக் கூடச் சாவகாசம் இல்லாமல் போய் விடுமா?" என்று காந்திஜி கேட்டதற்குக் கோகலே, ”நீங்கள் தான் பார்க்கிறீர்களே ? உலாவப் போவதற்கு எனக்கு நேரம் எங்கே இருக்கிறது?" என்று பதில் அளித்தார்.
இந்தச் சமாதானத்தைக் காந்திஜி ஒப்புக் கொள்ள வில்லை யானாலும் கோகலேயிடம் வைத்திருந்த பெருமதிப்புக் காரணமாகப் பதில் கூறாமல் சும்மா இருந்தார்.
நம்முடைய தேசியத் தலைவர்களில் பெரும்பாலோர் கோகலேயிடம் இருந்த குறைக்கு ஆளாகியிருந்தார்கள். அவர்கள் தங்கள் ஆரோக்கியத்தைச் சரியாகக் கவனித்துக் கொள்வதில்லை. தேகாப்பியாசமும் செய்வதில்லை. இதனால் எத்தனையோ அரும் பெரும் தலைவர்களின் உத்தமச் சேவையைத் தேசம் வெகு சீக்கிரத்தில் இழந்துவிட்டது.
காந்திஜி மட்டும் இறுதிவரையில் தேகாரோக்கியத்தைக் காப்பாற்றி வந்தார். என்ன வேலை யிருந்தாலும் தினம் கொஞ்ச நேரம் விரைவாக நடக்கும் வழக்கத்தைக் கைக் கொண்டிருந் தார். இதனால் அவருடைய வேலை செய்யும் திறமை குறைந்து விடவில்லை; அதிகமாக வளர்ந்தது.
இவ்விதமாகக் கோகலேயுடன் ஒரு மாதம் கழித்த பிறகு காந்திஜி இந்தியா முழுவதிலும் ஒரு முறை மூன்றாம் வகுப்பு ரயில் வண்டியில் பிரயாணம் செய்வ தென்று உத்தேசித்தார். மூன்றாம் வகுப்புப் பிரயாணிகளின் கஷ்டங்களை நன்கு அறிந்து பரிகாரம் தேடவேண்டும் என்பதுதான் அவருடைய நோக்கம். கோகலே முதலில் தடை செய்து பிறகு சம்மதம் கொடுத்தார். பன்னிரண்டு அணா பெறுமான கித்தான் பை ஒன்றைக் காந்திஜி வாங்கிக் கொண்டார். அதில் ஒரு முரட்டுக் கம்பளிச் சட்டை, ஒரு வேஷ்டி, ஒரு துண்டு, ஒரு பனியன் இவற்றை வைத்துக் கொண்டார். இந்தப் பையைத் தவிர ஒரு துப்பட்டி, ஒரு தண்ணீர்க் கூஜா (மண்ணால் ஆனது) இவ்வளவு தான் காந்திஜி மூன்றாம் வகுப்புப் பிரயாணத்துக்காக எடுத்துக் கொண்டவை. கோகலே பிரயாணத்துக்காகப் பூரிகளும் லட்டுகளும் தயா சரித்து ஒரு சிற்றுண்டிப் பாத்திரத்தில் வைத்துக் கொடுத்தார்.
மகாத்மாவை ரயில் ஏற்றி அனுப்ப ஸ்ரீ கோகலேயும் ஆசிரியர் ராயும் புறப்பட்டார்கள். "நீங்கள் எதற்காகச் சிரமப் பட வேண்டும் ? ஸ்டேஷனுக்கு வருவது அவசியம் இல்லை !” என்று காந்திஜி கூறியதை அவர்கள் பொருட்படுத்தவில்லை. ”நீங்கள் முதல் வகுப்பில் பிரயாணம் செய்தால் நான் வர வேண்டிய அவசியமில்லை. மூன்றாம் வகுப்பில் ஏறுவதால் கட்டாயம் நான் ஸ்டேஷனுக்கு வந்தாக வேண்டும்" என்று சொன்னார் கோபால கிருஷ்ண கோகலே. எனவே இருவரும் ஸ்டேஷனுக்குப் போகவே செய்தார்கள். அவர்களுடைய வாழ்த்துக்களைப் பெற்றுக் கொண்டு காந்திஜி பிரயாணம் செய்யத் தொடங்கினார்.
இந்தச் சம்பவங்களிலிருந்து, காந்திஜியின் மேன்மையை ஒருவாறு முன் கூட்டியே அறிந்து பாராட்டிய இந்தியத் தலைவர் ஸ்ரீ கோகலே என்பதாக அறிகிறோம். அதோடு கோகலே எத்தகைய மரியாதைக்காரர் என்பதையும் அவருடைய பண்பாட்டின் உயர்வையும் அறிகிறோம். காந்திஜி எழுதியுள்ள சுய சரிதத்திலிருந்துதான் கோகலேயைப் பற்றி மேற்கண்ட விவரங்கள் நமக்குத் தெரிய வருகின்றன.
-------------
37. காசியில் ஏமாற்றம்
காந்திஜி எதிர்பார்த்தது போலவே, மூன்றாம் வகுப்புப் பிரயாணம் மிக மோசமாயிருந்தது. அதிகாரிகள் மூன்றாம் வகுப்புப் பிரயாணிகளை ஆடுமாடுகள் என்று எண்ணி நடத்தினார்கள். ஆடு மாடுகளுக்குரிய சௌகரியங்கள் தான் மூன்றாவது வகுப்பில் அளிக்கப்பட்டன. இங்கிலாந்திலும் தென்னாப் பிரிக்காவிலும் காந்திஜி ரயில் பிரயாணம் செய்ததுண்டு. அங்கே யெல்லாம் மூன்றாம் வகுப்பு இவ்வளவு மோசமாயில்லை. முதல் வகுப்புக்கும் மூன்றாம் வகுப்புக்கும் இவ்வளவு வித்தியாசமும் கிடையாது. தென்னாப்பிரிக்காவில் மூன்றாம் வகுப்பில் பெரும் பாலும் நீகிரோவர் தான் பிரயாணம் செய்வார்கள். ஆயினும் அங்கே மூன்றாம் வகுப்பில் இதைவிட அதிக வசதி அளிக்கப் பட்டது. சில ரயில்களில் மூன்றாம் வகுப்பில் கூட இரவில் தூங்க இடமும் மெத்தை தைத்த ஆசனமும் ஏற்படுத்தி யிருந்தார்கள். கூட்டம் அளவுக்கு அதிகம் ஆகாமலும் பார்த்துக் கொண்டார்கள். இங்கேயோ நிலைமை எல்லா விதத்திலும் மோசமாயிருந்தது. வசதிகளும் இல்லை ; கூட்டமும் குறிப்பிட்ட எண்ணிக்கையை விட எப்போதும் அதிகம்.
ரயில்வே அதிகாரிகளின் அசட்டையும் அக்கிரமங்களும் ஒருபுறம் இருக்க, பிரயாணிகளும் பெரும் அநியாயங்கள் செய்தார்கள். மற்றப் பிரயாணிகளின் சௌகரியத்தைப் பொருட் படுத்தாமல் குப்பைகளைப் போட்டார்கள் ; சுருட்டுக் குடித்தார்கள்; வெற்றிலை புகையிலை மென்று துப்பி வண்டியை ஒரு எச்சில் குழியாக்கினார்கள். கூச்சல் போடுவதும் ஆபாச மொழிகள் பேசுவதும் அதிகம். இந்தப் பயங்கரமான நிலைமையை எப்படிச் சீர்திருத்துவது என்று மகாத்மா பெரிதும் சிந்தனை செய்தார். படித்த வகுப்பார் மூன்றாம் வகுப்பிலேயே பிரயாணம் செய்வதுதான் அதற்கு வழி என்று தோன்றியது. படித்தவர்கள் மூன்றாம் வகுப்பில் பிரயாணம் செய்து மற்றவர்களின் தர் வழக்கங்களைச் சீர்திருத்த வேண்டும். அவசியம் ஏற்பட்ட போதெல்லாம் வசதிக் குறைவுகளைப் பற்றி அதிகாரிகளுக்குப் புகார் எழுதவேண்டும். சிப்பந்திகளுக்கு லஞ்சம் கொடுத்துத் தங்கள் சொந்த வசதிகளைத் தேடிக் கொள்ளக் கூடாது. விதிகளை யார் மீறி நடந்தாலும் அதைக் கண்டிக்கவேண்டும் ; தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். இப்படி யெல்லாம் செய்தால் ஒருவாறு சீர்திருத்தலாம் என்று எண்ணினார். தாமே இப்படி யெல்லாம் செய்ய வேண்டும் என்றும், அதற்காக ஓர் இயக்கமே நடத்தவேண்டும் என்றும் உத்தேசித்தார். ஆனால் பின்னால் பெரிய பெரிய காரியங்களில் ஈடுபட்டதனால் உத்தேசத்தை நிறைவேற்ற முடியவில்லை.
தம்பி ! காந்திஜியின் மேற்படி அநுபவம் 47 வருஷங்களுக்கு முன்னால் 1901-ல் ஏற்பட்டது. இப்போது இந்தியா சுதந்திரம் அடைந்திருக்கிறது. ரயில்வேக்கள் பொது மக்களின் சொத்தாகிவிட்டன. பொதுஜன மந்திரி ரயில்வேக்களின் பொறுப்பை ஏற்று நடத்துகிறார். ஆயினும் கூட, மூன்றாம் வகுப்புப் பிரயாணம் நரக வேதனையாகவே இருந்து வருகிறது.
* * * *
கல்கத்தாவிலிருந்து இராஜகோட்டை செல்லும் மார்க்கத் தில் காந்திஜி காசி, ஆக்ரா முதலிய நகரங்களில் இறங்கிப் பார்த்துவிட்டுச் சென்றார். காசியில் அவர் கண்ட காட்சிகள் பெரும் ஏமாற்றமளித்தன. பிரசித்தி பெற்ற காசி விசுவநாதர் ஆலயத்துக்குப் போகும் வழி ஒரு குறுகலான சந்து. கோயிலைச் சுற்றியும் கோயிலுக்குள்ளேயும் அமைதி என்பதே கிடையாது. தந்திரசாலிகளான கடைக்காரர்கள் மிட்டாய்களும் புது தினுசு விளையாட்டுக் கருவிகளும் விற்றார்கள். கடைக்காரர்களும், கடைகளில் சாமான் வாங்கிய யாத்ரீகர்களும் ஏகச் சத்தம் போட்டார்கள். எங்கெங்கும் ஈக்கள் மொய்த்தது சகிக்க வொண்ணாததா யிருந்தது. மனங் குவிந்து இறைவனைத் தியானிப்பதற்கு அது ஏற்ற இடமாகவே இல்லை, இவ்வளவு சந்தை இரைச்சலிலும் மெய்மறந்து பக்தி பரவச நிலையில் இருந்த ஒரு சிலர் காணப்பட்டனர். ஆனால் மிகப் பெரும்பாலோருக்கு
அது அசாத்தியமா யிருந்தது.
கோயில் வாசலை அடைந்ததும் அழுகிப்போன பூக்குவியலின் நாற்றம் காந்திஜிக்கு நல்வரவு கூறிற்று. கோயிலின் உட் புறம் நல்ல சலவைக் கல்லால் தள வரிசை போடப்பட்டு விளங்கியது. ஆனால் யாரோ ஒரு பக்தர் அந்தச் சலவைக் கற்களை நடுநடுவே உடைத்து ஆங்காங்கு வெள்ளி ரூபாய்களைப் பதித்திருந்தார். இந்த ரூபாய்கள் அழுக்குச் சேரும் அசுத்த பாண்டங்களாக உபயோகப் பட்டன.
ஆலயத்தைச் சேர்ந்த 'ஞான வாவி' என்னும் புண்ணிய தீர்த்தத்துக்குச் சென்றார். ஞான வாவியைச் சுற்றியுங்கூட ஒரே ஆபாசமும் அழுக்குமாயிருந்தன. காந்திஜிக்கு இதெல்லாம் மிக்க ஆத்திரத்தை அளித்தன. அந்த ஆத்திரத்தை வாவிக் கரையில் இருந்த பண்டாவிடம் காட்டினார். (கோயில் குருக்களின் வேலையும் புரோகிதரின் வேலையும் சேர்த்துச் செய்கிறவர்களுக்கு வட இந்தியாவில் 'பண்டாக்கள்' என்று பெயர்.) பண்டாவுக்குத் தட்சணை கொடுக்க மனம் வரவில்லை. இதற்கு அறிகுறியாக ஒரு தம்பிடி கொடுத்தார். பண்டா , "நீ நேரே நரகத்துக்குப் போவாய்!" என்று சபித்துக் காந்திஜி கொடுத்த தம்பிடியை வீசி எறிந்தார்.
காந்திஜி இதனால் மனம் கலங்கவில்லை. "என்னுடைய கதி எப்படியானாலும் ஆகட்டும்; ஆச்சாரியராகிய தாங்கள் இப்படிப் பேசுதல் தகாது. வேண்டுமென்றால் தம்பிடியை எடுத்துக் கொள்ளுங்கள். இல்லாவிட்டால் அதுவும் போய் விடும்!" என்றார்.
தொலைந்து போ! உன் தம்பிடி இங்கே யாருக்கு வேண்டும் ? " என்று பண்டா மேலும் திட்டினார். "நமக்கு ஒரு தம்பிடி லாபம் ; பண்டாவுக்கு நஷ்டம் " என்று காந்திஜி நினைத்துக் கொண்டு தம்பிடியைத் திருப்பி எடுத்துக் கொண்டு புறப்பட்டார். ஆனால் பண்டாவா விடுகிறவர் ? காந்திஜியைக் கூப்பிட்டு, "நானும் உன்னைப் போல நடந்து கொள்ளலாமா ? அந்தத் தம்பிடியை ஏற்றுக்கொள்ளா விட்டால் உனக்குப் பாவம் சம்பவிக்கும். கொடுத்து விட் டுப் போ !" என்றார்.
காந்திஜி அவ்விதமே கொடுத்து விட்டுத் திரும்பினார்.
இதையெல்லாம் விவரித்து விட்டுக் காந்திஜி தமது காசி யாத்திரையைப் பற்றிக் கடைசியாக எழுதியிருப்பதாவது:-
"ஆண்டவன் கருணையில் யாருக்கேனும் ஐயமிருக்குமாயின் அவர் இத்தகைய புண்ணிய க்ஷேத்திரங்களுக்குப் போய்ப் பார்ப்பாராக. யோகீசுவரனான இறைவன் தன் பெயரால் நடக் கும் எத்துணை அக்கிரமங்களையும் வெளி வேஷங்களையும் பொறுத்துக் கொண்டிருக்கிறான் ! வெகு காலத்துக்கு முன்பே அவன் ' யே யதா மாம் ப்ரபத்யந்தே தாம் ஸ்ததைவ பஜாம்ய ஹம்' என்று திருவாய் மலர்ந்தான். மனிதன் விதைப்பதை அறுக்கிறான். கரும் பயனை அநுபவியாது தப்பித்துக் கொள் ளல் எவராலும் இயலாத காரியம். எனவே இதில் ஆண்டவன் தலையிடுவதற்கு அவசியமே இல்லை. சட்டத்தை இயற்றிவிட்டு அவன் அப்புறம் சென்று விட்டான் என்றே கூறலாம்."
மேற்கண்டவாறு காந்திஜி எழுதி இருபது ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்னமும் காசி நகரமும் விசுவநாதர் ஆலயமும் அவர் பார்த்த இலட்சணமாகவே இருக்கின்றன.
------------
38. நம்பிக்கைச் சோதனை
இராஜகோட்டை போய்ச் சேர்ந்த பிறகு காந்திஜி அங்கே வக்கீல் தொழில் ஆரம்பித்தார். தென்னாப்பிரிக்கா அநுபவத்தின் பயனாக இம்முறை கோர்ட்டில் நன்றாகப் பேசும் ஆற்றல் பெற்றிருந்தார். ஏற்றுக் கொண்ட சில வழக்குகளில் வெற்றி யடைந்தார். இதைக் கண்ட அவருடைய நண்பர்கள் பம்பாய்க்குச் சென்று அவர் மறுபடியும் பாரிஸ்டர் தொழில் தொடங்க வேண்டுமென்று சொன்னார்கள். வழக்குகள் வருமா என்ற யோசனை வேண்டாம் என்றும், வேண்டிய வழக்குகள் தாங்களே அனுப்பி வைப்பதாகவும் அவர்கள் சொன்னார்கள்.
காந்திஜியும் அவர்களுடைய யோசனைக்கு இணங்கிப் பம்பாய்க்குச் சென்றார். பாயன் கில்பர்ட்-ஸயானி இவர்களுடைய காரியாலயம் இருந்த கட்டிடத்தில் தாமும் அறைகள் வாடகைக்கு வாங்கிக் கொண்டார்.
பம்பாயில் ஸ்திர வாசம் ஏற்பட்டு விட்டதாகத் தோன்றியது. ஆனால் காந்திஜியின் வாழ்க்கை அமைதியாக நடப்பதில் ஆண்டவனுக்குத் திருவுளம் இல்லை.
மகாத்மாவின் இரண்டாவது புதல்வனான மணிலாலுக்குக் கடுமையான அஸ்தி சுரம் (டைபாய்டு) கண்டது. ஏற்கெனவே மணிலால் வைசூரி போட்டுக் கஷ்டப்பட்டவன். இப்போது அஸ்தி சுரத்தோடு கபவாத சுரமும் கலந்திருந்தது. கடுமையான சுரமாதலால் இரவில் பிதற்றல் முதலிய சேஷ்டைகளும் கடுமையாக இருந்தன.
டாக்டர் ஒருவரைக் காந்திஜி அழைத்து வந்தார். அஸ்தி சுரத்திற்கு மருந்து அதிக பயன் தராது என்று டாக்டர் சொன்னார். கோழி முட்டையும் கோழிக் குஞ்சு ரசமும் கொடுத்து வரும்படியும் கூறினார்.
காந்திஜிக்குச் சைவ உணவு விரதத்தில் அதிகப் பற்று உண்டு என்பதுதான் உனக்குத் தெரியுமே? அந்த விரதத்தைக் கைவிடக் காந்திஜிக்கு விருப்பமில்லை. ஆனால் மணிலாலோ அப்போது பத்து வயதுக் குழந்தைதான். அவனுடைய அபிப் பிராயத்தைக் கேட்டுத் தீர்மானிப்பதற்கில்லை. அவனுக்காகக் காந்திஜியே தீர்மானித்தாக வேண்டும்.
தம்முடைய உறுதியின்படி நடந்தால் மணிலாலின் உயிருக்கு அபாயம் நேரலாம். அவ்விதம் குழந்தையை அபாயத்துக்கு உட்படுத்துவ து தர்மமா ? டாக்டர் பார்ஸி வகுப்பைச் சேர்ந்தவர். "நாங்கள் சாக பட்சணிகள்; தாங்கள் சொன்னவற்றைத் தவிர வேறு ஏதாவது யோசனை சொல்ல முடியுமா?" என்று காந்திஜி கேட்டார்.
"மற்றக் காலங்களில் சாக பட்சண விரதம் சரிதான். ஆனால் புதல்வனுடைய உயிருக்கே அபாயம் நேரலாம் என் றிருக்கும்போது பிடிவாதம் செய்யக் கூடாது. எவ்வளவோ சநாதன ஹிந்து குடும்பங்களில் என்னுடைய யோசனைப்படி செய்திருக்கிறார்கள். தாங்களும் இந்தக் குழந்தை விஷயத்தில் கடின சித்தம் காட்டாமலிருப்பது நலம்" என்றார் டாக்டர்.
அதற்குக் காந்திஜி கூறிய பதிலாவது :- "டாக்டராகிய தாங்கள் தங்களுடைய கடமையைச் செய்து விட்டீர்கள். ஆனால் என்னுடைய பொறுப்பை நான் கைவிட முடியாது. வயது வந்த பையனாயிருந்தால் அவனுடைய அபிப்பிராயத்தைக் கேட்டு அதன்படி செய்ய விட்டிருப்பேன். சிறு குழந்தையா யிருப்பதால் அவனுக்காக நான் தான் முடிவு செய்ய வேண்டி யிருக்கிறது. என்னுடைய மனச்சாட்சிப்படி நான் தான் முடிவு செய்ய வேண்டும். மாமிசமும் முட்டையும் மனிதன் உண்ணக் கூடாது என்பது என்னுடைய திடமான சமயக் கொள்கை. அது சரியோ தவறோ, தெரியாது. ஆனாலும் உயிர் வாழ்வதற்காகக் கூடச் சிற்சில காரியங்களை நாம் செய்யக்கூடாது. இது என் உறுதியான நம்பிக்கை. ஆகையால் தங்களுடைய யோச னையை நான் அனுசரிப்பதற்கில்லை. எனக்குத் தெரிந்திருக்கும் ஜல சிகிச்சை முறைகளைக் கையாளப் போகிறேன். ஆனால் தாது பார்க்கவும், இருதயம்-நுரையீரல் பரிசோதிக்கவும் எனக்குத் தெரியாது. தாங்கள் அவ்வப்போது வந்து இந்தப் பரிசோதனைகள் மட்டும் செய்து சொல்லிவிட்டுப் போனால் மனப்பூர்வமான நன்றி செலுத்துவேன்."
காந்திஜியின் தர்ம சங்கட நிலையை டாக்டர் நன்கு உணர்ந்தார். "அப்படியே ஆகட்டும்!" என்று சொல்லிப் போனார்.
அவர் போன பிறகு காந்திஜி தமக்கும் டாக்டருக்கும் நடந்த சம்பாஷணை விவரத்தை மணிலாலிடம் ஒருவாறு கூறினார், மணிலால் அப்பாவுக்கு ஏற்ற புதல்வன். " எனக்கு முட்டை யும் இறைச்சி ரசமும் வேண்டாம். என்னால் சாப்பிடமுடியாது. தங்களுடைய ஜல வைத்தியமே செய்யுங்கள்!" என்றான்.
ஜெர்மானியரான டாக்டர் கூன் என்பவர் ஜல சிகிச்சை முறையைப் பற்றி ஒரு நூல் எழுதியிருக்கிறார். அதில் ஆசன ஸ்நானம், இடுப்பு ஸ்நானம் ஆகிய முறைகளினால் நோய் தீர்க்கும் விதத்தைப்பற்றி எழுதியிருக்கிறார். காந்திஜி மேற்படி நூலில் கண்ட முறைகளை ஏற்கெனவே சோதனை செய்திருந் தார். இப்போது மணிலாலுக்கு இடுப்பு ஸ்நானம் செய்வித்தார். தொட்டி ஜலத்தில் மூன்று நிமிஷம் முழங்காலுக்கு மேலே தொப்புளுக்குக் கீழே தண்ணீர் இருக்கும்படி உட்காரவைத்து வெளியே எடுத்தார். இதை அடிக்கடி செய்ததுடன் ஆரஞ்சுப் பழ ரசமும் தண்ணீரும் கலந்து உணவாகக் கொடுத்து வந்தார்.
மூன்று நாள் இப்படிச் செய்து வந்தும் பயன் தெரிய வில்லை. 104 டிக்கிரி வரையில் சுரம் அடிக்கடி ஏறிக் கொண் டிருந்தது. காந்திஜி கவலை அடைந்தார். தம்முடைய பிடிவாதம் குழந்தைக்கு ஆபத்தாக முடிந்து விட்டால் என்ன செய்கிறது ? தம்முடைய வைத்தியக் கொள்கையைக் குழந்தை மேல் சுமத்துவது நியாயமாகுமா ? வேறு டாக்டரைக் கூப்பிட்டால் என்ன ? அல்ல து ஆயுர்வேத வைத்தியரை அழைத்துக் காட்டினால் என்ன?
இந்த எண்ணங்களுக்கு இடையிடையே மாறான எண்ணங்களும் தோன்றின. டாக்டர்கள் மட்டும் குணப்படுத்தி விடுவதாக உத்தரவாதம் கொடுக்கிறார்களா? அவர்களும் சோதனை தானே செய்கிறார்கள் ? குழந்தையின் உயிர் ஆண்டவனுடைய சித்தத்தைப் பொறுத்தது. நமக்குச் சரியென்று நிச்சயமாகத் தோன்றுகிறபடி செய்வதுதான் நம் கடமை. அப் புறம் கடவுள் அருள் எப்படியோ அப்படி நடக்கட்டும்.
தாபஜ்வரத்தினால் தவித்துக்கொண்டிருந்த மணிலாலுக்கு அருகில் படுத்துக்கொண்டு காந்திஜி மேற் கண்டவாறெல்லாம் சிந்தனை செய்தார். சட்டென்று ஒரு யோசனை தோன்றியது. எழுந்து ஒரு நீளமான துணியைத் தண்ணீரில் நனைத்துப் பிழிந் தார். அதை மணிலாலின் உடல்மீது தலையை மட்டும் விட்டு விட்டுச் சுற்றினார். தலையில் தனியாக ஓர் ஈரத் துண்டைச் சுற்றினார். பிறகு இரண்டு கனமான கம்பளிகளைப் போட்டுக் குழந்தையைப் போர்த்தி விட்டார். அப்போது பழுக்கக் காய்ச்சிய இரும்பைப்போல் குழந்தையின் உடம்பு கொதித்தது. ஆனால் ஒரே வறட்சி ; லவலேசமும் வியர்வை இல்லை.
மணிலாலைச் சற்று நேரம் அவனுடைய அன்னையிடம் ஒப்பு வித்துவிட்டு வெளியே சிறிது உலாவச் சென்றார். செளபாத்தி கடற்கரைக்குப் போனார். அப்போது இரவு மணி பத்து. கடற் கரையில் இவரைத் தவிர இன்னும் இரண்டொருவரே உலாவிக் கொண்டிருந்தார்கள். காந்திஜி அங்கு மிங்கும் நடந்து கொண்டே கடவுளைப் பிரார்த்தித்தார். "ஆண்டவனே! இந்தச் சோதனை நேரத்தில் என்னுடைய நம்பிக்கையைப் பாதுகாத்தல் உன்னுடைய பொறுப்பு !" என்று முறையிட்டார். அவருடைய உதடுகள் "ராம் ராம் சீதா ராம்" என்று ஜபித்துக் கொண்டிருந்தன. சிறிது நேரம் உலாவிய பிறகு வீட்டுக்குத் திரும்பினார். குழந்தைக்கு எப்படி இருக்கிறதோ, என்னமோ என்று நெஞ்சு கலக்கமுற்றிருந்தது.
வீட்டுக்குள் நுழைந்ததும், "பாபு! வந்து விட்டீர்களா ?" என் று மணிலாலின் குரல் கேட்டது.
"வந்து விட்டேனடா, கண்மணி !" என்று சொல்லிக் கொண்டே போனார்.
"உடம்பு பற்றி எரிகிறது. துணியையும் கம்பளியையும் எடுத்து விடுங்கள்."
"குழந்தாய் ! உடம்பு வியர்த்து விட்டிருக்கிறதா?"
"வியர்வை வெள்ளத்தில் முழுகி யிருக்கிறேன். சீக்கிரம் எடுங்கள்."
குழந்தையின் நெற்றியைக் காந்திஜி தொட்டுப் பார்த்தார். முத்து முத்தாய் வியர்வை துளித்திருந்தது ; சுரமும் குறைந்திருந்தது. காந்திஜி ஆண்டவனுக்கு இதய பூர்வமான நன்றி செலுத்தினார்.
"மணிலால் ! சுரம் இனி நிச்சயமாய்க் குணமாகிவிடும். இன்னும் சிறிது வியர்க்கட்டும்"
"அப்பா! இனி ஒரு நிமிஷமும் இந்த உலைக்களத்தில் என்னால் இருக்கமுடியாது. தயவு செய்து உடனே எடுத்து விடுங்கள். வேண்டுமானால் மறுபடியும் துணி சுற்றிக் கொள்ளலாம்."
பேச்சுக் கொடுத்துக்கொண்டே இன்னும் சில நிமிஷம் வைத்திருந்தார். நெற்றியிலிருந்து வியர்வை வழிந்து அருவியாக ஓடிற்று. பிறகு கம்பளிகளையும் ஈரத் துணியையும் எடுத்து விட்டு உடம்பைத் துடைத்தார்.
மணிலால் தூக்கம் வருகிறது என்றான். காந்திஜிக்கும் தூக்கம் வந்தது. தந்தையும் மகனும் ஒரே படுக்கையில் படுத்துத் தூங்கி விட்டார்கள்.
மறுநாள் காலையில் சுரம் நிரம்பக் குறைந்திருந்தது. ஆனாலும் அடியோடு போகவில்லை. பாலும் பழரசமும் மட்டும் அருந்திக் கொண்டு மணிலால் நாற்பது நாள் படுக்கையில் இருக்கவேண்டி யிருந்தது. ஆயினும் அன்றிரவு சுரம் கட்டுக்குள் வந்து விட்டபடியால் காந்திஜிக்குக் கவலையும் பயமும் இல்லாமற் போயிற்று.
"இன்று என் புதல்வர்களுக்குள்ளே மணிலாலே அதிக தேகாரோக்கியத்தோடு இருக்கிறான். அவன் அந்தக் கண்டத்திலிருந்து தப்பி உயிர் பிழைத்ததற்குக் காரணம் ஜல சிகிச்சையா, ஜாக்கிரதையாக நீர் உணவே கொடுத்துப் பணிவிடை செய்து வந்ததா, அல்லது ஆண்டவனுடைய கருணைதானா என்று யார் நிச்சயமாய்ச் சொல்ல முடியும் ? ஒவ்வொருவரும் தத்தம் நம்பிக்கைக்கு ஏற்ப முடிவு செய்து கொள்ளட்டும். என் வரையில், கருணாமூர்த்தியான ஆண்டவனுடைய அருள் மகிமைதான் மணிலாலுடைய உயிரை ரட்சித்து என்னையும் ஒரு பெரும் சோதனையிலிருந்து காப்பாற்றியது என்று இன்றைக்கும் நம்பி வருகிறேன்!" என்பதாகக் காந்தி மகான் தம் சுய சரிதத்தில் எழுதியுள்ளார்.
-----------
39. சேம்பர்லின் பேட்டி
பம்பாயைச் சேர்ந்த ஸாந்தாகிரஸ் என்னும் பகுதியில் சுகாதார வசதியுள்ள ஒரு பங்களாவைக் காந்திஜி வாடகைக்கு அமர்த்தினார். நிலையாகப் பம்பாயில் தங்கி பாரிஸ்டர் தொழில் நடத்துவது என்று உத்தேசித்து வாழ்க்கை தொடங்கினார். பாரிஸ்டர் தொழிலில் நல்ல வருமானமும் வரத்தொடங்கியது.
இதற்கிடையில் ஸ்ரீ கோகலே காந்திஜியை மறந்து விட வில்லை. எப்படியாவது இந்தியாவின் பொது வாழ்க்கையில் காந்திஜியை ஈடுபடச் செய்துவிட வேண்டு மென்று கோகலே எண்ணங் கொண்டிருந்தார். இது காரணமாக வாரத்திற்கு இரண்டு மூன்று தடவை கோகலே காந்திஜியின் பாரிஸ்டர் ஆபீசுக்கு வருவது வழக்கமாயிற்று. மற்றும் சில அரசியல் நண்பர்களையும் சில சமயம் கோகலே அழைத்துக் கொண்டு வருவார். இந்தியாவில் அரசியல் தொண்டு செய்யும் முறைகளைப் பற்றித் திட்டங்கள் போட்டு விவாதிப்பார்கள்.
ஆனால் காந்திஜியைப் பற்றி இறைவனுடைய திட்டம் வேறுவிதமாக இருந்தது. தென்னாப்பிரிக்கா இந்தியர்கள் அவரை விடுகிற வழியாக இல்லை. "சேம்பர்லின் இங்கு வருகிறார். தயவு செய்து உடனே தாங்கள் வந்து சேரவேண்டும்" என்று தந்தி அடித்தார்கள்.
சேம்பர்லின் பிரிட்டிஷ் அரசாங்கத்தில் அப்போது குடியேற்றநாட்டு மந்திரியாயிருந்தார். அவர் தென்னாப்பிரிக்கா வரும் சமயம் இந்தியர்களின் குறைகளை எடுத்துச் சொல்லி நிவர்த்திக்கும்படி கேட்பது அவசியம் அல்லவா ? அதற்குக் காந்திஜி இல்லாவிட்டால் யார் வழி காட்டுவார்கள் ?
தென்னாப்பிரிக்கா இந்தியர்களுடைய அன்பையும் நம்பிக்கையையும் காந்திஜி புறக்கணிக்க முடியவில்லை. ஆதலின் அவர்களுடைய கோரிக்கையை நிறைவேற்றத் தீர்மானித்தார். சீக்கிரம் திரும்பி வந்து விடலாம் என்ற எண்ணத்துடன் பம்பாய் வீட்டைக் காலி செய்யாமல் அதிலேயே குடும்பத்தை இருக்கச் செய்து விட்டுப் புறப்பட்டார். புறப்படும்போது தமக்குத் தெரிந்த இளைஞர்கள் சிலரையும் அழைத்துச் சென்றார். அந்த இளைஞர்களில் ஸ்ரீ மகன்லால் காந்தி ஒருவர். பின்னால் காந்திஜியின் சத்தியப் போராட்டங்களில் அவருக்குப் பெரிதும் உதவியாயிருந்தவர்களில் ஸ்ரீ மகன்லாலும் ஒருவர்.
இவ்விதம் 1903-ம் வருஷத்தில் மூன்றாவது தடவையாகக் காந்திஜி தென்னாப்பிரிக்கா சேர்ந்தார். (இந்த முறை அவர் அங்கேயே நீடித்து இருக்கவேண்டியதாயிற்று. இதன் காரணத்தைப் பின்னால் பார்ப்போம்.) காந்திஜி டர்பன் நகரை அடைந்தது மிகவும் சரியான தருணமாயிருந்தது. டர்பன் இந்தியர்கள் சேம்பர்லினைப் பேட்டி காண்பதற்கு அனுமதி கேட்டுப் பெற்றுக் கொண்டிருந்தார்கள். தேதியும் குறிப்பிட்டாகி விட்டது. காந்திஜி போனதும் சேம்பர்லினிடம் சமர்ப்பிப்பதற்கு ஒரு விஞ்ஞாபனம் தயார் செய்தார். இந்தியப் பிரதி நிதிக் கூட்டத்துக்குத் தலைமை வகித்துச் சேம்பர்லினைப் பேட்டி காண்பதற்குச் சென்றார்.
ஆனால் பிரதிநிதிக் கூட்டம் அடைந்தது ஏமாற்றந்தான். சேம்பர்லின் தென்னாப்பிரிக்காவுக்கு ஒரு முக்கிய நோக்கத்துடன் வந்திருந்தார். போயர் யுத்தத்தின் போது அங்கே டச்சுக்காரர்களுக்கும் இங்கிலீஷ்க்காரர்களுக்கும் மனஸ்தாபம் முற்றியிருந்தது. அதைப் போக்கி இருசாராரையும் சமரசப் படுத்துவதற்கும் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தில் பக்தி கொள்ளும் படிச் செய்வதற்காகவும் சேம்பர்லின் வந்திருந்தார்.
போயர் யுத்தம் முடிந்தவுடனே தென்னாப்பிரிக்கா வெள்ளைக்காரர்களுக்குப் பூரண குடியேற்ற நாட்டுச் சுதந்திரம் பிரிட்டிஷ் சர்க்கார் அளித்து விட்டார்கள். இதைக் குறிப்பிட்டு மிஸ்டர் சேம்பர்லின் இந்தியப் பிரதிநிதி கோஷ்டிக்குப் பதில் சொன்னார். "சுயாட்சி பெற்ற குடியேற்ற நாடுகளின் மீது பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு அதிகாரம் எதுவும் கிடையாது. நீங்கள் குறிப்பிட்டிருக்கும் குறைகள் உண்மையென்றே தோன்றுகின்றன. அவற்றை நிவர்த்திக்க முயன்று பார்க்கிறேன். ஆனால் நான் அதிகமாக ஒன்றும் செய்வதற்கில்லை. இங்குள்ள ஐரோப்பியர்களின் மத்தியில் நீங்கள் வசிப்பதற்கு விரும்பினால் அவர்களுடைய சிநேகத்தைப் பெற முயற்சிக்க வேண்டும்" என்று சேம்பர்லின் கூறினார்.
இதைக் கேட்டதும் இந்தியப் பிரதிநிதிகளின் உற்சாக மெல்லாம் பறந்து விட்டது. காந்திஜியும் ஏமாற்ற மடைந்தார். தென்னாப்பிரிக்கா இந்தியர்களின் உரிமைக்காகத் தீவிரமாகப் போராட வேண்டுமென்றும், இல்லாவிடில் 'வல்லான் வகுத்ததே வாய்க்கால்' என்பது போல் தென்னாப்பிரிக்கா வெள் ளைக்காரர் வைத்ததே சட்டமாகிவிடும் என்றும், இந்தியர் பாடு அதோகதியாகி விடும் என்றும் காந்திஜிக்குத் தோன்றியது. இதைத் தம் சகாக்களிடமும் தெரிவித்தார்.
மிஸ்டர் சேம்பர்லின் நேட்டாலிலிருந்து டிரான்ஸ்வாலுக்குப் போக எண்ணி யிருந்தார். இதை யறிந்த காந்திஜி தாமும் முன்னதாகவே டிரான்ஸ்வாலுக்குப் போக விரும்பினார். டிரான்ஸ்வால் இந்தியர்களும் தங்கள் சார்பாக விண்ணப்பம் எழுதிச் சேம்பர்லினிடம் கொடுப்பதற்குக் காந்திஜியை எதிர் பார்த்தார்கள். ஆனால் நேட்டாலிலிருந்து காந்திஜி டிரான்ஸ் வாலுக்குப் போகச் சட்டத் தடைகள் குறுக்கிட்டன.
போயர் யுத்தம் காரணமாக டிரான்ஸ்வால் மாகாணம் வனாந்தரம் போல் ஆகியிருந்தது. அங்கே போதிய உணவுப் பொருள்களும் துணிமணிகளும் கிடைப்பது அரிதாகி யிருந்தது. இது காரணமாக டிரான்ஸ்வாலுக்குள் வருவோர் ஒவ்வொரு வரும் அநுமதிச் சீட்டுப் பெற வேண்டும் என்று ஏற்படுத்தி யிருந்தார்கள். முன்னம் டிரான்ஸ்வாலில் வசித்தவர்களுக்கும் இந்த விதியை வற்புறுத்தினார்கள். அநுமதிச் சீட்டு ஐரோப்பியர்களுக்கு எளிதில் கிடைத்தது. இந்தியர்களுக்கு இலேசில் கிடைப்பதாயில்லை.
இதற்கிடையில் 'ஆசியாக்காரர் இலாக்கா' என்று ஒரு புது இலாக்கா ஏற்பட்டிருந்தது. போயர் யுத்தத்தின்போது இந்தியாவிலிருந்தும் இலங்கையிலிருந்தும் இராணுவத்தைச் சேர்ந்த வெள்ளைக்காரர் பலர் தென்னாப்பிரிக்காவுக்கு வந்திருந்தார்கள். அவர்களில் அநேகர் தென்னாப்பிரிக்காவிலேயே தங்கிவிட விரும்பினார்கள், இவர்களுக்கு ஏதாவது உத்தியோகம் கொடுக்க வேண்டும் அல்லவா? அதற்காக ஒரு புது இலாக்கா சிருஷ்டி செய்யப்பட்டது. இதற்கு 'ஆசியாக்காரர் இலாக்கா' என்று பெயர். காந்திஜி இந்தியாவிலிருந்து இந்தத் தடவை தென்னாப்பிரிக்கா திரும்புவதற்குள் ஆசியாக்காரர் இலாக்காவின் ஆதிக்கம் பரவி வேரூன்றி விட்டது. ஆசியாக்காரர் யாராவது டிரான்ஸ்வாலுக்குள் பிரவேசிக்க விரும்பினால் மேற்படி இலாக்காவின் மூலமாகவே விண்ணப்பம் செய்ய வேண்டும் என்று ஏற்பட்டிருந்தது.
இந்தியர்கள் விண்ணப்பம் செய்தால் இலேசில் அநுமதிச் சீட்டு கிடைப்பதில்லை. பதில் வருவதற்கு மாதக் கணக்கில் தாமதம் ஆயிற்று. அநுமதிச் சீட்டு வாங்கித் தருவதற்குத் தரகர்கள் ஏற்பட்டார்கள். தரகர்களும் உத்தியோகஸ்தர்களுமாகச் சேர்ந்து ஏழை இந்தியர்களைக் கொள்ளை யடித்தார்கள். சில சமயம் 100 பவுன் வரையில் அநுமதிச் சீட்டுக்காகச் செலவு செய்ய வேண்டி யிருந்தது.
இதை யெல்லாம் காந்திஜி அறிந்த போது மேற்படி இலாக்கா மூலம் அநுமதிச் சீட்டுப் பெறும் எண்ணத்தைக் கைவிட்டார். டர்பன் போலீஸ் தலைவர் மிஸ்டர் அலெக்ஸாண்டர் காந்திஜியின் பழைய நண்பர் அல்லவா? அவரிடம் சென் றார், "நான் ஏற்கெனவே டிரான்ஸ்வாலில் வசித்தவன் என்பது தங்களுக்குத் தெரியுமே? அங்கே நான் போக வேண்டும். எனக்கு அநுமதிச் சீட்டு வாங்கித் தர வேண்டும்" என்று கேட்டார். அவர் உடனே காந்திஜியுடன் புறப்பட்டு வந்து தமது செல்வாக்கை உபயோகித்து அநுமதிச் சீட்டு வாங்கிக் கொடுத்தார். ரயிலுக்கு ஒரு மணி நேரந்தான் பாக்கி யிருந்தது. சாமான்களைக் கட்டித் தயாராய் வைத்திருந்தபடியால் காந்திஜி அவசரமாகச் சென்று ரயில் ஏறினார். பிரிட்டோரியாவுக்குப் போய்ச் சேர்ந்தார்.
ஆசியாக்காரர் இலாக்காவின் கிளைக் காரியாலயம் பிரிட்டோரியாவிலும் இருந்தது. காந்திஜி எப்படி அநுமதிச் சீட்டுப் பெற்று டிரான்ஸ்வாலுக்குள் வந்தார் என்பது அந்த இலாக்கா அதிகாரிகளுக்கு வியப்பை அளித்தது. ஒரு வேளை அநுமதி யில்லாமலே வந்திருப்பாரோ, அப்படியானால் கைது செய்து விடலாம் என்று எண்ணினார்கள். டர்பனுக்குத் தந்தி கொடுத்துக் கேட்டார்கள். அநுமதிச் சீட்டுப் பெற்றே வந்திருக்கிறார் என்று அறிந்ததும் ஏமாற்றமடைந்தார்கள். ஆனால் அத்துடன் சும்மா விடுவார்களா ? காந்திஜி எதற்காக வந்தாரோ, அந்த நோக்கம் நிறைவேறாமல் செய்து விடுவதென்று கங்கணம் கட்டிக் கொண்டார்கள்.
பிரிட்டோரியாவில் சேம்பர்லினைப் பேட்டி காண இந்தியர் அநுமதி கேட்டிருந்தார்கள் அல்லவா ? பிரதிநிதிக் கூட்டத்தில் யார் யார் இருப்பார்கள் என்று முன்ன தாகவே ஜாபிதா கொடுக்க வேண்டுமென்று மேற்படி இலாக்கா அதிகாரிகள் கேட்டார்கள். அவ்விதமே காந்திஜியின் பெயரும் சேர்த்துக் கொடுக்கப்பட்டது. உடனே மேற்படி இலாக்கா தலைமை அதிகாரி தம்மை வந்து சந்திக்கும்படி இந்தியத் தலைவர்களுக்கு எழுதினார். தயாப் சேத் ஹாஜி கானும் காந்திஜியும் இன்னும் சிலரும் போனார்கள். ஆசிய இலாக்காவின் தலைமை அதிகாரி இலங்கையிலிருந்து வந்திருந்த ஐரோப்பியர். அவர் வெகு கடுமையாக, "இந்தக் காந்தி யார்? இவரை எதற்காகப் பிரதிநிதிக் கூட்டத்தில் சேர்த்திருக்கிறீர்கள்?" என்று கேட்டார்.
"இவர் எங்களுக்கு யோசனை சொல்லி உதவும் நண்பர். நாங்கள் அழைத்துத்தான் வந்திருக்கிறார்" என்றார் தயாப் சேத்.
"நாங்கள் எதற்காக இங்கே இருக்கிறோம் ? உங்களைப் பாதுகாப்பதற்காகத் தானே இருக்கிறோம் ? இவ்விடத்து நிலைமை இந்தியாவிலிருந்து வந்த காந்திக்கு என்ன தெரியும் ? இவரைப் பிரதிநிதிக் கூட்டத்தில் சேர்க்க முடியாது!" என்று கண்டிப்பாகச் சொல்லிவிட்டு, காந்திஜியைப் பார்த்து, -"நீர் வைத்திருக்கும் அநுமதிச் சீட்டு உமக்குத் தவறாகக் கொடுக்கப்பட்டது. இங்கே குடியேறிய இந்தியராக உம்மைக் கருத முடியாது. பிரதிநிதிக் கூட்டத்திலும் உம்மைச் சேர்க்க முடியாது. நீர் போகலாம்" என்று கூறினார்.
மேற்கொண்டு பதில் சொல்வதற்கே மேற்படி அதிகாரி அநுமதிக்கவில்லை. எல்லாரும் எரிச்சலுடன் திரும்பினார்கள்.
மேற்படி அவமதிப்பினால் காந்திஜியின் மனம் துடி துடித்தது. ஆயினும் அவர் நிதானத்தை இழந்துவிட வில்லை. இந்த நிலைமையில் என்ன செய்வது என்று யோசித்தார்.
காந்திஜியை அநுமதிக்காவிட்டால் பிரதிநிதிக் கூட்டமே போக வேண்டியதில்லை யென்று மற்றவர்கள் சொன்னார்கள். இதைக் காந்திஜி விரும்பவில்லை. "எழுதவேண்டிய விண்ணப்பத்தை நான் எழுதித் தயாரித்து விடுகிறேன். நீங்கள் கொண்டு போய்ச் சேம்பர்லினிடம் கொடுத்துவிட்டு வாருங்கள் ! மற்ற விஷயங்கள் பிறகு பார்த்துக் கொள்வோம்" என்றார்.
காந்திஜி வற்புறுத்தியதின் பேரில் இந்திய பாரிஸ்டர் ஜார்ஜ் காட்பீரே என்பவரின் தலைமையில் பிரதிநிதிக் கூட்டம் சென் றது. சேம்பர்லினைப் பார்த்துவிட்டு வந்தது. பயன் ஒன் றும் இல்லை.
"நீங்கள் சொன்னதின் பேரில் தானே நாங்கள் போயர் யுத்தத்தின் போது இவர்களுக்கு உதவி செய்தோம் ? அதன் பயனைப் பார்த்தீர்களா?" என்று நண்பர்கள் வருந்தினார்கள்.
"அப்போது நான் அவ்விதம் யோசனை கூறியதற்காக வருந்தவில்லை. போயர் யுத்தத்தின் போது நாம் உதவி செய்தது சரி. அச்சமயம் நம்முடைய கடமை அது. இப்போது. நம்முடைய கடமை என்னவோ அதை யோசித்துச் செய்ய வேண்டும்" என்றார் காந்திஜி.
தம்முடைய கடமை என்ன வென்பதைப் பற்றிக் காந்திஜி அந்த க்ஷணமே முடிவுக்கு வந்தார். இந்தியாவுக்குத் திரும்பு வது பற்றி யோசிப்பதில் பயனில்லை. முன்னே நேட்டாலில் தங்கி இந்தியர்களுக்காகப் போராடியது போல் இப்போது டிரான்ஸ்வாலில் தங்கிப் போராடுவது தம் கடமை என்று தீர்மானித்தார். முக்கியமாக, ஆசிய இலாக்கா என்னும் புதிய அபாயத்தை எதிர்த்துப் போராட வேண்டும். இல்லாவிட்டால் தென்னாப்பிரிக்காவிலுள்ள இந்தியர்கள் எல்லாரையுமே கொள்ளையடித்து அந்த நாட்டை விட்டும் துரத்திவிடுவார்கள்.
காந்திஜி தம் முடிவைத் தெரிவித்ததும் அங்கிருந்த இந்திய நண்பர்கள் மிக்க ஆனந்தம் அடைந்தார்கள். ஒரு விதத்தில் ஆசிய இலாக்கா அதிகாரி செய்த அநீதி நல்லதாய்ப் போயிற்று என் றும் எண்ணினார்கள். அதன் காரணமாகத்தானே காந்திஜி
டிரான்ஸ்வாலில் தங்குவதென்று தீர்மானித்துள்ளார் ?
காந்திஜி ஜோகானிஸ்பர்க்கில் இருந்த ஹைகோர்ட்டில் பாரிஸ்டர் தொழில் தொடங்குவது என்று நிச்சயமாயிற்று. நல்ல வேளையாக ஜோகானிஸ்பர்க் வக்கீல் சங்கத்தார் காந்திஜியின் மனுவை ஆக்ஷேபிக்கவில்லை. மிஸ்டர் ரிச் என்னும் பிரபல வியாபாரியின் உதவியினால் ஜோகானிஸ்பர்க்கில் வக்கீல்கள் வசித்த பகுதியில் ஒரு நல்ல வீடு கிடைத்தது. காந்திஜி அதில் தங்கி பாரிஸ்டர் தொழில் ஆரம்பித்தார்.
----------
40. லஞ்சப் பேய்
ஜோகானிஸ்பர்க்கில் தங்கி வக்கீல் தொழில் நடத்த ஆரம்பித்தவுடனேயே காந்திஜி ஆசிய இலாகாவைக் கவனிக்க ஆரம்பித்தார். அந்த இலாகாவின் தலைமை ஸ்தானம் ஜோகானிஸ்பர்க் நகரந்தான். ஆசிய இலாகாவின் உத்தியோகஸ்தர்கள் இந்தியர்கள் - சீனர்கள் முதலிய ஆசியாக்காரர்களைக் கசக்கிப் பிழிந்து கொண்டிருந்தார்கள். இலாகா நிர்வாகத்தில் லஞ்சப் பேய் தாண்டவமாடிக்கொண்டிருந்தது. தினந்தோறும் காந்திஜியிடம் யாரேனும் வந்து முறையிட்டுக் கொண்டிருந்தார்கள். 'டிரான்ஸ்வாலில் ஏற்கெனவே வசித்தவர்களுக்கு இங்கு வர அநுமதிச் சீட்டுக் கிடைப்பதில்லை. உரிமை யில்லாதவர்கள் நூறு பவுன் லஞ்சம் கொடுத்து விட்டு வந்து விடுகிறார்கள். இந்த அநியாயத்துக்குக் கேள்வி முறை யில்லையா ? தாங்கள் தான் பரிகாரம் தேட வேண்டும்!" என்று முறையீடுகள் வந்து குவிந்தன.
இந்த லஞ்சப் பேயைத் தொலைப்பதற்குக் காந்திஜி கங்கணம் கட்டிக் கொண்டார். ஆசிய இலாகாவைத் தூய்மைப்படுத்தினா லன்றித் தாம் ஜோகானிஸ்பர்க்கில் தங்கியதில் பயன் ஒன்றுமில்லை யென்று கருதினார்.
எனவே ஆசிய இலாகாவின் ஊழல்களைப் பற்றிச் சாட்சியங்கள் திரட்ட ஆரம்பித்தார். போதுமான சாட்சியங்கள் கிடைத்ததும் போலீஸ் கமிஷனரிடம் சென்றார். அதிர்ஷ்ட வசமாக, டர்பன் போலீஸ் தலைவரைப் போல் இங்கேயும் போலீஸ் தலைவர் மனச் சாட்சியுள்ள நீதிமானாக இருந்தார். காந்திஜி கூறியதை யெல்லாம் பொறுமையுடன் செவி கொடுத் துக் கேட்டார். சாட்சியங்களைப் பார்த்தும், சாட்சிகளை அழைத்துக் கேட்டும் திருப்தி செய்து கொண்டார். ஆனாலும் அது சம்பந்தமாக வழக்குத் தொடுக்கும் விஷயத்தில் அவருக்கு உற்சாகம் ஏற்படவில்லை.
இதற்குக் காரணம் என்ன வென்றால், தென்னாப்பிரிக்காவில் குற்ற வழக்குகளின் விஷயத்தில் ஜூரி விசாரணை முறை அமுலில் இருந்தது. அதாவது கோர்ட்டுகளில் குற்ற விசாரணை நடக்கும்போது மாஜிஸ்ட்ரேட்டுக்கு உதவி செய்வதற்காக சமூகப் பிரமுகர்களில் சிலர் ஜூரிகளாக நியமிக்கப்படுவார்கள். எதிரி குற்றவாளியா இல்லையா என்று கடைசியில் ஜூரிகள் தங்கள் அபிப்பிராயத்தைத் தெரிவிப்பார்கள். அந்த அபிப்பிராயத்தை யொட்டியே மாஜிஸ்ட்ரேட் தீர்ப்பளிப்பார்.
வெள்ளைக்காரன் மீது வழக்கு நடந்தால் வெள்ளைக்காரர்களே ஜூரிகளாக வருவார்கள். வெள்ளைக்காரர் மீது கறுப்பு மனிதர் தொடரும் வழக்குகளில் வெள்ளைக்கார ஜூரிகள் வெள்ளைக்காரருக்குச் சாதகமாகவே தீர்ப்பச் சொல்வார் ஆகையால் விசாரணையில் நியாயம் கிடைப்பது கடினம் ; வெள்ளைக்காரக் குற்றவாளி தண்டிக்கப் படுவது கடினம்.
ஆயினும் போலீஸ் கமிஷனர் நடவடிக்கை எடுத்துப் பார்ப்பதாகக் கூறினார். "ஜூரிகள் விடுதலை செய்து விடுவார்கள் என்பதற்காக நாம் இப்பேர்ப்பட்டவர்களைச் சும்மா விட்டு விடக் கூடாது. நம்முடைய கடமையை நாம் செய்து விடுவோம், இயன்றவரை முயற்சித்துப் பார்ப்போம்" என்றார்.
ஆசிய இலாகாவைச் சேர்ந்த பல உத்தியோகஸ்தர்கள் லஞ்சக் குற்றத்துக்கு உள்ளாயிருந்தார்கள். ஆனால் அவர்களில் இரண்டு பேர் மீதுதான் சரியான சாட்சியம் இருந்தது. அவர்களுக்குப் போலீஸ் கமிஷனர் வாரண்டு பிறப்பித்தார்.
காந்திஜி அடிக்கடி போலீஸ் கமிஷனரிடம் போய் விட்டு வருவதை ஆசியா இலாகாவின் ஒற்றர்கள் கவனித்து மேற்படி இலாகா உத்தியோகஸ்தர்களுக்குத் தகவல் கொடுத்து வந்தார்கள். ஆகவே வாரண்டு பிறப்பிக்கப்பட்ட செய்தி அறிந்ததும் உத்தியோகஸ்தர்களில் ஒருவர் ஓடி ஒளிந்து விட்டார். வேறு மாகாணத்திலும் செல்லக்கூடிய வாரண்டு பிறப்பித்துப் போலீஸ் கமிஷனர் அவரைப் பிடித்துக் கொண்டு வந்தார். சாங்கோபாங்கமாக விசாரணை நடந்தது. "உத்தியோகஸ்தர் இருவரும் குற்றவாளிகள் என்று நிரூபிப்பதற்கு வேண்டிய சாட்சியங்கள் விடப்பட்டன. ஆயினும் என்ன பயன்? விசாரணை முடிவில் "இருவரும் குற்றவாளிகள் அல்ல" என்று ஜரர்கள் தீர்ப்புக் கூறிவிட்டார்கள். எதிரிகள் விடுதலை அடைந்தார்கள்.
இதனால் காந்திஜி அடைந்த ஏமாற்றத்துக்கு அளவே யில்லை. போலீஸ் கமிஷனரும் வருத்தப்பட்டார். குற்றத்தை மறைப்பதற்கும் குற்றவாளியைத் தப்பித்துக் கொள்ளச் செய்வதற்கும் வக்கீல்கள் தங்கள் புத்தி கூர்மையை உபயோகப் படுத்துவதை இந்த வழக்கில் காந்திஜி கண்டார். இதனால் வக்கீல் தொழிலின் மீதே காந்திஜிக்கு வெறுப்பு ஏற்பட்டது.
* * * *
நீதிக்கு விரோதமாக வழக்கு முடிந்துவிட்ட போதிலும் அதனால் பலன் ஏற்படாமற் போகவில்லை. வழக்கு விசாரணையின் போது அந்த இரு உத்தியோகஸ்தர்கள் விஷயமும் வெட்ட வெளிச்சமாகி விட்டது. அவர்களை அரசாங்கத்தார் மேலும் வேலைக்கு வைத்துக் கொள்ள முடியவில்லை. இருவரும் வேலை யிலிருந்து நீக்கப்பட்டார்கள். இந்திய சமூகம் சிறிது தைரியம் அடைந்தது. காந்திஜியிடம் இந்தியர்கள் முன்னைக்காட்டிலும் அதிக மதிப்புக் கொண்டார்கள். ஆசிய இலாகா உத்தியோகஸ்தர்களுக்கு லஞ்சம் கொடுப்பதில் இந்தியர்கள் செலவு செய்து கொண்டிருந்த பணத்தில் பெரும் பகுதி மிச்சமாயிற்று.
லஞ்சம் வாங்கிய உத்தியோகஸ்தர்களின் விஷயம் அத்துடன் போய் விடவில்லை. அவர்களுக்கு அரசாங்க உத்தியோகம் போய்விட்ட தென்றாலும் ஜீவனத்துக்கு வேறு வேலை சம்பாதித்துக் கொள்ள விரும்பினார்கள். ஜோகானிஸ்பர்க் நகர சபையில் வேலைக்கு முயற்சி செய்தார்கள். அவர்களுக்கு விரோதமாகக் காந்திஜி மேலும் பிரயத்தனம் செய்வதில்லை யென்றால் நகர சபையில் அவர்களுக்கு உத்தியோகம் கிடைக்கும் என்று தோன்றியது. அந்த உத்தியோகஸ்தர்களின் நண்பர் ஒருவர் அது விஷயமாகப் பேசக் காந்திஜியிடம் வந்து அவருடைய உதவியைக் கோரினார். காந்திஜி தாம் குறுக்கே நிற்பதில்லை யென்று வாக்களித்தார். "அவர்களுடைய லஞ்சம் வாங்கும் வழக்கத்தை நிறுத்தவே நான் விரும்பினேன். சொந்த முறையில் அவர்களின் பேரில் எனக்குத் துவேஷம் எதுவும் இல்லை. அவர்கள் வேறு உத்தியோகத்தில் அமர்ந்து கௌரவ மாக ஜீவனம் நடத்துவதற்கு நான் ஏன் குறுக்கே நிற்க வேண்டும்?" என்று கூறினார். இதன்பேரில் மேற்படி மனிதர்கள் இருவருக்கும் நகர சபையில் உத்தியோகம் கிடைத்தது.
காந்திஜியின் பெருங் குணம் இதுதான், தம்பி ! மனிதர்களுடைய தீய செயல்களை எதிர்த்து மகாத்மா வெகு தீவிரமான போராட்டம் நடத்துகிறபோது, அந்த மனிதர்களிடம் அவருக்குத் துவேஷம் இராது. பிற்காலத்தில் காந்திஜி சத்தியாக் கிரஹம் என்னும் ஒப்பற்ற அஹிம்சைப் போராட்ட முறையை உருப்படுத்தியபோது அதற்கு மேற்படி கொள்கையையே அடிப்படையாகக் கொண்டார். காந்தி மகாத்மா சொல்லி யிருக்கிறார்:- "மனிதன் வேறு, அவனுடைய செயல் வேறு என்பதைச் சத்தியாக்கிரஹி நன்கு அறிந்து கொள்ளவேண்டும். நற்செயலைப் பாராட்டுதலும் தீய செயலைக் கண்டித்தலும் முறையாகும். ஆனால் தீய செயல் செய்பவனிடம் இரக்கங் கொள்ள வேண்டுமே தவிர அவனைப் பகைக்கக் கூடாது. சத்தியத் தேட்டத்தின் அடிப்படை இதுதான். இந்த அஹிம்சை முறையைக் கொள்ளாதவரையில் சத்திய தரிசனம் கிட்டாது. ஒருவன் தீய காரியம் செய்தால் அதை எதிர்த்துத் தாக்க வேண்டும். அம்மாதிரியே தீமையை அடிப்படையாகக் கொண்ட ஏற்பாடுகளையும் ஸ்தாபனங்களையும் தாக்கி ஒழிக்க முயல வேண்டும். ஆனால் அதற்குப் பொறுப்பான மனிதர்களை எதிர்த்துத் தாக்குதல் கூடாது. அப்படிச் செய்தல் நம்மை நாமே தாக்கிக் கொள்வதாகும். நாம் எல்லாரும் ஒரே மண்ணில் செய்த பாண்டங்கள் ; ஒரே கடவுளின் புதல்வர்கள். மனிதர் எல்லாரிடத்தும் தெய்வீக சக்திகள் இருக்கின்றன. ஒரு மனித னுக்குத் தீங்கு செய்தால் அது மனித குலத்துக்கே தீங்கு செய்ததாகும். ஒரு மனிதனை அலட்சியம் செய்ததால் தெய்வத்தை அலட்சியம் செய்ததாகும்.'
----------------
41. கஸ்தூரிபாய்த் தெய்வம்
காந்தி மகாத்மா பெரும் பாக்கியம் செய்தவர் ; அதனாலே தான் கஸ்தூரிபாய் அவருடைய வாழ்க்கைத் துணைவியாக வாய்த்தார் என்று சொல்ல வேண்டும். சாதாரணமாக இந்தியப் பெண்மணிகள் மிக்க பொறுமை வாய்ந்தவர்கள். கணவன்மார்களுக்கு இணங்கி நடப்பதற்காக எத்தனையோ கஷ்டங்களைச் சகித்துக் கொள்ளக் கூடியவர்கள். ஆனால் காந்திஜியைப் பதியாகக்கொண்ட பெண்மணிக்குச் சாதாரண ஸ்திரீகளுக்கு உள்ள பொறுமை இருந்தால் போதுமா யிருந்திராது. குடும்ப வாழ்க்கை, சமூக வாழ்க்கை, அரசியல் வாழ்க்கை ஆகியவற்றில் காந்திஜி நடத்திய சோதனைகளுக் கெல்லாம் உடன்பட் டிருப்பதற்கு எல்லையற்ற அசாதாரணப் பொறுமை ஸ்ரீமதி கஸ்தூரிபாய்க்கு இருந்திருக்க வேண்டும்.
காந்தி மகாத்மாவை இந்தியாவின் ஒப்பற்ற தலைவர் என்றும் உலக சிரேஷ்டர் என்றும் பிற்காலத்தில் உலகம் ஒப்புக் கொண்டு கொண்டாடியது. ஆகையால் இக்காலத்தில் நமக்கு "காந்திஜி எவ்வளவு பெரிய மனிதர் ? எப்பேர்ப்பட்ட மகா புருஷர் ? அவரை மணந்து கொண்டது கஸ்தூரிபாயின் பாக்கியம் அல்லவா? அத்தகைய புகழ் வாய்ந்த கணவருக்குக் கஸ்தூரிபாய் ஒத்து நடந்ததில் ஆச்சரியம் என்ன?" என்று தோன்றக் கூடும்.
ஆனால் காந்திஜி வாழ்க்கை தொடங்கிய காலத்திலும் தென்னாப்பிரிக்கா போராட்டத்தை ஆரம்பித்த காலத்திலும் அவர் இவ்வளவு பிரசித்த மடையப்போகிறார், மகாத்மா ஆகப் போகிறார் என்று யாருக்குமே தெரியாதல்லவா ? ஸ்ரீமதி கஸ்தூரி பாய்க்கு அந்த நாளில் "நம்முடைய கணவர் இப்படி ஒரு நிலையாக நில்லாமல் குடும்பத்தைப் பாழாக்குகிறாரே?" என்று தோன்றுவதுதான் இயல்பல்லவா ?
அப்படியிருந்தும் கணவருடைய காரியங்களுக் கெல்லாம் கஸ்தூரிபாய் உடன்பட்டுத்தான் இருந்தார். பல சமயங்களில் அவர்களுக்குள் விவாதங்கள் ஏற்பட்டிருக்கின்றன. காந்திஜியின் சமதர்ம சீர்திருத்த ஆவேசம் கஸ்தூரிபாயைப் பெருந் தொல்லைக்கு ஆளாக்கி யிருக்கிறது. சில சமயம் காந்திஜியைக் கஸ்தூரிபாய் எதிர்த்துப் போராடியதும் உண்டு. ஆயினும் கடைசியாகக் கணவருடைய விருப்பத்தையே முடிவான தீர்ப்பாகக் கொண்டு காரியத்தில் நடந்து கொண்டிருக்கிறார்.
தென்னாப்பிரிக்காவில் காந்திஜி குடித்தனம் நடத்திய காலத்தில் கணவருக்கும் மனைவிக்கும் அத்தகைய போராட்டம் ஒன்று நடைபெற்றது. மிகப் புனிதமான அந்த சம்பவத்தைப் பற்றிக் காந்திஜியின் வாய்மொழியிலேயே நாம் தெரிந்து கொள்வதுதான் உசிதம். அவர் எழுதியுள்ளதை அப்படியே கீழே தந்திருக்கிறேன். அதைப் படிக்கும்போது காந்திஜி உயர்ந்தவரா, கஸ்தூரிபாய் உயர்ந்தவரா என்ற கேள்வி நம் மனத்தில் உதயமாகும். அதைப் பற்றி முடிவு செய்வது அவ்வளவு சுலபமா யிராது.
மேற்படி சம்பவத்தைப் பற்றி, "ஒரு புனித ஞாபகம் " என்ற தலைப்பின் கீழ் காந்திஜி எழுதி யிருக்கிறார் :
"டர்பனில் வக்கீல் தொழில் நடத்திக் கொண்டிருந்த போது என்னுடைய காரியாலய குமாஸ்தாக்கள் பெரும்பாலும் என்னுடன் தங்கி இருப்பது வழக்கம். அவர்களில் ஹிந்துக்களும், கிறிஸ்தவர்களும், குஜராத்திகளும், தமிழர்களும் இருந்தனர். அவர்களை என் குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக நடத்தி வந்தேன். இதற்கு என் மனைவி எப்போதேனும் குறுக்கே நின்றால் அப்போது எங்களுக்குள் மனஸ்தாபம் ஏற்படும்.
என்னுடைய வீடு மேனாட்டு முறையில் கட்டப்பட்டிருந்தது. ஆதலின் அதன் அறைகளிலிருந்து அழுக்குத் தண்ணீர் வெளியே போவதற்குச் சாக்கடைகள் அமைக்கப்படவில்லை. அறைகளில் இவ்வாறு சாக்கடை வைத்தல் கூடாது தான். எனவே, ஒவ்வோர் அறையிலும் அழுக்கு நீர்ப்பாண்டம் ஒன்று வைக்கப்பட்டிருந்தது. இப்பாண்டங்களைச் சுத்தம் செய்வதற்கு வேலைக்காரன் வைப்பதற்குப் பதிலாக நானும், என் மனைவியுமே அவற்றைச் சுத்தம் செய்து வந்தோம். வீட்டில் கொஞ்ச காலம் இருந்து பழகிவிட்ட குமாஸ்தாக்கள், அவரவர்கள் உபயோகித்த பாண்டங்களை அவரவர்களே சுத்தம் செய்து வந்தார்கள், இங்ஙனமிருக்கையில் புதிதாக ஒரு கிறிஸ்தவ குமாஸ்தா வந்து சேர்ந்தார். அவருடைய பெற்றோர்கள் தீண்டா வகுப்பினர். புதிதாக வந்தவராதலின் அவருடைய படுக்கை யறையைச் சுத்தம் செய்தல் எங்களுடைய கடமையா யிருந்தது. என் மனைவி, மற்றவர்களுடைய பாண்டங்களைச் சுத்தம் செய்வதில் எவ்வித ஆட்சேபமும் கூறியது கிடையாது. ஆனால் தீண்டாதார் ஒருவரின் பாண்டத்தைச் சுத்தம் செய்ய வேண்டி வந்தபோது அவளால் பொறுக்க முடியாமல் போயிற்று. இதன் பயனாக எங்களுக்குள் மனஸ்தாபம் விளைந்தது. நான் பாண்டங்களைச் சுத்தம் செய்வதும் அவளால் சகிக்க முடியவில்லை. அவளுக்கும் செய்யப் பிரியமில்லை. கோபத்தினால் சிவந்த கண்களிலிருந்து கண்ணீர் தாரை தாரை யாகப் பெருக அந்தக் கோபப் பார்வையினாலேயே என்னைக் கடிந்தவளாய்க் கையில் பாண்டத்துடன் அவள் ஏணியின் வழியே இறங்கி வந்த காட்சி இப்போதும் என் மனக்கண் முன் நிற்கிறது.
என் மனைவியிடம் நான் வைத்திருந்த அன்பு மிகக் குரூரமான வகையைச் சேர்ந்தது. என்னை அவளுடைய உபாத்தியாயனாகக் கருதி யிருந்தேன். எனவே அவளிடம் எனக்கிருந்த குருட்டுத்தனமான அன்பின் காரணமாக அவளைப் பெரிதும் உபத்திரவப் படுத்தி வந்தேன்.
அவள் பாண்டத்தைத் தூக்கிச் சென்றதனாலேயே நான் திருப்தி யடையவில்லை. அதை அவள் சந்தோஷத்துடனே செய்ய வேண்டும் என்று விரும்பினேன். எனவே, உரத்த சத்தம் போட்டு, "என்னுடைய வீட்டில் இம்மாதிரி மூடத்தனத்தைப் பொறுக்க முடியாது" என்றேன்.
அம்மொழிகள் கூரிய அம்புகளைப்போல் அவளுடைய இதயத்தில் தைத்தன.
' உங்கள் வீட்டை நீங்களே வைத்துக்கொண்டு என்னைத் தொலைத்து விடுங்கள்" என்று அவள் கூச்சலிட்டாள். அப்போது என்னை நானே மறந்து விட்டேன். என் இதயத்திலிருந்த இரக்க ஊற்று வற்றிப் போயிற்று. அவளுடைய கையைப் பிடித்து ஏணிக்கு எதிரே இருந்த வாயிற்படிக்கு, இழுத்துக் கொண்டு போனேன். வெளியே தள்ளுவதற்காகக் கதவைத் திறந்தேன்.
அவள் கன்னங்களின் வழியாய்க் கண்ணீர் தாரை தாரையாய் வழிந்து கொண்டிருந்தது. அவள் கூறியதாவது: 'உங்களுக்கு வெட்கமில்லையா? இப்படிச் சுய உணர்வு போய் விட வேண்டுமா ? எனக்குப் போக்கிட மெங்கே ? தஞ்சமளிப்பதற்கு இங்கு என் பெற்றோர்களாவது, உறவினர்களாவது. இருக்கிறார்களா? நீங்கள் என்னை உதைத்தாலும் நான் பொறுத்துக் கொள்ள வேண்டியதுதான். ஆண்டவன் ஆணை ! கதவைச் சாத்துங்கள். யாராவது சிரிக்கப் போகிறார்கள் !' என்றாள்.
வெளிக்குக் காட்டிக்கொள்ளவில்லை யாயினும் உள்ளுக்குள் மிகவும் வெட்கப்பட்டேன். கதவைச் சாத்தினேன். என் மனைவி என்னை விட்டு எங்கும் போவதற்கில்லை என்றால், நானும் அவளை விட்டுப் பிரிய முடியாது. நாங்கள் எத்தனையோ சண்டை போட்டிருக்கிறோமாயினும், முடிவில் சமாதானம் அடைந்து விடுவோம். அளவற்ற பொறுமை யுடையவளாதலால் என் மனைவியே வெற்றி யடைவாள்.
இன்றைய தினம் பாரபட்சமின்றி மேற்படி நிகழ்ச்சியை நான் கூறக் கூடியவனா-யிருக்கிறேன். இந்தப் புனித நிகழ்ச்சியை நான் கூறியதிலிருந்து தற்போது நானும் என் மனைவியும் தம்பதிகளுக்கு இலக்கியமாயிருப்பதாக யாரும் முடிவு செய்ய வேண்டாம். எங்களுக்குள் பூரண லட்சிய ஒற்றுமை இப் போதும் இல்லை. ஸ்ரீமதி கஸ்தூரிபாய்க்குத் தனியே ஏதேனும் இலட்சியங்கள் உண்டாவென் று ஒருகால் அவளுக்கே தெரியாம லிருக்கலாம்.
ஆனால் கஸ்தூரிபாயிடம் ஓர் அருங்குணம் இருக்கிறது. ஹிந்து மனைவிமார் பெரும்பாலோரிடம் இக்குணம் உண் டென்று சொல்லலாம். அது யாதெனில் விருப்பத்துடனோ விருப்ப மின்றியோ, அறிந்தோ, அறியாமலோ, என் அடிச்சுவட் டைப் பின்பற்றி நடப்பதால் அவள் மேன்மையுறலாம் என்று கருதி வந்திருக்கிறாள். புலனடக்கத்துடன் வாழ்க்கை நடத்த நான் செய்த முயற்சிகளுக்கு அவள் எப்போதும் குறுக்கே நின் றது கிடையாது. ஆதலின் எங்களுடைய அபிப்பிராயங்களில் மிக்க வேற்றுமை இருந்தபோதிலும், எங்களுடைய வாழ்க்கை எப்போதும் திருப்தியும் மகிழ்ச்சியும் வளர்ச்சியும் உடையதாய் இருந்து வந்திருக்கிறது."
------------
42. 'கூலிச் சேரி 'யில் கொள்ளை நோய்
இந்தியா தேசத்தில் ஹிந்துக்களாகிய நாம், சமூகத்துக்குச் சிறந்த தொண்டு செய்துவரும் சில வகுப்பாரைத் தீண்டாதார் என்று ஒதுக்கித் தனிப்பட்ட சேரிகளில் வசிக்கும்படி செய்து வந்திருக்கிறோமல்லவா ? இந்தக் கர்மத்தின் பலனைத் தென்னாப்பிரிக்காவில் எல்லா இந்தியர்களுமே அநுபவிக்கும்படி நேர்ந்தது. அந்த நாட்டில் இந்தியர்கள் எல்லாரும் பொதுவாகக் 'கூலிகள்' என்று அழைக்கப் பட்டார்கள். இந்தியாவில் 'தீண்டாதார்' என்பதற்கு என்ன பொருளோ அதே பொருள் : தென்னாப்பிரிக்காவில் 'கூலிகள்' என்பதற்கு ஏற்பட்டிருந்தது. தீண்டாதாருக்கு இந்தியாவில் தனியாகச் சேரிகள் ஏற்பட்டிருப்பதுபோல் தென்னாப்பிரிக்காவில் 'கூலிகள்' என்று சொல்லப்பட்ட இந்தியர்கள் வசிப்பதற்குத் தனிப்பட்ட பகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்தன. அவை 'கூலிச் சேரிகள் ' என்று பெயர் பெற்றிருந்தன.
டிரான்ஸ்வாலின் தலைநகரமான ஜோகானிஸ்பர்க்கில் இந்தியர் வசித்த 'கூலிச் சேரி' ஒன்று இருந்தது. அந்தக் கூலிச் சேரியிலும் இந்தியர் சொந்தமாக நிலம் வாங்கிக்கொள்ள முடியாது. அதில் வசித்த இந்தியர்கள் குடியிருப்பு நிலத்தை ஜோகானிஸ்பர்க் நகர சபையாரிடமிருந்து 99 வருஷக் குத்தகைக்குப் பெற்றிருந்தார்கள், ஜனத்தொகைப் பெருக்கத்துக்குத் தகுந்தாற்போல் சேரியின் விஸ்தீரணம் அதிகரிக்கவில்லை. எனவே மிக நெருக்கடியில் இந்தியர்கள் வசித்து வந்தார்கள். சுகாதார வசதிகளுக்கு நகர சபையார் தக்க ஏற்பாடு செய்ய வில்லை. நல்ல சாலைகள் இல்லை ; விளக்குகள் போடவில்லை. அங்கு வசித்த இந்தியர்கள் பெரும்பாலும் கல்வியறிவில்லாத ஏழைத் தொழிலாளி வகுப்பைச் சேர்ந்தவர்கள். அவர்கள் சுகாதார விதிகளை அறிந்திருக்க-வில்லை. இந்தியர்களின் அறியாமையும் நகர சபையின் அசட்டையும் சேர்ந்து மேற்படி ’கூலிச்சேரி'யைச் சுகாதாரக் கேடான நரகமாகச் செய்திருந்தன. நகர சபையார் தங்களுடைய அசட்டையினால் நேர்ந் திருந்த இந்தத் தீமையை நிவர்த்திக்க முயல்வதற்குப் பதிலாக, அதையே காரணமாகக் கொண்டு இந்தியர்களை அவ்விட மிருந்தே விரட்டிவிட யத்தனித்தார்கள். இந்தியர்கள் 99 வருஷக் குத்தகைக்குப் பெற்றிருந்த நிலத்தைப் பெயருக்கு நஷ்ட ஈடு என்று கொடுத்து பறித்துக் கொள்ளத் தொடங்கினார்கள்.
நகரசபை நிர்ணயிக்கும் நஷ்ட ஈட்டுப் பணத்தை ஒப்புக் கொள்ளத் தயாராயில்லாத இந்தியர்கள் 'அப்பீல் செய்து' கொள்ள ஏற்பாடு இருந்தது. இதற்காக விசேஷக் கோர்ட்டு ஒன்று நியமிக்கப்பட்டது. இந்தக் கோர்ட்டில் இந்தியர்கள் பலர் அப்பீல் செய்து கொண்டார்கள். அவர்களுக்காகக் காந்திஜி ஆஜராகிப் பேசினார். வழக்குகள் ஜெயித்தாலும் தோற்றாலும் பத்து பவுனுக்குமேல் 'பீஸ் ' பெற்றுக்கொள்வதில்லை யென்றும், அத்தொகையிலும் பாதியை ஏழை இந்தியர்களின் உதவிக்கு ஒதுக்கி வைப்பதென்றும், காந்திஜி தீர்மானித்தார்.
மொத்தம் எழுபது வழக்குகளில் காந்திஜி ஆஜரானார். அவற்றில் ஒரு வழக்குதான் தோல்வி யடைந்தது. மற்றவை ஜயித்தன. இந்த வழக்குகளில் காந்திஜி இரவு பகல் கஷ்டப்பட்டு உழைத்தார். இதனால் ஏழை இந்தியர்களின் அன்புக்குப் பெரிதும் பாத்திரமானார். அதே சமயத்தில் வருமானமும் நிறையக் கிடைத்தது. ஆனால் அப்போது காந்திஜி தென் னாப்பிரிக்கா இந்தியர்களின் உரிமைகளை வற்புறுத்துவதற்காக "இண்டியன் ஒபீனியன் " என்ற பத்திரிகையை ஆரம்பித்திருந் தார். ஆரம்ப நாட்களில் பத்திரிகை நடத்துவதில் ஏராளமான நஷ்டம் ஏற்பட்டு வந்தது. அந்த நஷ்டத்தை யெல்லாம் காந்திஜி தம் சொந்த வருமானத்திலிருந்தே ஈடு செய்தார். மொத்தம் 1600 பவுன் வரையில் காந்திஜி மேற்படி பத்திரிகை யின் நஷ்டத்தைச் சரிக்கட்டக் கொடுத்ததாகத் தமது சுய சரித்திரத்தில் குறிப்பிட்டிருக்கிறார். இந்தப் பண நஷ்டத்தை யெல்லாம் ஈடு செய்யுமாறு இந்திய சமூகத்தின் அன்பைக் காந்திஜி பெற்று வந்தார்.
அதற்கு அறிகுறியாக எல்லா இந்தியர்களும் அவரைப் ’பாய் என்று அழைக்கத் தொடங்கினார்கள். 'பாய்' என்ற ஹிந்தி வார்த்தைக்கு ' அண்ணா' என்று பொருள். இவ்விதம் தம் மோடு தென்னாப்பிரிக்கா இந்தியர்கள் எல்லாரும் உறவு உரிமை கொண்டாடியது காந்திஜிக்கு மிக்க மகிழ்ச்சி தந்தது.
இந்தியர் வசித்த கூலிச் சேரி முழுதும் நகர சபைக்குச் சொந்தமாகிவிட்டது. ஆனாலும் அவர்களுக்கு வேறு இடம் கண்டு பிடித்துக் கொடுக்கும் வரையில் அங்கேயே வசிக்கும் படி விட்டு வைக்க நேர்ந்தது. இது காரணமாகச் சுகாதாரக் கேடு மேலும் அதிகமாயிற்று. வீடும் நிலமும் சொந்தமாயிருந்த வரையில் இந்தியர்கள் ஓரள வா வது சுத்தப்படுத்தி வந்தார்கள். நகர சபைக்குச் சொந்தமான பிறகு அதுவும் போயிற்று. நகர சபையும் சுகாதாரத்துக்காக ஏற்பாடு எதுவும் செய்யவில்லை.
இத்தகைய கேவலமான நிலைமையில் கூலிச் சேரி இருந்த போது ஒரு பெரிய விபத்து ஏற்பட்டது. ஜோகானிஸ்பர்க்கில் அருகில் இருந்த தங்கச் சுரங்கம் ஒன்றில் கருமகாமாரி (Black Plague) என்னும் பயங்கரக் கொள்ளை நோய் ஆரம்பித்தது. சுரங்கத்தில் வேலை செய்தவர்கள் பெரும்பாலும் நீக்ரோக்கள். சில இந்தியர்களும் அங்கே வேலை செய்து கொண்டிருந்தனர். இவர்களில் 23 பேரைத் திடீரென்று ஒரு நாள் கருமகாமாரி பற்றியது. அவர்கள் கூலிச்சேரியில் தங்கள் இருப்பிடத்துக்கு வந்து சேர்ந்தனர். காந்திஜியின் சகாக்களில் ஒருவரான ஸ்ரீ மதன் ஜித் என்பவர் 'இண்டியன் ஒபீனியன்' பத்திரிகைக்குச் சந்தா வசூலிப்பதற்காக அன்று அங்கே தற்செயலாகப் போயிருந்தார். கொள்ளை நோயினால் பீடிக்கப்பட்ட மனிதர்களை அவர் பார்த்தார். உடனே காந்திஜிக்கு ஒரு குறிப்பு எழுதி அனுப்பினார் :- "இங்கே கருமகாமாரி தோன்றியிருக்கிறது. உடனே தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் இந்திய சமூகம் பெரும் விபத்துக்கு உள்ளாகும். தயவு செய்து உடனே புறப்பட்டு வாருங்கள்."
இவ்விதம் காந்திஜிக்கு எழுதி அனுப்பிவிட்டு ஸ்ரீ மதன் ஜித் காலியாயிருந்த ஒரு வீட்டின் பூட்டை உடைத்துத் திறந்தார். நோயாளிகளை யெல்லாம் அந்த வீட்டில் வந்து இருக்கும்படி செய்தார். இதற்குள் காந்திஜியும் சைக்கிள் வண்டியில் ஏறித் துரிதமாக வந்து சேர்ந்தார். ஜோகானிஸ்பர்க்கில் வைத்தியத் தொழில் செய்து கொண்டிருந்த டாக்டர் வில்லியம் காட்பிரே என் னும் இந்தியக் கிறிஸ்துவரும் மேற்படி செய்தியைக் கேட்டு விரைந்து வந்தார். இந்த மூன்று பேருமாக நோயாளிகளுக்குப் பணிவிடை செய்யத் தொடங்கினார்கள். ஆனால் அவ்வளவு நோயாளிகளையும் கவனித்துக்கொள்ள மூன்று பேர் போத வில்லை. காந்திஜியின் காரியாலயத்தில் அப்போது நாலு இந்திய இளைஞர்கள் வேலை செய்துகொண்டிருந்தனர். கல்யாண் தாஸ், மானக்லால், குன் வந்தராய் ஆகிய மூவரையும் இன்னொருவரை பயும் நோயாளிகளுக்குத் தொண்டு செய்யச் சம்மதமா என்று காந்திஜி கேட்டார். அது பெரிய அபாயகரமான காரியம் என்றும் உயிரை இழக்கவும் நேரிடலாம் என்றும் காந்திஜி சொன்னார். நால்வரும் சிறிதும் தயங்காமல் ஒப்புக்கொண்டார்கள். ”தாங்கள் எங்கே இருக்கிறீர்களோ அங்கே நாங்களும் இருப்போம் !" என்று பதில் தந்தார்கள். அந்தக் காலத்திலேயே காந்திஜியின் செல்வாக்குக்கு உட்பட்டவர்கள் சகல பரித் தியாகங்களையும் செய்வதற்கு தயாராகி யிருந்தார்கள்.
இரவெல்லாம் கண் விழித்து மேற்சொன்ன ஏழு பேரும் நோயாளிகளுக்குப் பணிவிடை செய்து வந்தார்கள். அவ்வப் போது மருந்து கொடுத்தார்கள். நோயாளிகளையும் அவர்களுடைய படுக்கைகளையும் அடிக்கடி சுத்தம் செய்தார்கள். நோயாளிகளுக்குத் தைரியம் கூறி உற்சாகப்படுத்தி வந்தார்கள்.
காலி வீட்டைப் பூட்டை உடைத்துத் திறந்தது பற்றி நகர சபைக்கு உடனே காந்திஜி எழுதி விட்டார். அதற்குப் பதிலும் வந்தது. நகரசபைக் காரியஸ்தர் காந்திஜிக்கும் அவருடைய சகாக்களுக்கும் சமயத்தில் சரியான காரியம் செய்த தற்காக நன்றி செலுத்தினார். மறுநாள் நகர சபையின் உத்தரவுப்படி காலியாயிருந்த கிடங்கு ஒன்று காந்திஜியிடம் ஒப்புவிக்கப் பட்டது. நோயாளிகளை அந்தக் கிடங்குக்கு மாற்ற வேண்டும் என்று உத்தரவும் பிறந்தது. ஆனால் நோயாளிகளுக்கு வேண்டிய வசதி ஒன்றும் அங்கே இல்லை. அசுத்தமாயிருந்த அந்த கிடங்கைக் காந்திஜியும் அவருடைய சகாக்களும் சுத்தப் படுத்தினார்கள். சில படுக்கைகளையும் வைத்திய சாதனங்களையும் சம்பாதித்துக் கொண்டு வந்தார்கள்.
நகர சபையார் அனுப்பிய ஒரு தாதியும் வந்து சேர்ந்தாள். தாதி அன்பு உள்ளம் கொண்டவள். நோயாளிகளுக்குத் தானே பணிவிடை செய்வதாகச் சொன்னாள். ஆனால் நோயாளிகளை அவள் தொடும்படியே மற்றவர்கள் விடவில்லை.
'கருமகாமாரி’க்குப் பிராந்தி ஒரு மருந்து என்று கருதப்பட் டது. நோயாளிகளுக்கு அடிக்கடி கொடுக்க வேண்டும் என் றும் பணிவிடை செய்கிறவர்களும் அடிக்கடி பிராந்தி சாப்பிட வேண்டும் என்றும் சொல்லப்பட்டது. தாதி அவ்விதமே அடிக்கடி பிராந்தி குடித்துக் கொண்டிருந்தாள். ஆனால் காந்திஜி முதலியோர் பிராந்தியைத் தொடவில்லை.
நோயாளிகளில் மூன்றுபேர் பிராந்தி குடிக்காமல் சிகிச்சை பெற இணங்கினார்கள். அவர்களுக்குக் காந்திஜி தலையிலும் மார்பிலும் ஈர மண்ணை வைத்துக் கட்டினார். மூன்று பேரில் இருவர் பிழைத்தார்கள். ஒருவர் இறந்து விட்டார். வழக்கமான சிகிச்சை பெற்ற இருபது பேரும் மாண்டு போனார்கள்.
இதற்கிடையில் நகரசபையார் ஜோகானிஸ்பர்க்குக்கு ஏழு மைல் தூரத்தில் ஓர் இடத்தைக் குறிப்பிட்டுத் தொற்று நோயாளிகளை அங்கே கொண்டு போக வேண்டும் என்றார்கள். இறந்தவர்கள் போக உயிரோடிருந்த இருவரும் அங்கே கொண்டு போய்ச் சேர்க்கப் பட்டனர். புதிதாக யாருக்காவது நோய் கண்டால் அவர்களையும் உடனே அவ்விடத்துக்கு அனுப்ப ஏற் பாடு செய்யப் பட்டது.
பாவம் ! பிராந்தி குடித்துத் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள விரும்பிய தாதி கொள்ளை நோயினால் பீடிக்கப்பட்டு இறந்து போனாள். காந்திஜியையும் அவருடைய சகாக்களையும் தொற்றுநோய் பீடிக்கவில்லை. இதிலிருந்து பிராந்தியை மருந்தாகச் சில சமயங்களில் உபயோகப்படுத்துவது முழுத் தவறு என்ற முடிவுக்குக் காந்திஜி வந்தார்; ஈர மண் சிகிச்சையில் அவருடைய நம்பிக்கையும் அதிகமாயிற்று.
நோயாளிகளின் பொறுப்புத் தீர்ந்த பிற்பாடும், காந்திஜிக்கு வேறு ஒரு பெரிய பொறுப்பு ஏற்பட்டது. ”கூலிச் சேரி” விஷயத்தில் ஏற்கெனவே அலட்சியமாக இருந்த நகரசபையார் கருமகாமாரி நோய் வந்த பிறகு, அது வெள்ளைக்காரர்களையும் பற்றி விடக்கூடாதே என்று மிகவும் கவலை காட்டினார்கள் ; தாராளமாகப் பணமும் செலவழித்தார்கள். மேற்படி கொள்ளை நோயை அடியோடு ஒழிப்பதற்குக் கூலிச் சேரியை முழுதும் எரித்துவிட வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. இதற்காக இந்தியர்கள் எல்லாரையும் அங்கிருந்து வெளியேற்ற வேண்டியிருந்தது. காந்திஜியின் உதவி யில்லா விட்டால் இந்த வேலை மிகவும் கஷ்டமாய்ப் போயிருக்கும். ஆனால் காந்திஜி பொது நலத்தை முன்னிட்டு அதிகாரிகளுடன் ஒத்துழைக்க முன் வந்தார். கூலிச் சேரியில் வசித்த இந்தியர்கள் அனைவரும் ஜோகானிஸ்பர்க்குக்கு பதின் மூன்று மைல் தூரத்தில் இருந்த திறந்த வெளியில் சென்று இருபத்தோரு நாள் வசிக்க வேண்டும் என்றும், எல்லாரும் புறப்பட்டுச் சென்ற பிறகு கூலிச் சேரியை எரித்துவிட வேண்டும் என்றும் ஏற்பாடு. வெகு நாளாக வசித்த இடத்திலிருந்து ஜனங்களைக் கிளப்புவது இலேசான காரியமா? தாங்கள் கிளம்புவதுடன் உணவுப் பொருள்களையும் மற்றும் அவசியமான சாமான்களையும் எடுத்துப்போக வேண்டும். அதிக உபயோகமில்லாத தட்டுமுட்டுச் சாமான்களை அக்கினி பகவானுக்கு இரையாகும்படி விட்டுவிட்டுப் போக வேண்டும். எவ்வளவு பயனற்ற சாமான்களாயிருந்த போதிலும் பல காலமாகச் சேர்த்து வைத்திருந்தவர்களுக்கு அவற்றை விட்டுப் போக மனம் வராதல்லவா ?-போகிற இடத்திலாவது வீடு வாசல் உண்டா ? திறந்த வெளியில் மூன்று வாரம் வசிக்கவேண்டும். ஆயினும் காந்திஜியும் அவருடைய சகாக்களும் கேட்டுக் கொண்டதின் பேரில் கூலிச்சேரியில் இருந்த அவ்வளவு இந்தியர்களும் புறப்படச் சித்தமானார்கள். ஆனால் ஒரு விஷயத்தில் அவர்களுக்குக் கவலை ஏற்பட்டது.
அவரவர்களும் வெகுகாலமாகப் பாடுபட்டுத் தேடி ஏதோ கொஞ்சம் பணம் மீத்து வைத்திருந்தார்கள். பணத்தைப் பாங்கியில் போடுவதென்பது அந்த ஏழைத் தொழிலாளிகளுக்குத் தெரியவே தெரியாது. அவரவர்கள் வசித்த குடிசையில் தரையைத் தோண்டிப் புதைத்து வைத்திருந்தார்கள். மேற்படி சிறு தொகைகளை யெல்லாம் என்ன செய்வது என்பது பற்றிக் கவலை உண்டாயிற்று. திறந்த வெளியில் வசிக்கப் போகும் இடத்துக்குப் பணத்தைக் கொண்டு போக அவர்களுக்கு மனம் இல்லை. திருட்டுப் போய்விட்டால் என்ன செய்கிறது ? காந்திஜியிடம் இது விஷயமாக முறையிட்டார்கள். "பாங்கியில் போடுங்கள்!" என்று காந்திஜி சொன்னார். "எங்களுக்குப் பாங்கியில் போடத் தெரியாது. போட்டால் திரும்பி வருமோ என்னமோ, யார் கண்டது ? பாங்கியின் பக்கம் போவதே எங்களுக்குக் கஷ்டம்!" என்றார்கள். அவர்களில் ஒருவர், "உங்களிடமே கொடுத்து வைக்கிறோம்; நீங்கள் வைத்திருந்து திருப்பிக் கொடுங்கள்" என்றார். எல்லா இந்தியர்களும் அப்படியே சொன்னார்கள். "உங்களிடம் பணம் இருந்தால் எங்களுக்குக் கவலையில்லை" என்றார்கள். அந்த ஏழைத் தொழிலாளிகள் தம்மிடத்தில் காட்டிய நம்பிக்கை காந்தி மகாத்மாவின் உள்ளத்தை உருக்கியது. அவர்களுடைய பாங்கியாக இருந்து உதவ ஒப்புக் கொண்டார். இது சாதாரண விஷயமல்ல. நூற்றுக்கணக்கான இந்தியர்கள் தங்களுடைய சேமிப்புப் பணத்தைக் கொண்டுவந்து கொடுத்தார்கள். பெரும்பாலும் செப்புக் காசுகளும் வெள்ளி நாணயங் களுமாக வந்து குவிந்தன. இவற்றை யெல்லாம் எண்ணி எடுத்துக் கொண்டு அவரவர்கள் பேரில் கணக்கு எழுதவேண்டும். அவ்வளவு நாணயங்களையும் காந்திஜி என்ன செய்ய முடியும் ? தம்முடைய பெயரில் பாங்கிக்குத் தான் அனுப்பவேண்டும். பிளேக் நோய்ப் பகுதியிலிருந்து வந்தவை யென்று பாங்கிக்காரர்கள் எடுக்க மறுத்து விடக் கூடும். பாங்க் மானேஜரிடம் பேசிக் காந்திஜி சரிக்கட்டினார். நாணயங்களை யெல்லாம் மருந்து ஜலம் விட்டுச் சுத்தம் செய்து பாங்கிக்கு அனுப்பினார். இவ்விதம் இந்தியர்கள் சிறிது சிறிதாகச் சேர்த்து வைத்திருந்த தொகைகள் சேர்ந்து மொத்தம் அறுபதினாயிரம் பவுன் காந்திஜியிடம் ஒப்படைக்கப்பட்டது. அவ்வளவையும் பாங்கியில் பத்திரப்படுத்தி, சரியாகக் கணக்கு வைத்திருந்து, பிற்பாடு காந்திஜி திருப்பிக் கொடுத்தார் !
பிற்காலத்தில் காந்திஜி இந்தியாவில் பல பொதுக்காரியங்களுக்குப் பணம் வசூல் செய்தார். ஜோகானிஸ்பர்க்கில் ஏழை இந்தியர்கள் காந்திஜியிடம் எப்படிப் பூரண நம்பிக்கை வைத்திருந்தார்களோ அப்படியே இந்தியர்கள் எல்லாரும் அவரிடம் நம்பிக்கைக் காட்டினார்கள். பல காரியங்களுக்கு லட்சக்கணக்கான தொகை கொடுத்தார்கள். அவ்வளவையும் இந்திய ஏழை மக்களின் பணமாகவே காந்திஜி கருதிப் பத்திரப்படுத்தி அந்த ஏழை மக்களுக்கே பயன்படும் முறையில் உபயோகப் படுத்தினார். நிற்க.
'கூலிச் சேரி’யில் இந்தியர் அனைவரும் தனி ரயில் வண்டிகளில் ஏற்றப்பட்டு நகரத்துக்கு பதின் மூன்று மைல் தூரத்தி லிருந்த கிளிப்ஸ் கேட் பண்ணைக்குக் கொண்டுபோகப் பட்டார்கள். அங்கே கூடாரங்கள் சில போடப்பட்டிருந்தன. திறந்த வெளியிலும் கூடாரங்களிலும் வசித்துப் பழக்கமில்லாதவர்களாதலால் இந்தியர்கள் முதலில் கஷ்டப்பட்டார்கள். இருபத்துநாலு மணி நேரத்துக்குள் அவர்கள் தங்கள் தொல்லைகளை மறந்து குதூகலமா யிருக்கத் தொடங்கினார்கள். ஒவ்வொரு நாளும் காந்திஜி சைக்கிளில் அங்கே சென்று அவர்களுடைய சுக துக்கங்களை விசாரித்து விட்டு வந்தார். இது அவர்களுடைய கவலையைப் போக்குவதற்கு உதவியாயிருந்தது. சில நாளைக்கெல்லாம் அவர்கள் ஆடிப்பாடிச் சிரித்துக் களிக்கத் தொடங்கி விட்டார்கள். மூன்று வாரம் திறந்த வெளியில் வசித்ததால் அவர்களுடைய தேக ஆரோக்கியமும் அபிவிருத்தி யடைந்தது.
இந்தியர்கள் காலி செய்து விட்டுப் போன மறுநாளே கூலிச் சேரிக்குத் தீ வைக்கப் பட்டது. இதே சமயத்தில் நகர சபையின் மார்க்கெட்டில் செத்த எலி விழுந்தது காரணமாக மார்க்கெட்டும் கொளுத்தப்பட்டது. நகரசபைக்குப் பத்தாயிரம் பவுனுக்கு மேல் நஷ்டமாயிற்று. ஆயினும் நகரத்தில் கொள்ளை நோய் மேலும் பரவாமல் தடுக்கப்பட்டது.
-----------
43. போனிக்ஸ் பண்ணை
தென்னாப்பிரிக்காவில் காந்திஜி வசித்த காலத்தில் சில சிறந்த ஆங்கில நண்பர்கள் அவருக்குக் கிடைத்தார்கள். அவர்களில் ஒருவர் மிஸ்டர் வெஸ்ட்; இன்னொருவர் மிஸ்டர் போலக். இந்த இரண்டு பேரும் ஜோகானிஸ்பர்க்கில் இருந்த சைவ போஜன சாலையில் காந்திஜிக்குப் பழக்கமானவர்கள்.
இவர்களுள் முதலில் சிநேகமானவர் மிஸ்டர் வெஸ்ட். இவரும் காந்திஜியும் தினந்தோறும் மாலையில் சைவ போஜன சாலையில் சந்திப்பது வழக்கம். கொள்ளை நோய்க்காரர்களுக்குப் பணிவிடை செய்ய ஆரம்பித்ததிலிருந்து காந்திஜி மேற்படி சைவ போஜன சாலைக்குப் போகவில்லை; தம் மூலமாகத் தொற்றுநோய் மற்றவர்களிடம் பரவாமலிருக்கும் பொருட்டுத் தான். ஆனால் காந்திஜி வராதது பற்றி மிஸ்டர் வெஸ்ட் கவலை கொண்டார். ஒரு நாள் அதிகாலையில் காந்திஜியின் வீட்டுக்கு வந்து கதவை இடித்தார். அப்போது காந்திஜி வெளியில் உலாவப் புறப்பட்டுக் கொண்டிருந்தார். இருவரும் நடந்து கொண்டே சம்பாஷித்தனர்.
காந்திஜி கொள்ளை நோய்க்காரர்களுக்குப் பணிவிடை செய்து கொண்டிருப்பதாய் அறிந்த மிஸ்டர் வெஸ்ட், "நானும் உங்களுடன் வந்து நோயாளிகளுக்குத் தொண்டு செய்ய விரும்புகிறேன். என்னை நம்பி வாழ்க்கை நடத்துகிறவர்கள் யாரும் இல்லை என்பதுதான் உங்களுக்குத் தெரியுமே?” என்றார்.
"ஆனாலும் உங்களை நான் அபாயத்துக்கு உட்படுத்தப் போவதில்லை. இரண்டொரு நாளில் எங்களுக்கே அந்த வேலை யில்லாமற் போய்விடும். ஆனால் முக்கியமான வேறு வேலை யொன்று இருக்கிறது. அதை நீங்கள் செய்கிறதா யிருந்தால் சொல்கிறேன் " என்றார் காந்திஜி.
"பேஷாகச் செய்கிறேன். சொல்லுங்கள் ! " என்றார் மிஸ்டர் வெஸ்ட்.
"நேட்டாலில் இந்தியருக்காக ”இண்டியன் ஒபீனியன் " என்னும் பத்திரிகை நடத்தி வருகிறோம் அல்லவா ? பத்திரிகையையும் பத்திரிகை அச்சடிக்கும் அச்சுக் கூடத்தையும் பார்த்துக்கொள்ள ஒருவர் தேவை. இதுவரை ஸ்ரீ மதன் ஜித் அந்தப் பொருப்பை வகித்து வந்தார். இப்போது அவருக்கு இங்கே வேலை இருக்கிறது. நீங்கள் போக முடியுமா ?"
ஜோகானிஸ்பர்க்கில் இருந்த ஓர் அச்சுக் கூடத்துக்கு மிஸ்டர் வெஸ்ட் பாதி சொந்தக்காரர். அச்சுக்கூட அனுபவம் அவருக்கு இருந்தது. சொந்தக் காரியத்தை விட்டு விட்டு டர்பனுக்குப் போகச் சம்மதித்தார். மறுநாளே பிரயாணமானார். அன்று முதல் காந்திஜி தென்னாபிரிக்காவில் இருந்த வரையில் காந்திஜியின் சுக துக்கங்களில் எல்லாம் வெஸ்டும் பங்காளியாயிருந்து வந்தார்.
'கூலிச் சேரி' விஷயமாகவும் கருமகாமாரி விஷயமாகவும் ஜோகானிஸ்பர்க் நகர சபையார் அலட்சியமாயிருந்ததைக் கண்டித்துக் காந்திஜி பத்திரிகைகளுக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். 'கிரிடிக்' என்னும் பத்திரிகையில் உதவி ஆசிரியராயிருந்த மிஸ்டர் போலக் மேற்படி கடிதத்தைப் படித்தார். படித்த உடனே அந்தக் கடிதம் எழுதிய காந்திஜியை நேரில் சந்திக்க வேணும் என்ற விருப்பம் அவருக்கு உண்டாயிற்று.
ஒருநாள் மாலை காந்திஜியைச் சைவ போஜன சாலையில் சந்தித்துப் பேசினார். காந்திஜியிடம் அவருடைய மதிப்பு அதிக மாயிற்று. வாழ்க்கையைப் பற்றிய இருவருடைய கொள்கை களும் ஒத்திருந்தன. போலக் எளிய வாழ்க்கையில் பற்றுக் கொண்டவர். புத்தி ஒப்புக் கொள்ளும் எந்தக் காரியத்தையும் நடத்தையில் கடைப் பிடிக்கும் உறுதி கொண்டவர். காந்திஜி மேற்கொள்ளும் பொதுக் காரியங்களில் அவருடன் தாமும் ஒத்துழைக்க விரும்புவதாக மிஸ்டர் போலக் கூறினார்.
இதற்கிடையில் டர்பனுக்குச் சென்றிருந்த மிஸ்டர் வெஸ்ட் ஒரு கடிதம் எழுதியிருந்தார். அது 'இந்தியன் ஒபீனியன்' பத்திரிகையையும் அச்சுக் கூடத்தையும் பற்றிக் கவலை உண்டாக்குவதா யிருந்தது.
"தாங்கள் எதிர்பார்க்கிறபடி லாபம் வராது ; நஷ்டம் வரலாம். கணக்குகள் ஒழுங்கில்லை. நிலுவை பாக்கி ஏராளம். ஆனால் சரியான விவரம் இல்லை. என்னாலியன்ற வரையில் நிலைமையைச் சீர்ப்படுத்த முயல்கிறேன்" என்பது மிஸ்டர் வெஸ்ட் கடிதத்தின் சாராம்சம்.
இதைப் படித்தவுடனே காந்திஜி டர்பனுக்கு நேரில் போக விரும்பினார். இது வரையில் பிறர் பேச்சை நம்பி ஏமாந்து போனோம் என்று உணர்ந்தார். டர்பனுக்குப் பிரயாணப் பட்டார்,
காந்திஜியை ரயிலில் ஏற்றி அனுப்புவதற்கு வந்த மிஸ்டர் போலக் கையில் ஒரு புத்தகம் கொண்டு வந்திருந்தார். ரஸ்கின் என் னும் பிரசித்த ஆங்கில அறிஞர் எழுதிய “Unto this Last” என்னும் புத்தகம் அது. பிரயாணத்தின் போது படிப்பதற்காக அந்தப் புத்தகத்தைக் கொடுத்தார். காந்திஜி அதைப் படிக்கத் தொடங்கிய பிறகு நிறுத்தவே யில்லை. காந்திஜியின் மனப் போக்கை அது பிரதிபலித்தது. மனித வாழ்க்கையின் இலட்சியங்கள் எப்படி யிருக்க வேண்டும் என்று தெளிவுபடுத்திக் கூறியது. பின் வரும் சித்தாந்தங்கள் முக்கியமாக அந்த நூலில் கூறப்பட்டிருந்தன :
1. மனிதனின் நன்மை சர்வஜன நன்மையில் அடங்கியது.
2. வக்கீலின் உழைப்பும், நாவிதனுடைய உழைப்பும் ஒரே பெறுமான முள்ளவைதான். ஏனெனில் அனைவருக்கும் தங்கள் உழைப்பினால் ஜீவனோபாயம் சம்பாதிக்கும் உரிமை சமமாக உண்டு.
3. உடலை உழைத்து வாழும் வாழ்வே, அதாவது குடியானவனுடைய அல்லது கைத்தொழிலாளியின் வாழ்க்கையே மேன்மையான வாழ்க்கையாகும்.
முதல் இரு சித்தாந்தங்களையும் பற்றிக் காந்திஜி ஏற்கனவே நன்கு அறிந்திருந்தார். ஆனால் மூன்றாவது கொள்கை அவருக்குப் புதிதாக இருந்தது. ஆயினும் அது உண்மை, - மிக முக்கியமான உண்மை - என்பது இப்போது நன்கு தெளிவாயிற்று. அந்தக் கொள்கைக்கு இணங்கத் தம் வாழ்க்கையைச் செப்பனிடுவது பற்றிச் சிந்திக்கத் தொடங்கினார். அன்றிரவெல்லாம் ரயில் பிரயாணத்தின்போது தூங்காமல் சிந்தனை செய்து கொண்டிருந்தார். சிந்தனை டர்பன் நகரம் போய்ச் சேர்ந்தவுடனே காரியமாக உருக்கொண்டது.
ரஸ்கின் புத்தகத்தினால் தம் மனோநிலையில் ஏற்பட்ட மாறுதலைப் பற்றிக் காந்திஜி மிஸ்டர் வெஸ்டுக்குச் சொன்னார்.
"நாம் எல்லாரும் ஒரு விவசாயப் பண்ணைக்குப் போய்ப் புதிய வாழ்வு தொடங்க வேண்டும். அச்சுக்கூடத்தை நம்முடன் கொண்டுபோய் விடுவோம். விவசாய வேலை செய்து ஒழிந்த வேளைகளில் அச்சுக்கூட வேலையைப் பார்ப்போம். பண்ணையில் வசிப்பவர்கள் எல்லாரும் சமமாக மாதம் மூன்று பவுன் சம்பளம் வாங்கிக் கொள்வோம்" என்றார் காந்திஜி. மிஸ்டர் வெஸ்ட் உடனே உற்சாகமாகச் சம்மதித்து விட்டார். ஆனால் அச்சுக்கூடத்தில் வேலை செய்த பன்னிரண்டு தொழிலாளிகளும் என்ன செய்வார்கள்? அவர்கள் மேற்படித் திட்டத்தின் கீழ் வேலை செய்யச் சம்மதிப்பார்களா ?
அச்சுக்கூடத் தொழிலாளிகளோடு காந்திஜி கலந்து பேசினார். அவர்களில் இயந்திர வேலைக்காரரான கோவிந்தசாமி என்னும் தமிழர் மட்டும் அந்த யோசனைக்கு முழுதும் இணங்கினார். மற்றவர்கள் அச்சுக்கூடம் எங்கே போனாலும் அங்கே தாங்களும் வருவதாகவும், ஆனால் வழக்கம்போல் சம்பளம் கொடுக்கவேண்டும் என்றும் சொன்னார்கள்.
உடனே காந்திஜி "டர்பனுக்குச் சுற்றுப் புறத்தில் ஏதேனும் ஒரு ரயில்வே நிலையத்தை யடுத்த இடத்தில் நிலம் விலைக்குத் தேவை" என்று பத்திரிகைகளில் விளம்பரம் செய்தார். போனிக்ஸ் ஸ்டேஷனுக்குச் சமீபத்தில் நிலம் விற்பனைக்குக் கிடைக்கும் என்று பதில் கிடைத்தது. டர்பனிலிருந்து போனிக்ஸ் 13 மைல். காந்திஜியும் மிஸ்டர் வெஸ்டும் நிலத்தைப் போய்ப் பார்த்தார்கள். நிலம் அவர்களுக்குப் பிடித்திருந்தது. முதலில் இருபது ஏக்கரா நிலமும் பிறகு எண்பது ஏக்கரா கிலமும் வாங்கினார்கள். வாங்கிய நிலத்தில் ஒரு இனிய நீர் ஊற்றும் சில மாமரங்களும் ஆரஞ்சுச் செடிகளும் இருந்தன.
போனிக்ஸ் திட்டத்தைப் பற்றிக் கேள்விப்பட்ட காந்திஜியின் நண்பர் ஸ்ரீ ரஸ்டம் ஜி உற்சாகத்துடன் உதவி செய்ய முன் வந்தார். ஒரு பெரிய கிடங்குக்குக் கூரை போடப்பட்டிருந்த தகரத் தகடுகளையும் மற்றும் கட்டிட சாமான்களையும் கொடுத்தார். போயர் யுத்தத்தின்போது காந்திஜியுடன் தொண்டு செய்த சில தச்சர்களும் கொத்தர்களும் போனிக்ஸுக்கு வந்து அச்சுக்கூடம் வைப்பதற்குக் கொட்டகை போட்டுக் கொடுத்தார்கள். எல்லாரும் உற்சாகத்துடன் வேலை செய்தபடியால் 76 அடி நீளமும் 50 அடி அகலமும் உள்ள தகரக் கொட்டகை ஒரே மாதத்தில் கட்டி முடிந்து விட்டது.
அந்தப் பிரதேசத்தில் ஏராளமாக அடர்ந்த புல் முளைத்துப் பரவிக் கிடந்தது. பாம்புகள் தாராளமாக அந்தப் புல் புதர் களில் குடிபுகுந்து வசித்து வந்தன. அதுவரையில் அங்கே மனித சஞ்சாரமே கிடையாது. கூடாரம் போட்டுக் கொண்டு அங்கு வசித்த காந்திஜியும் தச்சர், கொத்தர் முதலிய தொழி லாளிகளும் மிக்க அபாயத்துக்கு உட்பட்டிருந்தார்கள்.
கொட்டகை கட்டி முடிந்ததும் டர்பனிலிருந்த அச்சுக் கூடம் போனிக்ஸுக்குக் கொண்டு வரப்பட்டது. புதிய இடத்துக்கு வந்த பிறகு இண்டியன் ஒபீனியன்' முதல் இதழ் அச்சிடுவதில் ஒரு பெரும் நெருக்கடி ஏற்பட்டது.
அந்த நெருக்கடி பற்றியும் அது தீர்ந்த விதத்தைப் பற்றியும் மகாத்மாவின் வாய் மொழியாகவே தெரிந்து கொள்வோம் :
ஆரம்பத்தில், பத்திரிகை வெளியாவதற்கு முந்தின இரவுகளில் நாங்கள் எல்லாரும் கண் விழித்து வேலை செய்ய வேண்டியிருந்தது. இளைஞர், விருத்தர் அனைவரும் பத்திரிகை மடிப். பதில் உதவி செய்வார்கள். இரவு பத்து மணியிலிருந்து நடு நிசிக்குள் வேலை முடிவது வழக்கம்.
ஆனால் முதல் இதழ் வெளியாக வேண்டிய தினத்துக்கு முன்னிரவு நாங்கள் பெற்ற அநுபவம் என்றும் மறக்கக் கூடாத தொன்றாகும். அச்சுக் கோத்து முடிந்து இயந்திரத்தில் பொருத் தியாகி விட்டது. ஆனால் என்ஜின் வேலை செய்யவில்லை. என்ஜினை அமைத்து ஓட்டித் தருவதற்கு டர்பனிலிருந்து என்ஜினியரை வரவழைத்திருந்தோம். அவரும் வெஸ்டும் தங்களால் இயன்றவரை பார்த்ததும் என்ஜினை ஓடச் செய்ய முடியவில்லை. வெஸ்ட் துக்கத்தில் ஆழ்ந்தவராய்க் கண்ணில் நீர் ததும்ப என்னிடம் வந்து, "என்ஜின் ஓடவில்லை; நாளை பத்திரிகை வெளிவராது" என்றார். அவருக்குச் சமாதானமாக நான் கூறியதாவது:
' அதற்கு நாம் என்ன செய்யலாம் ? கண்ணீர் விடுவதில் பயனில்லை. மனிதப் பிரயத்தனத்தில் ஆகக்கூடிய தெல்லாம் செய்து பார்த்து விடுவோம். கைச் சக்கரத்தின் விஷய மென்ன ?
"கைச் சக்கரம் இருக்கிறது. அதைச் சுற்ற ஆட்களுக்கு எங்கே போவது ? நம்மால் முடியும் காரியமல்ல. நான்கு, பேராய் மாற்றி மாற்றிச் சுற்ற வேண்டும். நமது ஆட்களோ ஏற்கனவே களைத்துப் போயிருக்கிறார்கள்" என்றார் வெஸ்ட்.
கட்டிட வேலை இன்னும் முழுதும் முடியவில்லை. ஆதலின் தச்சர்கள் எங்களுடன் இருந்தார்கள். அவர்கள் அச்சுக்கூடத் திலே படுத்து தங்கினார்கள். அவர்களைச் சுட்டிக் காட்டி, ’இந்தத் தச்சர்களை நாம் உபயோகப்படுத்திக் கொள்ளக் கூடாதா ? அவர்களும் சேர்ந்தால் இரவு முழுதும் நாம் வேலை செய்யலாம். இந்த உபாயம் ஒன்று பாக்கி யிருக்கிறதே!' என்றேன் நான்.
"தச்சர்களை எழுப்ப எனக்குத் துணிவில்லை. நமது ஆட்களோ களைத்துப் போயிருக்கிறார்கள்" என்றார் வெஸ்ட்,
"அந்தக் கவலை உங்களுக்கு வேண்டாம்; அவர்களுடன் பேசி முடிப்பதற்கு நான் இருக்கிறேன்" என்றேன்.
“ அப்படியானால் வேலை நடந்து விடும்" என்றார் வெஸ்ட்.
தச்சர்களை எழுப்பி அவர்களை இவ்வேலையில் உதவி செய்யும்படிக் கேட்டுக் கொண்டேன். அதிகமாக அவர்களை வற்புறுத்தவே அவசியமில்லாமலிருந்தது. ”அவசரத்தில் உதவி செய்யவில்லை யென்றால் நாங்கள் இருந்து என்ன பயன் ? நீங்கள் இளைப்பாறுங்கள். நாங்கள் அந்த வேலையைப் பார்த்துக் கொள்கிறோம். எங்களுக்கு அது எளியது" என்றார்கள். எங்கள் சொந்த ஆட்கள் வேலைக்குத் தயாராய் இருந்தார்கள் என்று சொல்ல வேண்டுவதில்லை.
வெஸ்ட் மிகுந்த ஆனந்தங் கொண்டார். வேலை ஆரம்பித்த போது அவர் தோத்திரப் பாட்டு ஒன்று பாடத்தொடங்கினார். தச்சர்களைப் பிரித்து விட்டேன். முறைப்படி மற்றவர்களும் வேலை செய்தார்கள். இவ்வாறு காலை ஏழு மணி வரையில் வேலை செய்தோம். ஆனால் இன்னும் வேலை நிறைய பாக்கி யிருந்தது. இப்போது மீண்டும் என்ஜினியரை எழுப்பி என்ஜினை ஓட்டச் சொல்லிப் பார்க்கலா மென்று மிஸ்டர் வெஸ்டினிடம் சொன்னேன். இம் முறையேனும் அவர் வெற்றி பெற்றால் வேலை காலத்தில் முடிந்துவிடும்.
அவ்வாறே வெஸ்ட் அவரை எழுப்பினார். அவர் உடனே என்ஜின் அறைக்குச் சென்றார். என்ன விந்தை! என்ஜினைத் தொட்டவுடனே அது ஓட ஆரம்பித்தது ! அச்சுக்கூடம் முழுவதிலும் ஆனந்தகோஷம் நிரம்பியது. இதன் காரணம் என்ன? நேற்றிரவு நாம் எவ்வளவோ முயன்றும் பயன்படாமற் போயிருக்க, இன்று காலை கோளாறு ஒன்றுமே இல்லாததுபோல் ஓடத் தொடங்கிவிட்டதே ?" என்று நான் கேட்டேன்.
வெஸ்டோ , என்ஜினியரோ- நன்றாக நினைவில்லை-கூறியதாவது : "இதற்குக் காரணம் கூறுதல் கஷ்டம். இயந்திரங்கள் சில சமயம் நடந்துகொள்வதைப் பார்த்தால் நம்மைப் போலவே அவற்றிற்கும் ஓய்வு தேவை என்று காணப்படுகிறது.” என்ஜின் வேலை செய்ய மறுத்தது எங்களுக்கு ஏற்பட்ட சோதனை என்றே எனக்குத் தோன்றிற்று. நல்ல சமயத்தில் அது மீண்டும் ஓடத் தொடங்கியது, எங்கள் உண்மையான, மனப்பூர்வமான உழைப்பின் பயன் என்று கருதினேன். பத்திரிகைப் பிரதிகளைக் காலத்தில் தபாலுக்கு அனுப்பினோம். எல்லோருக்கும் சந்தோஷமாயிருந்தது.
இந்த ஆரம்பப் பிடிவாதமானது பின்னால் பத்திரிகை ஒழுங்காக வெளியாகும் என்பதை உறுதிப்படுத்திற்று. பின்னால் ஒரு காலத்தில் வேண்டு மென்றே நாங்கள் என்ஜின் உபயோகிப்பதை நிறுத்திக் கையினால் வேலை செய்தோம். போனிக்ஸ் குடியேற்ற வாசிகள் தார்மீக உந்நத நிலையை எய்தியிருந்த நாட்கள் அந்நாட்களே என்பது என் கருத்து.
------------
44. பிரம்மசரியம்
போனிக்ஸ் ஆசிரமப் பண்ணையைத் தொடங்கியபோது, காந்திஜி கூடிய சீக்கிரத்தில் அங்கே தாமும் போய் வசிக்க வேண்டும் என்ற நோக்கம் கொண்டிருந்தார். போனிக்ஸ் ஆசிரமத்தில் வசிக்கத் தீர்மானித்த ஒவ்வொருவருக்கும் மூன்று மூன்று ஏக்கரா நிலம் பிரித்துக் கொடுக்கப்பட்டது. அந்தந்த நிலத்தை அவரவர்களே உழுது பயிர் செய்ய வேண்டும் என்றும், சொந்த உடலுழைப்பைக் கொண்டு. ஜீவனம் நடத்த வேண்டும் என்றும் திட்டம் போடப் பட்டது. காந்திஜியின் பங்குக்கு மூன்று ஏக்கர் நிலமும் ஒதுக்கப்பட்டது.
ஆனால் காந்திஜி போனிக்ஸ் பண்ணைக்கு நிரந்தரமாகக் குடிப் போகுதல் பின்னால் நிகழ்ந்த பல சம்பவங்களினால் முடியாத தாயிற்று. ஆரம்பத்தில் ஆசிரமத்தை நல்ல முறையில் அமைக்கவும் "இண்டியன் ஒபீனியன்" பத்திரிகை நடத்தவும் பணம் வேண்டியதா யிருந்தது. மேலும் பாரிஸ்டர் தொழிலை இத்தனை நாளும் நடத்தி வந்து திடீரென்று நிறுத்துவதால் கட்சிக்காரர்கள் பலர் கஷ்டத்துக்குள்ளாக நேரிடும். ஆகையால் ஆரம்ப நாட்களில் சில காலம் போனிக்ஸிலும் சில காலம் ஜோகானிஸ்-பர்க்கிலுமாக வசிக்கக் காந்திஜி உத்தேசித்தார்.
போனிக்ஸ் ஆசிரமப் பண்ணையை ஸ்தாபித்து விட்டு ஜோகானிஸ்பர்க் போனதும் காந்திஜி மிஸ்டர் போலக்கைச் சந்தித்துப் புதுஏற்பாடுகளைப் பற்றிச் சொன்னார். தாம் கொடுத்த புத்தகம் இவ்வளவு பெரும் பயனை அளித்ததை அறிந்து மிஸ்டர் போலக் அளவிலாத மகிழ்ச்சி யடைந்தார். தாமும் காந்திஜியின் புதிய சோதனையில் அவருடன் ஈடுபட விரும்புவதாகக் கூறினார். காந்திஜி சம்மதம் கொடுத்ததும் 'கிரிடிக்' பத்திரிகையில் தாம் பார்த்த உத்தியோகத்தை ராஜினாமா செய்துவிட்டுப் போனிக்ஸ் வந்து சேர்ந்தார். அவ்விடத்திய எளிய வாழ்வு போலக்குக்குப் பெரிதும் பிடித்திருந்தது. ஆனால் அவரும் அதிக காலம் அங்கே இருக்க - முடியவில்லை. காந்திஜிக்குப் பாரிஸ்டர் தொழிலில் உதவி செய்து கொண்டிருந்த மிஸ்டர் ரீட்ச் என்பவர் இங்கிலாந்து "போக வேண்டியதா யிருந்தது. அப்போது ஜோகானிஸ்பர்க் குக்கு வந்து தமக்கு உதவி செய்யும்படி போலக்கைக் காந்திஜி அழைத்தார். சீக்கிரத்தில் பாரிஸ்டர் தொழிலுக்கு மங்களம் பாடிவிட்டு இரண்டு பேருமாகப் போனிக்ஸ் ஆசிரமத்துக்கு நிரந்தரமாகப் போய் விடலாமென்று தெரிவித்திருந்தார்.
போலக் தங்கமான மனிதர். நண்பர்களிடம் நம்பிக்கை வைத்து விட்டால் வெறுமனே வாதம் செய்து கொண்டிராமல் அவர்களுடன் ஒத்துப் போக முயலும் சுபாவம் உடையவர். ஆகையால் காந்திஜிக்குப் பின்வருமாறு எழுதினார்: "போனிக்ஸ் வாழ்க்கை எனக்கு மிகவும் பிரியமாயிருக் கிறது. இங்கே சந்தோஷமாய்க் காலங் கழிக்கிறேன். பண்ணையை அபிவிருத்தி செய்யலா மென்ற நம்பிக்கை யிருக்கிறது. ஆயினும் தற்சமயம் இதை விட்டுத் தங்கள் காரியாலயத்துக்கு வருவதால் நமது இலட்சியங்கள் விரைவில் கைகூடுமெனத் தாங்கள் கருதும் பட்சத்தில், அவ்வாறே செய்யத் தயாராயிருக்கிறேன்."
காந்திஜி முடிவாக எழுதியதன் பேரில் போனிக்ஸ் பண்ணையிலிருந்து போலக் ஜோகானிஸ்பர்க் வந்து அட்டர்னி தொழிலில் பயிற்சி பெறலானார். இதே சமயத்தில் மிஸ்டர் மாக்கிஸ்டர் என்னும் ஒரு ஸ்காத்லாந்து தேசத்தவரையும் காந்திஜி வேலைக்கு
அமர்த்திக் கொண்டார்.
போனிக்ஸுக்கு விரைவிலேயே போய்க் குடியேறி விட வேண்டும் என்ற ஆவலினாலேயே பாரிஸ்டர் தொழிலைக் காந்திஜி அதிமாகக் கவனிக்கும்படி நேர்ந்தது.
போலக்கைக் காந்திஜி தமது வீட்டிலேயே வசிக்கும்படி கூறினார். இருவரும் ஒரு தாய் வயிற்றுச் சோதரர் போலப் பழகினார்கள். சில வருஷங்களுக்கு முன்பே போலக்குக்குக் கலியாணம் நிச்சயமாகி யிருந்தது என்பதைக் காந்திஜி அறிந் தார். அப்படியானால் கலியாணத்தை ஏன் இன்னும் நடத்தாமல் காலங் கடத்த வேண்டும் என்று கேட்டார்.
"இன்னும் கொஞ்சம் பணம் சேர்த்துக் கொண்டபிறகு கலியாணம் செய்து கொள்ள விரும்புகிறேன்" என்றார் போலக், இந்தக் காரணத்தை காந்திஜி ஒப்புக் கொள்ள வில்லை. "ரஸ்கினுடைய புத்தகத்தைப் படித்து அதிலுள்ள இலட்சியங்களை ஒப்புக் கொண்டுள்ள உங்களுக்குப் பணத்தைப் பற்றி என்ன கவலை? இதய ஒற்றுமை ஏற்பட்ட பிறகு பணம் இல்லை என்ற காரணத்துக்காகக் கலியாணத்தை ஒத்திப் போடுவது தவறு. பணம் இல்லை யென்பது கலியாணத்துக்கு ஒரு தடையானால் ஏழைகள் எப்படிக் கலியாணம் செய்து கொள்ள முடியும் ? மேலும் நீங்கள் இப்போது என்னுடன் வசிப்பதால் வீட்டுச் செலவைப்பற்றிய கவலை இல்லை. ஆகையால் கலியாணத்தைத் தள்ளிப் போட எவ்வித நியாயமு மில்லை" என்றார் காந்திஜி.
சினேக தர்மத்தில் அபார நம்பிக்கை கொண்ட மிஸ்டர் போலக்கும் உடனே இங்கிலாந்தில் அவருக்காகக் காத்திருந்த பெண்மணிக்குக் கடிதம் எழுதினார். அவள் உடனே புறப்பட்டு வந்து சேர்ந்தாள். கலியாணத்தை ஆடம்பரங்களும் பணச் செலவும் இல்லாமல் செய்து முடிக்க எல்லாரும் ஏக மனதாகத் தீர்மானித்தார்கள். போலக் யூதர் ; அவரை மணக்க வந்த பெண்மணி கிறிஸ்துவ மதத்தினள். ஆகையால் கலியாணத்தை ரிஜிஸ்ட்ரார் ஆபீஸில் பதிவு செய்ய வேண்டியதா யிருந்தது. பதிவு செய்வதற்கு மாப்பிள்ளைத் தோழராக யாராவது சென்று சாட்சிக் கையொப்பம் போட வேண்டும். இதற்குக் காந்திஜிதான் வரவேண்டும் என்று போலக் வற்புறுத்தினார். அவ்விதமே காந்திஜியும் சென்றார். ஆனால் விவாக ரிஜிஸ்டரார் ஆபீசில் எதிர்பாராத தடை ஒன்று குறுக்கிட்டது. காந்திஜி மாப்பிள்ளைத் தோழனாக வந்திருப்பதைப் பார்த்துவிட்டு மண மகனும் மணமகளும் உண்மையான வெள்ளைக்காரர்கள் தானா என்று ரிஜிஸ்ட்ராருக்குச் சந்தேகம் வந்து விட்டது! விசாரித்து உண்மையறியும் வரையில் விவாகப் பதிவைத் தள்ளிப் போட வேண்டும் என்று சொன்னார். காந்திஜி தமக்குத் தெரிந்திருந்த பெரிய உத்தியோகஸ்தரிடம் போய் அவரிடமிருந்து கடிதம் வாங்கிக் கொண்டு வந்த பிறகு தான் கலியாணம் பதிவு செய்யப்பட்டது,
முன்பின் தெரியாத ஓர் ஆங்கிலப் பெண் இப்போது, காந்திஜியின் வீட்டில் வசிக்கலானாள். இதனால் எவ்விதக் கஷ்டமும் ஏற்படவில்லை. காந்திஜி சொல்லுகிறார் :
"போலக் தம்பதிகளுடன் எனக்கு எப்போதேனும் வேற்றுமை நேரிட்டதாகவே ஞாபகமில்லை. மிஸ்ஸஸ் போலக்குக்கும் என் மனைவிக்கும் சிற்சில வித்தியாசங்கள் அவ்வப்போது நேரிடுவதுண்டு. ஆனால் அவை மிக ஒழுங்காக நடத்தப்படும் தனிக் குடும்பங்களிலும் நேரிடுபவையேயாகும். என் குடும்பமோ பல்வேறு சாதியாரும், பல்வேறு குணாதிசயங்களை உடையவர்களும் சேர்ந்த கலப்புக் குடும்பம். நன்றாகச் சிந்தித்துப் பார்த்தோமாயின், சாதி, இனம் என்னும் வித்தியாசங்கள் வெறும் கற்பனை உண்மையில் மாந்தர் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களே யாவோம்."
போலக்கைக் கலியாணம் செய்துகொள்ளத் தூண்டியது போல் மிஸ்டர் வெஸ்ட் என்னும் ஆங்கில நண்பரையும் காந்திஜி விவாகம் செய்து கொள்ளத் தூண்டினார். அவரும் அவ்விதமே மணம் புரிந்து கொண்டார். இந்தத் தம்பதிகள் போனிக்ஸில் வசிக்கத் தொடங்கினார்கள்.
இந்திய நண்பர்கள் சிலருக்கும் காந்திஜி கலியாணம் செய்து வைத்தார். ஆனால் இப்படி யெல்லாம் நண்பர்களுக்குக் கலியாணம் பண்ணிவைத்த காந்திஜி சில நாளைக் கெல்லாம் தமது இல்வாழ்க்கையில் பரிபூரண பிரம்மசரிய விரதத்தைக் கடைப்பிடிப்ப தென்று தீர்மானித்தார். இது எப்படி என்று பார்ப்போம்.
தென்னாப்பிரிக்காவில் இனிமேல் அமைதியான வாழ்க்கை நடத்தலாம் என்று காந்திஜி முடிவு செய்திருந்த சமயத்தில் எதிர்பாராத சம்பவம் ஒன்று நிகழ்ந்தது. நேட்டாலில் ஸலூக்களின் கலகம் ஏற்பட்டது. ஆப்பிரிக்காவின் பூர்வீகக் குடிகளில் ஒரு இனத்தார் ஸலூக்காரர். நாகரிகமும் அறிவு வளர்ச் சியும் இல்லாத சாதியார் தான். ஆயினும் அவர்கள் ஆப்பிரிக்கா நாட்டுக்குரிய ஆதிக் குடிகள். அவர்கள் கலகம் ஆரம்பித்திருக்கிறார்கள் என்று இங்கிலீஷ்காரர்கள் கூறினார்கள். உண்மையில் 'கலகம்' என்று சொல்லக்கூடியதாக ஒன்றும் நடை பெறவில்லை. ஸலூக்காரர் மீது ஒரு புதிய வரியை நேட்டால் சர்க்கார் விதித்தனர். அந்தப் புது வரியைக் கொடுக்க வேண்டாம் என்று ஸலூத் தலைவன் ஒருவன் கூறினானாம்! வரி வசூல் செய்யப் போன சார்ஜண்ட் ஒருவன் ஈட்டியினால் குத்தப் பட்டானாம்! இந்தச் சம்பவங்களுக்கு நேட்டால் சர்க்கார் 'கலகம்' என்று பெயர் கொடுத்துவிட்டார்கள். அந்தக் கலகத்தை அடக்க படைகளையும் அனுப்பி வைத்தார்கள்.
முதலில் காந்திஜிக்கு மேற்படி கலகம் பற்றிய உண்மை விவரம் அவ்வளவாகத் தெரிந்திருக்கவில்லை. ஆயினும் எந்த சர்க்காரின் கீழ் வாழ்கிறோமோ அந்த சர்க்காருக்கு அபாயம் வந்த காலத்தில் வலிய உதவி செய்யவேண்டும் என்பது காந்திஜியின் கொள்கை. எனவே, ஸலூக் கலகம் சம்பந்தமான போர் நிகழ்ச்சிகளில் காயம் பட்டவர்களுக்குச் சிகிச்சை செய்ய இந்திய சேவைப் படை ஒன்றை அமைக்கத் தயார் என்று கேட்டால் கவர்னருக்குக் காந்திஜி கடிதம் எழுதினார். காந்திஜியின் சேவையை ஏற்றுக்கொண்டிருப்பதாகக் கவர்னரிடமிருந்து உடனே பதில் வந்தது. இவ்வளவு சீக்கிரம் பதில் வரும் என்று காந்திஜி எதிர்பார்க்க வில்லை யானாலும் வேண்டிய முன் ஏற்பாடுகளை யோசனை செய்து வைத்திருந்தார். போலக் தமது மனைவியுடன் சிறு வீடு ஒன்றுக்குக் குடி போனார். ஸ்ரீமதி கஸ்தூரிபாயையும் குழந்தைகளையும் போனிக்ஸ் பண்ணைக்குக் காந்திஜி அனுப்பினார். ஜோகானிஸ்பர்க் வீட்டையும் காலி செய்து விட்டுச் சொந்தக்காரனிடம் ஒப்புவித்தார். பிறகு டர்பனுக்குச் சென்று இருபத்துநாலு இந்தியர் அடங்கிய சேவைப் படை ஒன்றை அமைத்தார். இந்த சேவைப் படையின் தலைவர் என்ற முறையில் காந்திஜிக்கு 'ஸார்ஜெண்ட் மேஜர்' என்ற பட்டம் அளிக்கப்பட்டது.
கலகப் பிரதேசத்துக்குப் போய்ச் சேர்ந்தபோது உண்மையில் அங்கே பெரிய கலகம் ஒன்றும் நடைபெறவில்லை யென்று காந்திஜி கண்டார். ஆனால் சர்க்கார் படைகளின் கடுமையான நடவடிக்கைகளினால் ஸலூக்கள் பலர் காயம் பட்டுக் கிடந்தனர். அவர்களுக்குச் சிகிச்சை செய்யும் பணிதான் காந்திஜிக்கும் அவருடைய சகாக்களுக்கும் கிடைத்தது. இது காந்திஜிக்கு ஓரளவு திருப்தி யளித்தது. அந்தத் திக்கற்ற அநாதை ஸுலூக்களுக்குப் பணிவிடை செய்யக் கடவுளே தம்மை அனுப்பியதாகக் காந்திஜி கருதினார். காயம்பட்ட ஸலூக் களும் தங்களைக் கவனித்து உதவி புரிவதற்குக் காந்திஜி தம் சகாக்களுடன் வந்தது பற்றி மகிழ்ச்சி தெரிவித்தனர்.
சுற்றிலும் வேலிக் கம்பி போட்டுத் தாற்காலிகமாக வைத்தியசாலை அமைக்கப்-பட்டிருந்தது. அதில் காந்திஜியும் அவருடன் வந்தவர்களும் ஸலூக்களுக்குப் பணிவிடை செய்த போது வேலிக்கு வெளியில் வெள்ளைக்கார ஸோல்ஜர்கள் நின்று அவர்களைப் பரிகசித்தார்கள். 'ஸலூக்களுக்குப் பணி விடை செய்ய வேண்டாம்' என்றும் சொல்லிப் பார்த்தார்கள். இது பலியாமற் போகவே ஸலூக்களைத் திட்டினார்கள்.
காந்திஜி அந்த வெள்ளைக்கார ஸோல்ஜர்களுடனும் கலந்து பழக ஆரம்பித்தபோது அவர்களுடைய மனப்பான்மை மாறியது. கர்னல் ஸ்பார்க்ஸ், கர்னல் வைலி என் னும் இராணுவ உத்தியோகஸ்தர்கள் காந்திஜியைச் சந்தித்து அவருடைய சேவைக்காக வந்தனமும் கூறினார்கள். இவ்விருவரும் ஏற்கெனவே டர்பனில் காந்திஜிக்கு விரோதமான கிளர்ச்சியில் தீவிரமாக ஈடுபட்டிருந்தவர்கள்.
சர்க்காரை எதிர்த்தவர்களைத் தவிரச் சந்தேகத்தின் பேரில் பல ஸஹலூக்கள் கைது செய்யப்பட்டுக் கசையடி கொடுக்கப் பட்டிருந்தார்கள். கசையடியினால் உண்டாகியிருந்த புண்களுக்குக் காந்திஜி சிகிச்சை செய்ய நேர்ந்தது. இதுமட்டு மல்லாமல் கலகப் பிரதேசத்தில் அடிக்கடி நெடுந்தூரப் பிரயாணம் செய்ய நேர்ந்தது. கல்கத்தை அடக் கச் சர்க்கார் குதிரைப் படை அனுப்பியிருந்தனர். அந்தப் படையைப் பின் தொடர்ந்து காயம் பட்டவர்களைப் பல்லக்கில் வைத்துச் சுமந்து கொண்டு தினம் நாற்பது மைல் வரையில் காந்திஜி கால் நடையாகப் பிரயாணம் செய்ய நேர்ந்தது. அது கலகமும் அல்ல ; கலகத்தை அடக்கும் யுத்தமும் அல்ல; வெறும் மனித வேட்டைதான் என்று காந்திஜி இப்போது நன்கு உணர்ந்திருந்தார். தினந்தோறும் குற்றமற்ற ஜனங்க ளின் குடிசைகளில் வெள்ளைக்கார ஸோல்ஜர்கள் துப்பாக்கி வெடி தீர்க்கும் சத்தத்தைக் கேட்பது காந்திஜியின் மனதுக்குப் பெரும் வேதனையளித்தது. ஆயினும் காயமடைந்த ஸலூக்களுக்குச் சேவை செய்யும் சந்தர்ப்பம் கிடைத்ததை எண்ணி, எண்ணி மன ஆறுதல் பெற்றார்.
கள்ளங் கபடற்ற 'அநாகரிக' ஸலூக்களின் குடிசைகள் குன்றுகளிலும் பள்ளத்தாக்குகளிலும் வெகு தூரத்துக்கு வெகு தூரம் சிதறிக் கிடந்தன. இத்தகைய வழிகளில் காந்திஜி நடந்து செல்கையில் அவருடைய உள்ளம் சிந்தனை செய்து கொண்டிருந்தது.
இம்மாதிரி மனித குலத்துக்குச் சேவை செய்வதே தமது வாழ்வின் பிரதான இலட்சியமா யிருக்கவேண்டும் என்று எண்ணினார். அப்படி முழு நேரமும் மக்களுக்குத் தொண்டு புரிவதிலேயே கழிக்க வேண்டுமானால் குடும்பத்தைப் பெருக்கிக்கொண்டே போவதில் பயனில்லை யென்றும் இல்லறத்திலேயே இனிமேல் பிரம்மசரியத்தை அனுஷ்டிக்க வேண்டும் என்றும் தோன்றியது. இல்வாழ்க்கையின் சிற்றின்பத்தில் ஈடு படுவது ஆத்ம சாதனத்துக்குத் தடையாகும் என்ற கருத்து காந்திஜி மனதில் சில காலமாக இடம் பெற்றிருந்தது. அதோடு, குடும்ப சம்ரக்ஷணையிலும் குழந்தைகள் பெற்று வளர்ப்பதிலும் அதிகம் ஈடுபட்டால் மனித குலத்துக்குத் தொண்டு செய்ய நேரும் சந்தர்ப்பங்களைச் சரிவரப் பயன்படுத்திக்கொள்ள முடியாது என்று இப்போது அவருக்குத் தோன்றியது.
நீண்ட யோசனைகளின் பயனாக இனிமேல் வாழ்நாள் முழுவதும் பிரம்மசரியத்தைக் கடைப்பிடிப்பது என்று விரதம் கொள்ளத் தீர்மானித்தார்.
ஒருவாறு 'கலகம்' அடக்கப் பட்டது. காந்திஜிக்கு நேட்டால் கவர்னர் வந்தனக் கடிதம் எழுதி இனி அவரும் அவருடைய சகாக்களும் சேவைப் படையைக் கலைத்துவிட்டு வீட்டுக்குப் போகலாம் என்று தெரியப்படுத்தினார்.
காந்திஜி போனிக்ஸ் போய்ச் சேர்ந்ததும் கஸ்தூரிபாய் அம்மையிடமும் மற்றும் தமது அத்தியந்த சகாக்களான சகன்லால், மகன்லால், வெஸ்ட் ஆகியவர்களிடமும் தமது கருத்தைத் தெரிவித்துவிட்டு, இனி முழுதும் பிரம்மசரியத்தைக் கடைப்பிடிப்பதாக விரதம் எடுத்துக்கொண்டார். இன்னும் சில சகாக்களும் அவ்விதமே விரதம் எடுத்துக் கொண்டார்கள்.
காந்திஜியின் வாழ்க்கையில் இந்தச் சம்பவம் 1906-ம் ஆண்டில் நடந்தது.
--------
45. பிள்ளைகளின் கல்வி
தம்பி! உனக்குத் தெரியும் அல்லவா ? காந்தி மகான் தம்முடைய சரித்திரத்தைத் தாமே எழுதினார். அதற்குச் “சத்திய சோதனை" என்று பெயர் கொடுத்தார். தம்முடைய வாழ்க்கை முழுவதும் ஒவ்வொரு காரியத்தையும் 'இது சத்தி யத்துக்கு ஒட்டியதா ?' என்று யோசித்தே செய்தார். சத்தியத்தைக் கடைப்பிடிப்பதற்காக மற்றவர்கள் செய்யத் துணியாத பல காரியங்களைச் செய்தார். எல்லாரும் செல்லும் ராஜ பாட்டையை விட்டுக் கல்லும் முள்ளும் நிறைந்த காட்டு வழியில் சென்றார். எல்லாம் சத்தியத்துக்காகத்தான்,
காந்திஜி தமது குடும்ப வாழ்க்கையிலும் பல முறை சத்திய சோதனை செய்ய வேண்டியதாயிற்று. சத்தியத்திற்காக மற்றக் குடும்பஸ்தர்கள் செய்யத் துணியாத காரியங்களைச் செய்ய வேண்டியதா யிருந்தது.
எந்தத் தகப்பனாரும் தம் பிள்ளைகளைப் படிக்கவைக்க வேண்டும் என்று விரும்புவது இயற்கை. 'படிப்பு' என்று சாதாரணமாக இந்த நாளில் பள்ளிக்கூடங்களில் படிக்கும் இங்கிலீஷ் படிப்பபைத் தானே சொல்கிறோம் ? இங்கிலீஷ் படிப்பில் மோகம் அந்நாளில் இப்போதைக் காட்டிலும் அதிகமா யிருந்தது. உலக நிலைமை அறிந்த எந்த மனிதரும் தம் குமாரர்கள் இங்கிலீஷ் படிப்புப் படித்துப் பெரிய உத்தியோகத்துக்கு வரவேண்டும் என்று விரும்புவது சாதாரணம்.
ஆனால் காந்தி மகானோ இதற்கு நேர் விரோதமான கருத் துக் கொண்டிருந்தார். தென்னாப்பிரிக்காவில் வசித்தபோது தம் புதல்வர்களை அங்கிருந்த இங்கிலீஷ் பள்ளிக்கூடங்களுக்கு அனுப்ப அவர் விரும்பவில்லை. இந்தியாவுக்கு அனுப்பிப் படிக்க வைக்கவும் ஏற்பாடு செய்யவில்லை. தம்முடனே தம் புதல்வர்களை வைத்துக்கொண்டு தாம் செய்யும் சத்திய சோதனைகளில் அவர்களையும் பங்கு பெறச் செய்வதுதான் அவர்களுக்குச் சிறந்த படிப்பு என்று கருதினார்.
போனிக்ஸில் ஏற்படுத்திய ஆசிரமத்துக்குக் காந்திஜி உடனே போக முடியவில்லை. எனினும் ஜோகானிஸ்பர்க்கில் தமது சொந்த வீட்டிலேயே ஆசிரம வாழ்க்கையின் இலட்சியங்களை அமுலுக்குக் கொண்டுவர ஆரம்பித்தார். குடும்பத்தைச் சேர்ந்தவர் ஒவ்வொருவரும் மெய் வருந்தி உழைக்கும் வேலை ஏதேனும் செய்தாக வேண்டும் என்று சொன்னார். தம் குழந்தைகளையும் இந்த வழியில் பயில்விக்கத் தொடங்கினார்.
அதுவரையில் குடும்பத்துக்கு வேண்டிய ரொட்டிகளை யெல்லாம் கடைகளிலே வாங்கிக் கொண்டிருந்தார்கள். இனி வீட்டிலேயே ரொட்டி தயாரித்துக் கொள்ள வேண்டும் என்று ஏற்பாடாயிற்று. ரொட்டிக்கு மாவுகூடக் கடையிலிருந்து வாங்காமல் கோதுமை வாங்கிக் கை இயந்திரத்தில் அரைத்துக் கொள்வது என்று தீர்மானிக்கப்பட்டது. அவ்விதமே கையால் மாவு அரைக்கும் இயந்திரம் ஒன்று வாங்கினார்கள். அதன் இரும்புச் சக்கரத்தை இரண்டு பேர் சேர்ந்து சுற்ற வேண்டும். காந்திஜியும் அவருடைய புதல்வர்களான மணிலால், ராமதாஸ், தேவதாஸ் ஆகியவர்களும், போலக்கும் அவருடைய மனைவி யும் மேற்படி இயந்திரத்தை முறை போட்டுக்கொண்டு சுற்றி மாவு அரைத்தார்கள். கஸ்தூரிபாய் அம்மைக்குச் சமையலறையில் செய்யவேண்டிய வேலையே சரியாயிருந்தது.
வேலைக்காரன் ஒருவன் அவர்களுடைய வீட்டில் இருந்தான். ஆனால் அவனை வேலைக்காரன் என்று யாரும் கருதுவ தில்லை. குடும்பத்தில் ஒருவனாகவே அவனையும் எண்ணினார்கள். எல்லாரையும் போல் அவனும் தனக்கு உரிய வேலையைச் செய்தான். காந்திஜியின் புதல்வர்கள் வீட்டுக் கக்கூசு களைச் சுத்தம் செய்வது முதற்கொண்டு சகல வேலைகளையும் தாங்களே செய்துகொள்ளப் பயிற்சி பெற்று வந்தார்கள்.
காந்திஜியின் புதல்வர்களில் மூத்தவராகிய ஸ்ரீ ஹரிலால் காந்திக்குத் தம் தந்தைமீது மிக்க கோபம். நாடு நகரங்களில் உள்ள மற்றப் பிள்ளைகளைப்போல் தமக்குத் தம் தந்தை காலேஜ் படிப்பு அளிக்காதது பற்றித்தான். இதைக் குறித்து அவர் பகிரங்கமாகக் காந்திஜியின் மீது குறை கூறினார். பத்திரிகைகளிலும் எழுதினார். கடைசியாகத் தந்தையை விட்டு அடியோடு பிரிந்து தம் வாழ்க்கையைச் சுதந்திரமாக நடத்திக் கொள்வதாகச் சொல்லிப் போய்விட்டார். இதனால் ஸ்ரீ ஹரி லால் காந்தி அவ்வளவாக நன்மை யடைந்ததாகச் சொல்வதற் கில்லை. அவர் பிற்கால வாழ்க்கை ரஸமானதாக இல்லை. மற்ற மூன்று புதல்வர்களும் தந்தையின் வாக்குத்தான் வேதவாக்கு, அவருடன் இருப்பது தங்கள் பாக்கியம், அவர் இட்ட பணியைச் செய்வதே தங்களுக்குச் சிறந்த படிப்பு என்று பூரணமாக நம்பி அதற்கேற்ப நடந்து கொண்டார்கள்.
பிள்ளைகளுக்குப் புத்தகப் படிப்பே வேண்டியதில்லை யென்று காந்திஜி கருதவில்லை. அந்தக் காலங்களில் பள்ளிக் கூடங்களிலும் கலாசாலைகளிலும் கற்பிக்கப்பட்ட புத்தகக் கல்வி முறையை அவர் வெறுத்தார். தாமே தம் புதல்வர்களுக்கு இலக்கியக் கல்வி கற்பிக்க விரும்பினார். வீட்டிலே சாவகாசமாக உட்கார்ந்து படிப்புச் சொல்லிக் கொடுக்க வசதியில்லை. காந்திஜியின் வீட்டுக்கும் அவருடைய காரியாலயத்துக்கும் இரண்டரை மைல் தூரம் இருந்தது. தம்முடனே புதல்வர்கள் காரியாலயத்துக்கு நடந்து வந்து தம்முடனே திரும்பி நடந்து வரவேண்டும் என்று ஏற்பாடு செய்தார். போகவர ஐந்து மைல் நடை. நல்ல தேகாப்பியாசம் ஆயிற்று. இப்படி நடக்கும்போது புத்தகங்களில் படிக்கவேண்டிய விஷயங்களை யெல்லாம் தாமே வாய்மொழியாகக் கற்பித்துவிடுவது என்று திட்டம் போட்டார்.
நம் பெரியோர்கள் படிக்கும் முறையைக் 'கல்வி' என்றும், 'கேள்வி ' என்றும் இரு விதமாக வகுத்திருக்கிறார்கள். ஏட்டில் படித்துப் பெறுகிற அறிவைக் 'கல்வி' என்றார்கள், ஆசிரியர்களிடமிருந்தோ பெரியோர்களிடமிருந்தோ காதினால் கேட்டுப் பெறும் அறிவைக் 'கேள்வி' என்று சொன்னார்கள்,
அறிவை வளர்த்துக் கொள்வதற்குக் 'கல்வி 'யை விடக் 'கேள்வி'யே சிறந்த முறை என்றும் கூறினார்கள். "கற்றலிற் கேட்டலே நன்று" என்பது முது மொழி அல்லவா ?
இதே கொள்கையைக் கடைப்பிடித்துக் காந்திஜி தம் புதல்வர்களுக்குக் கல்வி கற்பித்து வந்தார். ஆனால் இது ஒழுங்காக நீடித்து நடைபெற வில்லை. உலகத்துக்கு ஒளிகாட்டப் பிறந்த மகான் தம் புதல்வர்களின் கல்வியைப் பற்றி மட்டும் கவனம் செலுத்திக் கொண்டிருக்க முடியுமா ? உலகங் காணாத அதிசயமான "சத்தியாக்கிரஹம் " என்னும் போர் முறை அப்போதுதான் உருவாகிக்கொண்டு வந்தது. தென்னாப்பிரிக்கா இந்தியர்களின் கதிமோட்சத்துக்காக ஒரு மகத்தான போராட்டம் ஆரம்பமாக இருந்தது. எனவே, பிள்ளைகளுக்குத் தந்தை கல்வி யளிப்பதும் தடைப்பட்டது.இது விஷயமாகக் காந்திஜி தம் சுய சரித்திரத்தில் எழுதியிருப்பதைக் கேள் :
"தக்க இலக்கியக் கல்வி என் புதல்வர்களுக்குத் தர முடியாமல் போன து அவர்களுக்கும் எனக்கும் துயரந்தரும் விஷயமே யாகும். என் மூத்த புதல்வன் ஹரிலால் இந்தக் குறையை என்முன் தனிமையிலும், பத்திரிகைகளில் பகிரங்க மாகவும் வெளியிட்டிருக்கிறான். மற்றப் புதல்வர்கள், விலக்க முடியாத காரணங்களினாலேயே நான் அவர்களுக்கு இலக்கியக் கல்வி யளிக்கவில்லை யென்பதை உணர்ந்து தயாளத்துடன் என்னை மன்னித்து விட்டார்கள். எனினும் அவர்கள் இலக்கியக் கல்வி பெறாதபடியால் குடிமுழுகிப் போய் விட்டதாக எண்ணி நான் துக்க சாகரத்தில் மூழ்கி விடவில்லை. தந்தை யொருவன் எப்படி யிருக்க வேண்டு மென்பது என் இலட்சியமோ, அவ்வாறு நான் இல்லையே யென்ற வருத்தத்தைத் தவிர வேறு வருத்தம் எனக்குக் கிடையாது. சமூக நன்மையை முன்னிட்டே அவர்களுடைய இலக்கியக் கல்வியைப் பலி கொடுத்ததாக நான் கருதுகிறேன். இந்த நம்பிக்கை தவறா யிருக்கலாம். எனினும் மனப்பூர்வமாக அவ்வாறு நம்பினேன் என்பதில் ஐயமில்லை. ஆனால் அவர்களுக்கு நல்லொழுக்கப் பயிற்சி யளிப்பதில் நான் எள்ளளவும் அசட்டை காட்டியது கிடையாது. இப் பயிற்சிக்கு ஏற்பாடு செய்வதுதான் பெற்றோர்களின் முதன்மையான கடமை யென்பது என்னுடைய கருத்து.
குழந்தைகளுக்கு ஆங்கிலக் கல்வி அளிக்க வேண்டுமா, வேண்டாமா வென்பதைப்பற்றி நானும் போலக்கும் அடிக்கடி தீவிரமாக விவாதம் செய்வதுண்டு. இவ்விஷயமாக நான் எப்போதும் உறுதியான கொள்கை யுடையவன். இளம் வயதிலிருந்து குழந்தைகளை ஆங்கிலத்திலேயே எண்ணவும் பேசவும் பயில்விக்கும் இந்தியர்கள் தங்கள் குழந்தைகளுக்கும் தேசத்துக்கும் பெரிய துரோகம் செய்கிறார்கள் என்பது என் கொள்கை. இதனால் அக்குழந்தைகள் நாட்டின் பரம்பரையான பாரமார்த்திக சமுதாயச் செல்வங்களை இழந்து விடுகிறார்கள். அந்த அளவில் அவர்கள் தேச சேவைக்குத் தகுதி யற்றவர்கள் ளாகிறார்கள். இத்தகைய உறுதி கொண்டவனாதலின், குழந்தை களிடம் நான் எப்போதும் குஜராத்தியிலேயே பேசி வந்தேன். போலக்குக்கு இது பிடிக்கவில்லை. அவர்களுடைய வருங்கால வாழ்வை நான் கெடுத்து வருவதாக அவர் நினைத்தார். பூரண அன்புடன் தமது முழு வலிமையையும் காட்டி அவர் என்னுடன் வாதிப்பார். ஆங்கிலம் உலக முழுவதும் பரவியுள்ள பாஷை யென்றும், சிறுபிராயத்தில் அதைக் கற்றுக்கொள்வோர் வாழ்க்கைப் போராட்டத்தில் மற்றவர்களைவிடப் பெரிய அநுகூலம் பெற்றவர்களாவார்கள் என்றும் அவர் கூறினார். என்றாலும், என் உறுதியை அவரால் மாற்ற முடியவில்லை. என்னுடைய கட்சிதான் நியாயமான தென்று அவர் ஒப்புக் கொண்டாரா, அல்லது நான் சுத்த பிடிவாதக்காரன் என்று விட்டுவிட்டாரா என்பது இப்போது ஞாபகமில்லை. இது இருபது ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம். அதற்குப் பின் நான் பெற்றுள்ள அனுபவங்களினால் இவ்விஷயத்தில் என் உறுதி இன்னும் வலிமை பெற்றிருக்கிறது. இலக்கியக் கல்வி பூரணமாய்ப் பெறாத குறைபாடு என் குமாரர்களிடம் இருப்பினும் தாய்பாஷையில் அவர்கள் பெற்ற பயிற்சி அவர்களுக்கும் நாட்டுக்கும் பெரும் நன்மை யளித்து வருகிறது."
இவ்விதம் காந்திமகாத்மா இருபது வருஷத்துக்கு முன்னால் எழுதினார். அவருடைய வாக்கு இன்றுவரை பலித்து வந்திருக்கிறது. காந்தி மகாத்மாவின் மூன்று புதல்வர்களும் நாட்டுக்கு அருந்தொண்டுகள் செய்து வருகிறார்கள். தென்னாப்பிரிக்கா இந்தியர்களின் நலத்தைப் பாதுகாப்பதற்காகக் காந்திமகான் ஆரம்பித்த "இண்டியன் ஒபீனியன் " என்னும் பத்திரிகையை இன்றைக்கும் மணிலால் காந்தி நடத்தி வருகிறார்.
---------------
46. அன்னையின் மன உறுதி
தென்னாப்பிரிக்காவில் காந்தி மகான் உலகம் வியக்குமாறு சத்தியாக்கிரஹ இயக்கம் தொடங்கி நடத்திய வரலாற்றைத் தொடங்குவதற்கு முன்னால் அவரது குடும்ப வாழ்க்கை சம்பந்தமான இன்னும் ஒரு முக்கிய சம்பவத்தைச் சொல்லிவிட வேண்டும். அன்னை கஸ்தூரிபாய் எத்தகைய மன உறுதி படைத்தவர் என்பதை இந்தச் சம்பவம் நன்கு விளக்குவதாகும். கஸ்தூரிபாய்க்கு ஒரு சமயம் அடிக்கடி இரத்த நஷ்டம் ஏற்பட்டு அதனால் உடல் நலம் குன்றி யிருந்தது. இரண சிகிச்சை செய்துகொள்ள வேண்டும் என்று வைத்தியர்கள் அபிப்பிராயப்பட்டார்கள். டர்பனில் ஒரு பிரபல வைத்தியரின் சிகிச்சைச் சாலையில் இரண சிகிச்சை நடந்தது. உடல் மெலிவு காரணமாக மயக்க மருந்து கொடாமலே சிகிச்சை செய்ய வேண்டியிருந்தது. இதனால் ஏற்பட்ட பெருந் துன்பத்தை அன்னை கஸ்தூரிபாய் ஆச்சரியமான தைரியத்துடன் சகித்துக் கொண்டார். சிகிச்சை செய்த டாக்டரும், தாதியாகப் பணி செய்த அவருடைய மனைவியும் கஸ்தூரிபாயை நன்கு கவனித்துக் கொண்டார்கள். இனி ஒன்றும் கவலை இல்லை என்ற நிலைமை ஏற்பட்டதும் கஸ்தூரிபாயை மேற்படி வைத்தியரின் வசத்தில் விட்டு விட்டு மகாத்மா ஜோகானிஸ்பர்க் சென்றார்.
ஆனால் சில தினங்களுக்கெல்லாம் கவலைக்கிடமான செய்தி வந்தது. கஸ்தூரிபாய் மிக்க பலவீனமடைந்து படுக்கையில் எழுந்து உட்காரவும் முடியாத நிலையை யடைந்திருக்கிறார் என்று தெரிந்தது. வைத்தியம் பார்த்த டாக்டர் டெலிபோனில் காந்திஜியைக் கூப்பிட்டு "நிலைமை நெருக்கடியாகி இருக்கிறது. நோயாளிக்கு மாட்டிறைச்சி ரஸம் உடனே கொடுத்தால் பிழைப்பார். அதற்குத் தங்கள் அனுமதி வேண்டும்" என்றார். மது மாமிசங்களைப் பற்றி மகாத்மாவின் கடுமையான கொள்கை தெரிந்திருந்தபடியால் டாக்டர் இந்த அநுமதி கேட்டார். மகாத்மாவோ, "நான் அத்தகைய அநுமதி கொடுக்கமுடியாது. கஸ்தூரிபாயையே கேளுங்கள். அவள் சிந்தித்துப் பதில் சொல்லக்கூடிய நிலையில் இருந்தால் அவள் விருப்பம்போல் செய்யுங்கள் !" என்றார். "அதெல்லாம் முடியாது. நோயாளியிடம் அபிப்பிராயம் கேட்பது தவறு. என் இஷ்டப்படி உணவு கொடுக்கக் கூடாது என்றால் நோயாளியின் உயிருக்கு நான் பொறுப்பாளியல்ல. உடனே தாங்கள் புறப்பட்டு வந்து பொறுப்பை ஏற்றுக்கொள்ளவும்" என்றார் டாக்டர்.
காந்திஜி அடுத்த ரயிலில் புறப்பட்டு டர்பனுக்குப் போனார். டாக்டரைப் பார்த்ததும், "கஸ்தூரிபாய் விரும்பினாலன்றி அவளுக்கு மாட்டிறைச்சி ரஸம் கொடுக்க நான் ஒருநாளும் சம்மதியேன். அதனால் உயிருக்கு அபாயம் வருவதாயிருந்தாலும் சரிதான் !" என்று உறுதியாகச் சொன்னார்.
"அப்படியானால் உம் மனைவியை இங்கிருந்து அகற்றிக் கொண்டு போய்விடும். அவர் என் வீட்டில் மரணமடைவதை நான் பார்த்துக் கொண்டிருக்க முடியாது!" என்றார் டாக்டர்.
"உடனே அகற்றி விடவேண்டும் என்கிறீர்களா? " என்று மகாத்மா கேட்டார்.
டாக்டர் கோபத்துடன், "இது என்ன கேள்வி? அகற்றி விடவேண்டும் என்று எப்போது சொன்னேன்? சிகிச்சை விஷயத்தில் எனக்குப் பூரண சுதந்திரம் கொடுக்க வேண்டும் என்று தானே கேட்கிறேன்? அப்படிக் கொடுத்தால் நானும் என் மனைவியும் கூடியதை யெல்லாம் செய்யத் தயாரா யிருக்கிறோம். இந்தச் சின்ன விஷயத்தை உம்மால் அறிந்துகொள்ள முடியவில்லையே!" என்றார்.
நயத்தினாலும் பயத்தினாலும் டாக்டர் கூறியது ஒன்றும் மகாத்மாவிடம் பலிக்கவில்லை. அவர் உடனே கஸ்தூரிபாய் அம்மையிடம் சென்றார். மிகப் பலவீன முற்ற நிலையில் இருந்த போதிலும் அவரிடம் கேட்டுவிட வேண்டும் என்று தீர்மானித்து டாக்டரின் கருத்தைத் தெரிவித்தார். டாக்டருக்கும் தமக்கும் நடந்த சம்பாஷணை விவரத்தையும் கூறினார்.
அன்னை கஸ்தூரிபாய் உறுதியான குரலில் பதில் சொன்ன தாவது : "மாட்டிறைச்சி ரசம் எனக்கு வேண்டாம். ஒரு நாளும் சாப்பிட மாட்டேன். மானிட ஜன்மம் கிடைத்தல் அரிது. அப்படிக் கிடைத்த ஜன்மத்தை இம்மாதிரி காரியத்தினால் அசுத்தப்படுத்திக் கொள்ள வேண்டுமா? கூடவே கூடாது. அதைக் காட்டிலும் தங்கள் மடியில் படுத்து நிம்மதி யாய் உயிரை விடுவேன். இந்தச் சமயத்தில் நீங்கள் வந்து சேர்ந்தீர்களே, அதுவே எனக்குப் போதும்."
காந்திஜி கொஞ்சம் வாதம் செய்து பார்த்தார். இது விஷயத்தில் தம்முடைய அபிப்பிராயத்துக்காகக் கஸ்தூரிபாய் தீர்மானம் செய்யக்கூடாது என்று எடுத்துச் சொன்னார். வைதிக ஹிந்துக்களில் சிலர் சிகிச்சையை முன்னிட்டு மது மாமிசம் அருந்தியிருப்பதை உதாரணமாக எடுத்துக் காட்டினார். அதெல்லாம் கஸ்தூரிபாயின் மன உறுதியை அசைக்கவில்லை. "முடியாது, முடியாது. என்னை இந்த இடத்திலிருந்து உடனே அப்புறப்படுத்துங்கள். இங்கே இருக்கவே நான் விரும்ப வில்லை" என்றார்.
கஸ்தூரிபாயின் தைரியம் மகாத்மாவுக்கு மிக்க மகிழ்ச்சி தந்தது. ஆயினும் பொறுப்பின் பாரம் அதிகமாயிற்று. கஸ்தூரி பாயின் கருத்தை டாக்டரிடம் கூறியபோது அவர் மேலும் கடுமையாகப் பேசினார்.
" எத்தகைய ஈவிரக்கமற்ற மனிதர் நீர் ? நோயாளியிடம் இதைப் பற்றிக் கேட்க உமக்கு வெட்கமா யில்லையா ? அப்புறப் படுத்தக்கூடிய நிலையில் உம் மனைவி இல்லை. ஒரு வேளை வழியிலேயே மரணமடைந்தாலும் அடையலாம். நான் சொல்ல வேண்டியதைச் சொல்லிவிட்டேன். என் கடமை தீர்ந்தது. அப்புறம் உம் இஷ்டப்படி செய்து கொள்ளும்!" என்றார் டாக்டர்.
கஸ்தூரிபாய் அம்மையை எப்படியாவது காப்பாற்ற விரும்பிய இந்த வெள்ளைக்கார டாக்டரை நாம் பாராட்டா மலிருக்க முடியாது. "அவர் சொன்னபடி இந்த காந்திஜி கேட்டால்தான் என்ன ? " என்று நமக்குத் தோன்றுவதும் இயல்புதான். "ஆபத்துக்குப் பாவமில்லை" என்ற பழமொழியின் மேல் பாரத்தைப் போடவும் நம்மில் பலர் தயார்தான்.
ஆனால் காந்தி மகானுடைய மனப்போக்கும் கஸ்தூரிபாயின் பிடிவாதமும் வேறு விதமாயிருந்தன. "உயிர் போனாலும் கொள்கையைக் கை விடக்கூடாது" என்பதில் அவர்கள் இருவரும் உறுதி கொண்டிருந்தார்கள். அதைத் தீவரமாகக் கடைப் பிடிப்பதில் ஒருவரை ஒருவர் மிஞ்சப் பார்த்தார்கள், ஆகவே உடனே அங்கிருந்து புறப்பட்டுப் போனிக்ஸ் ஆசிரமத்துக்குப் போகத் தீர்மானித்தார்கள்.
அப்போது சிறு தூற்றல் தூறிக் கொண்டிருந்தது. காந்திஜி ஒரு ரிக்ஷா வண்டி கொண்டு வந்தார். அதில் கஸ்தூரிபாயை ஏற்றி ரயில்வே ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றார். மிக்க அபாயமான காரியம் என்ற எண்ணத்தினால் காந்திஜியின் நெஞ்சம் படபடத்தது. கஸ்தூரிபாய்க்குத் தைரியம் சொல்லக் கூடிய நிலைமையில் அவர் இல்லை. அதற்கு மாறாகக் கஸ்தூரி பாய் "எனக்கு ஒன்றும் நேராது ; கவலைப் படாதீர்கள்!" என்று காந்திஜிக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டு வந்தார்.
பல நாளாக உணவு அருந்தா தபடியால் கஸ்தூரிபாய் உடல் மெலிந்து எலும்புந் தோலுமா யிருந்தார். நடப்பது என்பது முடியாத காரியம். ரிக்ஷாவை ரயில்வே பிளாட்பாரத்துக்குள் கொண்டுபோக முடியாது. எனவே காந்திஜி தம் கரங்களினால் கஸ்தூரிபாயை ரிக்ஷா வண்டியிலிருந்து எடுத்துப் பிளாட்பாரத்துக்குள் தூக்கிக்கொண்டு போய் ரயில் வண்டியில் கிடத்தினார். ரயிலும் புறப்பட்டது.
போனிக்ஸ் ரயில்வே ஸ்டேஷனிலிருந்து ஆசிரமம் இரண்டரை மைல் தூரத்தில் இருந்தது. முன்னாடியே ஆள் அனுப்பியிருந்ததால் மிஸ்டர் பெஸ்ட் ஸ்டேஷனுக்கு வந்திருந்தார். வலைப் பல்லக்கும் சூடான பாலும் வெந்நீரும் கொண்டு வந்திருந்தார். வலைப் பல்லக்கைத் தூக்க ஆறு ஆட்களும் வந்திருந்தார்கள், ஆசிரமத்துக்குப் பத்திரமாகக் கொண்டு போய்ச் சேர்த்தார்கள். ஆசிரமம் சென்ற பிறகு காந்திஜி கஸ்தூரிபாய்க்கு ஜல சிகிச்சை செய்தார். உடம்பு சிறிது சிறிதாகத் தேறி வந்தது. ஜல சிகிச்சையைக் காட்டிலும் கஸ்தூரிபாயின் மன உறுதியே அவர் உடம்பு தேறுவதற்குக் காரணமாயிருந்தது.
இந்தச் சமயத்தில் காவி உடை தரித்த இந்தியச் சாமியார் ஒருவர் வந்து சேர்ந்தார். டர்பனில் நடந்த சம்பவத்தைக் கேள்விப்பட்டுக் காந்திஜியின் மனத்தையும் கஸ்தூரிபாயின் மனத்தையும் திருப்புவதற்காக அவர் வந்தார். புலால் உண்பதில் தவறு இல்லையென்று ஸ்தாபிதம் செய்ய ஆரம்பித்தார். மனுதர்ம சாஸ்திரத்திலிருந்து மேற் கோள்களும் சொன்னார். காந்திஜியின் புதல்வர்கள் மணிலாலும் ராமதாஸும் அங்கே அச்சமயம் இருந்தார்கள். சாமியாருடைய வாதங்களை யெல்லாம் அவர்களே தவிடு பொடி செய்து விட்டார்கள். கஸ்தூரிபாயிடமும் சாமியார் வாதம் செய்து பார்த்தார். கஸ்தூரிபாய் ஒரே பேச்சில் சாமியாரின் வாயடங்கச் செய்துவிட்டார்:- "சுவாமி! தாங்கள் என்ன சொன்னாலும் என் விஷயத்தில் பிரயோஜனப் படாது. சாஸ்திரத்தில் என்ன சொல்லியிருக்கிறதோ எனக்குத் தெரியாது. ஆனால் ஜீவ ஹிம்சை கூடாது என்று எனக்குத் தெரியும். இறைச்சி உணவு கூடாது என்பதும் எனக்குத் தெரியும். என் விரதத்தைக் கைவிட்டாவது உயிர் வாழ்ந்திருக்க எனக்கு விருப்பமில்லை. ஆகையால் என்னைத் தொந்தரவு செய்யவேண்டாம்!"
போலிச் சாமியார் வந்த வழியைப் பார்த்துக் கொண்டு போய்ச் சேர்ந்தார். அன்னை கஸ்தூரிபாயின் தேகநிலையும் வர வர அபிவிருத்தியடைந்து வந்தது.
---------------
47. கறுப்புச் சட்டம்
தம்பி! காந்தி மகாத்மாவினுடைய வாழ்க்கையில் மிக முக்கியமான கட்டத்துக்கு இப்போது வந்திருக்கிறோம். தென்னாப்பிரிக்காவில் சத்தியாக்கிரஹ இயக்கம் எப்படி ஆரம்பமா யிற்று என்று பார்க்கப் போகிறோம். உலக சரித்திரத்தில் இடம் பெறவேண்டிய அந்தச் சம்பவத்துக்குப் போகுமுன், தென்னாப்பிரிக்காவின் பழைய சரித்திரத்தைக் கொஞ்சம் ஞாபகப் படுத்திக் கொள்ளலாம்.
ஆப்பிரிக்காக் கண்டம் என்று வழங்கும் பூப்பிரதேசம் மிக விஸ்தாரமான து. ஆசியாவுக்கு அடுத்தபடியானது. இந்தியாவைப் பெரிய தேசம் என்று சொல்கிறோமல்லவா ? பல இந்தியாக்களை ஆப்பிரிக்காவிற்குள் வைத்து அடக்கிவிடலாம். ஆப்பிரிக்காவில் தென்னாப்பிரிக்கா என்று வழங்கும் பகுதி மட் டும் ஏறக்குறைய இந்தியா அவ்வளவு பெரிதானது.
ஆப்பிரிக்காவின் பூர்வீகக் குடிகள் நீக்ரோவர் என்னும் சாதியார். நீக்ரோ சாதியில் பல உட்பிரிவுகள் உண்டு. அவர் களில் ஸ லூக்கள் எனப்படுவோர் தென்னாப்பிரிக்காவில் வசித் தனர். ஸலூக்களிடம் சில சிறந்த குணங்கள் உண்டு. ஆயினும் அவர்கள் கல்வி யறிவும் பகுத்தறிவும் இல்லாத அநாகரிக மக்கள். மனிதனுடைய அறிவுக்கு எட்டாத கடவுள் என்னும் மகாசக்தி ஒன்று உண்டு என்பதை அவர்கள் ஒருவாறு உணர்ந்திருந்தார்கள். ஆனால் கடவுளை வணங்குவதற்கு அவர்கள் கடைப்பிடித்த முறைகள் அநாகரிகமானவை. பகுத்தறிவுக்கு ஒவ்வாதவை. வேட்டையாடிக் கொன்ற மிருகங்களின் மாமிசமே அவர்களுடைய முக்கியமான உணவு. குருட்டு நம்பிக்கைகள் அவர்களுக்கு ரொம்பவும் அதிகம். இதனால் மூர்க்க வீரம் உள்ள பலசாலிகளானாலும் பயப் பிராந்தி உடையவர்களா யிருந்தார்கள். வெள்ளைக்காரர்கள் துப்பாக்கி உபயோகித்துச் சுட்டதை முதன் முதலில் பார்த்ததும் ஏதோ ஒரு மர்மமான சக்தி அவர்களிடம் இருப்பதாக எண்ணிக் கொண்டார்கள்-
அதன் காரணமாக வெள்ளைக்காரர்களிடம் பயப் பிராந்தி கொண்டார்கள். இந்தக் குருட்டு நம்பிக்கை அவர்களை விட்டு அகலவே யில்லை. ராட்சதனைப்போல் தேக பலமுள்ள ஸலு ஒரு சிறு வெள்ளைக்காரக் குழந்தையைக்கண்டு நடுங்குவான்.
போர்ச்சுகல் தேசத்தைச் சேர்ந்த வாஸ்கோடி காமா என்பவன் இந்தியாவைத் தேடிக் கொண்டு கப்பலில் வந்த போது கேப் ஆப் குட்ஹோப் என்று வழங்கும் ஆப்பிரிக்காவின் தெற்கு முனையைக் கண்டுபிடித்தான். அந்த நாட்டின் இயற்கை வளங்களையும் செல்வங்களையும் பற்றிய விவரங்கள் ஐரோப்பாவில் பரவின. அது முதல் ஐரோப்பிய சாதியார் பலர் தென்னாப்பிரிக்காவுக்கு வந்து குடியேறினார்கள். அப்படிக் குடியேறியவர்களில் மிகவும் முக்கியமானவர்கள். ஆங்கிலேயரும் டச்சுக்காரரும். முதன் முதலில் கேப் காலனி, நேட்டால் என்னும் மாகாணங்கள் ஏற்பட்டன. இரண்டும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கு உட்பட்டிருந்தன. இந்த மாகாணங் களில் குடியேறி யிருந்த டச்சுக்காரர்களுக்குப் 'போயர்கள்' என்ற பெயர் ஏற்பட்டது. ஆங்கிலேயருக்கும் போயர்களுக்கும் அடிக்கடி தகராறுகள் ஏற்பட்டு வந்தன. இந்தத் தகராறுகளில் பிரிட்டிஷ் ஏகாதிபத்திய சர்க்கார் ஆங்கிலேயருக்குச் சாதகமாக இருப்பதே இயல்பு அல்லவா? இதனால் போயர்களுக்கு ஆத்திரமும் அருவருப்பும் உண்டாயின. அவர்கள் தாங்கள் அதுவரை வசித்து வந்த இடங்களை விட்டு விட்டு, தென்னாப்பிரிக்காவில் பிரிட்டிஷ் ஆதிக்கியத்துக்கு அப்பால் இருந்த புதிய பிரதேசங்களுக்குச் சென்று குடியேறிச் சுதந்திரக் குடியரசுகளை ஏற்படுத்திக் கொண்டார்கள். இப்படி ஏற்பட்ட சுதந்திர போயர் குடியரசுகளுக்கு டிரான்ஸ்வால் என்றும், ஆரஞ்சு பிரீ ஸ்டேட் என்றும் பெயர்கள் ஏற்பட்டன.
"போயர்கள் தனிக் குடியரசுகள் ஏற்படுத்திக் கொண்டதை ஆங்கிலேயர் விரும்பவில்லை. டிரான்ஸ்வால் மாகாணத்தில் தங்கச் சுரங்கங்களும் வைரச் சுரங்கங்களும் ஏராளமாகக் கண்டுபிடிக்கப் பட்டன. இதற்குப் பிறகு ஆங்கிலேயரின் வயிற்றெரிச்சலும் ஆத்திரமும் அதிகமாயின. சில இங்கிலீஷ்காரர்கள் தங்களுடைய சொந்தப் பொறுப்பில் இரகசியமாக ஒரு படை தயார் செய்துகொண்டு, ஜோகானிஸ்பர்க் வைரச் சுரங்கங்களைப் பலாத்காரமாகக் கைப்பற்றுவதற்காகச் சென்றார்கள். அப்போது டிரான்ஸ்வால் குடியரசின் தலைவராயிருந்த பிரஸிடெண்ட் குரூகர் மகா சாமர்த்திய சாலி. படை யெடுப்பின் விஷயம் அவருக்கு ஏற்கெனவே தெரிந்திருந்தது. எனவே படையெடுத்து வந்த ஆங்கிலேயரின் படையைப் படும் தோல்வி அடையச் செய்தார். ஜோகானிஸ்பர்க்கில் சில இங்கிலீஷ் முதலாளிகளும் இருந்தார்கள். அவர்கள் படையெடுத்து வந்த இங்கிலீஷ் படைக்குச் சாதகமாகக் கலகம் செய்யத் தயாரா யிருந்தார்கள் என்று கண்டுபிடித்து அவர்களையும் குரூகர் கைது செய்தார். அந்த முதலாளிகளுக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. அவர்கள் பேரில் கருணை காட்டவேண்டும் என்று பிரிட்டிஷ் ஏகாதிபத்திய மந்திரிகள் போயர் சர்க்காருக்குத் தந்தி அடித்தார்கள். பிரசிடெண்டு குருகரும் தம்முடைய கட்சி பூரண வெற்றியடைந்து விட்டபடியால் கலகக்காரர்களை மன்னித்து விட்டு விட்டார்.
விஷயம் இத்துடன் முடிவடைந்து விடவில்லை. ஆங்கிலேயர் தங்களுக்கு ஏற்பட்ட தோல்வியையும் அவமானத்தையும் மறக்கவில்லை. பிரிட்டிஷ் ஏகாதிபத்திய சர்க்காரும் அப்படித் தான். எனவே டிரான்ஸ்வாலிலும் ஆரஞ்சு ஸ்டேட்டிலும் இருந்த சுதந்திர போயர் அரசாங்கங்களை பிரிட்டிஷார் பலவிதத்திலும் நெருக்க ஆரம்பித்தார்கள். நாளுக்குநாள் நெருக்கடி முற்றிக்கொண்டு வந்தது. யுத்தம் மூண்டுதான் தீரும் என்ற நிலைமை ஏற்பட்டபோது போயர்கள் பிரிட்டிஷார் யுத்தம் தொடங்கும் வரையில் காத்திருக்க விரும்பவில்லை. தாங்கள் முந்திக் கொள்ள விரும்பினார்கள். ஆரம்பத்தில் போயர்கள் படையெடுத்துத் தாக்கியது பிரிட்டிஷாரைத்திக்கு முக்காடச் செய்தது. போயர் சைனியம் வெற்றிமேல் வெற்றி அடைந்து வந்தது. பிறகு இங்கிலாந்திலிருந்து பிரசித்தி பெற்ற தளபதியான லார்ட் கிச்சனர் வந்து சேர்ந்தார். சில நாளைக்கெல்லாம் யுத்தப்போக்கு திரும்பியது. போயர் சைனியம் முறியடிக்கப் பட்டது. ஆயினும் போயர்களின் உறுதிமட்டும் தளரவில்லை. தோல்விக்குப் பிறகும் பணிய மறுத்தார்கள். போயர் ஸ்திரீகள் ஆண் பிள்ளைகளைக் காட்டிலும் தீரம் காட்டினார்கள், எனவே, ஆயிரக்கணக்கான போயர் ஆண்களையும் பெண்களையும் ஒன்று திரட்டி இரும்பு முள் வேலிக்குள் அடைத்துக் காவல் போட்டு வைக்க வேண்டி நேர்ந்தது. காவலுக்குள் இருந்தவர்கள் சொல்ல முடியாத கஷ்டங்களுக்கு உள்ளானார்கள். இங்கிலாந்தில் இருந்த சில ஆங்கிலப் பெரியார்களுக்கு இது பொறுக்கவில்லை. மிஸ்டர் ஸ்டெட் என்பவர் "தென்னாப்பிரிக்காவில் இங்கிலீஷ் படை தோற்கவேண்டும்" என்று பகிரங்கமாகப் பிரார்த்தனை செய்தார். பிரிட்டிஷ் பொது மக்களின் அபிப்பிராயமும் அந்தப் பக்கம் திரும்பியது. இதன் பலனாக, ஜயித்த பிரிட்டிஷ் சர்க்கார் வலியச் சென்று தோற்ற போயர்களுடன் சமரசம் பேச வேண்டிய அவசியம் நேர்ந்தது. கடைசியில் ஒரு சமாதான உடன்படிக்கை 'வெரீ நிகில் ' என்ற இடத்தில் ஏற்பட்டது. இதன்படி போயர் குடியரசுகள் பெயரளவில் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்துடன் தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டு மென்றும் மற்றப்படி பூரண சுதந்திரத்துடன் ஆட்சி நடத்தலாம் என்றும் ஏற்பட்டது.
தென்னாப்பிரிக்காவுக்குப் பூரண சுதந்திரம் என்று சொல்லும்போது அங்கேயிருந்த ஆங்கிலேயருக்கும் போயருக்கும் பூரண சுதந்திரம் என்றுதான் பொருள். பூர்வீகக் குடிகளான நீக்ரோவர்களுக்குச் சுதந்திரம் கிடையாது ; இங்கிலீஷ்காரர்களைப் போலவே வந்து குடியேறிய இந்தியர்களுக்கும் சுதந்திரம் கிடையாது.
இந்தியர்கள் தென்னாப்பிரிக்காவில் வந்து குடியேறிய வரலாறு பற்றியும் இங்கே ஞாபகப்படுத்திக் கொள்ளலாம். முதன் முதலில் தென்னாப்பிரிக்காவில் குடியேறிய ஐரோப்பியர்கள் ஏராளமான பூப்பிரதேசங்களைத் தங்களுக்குச் சொந்தமென்று வளைத்துக் கட்டிக் கொண்டார்கள். ஆனால் அந்த நிலங்களைப் பண்படுத்திச் சாகுபடி செய்ய அவர்களுக்குக் கூலியாட்கள் தேவையா யிருந்தது. ஆப்பிரிக்கா சுதேசிகளோ சரியாக வேலை செய்யமாட்டார்கள். இந்தியர்கள் நல்ல உழைப்பாளிகள் என்பது பிரசித்தம். ஆகையால் இந்தியாவிலிருந்து ஐந்து, வருஷம் வெள்ளைக்காரர் கீழ் வேலை செய்வது என்னும் ஒப் பந்தத்தின் பேரில் ஆட்களைக் கொண்டுவர அவர்கள் விரும்பினார்கள். ஐந்து வருஷம் ஆன பிறகு அந்தக் கூலி இந்தியர்கள் தென்னாப்பிரிக்காவில் நிலம் வாங்கிக்கொண்டு சுதந்திரமாக வாழலாம் என்று ஆசை காட்டினார்கள். அப்போது இந்தியாவை பிரிட்டிஷார் ஏறக்குறைய யதேச்சாதிகாரத்துடன் ஆண்டார்கள். தென்னாப்பிரிக்கா வெள்ளைக்காரர்களுக்கு உதவி செய்ய இந்தியாவின் பிரிட்டிஷ் சர்க்கார் விரும்பினார்கள், ஒப்பந்தக் கூலி முறைக்குச் சம்மதித்தார்கள். இதன்படி 1860-ம் வருஷத்தில் முதன் முதலாக இந்தியத் தொழிலாளிகள் ஒப்பந்தக் கூலி முறையின் கீழ் தென்னாப்பிரிக்கா சென்றார்கள், நாளடைவில் அதிகமாகச் சென்றார்கள். ஒப்பந்தத் தவணை முடிந்த பிறகு பலர் சுதந்திரமாக வாழவும் ஆரம்பித்தார்கள். பாட்டாளி இந்தியர்களைத் தொடர்ந்து இந்திய வியாபாரிகளும் அவர்களுடைய குமாஸ்தாக்களும் தென்னாப்பிரிக்கா சென்றார் கள். அவர்கள் தொழிலாளி இந்தியர்களுடனும் ஆப்பிரிக்காவின் சுதேசிகளுடனும் வியாபாரம் செய்தார்கள். வெள்ளைக்கார வியாபாரிகள் இது தங்களுடைய தொழிலுக்குப் போட்டி என்பதாக ஆத்திரம் கொண்டார்கள்.
தொழிலாளி இந்தியர்கள் சொந்தமாக நிலம் வாங்கிப் பயிர் செய்வது பற்றியும் பொதுவாக வெள்ளைக்காரர்களுக்கு அசூயை ஏற்பட்டது. இப்படியே விட்டுக் கொண்டுபோனால் ஆப்பிரிக்காவில் வெள்ளைக்காரர்களின் ஆதிக்கத்துக்கு ஆபத்து வந்துவிடும் என்றும் கறுப்பு மனிதர்களின் கை ஓங்கிவிடும் என்றும் வெள்ளைக்காரர்கள் எண்ணினார்கள். எனவே, இந்திய வியாபாரிகளுக்கும், ஒப்பந்தத் தவணை முடிந்து சுதந்திர வாழ்க்கை தொடங்கிய இந்தியத் தொழிலாளிகளுக்கும் பல இடையூறுகள் விளைவிக்கத் தொடங் கினார்கள். வெள்ளைக்காரர்கள் தனிப்பட்ட ஹோதாவிலும் இந்தியர்களுக்குத் தொல்லை கொடுத்தார்கள். சர்க்கார் என்ற முறையில் இந்தியர்களுக்கு விரோதமான சட்டதிட்டங்களும் செய்தார்கள். இப்படி இந்தியர்களுக்கு அநீதி இழைப்பதில், பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தைச் சேர்ந்த நேட்டால்-கேப் காலனி மாகாணங்களோடு டிரான்ஸ்வால்-ஆரஞ்சு பிரீ ஸ்டேட் மாகா ணங்களில் இருந்த போயர் குடியரசுகள் போட்டியிட்டன. ஆங்கிலேயரை விடப் போயர்கள் இந்தியர்கள் விஷயத்தில் அதிகக் கடுமையா யிருந்தார்கள்.
இத்தகைய நிலைமையில் 1893-ம் வருஷத்தில் தெய்வ சங்கல்பத்தினால் காந்தி மகாத்மா தென்னாப்பிரிக்கா போய்ச் சேர்ந்தார். தாதா அப்துல்லா கம்பெனியார் சார்பில் டிரான்ஸ் வாலில் நடந்து வந்த ஒரு வழக்கில் உதவி செய்வதற்காகக் காந்திஜி போனார். ஆனால் போன உடனேயே அவர் அடைந்த அநுபவங்கள் தென்னாப்பிரிக்கா இந்தியர்களின் பரிதாப நிலையை அவருக்கு உணர்த்தின. நேட்டால் காங்கிரஸ் ஏற்படுத்தி இந்தியரின் வோட்டுரிமையை நிலைநாட்டக் கிளர்ச்சி நடத்தினார். ஒப்பந்தம் நீங்கிய இந்தியத் தொழிலாளிகளின் மீது விதிக்கப்பட்ட தலைவரியை எதிர்த்துக் கிளர்ச்சி நடத்தினார். மற்றும் இந்தியர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள், எல்லாவற்றையும் எதிர்த்துப் போராடினார். ஆனால் இதுவரையில் கையாண்ட போராட்ட முறைகள் மகஜர் அனுப்புவது, மகாநாடு கூட்டுவது, பத்திரிகைகளில் எழுதுவது, வெளிநாட்டில் பிரசாரம் செய்வது ஆகிய காரியங்களோடு நின்றன.
1899 - ஆம் ஆண்டில் போயர் யுத்தம் ஆரம்பித்தபோது காந்திஜி பிரிட்டிஷ் தரப்பில் இந்தியர்கள் உதவி செய்யவேண்டு மென்று கருதினார். அதற்காக ஒரு சைனிய சேவைப்படை அமைத்து, அதற்குத் தலைமை வகித்துப் போர்க்களம் சென்றார்.
இவ்விதம் நெருக்கடியான சமயத்தில் உதவி செய்ததினால் எதிர்பார்த்த பலன் கிட்டவில்லை. போயர் யுத்தத்துக்குப் பிறகு டிரான்வாலில் ஆசிய இலாகா என்பதாக ஒன்று ஏற்பட்டது. இந்த இலாகாவினால் இந்தியர்களுக்கு ஏற்பட்ட தொல்லைகளை நீக்கக் காந்திஜி பாடுபட்டார். ஓரளவு வெற்றியும் கிடைத்தது. பின்னர் ஸலூ கலகத்தின் போதும் காந்திஜியின் தலைமையில் இந்திய சேவைப்படை தொண்டு செய்தது.
இதனால் தென்னாப்பிரிக்காவில் இந்தியர்களின் குறைகள் நீங்கும் என்றும் அவர்களுடைய அந்தஸ்து உயரும் என்றும் எதிர்பார்க்கப் பட்டது. இப்பேர்ப்பட்ட சமயத்திலே தான் டிரான்ஸ்வாலை ஆண்ட போயர் சர்க்கார் இந்தியரின் தலையிலே போடுவதற்கு ஒரு பெரிய வெடிகுண்டைத் தயாரித்தார்கள். மிஸ்டர் லயனல் கர்ட்டிஸ் என்ற ஒரு ஆங்கிலேய 'மகான்' அப்போது. தென்னாப்பிரிக்காவுக்கு வந்திருந்தார். இந்தியர்கள் கை ஓங்குவதற்கு இடங் கொடுத்தால் தென்னாப்பிரிக்காவில் ஐரோப்பியரின் வாழ்வுக்கே அபாயம் வந்துவிடும் என்று அவர் சொன்னார். அதைத் தடுப்பதற்குச் சில யோசனைகளைச் சொன்னார்.
இந்த யோசனைகளை டிரான்ஸ்வால் சர்க்கார் ஏற்றுக்கொண்டு அவற்றை அநுசரித்த ஆசியச் சட்டத் திருத்த மசோதா ஒன்றைத் தயாரித்தார்கள், இந்த மசோதாவின் முக்கியமான நிபந்தனை என்ன வென்றால், டிரான்ஸ்வாலில் அப்போது வசித்த ஒவ்வொரு இந்தியரும் தாங்கள் டிரான்ஸ்வாலில் வசிப்பதற்குப் புதிதாக அநுமதிச் சீட்டுப் பெறவேண்டும். அதற்காக விண்ணப்பம் போடவேண்டும். விண்ணப்பத்தில் பெயர், சாதி, வயது, இருப்பிடம் ஆகியவை குறிப்பிடவேண்டும். அது மட்டும் போதுமா? போதாது. விண்ணப்பத்தை அங்கீகரிக்க வேண்டிய ரிஜிஸ்ட்ரார், ஆசாமியின் அங்க அடையாளங்களைக் குறித்துக் கொள்வார். இது மட்டுமல்லாமல் ஒவ்வொரு இந்தியரும் தங்களுடைய பத்து விரல்களையும் கறுப்பு மையில் தோய்த்து ரேகை அடையாளம் கொடுக்க வேண்டும். இப்படிப் பதிவு செய்து கொள்ளாதவர்களுக்கு டிரான்ஸ்வாலில் வசிக்கும் உரிமை கிடையாது.
குழந்தைகளுக்காகப் பெற்றோர்கள் விண்ணப்பம் போடவேண்டும். ஸ்திரீகளும் குழந்தைகளும் கூட ரிஜிஸ்ட்டிரார் காரியாலத்துக்குப் போய்ப் பத்து விரல்களின் அடையாளத்தையும் பதிவு செய்ய வேண்டும், விண்ணப்பத்தின் பேரில் கிடைக்கும் அநுமதிச் சீட்டை இந்தியர்கள் எப்போதும் கையில் கொண்டு போகவேண்டும். எந்தப் போலீஸ்காரன் எப்போது கேட்டாலும் காட்ட வேண்டும். காட்டாவிட்டால் அபராதமோ சிறைவாசமோ விதிக்கப்படும். இத்தகைய அவமானகரமான நிபந்தனைகள் அடங்கிய நகல் மசோதா 1906-ல் டிரான்ஸ்வால் சர்க்கார் கெஜட்டில் பிரிசுரிக்கப்பட்டது. இந்தியர்கள் புதிதாக டிரான்ஸ் வாலுக்குள் வருவதைத் தடுப்பதற்காக இந்த ஏற்பாடு செய்யப்படுகிறது என்று காரணம் சொன்னார்கள்.
ஸ்லூக் கலகத்தில் காந்திஜி சேவை செய்து கொண்டிருந்த சமயத்தில் இந்த மசோதா வெளியாயிற்று. அதை உடனே சில நண்பர்கள் காந்திஜிக்கு அனுப்பினார்கள், அதைப் படித்துப் பார்த்தபோது காந்திஜியின் உள்ளம் கொதித்தது. இந்தியர்கள் இத்தகைய அவமானங்களுக்கு உட்படுத்தப் படுவதைக் கண்டு ஆத்திரப்பட்டார். அச்சமயம் டிரான்ஸ் வாலில் வசித்த சுமார் பதினையாயிரம் இந்தியர்களை மட்டும் அது பாதிப்பதாகக் காந்தி மகான் கருதவில்லை. இந்தச் சட்டத்துக்கு இடங் கொடுத்தால் தென்னாப்பிரிக்காவிலுள்ள இந்தியர்கள் எல்லாருடைய வாழ்வையுமே அது பாதிக்கும் என்று காந்திஜி கருதினார். இதைப் பார்த்து மற்ற மாகாணங்களும் அதுமாதிரியான சட்டங்களைச் செய்யக்கூடும் அல்லவா ?
நேட்டாலில் சுதந்திரம் பெற்ற ஒப்பந்தக் கூலிகளை மட்டும் பாதிக்கும் சில சட்டங்கள் அமுலில் இருந்தன. ஆனால் இந்த டிரான்ஸ்வால் சட்டமோ, எல்லா இந்தியர்களையும் பாதிப்பது; அதோடு நேட்டால் சட்டங்களை விடக் கடுமையானது, அவ மானகரமானது. ஆகவே இந்தக் கொடிய சட்டத்தைக் 'கறுப்புச் சட்டம் ' என்று காந்திஜி அழைத்தார்.
ஜோகானிஸ்பர்க் வந்த மறுதினமே சில பிரபல இந்தியர்களின் கூட்டம் ஒன்று கூட்டினார். அதில் மசோதாவின் நிபந்தனைகளை ஒவ்வொன்றாக எடுத்து விளக்கினார். அதை யெல்லாம் கேட்டுத் தெரிந்து கொண்டவர்கள் எல்லாரும், "இவ்வளவு மோசமான நிபந்தனைகளா?" என்று ஆச்சரியப்பட்டார்கள். ஒருவர் மிக்க ஆத்திரத்துடன், "யாராவது என் மனைவியிடம் வந்து ரிஜிஸ்ட்ரேஷன் சர்டிபிகேட் எங்கே என்று கேட்டால் அவனை உடனே நான் சுட்டுத் தள்ளிவிடுவேன். அதனால் ஏற்படும் பலாபலன்களை அனுபவிப்பேன் !" என்றார். காந்திஜி அவரைச் சமாதானப்படுத்தினார். இப்படிப் படபடப்பாகப் பேசுவதினால் பயனில்லை என்றும், இந்திய சமூகம் ஒருமுகமாக இந்தக் கறுப்பு மசோதாவை எதிர்த்துப் போராட வேண்டும் என்றும், நிதானமாகவும் தீர்க்கமாகவும் ஆலோசித்து நடவடிக் கைகளைப் பற்றித் தீர்மானிக்க வேண்டும் என்றார். எல்லாரும் அதற்கு இணங்கினார்கள். எனவே டிரான்ஸ்வால் இந்தியர் களின் பொதுக் கூட்டம் ஒன்று கூட்டி அதில் மேல் நடவடிக்கைகளைப் பற்றி முடிவு செய்வது என்று தீர்மானமாயிற்று.
-------
48. சத்தியாக்கிரஹ உதயம்
எம்பயர் தியேட்டர் என்னும் நாடகக் கொட்டகையில் 1906-ம் வருஷம் செப்டம்பர் மீ 11 டிரான்ஸ்வால் மாகாணத்தின் பல பகுதிகளிலிருந்தும் வந்த இந்தியர்கள் கூடினார்கள். கொட்டகையில் எள்ளுப் போட்டால் தரையில் விழாது. அவ்வளவு நெருங்கிய கூட்டம். சுமார் மூவாயிரம் பேர் இருக்கும். ஜனாப் அப்துல் கனி என்னும் வர்த்தகப் பிரமுகர் கூட்டத்துக்குத் தலைமை வகித்தார். பொதுத் தீர்மானங்கள் மூன்றுக்குப் பிறகு கறுப்பு மசோதாவைப் பற்றிய நாலாவது தீர்மானம் வந்தது. கறுப்புச் சட்டம் அமுலுக்கு வரும் பட்சத்தில் அதற்கு இந்தியர்கள் உட்படுவதில்லையென்றும், உட்படத்தினால் விளையும் கஷ்டங்கள் எல்லாவற்றையும் பொறுமையுடன் சகித்துக் கொள்வதென்றும் அந்தத் தீர்மானம் சொல்லிற்று.
கறுப்புச் சட்டத்தின் கொடுமைகளைக் காந்திஜி விளக்கிச் சொல்லித் தீர்மானத்தைப் பிரேரித்த பிறகு பலர் அதை ஆமோதித்துப் பேசினார்கள். அப்படிப் பேசியவர்களில் ஒருவர் சேத் ஹாஜி ஹபீப். அவர் 'ஆண்டவன் ஆணை' யாக மேற்படி தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்று சொன்னதுடன், தாமே கடவுள் பேரில் ஆணைவைத்து. "என்ன நேர்ந்தாலும் நான் கறுப்புச் சட்டத்துக்கு உட்படேன்" என்று கூறினார். இதைக் கேட்டதும் காந்திஜி தம்முடைய பொறுப்பை நன்கு உணர்ந்தார். தீர்மானத்தை நிறைவேற்றும் விஷயத்தில் இன்னும் முன் ஜாக்கிரதையா யிருக்கவேண்டும் என்று கருதினார்.
சாதாரணமாகப் பொதுக்கூட்டங்களிலும் மகாநாடுகளிலும் பல தீர்மானங்கள் செய்வதுண்டு. பிற்பாடு அத்தீர்மானங்களை மாற்றுவதும் உண்டு. தீர்மானத்தை மாற்றாவிட்டா லும், அதை அனுசரித்து நடவாமல் இருப்பதும் உண்டு. பல மகாநாடுகளின் தீர்மானங்கள் காகித அளவிலும் பேச்சளவிலும் நின்றுவிடுகின்றன.
ஆனால் இப்போது டிரான்ஸ்வால் இந்தியர்கள் நிறைவேற்றுவதற்கிருந்த தீர்மானம் அந்த ரகத்தைச் சேர்ந்ததல்ல, அது வெறும் தீர்மானம் மட்டுமல்ல; ஆண்டவன் சாட்சியாகச் சபதம் கொள்வதாகும். இந்த விதத்தில் ஒருமுறை சபதம் செய்துவிட்டால் பிறகு அதைக் கடைப்பிடித்தே தீரவேண்டும் என்று காந்திஜி கருதினார். இதை அங்குள்ளவர்களுக் கெல்லாம் நன்கு விளக்கிக்கூற விரும்பி, பொதுக்கூட்ட அக்கிராசனரின் அநுமதி பெற்று, இரண்டாம் முறையும் பேசலுற்றார். அவ்வாறு காந்திஜி பேசியதன் சாராம்சம் பின்வருமாறு:
"இதற்கு முன்னால், நாம் நிறைவேற்றிய தீர்மானங்களுக்கும் இந்தத் தீர்மானத்துக்கும் வித்தியாசம் அதிகம் உண்டு. இந்தத் தீர்மானத்தை நாம் கடைப்பிடிப்பதைப் பொறுத்தே இந்த நாட்டில் நமது வருங்கால வாழ்வு ஏற்படும். நம்முடைய நண்பர் ஹாஜி ஹபீப் கூறிய யோசனைப்படி நாம் செய்தோமானால், இது தீர்மானமாக மட்டுமல்லாமல் ஆண்டவன் சாட்சியாக எடுத்துக்கொண்ட பிரதிக்ஞையாகும். இந்த முறையில் தீர்மானத்தை நிறைவேற்றுகிற உத்தேசத்துடன் இக்கூட்டத் துக்கு நான் வரவில்லை. ஆனால் ஹாஜி ஹபீப் கூறியதைக் கேட்ட பிறகு பிரதிக்ஞை எடுத்துக்கொள்ள வேண்டுமென்றே நானும் கருதுகிறேன். ஆனால் அப்படி எடுத்துக்கொள்வதில் ஏற்படும் பொறுப்பை உங்களுக்கு நான் நன்கு எடுத்துக் காட்டுவது என் கடமையாகும்.
"நாம் அனைவரும் - ஹிந்துக்களும் முஸ்லிம்களும் - கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள். கடவுள் சாட்சியாக எடுத்துக் கொண்ட விரதத்துக்குப் பங்கம் செய்தோமானால் கடவுள் முன்னிலையிலும் மனிதர் முன்னிலையிலும் குற்றவாளிகள் ஆவோம். காசுகளில் செல்லாக் காசு எப்படித் தள்ளுபடியோ, அவ்விதமே விரதபங்கம் செய்கிறவன் மனிதத் தன்மையை இழந்தவனாகிறான். ஆகையால் நன்றாக யோசனை செய்து மிக முக்கியமான சந்தர்ப்பங்களில் மட்டும் விரதம் எடுத்துக்கொண்ட பிறகு என்ன நேர்ந்தாலும் விரதத்தைக் காப்பாற்ற வேண்டும்.
"தென்னாப்பிரிக்கா இந்திய சமூகத்துக்கு இப்போது அத்தகைய மிக நெருக்கடியான சந்தர்ப்பம் நேர்ந்திருப்பதாகவே நான் நம்புகிறேன். கடவுள் சாட்சியாகப் பிரதிக்ஞை எடுத்துக்கொள்ள வேண்டிய சந்தர்ப்பம் இதைக் காட்டிலும் வேறு ஒன்று இருக்க முடியாது. ஆனால் அப்படிப் பிரதிக்ஞை எடுத்துக்கொள்ளுமுன் அதனால் ஏற்படக்கூடிய விளைவுகளை யோசித்துப் பார்க்க வேண்டும். ஒவ்வொருவரும் தங்களுடைய அந்தரங்கத்தைச் சோதித்துப் பார்க்க வேண்டும். நாம் இந்தத் தீர்மானம் செய்த மாத்திரத்தில் தென்னாப்பிரிக்கா அரசாங்கத் தார் வழிக்கு வந்துவிடுவார்கள் என்ற நம்பிக்கையின் பேரில் தீர்மானம் நிறைவேற்றக்கூடாது. ஒருவேளை அப்படி நேர்ந்தாலும் நேரலாம். ஆனால் அதற்கு நேர்மாறாக நமக்குப் பல விதமான கஷ்டங்கள் ஏற்படவும் கூடும். இங்கே நாம் மூவாயிரம் இந்தியர்கள் கூடியிருக்கிறோம். இந்தக் கூட்டத்துக்கு வராத இந்தியர்கள் வெளியில் பதினாயிரம் பேர் இருக்கிறார்கள். அவர்கள் இந்தத் தீர்மானத்தை ஒப்புக்கொள்ளாமல் கறுப்புச் சட்டத்துக்குத் கீழ்ப்படிந்து நடத்தல் சாத்தியமே. அப்போது. நம்முடைய கஷ்டங்கள் மேலும் அதிகமாகும். நம்மைச் சிறைக்கு அனுப்புவார்கள். சிறையில் நம்மை அவமதிப்பார்கள். கடுங்காவல் விதித்துக் கடினமான வேலை செய்யப் பண்ணுவார்கள். முரட்டு வார்டர்கள் கசையினால் நம்மை அடிப்பார்கள். பட்டினி கிடக்க நேரிடும். கடுங்குளிரினாலும் கொடிய வெப்பத்தினாலும் கஷ்டப்பட நேரிடும். பெருந் தொகை அபராதம் விதித்து நம்முடைய சொத்துக்களை யெல்லாம் பறிமுதல் செய்தாலும் செய்வார்கள். இந்த நாட்டைவிட்டு அப்புறப்-படுத்துவார்கள். இவ்வளவு கஷ்டங்களுக்கும் உள்ளானாலும் எடுத்துக்கொண்ட பிரதிக்ஞையைக் கைவிடுவ தில்லை யென்ற உறுதியோடு இருக்க முடியுமானால் தான் இந்தத் தீர்மானத்தைக் கடவுள் சாட்சியாகப் பிரதிக்ஞை செய்து. நிறைவேற்றுவதில் அர்த்தம் உண்டு.
"இன்னும் ஒரு முக்கியமான விஷயம். இங்கே இப்போது பிரதிக்ஞை செய்து கொள்கிறவர்களில் சிலர் மனோ திடம் இழந்து பிரதிக்ஞையைக் கைவிட்டு விடுவதாக வைத்துக் கொள்ளலாம். அதனால் மற்றவர்களுடைய பொறுப்புத் தீர்ந்துவிடாது. நாம் ஒவ்வொருவரும் தனித்தனியாகப் பிரதிக்ஞை செய்வதாகவே எண்ண வேண்டும். மற்ற எல்லாரும் கைவிட்டாலும் நான் கைவிடுவதில்லை' என்று ஒவ்வொருவரும் உறுதிகொள்ள வேண்டும். இந்திய சமூகம் முழுதும் ஒரேமுகமாக ஒற்றுமையுட னிருந்தால் நம்முடைய நோக்கம் விரைவில் கைகூடும். நம்மில் பலர் உறுதி இழந்து விட்டால் போராட்டம் நீடித்து நடக்க வேண்டியதாயிருக்கும். ஆனால் ஒரு சிலராவது எல்லாக் கஷ்டங்களுக்கும் துணிந்து உறுதியுடன் இருந்து வருவார்களானால் இறுதியில் நமக்கு வெற்றி கைகூடும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. என்னைப் பொறுத்த வரையில், நான் இந்தப் பிரதிக்ஞை எடுத்துக்கொண்டு விட்டால், பிறகு நீங்கள் எல்லாரும் கைவிட்டுப் போய் நான் ஒருவனே தன்னந்தனியாக நிற்க நேர்ந்தாலும் என்னுடைய உறுதியைக் கைவிடமாட்டேன். இதைக் கர்வம் காரணமாக நான் சொல்லவில்லை. உங்களுக்கு எச்சரிக்கையா யிருப்பதற்காகவும், நீங்கள் ஒவ்வொருவரும் அத்தகைய மன உறுதி கொள்ளவும் வேண்டியே கூறினேன்."
இவ்விதம் காந்திஜி சொல்லிவிட்டு உட்கார்ந்தார். சபையோர் மிகக் கவனமாகக் கேட்டுக்கொண்டிருந்தார்கள். காந்திஜிக்குப் பிற்பாடு பேசியவர்களும், அவருடைய கருத்தை யொட்டிச் சபையோரின் பொறுப்பை எடுத்துக்காட்டிப் பேசினார்கள். கடைசியாக, கூட்டத்தின் அக்கிராசனர் எழுந்தார். அவரும் விஷயத்தைத் தெளிவுபடுத்திவிட்டுச் சபையோரின் அபிப்பிராயத்தைக் கேட்டார். சபையோர் ஒரு முகமாகத் தீர்மானத்தை நிறைவேற்றுவதற்குச் சாதகமான அபிப்பிராயம் தெரிவித்தார்கள். மூவாயிரம் இந்தியர்களும் எழுந்து நின்று கடவுள் சாட்சியாகக் கறுப்புச் சட்டத்துக்கு உட்படுவதில்லை யென்று சபதம் செய்தார்கள்.
இவ்விதமாக, 1906-ம் வருஷம் செப்டம்பர் 11௳, உலக சரித்திரத்தில் ஒரு புதிய அத்தியாயம் ஆரம்பமாயிற்று. "சத்தியாக்கிரஹம் " என்னும் அற்புதமான புதிய ஆயுதம் அன்று கண்டு பிடிக்கப்பட்டது. அதற்குச் "சத்தியாக்கிரஹம் " என்னும் பெயர் உடனே ஏற்பட்டு விடவில்லை. கொஞ்ச காலத்துக்குப் பிறகுதான் நாமகரணம் செய்யப்பட்டது.
முதலில் சிலகாலம் தென்னாப்பிரிக்கா இந்தியர்களின் இயக்கம் 'பாஸிவ் ரிஸிஸ்டன்ஸ்' என்னும் ஆங்கிலப் பெயராலேயே குறிப்பிடப்பட்டது. அந்தக் காலத்துத் தமிழ்ப் பத்திரிகைகளில் அதை எதிர்க்காமல் எதிர்க்கும் முறை என்றும், 'சாத்வீக எதிர்ப்பு' என்றும் மொழி பெயர்த்து வந்தார்கள். இந்தியர்கள் நடத்தும் தார்மிக இயக்கத்தை ஆங்கிலப் பெயராலேயே குறிப்பிட்டு வந்தது காந்திஜிக்குப் பிடிக்கவில்லை. புதிய இந்திய பாஷைப் பெயர் கொடுக்க வேண்டும் என்பதற்கு வேறொரு முக்கியமான காரணமும் ஏற்பட்டது. ஒரு பொதுக் கூட்டத்தில் தென்னாபிரிக்கா இந்தியர்களின் கட்சியை ஆதரித்துப் பேசிய ஓர் ஆங்கிலேயர், "இந்தியர்கள் சிறுதொகையினர் ; பலமற்றவர்கள். அதனால் 'பாஸிவ் ரிஸிஸ்டன்ஸ் ' முறையைக் கையாளுகிறார்கள். பலவீனர்கள் வேறு என்ன செய்ய முடி யும்? " என்று பேசினார். இதைக் காந்திஜி கேட்டுக் கொண்டிருந்தார். தாம் கைக்கொண்ட போர்முறை பலவீனங் காரணமாக ஏற்பட்டதல்ல என்பது காந்திஜியின் உறுதியாகும். எனவே, 'பாஸிவ் ரிஸிஸ்டன்ஸ்' பலவீனர்களுடைய இயக்கம் என்று கருதப்பட்டபடியால், தம் இயக்கத்தின் பெயரை உடனே மாற்றிவிடவேண்டும் என்று தீர்மானித்தார். புதிய பெயர் கண்டுபிடித்துச் சொல்கிறவர்களுக்கு ஒரு சிறு பரிசு வழங்கப்படும் என்று "இண்டியன் ஒபீனியன்" பத்திரிகையில் விளம்பரம் செய்தார். இந்த அதிசயமான பரிசுப் போட்டியில் கலந்து கொண்டவர்களில் ஒருவர் ஸ்ரீ மகன்லால் காந்தி. இவர் 'சத்காரியத்தில் உறுதி ' என்னும் பொருள் படும் 'சதாக்கிரஹம்' என்னும் பெயரைக் குறிப்பிட்டார். எல்லாப் பெயர்களிலும் இது காந்திஜிக்குப் பிடித்திருந்தது. ஆனால் பூரண திருப்தி அளிக்கவில்லை. மேலும் யோசனை செய்து 'சதாக்கிரஹம் ' என்னும் பெயரைச் 'சத்தியாக்கிரஹம் ' என்று மாற்றினார்,
சத்தியம் என்பதில் அன்பும் அஹிம்சையும் அடங்கியுள்ளன என்பது காந்திஜியின் நம்பிக்கை. எனவே காந்திமகான் உலகத்துக்குக் கண்டு பிடித்துக் கொடுத்த புதிய போர்முறைக்குச் “சத்தியாக்கிரஹம்' என்னும் பெயரே நிலை பெற்று விளங்குகிறது.
---------------
49. அஹமத்தின் சபதம்
கறுப்புச் சட்டத்தை எதிர்த்து நிற்பது என்று தீர்மானித்த பிறகு முதலில் சமாதான வழிகள் எல்லாவற்றையும் கையாண்டு பார்த்துவிடுவது என்று காந்திஜி தீர்மானித்தார். எனவே, இன்னும் சில இந்தியர்களையும் சேர்த்துக்கொண்டு சர்க்கார் காரிய தரிசியான மிஸ்டர் டன்கன் என்பவரைப் போய்ப் பார்த்தார். இந்திய சமூகம் செய்திருக்கும் தீர்மானத்தைப் பற்றி எடுத்துச் சொன்னார். மிஸ்டர் டன்கன் கூறிய பதிலாவது :- ஸ்திரீகளைப் பொறுத்த வரையில் சட்டத்தில் விலக்கு அளித்து விடுவது என்று சர்க்கார் முடிவு செய்திருக்கிறார்கள். மற்றப்படி சட்டத்தை நிறைவேற்றிக் கண்டிப்பாக அமுல் நடத்த வேண்டுமென்று முடிவாகத் தீர்மானித்து விட்டார்கள். இதைப்பற்றி நீங்கள் வீண் கிளர்ச்சி செய்வதில் யாதொரு பயனும் இல்லை. ஜெனரல் போதாவும் ஜெனரல் ஸ்மட்ஸம் நீங்கள் இந்தச் சட்டத்துக்கு உட்பட வேண்டும் என்று விரும்புகிறார்கள். உட்பட்டால், சில்லரை விஷயங்களில் உங்களுடைய யோசனைகள் கவனிக்கப்படும். ஆனால் சட்டம் அமுலுக்கு வந்தே தீரும்."
இந்த பதிலைத் தெரிந்துகொண்ட இந்திய சமூகத்துக்கு ஒரு விதத்தில் உற்சாகம் அதிகமாயிற்று. ஸ்திரீகள் விஷயத்தில் சர்க்கார் விலக்குச் செய்ய ஒப்புக்கொண்டது தங்களுடைய சாத்வீக எதிர்ப்பு இயக்கத்தின் பலனே என்று கருதினார்கள். ஆயினும் சட்டம் முழுவதையும் எதிர்த்தே தீருவதென்று உறுதி கொண்டார்கள். ஸ்திரீகளின் விஷயத்தில் விலக்குச் செய்ய முன் வந்ததற்காகச் சர்க்கார் காரியதரிசிக்கு நன்றி தெரிவித்து விட்டு, எனினும் கறுப்புச் சட்டத்துக்குத் தாங்கள் உட்பட முடியாது என்று சொல்லிவிட்டுத் திரும்பினார்கள்.
சமாதான முறைகள் இத்துடன் தீர்ந்து போய்விடவில்லை. இங்கிலாந்துக்குச் சென்று பிரிட்டிஷ் சர்க்காரைப் பேட்டி காண்பதினால் ஏதேனும் பயன் விளையலாம். எனவே, இங்கிலாந்துக்குத் தூதுகோஷ்டி அனுப்புவதென்று தீர்மானமாயிற்று. அதற்கு வேண்டிய செலவுக்கு உடனே பணம் திரட்டியாகி விட்டது. ஆனால் பிரதிநிதிக் கூட்டத்தில் யார் போவது என்பதில் சிறிது தகராறு நேர்ந்தது. காந்திஜி போகவேண்டும் என்பது எல்லாருக்கும் சம்மதம். அவரைத் தவிர இன்னும் பலர் போக எண்ணினார்கள். ஆனால் காந்திஜி அந்தப் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். அதிகப்பேர் போவதினால் காரியம் ஒன்றும் ஆகாது என்று எடுத்துக் காட்டினார். கடைசியில் காந்திஜியையும் ஜனாப் எச். ஓ. அலி என்னும் முஸ்லிமையும் மட் டும் அனுப்புவதென்று தீர்மானிக்கப்பட்டது.
மகாத்மாவும் ஜனாப் அலியும் இங்கிலாந்துக்குச் சென்றார்கள். போகும்போதே கப்பலில், குடியேற்ற நாட்டு மந்திரி லார்ட் எல்ஜினிடம் சமர்ப்பிக்க ஒரு விண்ணப்பத்தைத் தயாரித்துக் கொண்டார்கள். இங்கிலாந்து சென்றதும் இந்தியா மந்திரி மார்லியைப் பேட்டி கண்டு பேசினார்கள். இந்திய காங்கிரஸ் மகாசபைக்கு அப்போது லண்டனில் கிளைக் கமிட்டி ஒன்று இருந்தது. ஸ்ரீ தாதாபாய் நௌரோஜி மூலம் மேற்படி கமிட்டி அங்கத்தினரைப் பார்த்துப் பேசினார்கள். பிறகு பார்லிமெண்ட் அங்கத்தினர் பலரையும் சந்தித்துப் பேசினார்கள். இங்கிலாந்தில் எந்த ஒரு முக்கியமான பொது விஷயத்தையும் ஏதேனும் ஒரு விருந்து வைத்துத்தான் ஆரம்பிப்பது என்ற சம்பிரதாயம் உண்டு. அதுபோலவே இவர்களும் ஒரு விருந்து நடத்தி அதற்குப் பிரமுகர்கள் பலரையும் அழைத்தார்கள், இந்த விருந்தின் போது தென்னாப்பிரிக்கா இந்தியர்களின் கட்சியைக் கவனித்துக் கொள்வதற்காக ஆங்கிலேயரும் இந்தியரும் அடங்கிய ஒரு கமிட்டி ஏற்படுத்தப் பட்டது.
குடியேற்ற நாட்டு மந்திரி லார்ட் எல்ஜினைப் பேட்டி கண்டு விஷயத்தைச் சொன்னபோது அவர் எல்லாவற்றையும் கவனமாகக் கேட்டார். தம் அநுதாபத்தையும் தெரிவித்தார். தம்மால் முடிந்ததை யெல்லாம் செய்வதாகவும் சொன்னார்.
கூடியவரையில் திருப்திகரமாகத் தோன்றிய இந்த பதிலைப் பெற்றுக்கொண்டு காந்திஜியும் ஜனாப் அலியும் தென்னாப்பிரிக்கா திரும்பினார்கள். திரும்பும் வழியில் மதீரா என்னும் துறைமுகத்தில் கப்பல் நின்றபோது அவர்களுக்கு ஒரு தந்தி வந்தது. இங்கிலாந்தில் இருந்த சமயம் அவர்களுக்குக் காரியதரிசியாக வேலை பார்த்த மிஸ்டர் ரிட்ச் என்பவர் தந்தி கொடுத்திருந்தார், "டிரான்ஸ்வால் சர்க்காரின் ஆசிய மசோதாவுக்கு அரசரின் அநுமதி கிடைக்காது. அதைச் சிபார்சு செய்ய லார்ட் எல்ஜின் மறுத்து விட்டார்!" என்று அந்தத் தந்தியில் கண்டிருந் தது. காந்திஜி அடைந்த மகிழ்ச்சிக்கு அளவில்லை. இங்கிலாந்துக்குத் தூது போன நோக்கம் பூரண வெற்றியடைந்து விட் டது! இனிமேல் சத்தியாக்கிரஹப் போராட்டம் ஆரம்பித்து நடத்தவேண்டிய அவசியமேயில்லை. - இவ்விதம் எண்ணிக் குதூகலம் அடைந்தார் மகாத்மா. மதீராவிலிருந்து கேப் டவுன் துறைமுகத்துக்கு அந்தக் காலத்தில் பதினைந்து நாள் பிரயாணம். இந்தப் பதினைந்து தினங்களும் பற்பல ஆகாசக் கோட்டைகள் கட்டிக் கொண்டு யாத்திரை செய்தார். ஆனால் கேப் டவுனில் இறங்கியதும் தெரிந்த சமாசாரம் ஆகாசக் கோட்டைகளைத் தகர்த்து எறிந்து விட்டன. லார்ட் எல்ஜின் "ஆசியாச் சட்டத்துக்கு அநுமதி யில்லை" என்று சொன்னதில் ஒரு வஞ்சக தந்திரம் இருந்தது என்று வெளியாயிற்று. அதன் விவரம் என்ன வென்றால் போயர் யுத்தத்துக்குப் பிறகு மிஸ்டர் சேம்பர்லின் டிரான்ஸ்வாலுக்கு வந்து போயர்களைச் சமரசப்படுத்தப் பெருமுயற்சி செய்தார். டிரான்ஸ்வாலுக்குப் பூரண சுயாட்சி கொடுத்து விடுவதாக அவர்களுக்கு வாக்களித்திருந்தார். இது பிரிட்டிஷ் பொது மக்களின் விருப்பத்துக்கு ஒத்திருந்தது; பார்க்கப் போனால், போயர்களும் வெள்ளை நிறத்தவர்கள் தான்; ஐரோப்பியர்கள் தான்; ஏகாதிபத்தியத்துக்குள் அவர்களை எதிரிகளாக வைத்துக்கொண்டிருக்க பிரிட்டிஷார் விரும்பவில்லை.
எனினும், டிரான்ஸ்வாலுக்குப் பூரண சுயாட்சி கொடுப்பது சம்பந்தமான சட்டங்களும் சம்பிரதாயங்களும் இன்னும் பூர்த்தியாகி விடவில்லை. 1906-ம் வருஷத்தில் கூட டிரான்ஸ்வால் மாகாணம் பிரிட்டிஷ் 'கிரெளன் காலனி ' யாகவே இருந்தது. அதாவது அந்த நாட்டின் ஆட்சிக்கு பிரிட்டிஷ் அரசர் நேரில் பொறுப்பு வகிப்பதாக ஐதீகம். காரியாம்சத்தில் பிரிட்டிஷ் மந்திரி சபை பொறுப்பு வகித்து வந்தது.
பூரண சுயாட்சி டிரான்ஸ்வாலில் 1907-ம் வருஷம் ஜன வரிமீ 15௳ அமுலுக்கு வருவதாக இருந்தது. ஆகவே, லார்ட் எல்ஜின் லண்டனில் இருந்த டிரான்ஸ்வால் ஏஜெண்டிடம் என்ன சொன்னார் என்றால், "தற்சமயம் பிரிட்டிஷ் சர்க்கார் இந்தியாவையும் ஆளுகிறார்கள் ; டிரான்ஸ்வாலையும் ஆளுகிறார்கள். ஆகையால் இந்திய நாட்டின் பிரஜைகளுக்கு டிரான்ஸ்வாலில் தடைகள் ஏற்படுத்துவதை அனுமதிக்க முடியாது. சீக்கிரத்தில் உங்களுக்கு, அதாவது டிரான்ஸ்வாலுக்குப் பூரண சுயாட்சி வரப்போகிறது. இப்போது இந்த மசோதாவைக் கைவிட்டு விட்டுச் சுயாட்சி வந்ததும் அப்புறம் புதிதாகக் கொண்டுவந்து நிறைவேற்றுங்கள். சுயாட்சி பெற்ற நாடுகளின் சட்டங்களில் பிரிட்டிஷ் மந்திரி சபை குறுக்கிட உரிமை யில்லை. எந்தச் சட்டத்தை நிறைவேற்றினாலும் அரசரின் அநுமதி கிடைத்துவிடும். இப்போது எதற்காக வீண் தொல்லை? "
இந்த யோசனைக்கு டிரான்வால் ஏஜெண்டு சம்மதித்து டிரான்ஸ்வால் சர்க்காருக்குத் தெரிவித்து விட்டார். அவர்களும் ஒப்புக்கொண்டார்கள். இந்த விவரமெல்லாம் மிஸ்டர் ரிட்சுக்குத் தெரியாது. "சட்டத்துக்குக் கையெழுத்து ஆக வில்லை" என்பதை மட்டும் அவர் அறிந்து காந்திஜிக்குத் தந்தி கொடுத்து விட்டார்.
லார்ட் எல்ஜின் செய்தது நேர்மையான காரியம் அல்ல வென்று காந்திஜி அபிப்பிராயப் பட்டார். ஒரு அற்ப தந்திரத்தைக் கையாண்டு இந்திய சமூகத்தை ஏமாற்றி விட்டதாகவே கருதினார். டிரான்ஸ்வால் சுயாட்சி பெற்றுவிட்டால் மட்டும் என்ன ? பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்துக்கு அது உள்ளடங்கி இருக்கும் வரையில் இந்தியர்களுடைய உரிமைகளை வற்புறுத்திப் பாதுகாப்பது பிரிட்டிஷ் சர்க்காரின் கடமை யல்லவா?
காந்திஜியைப் போலவே இந்திய சமூகமும் கொதிப் படைந்தது. யாருடைய உதவியையும் எதிர்பாராமல் போராட் டத்துக்குத் தயார் செய்யத் தொடங்கினார்கள்.
குறிப்பிட்ட தேதியில் அதாவது 1907 ஜனவரிt 1௳ டிரான்ஸ்வாலில் சுயாட்சி அமுலுக்கு வந்தது. மார்ச்சு மாதம் 21௳ பழைய கறுப்புச் சட்டத்தைப் புதிய உருவத்தில் கொண்டு வந்து புதிய பார்லிமெண்டில் நிறைவேற்றினார்கள். ஜூலைமீ 1௳ -யிலிருந்து சட்டம் அமுலுக்கு வரும் என்றும், ஜூலை 31-க்குள் எல்லா இந்தியர்களும் பதிவு விண்ணப்பம் போட்டு விட வேண்டும் என்றும் உத்தரவு பிறந்தது. இதற்காகப் பாரங்கள் அச்சிடப் பட்டன. ஆபீஸ்களும் திறக்கப்பட்டன.
அதே சமயத்தில் காந்திஜியின் தலைமையில் டிரான்ஸ்வால் இந்தியர்களும் சத்தியாக்கிரகப் போராட்டத்துக்குத் தயார் செய்து கொண்டிருந்தார்கள். ஆங்காங்கே பொதுக்கூட்டங்கள் நடந்தன. சாத்வீக எதிர்ப்புச் சபதத்தில் மீண்டும் ஒரு முறை கையெழுத்து வாங்கப்பட்டது. 'முன்னே சபதம் எடுத்துக்கொண்டபோது அமுலுக்கு வரவிருந்த சட்டந்தான் ரத்தாகி விட்டதே! இது புதிய சட்டந்தானே ? அந்தச் சட்டம் இதற்குக் கட்டுப் படுத்தாது!" என்ற யுக்தி வாதத்தைச் சொல்லி ஒரு சில இந்தியர்கள் நழுவிக் கொள்ளப் பார்த்தார்கள். ஆகவே இரண்டாவது தடவையும் சாத்வீக எதிர்ப்புச் சபதத்தில் கையெழுத்து வாங்குவது அவசியமாயிற்று.
பதிவு செய்வதற்குக் கடைசித் தவணைத் தேதி நெருங்கி வந்து கொண்டிருந்த சமயத்தில் மற்றொரு பெரிய பொதுக் கூட்டம் கூட்டினார்கள். பிரிட்டோரியாவில் உள்ள மசூதியைச் சேர்ந்த திறந்த வெளியில் கூட்டம் நடந்தது. அதற்கு ஜனாப் யூசப் இஸ்மேல் மியான் தலைமை வகித்தார்.
தேதி நெருங்க நெருங்க இந்தியர்களுடைய கவலை அதிகமான துபோல் டிரான்ஸ்வால் சர்க்காருடைய கவலையும் அதிகமாகி வந்தது. எனவே ஜெனரல் போதா மேற்படி கூட்டத்துக்குத் தம்முடைய தூதராக மிஸ்டர் வில்லியம் ஹாஸ்கென் என்பவரை அனுப்பி வைத்தார். மிஸ்டர் ஹாஸ்கென் கூட் டத்தில் பேசினார். “நான் உங்களுடைய நண்பன், உங்களுடைய நன்மைக்காகவே சொல்கிறேன். டிரான்ஸ்வால் ஐரோப்பியர்கள் பொதுவாக உங்கள் விஷயத்தில் விரோத பாவங் கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய விருப்பத்தை டிரான்ஸ்வால் சர்க்கார் புறக்கணிக்க முடி யாது. ஆகையால் இந்தச் சட்டத்தை நடத்தியே தீருவதென்று சர்க்கார் உறுதிகொண்டு விட்டார்கள். நீங்கள் இச்சட்டத்தை எதிர்ப்பது வீண். சுவரில் முட்டிக் கொள்வது போலாகும். ஏதாவது சில்லரை விஷயங்களில் திருத்தம் வேண்டினால் ஜெனரல் ஸ்மட்ஸ் கவனிப்பார். ஆனால் சட்டத்தை மாற்ற முடியாது. சட்டத்தை ஒழிக்கும் வீண் முயற்சியில் இறங்கி உங்களை நீங்களே அழித்துக் கொள்ள வேண்டாம்!"
மிஸ்டர் ஹாஸ்கென் இவ்விதம் பேசிய பிறகு இந்தியர்கள் சிலர் பேசினார்கள். அவர்களில் ஜனாப் அஹமத் முகம்மத் கச்சாலியா ஒருவர். கச்சாலியா சேத் சுருக்கமாகவே பேசினார். அதன் கருத்து வருமாறு :- "ஹாஸ்கென் கூறியதை யெல்லாம் கவனமாகக் கேட்டேன். அதனால் என்னுடைய உறுதி வலுப் பெற்றிருக்கிறது. டிரான்ஸ்வால் சர்க்கார் எவ்வளவு பலமுள்ளவர்கள் என்பதை நாம் அறிவோம். நம்மைச் சிறையில் அடைப்பார்கள்; நம்முடைய சொத்துக்களைப் பறிமுதல் செய்வார்கள் ; நாட்டை விட்டு வெளியேற்றுவார்கள்; தூக்கிலேயும் போடுவார்கள் ! இவ்வளவையும் நாம் சகித்துக் கொள்வோமே தவிர இந்தச் சட்டத்துக்குப் பணிய மாட்டோம். ஆண்டவன் ஆணையாகச் சொல்கிறேன். என்னைத் தூக்கிலே போட்டாலும் சரி, நான் இந்த சட்டத்துக்கு உட்படேன்."
கச்சாலியா சேத் கடைசி வாக்கியத்தைச் சொன்ன போது அவருடைய கை விரல்களினால் கழுத்தைத் தொட்டுக் காட்டினார். கூட்டத்திலிருந்த சிலர் இதைப் பார்த்துப் புன்னகை புரிந்தார்கள். 'தூக்கிலே போட்டாலும் பணியமாட்டேன்' என்று அவர் சொல்வது வெறும் வீறாப்புப் பேச்சு என்று அவர்கள் கருதினார்கள், ஆனால் அவர்களுடைய சந்தேகந்தான் பிசகான து என்பதைக் கச்சாலியா சாகிப் பிற்காலத்தில் நிருபித்தார். போராட்டத்தில் அவர் அடைந்த கஷ்ட நஷ்டங்களைச் சொல்லி முடியாது. ஆயினும் அவர் இறுதிவரையில் ஒரே உறுதியாக இருந்து வந்தார்.
தம்பி ! கச்சாலியா சேத்தின் தியாகத்தையும் தீரத்தையும் குறித்துக் காந்திமகான் "தென்னாப்பிரிக்கா சத்தியாக்கிரஹம் " என் னும் நூலில் ஒரு முழு அத்தியாயம் எழுதியிருக்கிறார். தென்னாப்பிரிக்காவில் காந்திஜியின் இயக்கத்துக்குத் துணை நின்ற பிரமுகர்கள் பலர் முஸ்லிம்கள் என்பதை நீ இதற்குள் கவனித் திருப்பாய் என்று நம்புகிறேன். ஹிந்து-முஸ்லிம் ஒற்றுமையில் காந்திஜி கடைசி வரையில் சலியாத நம்பிக்கை கொண்டிருந்தது ஏன் என்பதையும் நாம் ஊகிக்கலாமல்லவா ?
----------------
50. முதல் தண்டனை
1907- ம் வருஷம் ஜூலை மாதம் முதல் தேதி வந்தது. அன்று டிரான்ஸ்வால் எங்கும் இந்தியர்கள் பெயரைப் பதிவு செய்துகொண்டு அநுமதிச் சீட்டுப் பெறும் காரியாலயங்கள் திறக்கப்பட்டன. இந்தக் காரியாலயங்களுக்கு அருகில் சத்தியாக் கிரஹத் தொண்டர்கள் நிறுத்தி வைக்கப்பட்டார்கள்.. விஷயம் தெரியாததினாலோ அல்லது பயத்தினாலோ பதிவு செய்து கொள்ள வரும் இந்தியர்களுக்குச் சாத்வீக முறையில் எச்சரிக்கை செய்வதற்காகவே தொண்டர்கள் நிறுத்தி வைக்கப் பட்டார்கள். தொண்டர்களுக்கென்று தனியாக ஒரு அடை யாளம் கொடுக்கப் பட்டிருந்தது. முரட்டுத்தனமாகவோ அவமரியாதையாகவோ பேசக் கூடாதென்றும், லவலேசமும் பலாத்காரத்தைக் கையாளக் கூடாதென்றும் தொண்டர்களுக்குக் கண்டிப்பாகச் சொல்லப் பட்டிருந்தது. கறுப்புச் சட்டத் துக்கு உட்படுவதால் இன்னின்ன தீமைகள் விளையும் என்பதைக் கூறும் அச்சுப் பிரசுரத்தைக் கொடுத்து விட்டு, அதில் கண்ட விவரங்களை விளக்கிச் சொல்வதே தொண்டர்களின் கடமை. இந்தக் கடமையை நிறைவேற்றுவதில் போலீஸார் தலையிட்டுத் தொண்டர்களை வைதாலும் அடித்தாலும் தொண்டர்கள் பொறுமையாகப் பொறுத்துக் கொள்ள வேண்டும். அப்படிப் பொறுக்க முடியாமற் போய்விட்டால் அங்கிருந்து அப்புறம் போய்விட வேண்டும். போலீஸார் கைது செய்தால் சந்தோஷமாகச் சிறைக்குப் போக வேண்டும்.
இவ்விதமாக, சாத்வீக மறியல் என்னும் ஆயுதமான து 1907-ம் வருஷத்திலேயே காந்திஜியினால் உருவாக்கப்பட்டது. இந்த ஆயுதத்தைக் காந்திஜி பிற்காலத்தில் இந்தியாவில் பற்பல துறைகளிலும் உபயோகப்படுத்தினார். கள்ளுக்கடை மறியல், விதேசி ஜவுளிக் கடை மறியல் முதலியவை நடந்தன. இந்தச் சாத்வீக மறியல் முறையினாலேயே இந்தியா சுதந்திரம் அடைந்தது என்று சொல்வது மிகையாகாது. ஆனால் தென்னாப்பிரிக்காவில் இந்த முறையை ஆரம்பித்த போது அது முற்றும் புதுமையா யிருந்தபடியால் பல தொல்லைகள் ஏற்பட்டன. "வெறுமனே 'அப்பா ஐயா!' என்று கெஞ்சினால் யார் கேட்பார்கள் ? " என்று எண்ணிய இந்தியர்கள் சிலர் இருந்தார்கள். இவர்கள் இரகசியமாகப் பயமுறுத்தல் முறைகளைக் கையாண்டார்கள். பயமுறுத்தலுக்கு உள்ளானவர்கள் உடனே சர்க்காரின் பாதுகாப்பைக் கோரினார்கள். சர்க்காரின் பாதுகாப்பு உடனே கிடைத்தது. இது காரணமாக இந்திய சமூகத்தில் பலவீனமும் பிளவும் ஏற்பட்டன. சில பிரபல வியாபாரிகள் இராத்திரி பத்து மணிக்கு மேலே பதிவுக் காரியாலயங்களுக்குச் சென்று பதிவு செய்து கொண்டார்கள். இம்மாதிரி சுமார் ஐந்நூ று இந்தியர்கள் வரையில் பதிவு செய்து கொண்டு அநுமதிச் சீட்டுப் பெற்றார்கள்.
ஆனால் டிரான்ஸ்வால் சர்க்கார் இதனால் திருப்தி அடைய வில்லை. சட்டம் அமுலுக்கு வந்து சில மாதங்கள் ஆகியும், சுமார் பன்னிரண்டாயிரம் இந்தியர்களில் ஐந்நூறு பேர் தான் புதிய சட்டத்துக்கு உட்பட்டார்கள் என்பது சர்க்காருக்கு அவமானந் தரும் நிலைமை அல்லவா ? ஆகவே அடக்கு முறையைக் கையாள வேண்டியதுதான் என்று அதிகாரிகள் தீர்மானித்தார்கள்.
முதன் முதலில் அத்தகைய அதிர்ஷ்டம் கிடைக்கப் பெற்றவரின் பெயர் பண்டித ராமசுந்தரம். இவர் வட இந்தியர், பிரசங்கத் திறமை வாய்ந்தவர். சம்ஸ்கிருத சுலோகங்களும் துளசிதாஸ் ராமாயணப் பாடல்களும் சொல்லக் கூடியவர். ஜெர்மிஸ்டன் என்னுமிடத்தில் இவர் இருந்தார். அந்த ஊரில் வசித்த இந்தியர்களிடையில் மிக்க செல்வாக்குப் பெற்றிருந் தார். அந்த ஊரிலிருந்த இந்தியர்கள் இவராலேதான் பதிவு செய்து கொள்ள முன்வரவில்லை யென்று அதிகாரிகள் கருதி இவரைக் கைது செய்தார்கள். கோர்ட்டில் விசாரணை நடந்து ஒரு மாதம் சிறைத்தண்டனை விதிக்கப் பட்டது. தென்னாப் பிரிக்கா முழுவதும் இவருடைய பெயர் பிரசித்தியாயிற்று. இந்தச் சம்பவத்தின் பயனாக இந்தியர்களின் உறுதியும் உற்சாகமும் அதிகமாயினவே தவிரக் குறையவில்லை. நூற்றுக்கணக்கான இந்தியர்கள் சிறைக்குப் போகத் தயாரானார்கள். ஜெர்மிஸ்டனில் ஒரு இந்தியர்கூடப் பதிவு செய்து கொள்ளவில்லை.
அதிகாரிகளின் கோபம் அதிகமாயிற்று. ஜோகானிஸ்பர்க்கில் இருந்து இயக்கத்தை நடத்தி வைத்த முக்கியமான தலைவர்கள் பேரில் நடவடிக்கை எடுத்தாலன்றிச் சட்டத்தை அமுல் நடத்த முடியாது என்று தீர்மானித்தார்கள். எனவே சில முக்கியமான இந்தியத் தலைவர்களைப் பொறுக்கி எடுத்து, 1907-ம் வருஷம் டிசம்பர் 28௳ கோர்ட்டில் ஆஜராகி, அவர்கள் பேரில் ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்பதற்குக் காரணம் காட்டவேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார்கள்.
இப்படிப் பொறுக்கி எடுக்கப்பட்ட தலைவர்களில் காந்திஜி ஒருவர் என்று சொல்ல வேண்டியதில்லை. இன்னொருவர் குவின் என்னும் சீனர். இந்தியர்களைப் போலவே சீனர்களும் கறுப்புச் சட்டத்துக்கு உட்படுத்தப் பட்டார்கள். ஆகையால் சீனர்களும் சட்டமறுப்பு இயக்கத்தில் சேர்ந்திருந்தார்கள்.
இன்னொரு தலைவர் பெயர் தம்பி நாயுடு. இவருடைய பெற்றோர்கள் தமிழ்-நாட்டிலிருந்து மோர்சி எனப்படும் மொரீஷஸ் தீவுக்குச் சென்று குடியேறியவர்கள். அந்தத் தீவில் பிறந்தவர் தம்பி நாயுடு. இந்தியா தேசத்தை அவர் பார்த்ததே யில்லை. ஆயினும் தாய்நாடாகிய இந்தியா மீது அவர் கொண்டிருந்த பக்திக்கு அளவேயில்லை யென்று காந்தி மகாத்மா எழுதியிருக்கிறார். இன்னும் அவருடைய குணாதிசயங்களைப் பற்றி மிக வியந்து எழுதியிருக்கிறார். இங்கிலீஷ், தமிழ், தெலுங்கு, ஹிந்துஸ்தானி முதலிய பல பாஷைகள் தம்பி நாயுடுவுக்குத் தெரியுமாம். நீகிரோ பாஷைகூடத் தெரியுமாம். எந்த வேலையையும் மட்டமான து என்று அவர் நினைக்க மாட்டாராம். பொது கூட்டத்துக்குத் தலைமை வகிக்க நேர்ந்தாலும் வகிப்பாராம். தலையில் மூட்டை தூக்கிக் கொண்டு சாலையில் போக வேண்டி வந்தாலும் போவாராம். சமூகத்துக்காகச் சர்வ பரித் தியாகமும் செய்வதற்குத் தயாராயிருந்தாராம். இரவு பகல் என்று பாராது பொது வேலைகளில் ஈடுபடுவாராம். "தென்னாப்பிரிக்கா சத்தியாக்கிரக இயக்கத்தின் சரித்திரத்தில் தம்பி நாயுடுவின் பெயர் எப்போதும் நிலைபெற்று விளங்கும்" என்கிறார் காந்தி மகான்.
குறிப்பிட்ட தினத்தில் 'நோட்டீசு' கிடைத்தவர்கள் எல்லாரும் கோர்ட்டுக்குப் போனார்கள். யாரும் எதிர் வழக்கு ஆடவில்லை. ஆகவே, 'இரண்டு வாரத்திற்குள் அவர்கள் கறுப்புச் சட்டத்தின்படி பதிவு செய்து கொள்ள வேண்டும், அல்லது டிரான்ஸ்வாலை விட்டுப் போய்விடவேண்டும்' என்று மாஜிஸ்ட்டிரேட் தீர்ப்பு அளித்தார்.
ஆனால் அந்தத் தீர்ப்பின்படி ஒருவரும் பதிவு செய்து கொள்ளவும் இல்லை; டிரான்ஸ்வாலை விட்டுப் போகவும் இல்லை. 1908-ம் வருஷம் ஜனவரி 10-ம் தேதி தவணை தீர்ந்தது. அன்று எல்லோரும் மறுபடியும் கோர்ட்டுக்கு வரவழைக்கப்-பட்டார்கள். மாஜிஸ்ட்டிரேட்டின் உத்திரவை மீறிய குற்றத்தைச் செய்ததாக எல்லாரும் ஒப்புக் கொண்டார்கள்.
கோர்ட்டில் இந்த விசாரணை ஆரம்பமாகிக்கொண்டிருந்த சமயத்தில் பிரிட்டோரியாவிலிருந்து ஒரு செய்தி வந்தது. அங்கேயும் சில இந்தியத் தலைவர்கள் இதே மாதிரி விசாரணை செய்யப்பட்டு மூன்று மாதம் கடுங்காவல் தண்டனையும் அதைத் தவிரப் பெருந் தொகை அபராதமும் விதிக்கப்பட்டனர் என்று தெரிந்தது. உடனே காந்திஜி தாம் ஒரு வாக்கு மூலம் கொடுக்க விரும்புவதாகவும் அதற்குக் கோர்ட்டார் அநுமதி கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
இதுவரை ஒன்றுமே சொல்வதற்கில்லை யென்று சொல்லி வந்த காந்திஜி இப்போது வாக்குமூலம் கொடுப்பதாகச் சொன்னதும் மாஜிஸ்ட்ரேட்டுக்குச் சிறிது வியப்பா யிருந்தது. ஒரு வேளை, காந்திஜி பயந்துபோய்ப் பணிந்து விடுவதாகச் சொல்லப் போகிறாரோ என்று எண்ணினார். அவருடைய கோரிக்கையின்படி வாக்குமூலம் கொடுக்க அநுமதி தந்தார். காந்திஜியின் சகாக்களும் மற்றும் விசாரணையைக் கவனிப்பதற்காகக் கோர்ட்டில் கூடியிருந்த நூற்றுக் கணக்கான இந்தியர்களும் "காந்திஜி என்ன சொல்லப் போகிறாரோ?" என்று ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
காந்திஜி கொடுத்த வாக்குமூலத்தின் சாராம்சம் இது தான் :- "கறுப்புச் சட்டத்துக்கு இந்தியர்கள் உட்படக் கூடாது என்கிற இயக்கத்தை ஆரம்பித்தவனும் அதற்குத் தலைமை வகித்து இதுவரை நடத்தி வந்தவனும் நான். ஆகையால் சட்டத்தை மீறிய மற்றவர்களைக் காட்டிலும் எனக்கு அதிகமாகவும் கடுமையாகவும் தண்டனை கொடுக்கும்படி கோர்ட்டாரைக் கேட்டுக் கொள்கிறேன்."
இதைக் கேட்ட மாஜிஸ்ட்ரேட் திணறிப்போனார். காந்திஜியைத் தண்டிக்க அவருக்கு மனம் வரவில்லை. தண்டியாமலிருக்கச் சட்டம் இடந்தரவில்லை. எனினும் காந்திஜியின் கோரிக்கையை நிறைவேற்ற அவர் மறுத்து இரண்டு மாதம் வெறுங்காவல் தண்டனை அளித்தார். அவ்விதம் தீர்ப்பு அளிக்கப்பட்டவுடனே காந்திஜியைப் போலீசார் சூழ்ந்து சிறைச்சாலைக்குக் கொண்டுபோனார்கள்.
இவ்விதமாக, 1908-ம் வருஷம் ஜனவரி-10 உலக சரித்திரத்தில் ஒரு புதிய சகாப்தம் ஆரம்பமாயிற்று.
--------------
51. முதல் ராஜி
முதல் முறையாகச் சிறையில் அடைக்கப்பட்டவுடனே காந்திஜி சிந்தனையில் ஆழ்ந்தார். என்ன விதமான சிந்தனை என்பதைக் காந்திஜியே எழுதியிருக்கிறார் :
"வீடு, கோர்ட்டு, பொதுக்கூட்டம் எல்லாம் கனவிலே தோன்றுவதுபோல் என் மனத்தில் தோன்றி மறைந்தன. நான் இப்போது ஒரு கைதி. இரண்டு மாதம் சிறைத்தண்டனை பெற்றவன். இந்த இரண்டு மாதத்துக்குள் என்ன நடக்கும்? இரண்டு மாதமும் நான் சிறையிலேயே கழிக்க வேண்டி நேரிடுமா? ஜனங்கள் பொதுக்கூட்டத்தில் சபதம் செய்ததற்கு இணங்க நடந்து கொண்டால், வெகு சீக்கிரத்தில் சிறைகளை நிரப்பிவிடுவார்கள். அப்போது தண்டனையை முழுதும் அநுபவிக்க வேண்டியிராது. விரைவிலேயே விடுதலை கிடைக்கும்? ஆனால் ஜனங்கள் சும்மா இருந்து விட்டால்?......
இந்தச் சிறையில் இரண்டு மாத காலம் எப்படிக் கழிப்பது ? இரண்டு மாதம் இரண்டு யுகம்போலத் தோன்றும். இந்த எண்ணங்க ளெல்லாம் மின்னல் வேகத்தில் ஒரு நொடிப்பொழுதில் தோன்றிச் சென்றன. அடுத்த நிமிஷம், மேற்கண்ட விதமான எண்ணங்கள் என் மனத்தில் தோன்றியது குறித்து வெட்கம் அடைந் தேன். விடுதலையைப் பற்றி நான் ஏன் சிந்திக்க வேண்டும் ? ஜனங்களுக்கெல்லாம் நான் உபதேசம் செய்ததென்ன ? இப்போ து சிந்திப்பது என்ன ? சிறைச்சாலைகளை அரசாங்கத்தின் விருந்து விடுதிகளாகக் கருதவேண்டும் என்றும், கருப்புச் சட்டத்துக்கு உட்படுவதைக் காட்டிலும் சிறைவாசம் சொர்க்கலோகத்துக்கு இணையாகும் என்றும், கறுப்புச் சட் டத்தை எதிர்க்கச் சகல பரித்தியாகங்களும் செய்யச் சித்தமா யிருக்க வேண்டும் என்றும் பேசி வந்தேன். இப்போது ஏன் விடுதலையைப் பற்றியோ சிறைவாசத்தின் பலா பலன்களைப் பற்றியோ நான் கருத வேண்டும் ?- இந்த இரண்டாவது எண்ணத்தினால் என் மனம் தெளிவடைந்தது."
காந்திஜி இவ்விதமான சிந்தனைகளில் ஈடுபட்டிருக்கையில், வெளியே ஜோகானிஸ்பர்க் நகரில் ஏக அமர்க்களமா யிருந்தது. காந்திஜி சிறைப்பட்ட செய்தியை அறிந்ததும் இந்தியர்கள் பலர் மனக்கிளர்ச்சி அடைந்தார்கள். கையில் கறுப்புக் கொடிகளைப் பிடித்துக்கொண்டு அவர்கள் வீதிகளில் ஊர்வலமாகச் சென்றார்கள். வரவர ஊர்வலத்தில் கூட்டம் அதிகமாகிக் கொண்டு வந்தது. போலீஸார் தலையிட்டார்கள். ஊர்வலத்தைப் பலாத்காரமாகக் கலைத்தார்கள். ஊர்வலத்தில் சேர்ந்திருந்த பல இந்தியர்கள் போலீஸாரின் பிரம்படிக்கு உள்ளானார்கள்.
காந்திஜிக்குப் பிறகு அவருடைய சகாக்களையும் மாஜிஸ்ட் ரேட் தண்டித்துச் சிறைக்கு அனுப்பினார். அப்படித் தண்டனை அடைந்தவர்கள் அனைவரையும் காந்திஜி இருந்த கொட்டடிக்கே கொண்டுவந்து அடைத்தார்கள். ஒரே இடத்தில் அடைக்கப்பட்டதனால் எல்லாருக்கும் உற்சாகமாக இருந்தது. காந்திஜி சிறைக்கு வந்த பிறகு நடந்த சம்பவங்களைப் பின்னால் வந்தவர்கள் அவருக்குத் தெரியப்படுத்தினார்கள்.
ஆறு மணிக்குச் சிறைக் கொட்டடியின் கதவைப் பூட்டி விட்டார்கள். அது இரும்புக்கம்பிக் கதவு அல்ல. முழுதும் இரும்புத் தகட்டினால் அடைத்திருந்த கதவு. சுவரில் உச்சியில் ஒரு சிறு ஜன்னல் மட்டுந்தான் இருந் தது. மற்றப்படி அவர்களை ஒரு பெரிய இரும்புப் பெட்டி யில் போட்டுப் பூட்டி விட்டது போலத் தோன்றியது. ஆயினும் காந்திஜியாவது அவருடைய சகாக்களாவது மனந்தளரவில்லை. இதைப்போல் இன்னும் பல பயங்கரமான கஷ்டங்களுக்கும் அவர்கள் தங்கள் மனத்தைப் பக்குவப்படுத்திக் கொண்டிருந்தார்கள்.
முதன் முதலில் சத்தியாக்கிரஹக் கைதியான பண்டிதர் ராமசுந்தரம் என்பவருக்குச் சிறையில் சகல செளகரியங்களும் செய்து கொடுக்கப் பட்டன. அவர் முதல் கைதி; அதோடு தனிக் கைதி. ஆனால் காந்திஜியும் அவருடைய சகாக்களும் கூட்டமாக வந்தபடியால் சிறையில் அவர்களுக்கு எவ்வித வசதியும் அளிக்கப்படவில்லை.
தென்னாப்பிரிக்கா சிறைச்சாலைகளுக்குள்ளேயும் வெள்ளைக் கைதிகள் - கறுப்புக் கைதிகள் என்று இரு பிரிவுகள் இருந்தன. இதுவரை கறுப்புக் கைதிகள் என்றால் நீக்ரோக் கைதிகளாகவே இருந்தனர். இப்போது, இந்தியர்களும் நீக்ரோப் பகுதியில் சேர்க்கப் பட்டனர்.
சிறையில் உள்ள கஷ்டங்களுக்கு மேலே காந்திஜி அதிகப்படி கஷ்டங்களை தேடிக்கொண்டார். வெறுங்காவல் கைதிகள் தங்கள் சொந்த உடைகளை உடுத்திக்கொள்ளலாம் என்பது சிறைச்சாலை விதி. இந்தியக் கைதிகளில் வெறுங்காவல் கைதிகளும் இருந்தார்கள் ; கடுங்காவல் கைதிகளும் இருந்தார்கள். பின்னால் தண்டிக்கப் பட்டவர்கள் எல்லாரும் கடுங்காவல் தண்டனையே பெற்றார்கள். காந்திஜி கடுங்காவல் கைதிகளைப்போலச் சிறைச்சாலை உடையே தரிப்பேன் என்று வற்புறுத்தினார். அதன்படியே அவருக்குக் கடுங்காவல் உடை கொடுக்கப் பட்டது.
அடுத்த சில தினங்களில் மேலும் பல இந்திய சத்தியாக் கிரஹக் கைதிகள் சிறைக்கு வந்தார்கள். இவர்களில் பெரும் பாலோர் வீதி வியாபாரிகள். அதாவது துணி மூட்டையோ அல்லது வேறு சாமானோ தெருத்தெருவாய்க் கொண்டு போய் விற்கிறவர்கள். இவர்களிடம் போலீஸார் லைஸென்ஸ் காட் டும்படி கேட்டதும், இவர்கள் 'இல்லை' என்று பதில் சொன் னார்கள். உடனே இவர்களைப் போலீஸார் கைது செய்து கோர்ட்டில் நிறுத்தித் தண்டித்துச் சிறைக்கு அனுப்பினார்கள். இப்படியாக ஒரு வாரத்திற்குள் சத்தியாக்கிரஹக் கைதிகள் நூற்றெண்பது பேர் சிறைக்கு வந்து விட்டார்கள்.
சிறையில் கொடுத்த சாப்பாடு மிகவும் மோசமாயிருந்தது. சமைக்கும் விதம் அதைவிடக் கேவலமாயிருந்தது. உணவுத் திட்டத்தை அபிவிருத்தி செய்ய முயன்றும் முடியவில்லை. கடைசியில் "கொடுக்கிற சாமானைக் கொண்டு நாங்களே சமைத்துக் கொள்கிறோம்" என்று கேட்டார்கள். அந்த உரிமை அளிக்கப் பட்டது. தம்பி நாயுடு சமையல் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதற்குப் பிறகு சிறைச் சாப்பாடு கொஞ்சம் சுமாராயிற்று.
காந்திஜி சிறை புகுந்து இரண்டு வாரம் ஆன பிறகு, புதிதாகச் சிறைக்கு வந்தவர்கள் வெளியில் ஏதோ ராஜிப் பேச்சு நடை பெறுவதாகச் செய்தி கொண்டுவந்தார்கள். ராஜிப் பேச்சு ஆரம்பமாகியிருந்தது உண்மைதான். "டிரான்ஸ்வால் லீடர்" என்னும் பத்திரிகை ஆசிரியரான மிஸ்டர் அல்பர்ட் கார்ட்ரைட் என்பவர் மேற்படி ராஜிப் பேச்சுக்குக் காரண பூதரா யிருந்தார். மிஸ்டர் அல்பர்ட் கார்ட்ரைட் கெட்டிக் காரர் ; அத்துடன் விசால உள்ளம் படைத்தவர். ஏற்கெனவே காந்திஜியுடன் பழகி அவருடைய மேன்மைக் குணங்களை அறிந்திருந்தார். தம் பத்திரிகையில் இந்தியரின் கட்சியை ஓரளவு ஆதரித்தும் எழுதி வந்தார். காந்திஜி சிறை புகுந்த பிறகு மிஸ்டர் கார்ட்ரைட் தளபதி ஸ்மட்ஸைப் பார்க்கச் சென்றார். இந்தியத் தலைவர்களுடன் எப்படியாவது ராஜியாகப் போகவேண்டும் என்று வற்புறுத்தினார். தளபதி ஸ்மட்ஸ் அதற்கிணங்கியதோடு, "நீரே சமாதானத் தூதராகச் சென்று இந்தியத் தலைவர்களுடன் பேசும். அவர்கள் ராஜிக்கு வருகிறார்களா என்று கேட்டுப் பாரும்" என்றார்.
மிஸ்டர் கார்ட்ரைட் முதலில் வெளியிலிருந்த தலைவர்களைப் போய்ப் பார்த்தார். அவர்கள், "எங்களைக் கேட்டுப் பயனில்லை. ராஜி பேசும் உரிமை உள்ளவர் காந்திஜிதான். அவர் எந்த ஏற்பாட்டை ஒப்புக்கொண்டாலும் அதை நாங்களும் ஒப்புக் கொள்ளத் தயார்!" என்றார்கள்.
அதன்மேல் மிஸ்டர் கார்ட்ரைட் சிறைக்குள் சென்று காந்திஜியைப் பார்த்துப் பேசத் தீர்மானித்தார். அதற்கு முன்னால் தளபதி ஸ்மட்ஸுடன் கலந்து ஆலோசித்துச் சில ராஜி நிபந்தனைகளைத் தயாரித்துக் கொண்டார். ராஜி நிபந்தனைகளில் முக்கியமான அம்சம் என்னவென்றால் : இந்தியர்கள் தாங்களாகவே வலுவில் சென்று தங்களுடைய பெயர் முதலிய விவரங்களைப் பதிவு செய்து கொள்ள வேண்டியது. அப்படிச் செய்ய சம்மதித்தால் கறுப்புச் சட்டத்தை டிரான்ஸ்வால் சர்க்கார் ரத்து செய்துவிடுவார்கள்.
மிஸ்டர் கார்ட்ரைட் சிறைக்குள் சென்று இந்த ராஜி நிபந்தனையைக் காந்திஜியிடம் தெரிவித்தார். அதை இந்தியர்கள் ஒப்புக்கொள்ள வேண்டும் என்றும் வற்புறுத்தினார். "கறுப்புச் சட்டம் இந்திய சமூகத்தை இழிவு செய்கிறது என்பது தானே உங்களுடைய ஆட்சேபம் ? சட்டத்தை எடுத்துவிட்டால் அந்த ஆட்சேபம் போய்விடுகிறதல்லவா? இந்தியர்கள் புதிதாக டிரான்ஸ்வாலுக்குள் வருவதைக் கட்டுப்படுத்தவே டிரான்ஸ்வால் சர்க்கார் விரும்புகிறார்கள். அதற்காக ஏற்கெனவேயுள்ள இந்தியர்களைப்பற்றி எல்லா விவரங்களும் ஊர்ஜிதமாகத் தெரிந்திருக்கவேண்டும் என்று எண்ணுகிறார்கள். நீங்களாகவே இந்தக் காரியத்தைச் செய்துவிடுவதில் உங்களுக்கு என்ன ஆட்சேபம் ? " என்று வாதம் செய்தார்.
காந்திஜி இதை ஒப்புக்கொண்டார். ஆனால் ராஜி நிபந்தனைகளின் வாசகத்தில் சில திருத்தங்களைச் செய்யவேண்டும் என்று சொன்னார். மிஸ்டர் கார்ட்ரைட் முதலில், "அதெல்லாம் முடியாது ; இதில் திருத்தம் எதையும் ஸ்மட்ஸ் ஒப்புக் கொள்ள மாட்டார்" என்றார். அதற்குக் காந்திஜி, 'ராஜி நிபந்தனை வாசகத்தில் சந்தேகத்துக்கு இடம் இருக்கக்கூடா தல்லவா ? கொஞ்சங்கூட மாற்றக்கூடாது என்றால், அதற்கு ராஜி என்று என்ன பெயர்?" என்று கேட்டார். கடைசியாக, “சரி ; உங்கள் விருப்பத்தின்படியே திருத்திக் கையெழுத்திட்டுக் கொடுங்கள். ஸ்மட்ஸிடம் போய்ப் பார்க்கிறேன்" என்றார் மிஸ்டர் கார்ட்ரைட்.
தம்பி! இந்தமாதிரி ராஜி நிபந்தனையைக் காந்திஜி ஒப்புக் கொண்டதுபற்றி உனக்கு ஆச்சரியம் ஏற்படலாம். "சட்டப்படி பதிவு செய்துகொண்டால் என்ன ? சட்டமில்லாமல் பதிவு செய்து கொண்டால் என்ன ? காரியாம்சத்தில் இரண்டும் ஒன்றுதானே ?" என்று உனக்குத் தோன்றலாம்.
உண்மையில், இரண்டுக்கும் மிக்க வித்தியாசம் உண்டு, நாமே சுயமாகச் செய்யக்கூடிய காரியமா யிருந்தபோதிலும், பிறர் அதைச் செய்யும்படி நம்மைக் கட்டாயப் படுத்துவதற்கு உட்பட்டால் அது நம்முடைய சுயமதிப்புக்குப் பங்கமாகிறது. அடுத்த வீட்டுக்காரனுடைய சௌகரியத்தை முன்னிட்டு நம்மை நாமே சில நிர்ப்பந்தங்களுக்கு உட்படுத்திக்கொள்ளச் சம்மதிக்கலாம். ஆனால் அடுத்த வீட்டுக்காரன் நம்மைப் பல வந்தப் படுத்தினால் அதற்கு உட்படுவ தற்கு நாம் விரும்ப மாட்டோமல்லவா ?
இன்னொரு விஷயத்தையும் நீ நன்கு தெரிந்துகொள்ள வேண்டும். காந்திஜியின் அஹிம்சைப் போர் முறைக்கும் மற்றவர்களின் பலாத்காரப் போர் முறைக்கும் ராஜிப் பேச்சு விஷயத்தில் மிக்க வித்தியாசம் உண்டு. பலாத்கார முறையில் எதிரியைத் தோற்கடித்துச் சரணாகதி அடையும்படி செய்கிறார்கள் ; அல்ல து அடியோடு அழித்துவிடுகிறார்கள். அஹிம்சைப் போர் முறையில் அப்படியல்ல. எதிரியின் மனத்தை மாற்றுவதுதான் அஹிம்சை முறையின் முக்கிய நோக்கம். எதிரியின் மனம் சிறிதளவு மாறியிருப்பதாகத் தெரிந்தாலும் அஹிம்சை வீரன் திருப்தியடைகிறான் ; ராஜி பேசுவதற்குத் தயாராகிறான் ; எதிரியின் மனம் வேதனையடையாத வகையில், அவனுடைய சரணாகதியை எதிர்பாராமல், விட்டுக்கொடுத்து ராஜி செய்துகொள்ள எப்போதும் சித்தமாயிருக்கிறான். இதனால் எதிரியின் உள்ளம் மேலும் மாறுதலடையும் என்று நம்புகிறான்.
எதிரியை அடியோடு அழித்து வெற்றியடைவது பலாத் காரப் போரின் நோக்கம். எதிரியைச் சிநேகிதனாக்கிக்கொண்டு வெற்றியடைவது அஹிம்சை முறையின் நோக்கம். எனவே, அஹிம்சை முறையைப் பின்பற்றுவோர் ஒவ்வொரு கட்டத்திலும் எதிரியுடன் ராஜி செய்து கொள்வதற்குச் சித்தமாயிருக்க வேண்டும். சட்டத்தை எடுத்துவிடுகிறோம் என்று சொல்லும் அளவுக்குத் தளபதி ஸ்மட்ஸ் இறங்கி வந்தது அஹிம்சையின் வெற்றி என்று காந்திஜி கருதினார். சட்டத்தின் கட்டாயம் இல்லாமல் நாமாகச் சில கட்டுப்பாடுகளுக்கு உட்படுவதில் தம் மதிப்புக்குப் பங்கம் ஒன்றும் இல்லையென்றும் கருதினார், ஆகையினாலேதான் மகாத்மா ராஜிப் பேச்சுக்கு உடன்பட்டார், மிஸ்டர் கார்ட்ரைட் கொண்டு வந்திருந்த நகல் ராஜி நிபந்தனைகளில் தாம் அவசியமெனக் கருதிய திருத்தங்களைச் செய்து கையொப்பமிட்டார். மிஸ்டர் குவின், ஸ்ரீ தம்பி நாயுடு இவர்களும் கையெழுத்திட்டுக் கொடுத்தார்கள்.
மிஸ்டர் கார்ட்ரைட் வந்துபோன இரண்டு நாளைக்கெல் லாம் ஜோகானிஸ்பர்க் போலீஸ் தலைவர் மிஸ்டர் வெர்னன் வந்து காந்திஜியைச் சிறையிலிருந்து விடுவித்துப் பிரிடோரியாவுக்கு அழைத்துப் போனார். அங்கே காந்திஜி தளபதி ஸ்மட்ஸைச் சந்தித்தார். ஸ்மட்ஸ் மிக்க பவ்யமாகப் பேசினார். "நீங்கள் சிறைக்குப் போன பிறகும் இந்திய சமூகம் இவ்வளவு உறுதியுடனிருந்ததை நான் பாராட்டுகிறேன். இந்திய சமூகத்தின் பேரில் எனக்கு வெறுப்பு என்பதே கிடையாது. ஆனால் இங்கேயுள்ள ஐரோப்பியர்கள் பெரும்பாலோரின் அபிப்பிராயத்தை யொட்டி நான் என் கடமையைச் செய்யவேண்டி யிருக்கிறது. நகல் நிபந்தனைகளில் நீங்கள் செய்துள்ள திருத்தங்களை ஒப்புக்கொள்கிறேன். உங்களில் பலர் சுயமாகப் பதிவு செய்துகொண்டதாகத் தெரிந்ததும் சட்டத்தை ரத்து செய்வதாக உறுதி கூறுகிறேன். இனிமேல் இந்த மாதிரி சங்க டமே ஏற்படக்கூடாது என்பது என் விருப்பம் ! இனி நீங்கள் போகலாம்!" என்றார் தளபதி ஸ்மட்ஸ்.
"நான் எங்கே போகட்டும் ? மற்றக் கைதிகளின் விஷயம் என்ன ?" என்று காந்தி மகாத்மா கேட்டார்.
"நீங்கள் இந்த நிமிஷத்திலிருந்து சுயேச்சை யடைந்துவிட் டீர்கள். இனி எங்கே வேண்டுமானாலும் நீங்கள் போகலாம். மற்றக் கைதிகள் எல்லாரையும் நாளைக் காலையில் விடுதலை செய்துவிடுவார்கள்!" என்றார் தளபதி ஸ்மட்ஸ்.
அப்போது மாலை ஏழு மணி இவ்வளவு லகுவாகத் தமக்கு விடுதலை கிடைத்துவிடும் என்று காந்திஜி எதிர்பார்க்கவேயில்லை - அவர் கையிலோ காலணா இல்லை. ஜோகானிஸ்பர்க்குக்குப் போக ரயில் சத்தம் தளபதி ஸ்மட்ஸின் காரியதரிசியிடமிருந்து காந்திஜி பெற்றுக்கொண்டார். பிரிடோரியாவிலிருந்து ஜோகானிஸ்பர்க் போக ஒரே ஒரு வண்டி தான் பாக்கியிருந்தது. காந்தி விரைவாகச் சென்று அந்த வண்டியைப் பிடித்து ஏறினார்.
-----------
-
தேசுறும் ராமநாமத் தியானத்தின் சிறப்பைநாட்டி
பேசரும் சாந்தி என்னும் பெரும்பொருள் விளங்கச்செய்து
ஆசிய புத்தன் ஜோதி அகிலத்தின் ஜோதியாக்கும்
மாசிலாக் காந்தி அண்ணல் மாந்தருள் தெய்வமன்றோ.
- நாமக்கல் கவிஞர் இராமலிங்கம், பிள்ளை
(சென்னை அரசாங்க ஆஸ்தான கவிஞர்)
52. "ஹே ராம்!"
தம்பி ! இந்த வருஷம் ஜனவரி மாதம் 30ந் தேதி டில்லியில் நடந்த மகா பாதகச் செயலின் விவரங்களை நீ மறந்திருக்க மாட் டாய். கொலைபாதகன் ஒருவன் காந்தி மகாத்மாவுக்கு அஞ்சலி செய்ய வந்தவனைப் போல நடித்து அவர்மீது நாலு குண்டுகளைச் சுட்டான். முதல் குண்டு பட்டதும் மகாத்மா "ஹே ராம்!" என்று சொல்லிக்கொண்டு தரையில் விழுந்தார். இதெல்லாம் உனக்கு நினைவிருக்கிறதல்லவா ?
தென்னாப்பிரிக்காவில் 1908-ம் வருஷத்தில் ஒருமுறை காந்தி மகாத்மா "ஹே ராம் !" என்று சொல்லிக்கொண்டு தரையில் விழும்படி நேர்ந்தது. முரட்டுப் பட்டாணியன் ஒருவன் அவரைத் தடியினால் மண்டையில் அடித்ததினால் அவ்விதம் அவர் விழும்படி ஆயிற்று. உலகத்தின் பாக்கிய வசத்தினால் அம்முறை காந்தி மகானின் உயிருக்கு ஆபத்து நேரவில்லை. மூர்ச்சையடையும்படியாக மட்டும் ஏற்பட்டது. அந்த அற்புத சம்பவத்தைப்பற்றி இப்போது நீ தெரிந்துகொள்ளப்போகிறாய்,
பிரிடோரியாவில் ரயில் ஏறிய காந்திஜி இரவு ஒன்பது மணிக்கு ஜோஹானிஸ்பர்க் வந்து சேர்ந்தார். சத்தியாக்கிரஹ சபையின் தலைவரான சேத் எஸ்ஸப் மியான் என்பவரின் வீட் டுக்கு நேரே போனார். ராஜிப்பேச்சைப்பற்றி எஸ்ஸப் மியானும் மற்ற இந்திய நண்பர்களும் அறிந்திருந்த போதிலும் இவ்வளவு விரைவில் காந்திஜி விடுதலையடைந்து போலீஸ் பாராவும் சிறை வார்டரும் இல்லாமல் வந்து சேர்வார் என்று நினைக்கவில்லை. எல்லாரும் அதிசயமும் மகிழ்ச்சியும் அடைந்தார்கள். அன்று இரவு பன்னிரண்டு மணிக்குப் பொதுக் கூட்டம் கூட்டுவ தென்று தீர்மானிக்கப்பட்டது. இதற்கிடையில் இந்தியப் பிரமுகர்களும் சிநேகிதர்களும் வந்து சேர்ந்தார்கள்.
அவர்களுக்கு ராஜி நிபந்தனைகளைப்பற்றிக் காந்திஜி விவரமாக எடுத்துக் கூறினார். பெரும்பாலோர் திருப்தி அடைந்தார்கள். இரண்டொருவர் ராஜியை எதிர்த்துப் பேசித் தங்கள் சந்தேகங்களை வெளியிட்டார்கள். "சட்டத்தின்படி பதிவு செய்து கொள்வதற்கும் நாமாகப் பதிவு செய்து கொள்வதற்கும் அப்படி என்ன வித்தியாசம் ? மேலும் கறுப்புச் சட்டத்தை எடுத்த பிறகு நாமாகப் பதிவு செய்துகொண்டாலும் அர்த்தம் உண்டு. நாம் பதிவு செய்துகொண்ட பிறகு கறுப்புச் சட்டம் ரத்து செய்யப்படும் என்பது என்ன நிச்சயம் ? ஸ்மட்ஸ் வாக் குறுதி பிறழ்ந்துவிட்டால் நாம் என்ன செய்யமுடியும் ? " என்று, கேட்டார்கள். அவர்களுக்குச் சந்தேகம் தீர்ந்து ராஜியை ஒப்புக் கொள்ளுமாறு காந்திஜி பதில் சொன்னார். அதன் விவரம் பின் வருமாறு:
"இத்தகைய ஆட்சேபத்தைக் கிளப்புவது நியாயந்தான். கறுப்புச் சட்டத்தை ரத்து செய்த பிறகு நாம் வலியச் சென்று பதிவு செய்து கொள்வது என்று ஏற்பாடாகியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனால் ராஜி என்று ஏற்படும் போது இரண்டு கட்சியாரும் கொஞ்சம் விட்டுக் கொடுத்தே தீரவேண்டும். கொள்கைப் பற்றிய விஷயங்களில் விட்டுக் கொடுக்கக் கூடாதே தவிர மற்ற அம்சங்களில் விட்டுக் கொடுத்தால் தான் அது ராஜியாகும். 'கறுப்புச் சட்டத்துக்கு உட்படக் கூடாது' என்பது நம்முடைய அடிப்படையான கொள்கை. வேறு விதத்தில் ஆட்சேபமில்லாத காரியங்களைக் கூடச் சட்டத்தின் பலவந்தத்துக்காக நாம் செய்யத் தயாரா யில்லை. சர்க்காரின் அடிப்படையான கொள்கையோ, 'புதிய இந்தியர்கள் சட்ட விரோதமாக டிரான்ஸ்வாலுக்குள் நுழையக் கூடாது ; இதைத் தடுக்க வேண்டுமானால் ஏற்கெனவே யுள்ள இந்தியர்கள் சர்க்காரிடம் சர்டிபிகேட் வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும்' என்பது. ஒருவருடைய சர்டிபிகேட்டை இன்னொருவர் சட்ட விரோதமாக உபயோகிக்க இடமில்லாதபடி சர்டிபிகேட்டில் தகுந்த அடையாளங்கள் இருக்க வேண்டும் என்றும் அவர்கள் கேட்கிறார்கள். சர்க்காருடைய இந்தக் கொள்கையை நாம் ஒப்புக் கொண்டு அதற்கு அநுகுணமாக நடந்து வருவதாகச் சொல்லி யிருக்கிறோம். சட்டம் இயற்றுவதைத்தான் ஆட்சேபித்திருக்கிறோம். ஓர் உதாரணம் சொல்கிறேன். யாராவது ஒருவரை நாம் சந்தித்தவுடனே 'நமஸ்காரம்' என்று சொல்லி வணங்குகிறோம். இது நாமாகச் செய்வது. ஆனால், என்னைக் கண்டதும் நீ வணங்கி நமஸ்காரம் செய்யவேண்டும் என்று பலவந்தம் செய்தால், அதற்கு இணங்க நாம் உட்படுவோமா ? மாட்டோம்' என்று தான் சொல்லுவோம். இதுபோலவே கறுப்புச் சட்டத்துக்கு உட்பட மறுத்ததற்கும் இப்போது நாமாகப் பதிவு செய்து கொள்வதற்கும் வித்தியாசம் உண்டு. தளபதி ஸ்மட்ஸ் வாக்குறுதி பிறழ்ந்து விட்டால் என்ன செய்வது என்பது இன்னொரு கேள்வி. தன்னுடைய கட்சியின் நியாயத்தில் நம்பிக்கையுள்ள சத்தியாக்கிரஹிக்கு இத்தகைய சந்தேகம் உதவாது. எதிராளி சத்தியத்துக்குக் கட்டுப்பட்டு நடப்பான் என்றே நாம் நம்ப வேண்டும். அப்படி எதிராளி வாக்குறுதி மீறும் பட்சத்தில் நம்மிடமுள்ள சாத்தியாக்கிரஹ ஆயுதம் எங்கே போகிறது ? மறுபடியும் அதே ஆயுதத்தைக் கையாண்டு வெற்றி பெறுவோம்."
காந்திஜி இவ்வாறு விளக்கிச் சொன்ன பிற்பாடு முதலில் சந்தேகப் பட்டவர்களும் ராஜியை ஒப்புக் கொண்டார்கள்.
ஆனால் இரவு பன்னிரண்டு மணிக்கு நடந்த பொதுக் கூட்டத்தில் இவ்வளவு சுலபமாகக் காரியம் நடக்கவில்லை. சுமார் ஆயிரம் இந்தியர்கள் பொதுக் கூட்டத்துக்கு வந்திருந்தார்கள். இவர்களில் பட்டாணி முஸ்லிம்கள் சிலரும் இருந்தார்கள். நண்பர்களிடம் கூறிய விஷயத்தை யெல்லாம் பொதுக் கூட்டத்திலும் காந்திஜி எடுத்துக் கூறினார். அவருடைய பேச்சு முடிந்ததும் கூட்டத்தில் ஒரு பட்டாணி முஸ்லிம் எழுந்து நின்றார்.
"உங்களுடைய ராஜி ஒப்பந்தப்படி பதிவு செய்து கொள்வோர் பத்து விரல் அடையாளம் கொடுக்க வேண்டுமா? வேண்டாமா ?" என்று கேட்டார்,
"கொடுக்க வேண்டும் என்பது என்னுடைய சொந்த அபிப்பிராயம். ஆனால் அப்படிக் கொடுப்பது தன்மதிப்புக்கு விரோதம் என்று எண்ணுகிறவர்கள் கொடுக்க வேண்டிய தில்லை" என்று காந்திஜி பதில் கூறினார்.
"நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் ? பத்து விரல் அடையாளம் கொடுப்பீர்களா? மாட்டீர்களா ? " என்று அந்தப் பட்டாணியர் மீண்டும் கேட்டார்.
"நான் கொடுக்கத்தான் போகிறேன்" என்றார் காந்திஜி.
"அது எப்படி? பத்து விரல் அடையாளம் கொடுப்பது. அவமானம் என்றும், குற்றவாளிகளிடந்தான் அப்படி விரல் அடையாளம் வாங்குவது வழக்கம் என்றும் நீங்கள் தானே சொன்னீர்கள் ? இப்போது நீங்களே பத்துவிரல் அடையாளம் கொடுப்பது எப்படிச் சரியாகும்?" என்று கேட்டார் பட்டாணியர்.
இதற்குப் பதிலாகக் காந்திஜி, கட்டாயத்தின் பேரில் ஒன்றைச் செய்வதற்கும் சொந்தமாகச் செய்வதற்கும் உள்ள வித்தியாசத்தை விளக்கிக் கூறினார். ஆனால் அவர் கூறியது அந்தப் பட்டாணியருடைய காதில் ஏறவேயில்லை.
"நீங்கள் சொல்வது ஒன்றும் சரியில்லை. தளபதி ஸ்மட்ஸிடம் பதினையாயிரம் பவுன் லஞ்சம் வாங்கிக் கொண்டு இந்திய சமூகத்தை நீங்கள் காட்டிக் கொடுத்து விட்டதாகக் கேள்விப் படுகிறோம். இதைப் பற்றி எங்களுக்குக் கவலையில்லை. ஆனால் நாங்கள் ஒருநாளும் விரல் அடையாளம் கொடுக்கப் போவதில்லை. யார் ஒருவன் முதன் முதலில் விரல் அடையாளம் கொடுப்பதற்குப் போகிறானோ அவனை நான் கொன்று போட்டு விடப் போகிறேன். அல்லாமீது ஆணையாகச் சொல்கிறேன். ஜாக்கிரதை! "
பட்டாணியர் இவ்விதம் கூறியதைக் கேட்டதும் கூட்டத்திலிருந்தவர்கள் கலங்கிப் போனார்கள். ஆனால் காந்திஜி மட்டும் எவ்விதக் கலக்கமும் அடையவில்லை. அவர் அமைதியாகக் கூறியதாவது:
“பட்டாணிய நண்பர் ஆத்திரங் கொண்டு பேசினார். அவருடைய ஆத்திரத்துக்குக் காரண மிருக்கிறது. ஆனால் பணத்துக்காக இந்திய சமூகத்தை நான் காட்டிக் கொடுத்து விட்டேன் என்பதை யாரும் நம்ப மாட்டார்கள் என்று நம்புகிறேன். பத்து விரல் அடையாளம் கொடுப்பது சுய மதிப்புக்குப் பங்கம் என்று கருதுகிறவர்கள் அவ்விதம் கொடுக்க வேண்டியதில்லை என்று முன்னமே சொன்னேன். அவர்கள் விஷயத்தில் பத்து விரல் அடையாளம் இல்லாமலே சர்டிபிகேட் வாங்கிக் கொடுக்கும் பொறுப்பு என்னுடையது. ஆனால் விரல் அடையாளம் கொடுப்பவரைக் கொன்றுவிடுவதாக அவர் பயமுறுத்தியது பெருந்தவறு. அதிலும் ஆண்டவன் பெயரைச் சொல்லி யாரையும் கொல்லப் போவதாகச் சபதம் செய்யக் கூடாது. ஏதோ ஆத்திரப்பட்டு அவ்விதம் அவர் சொன்னார் என்றே கருதுகிறேன். அவர் தாம் பயமுறுத்தியபடி காரியத்தில் செய்வதா யிருந்தாலும் நான் என்னுடைய கொள்கையிலிருந்து பிறழ முடியாது. இதுவரை இயக்கத்தை நடத்தி வந்தவனாகிய நான் தான் இப்போது முதலில் சென்று விரல் அடையாளம் கொடுக்க வேண்டும். அப்படிக் கொடுக்கத்தான் போகிறேன். உலகத்தில் பிறந்தவர்கள் எல்லாருக்கும் மரணம் உண்டு. வியாதியினாலோ முதுமையினாலோ இறப்பதைக் காட்டிலும் சகோதரன் ஒருவனுடைய கையினால் கொல்லப்பட்டு இறப்பது மேலானது. அதற்காக வருத்தப்பட வேண்டியதில்லை; அப்படி என்னைக் கொல்லவரும் சகோதரனிடத்திலும் கோபமோ துவேஷமோ இல்லாமல் நான் இறந்தேனானால், அதுவே நான் பெறக் கூடிய பெரும் பேறாகும். அதுதான் என் ஆத்மாவுக்கு நற்கதி அளிக்கும். என்னைக் கொல்லும் பொருட்டுத் தாக்கிய சகோதரனும் பிற்காலத்தில் கட்டாயம் நான் குற்றமற்றவன் என்பதை உணர்ந்து கொள்வான்."
தம்பி! இவ்விதம் காந்திஜி தென்னாப்பிரிக்காவில் ஜோகா னிஸ்பர்க்கில் 1908-ம் வருஷம் ஜனவரி 30௳ இரவு கூறினார். அப்படிக் கூறிய விவரத்தை அவரே 1924-ம் வருஷம் ஏரவாடா சிறையில் எழுதிய "தென்னாப்பிரிக்கா சத்தியாக்கிரஹம்" என்னும் நூலில் எழுதியிருக்கிறார்.
காந்தி மகாத்மாவின் வாக்கு நினைக்கவும் பயங்கரமா யிருக் கும் முறையில் நாற்பது வருஷத்துக்குப் பிறகு பலித்துவிட்டது ! அவருடைய மனோரதம் நிறைவேறிவிட்டது. சரியாக நாற்பது வருஷத்துக்குப் பிறகு 1948-ம் வருஷம் ஜனவரி 30௳ மாலை காந்தி மகான் அவருடைய சகோதரன் ' ஒருவனுடைய கையினால் இறக்கும் பெரும் பாக்கியத்தை அடைந்தார். 'சகோதரன் ' என்று குறிப்பிடுவதற்கு எனக்குக் கை கூசுகிறது. 'சண்டாளப் பாதகன்' என்று எழுதத் தோன்றுகிறது. ஆனால் காந்தி மகாத்மாவின் வாக்கின்படி அந்தப் பாதகனும் தன்னுடைய தவறை உணர்ந்து வருந்துவானா ? ஆண்டவனுக்குத் தான் தெரியும்!
பிறகு நிகழ்ந்ததைச் சொல்லுவதற்கு முன்னால் அந்தப் பட்டாணியன் அவ்விதம் ஆத்திரங்கொண்டு பேசியதின் காரணத்தை உனக்குக் கூறவேண்டும். டிரான்ஸ்வாலில் அப்போது சுமார் 50 பட்டாணியர்கள் இருந்தார்கள். பட்டாணியர்களின் இயல்பைப் பற்றிக் கொஞ்சம் உனக்குத் தெரியுமல்லவா? இந்தியாவின் வடமேற்கு எல்லையில் வசிக்கும் சாதியார் பட்டாணியர். முரட்டுத்தனத்துக்கும் பலாத்காரச் செயல்களுக்கும் பெயர் போனவர்கள். கொல்லுவதும் கொலையுண்பதும் அவர்களுக்குச் சர்வ சாதாரணம். இரத்தம் என்பது அவர்களுக்குத் தண்ணீர் பட்டபாடு. அதிக முன்கோபம் உடையவர்கள். அடிக்கடி தங்களுக்குள்ளேயே சண்டை போட்டுக் கொள்வார்கள். சண்டை என்றால் அநேகமாகக் கொலையிலே தான் முடியும்.
'எல்லைப்புற காந்தி' என்று பெயர் பெற்ற கான் அப்துல் கபூர்கான் ஒரு பட்டாணியர் தான். தம்முடைய சாதியாரை முரட்டுத்தனத்தையும் பலாத்காரத்தையும் விட்டு அஹிம்சா வாதிகளாக்க அவர் எவ்வளவோ பாடுபட்டார். சிலகாலம் ஏதோ பலித்திருப்பதாகத் தோன்றியது. ஆனால் நிரந்தரமாக நிற்க வில்லை. காஷ்மீரில் கொள்ளை யடிக்கலாம் என்று கேள்விப் பட்டதும் எல்லைப்புறப் பட்டாணியர் அந்த அழகிய தேசத்தில் புகுந்து அட்டூழியங்கள் செய்ய ஆரம்பித்து விட்டார்கள். 'எல்லைப்புற காந்தி' யாகிய கான் அப்துல் கபூர்கானும் அவருடைய சகோதரரும் சிறையிலே பல்லாண்டு இருந்தனர்.
இதனால் பட்டாணியர்களிடம் நல்ல குணங்களே இல்லை யென்று நினைத்துவிடக் கூடாது. எவ்வளவோ நல்ல குணங்கள் அவர்களிடம் இருக்கின்றன. ஆனால் முரட்டுத்தனமும் பலாத்காரப் பற்றும் அவர்களிடமுள்ள பல நல்ல குணங்களை மறைத்து வருகின்றன.
அதோடு சூது வாது அதிகம் இல்லாத சாதியாராகையால் அவர்களை ஏமாற்றுவது மிகவும் சுலபம். தென்னாப்பிரிக்காவிலிருந்த பட்டாணியர்கள் அந்த மாதிரிதான் ஏமாற்றப் பட்டிருந்தார்கள்.
அவர்களை ஏமாற்றி காந்திஜியின் மேல் குரோதம் மூளும் படி செய்தவர்கள் யார் என்று இப்போது பார்க்கலாம். சில இந்தியர்கள் அநுமதிச் சீட்டு இல்லாமல் சட்டத்துக்குப் புறம்பாக டிரான்ஸ்வாலுக்குள் நுழைந்திருந்தார்கள்.
இவ்விதம் அநுமதிச் சீட்டு இல்லாமலோ பொய் அநுமதிச் சீட்டுடனோ இந்தியர்களை டிரான்ஸ்வாலுக்குள் கொண்டு வருவதற்காகவே ஒரு கோஷ்டி வேலை செய்து கொண்டிருந்தது. இந்த வேலையின் மூலம் மேற்படி கோஷ்டி லாபம் சம்பாதித்துக் கொண்டிருந்தது. இந்தக் கோஷ்டியாருக்குச் சத்தியத்திலோ அஹிம்சையிலோ நம்பிக்கை கிடையாது. காந்திஜி ஆரம்பித்த சத்தியாக்கிரக இயக்கத்தைப் பயன்படுத்திக் கொண்டு தங்களுடைய முறை தவறிய காரியங்களைச் செய்து கொண்டு போகலாம் என்று எண்ணி யிருந்தார்கள். இயக்கம் நடந்து கொண்டிருக்கும் வரையில் யாரும் எந்த விதமான அநுமதிச் சீட்டும் காட்ட வேண்டியதில்லை யல்லவா ? ஆகையால் இயக்கம் நடக்கும் வரையில் இவர்களுக்குச் சௌகரியம் ; இயக்கம் நின்றுவிட்டால் இவர்கள் தங்கள் தொழிலை நடத்த முடியாது. இந்தக் கோஷ்டியார் தான் "காந்திஜி ஸ்மட்ஸிடம் லஞ்சம் வாங்கிக் கொண்டார் " என்ற கதையைக் கட்டி விட்டு, பட்டாணியருக்கும் தூபம் போட்டு விட்டிருந்தார்கள்.
பொதுக் கூட்டத்தில் பட்டாணியரின் கேள்விகளையும் காந்திஜியின் பதில்களையும் ஜனங்கள் பொறுமையுடன் கேட்டுக் கொண்டிருந்தார்கள். பிறகு பொதுக் கூட்டத்தின் தலைவரும் ராஜி ஏற்பாட்டை ஆதரித்துத் தமது அபிப்பிராயத்தைச் சொல்லிவிட்டு, கூட்டத்தின் கருத்தைக் கேட்டார். கூட்டத்திலிருந்த சுமார் ஆயிரம் இந்தியர்களில் பட்டாணியர் இரண்டு பேரைத் தவிர மற்றவர்கள் எல்லாரும் ராஜி ஏற்பாட்டை ஒப்புக் கொண்டு கையைத் தூக்கித் தங்கள் மனப்பூர்வமான சம்மதத்தைத் தெரிவித்தார்கள்.
இரவு மூன்று மணிக்குக் காந்திஜி வீடு போய்ச் சேர்ந்தார். அப்புறமும் தூக்கம் வரவில்லை. மறுநாள் உதயத்தில் மற்ற சத்தியாக்கிரஹக் கைதிகளை வரவேற்பதற்காகச் சிறைச்சாலை வாசலில் அவர் போய்க் காத்திருக்க வேண்டுமல்லவா ?
சிறைச்சாலைத் தலைவருக்கு முதல் நாள் இரவே உத்தரவு வந்து விட்டது. காலை ஏழு மணிக்குக் காந்திஜி சிறைவாச லுக்கு வந்து சேர்ந்ததும் சிறைக்குள்ளிருந்த சத்தியாக்கிரகக் கைதிகள் வெளியே வர ஆரம்பித்தனர். ஒரு மணி நேரத்துக்குள் எல்லோரும் விடுதலை செய்யப் பட்டார்கள். அப்புறம் இரண்டுநாள், விடுதலையடைந்த சத்தியாக்கிரகிகளுக்கு வரவேற்பும் விருந்தும் கொண்டாட்டமுமாக இருந்தது.
ராஜி ஏற்பாட்டின் ஷரத்துக்கள் இந்தியர்களுக்கு நன்றாக எடுத்துச் சொல்லப்பட்டன. ஆயினும் ஏற்கெனவே அதிருப்தி யடைந்தவர்களைத் திருப்தி செய்ய முடியவில்லை. அவர்கள் தங்கள் துவேஷப் பிரசாரத்தை விடாமல் செய்து வந்தார்கள். பொதுவாகப் பெரும்பாலான இந்தியர்கள் விஷயத்தில் அவர்களுடைய பிரசாரம் பலன் தரவில்லை. ஆனால் பட்டாணியர்களின் ஆத்திரம் மட்டும் வளர்ந்து கொண்டு வந்தது.
இந்தியர்கள் தாங்களாகவே சென்று பதிவு செய்வதற்குரிய பாரங்களை சர்க்கார் அதிகாரிகள் இந்தியத் தலைவர்களைக் கலந்து கொண்டு தயாரித்தார்கள்.
பிப்ரவரி 10௳ இந்திய சமூகத்தின் தலைவர்கள் முதன் முதலாகச் சென்று பதிவு செய்து கொள்ளவேண்டும் என்று தீர்மானமாயிற்று. தலைவர்கள் வழிகாட்டினால் தான் மற்றவர்கள் சங்கோசமில்லாமல் சென்று பதிவு செய்து கொள்ள முடியும். அதோடு சர்க்கார் அதிகாரிகள் பதிவு செய்து கொள்ள வருகிறவர்களை மரியாதையாக நடத்துகிறார்களா என்று கவனித்துக் கொள்ளுதலும் சாத்தியமாகும்.
பிப்ரவரி 10 காலையில் காந்திஜி வீட்டை விட்டுக் கிளம்பித் தம் காரியாலயத்துக்குச் சென்றார். அவருடைய காரியாலயத்திலேயே தான் சத்தியாக்கிரஹ காரியாலயமும் இருந்தது. காரியாலயத்தின் வாசலில் மீர் ஆலம் என்னும் பட்டாணியரும் அவருடைய தோழர்கள் சிலரும் நின்று கொண்டிருந்தார்கள். மீர் ஆலம் ஏற்கெனவே காந்திஜியிடம் தொழில் முறையில் ஆலோசனை கேட்கப் பலதடவை வந்திருக்கும் கட்சிக்காரர். ஆறு அடி உயரமும் திடகாத்திர தேகமும் படைத்தவர். காந்திஜியைச் சந்தித்தவுடனே சலாம் செய்து முகமன் கூறுவது அவருடைய வழக்கம். ஆனால் இன்றைக்கு அவர் சலாம் செய்யவில்லை. அவருடைய முகத்தில் வழக்கமான புன்னகையும் இல்லை. காந்திஜி "என்ன சேதி ? செளக்யமா?" என்று கேட்டதற்கு அவர் சரியாய் பதில் சொல்லவும் இல்லை. அவருடைய கண்களில் கோபம் கொதித்ததைக் காந்திஜி கவனித்துக் கொண்டார். ஏதோ ஒரு விபரீத சம்பவம் இன்றைக்கு நடக்கப்போகிறது என்று அவருடைய உள்ளுணர்வு கூறியது.
காரியாலயத்துக்குக் காந்திஜி வந்து சேர்ந்த சில நிமிஷங்களுக் கெல்லாம் சத்தியாக்கிரஹக் கமிட்டித் தலைவர் ஜனாப் எஸ்ஸப்மியானும் மற்றப் பிரமுகர்களும் வந்து சேர்ந்தார்கள். எல்லாரும் பதிவு செய்யும் ஆபீஸுக்குப் புறப்பட்டார்கள்.
காந்திஜியின் காரியாலயத்தி லிருந்து மேற்படி ஆபீஸ் ஏறக்குறைய முக்கால் மைல் தூரத்தில் இருந்தது. எல்லாரும் நடந்தே சென்றார்கள். அவர்களை மீர் ஆலமும் அவருடைய பட்டாணியத் தோழர்களும் பின்தொடர்ந்தார்கள்.
பதிவு செய்யும் சர்க்கார் ஆபீசுக்குச் சில கெஜ தூரத்தில் அர்னாட் கிப்ஸன் என்னும் அட்டர்னிகளின் ஆபீஸ் இருந்தது. அந்தக் கட்டிடத்தின் வாசலில் மீர் ஆலம் காந்திஜியின் அருகில் நெருங்கி வந்து "எங்கே போகிறீர்?" என்று கேட்டார்.
"என் பெயரைப் பதிவு செய்து அனுமதிப் பத்திரம் பெறுவதற்காகப் போகிறேன். பத்து விரல் அடையாளமும் கொடுக்கப் போகிறேன்!" என்று காந்திஜி சொன்னார்.
அவ்வளவு தான்; பின் புறத்திலிருந்து ஒரு பெரிய குண்டாந்தடி காந்திஜியின் தலையில் விழுந்தது. “ஹே ராம்!" என்று சொல்லிக் கொண்டே காந்தி மகாத்மா தரையில் சாய்ந்து மூர்ச்சை யடைந்தார்.
-----------------
53. சாந்த மூர்த்தி
காந்திஜி தரையில் விழுந்து மூர்ச்சை யடைந்த பிறகும் மீர் ஆலமும் அவருடைய நண்பர்களும் சும்மா விடவில்லை. மேலும் அவரைத் தாக்கி அடித்தார்கள். எஸ்ஸப் மியானும் தம்பி நாயுடுவும் காந்திஜி மீது அடி விழாமல் தடுக்க முயன்றபோது, அவர்களும் அடிக்கும் உதைக்கும் பாத்திரமானார்கள். இந்தக் காட்சியைச் சாலையிலே போய்க் கொண்டிருந்த சில ஐரோப்பி யர்கள் பார்த்து விட்டு விரைந்து வந்தார்கள். அவர்கள் சமீபித்ததும் மீர் ஆலமும் அவருடைய தோழர்களும் தப்பி ஓடப் பார்த்தார்கள். ஆனால் அவர்களுடைய முயற்சி பலிக்கவில்லை. அவர்களை ஐரோப்பியர்கள் கைப்பிடியாகப் பிடித்துக் கொண்டார்கள். இன்னும் சிலர் காந்திஜியைத் தூக்கி எடுத்து மிஸ்டர் கிப்ஸனுடைய ஆபீஸ் அறைக்குக் கொண்டு போனார்கள். மூர்ச்சை தெளிவதற்குரிய சிகிச்சையும் செய்யப்பட்டது. காந்திஜி கண் விழித்தபோது, ரெவரண்ட் டோக் என்னும் நண்பர் தம்மைக் குனிந்து பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டார்.
"இப்போது உடம்பு எப்படி யிருக்கிறது ? " என்று டோக் கேட்டார்.
"உடம்பு சரியாய்த் தானிருக்கிறது. பல்லிலும் விலாவிலும் மட்டும் வலி யிருக்கிறது. மீர் ஆலம் எங்கே ?" என்று காந்தி மகான் கேட்டார். "அவனும் அவனுடைய சகாக்களும் கைது செய்யப்பட் டனர்" என்றார் டோக் பாதிரியார்.
"அது எப்படி ? கூடவே கூடாது ! அவர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும்!" என்றார் மகாத்மா காந்தி.
"அதைப்பற்றி இப்போது என்ன ? பிறகு பார்த்துக் கொள்ளலாம். உங்களுடைய உதடு, கன்னம் எல்லாம் காயமாகி இரத்த விளாறாக இருக்கிறது. முதலிலே சிகிச்சையைப் பற்றிக் கவனிக்க வேண்டும். போலீஸார் உங்களை ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போகத் தயாராயிருக்கிறார்கள். ஆனால் என்னுடைய ஜாகைக்குத் தாங்கள் வருவது நலம். வந்தால் நானும் என் மனைவியும் எங்களால் இயன்ற செளகரியங்கள் செய்து கொடுக்கிறோம்."
"போலீஸாருக்கு வந்தனம். ஆனால் நான் ஆஸ்பத்திரிக்குப் போக விரும்பவில்லை. உங்களுடைய வீட்டுக்கே வருகிறேன். என்னை அழைத்துப் போங்கள்." இவ்வாறு காந்திஜி கூறியதற்குக் காரணம் டோக் பாதிரியாரிடம் மகாத்மாவுக்கு இருந்த அன்பும் நம்பிக்கையுந்தான்.
ரெவரண்ட் டோக் நியூஸிலாந்து தேசத்திலிருந்து தென் னாப்பிரிக்காவுக்கு வந்தவர். காந்திஜியைப் பற்றியும் அவருடைய அஹிம்சா இயக்கத்தைப் பற்றியும் நன்கு அறிந்திருந்தவர்.
மேற்படி சம்பவம் நடந்ததற்கு ஆறு மாதத்துக்கு முன்னால் டோக் பாதிரியார் காந்திஜியை நேரில் சந்தித்து அறிமுகம் செய்து கொள்வதற்காகச் சென்றார். "ரெவரண்டு டோக்" என்ற பெயரைப் பார்த்ததும், அவர் தம்மைக் கிறிஸ்துவ மதத்தில் சேர்க்க வந்திருப்பதாக மகாத்மா நினைத்தார். ஆயினும் அவரைச் சந்திக்க இசைந்தார். டோக் பாதிரியாருடன் சில நிமிஷம் சம்பாஷிப்பதற்குள்ளேயே அவர் எப்பேர்ப்பட்ட உத்தம புருஷர் என்பதைக் காந்திஜி தெரிந்து கொண்டார், "உங்களுடைய போராட்டத்தில் என்னை உங்கள் நண்பனாகக் கருதுங்கள். என்னால் முடிந்த அளவு தங்களுக்கு உதவி செய்வது என் கடமை " என்றார் டோக்.
ரெவரண்டு டோக் கிறிஸ்துவ மதத்தில் பாப்டிஸ்ட் மிஷன் என்ற உட்பிரிவைச் சேர்ந்தவர். அந்த உட்பிரிவைச் சேர்ந்த வெள்ளைக்காரக் கிறிஸ்துவர்களுக்கு மத போதனை செய்து அதற்காக அவர்களிட மிருந்து வருமானம் பெற்று வந்தார். சத்தியாக்கிரஹ இயக்கத்துக்கு ஆதரவு தருவதின் காரணமாக அவருடைய ஜீவனோபாயத்துக்கு ஆபத்து நேரிடலாம் என்று காந்திஜி கருதினார். அதாவது வெள்ளைக்காரக் கிறிஸ்துவர்கள், "உங்களுடைய போதனை எங்களுக்குத் தேவையில்லை" என்று சொல்லி விடலாம் அல்லவா ? இது பற்றி மகாத்மா பிரஸ்தாபித்த போது, டோக் பாதிரியார், "அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை. ஏசுநாதருடைய உண்மையான தர்மத்தைப் பின்பற்றி நான் நடக்கிறேன். வெள்ளைக்காரக் கிறிஸ்துவர்கள் என்னைக் கைவிட்டால் விடட்டும். என்னைக் காப்பாற்றுவதற்குக் கடவுள் இருக்கிறார்!" என்றார்.
இதுமுதல் காந்தி மகானுக்கும் டோக் பாதிரியாருக்கும் அத்தியந்த சிநேகம் ஏற்பட்டு வளர்ந்திருந்தது. ஆகையினாலே தான், படுகாயப்பட்டிருந்த காந்திஜி ஆஸ்பத்திரிக்குப் போவ தற்குப் பதிலாக டோக் பாதிரியாரின் வீட்டுக்குப் போக இசைந்தார்.
டோக் வீட்டுக்குப் போய்ச் சேர்ந்ததும் டாக்டருக்குச் சொல்லியனுப்பினார்கள். இதற்கிடையில், ஆசியாக்காரர்களைப் பதிவு செய்யும் உத்தியோகஸ்தர் மிஸ்டர் சாம்னி காந்திஜியைப் பார்க்க வந்தார். மிஸ்டர் சாம்னியின் காரியாலத்துக்குக் கொஞ்ச தூரத்திலேதான் மகாத்மா அடிபட்டு விழுந்த சம்பவம் நடந்ததல்லவா ? ஆகையால், காந்திஜியின் தேக நிலைமையைப் பற்றி நேரில் தெரிந்துகொண்டு போவதற்காகவும் அநுதாபம் தெரிவிப்பதற்காகவும் மிஸ்டர் சாம்னி வந்தார்.
அவரைப் பார்த்ததும் காந்திஜி கூறியதாவது :-"தங்களுடைய காரியாலயத்துக்கு நான் வந்து கொண்டிருந்தேன். விரல் அடையாளம் கொடுத்துப் பதிவுப் பத்திரம் பெறுவதற்காகவே வந்தேன். வழியில் இப்படி நடந்துவிட்டது. அதனால் பாதகமில்லை. அவசியமான பத்திரங்களை உடனே எடுத்துக் கொண்டு வந்து என்னிடம் இங்கேயே பெயர்ப் பதிவு பெற்றுக் கொள்ளக் கோருகிறேன். எனக்கு முன்னால் வேறு எந்த இந்தியரையும் பதிவு செய்யக்கூடாது. முதலில் பதிவு செய்வது நானாக இருக்க வேண்டும்."
இவ்விதம் மகாத்மா கூறியதைக் கேட்ட மிஸ்டர் சாம்னி, "அதற்கென்ன அவசரம் வந்தது? இப்போது டாக்டர் வரப் போகிறார். அவர் உங்களைப் பார்த்துச் சிகிச்சை செய்யட்டும், நிம்மதியாக ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு ரிஜிஸ்டரின் தலைப்பிலே இடம் விட்டு விட்டு, மற்றவர்களைப் பதிவு செய்கிறேன். உடம்பு நன்றாய்க் குணமான பிறகு பதிவு செய்து கொள்ளலாம் " என்றார்.
"இல்லை இல்லை ; முதன் முதலில் நான் பதிவு செய்து, கொள்வதாகச் சபதம் செய்திருக்கிறேன். கடவுள் என்னை உயிரோடு வைத்திருப்பதால் அந்தச் சபதத்தை நிறைவேற் றியே தீரவேண்டும். தயவு செய்து இவ்விடமே கொண்டு வாருங்கள்!"
அதற்குமேல் மறுத்துச் சொல்ல இயலாமல் ரிஜிஸ்டரையும் பத்திரங்களையும் எடுத்து வர மிஸ்டர் சாம்னி சென்றார்.
அடுத்தபடியாக, சர்க்காரின் அட்டர்னி ஜெனரலுக்கு மகாத்மா பின் வரும் தந்தியை அனுப்பினார்:- "மீர் ஆலத்தின் பேரிலும் அவருடைய தோழர்கள் பேரிலும் நான் குற்றம் சாட்டவில்லை. அவர்கள் மேல் வழக்குத் தொடரப்படுவதையும் விரும்பவில்லை. தயவு செய்து எனக்காக அவர்களை உடனே விடுதலை செய்துவிட வேண்டும்!"
போலீஸார் ஏற்கெனவே மீர் ஆலம் கோஷ்டியைக் கைது செய்திருந்தார்கள். காந்தி மகாத்மாவின் மேற்படி தந்தியின் பேரில், அட்டர்னி ஜெனரல் உத்தரவுப்படி, அவர்கள் விடுதலை செய்யப்பட்டார்கள். ஆனால் ஜோகானிஸ்பர்க் ஐரோப்பியர்கள் அதை விரும்பவில்லை. அவர்களில் சிலர் அட்டர்னி ஜெனரலுக்கு ஒரு கடுமையான கடிதம் எழுதினார்கள்.
"குற்றவாளிகளைத் தண்டிப்பது பற்றிக் காந்திஜியின் கொள்கைகள் ஒரு மாதிரியாக இருக்கலாம். அந்தக் கொள்கைகளை அரசாங்கம் ஏற்றுக் கொள்ள முடியாது. காந்தியை அடித்த சம்பவம் அவருடைய சொந்த இடத்தில் நடக்க வில்லை ; பொதுச் சாலையில் நடந்தது. ஆகையால் அது பொது ஜன விரோதமான குற்றம். சம்பவத்தை நேரில் பார்த்த பல ஐரோப்பியர்கள் சாட்சி சொல்லத் தயாராயிருக்கிறார்கள், ஆகையால் குற்றவாளிகளைக் கட்டாயம் கைது செய்து விசாரணை நடத்தித் தண்டிக்க வேண்டும்."
பிரபல ஐரோப்பியர்கள் கையொப்பமிட்டிருந்த இந்தக் கடிதத்தின் பேரில் அட்டர்னி ஜெனரல் மறுபடியும் மீர் ஆலம் கோஷ்டியைக் கைது செய்ய உத்தரவிட்டார். விசாரணை நடந்து குற்றவாளிகளுக்கு மூன்று மாதம் கடுங்காவல் தண் டனையும் கிடைத்தது. ஆனால் காந்திஜியின் கொள்கையை மதித்து, அவரைச் சாட்சி சொல்வதற்குக் கேர்ட்டுக்கு அழைக் காமல் விட்டு விட்டார்கள்.
டாக்டர் வந்து காந்திஜியைப் பார்த்தார். கன்னத்திலும் மேல் உதட்டிலும் பட்டிருந்த பெருங் காயங்களுக்குத் தையல் போட்டுக் கட்டினார். விலாக்களுக்கு மருந்து தடவினார் தையலை எடுக்கும் வரையில் பேசக்கூடாது என்றும், திரவ பதார்த்தந்தான் சாப்பிடலாம் என்றும் கண்டிப்பாகச் சொன்னார். ஒரு வாரம் படுக்கையை விட்டு நகரக் கூடாதென்றும் அப்புறம் இரண்டு மாதம் வேலை எதுவும் செய்யக் கூடாது என் றும் கூறினார்.
ஆகவே, காந்திஜி கட்டாயமாக மெளன விரதம் கைக் கொள்ள வேண்டியதாயிற்று. ஆனால் முக்கியமான காரியம் ஒன்று பாக்கியிருந்தது. நல்ல வேளையாகக் கையிலே எழுதும் சக்தி இருந்தது. காகிதம் பேனா தருவித்து இந்திய சமூகத்துக்குப் பின் வரும் வேண்டுகோளை எழுதினார்:
"டோக் பாதிரியாரின் வீட்டில் பத்திரமாயிருக்கிறேன். டோக்கும் அவருடைய மனைவியும் என்னை நன்றாய்ப் பாதுகாத்து வருகிறார்கள். என்னைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம்.
" என்னை அடித்தவர்கள் தாங்கள் செய்த காரியத்தின் பலா பலனை உணர்ந்து செய்யவில்லை. நான் தவறு செய்வதாக நினைத்தார்கள். தங்களுக்குத் தெரிந்த ஒரே முறையைக் கையாண்டு என்னைத் திருத்தப் பார்த்தார்கள். ஆகையால் அவர்கள் பேரில் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன்.
'முஸல்மான்கள்' என்னை அடித்து விட்டார்கள் என்ற காரணத்தினால் ஹிந்துக்கள் முஸ்லிம்கள் பேரில் கோபங்கொண்டால், அது பெருந்தவறாகும். நான் இன்று சிந்திய இரத்தம் இரண்டு சமூகங்களையும் நிரந்தரமாக ஒன்று பிணைப்பதற்குச் சாதனமா யிருக்க வேண்டும். இதுவே என்னுடைய மன மார்ந்த பிரார்த்தனை. ஆண்டவன் அருள் புரியட்டும்.
"நடந்து விட்ட சம்பவத்தின் காரணமாக இந்திய சமூகத் துக்கு நான் கூறிய யோசனையில் மாறுதல் எதுவும் இல்லை. ஆசியாக்காரர்கள் தாங்களே வலியச் சென்று பதிவு செய்து சர்டிபி கேட் வாங்கிக்கொள்ள வேண்டும். விரல் அடையாளம் கொடுப்பதற்கு மனச்சாட்சி இடங் கொடாதவர்கள் அவ்விதம் சொல்லி சர்க்காரிட மிருந்து விலக்குப் பெறலாம். மற்றவர்கள் எல்லாரும் இந்திய சமூகத்தின் தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும்.
"சத்தியாக்கிரஹ தத்துவத்தை நன்கு உணர்ந்தவர்கள் கட வுளைத் தவிர வேறு யாருக்கும் பயப்பட வேண்டிய தில்லை. இந்தியர்கள் யாராவது ஏதாவது சொல்வார்களோ ? ' என்ற கோழைப் பயம் காரணமாகத் தங்கள் கடமையைச் செய்யத் தவறக் கூடாது. நாமாகப் பதிவு செய்து கொண்டால் கறுப்புச் சட்டம் ரத்தாகும் என்று சர்க்கார் வாக்குக் கொடுத்திருக்கின்றனர். ராஜி ஒப்பந்தத்தில் நமக்குரிய பகுதியை நிறை வேற்றி வைப்பது நம்முடைய கடமையாகும்."
இவ்விதம் இந்திய சமூகத்துக்குக் காந்திஜி விக்ஞாபனம் எழுதி முடித்ததற்கும் மிஸ்டர் சாம்னி ரிஜிஸ்டர்களையும் பத்திரங்களையும் கொண்டு வருவதற்கும் சரியா யிருந்தது. காந்திஜி கஷ்டப்பட்டு வலியைப் பொறுத்துக்கொண்டு கையெழுத்துப் போட்டு விரல் அடையாளமும் கொடுத்தார். இதைப் பார்த்துக் கொண்டிருந்த மிஸ்டர் சாம்னியின் கண்களில் கண்ணீர் ததும்பியது.
இவ்வளவு காரியங்களும் அரைமணி நேரத்துக்குள் முடிந்து விட்டது. ஆயினும் காந்திஜி இம்மாதிரி தம்மைச் சிரமப் படுத்திக் கொள்வதைப் பார்த்து மிஸ்டர் டோக்கும் அவருடைய மனைவியும் வருத்த மடைந்தார்கள். காந்திஜி குணமடைவதற்கு இடையூறாகலாம் என்றும் பயந்தார்கள். பிறகு, டோக் பாதிரியார் அந்த அறையிலிருந்தவர்களை யெல்லாம் சமிக்ஞை மூலம் அப்புறப் படுத்தினார். இனிமேல் ஒன்றும் எழுதவும் கூடாது, உடம்பை அசைக்கவும் கூடாது என்று காந்திஜியை வற்புறுத்தினார். அதன் பேரில் காந்திஜி இன்னும் ஒரு விஷயம் எழுதிக் காட்டினார். "அருள் ஒளியே! வழி காட்டுவாய்!" என்று தொடங்கும் கிறிஸ்துவப் பிரார்த்தனை கீதத்தை யாராவது பாடினால் தமது மனம் நிம்மதி அடையும் என்று எழுதினார். டோக் தம்பதிகளின் குமாரி, ஆலிவ் என் னும் சிறுமி, அந்த அறையின் வாசற்படியில் நின்று மேற்படி கீதத்தை இனிய குரலில் பாடினாள். அதைக் கேட்டு காந்திஜி மன அமைதி பெற்றார்.
டோக் குடும்பத்தார் அச்சமயம் காந்திஜிக்குச் செய்த சேவையின் பெருமையைச் சொல்லி முடியாது. குடும்பத்தைச் சேர்ந்த யாராவது ஒருவர் எப்போதும் காந்திஜியின் பக்கத்தில் இருந்து பணிவிடை செய்தார்கள். அந்த வீட்டில் காந்திஜி படுத்திருந்தவரையில் வீடு ஏதோ சத்திரம் சாவடி என்று சொல் லும்படி ஆயிற்று. காந்திஜியின் நிலைமை பற்றி விசாரிப்பதற்காக ஓயாமல் இந்தியர்கள் வந்துகொண்டிருந்தார்கள். அவரை மற்றவர்கள் பார்க்கலாம் என்று டாக்டர் அநுமதித்த பிறகு கூட்டம் இன்னும் அதிகமாயிற்று. ஜவுளி மூட்டை தூக்கிச் சென்று தெருவிலே விற்கும் இந்தியர்கள் உள்படப் பெரிய முத லாளிகள் வரையில் எல்லாரும் வந்துகொண்டிருந்தார்கள். டோக் தம்பதிகள் அனைவரையும் அன்புடன் முகமன் கூறி வரவேற்று, டிராயிங் அறையில் உட்காரச் செய்து, சமயம் அறிந்து மகாத்மாவைப் பார்க்க அனுமதித்து வந்தார்கள். காந்திஜி இது விஷயமாக எழுதியிருக்கிறார் :
"நான் அவருடைய வீட்டில் இருந்த வரையில் என்னைக் கவனிப்பதும் என்னைப் பார்க்க வந்தவர்களைக் கவனிப்பதுமே அவருக்கு வேலையா யிருந்தது. இராத்திரி நேரத்தில் கூட இரண்டு மூன்று தடவை டோக் என் அறைக்கு மெள்ள நடந்து வந்து எட்டிப் பார்த்துவிட்டுப் போவார். அவருடைய வீட்டில் வசித்த காலமெல்லாம் அது என்னுடைய வீடு என்ற எண்ணமே என் மனத்தில் குடி கொண்டிருந்தது. இன்னொருவர் வீட்டில் இருக்கிறோம் என்ற எண்ணமே தோன்றவில்லை. என்னுடைய சொந்த உற்றார் உறவினர் யாரும் டோக் தம்பதிகளைக் காட்டிலும் அதிகப் பரிவுடன் என்னைப் பராமரித்திருக்க முடியாது.
காந்திஜிக்கும் டோக் பாதிரியாருக்கும் ஏற்பட்ட சிநேகம் பிற்காலத்தில் அணுவளவும் மாறவில்லை. மறுபடியும் காந்திஜி சத்தியாக்கிரஹப் போர் ஆரம்பிக்க நேர்ந்த போது, டோக் பாதிரியின் சீடர்களான ஐரோப்பியக் கிறிஸ்துவர்கள் டோக் மீது கோபங் கொண்டார்கள். அதனால் டோக் கஷ்டப்பட வும் நேர்ந்தது. ஆயினும் அவர் எள்ளளவும் மனம் சலிக்கவில்லை .
சத்தியாக்கிரஹப் போர் தீவிர நிலையை அடைந்திருந்த சமயத்தில், டோக் பாதிரியார் ரோடீஷியாவில் காலமானார். அவருடைய மரணம், அவரை எதிர்த்தவர்களின் மனத்தைக்கூட மாற்றிவிட்டது. பாப்டிஸ்ட் தேவாலயத்தில் வெள்ளைக்காரக் கிறிஸ்துவர்கள் அநுதாபக் கூட்டம் நடத்தினார்கள். காந்திஜி, கச்சாலியா சாகிப் முதலிய இந்தியர்களை மேற்படி அநுதாபக் கூட்டத்துக்கு அழைத்துப் பேசும்படியும் செய்தார்கள்.
காந்தி மகாத்மாவின் அஹிம்சையின் மகிமைக்கு டோக் குடும்பம் சிறந்த உதாரணம் ஆகும். வெறும் பலாத்கார இயக்கமாயிருந்தால், எதிரிகளின் கூட்டத்திலிருந்து இத்தகைய அருமையான ரத்தினம் போன்ற சிநேகிதர்கள் கிடைக்கக் கூடுமா ?
--------
54. ஸ்மட்ஸ் மோசடி
காந்தி மகான் அடிபட்டு டோக் பாதிரியாரின் வீட்டில் சிகிச்சை பெற்று வந்த காலத்தில் காந்தியின் குடும்பத்தார் போனிக்ஸில் வசித்து வந்தார்கள். ஸ்ரீமதி கஸ்தூரிபாயும் குழந்தைகளும் காந்திஜி அடிபட்ட செய்தி அறிந்ததும் அளவில்லாத கவலை அடைந்தார்கள். உடனே பறந்து சென்று காத்திஜியைப் பார்க்கவேண்டுமென்று அவர்களுடைய உள்ளம் துடித்தது. ஆனால் அது சாத்தியப்படவில்லை. போனிக்ஸி லிருந்து ஜோகானிஸ்பர்க் போவதற்கு வேண்டிய ரயில் சத்தப் பணம் அவர்களிடம் இல்லை !
காந்திஜிக்கு உடம்பு குணமாகிப் பிரயாணம் தொடங்கலாம் என்று ஏற்பட்டதும் உடனே போனிக்ஸக்குப் போக விரும்பினார். போனிக்ஸ், நேட்டால் மாகாணத்தில் டர்பனுக்குக் கொஞ்ச தூரத்தில் உள்ளது என்பது நினைவிருக்கலாம். காந்திஜி நேட்டாலுக்குப் போகவேண்டிய அவசியமும் ஏற்பட்டிருந்தது.
கறுப்புச் சட்டமான து, டிரான்ஸ்வால் மாகாணத்தில் செய்யப்பட்டது. 'டிரான்ஸ்வாலைச் சேர்ந்த 13,000 இந்தியர்களையே அது பாதித்தது. நேட்டாலை அந்தச் சட்டம் பாதிக்க வில்லை. ஆயினும் கறுப்புச் சட்டத்தை எதிர்த்து காந்திஜி நடத்திய இயக்கத்தில் நேட்டாலிலும் கேப்டவுனிலும் தென் னாப்பிரிக்கா முழுவதிலுமுள்ள எல்லா இந்தியர்களுக்கும் சிரத்தை இல்லாமற் போகவில்லை. அந்த இயக்கத்தின் போக்கை எல்லா இந்தியர்களும் கவனித்துக்கொண்டு வந்தார்கள். ஏனெனில் இன்றைக்கு டிரான்ஸ்வாலில் ஏற்பட்ட சட்டத்தைப்போல் நாளைக்கு மற்ற மாகாணங்களிலும் ஏற்படலா மல்லவா ? டிரான்ஸ்வாலில் கறுப்புச் சட்டத்தை எதிர்த்து இந்தியர்கள் வெற்றிபெற்றால் அது நேட்டால் இந்தியர்களின் பலத்தையும் வளர்க்கும். டிரான்ஸ்வால் சத்தியாக்கிரஹம் தோல்வி யடைந்தால் தென்னாப்பிரிக்கா இந்தியர்கள் அனைவரையும் அது பலவீனப்படுத்தும்.
தளபதி ஸ்மட்ஸுடன் செய்துகொண்ட ராஜி ஏற்பாடு நேட்டால் இந்தியர்களின் மனத்திலும் சந்தேகங்களையும் கலக்கங்களையும் உண்டாக்கி யிருப்பதாகக் காந்திஜி அறிந்தார். முதன் முதலில் காந்தி மகாத்மாவை ஆதரித்து நின்றவர்கள் டர்பன் இந்தியர்களே யல்லவா ? ஆகையால் நேரே டர்பனுக்குப் போய் அங்குள்ள இந்தியர்களைப் பார்த்துப் பேசி அவர்களுடைய சந்தேகங்களைத் தீர்த்துவிட்டுப் பிறகு போனிக்ஸக்குப் போகக் காந்திஜி தீர்மானித்தார்.
டர்பனுக்குக் காந்திஜி போய்ச் சேர்ந்த அன்று அங்கே ஒரு பொதுக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இங்கேயும் பட்டாணியர்களால் ஏதேனும் தொல்லை நேரலாம் என்று காந்திஜியின் நண்பர்கள் சந்தேகித்தார்கள். எனவே, தக்க முன்னேற்பாடு செய்திருந்ததுடன், டர்பன் போலீஸ் தலைவரான பழைய அலெக்ஸாண்டருக்கும் தெரிவித்திருந்தார்கள்.
இன்னும் சில நண்பர்கள் காந்திஜிக்கு எச்சரிக்கை செய்தார்கள். பொதுக் கூட்டத்தில் அவர் தாக்கப்படலாமென்றும் ஆகையால் கூட்டத்துக்கே அவர் வரவேண்டாம் என்றும், கூட்டத்தை ரத்து செய்து விடலாம் என்றும் சொன்னார்கள். ஆனால் மகாத்மா இந்த யோசனைகளை ஒப்புக்கொள்ள வில்லை. "பொது ஊழியம் செய்ய வருகிறவன் புகழ்ச்சியைப் பெறுவதற்குத் தயாராயிருப்பது போலவே இகழ்ச்சிக்கும் தயாரா யிருக்கவேண்டும். பூமாலைக்கும் தயாரா இருக்கவேண்டும் ; கல்மாரிக்கும் சித்தமாயிருக்க வேண்டும். பொது மக்களின் கண்டனத்துக்குத் தப்பி ஓட முயலுதல் கூடாது. நான் கூட் டத்துக்கு அவசியம் போய்த்தான் தீருவேன். கடவுளுடைய விருப்பம் போல நடக்கும்" என்று சொல்லிவிட்டார்.
மாலை எட்டு மணிக்குப் பொதுக்கூட்டம் ஆரம்பமாயிற்று. காஸ் விளக்குகள் போடப்பட்டிருந்தன. சேத் தாவுத் முகம்மது என்பவர் தலைமை வகித்தார். இந்தியர்களுடைய நியாயமான சந்தேகங்கள் எல்லாம் தீரும்படியாக மகாத்மா தாம் ராஜிக்கு ஒப்புக்கொண்டதன் காரணங்களை விளக்கிக் கூறினார். காந்திஜியின் பேச்சு முடிந்து தலைவர் முடிவுரை கூறிக் கொண்டிருக்கும் சமயத்தில் ஒரு பட்டாணியன் கையில் ஒரு பெரிய தடியுடன் மேடையை நோக்கி ஓடி வந்தான். அதே சமயத்தில் விளக்குகள் எல்லாம் அணைக்கப்பட்டன. கூட்டத்தில் பெருங் குழப்பம் உண்டாயிற்று. ஆனால் மேடையில் இருந்த பிரமுகர்கள் - தலைவர் தாவுத் முகம்மது உள்பட- காந்திஜியைத் தங்களுக்கு மத்தியில் நிறுத்திச் சூழ்ந்து நின்று பாதுகாத்தார்கள். காந்திஜியின் நண்பர்களில் ஒருவர் இம்மாதிரி நேரும் என்று எதிர்பார்த்து கைத்துப்பாக்கி ஒன்று கொண்டு வந்திருந் தார். அதை அவர் எடுத்து ஆகாயத்தை நோக்கி வெற்று வேட்டு ஒன்று போட்டார். இதனால் கூட்டத்தில் குழப்பம் இன்னும் அதிகமாயிற்று.
பார்ஸி ரஸ்டம்ஜியின் முன் யோசனையின் பயனாகச் சில நிமிஷ நேரத்தில் சூபரின்டென்டெண்ட் அலெக்ஸாண்டர் அனுப்பிய போலீஸ் படையினர் வந்து சேர்ந்தனர். அவர்கள் காந்திஜியைச் சூழ்ந்து நின்று கூட்டத்தின் வழியாகப் புகுந்து அவரைப் பார்ஸி ரஸ்டம்ஜியின் வீட்டுக்குக் கொண்டுபோய்ச் சேர்த்தனர்.
மறுநாள் காலையில் மகாத்மாவின் யோசனையின்படி பார்ஸி ரஸ்டம்ஜி டர்பனிலிருந்த பட்டாணியர்களை யெல்லாம் தம்முடைய வீட்டுக்கு வரவழைத்தார். காந்திஜியிடம், நேரே அவர்களுடைய சந்தேகங்களைக் கேட்டுத் தீர்த்துக்கொள்ளும்படி சொன்னார். மகாத்மாவும் அவர்களுக்கு எவ்வளவோ விளக்கமாக உண்மையை எடுத்துரைத்தார். ஆயினும் பயன் ஏற்படவில்லை. காந்திஜி ஏதோ துரோகம் செய்துவிட்டார் என்ற எண்ணம் அந்தப் பட்டாணியர்களின் உள்ளத்தில் குடி கொண்டிருந்தது. அதை அசைக்கவே முடியவில்லை.
தம்பி! நம்முடைய காலத்தில் ஹிந்துக்களிலே சில மகா மூடர்கள் மகாத்மா காந்தி ஹிந்து சமூகத்துக்குத் துரோகம் செய் து விட்டதாக நினைத்தார்கள் அல்லவா ? அதன் விபரீத பலனை இவ்வருஷம் 1948 ஜனவரி 30ந் தேதி கண்டோம் அல் லவா ? இன்னமும் கூட அத்தகைய பரம முட்டாள் தனமான எண்ணத்தைப் போக்கிக்கொள்ளாத அறிவிலிகள் சிலர் இருப் பதை நாம் காண்கிறோ மல்லவா ?
இப்படியிருக்கும்போது முரட்டுப் பட்டாணியர்களின் மனத்திலிருந்த சந்தேகம் போகாததில் வியப்பு என்ன ?
எவ்வளவு விளக்கிச் சொல்லியும் பயனில்லை எனக் கண்ட மகாத்மா, "இந்த மாதிரி சந்தேகம் என்கிற வியாதி ஒருவருடைய மன தில் ஏற்பட்டு விட்டால், அதை வெறும் பேச்சினாலோ விவாதத்தினாலோ மாற்ற முடியாது. செய்யும் செயலினாலேதான் சந்தேகத்தைத் தீர்க்கவேண்டும்" என்னும் முடிவுக்கு வந்தார்.
அத்தகைய செயல் புரிவதற்குரிய சந்தர்ப்பமும் கூடிய விரைவில் வந்தது. அந்த விஷயத்துக்குப் போவதற்கு முன்னால் மகாத்மா காந்தியின் போனிக்ஸ் பிரயாணத்தைப்பற்றிச் சொல்லிவிடுகிறேன்.
டர்பன் பொதுக்கூட்டம் நடந்த மறு நாள் மாலை காந்திஜி போனிக்ஸுக்குப் புறப்பட்டார். முதல்நாள் அவரைப் பொதுக் கூட்டத்தில் பாதுகாக்க முஸ்தீபு செய்திருந்தவர்கள், இப்போது போனிக்ஸுக்கும் தாங்கள் வரவேண்டும் என்றார்கள். அவர்களை வரவேண்டியதில்லை யென்று காந்திஜி சொல்லிப் பார்த்தார்;
அவர்களுக்குப் போனிக்ஸில் நல்ல சாப்பாடு கிடைப்பது துர்லபம் என்றும் எச்சரிக்கை செய்தார். அந்த நண்பர்கள் "சாப்பாடே கிடைக்கா விட்டாலும் பாதகமில்லை. இந்தச் சமயத்தில் தங்களைப் பிரிந்திருக்க முடியாது!" என்றார்கள். காந்திஜியும் வேறு வழியின்றிச் சம்மதம் கொடுத்தார்.
இவ்விதம் காந்திஜியைப் பாதுகாக்கப் புறப்பட்ட கூட்டத் தின் தலைவர் யார் தெரியுமா ? அவர் ஒரு தமிழர் ! நேட்டாலில் பிறந்த கிறிஸ்துவத் தமிழர்! அவருடைய பெயர், ஜாக் முதலியார். குஸ்திச் சண்டையில் அவர் கைதேர்ந்தவர். தென்னாப் பிரிக்காவிலுள்ள யாரும் - வெள்ளைக்காரனாயினும் கறுப்பு மனிதனாயினும் - குஸ்திச் சண்டையில் ஜாக் முதலியை ஜயிக்க முடியாது என்று அச்சமயம் அவருக்குப் புகழ் ஏற்பட் டிருந்தது.
"தங்களுடன் இருக்கும்போது எங்களுடைய கைவரிசை ஒன்றையும் காண்பிக்க மாட்டோம்!" என்று வாக்குறுதி கொடுத்துவிட்டு ஜாக் முதலியாரும் அவருடைய தோழர்களும் போனிக்ஸுக்குப் புறப்பட்டுச் சென்றார்கள்.
தென்னாப்பிரிக்காவில் மழை இல்லாத காலங்களில் எல்லாம் காந்திமகான் திறந்த வெளியிலே தூங்குவது வழக்கம். போனிக்ஸ் ஆசிரமத்திலும் திறந்த வெளியிலேயே படுத்துத் தூங்கினார். ஜாக் முதலியாரும் அவருடைய தோழர்களும் முறை போட்டுக்கொண்டு இரவெல்லாம் காந்திஜியைக் காவல் புரிந்தார்கள். பட்டாணியர்கள் இராத்திரியில் கள்ளத்தனமாக வந்து தூங்குகிற காந்திஜியைத் தாக்கிவிடப் போகிறார்களே என்பதற்காகத்தான். " என்னுடைய உயிர் எனக்கு அவ்வ ளவு பெரிதன்று. என்னுடைய சகோதரர் கையினால் சாக நேர்ந்தால் அதுவே என் பாக்கியமாகும்" என்று காந்திஜி சொன்னார். இதையெல்லாம் ஜாக் முதலியார் கோஷ்டி கேட்கவில்லை. "உங்களுக்கென்ன கவலை? நீங்கள் பாட்டுக்குத் தூக்கம் வரும்போது தூங்குங்கள்!" என்று சொல்லி விட்டு, காந்திஜியின் கண்ணில் படாமல் தூரத்தில் நின்று அவர்கள் காவல் புரிந்தார்கள்.
தம்பி ! இதைப் படிக்கும்போது, காட்டிலே இராமரும் சீதையும் தூங்குங்கால் இலங்மணன் கண் விழித்துக் காவல் புரிந்தது நினைவு வருகிறதல்லவா?
போனிக்ஸில் காந்திஜி வசித்த நாட்களில் தளபதி ஸ்மட் ஸுடன் செய்துகொண்ட ராஜியைப்பற்றி “இண்டியன் ஒபினியன் " பத்திரிகையில் பல கட்டுரைகள் எழுதினார். கேள்வி பதில் ரூபத்தில், ஆட்சேபங்களைக் குறிப்பிட்டுச் சமாதானமும் எடுத்துக் கூறினார். டிரான்ஸ்வால் இந்தியர்கள் சம்பந்தப் பட்ட வரையில், அவர்கள் காந்திஜியிடம் பூரண நம்பிக்கை வைத்து அவர் காட்டிய வழியை மனப்பூர்வமாகப் பின்பற்றி னார்கள் என்று சீக்கிரத்திலேயே தெரியவந்தது. மிகச் சில தினங்களுக்குள்ளே டிரான்ஸ்வால் இந்தியர்கள் அனை வரும். தாங்களே வலியச் சென்று பதிவு செய்துகொண்டு விட்டார்கள். எனவே, ராஜி உடன்படிக்கையில் இந்தியர்கள் தங்களுடைய பங்கை நிறைவேற்றி விட்டார்கள்.
ஆனால் டிரான்ஸ்வால் சர்க்கார் தங்களுடைய பங்கை நிறைவேற்றினார்களா என்றால், அது தான் இல்லை. தளபதி ஸ்மட்ஸ் மோசம் செய்துவிட்டார் !
தளபதி ஸ்மட்ஸ் பெரிய கைகாரர். உலகத்து மகா இராஜ தந்திரிகளில் ஒருவர். 1907-ம் வருஷத்தில் டிரான்ஸ்வால் அரசாங்கம் அவருடைய கைக்குப் போயிற்று. மிஸ்டர் மாலன் தேர்தலில் ஜயிக்கும் வரையில் சுமார் 40 வருஷ காலம் தென்னாப்பிரிக்கா சர்க்காருக்கு அவரே தலைவராயிருந்து வந்தார். அவருடைய இராஜ தந்திரத்தையும் தீர்க்காலோசனையையும் பற்றி இன்றைக்கு உலகமெல்லாம் புகழ் பரவியிருக்கிறது.
அப்படிப்பட்ட தளபதி ஸ்மட்ஸ் தமது அரசியல் வாழ்க்கையின் ஆரம்பத்தில் காந்திஜியின் சத்தியாக்கிரஹ ஆயுதத்துடன் போராட நேர்ந்தது. சத்தியாக்கிரஹத்தை வெற்றி கொள்வதற்கு தளபதி ஸ்மட்ஸ் அரசியல் தந்திரத்தையும் சூழ்ச்சியையும் கையாண்டார். காந்திஜியிடம் மிக மரியாதை யாகப் பேசி ராஜி ஏற்பாட்டுக்கு இணங்கச் செய்தார். காரியம் முடிந்த பிறகு, மோசடியான சூழ்ச்சியைக் கையாண்டு வாக்குறுதிக்குப் பங்கம் செய்தார்.
ஆனால், "வாக்குறுதியை மீறுகிறேன்" என்றோ , "மோசடி செய்கிறேன்" என்றோ பட்டவர்த்தனமாகச் சொன்னாரா ? பெரிய இராஜ தந்திரியாயிற்றே ? தாம் சரியான காரியத்தையே செய்வதாகப் பாவனை காட்டிக்கொண்டு வாக்குறுதியை மீறினார்.
எல்லா இந்தியர்களும் பதிவு செய்துகொண்டானதும், கறுப்புச் சட்டத்தை ரத்து செய்வதாகச் சொல்லியிருந்தார் அல்லவா ? அதன்படி அவர் செய்யவில்லை. கறுப்புச் சட்டத்தை அப்படியே வைத்துக் கொண்டு வேறு இரண்டு மசோதாக்களைச் சட்டசபையில் கொண்டுவந்தார்.
இவற்றில் ஒரு மசோதா, தாங்களாகப் பதிவு செய்து கொண்ட இந்தியர்களின் பதிவுப் பத்திரத்தை அங்கீகரித்துக் கொண்டு ஆசியாக்காரர் சட்டத்தின் விதிகளிலிருந்து அவர்களுக்கு விலக்கு அளித்தது.
இன்னொரு மசோதா, இனிமேல் ஆசியாக்காரர்கள் பதிவு செய்துகொள்வதற்கு வேண்டிய விதி முறைகளை வகுத்தது. தளபதி ஸ்மட்ஸின் சூழ்ச்சித் திறமை இப்போது தெரிகிறதல்லவா ?
"தாங்களே பதிவு செய்து கொண்ட இந்தியர்களைக் கறுப்புச் சட்டம் பாதியாமல் செய்து விட்டேன். இனிமேல் வரும் இந்தியர்கள் சம்பந்தமாக நான் எந்த நிபந்தனையையும் ஒப்புக் கொள்ள வில்லையே ? " என்று ஸ்மட்ஸ் சொல்லிவிடலா மல்லவா ?
தளபதி ஸ்மட்ஸின் இந்த இராஜ தந்திரம் காந்தி மகானுக்கு அர்த்தமாகவில்லை. கறுப்புச் சட்டம் அடியோடு ரத்து செய்யப்படும் என்று காந்திஜியும் மற்ற டிரான்ஸ்வால் இந்தியர்களும் நம்பினார்கள். அந்த நம்பிக்கை பொய்யாகி விட்டது. அதற்கு விரோதமாக ஸ்மட்ஸ் காரியம் செய்தார். ஸ்மட்ஸின் அந்தக் காரியத்தை மோசடி என்றே மகாத்மாவும் மற்ற இந்தியர் களும் அச்சமயம் கருதினார்கள். இதைப் பற்றிக் காந்தி மகான் எழுதியிருப்பதாவது:
"தளபதி ஸ்மட்ஸ் மிக்க தந்திரசாலி என்றும் அவரை நம்ப வேண்டாம் என்றும் சில இங்கிலீஷ் நண்பர்கள் எனக்கு எச்சரிக்கை செய்திருந்தார்கள். இரண்டு கட்சியும் தங்களுக்குச் சாதகம் என்பதாக நினைத்துக் கொள்ளும்படி அவர் வாசகங்களைப் புனைவார் என்றும், பிறகு தனக்கு இஷ்டமான ஒரு புதிய பொருளைக் கற்பிப்பார் என்றும் சொல்லி யிருந்தார்கள். அவர்களுடைய எச்சரிக்கை உண்மை தான் என்று இப்போது தெரிந் தது. தளபதி ஸ்மட்ஸ் எங்களை மோசம் செய்து விட்டதாகவே அப்போது நானும் மற்ற இந்தியர்களும் நம்பினோம். ஆனால் இப்போது யோசித்துப் பார்க்கும்போது 'மோசடி' என்று சொல்வதில் சந்தேகம் ஏற்படுகிறது. நோக்கத்தில் மோசடி இல்லா தவரையில் அதை மோசடி என்று சொல்ல முடியா தல்லவா ? 1913 - 14 -ம் வருஷத்தில் ஸ்மட்ஸிடம் எனக்கு ஏற்பட்ட அநுபவம் அவர் பேரில் நல்ல எண்ணம் உண்டாக்கியது. அவர் 'யோக்கியர்' என்றும் 'நாணயவான்' என்றும் இன்றைக்கும் நான் கருதி வருகிறேன். ஆகையால் 1908-ம் ஆண்டில் ஸ்மட்ஸ் வேண்டுமென்று மோசடி செய்ததாக இப்போது நான் சொல்ல முடியாது."
1924 -ம் வருஷத்தில் மகாத்மா மேற் கண்டவாறு எழுதினார். ஆனால் 1908-ம் ஆண்டில் மகாத்மா காந்திக்கும் மற்ற டிரான்ஸ்வால் இந்தியர்களுக்கும் ஸ்மட்ஸ் செய்த மோசடி ? பெரும் வியப்பையும் கலக்கத்தையும் அளித்தது.
நிலைமை இன்னதென்று தெரிந்தவுடனே காந்திஜி சத்தியாக் கிரஹக் கமிட்டியின் கூட்டத்தைக் கூட்டினார். கூட்டத்தில் சிலர், "முன்னமே சொன்னோமே, கேட்டீர்களா ? இப்படித் தான் நீங்கள் யாரையும் சுலபத்தில் நம்பிவிடுகிறீர்கள். பிறகு ஏமாந்து போகிறீர்கள் !" என்றார்கள்.
அவர்களுக்குக் காந்திஜி தமது கட்சியை எடுத்துச் சொன்னார். " எதிரியை நம்புவது சத்தியாக்கிரஹத்தின் முதல் தர்மம். பிறகு எதிரி வாக்கை மீறினால் அதற்குத் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படியில்லாமல், உலகத்திலே எல்லாருமே அயோக்கியர்கள் என்று எண்ணிக் கொண்டு சத்தியாக்கிரஹத்தைக் கையாள முடியாது. பிறரை நம்புவது என்னிடமுள்ள குறை என்று நீங்கள் நினைக்கலாம். அப்படி நினைத்தால், அந்தக் குறையுடனேயே என்னை உங்கள் தலைவனாக ஏற்றுக் கொள்ள வேண்டும். என்ன சொல்கிறீர்கள் ?" என்று கேட்டார். எல்லாரும் ஒருமுகமாகக் காந்திஜியை மீண்டும் தலைமை ஏற்கும்படியும், போரைத் திருப்பத் தொடங்கி நடத்தும்படியும் கேட்டுக் கொண்டார்கள்.
-------
55. ஏறுதே, தீ !
டிரான்ஸ்வால் முழுவதிலும் வசித்த இந்தியர்களிடையே மறுபடியும் பிரசாரம் ஆரம்பமாயிற்று. எல்லா இடங்களிலும் பொதுக் கூட்டங்கள் போட்டுத் தளபதி ஸ்மட்ஸ் செய்த மோசத்தைப் பற்றி எடுத்துச் சொல்லப்பட்டது. இந்தியர்கள் எல்லாரும் ஒருமுகமான உற்சாகம் காட்டினார்கள். மீண்டும் போராட்டத்தைத் தொடங்கவும் சிறை செல்லவும் சித்தமா யிருப்பதாகத் தெரிவித்தார்கள். தாங்களாகப் பதிவு செய்து கொண்டவர்களிடமிருந்து, பதிவுப் பத்திரங்கள் வாங்கிச் சேகரிக்கப்பட்டன. டிரான்ஸ்வால் சர்க்காருடன் காந்திஜி நடத்தி வந்த கடிதப் போக்குவரவில் பலனில்லாவிட்டால், மேற்படி பதிவுப் பத்திரங்களை யெல்லாம் ஓரிடத்தில் சேர்த்து வைத்துச் சொக்கப்பானை கொளுத்திவிடுவது என்று தீர்மானிக் கப்பட்டது.
தளபதி ஸ்மட்ஸ் வாக்களித்தபடி ஆசியாக்காரர் சட் டத்தை ரத்து செய்யவேண் டும் என்றும், புதுச் சட்டம் கொண்டு வரக்கூடாதென்றும் இந்தியரின் சார்பாக டிரான்ஸ் வால் சட்ட சபைக்கு மகஜர் அனுப்பப்பட்டது. அது பயனளிக்கவில்லை. மசோதாவைச் சீக்கிரத்தில் சட்டமாக்குவதற்கு நடவடிக்கை நடந்து கொண்டிருந்தன. எனவே, கடைசி கடைசியாகச் சத்தியாக்கிரஹிகள் டிரான்ஸ்வால் சர்க்காருக்கு ஒரு 'அல்ட்டிமேட்டம் ' - அதாவது, இறுதி எச்சரிக்கை - அனுப்பினார்கள்.
மேற்படி கடைசிக் கடிதத்தில் இந்தியர்கள் தங்களைச் 46 சத்தியாக்கிரஹிகள் என்பதாகக் குறிப்பிட்டுக் கொள்ள வில்லை. அதை ' இறுதி எச்சரிக்கை' (அல்ட்டிமேட்டம்) என்று குறிப்பிடவும் இல்லை. தளபதி ஸ்மட்ஸ் அவர்கள் தான் மேற்படி கடிதத்துக்கு 'இந்திய சத்தியாக்கிரஹிகளின் இறுதி எச்சரிக்கை' - என்று நாமகரணம் சூட்டினார்.
"சர்க்காரை இந்திய சத்தியாக்கிரஹிகள் இப்படி பய முறுத்தப் பார்க்கிறார்கள். இவர்களுடைய துணிச்சலை என்ன வென்று சொல்வது ? டிரான்ஸ்வால் அரசாங்கம் இந்தப் பயமுறுத்தலுக்கு இணங்கிவிடுமா ? டிரான்ஸ்வால் அரசாங்கத்தின் பலம் இவ்வளவு என்று தெரியாமல் இந்தக் கிளர்ச்சிக் காரர்கள் காரியம் செய்கிறார்கள். இவர்களுடைய பேச்சைக் கேட்டு நடந்தால் ஏழை இந்தியர்கள் அடியோடு அழிந்துபோக வேண்டியதுதான்!" என்று சொன்னார் தளபதி ஸ்மட்ஸ். இந்தியர்கள் இறுதி எச்சரிக்கை விடத் துணிந்த விஷயம் டிரான்ஸ்வால் சட்டசபை அங்கத்தினர்களுக்கு அளவில்லாத ஆத்திரத்தை மூட்டியது. இந்த ஆத்திரங் காரணமாக மேற்படி சட்டசபை அங்கத்தினர்கள் தளபதி ஸ்மட்ஸின் புதிய மசோதாவை ஒருமுகமாகவும் உற்சாகமாகவும் நிறைவேற்றி வைத்தார்கள்.
மேற்படி அங்கத்தினருக்கு இவ்வளவு கோபத்தை உண்டாக்கிய இந்தியர்களின் இறுதிக் கடிதத்தில் என்ன தான் எழுதி யிருந்தது என்று இப்போது கவனிக்கலாம். அதன் சாராம்சம் பின் வருமாறு:
'தளபதி ஸ்மட்ஸுக்கும் இந்தியர்களுக்கும் ஏற்பட்ட ராஜி உடன்பாட்டின் முக்கியமான அம்சம், இந்தியர்கள் தாங்களாகவே பதிவு செய்து கொள்ளும் பட்சத்தில், அதை அங்கீகரித்துக் கொண்டு ஆசியாக்காரர் சட்டத்தை ரத்து செய்யவேண்டும் என்பதே. அரசாங்கத்தார் திருப்தியடையும் முறையில் இந்தியர்கள் பெரும்பாலோர் தாங்களாகவே முன் வந்து பதிவு செய்து கொண்டிருக்கிறார்கள். ஆகையால் ஆசியாக்காரர் சட்டத்தை இப்போது ரத்து செய்வது தான் முறை யாகும். இதை ஞாபகப்படுத்தித் தளபதி ஸ்மட்ஸுக்கு இந்தியர்கள் பல கடிதங்கள் எழுதியும் பயன் விளையவில்லை.
தளபதியிடமிருந்து இதுவரையில் பதிலே கிடைக்கவில்லை. இன்னும், சட்ட முறைக்கு உட்பட்டுச் செய்யக்கூடிய முயற்சிகளை யெல்லாம் செய்து பார்த்து விட்டோம். ஒன்றிலும் பயனில்லை. இது காரணமாக இந்திய சமூகத்தினிடையே பெரும் அதிருப்தியும் ஆத்திரமும் உண்டாகி வளர்ந்து வருகிறதென் பதைச் சட்டசபை அங்கத்தினருக்குத் தெரியப்படுத்த விரும்புகிறோம். ராஜி உடன்பாட்டின் நிபந்தனையின் பிரகாரம் ஆசியாக்காரர் சட்டத்தை உடனே ரத்து செய்ய வேண்டு மென்று வற்புறுத்துகிறோம். அவ்விதம் ஆசியாக்காரர் சட் டத்தை ரத்து செய்துவிட்டதாக ஆகஸ்டு 16-ந் தேதிக்குள் அரசாங்கத்தாரிடமிருந்து தகவல் கிடைக்கா விட்டால், இந்தி யர்கள் தாங்களாகப் பதிவு செய்து கொண்டு பெற்ற சர்டிபி கேட்டுகளை யெல்லாம் கொளுத்தி விடுவதென்று இந்திய சமூகம் முடிவு செய்திருக்கிறது. இந்தக் காரியத்தின் விளைவாக ஏற்படும் பலாபலன் களை இந்திய சமூகம் அநுபவிக்கத் தயாரா யிருக்கிறது என்பதைப் பணிவுடன் தெரிவித்துக் கொள் கிறோம்."- மேற்படி கடிதத்தில் பதில் கிடைப்பதற்கு ஆகஸ்டு 16௳ என்று தவணை குறிப்பிட்டிருந்த காரணத்தினால் அதை இறுதிக் கடிதம் என்றும், எச்சரிக்கை என்றும், பயமுறுத்தல் என்றும் வெள்ளைக்காரர்கள் கருத நேர்ந்தது. இந்தக் கடிதத்தை அ னுப்புவதற்கு முன்னால் இந்தியத் தலைவர்களுக்குள்ளே சாங்கோபாங்கமாக விவாதம் நடந்து, ஆட்சேப சமாதானங்கள் சொல்லி முடிந்து, அதற்குப் பிறகு தான் எப்படியும் கடிதத்தை அனுப்பியே தீர்வது என்று தீர்மானிக்கப்பட்டது. ஆகையால் வெள்ளைக்காரர்கள் பலர் ஆத்திரங் கொண்டது பற்றி இந்தியர்கள் கவலைப்படவில்லை. தங்களுக்குச் சரியாகத் தோன்றும் காரியத்தைச் செய்வதற்காக எந்த விதமான கஷ்டம் ஏற்பட்டாலும் சகித்துக் கொள்ள இந்தியர்கள் சித்தமாயிருந்தார்கள்.
டிரான்ஸ்வால் சட்டசபையில் என்றைய தினம் புதிய ஆசியாக்காரர் மசோதாவை நிறைவேற்றுவதற்காகக் குறிப் பிட்டிருந்தார்களோ அதே தேதியில் இந்தியர்கள் ஸ்மட்ஸ் சர்க்காருக்கு விடுத்த இறுதிக் கடிதத்தில் குறிப்பிட்ட தவணையும் முடிவாயிற்று.
அன்றைய தினம் அதாவது 1908-ம் வருஷம் ஆகஸ்டு 16௳ ஜோகானிஸ்பர்க் ஹமீதியா மசூதியைச் சேர்ந்த மைதானத்தில் மாலை நாலு மணிக்குப் பொதுக்கூட்டம் போட்டிருந்தது. அரசாங்கத்தாரிட மிருந்து பதில் எதுவும் வராது என்றே காந்தி மகாத்மாவும் மற்ற இந்தியர்களும் எண்ணினார்கள். ஆயினும் ஒரு வேளை, கடைசி நிமிஷத்தில் அரசாங்கத்தின் மனம் மாறித் தந்தி மூலம் ஏதேனும் பதில் வந்தால், அதை உடனே பொதுக் கூட்டம் நடக்கும் இடத்துக்குக் கொண்டு வர ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது.
குறிப்பிட்ட காலத்துக்கு மிக முன்னதாகவே ஹமீதியா மசூதி மைதானத்தில் இந்தியர்கள் வந்து கூடி விட்டார்கள். ஒரு அங்குல இடமும் மிச்சம் வைக்காமல் கூட்டம் கூடி விட்டது. காந்திஜி முதலிய தலைவர்களும் முன்னதாகவே வந்து விட்டார்கள். மைதானத்தின் ஒரு மூலையில் ஒரு மேடை அமைக்கப்பட்டிருந்தது. நீகிரோவர்கள் சமூக விருந்து சமைத்துச் சாப்பிடுவதற்கு, நாலு கால்கள் உடைய பெரிய கொப் பறைகளை உபயோகிப்பது உண்டு. அத்தகைய பிரம்மாண்டமான கொப்பறை ஒன்றை இந்திய வியாபாரி ஒருவரிடமிருந்து வாங்கி வந்து மேடையின்பேரில் ஏற்றி யிருந்தார்கள். குறிப்பிட்ட காலத்துக்குள் சர்க்காரிடமிருந்து தகவல் வராவிட்டால், சர்டிபிகேட்டுகளை யெல்லாம் அந்தக் கொப்பறையில் போட்டுக் கொளுத்தி விடுவது என்று திட்டமாகி யிருந்தது.
பொதுக் கூட்டம் ஆரம்பிக்கும் தறுவாயில் தொண்டர் ஒருவர் சைகிளில் ஏறி விரைந்து வந்தார். அத் தொண்டர் கொண்டுவந்த தந்தி காந்திஜியிடம் கொடுக்கப்பட்டது. அரசாங்கத்தாரிடமிருந்து வந்த தந்திதான் அது. தந்திக்குள்ளே என்ன எழுதி யிருக்கும் ? சாதகமான பதில் இருக்குமா ? இந்த எண்ணத்தினால் ஏற்பட்ட பரபரப்புடன் காந்திஜி தந்தியைப் பிரித்துப் படித்தார். "இந்திய சமூகம் மேற் கொள்ள எண்ணியிருக்கும் நடவடிக்கைக்காக மிகவும் வருந்துகிறோம். அதற்காக அரசாங்கத்தின் உத்தேசத்தை மாற்றிக்கொள்ள முடியாது" என்று தந்தியில் எழுதி யிருந்தது. உடனே பொதுக் கூட்டத்தில் கூடியிருந்த ஜனங்களுக்குச் சர்க்காரிடமிருந்து வந்த பதில் படித்துக் காட்டப்பட்டது.
அதைக் கேட்டார்களோ இல்லையோ, மைதானத்தில் கூடியிருந்த அவ்வளவு ஜனங்களும் அளவில்லா உற்சாகத்துடன் பலத்த கரகோஷம் செய்தார்கள். அரசாங்கத்திடமிருந்து 'இல்லை' என்று வந்த பதில்தான் அவர்களுக்கு அத்தனை உற்சாகம் அளித்தது. சாதகமான பதில் வந்திருந்தால், சர்டிபி கேட்டுகளை எரிப்பதற்காகச் செய்த ஏற்பாடு வீணாகி விடு மல்லவா ? இந்தியர்கள் போராட்டம் நடத்துவதில் அவ்வளவு ஆர்வம் கொண்டிருந்தபடியால், சர்க்காரிடமிருந்து சாதகமான பதில் வருவதை விரும்பவில்லை என்று தோன்றியது. இந்தியர்கள் தங்களுடைய வலிமையை உணர்ந்திருந்தார்கள் என்பதற்கு அந்தக் கரகோஷ ஆரவாரம் அறிகுறியாக இருந்தது.
பொதுக் கூட்டம் ஆரம்பமாயிற்று. கூட்டத்தின் தலைவர் சொல்லவேண்டியதை யெல்லாம் சொல்லி, “போராட்டம் என் றால் விளையாட்டு அல்ல ; பல கஷ்ட நஷ்டங்களுக்குத் தயாரா யிருக்கவேண்டும்" என்று எச்சரித்தார். மற்றும் பலர் பேசினார்கள், தீர்மானங்களும் நிறைவேற்றப் பட்டன. கடைசியாகக் காந்தி மகான் பேச எழுந்தார். ராஜி ஏற்பாட்டின் நிபந்தனைகளை விளக்கமாகச் சொன்னார். அந்த நிபந்தனைகளைச் சர்க்கார் நிறைவேற்ற மறுத்ததையும், நிறைவேற்றும்படி செய்வதற்கு இந்திய சமூகம் செய்த பிரயத்தனங்களையும் எடுத்துச் சொன்னார். கடைசியாகக் காந்தி மகான் கூறியதாவது: "உங்களில் பெரும்பாலோர் சர்டிபிகேட்டுகளை எரிப்பதற்காகக் கொடுத்திருக்கிறீர்கள். கொடுத்த பிறகு யாருக்காவது மனம் மாறியிருந்தால், சர்டிபிகேட்டை எரிக்காமல் வைத்துக் கொள்ள வேண்டும் என்று இஷ்டப்பட்டால், உடனே எழுந்து இந்த மேடைக்கு வரலாம் ; சர்டிபிகேட் அவருக்குத் திருப்பிக் கொடுக்கப்படும். வெறுமனே சர்டிபிகேட்டை எரித்து விட்டால் மட்டும் போதாது. அதன் பிறகு நடக்கும் போராட்டத்தில் உறுதியாக நிற்க வேண்டும். இப்போது சர்டிபிகேட்டைத் திருப்பி வாங்கிக் கொள்வதில் தவறு ஒன்றுமில்லை; அவமானமும் இல்லை. ஆனால் இன்றைக்கு எரித்துவிட்டு நாளைக்கு மறுபடியும் போய்ப் பதிவு செய்து சர்டிபிகேட் வாங்கினால் அதைக்காட்டிலும் இந்திய சமூகத்துக்கு ஒரு இந்தியர் செய்யக் கூடிய துரோகம் வேறு ஒன்றும் கிடையாது. ஆகையால் தீர்க்கமாக ஆலோசித்துச் சொல்லுங்கள். இஷ்டப்பட்டவர் கள் இப்போதுகூடச் சர்டிபிகேட்டுகளைத் திருப்பி வாங்கிக் கொண்டு விடலாம்!"
காந்திஜி இவ்விதம் பேசிக் கொண்டிருக்கையிலேயே கூட் டத்தில், "எங்களுக்கு சர்டிபிகேட் வேண்டாம் ; எரித்து விடுங்கள்!" என்ற கூச்சல் எழுந்தது. காந்திஜியின் பேச்சு முடிந்ததும் ஒரே குரலாகக் கூட்டத்தார் அதே பதிலைச் சொன்னார்கள். மகாத்மாவைத் தடியால் அடித்த மீர் ஆலம் என்னும் பட்டாணியனும் கூட்டத்துக்கு வந்திருந்தான். அவன் திடீரென்று எழுந்து நின்றதும் என்ன சொல்லப் போகிறானோ என்று அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்தனர். "நான் தங்களை அடித்தது பெரும் பிசகு. அதற்காக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன், என்பேரில் கோபம் வைத்துக்கொள்ள வேண்டாம்!" என்று சொல்லிவிட்டு, தன்னுடைய சர்டிபிகேட்டையும் எரிப்பதற்காகக் கொண்டு வந்து கொடுத்தான் ! கூட்டத்தில் காது செவிடு படும்படியான கரகோஷம் எழுந்தது. காந்திஜி மீர் ஆலத்தின் கையைப் பிடித்துக் குலுக்கி, "அப்பனே ! உன் பேரில் எப்போதுமே எனக்குக் கோபம் இருந்ததில்லையே !" என்றார்.
அதுவரை சத்தியாக்கிரஹக் கமிட்டியார் இரண்டாயிரம் சர்டிபிகேட்டுகள் சேகரித்திருந்தார்கள். அவ்வளவும் கொப் பறையில் போடப்பட்டன. அவற்றின் மேல் மண்ணெண்ணெய் ஊற்றப்பட்டது. ஜனாப் எஸ்ஸப்மியான் தீக்குச்சியைக் கிழித்துக் கொப்பறைக்குள் போட்டார். தீப்பிடித்துக் கொண்டது. சில நிமிஷத்துக்கெல்லாம் ஜூவாலை விட்டு எரியத் தொடங்கியது. ஏற்கெனவே சர்டிபிகேட்டுகளைக் கொடாதவர்கள் பலர் கையோடு சர்டிபிகேட்டுகளைக் கொண்டு வந்தார்கள். அவர்கள் ஒவ்வொருவராக மேடைக் குச் சென்று தங்கள் சர்டிபிகேட்டுகளை நெருப்பிலே போட்டார்கள். ஒவ்வொருவரும் சர்டிபிகேட்டைக் கொண்டுவந்து போட்டபோது கரகோஷம் வானை அளாவியது. இவ்விதமாக அளவில்லா உற்சாகத்தினிடையே சர்டிபிகேட் தகனம் நடந்து முடிந்தது.
இதை யெல்லாம் ஆங்கிலப் பத்திரிகைகளின் பிரதிநிதிகள் சிலர் வந்து பார்த்துக் கொண்டிருந்தார்கள். நடந்ததை யெல்லாம் விவரமாகப் பத்திரிகைகளுக்கு எழுதினார்கள். லண்டன் 'டெயிலி மெயில்' பத்திரிகையின் நிருபர் ஒருவரும் வந்திருந்தார். அவரும் இந்த நிகழ்ச்சியைப் பற்றி விவரமான செய்தியைத் தம் பத்திரிகைக்கு அனுப்பினார், அமெரிக்க சுதந்திரப் போரின் ஆரம்பத்தில் பாஸ்டன் துறைமுகத்திற்கு வந்த பிரிட்டிஷ் கப்பலில் அமெரிக்கர்கள் ஏறி அதிலிருந்த தேயிலைச் சரக்கையெல்லாம் கடலில் தள்ளிய சரித்திரப் பிரசித்தியான சம்பவத்தோடு டிரான்ஸ்வால் இந்தியர்கள் சர்டிபிகேட்டுகளை எரித்ததை மேற்படி நிருபர் ஒப்பிட்டிருந்தார்.
உவமானம் அவ்வளவு பொருத்தமில்லை தான். சுதந்திரத்துக்காக ஆங்கிலேயருடன் போர் தொடங்கிய அமெரிக்கர்கள் பெருந்தொகையினர். அதோடு அவர்களிடம் சகலவிதமான ஆயுதங்களும் பயிற்சி பெற்ற சைன்யமும் இருந்தன.
ஆனால் டிரான்ஸ்வால் இந்தியர்களோ சொற்பத் தொகையினர். அவர்களிடம் ஆயுதம் ஒன்றும் இல்லை; ஆயுதத்தை அவர்கள் விரும்பவும் இல்லை. சத்தியத்தையும் அஹிம்சையையுமே ஆயுதங்களாகக் கொண்டு வலிமை மிக்க டிரான்ஸ்வால் சர்க்காருடன் இந்தியர்கள் போர் தொடங்கினார்கள்.
-------------
56. ஏறு கப்பல் !
இந்தியர்கள் பதிவுப் பத்திரங்களை எரித்த சம்பவம் தென் னாப்பிரிக்கா வெள்ளைக்காரர்களுக்கும் டிரான்ஸ்வால் அரசாங்கத்துக்கும் பெரிதும் ஆத்திரத்தை உண்டாக்கிய து. ஆனால் பெரிய இராஜ தந்திரியான தளபதி ஸ்மட்ஸ் அதனால் நிதானம் இழந்து விடவில்லை. "பதிவுப் பத்திரங்களை எரித்தால் எரித்து விட்டுப் போகட்டும். அது நடவடிக்கை எடுக்கத் தக்க குற்ற மாகாது. இந்தியர்கள் மேலே என்ன செய்கிறார்கள் என்று பார்க்கலாம்" என்று சொல்லிவிட்டுச் சும்மா இருந்தார். சர்க்கார் சிறிது காலம் சும்மா இருந்தால் இந்தியர்களுடைய கிளர்ச்சி அடங்கிவிடும் என்பது அவருடைய எண்ணம்.
அதே சமயத்தில் புதிய இந்தியர்கள் டிரான்ஸ்வாலுக்குள் வருவதைத் தடுக்கும் வேறு ஒரு சட்டம் டிரான்ஸ்வால் சட்ட சபையில் கொண்டு வந்து நிறைவேற்றினார். இது பொதுப் படையாக டிரான்ஸ்வாலுக்குள் புதுமனிதர்கள் வருவதைக் கட்டுப்படுத்தும் சட்டந்தான். ஆனால் போட்டிருந்த நிபந்தனைகள் காரியாம்சத்தில் இந்தியர்கள் வருவதை மட்டுமே தடுத்தன. உதாரணமாக, ஐரோப்பிய பாஷை ஏதாவது ஒன்று தெரிந்திராதவர் டிரான்ஸ்வாலுக்குள் வரக்கூடாது என்பது ஒரு நிபந்தனை.
காந்திஜியின் யோசனைப்படி மேற்படி புதிய குடியேற்றக் கட்டுப்பாட்டுச் சட்டத்தையும் எதிர்த்துச் சத்தியாக்கிரஹம் செய்வது என்று இந்தியர்கள் தீர்மானித்தார்கள்.
"பார்த்தீர்களா, இந்தியர்களின் போக்கை ? முதலிலே ஆசியாக்காரர் சட்டத்தை மட்டும் ஆட்சேபிப்பதாகச் சொன்னார்கள். இப்போது குடியேற்றத்தைக் கட்டுப்பாடு செய்யும் சட்டத்தையும் எதிர்த்துச் சத்தியாக்கிரஹம் செய்யப் போவதாகச் சொல்கிறார்கள். இந்தியர்கள் இடத்தைக் கொடுத்தால் மடத்தைப் பிடுங்கப் பார்ப்பார்கள் என்பது இதிலிருந்தே தெரியவில்லையா ? ” என் று தளபதி ஸ்மட்ஸ் பிரசாரம் செய்தார்.
ஸ்மட்ஸின் பிரசாரத்துக்கு இந்தியர்கள் பயந்து விடவில்லை. “எங்களுடைய உரிமைகளைப் பறிக்கும் எந்தச் சட்டத்தையும் ஆட்சேபித்துச் சத்தியாக்கிரஹம் செய்ய எங்களுக்கு உரிமை உண்டு" என்று பதில் சொன்னார்கள்.
புதிய சட்டத்தை எதிர்த்து எப்படிச் சத்தியாக்கிரஹம் செய்வது என்னும் கேள்வி பிறந்தது. அதற்குக் காந்திஜி தக்க யோசனை கூறினார். நேட்டால் மாகாணத்திலிருந்து சில இந்தியர்கள் டிரான்ஸ்வாலுக்குள் பிரவேசிக்க வேண்டும் என்றும் அதன் விளைவு என்ன ஆகிறது என்று பார்க்க வேண்டும் என் றும் கூறினார். நேட்டாலில் வசித்த ஸோராப்ஜி ஷாபூர்ஜி அதா ஜேனியா என்னும் பார்ஸி இளைஞரை முதன் முதல் சத்தியாக் கிரஹம் செய்வதற்குக் காந்திஜி தேர்ந்தெடுத்தார்.
அவ்விதமே ஸோராப்ஜி தாம் டிரான்ஸ்வாலுக்குள் குறிப்பிட்ட தேதியில் பிரவேசிக்கப் போவதாக டிரான்ஸ்வால் சர்க்காருக்கு அறிவித்துவிட்டு அந்தத் தேதியில் ரயில் ஏறி வந்தார். டிரான்ஸ்வால் எல்லையிலேயே அவர் கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவ்விதம் நடைபெற வில்லை. "சட்டத்தைச் சோதிப்பதற்காக வருகிறேன்" என்று பகிரங்கமாகச் சொல்லிவிட்டு வருகிற மனிதரை என்ன செய்வது என்று குடியேற்றக் கட்டுப்பாடு அதிகாரிக்குத் தெரியவில்லை. ஆகையால் எல்லைப்புறத்தில் ஸோராப்ஜியைத் தடை செய்யாமல் விட்டுவிட்டார்.
ஜோகானிஸ்பர்க்குக்கு ஸோராப்ஜி வந்ததும் அவரை இந்தி யர்கள் உற்சாகமாக வரவேற்றார்கள். சில இந்திய இளைஞர்கள், "ஸ்மட்ஸ் சர்க்கார் தோல்வியடைந்து விட்டனர்; இனி மேல் அவர்கள் ராஜிக்கு வரவேண்டியதுதான்" என்றுகூட நினைத்தார்கள். ஆனால் சீக்கிரத்திலேயே அவர்கள் தங்கள் தவறை உணர்ந்தார்கள். ஸோராப்ஜியைப்போல் எத்தனையோ இளைஞர்கள் இந்தியரின் உரிமைகளுக்காகத் தங்களைத் தியாகம் செய்யவேண்டி யிருக்கும் என்று தெரிந்துகொண்டார்கள்.
ஜோகானிஸ்பர்க் போலீஸ் சூபரின்டெண்டுக்கு ஸோராப்ஜி தம் வரலாற்றைப் பற்றித் தெருவித்தார். டிரான்ஸ்வாலிலேயே இருக்க உத்தேசத்திருப்பதாகவும் தமக்கு இங்கிலீஷ் பாஷை தெரியும் என்றும் தம்மைப் பரீட்சித்துக் கொள்ளலாம் என்றும் எழுதியிருந்தார். குறிப்பிட்ட தேதியில் கோர்ட்டில் வந்து ஆஜராகும்படி அவருக்கு ஸம்மன் வந்தது. கோர்ட்டில் விசாரணை ஆரம்பமான போது, காந்திஜி ஸோராப்ஜியின் கட்சியில் ஆஜராகி எதிர் வழக்காடினார். சட்டப்படி ஸோராப்ஜி குற்றம் செய்ய வில்லை யென்றும் அவரை உடனே விடுதலை செய்ய வேண்டும் என்றும் வற்புறுத்தினார். காந்திஜியின் வாதத்தை ஒப்புக் கொண்டு நீதிபதி ஸோராப்ஜியை விடுதலை செய்தார்.
ஆனால் மறுநாளே ஸோராப்ஜிக்கு இன்னொரு உத்தரவு வந்தது. ஏழு நாளைக்குள் ஸோராப்ஜி டிரான்ஸ்வாலை விட்டு வெளியேற வேண்டும் என்று உத்தரவில் கண்டிருந்தது. "நான் அப்படி வெளியேறப் போவதில்லை" என்று ஸோராப்ஜி உறுதியாகத் தெரிவித்தார். ஆகவே, அவர் மறுபடியும் கோர்ட்டுக்குப் போகவேண்டிய தாயிற்று. இந்தத் தடவை மாஜிஸ் ட்ரேட்டின் உத்தரவை மீறியதற்காக ஒரு மாதம் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.
ஸோராப்ஜி தண்டனை யடைந்ததைத் தொடர்ந்து நேட்டாலிலிருந்து இன்னும் பல இந்தியப் பிரமுகர்கள் வரத் தொடங்கினார்கள். இவர்கள் நேட்டாலில் நிலையாகத் தங்கி வியாபாரம் முதலிய தொழில்களைச் செய்து வந்தவர்கள். ஆகவே டிரான்ஸ்வாலுக்கு வரவேண்டிய அவசியம் ஒன்றும் இவர்களுக்குக் கிடையாது. டிரான்ஸ்வாலுக்குள் வர இந்தியர்களுக்கு உரிமையுண்டு என்பதை ஸ்தாபிப்பதற்காகவே இவர் கள் வந்தார்கள். இப்படி வந்தவர்களில் சேத் தாவூத் முகம் மதுவும், பார்ஸி ரஸ்டம்ஜியும் பெரிய வியாபாரிகள். சுரேந்திர ராய், கண்டுபாய் தேஸாய், ரதன் ஸிமூல்வி, ஹரிலால் காந்தி ஆகியவர்கள் இன்னும் சிலர்.
இப்படிக் கூட்டமாக வந்தவர்களைச் சட்டத்தை மீறி டிரான்ஸ்வா லுக்குள் வரும்படி விட்டுவிட்டால் டிரான்ஸ்வால் சர்க்காரின் மதிப்பு என்ன ஆகிறது ? எனவே அவர்களைக் கைது செய்து மாஜிஸ்ட்ரேட் முன்னிலையில் கொண்டுவந்தார்கள். ஏழு நாளைக்குள் அவர்கள் டிரான்ஸ்வாலை விட்டு வெளியேற வேண்டும் என்று மாஜிஸ்ட்ரேட் உத்தரவு போட்டார். அவர்கள் உத்தரவை மீறி டிரான்வாலிலேயே இருந்தார்கள். பிரிட்டோரியாவில் அவர்களை மறுபடியும் போலீஸார் கைது செய்து விசாரணை ஒன்று மில்லாமல் டிரான்ஸ்வாலுக்கு வெளியிலே கொண்டுபோய் விட்டார்கள். அப்படி விடப்பட்ட வர்கள் இரண்டாவது தடவையும் டிரான்ஸ்வாலுக்குள்ளே பிரவேசித்தார்கள். இதன் பேரில் அவர்கள் கைது செய்யப் பட்டனர். விசாரணை நடந்து, "ஐம்பது பவுன் அபராதம் அல்லது மூன்று மாதம் கடுங்காவல் " என்று தீர்ப்பு அளிக்கப் பட்டது. சேத் தாவூத் முதலியவர்கள் அபராதம் கட்ட மறுத்துக் குதூகலத்துடன் சிறைக்குச் சென்றார்கள்.
இப்படி நேட்டால் இந்தியப் பிரமுகர்கள் டிரான்ஸ்வாலுக்குப் படையெடுத்து வந்து சத்தியாக்கிரஹம் செய்து சிறைக்குப் போய்க்கொண்டிருக்கும்போது டிரான்ஸ்வால் இந்தியர்கள் சும்மா இருக்க முடியுமா ? சர்ட்டிபிகேட்டை எரித்து விட்டதற்காகச் சர்க்கார் அவர்களை ஒன்றும் செய்கிற தாகக் காணோம். எனவே, சிறை செல்லுவதற்கு வேறு வழிகளைக் கண்டுபிடிக்க வேண்டிய தாயிற்று. சிலர் டிரான்ஸ்வாலிலிருந்து வெளியேறிச் சென்று மறுபடி டிரான்ஸ்வாலுக்குத் திரும்பி வந்தார்கள். இப்படித் திரும்பி வரும்போது சர்ட்டிபிகேட்டைக் காட்டியாக வேண்டும். எரிந்துபோன சர்ட்டிபிகேட் திரும்ப எப்படி வரும்? எனவே அவர்களைப் போலீஸார் கைது செய்தனர்.
சிறை புகுவதற்கு இன்னொரு வழியும் கண்டுபிடிக்கப் பட்டது. இந்தியர்கள் பதிவுப் பத்திரத்தைக் காட்டினால் தான் வியாபார லைசென்ஸ் கிடைக்கும். வியாபார லைசென்ஸ் இல்லாமல் வியாபாரம் செய்வது சட்டப்படி குற்றமாகும். ஆகவே சில இந்தியர்கள் ஏற்கெனவே வியாபாரிகளா யில்லா விட்டாலும் சத்தியாக்கிரஹம் செய்து சிறை புகுவதற்காக ஏதாவது ஒரு சாமானை எடுத்துக்கொண்டு தெருவில் விற்பனை செய்தார்கள். அவர்களையும் கைது செய்து சிறைக்கு அனுப்ப வேண்டியதாயிற்று. இப்படிப் புதிதாகத் தெரு விற்பனை செய்து சிறை புகுந்தவர்களில் இமாம் சாகிப் என்னும் முஸ்லிம் பெரியார் ஒருவர். ஜோசப் ராயப்பன் என்னும் பாரிஸ்டர் இன் னொருவர். பாரிஸ்டர் ராயப்பன் நிறையப் பணம் சம்பாதித்து ஆங்கில முறையில் வாழ்க்கை நடத்தியவர். வீட்டுக்குள்ளே கூட பூட்ஸ் போட்டுக் கொண்டுதான் நடப்பார். அப்படிப் பட்டவர் ஒரு கூடையில் கறிகாய்களை நிரப்பிக்கொண்டு தெருவில் விற்பனை செய்யச் சென்று கைதியானார்!
இப்படியாக நேட்டால் இந்தியர்களும் டிரான்ஸ்வால் இந்தியர்களும் போட்டி போட்டுக்கொண்டு டிரான்ஸ்வால் சிறைகளை நிரப்பினார்கள். காந்திஜியும் கைதியானார். சில காலம் காந்திஜியை மற்ற இந்தியக் கைதிகளோடு சேர்த்து வைத்திருந்தார்கள். அப்புறம் அவரைத் தனியாய்ப் பிரித்து விட வேண்டும் என்று கருதிப் பிரிடோரியா சிறைக்குக் கொண்டு போய் அபாயகரமான கைதிகளுக்காக ஏற்பட்ட, தனிக் கொட்டடி யில் அடைத்து வைத்தார்கள்.
ஆயினும் சத்தியாக்கிரஹ இயக்கம் ஓய்கிற வழியாயில்லை. எத்தனை இந்தியர்களைச் சிறைப்படுத்துவது ? எத்தனை நாள் வைத்திருப்பது? இதற்குச் செலவு வேறு சர்க்காருக்கு ஆகிக் கொண்டிருந்தது. எனவே, இயக்கத்தை அடக்கச் சர்க்கார் வேறு வழி தேடத் தொடங்கினார்கள்.
முதலில் டிரான்ஸ்வால் மாகாணத்திலிருந்து வெளியே கொண்டுவிடும் முறையைச் சிலர் விஷயத்தில் கையாண்டார்கள் அல்லவா ? டிரான்ஸ்வால் எல்லையைத் தாண்டி நேட்டால் அல்லது ஆரஞ்சு பிரீஸ்டேட்டில் விடப்பட்ட சத்தியாக் கிரஹிகளுக்கு அது ஒரு தமாஷா யிருந்தது. உடனே சட்டத்தை மீறி மறுபடி டிரான்ஸ்வாலுக்குள் அவர்கள் பிரவேசிப்பதற்கு வசதியாகவும் இருந்தது. இந்த மாதிரி இந்தியர்களை வெளி யேற்றுவதில் பயனில்லை யென்று கண்ட டிரான்ஸ்வால் சர்க்கார் சத்தியாக்கிரஹிகளை டர்பன் துறைமுகத்துக்குக் கொண்டுபோய் அங்கே கப்பலில் ஏற்றி இந்தியாவிலேயே கொண்டு விட்டுவிடுவது என்று தீர்மானித்தார்கள். இது மிகவும் கொடுமையான தண்டனையாகும். ஏனெனில், இப்படிக் கப்பல் ஏற்றப்பட்ட இந்தியர்களில் பலர் தென்னாப்பிரிக்காவில் பிறந்து வளர்ந்தவர்கள்; இந்தியாவை அவர்கள் பார்த்ததே யில்லை. அவர்களில் பலருக்குத் தென்னாப்பிரிக்காவில் கொஞ்சம் சொத்து இருந்தது ; சிலருக்குக் கடை இருந்தது ; வேறு சிலர் குடும்பஸ்தர்கள். கடன் பட்டிருந்தவர்களும் உண்டு. இப்படித் தென்னாப்பிரிக்காவிலேயே வேரூன்றியவர்களைத் திடீ ரென்று பிடித்துக் கப்பலில் ஏற்றி ஆயிரக்கணக்கான மைலுக்கு அப்பால் கொண்டு போய்விட்டால் அவர்கள் என்ன செய்வார்கள் ? அதோடு, கப்பல் பிரயாணத்தின் போது எத்தனையோ கஷ்டங்கள் காத்திருந்தன. அவர்கள் கையில் பணங் காசு இல்லை. கப்பல் அதிகாரிகள் கொடுத்த உணவைச் சாப்பிட்டு விட்டுக் கப்பல் மேல் தட்டில் விழுந்து கிடக்க வேண்டும்.
இவ்விதம் முதல் கோஷ்டி இந்தியர்களைக் குறிப்பிட்ட கப்பலில் ஏற்றி அனுப்புகிறார்கள் என்று தெரிய வந்ததும் காந்திஜி பெரிதும் கலக்கமடைந்தார். அவர்களுக்கு எந்த விதத்தில் உதவி செய்வது என்று ஆலோசித்தார். பண உதவி செய்யலாம் என்பதற்குக் கையில் போதிய பணமும் இல்லை. அதோடு, பண உதவி செய்யும் வழக்கம் ஏற்பட்டுவிட்டால் இயக்கத்தின் தியாக சக்தி போய்விடும் என்றும் விரும்பத் தகாதவர்கள் இயக்கத்தில் வந்து சேர்ந்து விடுவார்கள் என்றும் மகாத்மா எண்ணினார். கடைசியில், ஒரு யோசனை தோன்றியது. யாராவது ஒரு இந்தியப் பிரமுகரை அதே கப்பலில் அனுப்பி வைத்தால் தண்டனையின் பேரில் வெளியேற்றப் படுகிறவர்களுக்கு ஆறுதலா யிருக்கும். இந்தியாவில் போய் இறங்கியதும் அவர்களுக்கு அவசியமான உதவி கிடைப்பதற்கு அந்தப் பிரமுகர் ஏற்பாடு செய்யக் கூடுமல்லவா ?
சத்தியாக்கிரஹப் போரின் முன்னணியில் நின்றவர்களில் ஒருவரான ஸ்ரீ பி. கே, நாயுடுவை அவ்வாறு கப்பல் துணையாக அனுப்பக் காந்திஜி விரும்பினார். உடனே ஸ்ரீ பி. கே. நாயுடு வைக் கூப்பிட்டு, "கப்பலேற்றிக் கட்டாயமாக அனுப்பப்படும் ஏழைச் சகோதரர்களோடு நீங்களும் இந்தியாவுக்குப் போகமுடியுமா ? " என்று கேட்டார்.
"பேஷாக முடியும்" என்றார் நாயுடு.
"கப்பல் இன்னும் சற்று நேரத்தில் புறப்படப் போகிறதே ? "
"அதனால் என்ன ? இந்த நிமிஷமே நான் புறப்படத் தயார்."
“ இரண்டாவது உடுப்பு வேண்டாமா? வழியில் சாப்பாட் டுக்கு என்ன செய்வீர்?”
"நான் இப்போது அணிந்திருக்கும் உடுப்பே போதும். கப்பலில் எல்லாருக்கும் கொடுக்கும் சாப்பாட்டை நானும் சாப்பிட்டுக் கொள்கிறேன்."
டர்பனில் பார்ஸி ரஸ்டம்ஜி வீட்டில் மேற்படி சம்பாஷணை நடந்தது. காந்திஜி இரண்டாவது தடவை சிறை வாசத்தை முடித்து வெளிவந்த பிறகு, இந்தியர்களைக் கப்பலேற்றி அனுப்பப் போகிற விஷயம் தெரிந்து அதற்காகவே டர்பனுக்கு வந்திருந்தார். ஸ்ரீ பி. கே. நாயுடுவின் பதில் காந்திஜிக்கு எல்லை யற்ற மகிழ்ச்சியை அளித்தது. உடனே கொஞ்சம் உடைகளும் கம்பளிப் போர்வைகளும் சம்பாதித்து ஸ்ரீ பி. கே. நாயுடுவிடம் கொடுத்தார்.
"இந்த ஏழைச் சகோதரர்களை உங்கள் வசத்தில் ஒப்புவித்திருக்கிறேன். முதலில் அவர்களுடைய சௌகரியங்களைக் கவனித்துவிட்டு அப்புறம் உங்களுடைய சௌகரியத்தைப் பார்க்க வேண்டும்!" என்று காந்திஜி சொல்லி அனுப்பினார். ஸ்ரீ பி. கே., நாயுடு மகாத்மாவின் வார்த்தையை அப்படியே நிறைவேற்றி வைத்தார்.
-------------
57. உண்ணாவிரத வெற்றி
டிரான்ஸ்வால் சர்க்கார் இந்தியர்களைக் கப்பலேற்றி இந்தியாவுக்குப் பலாத்காரமாக அனுப்பியது சட்ட விரோதமான காரியம். அதோடு, இரக்கமற்ற கொடுமையான காரியம். இந்தியாவைப் பார்த்தே அறியாதவர்களும் டிரான்ஸ்வாலிலேயே பிறந்து வளர்ந்து பிள்ளை குட்டி குடும்பம் உள்ளவர்களையும் திடீரென்று பிடித்துக் கப்பலேற்றி அனுப்பினால் அவர்கள் இந் தியாவுக்குச் சென்று திக்குத் திசை தெரியாமல் தவிப்பது இயற்கையே யல்லவா ? இது எவ்விதம் நியாயமாக முடியும் ? எந்தச் சட்டந்தான் அதற்கு இடம் கொடுக்கும் ?
எனவே, தென்னாப்பிரிக்காவிலும் இந்தியாவிலும் டிரான்ஸ்வால் சர்க்காரின் மேற்படி செயலைப் பற்றித் தீவிரமான கண்டனங்கள் எழுந்தன. கொஞ்ச நாளைக்குப் பிறகு டிரான்ஸ்வால் சர்க்கார் மேற்படி சட்ட விரோதமான முறையைக் கை விட வேண்டியதாயிற்று. ஆனால் அதற்குள்ளே டிரான்ஸ்வால் சர்க்காரின் நோக்கம் ஓரளவு நிறைவேறிவிட்டது. "கப்பல் ஏற்றி இந்தியாவுக்கு அனுப்புகிறார்கள் " என்று தெரிந்த பிறகு சத்தியாக்கிரஹ இயக்கத்தில் சேர்ந்த இந்தியர்கள் பலர் பின் வாங்கத் தொடங்கி விட்டார்கள்.
இந்திய சத்தியாக்கிரஹிகளின் உறுதியைக் குலைப்பதற்கு டிரான்ஸ்வால் சர்க்கார் வேறு கடுமையான முறைகளையும் கையாண்டார்கள். இதுவரையில் எல்லா இந்திய சத்தியாக் கிரஹிகளையும் ஒரே சிறையில் போட்டிருந்ததற்குப் பதிலாக வெவ்வேறு சிறைகளுக்குப் பிரித்து அனுப்பினார்கள். கடுமை யான வேலைகள் செய்யும்படி கட்டாயப் படுத்தினார்கள். டிரான்ஸ்வாலில் குளிர்காலத்தில் குளிர் மிகக் கடுமையாயிருக்கும். வேலை செய்யும் கைகள் உறைந்து செயலற்றுப் போகும்.
புதிய சாலை போடும் வேலை நடந்த ஓர் இடத்திற்குச் சில இந்திய சத்தியாக் கிரஹிகளைக் கொண்டு போய்க் கடுமையாக வேலை வாங்கினார்கள். இவர்களில் ஒரு சத்தியாக் கிரஹியின் பெயர் சாமி நாகப்பன். அவன் பதினெட்டு வயது இளம் பிள்ளை. அதிகாலையில் அவனை எழுந்திருக்கப் பண்ணிச் சாலை போடும் வேலை செய்யப் பண்ணினார்கள். சாமி நாகப்பன் கஷ் டத்தைப் பொருட்படுத்தாமல் சொன்ன வேலையைச் செய்து கொண்டிருந்தான். ஒரு நாள் அதிகாலையில் வேலை செய்த போது குளிரினால் 'டபிள் நிமோனியா' என்னும் அபாயகரமான சுரம் வந்துவிட்டது, அதிலிருந்து அவன் தேறவேயில்லை. அந் திய காலம் நெருங்கி விட்டது என்று அறிந்த பிறகு அவனை விடுதலை செய்தார்கள். 1909 ஜூலை 7௳ சாமி நாகப்பன் இவ்வுலக வாழ்வை நீத்தான்.
காந்தி மகாத்மா எழுதியிருக்கிறார் ;-- "நாகப்பனுக்குக் கடைசி மூச்சு இருந்த வரையில் சத்தியாக்கிரஹ இயக்கமே நினைவா யிருந்தான். அதைப் பற்றியே பேசினான். சுரத்திலும் சத்தியாக்கிரஹத்தைப் பற்றியே பிதற்றினான். இயக்கத்தில் சேர்ந்து சிறை சென்றது பற்றி அவன் வருத்தப்படவே யில்லை. நண்பனை அன்புடன் தழுவி வரவேற்பது போல் அவன் மரணத்தை வரவேற்றான். தற்காலத்தில் 'படித்தவன் ' என்பதற்கு நாம் பொருள் கொள்ளும் முறையில் நாகப்பன் படித்தவன் என்று சொல்ல முடியாது. ஆனால் அவனுடைய பொறுமையும் தேசபக்தியும் தியாக உணர்ச்சியும் மன உறுதியும் இணையின்றி விளங்கின. சாமி நாகப்பனைப் போன்ற பலர் இயக்கத்தில் சேர்ந்திரா விட்டால் சத்தியாக்கிரஹம் நடத்தி யிருக்கவே முடியாது."
இந்தியர்களின் மன உறுதியைக் குலைப்பதற்கு டிரான்ஸ்வால் சர்க்கார் இன்னும் பல கொடுமையான முறைகளையும் கையாண்டார்கள். அபாயகரமான முரட்டுக் கைதிகளை வைப் பதற்கு என்று டிரான்ஸ்வாலில் ஒரு தனிச் சிறைச்சாலை இருந் தது. இதற்குப் பெயர் 'டீப்கு லூப்' சிறை. இந்தச் சிறையின் அதிகாரியாக முரட்டுத்தனத்துக்குப் பெயர்போன ஜெயிலர் ஒருவர் இருந்தார். சாதுக்களான இந்திய சத்தியாக்கிரஹிகள் சிலரை இந்த 'டீப்கு லூப்' சிறைக்கு அனுப்பினார்கள். இங்கே ஜெயிலர் கொடுத்த கடுமையான வேலைகளை யெல்லாம் இந்தியர்கள் செய்தார்கள். ஜெயிலர் எந்த அளவு வேலை கொடுத்தாரோ அந்த அளவைப் பூர்த்தி செய்தார்கள். அப்படியும் ஜெயிலருக்குத் திருப்தி உண்டாகவில்லை. இந்தியர்களுடைய உறுதியைக் குலையச் செய்வது அல்லவா அங்கே அவர்களை அனுப்பியதின் நோக்கம் ? எனவே, இந்தியர்களைக் கடுமையாக வேலை வாங்கியது போதாது என்று ஜெயிலர் அவர்களை அவமதிப்பதும் திட்டுவதும் அதிகமாகி வந்தது. இதை இந்தியர்களால் பொறுக்க முடியவில்லை. "ஒன்று, எங்களை இந்தச் சிறையிலிருந்து மாற்றவேண்டும்; அல்லது ஜெயிலரை மாற்ற வேண்டும்" என்று கோரிக்கை செய்துவிட்டு, உண்ணாவிரதம் இருக்கத் தொடங்கினார்கள். அந்த நாளில் தென்னாப்பிரிக்கா சிறையில் அடைக்கப்பட்ட இந்திய சத்தி யாக்கிரஹிகளுக்குப் பரிகாரம் தேட வேறு உபாயமே கிடை யாது. சிறைக்கு உள்ளே என்ன நடக்கிறதென்பது வெளியே உள்ளவர்களுக்குத் தெரியாது. கைதிகளை வெளியார் சென்று பார்க்கவும் முடியாது. ஆகவே வெளியில் பொதுஜனக் கிளர்ச்சி ஏற்படுவதற்கு வழியில்லை.
உண்ணாவிரதம் இருப்பதாகச் சொல்லிவிட்டு இந்தக் காலத்தில் சிலர் இரகசியமாகக் கொஞ்சம் சாப்பிட்டுக்கொண்டு நெடுநாள் காலங்கழிப்பது உண்டு. இந்த மாதிரி மோசடி செய்வதற்குத் தென்னாப்பிரிக்காவில் மார்க்கமே யில்லை. பட்டினி என்றால், முழுப் பட்டினி தான். "பட்டினி கிடந்து சாகட்டும்" என்று சிறை அதிகாரிகள் பிடிவாதமாக இருந்திருந்தால் சாகவேண்டியதுதான், அவர்கள் இறந்துபோன விவரங்கள் கூட வெளியில் உள்ளவர்களுக்கு உடனே தெரிவதற்கு வழி யில்லை. இப்படி யெல்லா மிருந்தும், 'டீப்குலூப்' சிறையிலிருந்த இந்திய சத்தியாக் கிரஹிகள் உண்ணாவிரதம் தொடங்கி அந்த விரதத்தில் உறுதியாக நின்றார்கள். காந்தி மகாத்மாவின் ஆத்ம சக்தி அவர்களை ஆட்கொண்டு அத்தகைய மனோதிடத்தை அவர்களுக்கு அளித்திருந்தது. சத்தியத்துக்கும் அஹிம்சைக்கும் எள்ளளவும் மாறு படாத அந்த சத்தியாக்கிர ஹிகளின் உண்ணாவிரதம் கடைசியாகப் பூரண வெற்றி அளித்தது. ஏழு நாள் விரதம் இருந்த பிறகு அவர்களை அந்தச் சிறையிலிருந்து வேறு சிறைக்கு மாற்றச் சர்க்காரிடமிருந்து உத்தரவு வந்தது. சத்தியாக்கிரஹப் போர் இவ்வாறு நடந்து வருகையில் தென்னாப்பிரிக்காவின் அரசியலில் ஒரு பெரிய மாறுதல் நிகழ்வதற்கு ஆயத்தங்கள் நடந்து கொண்டிருந்தன.
இதுவரையில் டிரான்ஸ்வால், நேட்டால், ஆரஞ்சு பிரீ ஸ்டேட் முதலிய மாகாணங்கள் தனித்தனி அரசியலுடன் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத் தோடு நேராகப் பிணைக்கப்பட்டிருந்தன. தென்னாப்பிரிக்காவிலுள்ள எல்லா மாகாணங்களையும் ஓர் ஐக்கிய சர்க்காருக்கு உட்படுத்தி, பிரிட்டிஷ் சர்க்காரோடு ஒருமுக சம்பந்தம் வைத்துக் கொள்வது பற்றி யோசனைகள் நடந்தன. தென்னாப்பிரிக் காவில் வசித்த இங்கிலீஷ்காரர்கள், போயர்கள் - ஆகிய இரு சாராரும் மேற்படி யோசனையை ஒப்புக்கொண்டு பிரயத்தனம் தொடங்கினார்கள். இப்படி ஐக்கியப்பட்டு ஏக அரசாங்கம் ஆவதினால் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தில் தென்னாப்பிரிக்காவின் அந்தஸ்து உயரும் என்று கருதினார்கள். இந்த யோசனைக்கு நல்ல ஆதரவு இருப்பதாகத் தெரிந்ததும் போயர்களின் சார்பாகவும் ஆங்கிலேயர் சார்பாகவும் இங்கிலாந்துக்குத் தூது கோஷ்டிகள் சென்றன. ஜெனரல் போதாவும் ஜெனரல் ஸ்மட்ஸும் போயர் கோஷ்டிக்குத் தலைமை வகித்துச் சென்றார்கள்,
தென்னாப்பிரிக்கா மாகாணங்கள் ஓர் அரசாங்கமாக ஐக்கியப்படும்போது இந்தியர் நிலைமை மேலும் மோசமாகலாம் என்று காந்திஜி கருதினார். இப்போது ஒவ்வொரு மாகாணத்திலும் சிற்சில சட்டங்கள் இந்தியருக்குப் பாதகமா யிருந்தன.
தென்னாப்பிரிக்கா ஐக்கியப்பட்டு விட்டால், இந்தியருக்கு விரோதமாக ஒவ்வொரு மாகாணத்திலும் உள்ள சட்டங்கள் எல்லாம் சேர்ந்து தென்னாப்பிரிக்கா முழுவதிலும் அமுலுக்கு வரலாம். இந்தியர்களின் கஷ்டம் மேலும் அதிகமாகலாம். எனவே, தென்னாப்பிரிக்கா அரசியல் நிலைமை இங்கிலாந்தில் விவாதிக்கப்படும் சமயத்தில் இந்தியர்களின் சார்பாக அங்கு யாராவது இருக்கவேண்டும் என்று காந்திஜியும் மற்றத் தலைவர்களும் கருதினார்கள். இந்தத் தடவை காந்திஜியும் சேத் ஹாஜி ஹபீப் என்னும் முஸ்லிம் வர்த்தகரும் இங்கிலாந்துக்குப் போவது என்று நிச்சயமாயிற்று. அப்படியே 1909-ம் வருஷம் ஜூன் மீ 23௳ கேப் டவுனிலிருந்து புறப்பட்ட 'கெனில் வொர்த் காஸில்' என்ற கப்பலில் காந்திஜி, சேத் ஹாஜி ஹபீப் இருவரும் புறப்பட்டார்கள்.
--------------
58. டால்ஸ்டாய் பண்ணை
காந்திஜி முதன் முறை இங்கிலாந்து சென்றிருந்த போது தென்னாப்பிரிக்கா இந்தியர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்காக அங்கே ஒரு சங்கம் ஸ்தாபித்துவிட்டு வந்தார் அல்லவா ? அந்தச் சங்கத்தின் தலைவர் லார்ட் ஆம்த்தில் காந்திஜி இப்போது இங்கிலாந்து வந்ததின் நோக்கத்தைக் கேட்டுத் தெரிந்து கொண்டு ஜெனரல் போதா முதலியவர்களைக் கண்டு பேசினார். ராஜி செய்து வைப்பதற்கு அவர் பெரு முயற்சி செய்தார். ஆனால் வெற்றி காணவில்லை. காரியாம்சத்தில் இந்தியர்களுடைய நன்மைகளைக் கவனித்துக் கொள்வதாகவும், ஆனால் நிறவேற்றுமையை எடுத்து விடுவது முடியாத காரியம் என்றும் போயர் தலைவர்கள் சொன்னார்கள். ஆசியாக்காரர் சட்டம், குடியேற்றத் தடைச் சட்டம் - இவற்றை எடுக்கவே முடியாது என்று சொல்லி விட்டார்கள்.
இந்தப் பதிலை லார்ட் ஆம்த்தில் காந்திஜிக்கும் ஹாஜி ஹபீப் சேத்துக்கும் தெரியப்படுத்தினார். "காரியாம்சத்தில் நீங்கள் கேட்கும் வசதிகள் எல்லாம் கிடைத்து விடும். ஆனால் சட்டத்திலேயுள்ள நிற வித்தியாசம் இருந்து கொண்டிருக்கும். இந்த உலகத்தில் நாம் கோருவதெல்லாம் கிடைத்துவிடுவதில்லை. சில சமயம் விட்டுப் பிடித்தேயாக வேண்டும். ஆகையால் யோசனை செய்யுங்கள். வெறும் கொள்கைக்காகப் போராட்டத்தை நடத்திக் கொண்டு போவது அவசியமா என்று நன்றாய்ச் சிந்தித்து முடிவு செய்யுங்கள். கூடிய சீக்கிரத்தில் பதில் சொல்லுங்கள்" என்று லார்ட் ஆம்த்தில் கூறினார்.
சேத் ஹாஜி ஹபீப் வெறும் கொள்கைக்காகப் போராடுவதில் அர்த்தமில்லை என்று நினைத்தார். அவர் கூறியதாவது:
"ஜெனரல் போதா சொல்வதை நான் ஒப்புக் கொள்கிறேன் என்று தெரியப்படுத்துங்கள். தாங்கள் கூறியபடி அவர் இந்திய சமூகத்துக்குச் சௌகரியங்களை அளித்தால் இப்போதைக்கு நான் திருப்தி யடைவேன். இந்தியர்கள் சமரசக் கட்சியின் சார்பாக நான் பேசுகிறேன். தென்னாப்பிரிக்கா இந்திய சமூகத்தில் பெரும்பாலோர் நாங்களே. சமூகத்தில் பண வசதியுள்ளவர்களும் நாங்களே. இதற்கு மேலே இந்திய சமூகம் கஷ்டப்படுவதை நாங்கள் விரும்பவில்லை. கொள்கைக்காகப் போராடுவதைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம்."
ஹாஜி ஹபீப் குஜராத்தியில் பேசினார். அதை வார்த்தை வார்த்தையாகக் காந்திஜி மொழி பெயர்த்துக் கூறினார். கூறி விட்டு மகாத்மா தமது அபிப்பிராயத்தைத் தெரிவித்தார் : தாங்கள் எடுத்துக் கொண்ட முயற்சிக்காக நன்றி செலுத்துகிறேன். சேத் ஹாஜி ஹபீப் இந்திய சமூகத்தில் பெரும்பாலோரின் பிரதிநிதி என்பதும் செல்வர்களின் பிரதிநிதி என்பதும் உண்மை. ஏழை இந்தியர்கள் - சிறுபான்மையோர் சார்பாக நான் பேசுகிறேன். நானும் என்னைச் சேர்ந்தவர்களும் உடனே கிடைக்கக்கூடிய வசதிகளுக்காக மட்டும் போராடவில்லை ; கொள்கைக்காக உயிரைக் கொடுத்துப் போராடத் தயாரா யிருக்கிறோம். தற்கால அநுகூலம், கொள்கை, இந்த இரண்டில் ஒன்றைக் கைவிட வேண்டுமானால் தற்கால அ நுகூலத்தையே நாங்கள் கைவிடுவோம். ஜெனரல் போதாவின் வலிமையை நாங்கள் உணர்ந்திருக்கிறோம். ஆயினும் எங்களுடைய பிரதிக்ஞையை நாங்கள் கைவிட முடியாது. ஆண்டவன் மீது பாரத்தைப் போட்டு விட்டு, என்ன நேருவதா யிருந்தாலும் பொறுமையுடன் கொள்கையைக் கடைப்பிடித்து வருவோம். எங்களுக்காக நீங்கள் மிகவும் பிரயாசை எடுத்திருக்கிறீர்கள். அதை நாங்கள் ஒருநாளும் மறக்க மாட்டோம். ஆனாலும். தங்களுடைய புத்திமதியை நாங்கள் ஏற்க முடியவில்லை, ஜெனரல் போதாவிடம் ஹாஜி ஹபீப் கூறிய பதிலையும் நான் கூறும் பதிலையும் தனித்தனியே தெரிவித்து விடுங்கள். அதற்குப் பிறகு தாங்கள் எங்களுக்கு உதவி செய்ய வேண்டும் மென எதிர்பார்க்க மாட்டோம்."
இதற்கு லார்ட் ஆம்த்தில், "அப்படி நீங்கள் நினைக்க வேண்டாம். கொள்கைக்காக நீங்கள் போராடுவதென்று தீர்மானிக்கும் பட்சத்தில் அதற்காக உங்களுக்கு உதவி செய்வதை நிறுத்த மாட்டேன். இங்கேயுள்ள கமிட்டியின் தலைவனாக இருந்து என்னாலியன்றவரை மேலும் உங்களுக்கு உதவி செய் து வருவேன். இங்கே எனக்கு உள்ள செல்வாக்கை யெல்லாம் உங்களுக்கு உதவி செய்யப் பயன்படுத்துவேன்" என்று சொன்னார்.
இந்தச் சம்பாஷணையிலிருந்து காந்திஜியின் குணாதிசயத்தில் இரண்டு அம்சங்கள் தெளிவாகின்றன அல்லவா ? ஹாஜி ஹபீப் சேத்தும் காந்திஜியும் வெவ்வேறு அபிப்பிராயம் கொண்டிருந்தார்கள். எனினும் அவர்களுடைய சிநேகிதத்துக்கு எந்தவிதமான குந்தகமும் ஏற்படவில்லை. ஹாஜி ஹபீப் காந்திஜியிடம் பூரண நம்பிக்கை வைத்திருந்தார். அதனாலேயே தம் அபிப்பிராயத்தை மொழிபெயர்த்துச் சொல்லும்படி மகாத்மாவைக் கேட்டுக் கொண்டார். மகாத்மாவும் தம் அபிப்பிராயத்துக்கு மாறுபட்ட அபிப்பிராயத்தை உள்ளது உள்ளபடி மொழி பெயர்த்துச் சொல்வதற்குத் தயங்கவில்லை.
லார்ட் ஆம்த்தில் ஆங்கிலேயராயிருந்தும் அவர் உதவி செய்வதாக முன் வந்ததைக் காந்திஜி மகிழ்ச்சியுடன் வர வேற்று நன்றி செலுத்தினார். அவரிடம் காந்திஜி வைத்த நம்பிக்கை வீண் போகவில்லை. இறுதிவரை லார்ட் ஆம்த்தில் தென்னாப்பிரிக்கா இந்தியரின் கட்சியில் நின்று தம்மாலான உதவிகளைச் செய்து கொண்டிருந்தார். போராட்டம் நடந்து கொண்டிருந்த வரையில் காந்திஜியுடன் அவர் மிக்க சிநேக பாவத்துடன் பழகி வந்தார்.
* * *
இங்கிலாந்துக்குத் தூது போன காரியத்தில் வெற்றி பெறாமல் காந்திஜி தென்னாப்பிரிக்கா திரும்பினார். ஆனால் வேறொரு விதத்தில் அந்தப் பிரயாணம் அளவில்லாத பயனை அளித்தது. இங்கிலாந்தில் தங்கியிருந்தபோது இந்தியாவின் சுதந்திரத்தில் பற்றுக்கொண்ட சில இந்திய இளைஞர்களை மகாத்மா சந்தித்தார். அவர்களுடன் கலந்து பேசினார். அந்த இளைஞர்கள் பலாத்காரத்தில் நம்பிக்கை கொண்ட புரட்சிக் காரர்கள். இந்தியாவின் சுதந்திரத்துக்காக எதுவும் செய்ய அவர்கள் தயாரா இருந்தார்கள். அவர்களுடன் பேசியதிலிருந்து காந்திஜிக்கு இந்தியாவின் சுதந்திரப் பிரச்னையைப் பற்றி அறிந்து சிந்தனை செய்ய வசதி ஏற்பட்டது. "இந்தியா சுய ராஜ்யம் பெற்றே தீர வேண்டும். ஆனால் பலாத்காரமும் அரா ஜகமும் அதற்கு வழியல்ல ; அஹிம்சையும் சத்தியாக்கிரஹமும் தான் வழிகள் என்ற முடிவுக்குக் காந்திஜி வந்தார். இந்த முடிவுகளை ஆதாரமாகக் கொண்டு “ஹிண்ட் ஸ்வராஜ் "(இண்டியன் ஹோம் ரூல்) என்ற புத்தகத்தை இங்கிலாந்திலிருந்து தென்னாப்பிரிக்காவுக்குத் திரும்பி வரும்போது கப்பலில் எழுதி முடித்தார்.
* * *
தென்னாப்பிரிக்காப் போராட்டத்தை இனித் தொடர்ந்து நடத்தும் முறையைப் பற்றியும் கப்பலில் காந்திஜி சிந்தனை செய்தார். போராட்டம் இலகுவில் முடிகிறதாயில்லை. நீடித்த காலம் நடந்தே தீரவேண்டும். பணக்கார வியாபாரிகளின் ஆதரவு இனிமேல் இயக்கத்துக்கு கிடைப்பது துர்லபம். ஏழை இந்தியர்களை வைத்துக் கொண்டே நடத்த வேண்டும். அவர்களிலும் எத்தனை பேர் நிலைத்து நிற்பார்கள் என்று தெரியாது. ஆனால் சத்தியாக்கிரஹத்தின் சக்தியைப் பற்றி மகாத்மாவுக்கு இதற்குள்ளே மகத்தான நம்பிக்கை ஏற்பட்டிருந்தது. சத்தியாக்கிரஹத்தின் சக்தி ஆள்களின் தொகையைப் பொறுத்த தல்ல வென்றும், அதைக் கடைப்பிடிப்போர் ஒரு சிலராயிருந் தாலும் அவர்களுடைய உறுதியைப் பொறுத்தது என்றும் மகாத்மா நிச்சயம் பெற்றிருந்தார். ஆகையால் எத்தனை பேர் போராட்டத்தில் நிலைத்து நிற்பார்கள் என்பதைப் பற்றிக் காந்திஜி கவலைப்படவில்லை. ஆனால் போராட்டத்தில் கலந்து கொண்ட ஏழைக் குடும்பங்களின் கதி என்ன என்பது மகாத்மாவுக்குப் பெரும் கவலை அளித்தது. அவர்களுக்கு உண்ண உணவும் தங்க இடமும் கொடுத்து உதவ வேண்டாமா?
தென்னாப்பிரிக்கா சேர்ந்ததும் இதைப் பற்றிச் சில நண்பர்களுடன் கலந்து ஆலோசித்து ஒரு முடிவுக்கு வந்தார். டர்பனுக்குப் பக்கத்தில் போனிக்ஸ் பண்ணை ஏற்படுத்தியது போல் ஜோகானிஸ்பர்க்குக்குச் சமீபமாக 'டால்ஸ்டாய் பண்ணை ' என்பதாக ஒரு ஆசிரமம் ஸ்தாபிக்கத் தீர்மானித்தார். காந்திஜியின் அத்தியந்த நண்பர்களில் ஒருவரான மிஸ்டர் காலன்பாக் என்னும் ஜெர்மானியர் 1,100 ஏக்ரா விஸ்தீரணமுள்ள ஒரு விவசாயப் பண்ணையை வாங்கியிருந்தார். அந்த இடத்தில் 1910-ம் வருஷம் மே மாதம் 10-ம் தேதி டால்ஸ்டாய் பண்ணை ஸ்தாபிக்கப்பட்டது.
சத்தியாக்கிரஹ இயக்கத்தில் சேர்ந்த காரணத்தினால் ஜீவனோபாயத்தை இழந்த சத்தியாக்கிரஹிகளும் அவர்களுடைய குடும்பத்தினரும் டால்ஸ்டாய் பண்ணையில் குடியேறினார்கள். எல்லாரும் கையால் உழைத்துப் பாடுபட வேண்டும் என்றும் வீட்டு வேலைக்காக வேலைக்காரர்கள் வைத்துக் கொள்ளக் கூடாது என்றும் நியதி ஏற்பட்டது. குடியிருப்பு இடத்திலிருந்து ஐந்நூறு கஜ தூரத்தில் இருந்த நீர் ஊற்றிலிருந்து தண்ணீர் கொண்டு வரவேண்டி யிருந்தது. ஆசிரம வாசிகள் காவடிகட்டித் தோள் மீது சுமந்து தண்ணீர் கொண்டு வந்தார்கள். ஸ்திரீகள் சமையல் வேலையின் பொறுப்பை ஏற்றார்கள். இப்படியே பாத்திரங்கள் துலக்குதல், இருப்பிடத்தைச் சுத்தம் செய்தல், தெருக் கூட்டுதல் முதலிய சகல வேலைகளையும் ஆசிரம வாசிகள் பகிர்ந்து கொண்டு செய்தார்கள். ஆசிரமத்தில் மிக எளிய உணவே அளிக்கப்படும் என்று ஏற்பாடு. ஆனாலும் உணவு விஷயத்தில் ஒரு சிக்கலான பிரச்னை ஏற்பட்டது. ஆசிரமத்தில் வந்து குடியேறியவர்களில் குஜராத்தியர், தமிழர், ஆந்திரர், மற்ற வட மாகாணத்தார் எல்லாரும் இருந்தனர். அவ்விதமே ஹிந்துக்கள், முஸ்லிம்கள், பார்ஸிகள், கிறிஸ்துவர்கள் ஆகிய நாலு மதத்தினரும் இருந்தார்கள். கிறிஸ்துவர்களும் முஸ்லிம்களும் புலால் உண்பவர்கள். அவர்கள் புலால் உணவு வேண்டும் என்று சொல்லும் பட்சத்தில் இரண்டு சமையல் அறைகளும் இரண்டு விதமான சமையல்களும் அவசியமாகும். எனினும் புலால் உணவு அருந்திப் பழக் கப்பட்டவர்களைத் தாவர உணவுதான் அருந்த வேண்டும் என்று கட்டாயப்படுத்தக் காந்திஜி விரும்பவில்லை. அவர்கள் விரும்பினால் புலால் உணவுக்கு ஏற்பாடு செய்யத் தயாராயிருந் தார். ஆயினும் அதனால் ஏற்படக்கூடிய அசௌகரியங்களை அவர்களுக்குக் காந்திஜி எடுத்துச் சொல்லி, கறிகாய் உணவுடன் திருப்தி அடைய முடியுமா என்று கேட்டார். கிறிஸ்துவர்களும் முஸ்லிம்களும் - ஸ்திரீகள் உள்பட- பொது செளகரியத்தை முன்னிட்டுப் புலால் உணவு தங்களுக்கு வேண்டிய தில்லை யென்று உறுதியாகச் சொல்லி விட்டார்கள்."
-------------
59. கடின சோதனைகள்
ருஷியா தேசத்து மகான் டால்ஸ்டாய் எழுதிய "ஆண்ட வன் ராஜ்யம் உனக்குள்ளே" என்ற புத்தகம் மகாத்மா காந்தியின் மனத்தைப் பெரிதும் கவர்ந்தது என்பதை முன்னமே பார்த்தோமல்லவா ? டால்ஸ்டாயின் கொள்கைகள் காந்திஜியின் வாழ்க்கையின் போக்கையே மாற்றி அமைத்தன என்று கூறலாம். காந்திஜிக்கு டால்ஸ்டாயிடம் ஏற்பட்டிருந்த மரியாதை காரணமாகவே தென்னாப்பிரிக்காவில் அவர் ஸ்தாபித்த இரண்டாவது ஆசிரமத்துக்கு 'டால்ஸ்டாய் பண்ணை' என்று பெயர் வைத்தார்.
டால்ஸ்டாய் பண்ணையில் காந்திஜி வசித்த காலத்தில் பல கடினமான பிரச்னைகளும் சோதனைகளும் ஏற்பட்டன. அவற்றில் சிலவற்றை இப்போது பார்க்கலாம்.
டால்ஸ்டாய் பண்ணையில் வாலிபர்களும் கன்னிகைகளும் வசித்தார்கள். எல்லாரும் வித்தியாசமில்லாமல் பேசிப் பழகிக் கொண்டிருந்தார்கள். இத்தகைய கல்மிஷமில்லாத வாழ்க்கை அவர்கள் நடத்தவேண்டு மென்பதுதான் காந்திஜியின் விருப்பம். இதில் தவறு ஒன்றும் நேர்ந்துவிடாது என்ற பூரண நம்பிக்கை காந்திஜிக்கு இருந்தது. ஆயினும் ஆசிரமத்தில் வசித்த இளம் பெண்களின் பாதுகாப்புக்குத் தாம் பொறுப்பு என்பதை உணர்ந்து அவர்களுடைய நடவடிக்கைகளைக் கண்ணும் கருத்துமாய்க் கவனித்து வந்தார்.
ஒரு சமயம் காந்திஜியின் மனதுக்கு மிகவும் ஆயாசம் தரும் படியான சம்பவம் ஒன்று நேரிட்டு விட்டது. அதாவது ஆசிரமத்து வாலிபர்கள் சிலர் இரண்டு இளம் பெண்களிடம் பரிகாச வார்த்தையாடினார்கள் என்று தெரிந்தது. இந்தமாதிரி மறுபடி நேராதிருப்பதற்கு என்ன வழி என்று காந்தியே சிந்தனை செய்தார். அந்த இளைஞர்களை அழைத்துக் கண்டித்துப் புத்திமதி கூறினார். இதனால் அவருடைய உள்ளம் திருப்தியடையவில்லை, இலங்கையில் தன்னந்தனியே சிறையிருந்த சீதா தேவியை இராவணன் நெருங்கவும் அஞ்சியது மகாத்மாவுக்கு அடிக்கடி நினைவு வந்து கொண்டிருந்தது. சீதை அத்தகைய கடுந்தவ விரதத்தை மேற் கொண்டிருந்ததினால் அல்லவோ, இராவணன் சீதா தேவியிடம் நெருங்கவும் தயங்கினான் ? அவ்விதமே டால்ஸ்டாய் பண்ணையில் குடியேறி ஆசிரம வாழ்க்கையை மேற் கொண்ட பெண்களும் தவ விரதத்தை மேற்கொள்ள வேண்டு மென்று மகாத்மா எண்ணினார். அவர்கள் தவ விரதம் மேற் கொண்டிருப்பதோடு, அதற்கு வெளிப்படையான அறிகுறியும் இருக்கவேண்டும். அந்த அறிகுறியான து பரிகாசப் பேச்சுப் பேச விரும்பும் வாலிபர்களுக்குப் புத்தி புகட்டி எச்சரிக்கை செய்யக் கூடியதா யிருக்கவேண்டும்.
ஒரு நாள் இரவெல்லாம் காந்தி மகாத்மா ஒரு கண நேரங் கூடத் தூங்காமல் மேற்கூறிய விஷயத்தைப் பற்றி யோசனை செய்தார். பொழுது புலரும் சமயத்தில் ஒரு முடிவுக்கு வந்தார். பொழுது நன்றாக விடிந்ததும் அந்த இரு பெண்களையும் கூப்பிட்டார். "என் அருமைக் குழந்தைகளே ! நேற்று உங்களைப் பார்த்துச் சில வாலிபர்கள் பரிகாச வார்த்தை பேசினார்கள். இதை எண்ணி நேற்று இரவெல்லாம் எனக்குத் தூக்கமே வரவில்லை. அவர்களுக்குப் புத்தி கற்பிக்க வேண்டும். மற்றவர்களுக்கும் எச்சரிக்கையாயிருக்கவேண்டும். இதற்காக உங்களை ஒரு தியாகம் செய்யும்படி கோருகிறேன். உங்களுடைய தலையில் உள்ள அழகான நீண்ட கூந்தலை வெட்டி விட விரும்புகிறேன். அப்படி வெட்டி விட்டால், உங்களைப் பார்க்கும்போதெல்லாம் அந்த வாலிபர்கள் தங்கள் தவறை நினைந்து வருத்தப்படுவார்கள். ஆசிரமத்தில் மறுபடியும் இம் மாதிரி தவறு நேராது. ஆசிரமத்தின் நன்மைக்காக உங்களை இந்தக் கடினமான சோதனைக்கு உட்படுத்த விரும்புகிறேன். உங்களுக்குச் சம்மதமா ? என் சொல்லுக்காக இந்தத் தியாகத்தைச் செய்வீர்களா ? " என்று கேட்டார்.
இந்தியப் பெண்களுக்குத் தங்கள் கூந்தல் நீளமாயிருக்க வேண்டு மென்பதில் மிக்க ஆசை உண்டு அல்லவா? எந்த இளம்பெண் மணிதான் காந்தி மகான் கூறிய சோதனைக்குத் தயங்காமல் உட்படுவாள்?
அந்தப் பெண்கள் இருவரும் திடுக்கிட்டுப் போனார்கள், அவர்களுடைய தாய்மார்களுக்கு இது தெரிந்தபோது அவர்களும் வந்து காந்திஜியிடம் மன்றாடினார்கள். மகாத்மா, "உங்களைக் கட்டாயப் படுத்த எனக்கு இஷ்டமில்லை ; வேண்டாம் என்றால் வேண்டாம்" என்று கூறி மறுபடியும் தம்முடைய நோக்கம் என்ன வென்பதை விளக்கிச் சொன்னார். கடைசியில் அந்தப் பெண்கள் இருவரும், 'பாபு ! உங்கள் விருப்பத்துக்கு நாங்கள் மாறு சொல்ல வில்லை. தங்கள் கட்டளைப் படி நடக்கிறோம்!" என்று சம்மதம் கொடுத்தார்கள். தாய் மார்களும் சம்மதித்தார்கள்.
காந்தி மகாத்மா எழுதுகிறார் :-"இந்த நிகழ்ச்சியை இன்று எழுதும் இதே கையினால் கத்திரிக்கோலை எடுத்து அந்தப் பெண்களின் கூந்தலை வெட்டி எறிந்தேன். அந்த இரு பெண்களும் உத்தம குண வதிகள் ; நல்ல புத்திசாலிகள். அவர்களில் ஒருத்தி பிற்காலத்தில் இம் மண்ணுலக வாழ்வை நீத்துச் சென்றாள். இன்னொருத்தி இன்று ஒரு பெரிய குடும்பத்தின் தலைவியா யிருக்கிறாள். அவர்களுடைய கூந்தலை வெட்டி விட்ட பிறகு, நான் நடத்தி வந்த வகுப்பில் அதன் காரணத்தை எடுத்து விளக்கமாகக் கூறினேன். இதனால் மிகவும் நல்ல பலன் ஏற்பட்டது. அதற்குப் பிறகு டால்ஸ்டாய் பண்ணையில் எந்தப் பெண்ணிடமும் யாரும் பரிகாசமாகப் பேசியது கிடையாது!" மேற்கண்டவாறு சம்பவத்தைப் பற்றி எழுதிவிட்டு மகாத்மா ஓர் எச்சரிக்கையும் தந்திருக்கிறார். இம்மாதிரி கடின சோதனைகளைத் தகுதியற்றவர்கள் கையாளக் கூடாது என்பதுதான், காந்திஜி எழுதியிருப்பதாவது:
"இந்தச் சம்பவத்தை நான் சொல்லியிருப்பது மற்றவர்கள் இதைப் பின்பற்ற வேண்டும் என்பதற்காக அல்ல. இம் மாதிரி சோதனையைக் கையாளுவதில் பெரும் அபாயம் இருக்கிறது. நாங்கள் மேற்கொண்டிருந்த சத்தியாக்கிரஹம் எத்தனை தூய்மையானது என்பதைக் காட்டுவதற்காகவே இந்த நிகழ்ச்சியைச் சொன்னேன். இத்தகைய தூய்மையினாலே தான் இயக்கம் வெற்றிபெறும் என்னும் நிச்சயம் எனக்கு இருந்தது. இப்படிப்பட்ட கடுமையான சோதனையை ஒருவர் கையாளுவதாயிருந்தால், தம் வசத்தில் ஒப்புவிக்கப்பட்ட குழந்தைகளிடம் சொந்தத் தாயும் தகப்பனும் செலுத்தும் அன்பைத் தாமும் செலுத்தப் பழகியிருக்க வேண்டும். சொந்தக் குழந்தைகளின் விஷயத்திலும் அதே மாதிரி செய்வோம் என்ற திட நம்பிக்கை இருக்கவேண்டும். சோதனையில் தவறிப் போனால் அதற்கேற்ற பிராயச்சித்தம் செய்து கொள்ள எப்பொழுதும் தயாராயிருக்க வேண்டும்."
* * *
காந்தி மகாத்மா உருக்கமாக விவரித்திருக்கும் மேற்படி சம்பவத்துக்குப் பிறகு டால்ஸ்டாய் பண்ணையின் வாழ்க்கை மேலும் தூய்மையடைந்தது ; எளிமையும் பெற்றது. அது வரையில் ஆசிரமத்தில் வசித்த இந்தியர்கள் ஐரோப்பிய கனவான்களைப் போல் உடைதரித்து வந்தார்கள். இனி எல்லாரும் எளிய தொழிலாளிகளின் உடை தரிக்க வேண்டும் என்று தீர்மானமாயிற்று. சிறைக் கைதிகளுக்கு அளிக்கப்படும் உடையை ஓரளவு பின்பற்றி நீல நிற முரட்டுத் துணியில் கால் சட்டையும் அரைக்கைப் பனியன்களும் தைத்துக் கொண்டார்கள். ஆசிரமத்து ஸ்திரீகள் தையல் வேலை கற்றுக் கொண்டு ஆடவர்களுக்கு வேண்டிய சட்டைகளை யெல்லாம் தாங்களே தைத்துக் கொடுத்தார்கள்.
இம்மாதிரியே ஆசிரம வாசிகளின் உணவும் முன்னைவிட எளிய உணவாயிற்று. பிற்காலத்தில் காந்தி மகாத்மாவின் வாழ்க்கையில் முக்கியத்துவம் அடைந்த பல காரியங்கள் டால்ஸ்டாய் பண்ணையில் ஆரம்பமாயின. தினந்தோறும் மாலை ஏழு மணிக்கு அனைவரும் கூடிப் பிரார்த்தனை செய்யும் வழக்கம் டால்ஸ்டாய் பண்ணையில் ஆரம்பித்ததுதான். இந்தப் பிரார்த்தனைக் கூட்டங்களில் பஜனை கீதங்கள் பாடப்பட்டன. இராமாயணம், குர்ஆன், பைபிள் ஆகிய மத நூல்களிலிருந்து சிற்சில பகுதிகள் படிக்கப்பட்டன.
காந்திஜிக்கு ஏற்கெனவே இயற்கை வைத்திய முறைகளிலும் உணவுப் பரிசோதனை-களிலும் ஆர்வம் உண்டு. டால்ஸ்டாய் பண்ணையில் அச்சோதனைகளை நடத்த வேண்டிய வசதிகள் இருந்தன. பண்ணையில் யாருக்கு என்ன நோய் வந்தாலும் டாக்டரைக் கூப்பிடுவதில்லை. சமீபத்தில் கூப்பிடும்படியாக டாக்டரும் இல்லை. காந்திஜி இயற்கை வைத்திய முறைகளைக் கொண்டே எல்லா நோய்களையும் குணப்படுத்தி வந்தார். ஆசிரமத்துக்கு வெளியே அக்கம் பக்கத்திலிருந்து கூட மகாத்மாவிடம் இயற்கை வைத்தியம் செய்துகொள்ள ஜனங்கள் வந்தார்கள். டால்ஸ்டாய் பண்ணைக்குச் சற்று தூரத்தில் ரயில்வே ஸ்டேஷன் ஒன்று இருந்தது. ஸ்டேஷன் மாஸ்டரின் குழந்தை - இரண்டு வயதுப் பிள்ளைக்கு - டைபாய்டு சுரம் கண்டது. அதை இயற்கை வைத்திய முறையைக் கையாண்டு குணப்படுத்தினார். இயற்கை வைத்திய முறையில் தம்முடைய அநுபவங்களைக் கொண்டு காந்தி மகாத்மா "ஆரோக்கிய வழி " என்னும் ஒரு அருமையான நூலை எழுதியிருக்கிறார்.
ஆனால் இந்தத் துறையிலேயும் மகாத்மா எழுதியுள்ள எச்சரிக்கையை நாம் கவனித்து மனத்தில் வைத்துக் கொள்வது. அவசியம். அந்த எச்சரிக்கை வருமாறு:- "இம்மாதிரி பல சோதனைகளை டால்ஸ்டாய் பண்ணையில் நான் நடத்தினேன், ஒன் றிலாவது தோல்வியடைய வில்லை. ஆனால் நான் கைக் கொண்ட முறைகளில் அப்போதிருந்த உறுதி இப்போது எனக்குக் கிடையாது. 1918-ம் வருஷத்தில் இந்தியாவுக்குத் திரும்பிய பிறகு எனக்கு வயிற்றுக் கடுப்பு நோய் வந்தது. அதை என்னால் குணப்படுத்திக் கொள்ள முடியவில்லை. அதற்குக் காரணம் என்னுடைய நம்பிக்கை குறைந்து போனதா அல்லது சீதோஷ்ண நிலையில் வித்தியாசமா என்று சொல்ல முடியாது. தென்னாப்பிரிக்காவில் வெற்றியளித்த சில முறைகள் இந்தியாவில் எனக்கு வெற்றி தர வில்லை யென்று மட்டும் சொல்லுவேன்."
இயற்கை வைத்திய முறைகளில் சோதனை நடத்தியது போல் மகாத்மா உணவுப் பரிசோதனைகளும் செய்து வந்தார். மகாத்மாவின் சோதனைகளில் அவருக்கு உற்ற துணையாக இருந்து வந்தவர் மிஸ்டர் காலன் பாக் என்னும் ஜெர்மானியர். இருவரும் ஒரு தடவை கல்கத்தாவில் பசுமாடுகளை நிறையப் பால் கறக்கும்படி செய்வதற்காகக் கையாளும் கொடூர முறைகளைப் பற்றி ஒரு பத்திரிகையில் படித்தார்கள். "பால் சாப்பிடாமல் என் வாழ்க்கை நடத்தக் கூடாது?" என்று காந்திஜி கேட்டார். உடனே, தாம் பால் உணவை விட்டு விடத் தயார் என்றார் மிஸ்டர் காலன் பாக். அவ்விதமே இருவரும் பால் அருந்துவதை நிறுத்தினார்கள். கொஞ்சநாளைக் கெல்லாம் சமைத்த உணவு எல்லாவற்றையுமே விலக்கி விட்டுக் கனி உண வு சாப்பிட ஆரம்பித்தார்கள். புதிய பழங்களையும் உலர்ந்த பழங்களையுமே சாப்பிட்டுக் காலங் கழித்தார்கள்.
"தனித்த பழ உணவு மட்டுமே அருந்திய ஐந்து வருஷம் நான் சுகமாயிருந்தது போல் வேறு எந்தக் காலத்திலும் ஆரோக்கியமா யிருந்ததில்லை. அதே காலத்தில் தான் உடல் உழைப்புச் சக்தி எனக்குப் பூரணமா யிருந்தது. நாள் ஒன்றுக்குச் சர்வ சாதாரணமாய் நாற்பது மைல் நடப்பேன். குறிப்பிட்ட ஒரு தினத்தில் ஐம்பத்தைந்து மைல் நடந்திருக்கிறேன். இவ்விதம் உடலுக்கு ஏற்பட்ட நலத்தையல்லாமல், கனி உணவு என்னுடைய ஆத்மீக வளர்ச்சிக்கும் உறுதுணையா யிருந்தது என்று உறுதியாகக் கூறுவேன். இந்தியாவுக்குத் திரும்பி வந்த பிறகு, தனித்த பழ உணவு மட்டும் சாப்பிட முடியாமல் வேறு உணவும் சேர்த்துக் கொள்ளும்படி நேரிட் டது. அதை எப்போது நினைத்தாலும் எனக்கு வருத்தம் உண்டாகாம லிருப்பதில்லை" என்று காந்தி எழுதியிருக்கிறார்.
-------------
60. கோகலே விஜயம்
காந்திஜியும் அவருக்குத் துணை செய்த சத்தியாக்கிரஹிகளும் டால்ஸ்டாய் பண்ணையில் வாழ்ந்து வந்தபோது, சத்தியாக்கிரஹ இயக்கம் சில சமயம் தீவிரமாயும் சில சமயம் சாதாரணமாயும் நடந்து வந்தது. இயக்கம் எப்போது முடிவுறும் என்று யாராலும் ஊகிக்க முடியவில்லை. இதைப் பற்றிக் காந்திஜி கவலைப்படவுமில்லை. சத்தியத்தை உறுதியாகக் கடைப் பிடிப்பது சத்தியாக்கிர ஹியின் கடமை. பலனைப் பற்றிச் சத்தியாக்கிர ஹி கவலைப்படக் கூடாது. கடவுள் துணையைத் தவிர வேறு யாருடைய உதவியையும் எதிர்பார்க்கவும் கூடாது. இத்தகைய நம்பிக்கையுடன் காந்திஜி இயக்கத்தை நடத்தி வருகையில் உதவி எதிர்பாராத முறையில் கிடைத்தது.
ஸ்ரீ கோபால கிருஷ்ண கோகலேயிடம் மகாத்மா மிக்க மதிப்புக் கொண்டவர் என்பதை முன்னமே பார்த்திருக்கிறோம். ஸ்ரீ கோகலேயுடன் காந்திஜி தொடர்ந்து கடிதப் போக்குவரவு நடத்தி வந்தார். கோகலேயும் தென்னாப்பிரிக்கா இந்தியர்களின் நிலைமையில் கவனம் செலுத்தி வந்தார். 1910-ம் வருஷம் பிப்ரவரி 25௳ இந்தியா சட்ட சபையில் ஸ்ரீ கோகலே நேட்டாலுக்கு ஒப்பந்தக் கூலிகள் அனுப்புவதை உடனே நிறுத்தவேண்டு மென்று ஒரு தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றினார்.
1911-ம் வருஷத்தில் ஸ்ரீ கோகலே இங்கிலாந்துக்குச் சென்றார். அவர் தென்னாப்பிரிக்காவுக்கு ஒருமுறை விஜயம் செய்து நிலைமையை நேரில் தெரிந்து கொள்ள வேண்டும் என்று காந்திஜி அடிக்கடி அவருக்குக் கடிதம் எழுதியிருந்தார். அதன்படி ஸ்ரீ கோகலே இப்போது இங்கிலாந்திலிருந்து தென்னாப்பிரிக்கா செல்வது என்று உத்தேசித்து, இந்தியா மந்திரியிடம் தம் விருப்பத்தைத் தெரிவித்தார். இந்தியா மந்திரி ஆட்சேபம் சொல்லாமல் அநுமதி கொடுத்ததும் ஸ்ரீ கோகலே காந்திஜிக்குத் தகவல் தெரிவித்தார். ஆறு வார காலம் தென்னாப் பிரிக்காவில் தங்கலாம் என்றும் அதற்கு ஒரு சுற்றுப் பிரயாண த் திட்டம் தயாரிக்கும்படியும் காந்திஜியைக் கேட்டுக் கொண்டார்.
இந்தக் கடிதத்தினால் காந்திஜியும் மற்ற இந்தியர்களும் அடைந்த குதூகலத்துக்கு அள வில்லை. இதுவரை இந்தியாவிலிருந்து எந்தத் தலைவரும் தென்னாப்பிரிக்காவுக்கு வந்தது கிடை யாது. ஆகையால் கோகலேயின் வரவு எவ்வளவு முக்கியமானது என்பதை உணர்ந்து அவருக்கு மகத்தான வரவேற்பு அளிக்கவும் தென்னாப்பிரிக்காவின் முக்கிய நகரங்களுக் கெல்லாம் அவரை அழைத்துச் செல்லவும் தீர்மானித்தார்கள். சத்தியாக்கிரஹிகள் சத்தியாக்கிரஹத்தில் ஈடுபடாத இந்தியர்கள் எல்லாருமே வரவேற்பு முயற்சிகளில் முனைந்தார்கள். வரவேற்புக் கமிட்டிகளில் இருக்கும்படி ஐரோப்பியரும் கேட்டுக் கொள்ளப் பட்டனர். பலர் அதற்கு இணங்கினார்கள். ஒவ்வொரு முக்கிய நகரிலும் பிரதான டவுன்ஹால் மண்டபத்தில் கூட்டம் நடத்துவது என்றும், கூட்டத்துக்குத் தலைமை வகிக்க அந்தந்த நகரத்தின் மேயரை அழைப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது. முக்கியமான ஒவ்வொரு ரயில்வே ஸ்டேஷனையும் அலங்கரிக்கத் தீர்மானிக்கப்பட்டது. சாதாரணமாக இதற்கு அனுமதி கொடுப்பதில்லை. ஆயினும் இந்தியர்களுடைய மகத்தான உற்சாகத்தைப் பார்த்துவிட்டு ரயில்வே அதிகாரிகள் உத்தரவு கொடுத்து விட்டார்கள். ஜோகானிஸ்பர்க் ரயில்வே ஸ்டேஷனை அலங்காரம் செய்யவும், ஸ்டேஷனில் ஒரு பெரிய வரவேற்பு வளைவு நிர்மாணிக்கவும் பதினைந்து தினங்கள் பிடித்தன. இதிலிருந்து வரவேற்பு ஏற்பாடுகள் பிரமாதமாகச் செய்யப்பட்டன என்பதை அறியலாம்.
அங்கே இங்கிலாந்திலிருந்து கோகலே தென்னாப்பிரிக்கா பிரயாணத்துக்கு வேண்டிய ஆயத்தங்கள் செய்து கொண்டிருந்தார். இந்தியா மந்திரியின் காரியாலயத்தினர் தென்னாப் பிரிக்கா சர்க்காருக்கு பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தில் ஸ்ரீ கோகலே எவ்வளவு உன்னதமான பதவி வகிக்கிறவர் என்று தெரிவித்திருந்தனர். ஆயினும் ஆரம்பத்திலேயே பிரயாணத்துக்கு ஒரு முட்டுக்கட்டை ஏற்பட்டது. தென்னாப்பிரிக்கா செல்லும் கப்பலில் வசதியான தனிஅறை ஒன்று கோகலேக்கு வேண்டும் என்று கேட்கப்பட்டது. "கிடையாது" என்று கப்பல் கம்பெனியின் பதில் வந்தது. இதை யறிந்த கோகலேயின் நண்பர் ஒருவர் இந்தியா மந்திரி காரியாலயத்துக்கு விஷயத்தைத் தெரியப்படுத்தினார். மேற்படி காரியாலயத்திலிருந்து ஒரு கடிதம் கப்பல் கம்பெனிக்குப் போயிற்று. அவ்வளவு தான் ; கோகலே கேட்டபடி தனி அறை கிடைத்தது. கப்பல் தலைவனுக்குக் கோகலேயைச் சரியான மரியாதையுடன் நடத் தும்படியாகக் கட்டளையும் பிறந்தது.
தென்னாப்பிரிக்காவின் மத்திய சர்க்காரும் கோகலேக்கு மரியாதை செய்யத் தீர்மானித்தார்கள். பிரிடோரியாவில் இருக்கும்போது அரசாங்க விருந்தாளியாக அவர் தங்கவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள். அரசாங்கத்துக்காக ஏற்பட்ட ரயில்வே ஸலூன் ஒன்றை அவருடைய பிரயாணத்துக்காகக் கொடுத்தார்கள். சர்க்கார் கொடுக்கும் இந்த வசதிகளைப் பெற்றுக் கொள்ளவேண்டும் என்று காந்திஜி வற்புறுத்தியதன் பேரில் கோகலே அதற்கு இசைந்தார்.
1912-ம் வருஷம் அக்டோபர் 22௳ கோகலே தென்னா பிரிக்கா சேர்ந்து கேப்டவுன் துறைமுகத்தில் கப்பலிலிருந்து இறங்கினார். கேப்டவுன் நகரத்தில் பெரிய "பொதுக் கூட்டம் ஒன்று நடைபெற்றது. ஸெனட்டர் ஷிரீன் என்பவர் தலைமை வகித்து ஸ்ரீ கோகலேயை வரவேற்றுப் பேசினார். ஸ்ரீகோகலே இந்த முதல் பொதுக் கூட்டத்தில் உறுதியாகவும் நியாயமாகவும் நிதானமாகவும் பேசியது இந்தியர்கள் - ஐரோப்பியர்கள் எல்லாருடைய மனத்தையும் ஒருங்கே கவர்ந்தது.
கேப்டவுனிலிருந்து ஜோகானிஸ்பர்க் இரண்டு நாள் பிரயாணம். வழியில் இந்தியர்கள் வசித்த பட்டணங்களில் எல்லாம் கோகலே இறங்கி அங்கங்கே உபசாரங்களைப் பெற்றுக்கொண்டு ஸ்பெஷல் ரயிலில் ஜோகானிஸ்பர்க் வந்து சேர்ந்தார். ஜோகானிஸ்பர்க்கில் நடந்த வரவேற்பு பிரமாதமா யிருந்தது. முதல் உபசாரக் கூட்டம் ஸ்டேஷனிலேயே நடை பெற்றது. ரொடீஷியாவில் உற்பத்தியாகும் உயர்ந்த தேக்குமரச் சட்டத்தில் தங்கத் தகடு அடித்து அதில் உபசாரப் பத்திரம் எழுதி கோகலேக்கு அளித்தார்கள். அந்தத் தகடு இந்தியாவும் இலங்கையும் சேர்ந்த தேச படத்தின் வடிவம் பெற்றுத் திகழ்ந்தது.
ஆரம்ப உபசாரக் கூட்டத்துக்குப் பிறகு கோகலே தனித்தனியாகப் பல பிரமுகர்களைப் பார்த்தார். பலரும் அவரை வந்து பார்த்தார்கள், ஐரோப்பியர்களும் இந்தியர்களுமாக 400 பேருக்கு ஒரு பெரிய விருந்து நடந்தது. இந்த விருந்திலேதான் கோகலே தென்னாப்பிரிக்கா இந்தியர்களின் நிலைமையைப் பற்றித் தமது முக்கியமான பிரசங்கத்தைச் செய்தார். இதைத் தவிர இந்தியர்கள் மட்டும் அடங்கிய பொதுக் கூட்டம் ஒன்று நடந்தது. இதுவரையில் ஸ்ரீ கோகலே ஆங்கிலத்திலேதான் பேசி வந்தார். ஆங்கில பாஷையில் கோகலே பெரிய நிபுணர். ஆனால் இந்த முக்கியமான இந்தியர்களின் கூட்டத்தில் ஸ்ரீ கோகலே அவருடைய தாய் பாஷையாகிய மராத்தியில் பேச வேண்டும் என்று காந்திஜி கேட்டுக் கொண்டார். அதைத் தாம் ஹிந்தியில் மொழிபெயர்த்துச் சொல்வதாகவும் கூறினார். அந்தக் காலத்தில் அரசியலில் ஈடுபட்ட இந்தியர்கள் ஆங்கில பாஷையில் பேசுவது வழக்கமாயிருந்தது. ஆங்கில பாஷையிலேதான் அவர்களுடைய வாக்கு வன்மை நன்றாகப் பிரகாசிக்கும். ஆகையால் காந்திஜியின் யோசனையைக் கோகலே ஆட்சேபித்தார். காந்திஜியும் பிடிவாதமாயிருந்தார். கடைசியாக ஸ்ரீ கோகலே, "இங்கே நான் உங்களுக்காகவே வந்திருக்கிறேன். ஆகையால் உங்கள் இஷ்டப்படி நடக்க வேண்டியதுதான் !" என்று சொல்லி மராத்தி பாஷையில் பேசினார்.
ஜோகானிஸ்பர்க் நகரிலிருந்து ஸ்ரீ கோகலே பிரிட்டோரி யாவுக்குப் போனார். பிரிட்டோரியாவில் ஜெனரல் போதா ஜெனரல் ஸ்மட்ஸ் முதலிய அரசாங்க மந்திரிகளை ஸ்ரீ கோகலே சந்திப்பதாக ஏற்பாடு ஆகியிருந்தது. கோகலே மந்திரிகளைச் சந்திக்கப் போகும்போது தனியாகவே போகவேண்டுமென்று காந்திஜி கருதினார். தாம் பின்னோடு சென்றால் காரியத்துக்கு. இடையூறாயிருக்குமென்று சொன்னார். மந்திரிகள் காந்திஜி மீது கொண்டிருந்த கோபத்தினால் கோகலேயின் பேச்சுக்குச் சரியானபடி செவி கொடுக்காமல் போகலாமல்லவா ?
அதே சமயத்தில் கோகலே தனியாக மந்திரிகளைச் சந்திப்பதில் சில கஷ்டங்களும் இருந்தன. இவருக்குத் தெரிந்திராத ஏதாவது ஒரு விஷயத்தைப் பற்றி அவர்கள் பிரஸ்தாபிக்கலாம். அதற்கு இவர் சரியான பதில் சொல்ல முடியாமற் போகலாம். மேலும் சர்க்கார் மந்திரிகள் ஏதாவது சில பிரேரணைகளைச் சொல்லி அவற்றை இந்தியரின் சார்பாக ஒப்புக்கொள்ளும்படி கேட்டால், ஸ்ரீ கோகலே உடனே பதில் சொல்லுவது சாத்தியமா யிருக்குமா ?
இந்தத் தடங்கல்களை யெல்லாம் போக்குவதற்காக, காந்திஜி தென்னாப்பிரிக்கா நிலைமை பற்றிச் சாங்கோபாங்கமாக ஓர் அறிக்கை தயாரிப்பது என்றும், அதை ஸ்ரீ கோகலே நன் றாகப் படித்துக்கொண்டு போவதென்றும் ஏற்பாடாயிற்று. காந்திஜி அறிக்கை தயாரித்தார். கோகலே அதைப் படித்தார்; ஆனால் திருப்தியடையவில்லை. விஷயங்களைத் தெளிவு செய்து கொள்ளப் பல கேள்விகள் கேட்டார். காந்திஜி பதில் சொன்னார். இவ்விதமாக, கோகலே மந்திரிகளைப் பார்ப்பதற்காகக் குறிப்பிட்ட தினத்துக்கு முதல் நாள் இரவு முழுதும் அவர்களுக்குள் பேச்சு நடந்து கொண்டிருந்தது. ஒரு நிமிஷங்கூட இருவரும் தூங்கவில்லை !
குறிப்பிட்ட சமயத்தில் ஸ்ரீகோபால கோகலே தென்னாப் பிரிக்கா மந்திரிகளைச் சந்தித்தார். சுமார் இரண்டு மணி நேரம் பேசினார். பேசி விட்டுத் திரும்பி வந்ததும் சந்தோஷமான செய்தியைச் சொன்னார்.
"எல்லாம் முடிவாகிவிட்டது. கறுப்புச் சட்டத்தை எடுத்து விடுவார்கள். குடியேற்றச் சட்டத்தில் நிறம் பற்றிய தடையை நீக்கிவிடுவார்கள். மூன்று பவுன் தலைவரியும் எடுக்கப்பட்டு விடும். ஆகையால் நீங்கள் இனிமேல் இங்கே இருக்க வேண்டிய அவசியமே இல்லை. ஒரு வருஷத்துக்குள் இந்தியா வுக்குத் திரும்பி வந்து விடவேண்டும்!" என்றார். செய்தி சந்தோஷமானதுதான். ஆனால் காந்திஜிக்கு நம்பிக்கை மட்டும் உண்டாகவில்லை. அவர் கூறியதாவது :
"நீங்கள் உறுதியாகச் சொல்கிறீர்கள். ஆயினும் எனக்கு நம்பிக்கை ஏற்படவில்லை. இந்தத் தேசத்து மந்திரிகளை நான் அறிந்திருப்பது போல நீங்கள் அறியவில்லையல்லவா? ஏற்கெனவே இவ்வாறு அவர்களுடைய பேச்சைப் பலமுறை நம்பி ஏமாற்றமடைந் திருக்கிறேன். ஆயினும் தாங்கள் மந்திரிகளிடம் பெற்றுக்கொண்டு வந்த வாக்குறுதி மிகவும் முக்கியமானது என்பதில் சந்தேகம் இல்லை. அவர்கள் அந்தப்படி செய்யாவிட்டால் எங்களுடைய போராட்டத்துக்கு இன்னும் பலம் அதிகம் ஏற்படும். தாங்கள் பெற்று வந்த வாக்குறுதி எங்களுடைய போராட்டத்தின் நியாயத்தில் எங்களுக்கு அதிக நம்பிக்கையை ஊட்டும். ஒரு வருஷத்துக்குள் நான் திரும்ப முடியும் என்று தோன்றவில்லை. நானும் என் சகாக்களும் இன்னும் பல முறை சிறை புக நேருமென்று கருதுகிறேன்."
இதற்குக் கோகலே, "நீங்கள் பயப்படுகிறபடி ஒருநாளும் நடவாது. கறுப்புச் சட்டத்தை ரத்துச் செய்து விடுவதாகவும் மூன்று பவுன் தலைவரியை எடுத்துவிடுவதாகவும் ஜெனரல் போதா எனக்கு வாக்குக் கொடுத்திருக்கிறார். அதை நிறை வேற்றியே தீருவார் நீங்கள் சால்ஜாப்புச் சொல்லாமல் ஒரு வருஷத்துக்குள் இந்தியாவுக்குத் திரும்பி வந்துவிட வேண்டியதுதான் !" என்று சொன்னார்.
பின்னர் கோகலே டர்பன், மேரிட்ஸ்பர்க் முதலிய இடங்களுக்குச் சென்றார். அங்கே யெல்லாம் அவருக்கு நடந்த உபசரிப்புகளிலும் விருந்துகளிலும் ஐரோப்பியர்கள் தாராளமாய்க் கலந்துகொண்டார்கள். இவ்விதம் தென்னாப்பிரிக்கா இந்தியர்களுடைய உள்ளத்தையும் ஐரோப்பியர்களின் இதயத்தையும் வெற்றிகொண்ட பிறகு 1912-ம் வருஷம் நவம்பர் மாதம் 17-ந் தேதி ஸ்ரீ கோகலே தாய்நாட்டுக்குக் கப்பல் ஏறினார். அவரை வழி அனுப்புவதற்குக் காந்திஜியும் மிஸ்டர் காலன் பாக்கும் கப்பல் ஏறி ஸான்ஸிபார் வரையில் சென்றார்கள். கப்பலில் இந்தியாவின் அரசியல் நிலைமையைப் பற்றியும் இந்திய அரசியல் தலைவர்களின் குணாதிசயங்களைப் பற்றியும் கோகலே காந்திக்கு விஸ்தாரமாய் எடுத்துச் சொன்னார். கோகலே கூறிய ஒவ்வொரு வார்த்தையும் உண்மையாகவும் தேசபக்தி ததும்பியும் இருந்ததைக் கண்டு காந்திஜி வியந்தார். கோகலேயிடம் காந்திஜிக்கு இருந்த அன்பும் பக்தியும் மேலும் அதிகமாயின. ஸான்ஸிபாரில் கோகலேயுடன் பிரிய முடியாமல் பிரிந்து வருத்தத்துடன் விடைபெற்றுக்கொண்டு காந்தி மகான் தென்னாப்பிரிக்காவுக்குத் திரும்பினார்.
--------
61. வீரத் தமிழ்ப் பெண்மணிகள்
கோகலேயின் நம்பிக்கை நிறைவேற வில்லை. காந்திஜி பயந்தபடியே தான் காரியம் நடந்தது. ஒரு வருஷத்திற்குள் மூன்று பவுன் தலைவரி எடுக்கப்பட்டு விடும் என்றும், அதற்குரிய மசோதா அடுத்த சட்டசபைக் கூட்டத்தில் கொண்டு வரப்படும் என்றும் ஸ்ரீ கோகலேயிடம் தென்னாப்பிரிக்கா மந்திரிகள் சொல்லியிருந்தார்கள். அந்த மாதிரி நடைபெறவில்லை. அதற்குப் பதிலாக ஜெனரல் ஸ்மட்ஸ், “நேட்டால் அங்கத்தினர்கள் மூன்று பவுன் தலைவரியை எடுப்பதற்கு விரோதமா யிருப்பதால் அதைப் பற்றி ஒன்றும் செய்வதற்கில்லை" என்று சொல்லி விட்டார். இம்மாதிரி நேட்டால் ஐரோப்பியர் மீது தளபதி ஸ்மட்ஸ் பாரத்தைப் போட்டதற்கு நியாயம் ஒன்றும் கிடையாது. ஏனெனில் அச்சமயம் நாலு மாகாணங்களுக்கும் சேர்ந்த மத்திய சட்டசபை ஏற்பட்டிருந்தது. மற்ற மாகாண அங்கத்தினர் ஆதரவு கொடுத்தால் பெரும்பான்மை வோட்டுகளால் மசோதா நிறைவேறிவிடும். எனவே, கோகலேயிடம் கொடுத்த வாக்குறுதியை மீறுவதற்கு ஜெனரல் ஸ்மட்ஸ் நேட்டால் ஐரோப்பியரின் எதிர்ப்பை ஒரு வியாஜமாக உபயோகித்தார் என்றே சொல்லவேண்டும்.
இவ்வாறு ஸ்ரீ கோகலேயின் நம்பிக்கை நிறைவேறா விட்டாலும் அவர் தென்னாப்பிரிக்காவுக்கு விஜயம் செய்தது இந்தியர்களுக்கு ஒரு பெரும் நன்மையைச் செய்தது. இதுகாறும் காந்தி மகாத்மா அங்கே நடத்திய இயக்கம், நிறவேற்றுமை காரணமான தடைச் சட்டங்களை எதிர்த்தே நடந்தது. மேற்படி சட்டங்களினால் அதிகமாய்ப் பாதிக்கப்பட்டவர்கள் இந்திய வியாபாரிகள், குமாஸ்தாக்கள் முதலியோர்தான். ஆகையால் காந்திஜியின் இயக்கத்தை ஆதரித்தவர்களும் மேற்கூறிய படித்த வகுப்பினரே யாகும். இவர்களும் நாளடைவில் மனம் சோர்ந்து விட்டார்கள். ஒரு சிலரே உறுதியாக நின்றார்கள்,
தென்னாப்பிரிக்கா மந்திரிகளை ஸ்ரீகோகலே பார்த்துப் பேசியபோது நிறத் தனிச் சட்டங்களுடன் மூன்று பவுன் தலை வரி விஷயமாகவும் பேசினார். அந்தத் தலைவரியின் அநியாயத்தை எடுத்துச் சொல்லி மந்திரிகளிடமிருந்து அதை ரத்து செய்வதாக வாக்குறுதியும் பெற்றார். ஆகவே, கோகலேக்கு மந்திரிகள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்ற காரணத்தின் பேரில் மூன்று பவுன் தலைவரியை எதிர்த்துச் சத்தியாக்கிரஹத்தைத் தொடங்குவது சாத்தியமாயிற்று.
மூன்று பவுன் தலைவரி, ஏற்கெனவே ஒப்பந்தத் தொழிலாளிகளாக வந்து ஒப்பந்தம் நீங்கிய பிறகு தென்னாப்பிரிக்காவில் தங்கிய இந்தியத் தொழிலாளிகளையும் அவர்களுடைய குடும்பங்களையும் பாதித்தது. இந்த வரி 1885-ம் வருஷத்திலிருந்து அமுலில் இருந்து வந்தது. அப்படியிருக்க 1907-ம் வருஷத்தில் ஆசியாக்காரர் சட்டத்தை எதிர்ப்பதற்காக ஆரம்பித்த இயக்கத்தில் மேற்படி தலைவரி விஷயத்தைச் சேர்த்துக் கொள்ள முடியவில்லை. ஸ்ரீ கோகலே வந்து விட்டுப் போன தன் பயனாக, அதையும் சத்தியாக்கிரக இயக்கத்தின் நோக்கங்களில் ஒன்றாகச் சேர்த்துக் கொள்ள முடிந்தது.
அப்படிச் சேர்த்துக் கொண்டதினால் இயக்கம் அடைந்த நன்மையைச் சொல்லி முடியாது. தென்னாப்பிரிக்கா விலிருந்த இந்தியத் தொழிலாளிகள் இதுவரையில் மகாத்மாவின் இயக்கத்தைப் பொதுவாக ஆதரித்து வந்தார்களே தவிர, அதில் நேரடியாகக் கலந்து கொள்ள வில்லை. கலந்து கொள்வதற்குச் சந்தர்ப்பமும் கிட்டவில்லை. இப்போது அத்தகைய சந்தர்ப்பம் கிட்டியது. மூன்று பவுன் தலைவரியை எதிர்க்கும் போராட்டத்தில் இந்தியத் தொழிலாளிகள் ஆயிரக்கணக்கானவர்கள் நேர்முகமாகக் கலந்து கொள்வதற்கு வசதி ஏற்பட்டது.
* * *
மறுபடியும் போராட்டம் தொடங்குவதைத் தவிர வேறு வழியில்லை என்று காந்திஜிக்குத் தெரிந்தவுடனே ஸ்ரீ கோகலேக்குக் கடிதம் எழுதினார். தமக்குக் கொடுத்த வாக்குறுதி பங்கமடைந்ததை அறிந்து ஸ்ரீ கோகலே மிக்க வருத்தமடைந்தார். மேலே நடக்கவேண்டியதைப் பற்றித் தமது கவலையையும் தெரிவித்தார். "நீங்கள் கவலைப்பட வேண்டாம். இங்கே நாங்கள் உயிரைக் கொடுத்துப் போராடுவ தென்று கங்கணம் கட்டிக் கொண்டு விட்டோம். மூன்று பவுன் தலைவரியை ரத்து செய்யும் வரையில் போராடுவோம்!" என்று மகாத்மா பதில் எழுதினார். இதற்கு மேல் கோகலே, "சத்தியாக்கிரஹ இயக்கத்தில் குறைந்த பட்சம் எவ்வளவு பேர் சேரக்கூடும் ? அதிகபட்சம் எவ்வளவு பேர் சேரலாம்? அவர்களுடைய பெயர்கள், குடும்பங்கள் முதலிய விவரங்களைப்பற்றித் தெரிவிக்கவும் " என்று கேட்டார்.
காந்தி மகான் எப்போதும் தமது சக்தியை அதிகப்படுத்தி கணக்கிடுவ தில்லை. கொஞ்சம் குறைவாகவேதான் மதிப்பிடுவது வழக்கம். சத்தியாக்கிரஹத்தில் ஈடுபடக் கூடிய 66 பேரின் ஜாபிதாவை காந்திஜி எழுதி அனுப்பினார். இவர்களில் குறைந்த பட்சம் 16 பேர் கடைசி வரையில் நின்று நிலைத்துப் போராடுவார்கள் என்று தெரியப்படுத்தினார். அதோடு இந்த விவரங்களை யெல்லாம் கோகலே கேட்டிருப்பதின் காரணத்தை ஊகித்துத் தெரிந்து கொண்டு, "எங்களுக்குப் பண உதவி அனுப்புவது பற்றித் தாங்கள் கவலைப்பட வேண்டாம். நாங்கள் எப்படியாவது சமாளித்துக் கொள்கிறோம். தங்களுடைய உடல் நிலையைப் பார்த்துக் கொள்ளவும்" என்று மகாத்மா எழுதினார். அப்போது கோகலேயின் உடல் நிலை சரியாக இருக்கவில்லை. ஆனாலும் மகாத்மாவுக்குக் கோகலே கண்டிப்பான பதில் ஒன்று எழுதினார். "உங்களுடைய கடமையை அங்கே நீங்கள் செய்யுங்கள். எங்களுடைய கடமையை இந்தியாவில் நாங்கள் செய்கிறோம். இங்கே நாங்கள் செய்ய வேண்டியதைப் பற்றி உங்களுடைய யோசனை தேவை யில்லை !" என்று சிறிது கோபமாகவே எழுதினார்.
தென்னாப்பிரிக்காவில் காந்தி மகான் இறுதிப் போராட்டம் தொடங்கி நடத்தியபோது இந்தியாவில் ஸ்ரீ கோகலே பெருங்கிளர்ச்சி ஆரம்பித்துத் தென்னாப்பிரிக்கா இந்தியர்களுக்குச் சாதகமாகப் பொது ஜன அபிப்பிராயத்தைத் திரட்டி வந்தார். இதன் பலன் என்ன என்பதைப் பின்னால் பார்ப்போம்.
* * *
மீண்டும் சத்தியாக்கிரஹப் போர் தொடங்குவதற்கு மகாத்மா காந்தி ஏற்பாடுகளைச் செய்துகொண்டிருந்தபோது, இந்திய சமூகத்தின் தலையில் எதிர்பாராத இன்னொரு பாறாங்கல் வந்து விழுந்தது. அந்தப் பாறாங்கல்லைப் போட்டவர் கேப் டவுன் உயர் தர நீதி மன்றத்தின் நீதிபதி ஸியரல் என்பவர்.
இந்தியாவிலிருந்து தென்னாப்பிரிக்காவுக்குச் சென்ற இந்தியர் பலர் கலியாணம் செய்து கொண்டு மனைவி மக்களுடன் சென்றார்கள். வேறு பலர் தென்னாப்பிரிக்காவிலேயே மணம் புரிந்து கொண்டார்கள். இவர்களில் ஹிந்துக்கள் ஹிந்து சம்பிரதாயத்தின்படியும் முஸ்லிம்கள் முஸ்லிம் வழக்கத்தை ஒட்டியும் சடங்குகள் நடத்திக் கலியாணம் செய்து கொண்டிருப்பதே இயல்பல்லவா? நாற்பது வருஷ காலமாக மேற்படி கலியாணங்கள் தென்னாப்பிரிக்காவில் அங்கீகரிக்கப்பட்டு வந்தன. திடீரென்று மேற்படி கலியாணங்கள் எல்லாம் தென்னாப்பிரிக்காவில் செல்லுபடியாகா என்று ஏற்பட்டால் இந்தியர்களின் மனோ நிலைமை எப்படி யிருக்கும் ? கேப்டவுன் கோர்ட் டில் நீதிபதி ஸியரல் விசாரணை செய்த ஒரு வழக்கு சம்பந்தமாக மேற்கண்டவாறு தீர்ப்பு அளித்துவிட்டார். அதாவது கிறிஸ் துவ சம்பிரதாயப்படி கலியாணம் நடந்து விவாக ரிஜிஸ்ட்ரார் ஆபீஸில் ரிஜிஸ்டர் செய்யப்பட்ட கலியாணங்கள் தான் சட்டப் படி செல்லும் என்றும் மற்றவை யெல்லாம் செல்லுபடியாகா என்றும் மேற்படி நீதிபதி தீர்ப்பு அளித்தார். அந்தத் தீர்ப்பு ஊர்ஜிதம் ஆகும் பட்சத்தில் ஆயிரக்கணக்கான இந்தியக் குடும் பங்களில் மனைவிமார்கள் 'மனைவி ' என்னும் உரிமையை இழந்துவிட வேண்டியதாகும். அப்படியானால் அந்த 'மனைவி'யில்லாத ஸ்திரீக்கும் அவளுடைய புருஷனுக்கும் பிறந்த குழந்தைகள் சட்டப்படி அவர்களுடைய வார்ஸுகள் ஆக மாட்டார்கள். பெற்றோர்களின் சொத்துக்குக் குழந்தைகளுக்கு உரிமை யில்லாமல் போய் விடும். தென்னாப்பிரிக்கா இந்தியர்களுக்கு இது எவ்வளவு கேவலமான-பயங்கரமான - நிலைமை என்று சொல்லவேண்டியதில்லை யல்லவா ?
மேற்படி தீர்ப்பினால் இந்திய சமூகத்தில் ஏற்பட்ட கலக்கத்தைச் சொல்லி முடியாது. காந்திஜி தமது வழக்கப்படி சர்க்காருக்கு உடனே ஒரு கடிதம் எழுதினார். "நீதிபதி ஸியரல் தீர்ப்பு சரியானதா ? இப்போதுள் ள சட்டப்படி அது சரி என்று ஏற்படும் பட்சத்தில், சட்டத்தை உடனே திருத்தி இந்தியர்கள் தங்கள் மத சம்பிரதாயப்படி செய்து கொண்ட கலியாணங்களைச் சட்ட ரீதியாகச் செல்லும்படி செய்யப் போகிறீர்களா ?" என்று காந்திஜி கேட்டிருந்தார். ஆனால் இறுமாப்பின் சிகரத்தில் வீற்றிருந்த தென்னாப்பிரிக்கா சர்க்கார் மேற்படி கடிதத்தின் பேரில் எந்தவித நடவடிக்கையும் எடுத்துக் கொள்ளத் தயாராயில்லை.
இனிமேல் காலந் தாழ்த்துவது முறையல்ல என்று காந்திஜி தீர்மானித்தார். சத்தியாக்கிரஹக் கமிட்டியைக் கூட்டினார். உடனே சத்தியாக்கிரஹப் போரைத் தீவிரமாக ஆரம்பிக்க வேண்டும் என்று கமிட்டி தீர்மானித்தது. இதுவரையில் ஆண் மக்கள் மட்டுந்தான் போரில் கலந்து கொண்டார்கள். பெண்களைக் கஷ்டத்துக்கு உள்ளாக்குவதை யாரும் விரும்பவில்லை, இப்போது இந்தியப் பெண் குலத்துக்கு இத்தகைய அவமானமும் அநீதியும் இழைக்கப்பட்டிருக்கும் போது, பெண்களைப் போரில் சேரவேண்டாம் என்று தடுப்பது எப்படி நியாயம் ஆகும் ? அதற்குப் பதிலாக, "ஸ்திரீகளும் இந்தப் போரில் சேர வேண்டும்" என்று கேட்டுக் கொண்டு கமிட்டியார் தீர்மானம் செய்தனர்.
முதலில் டால்ஸ்டாய் பண்ணையில் வசித்த ஸ்திரீகளைச் சத்தியாக்கிரஹப் போரில் சேருகிறீர்களா என்று காந்திஜி கேட்டார். அவர்கள் உற்சாகத்துடன் அதற்கு இணங்கினார்கள்.
"போராட்டத்தின் போதும் சிறைச்சாலையிலும் பல கஷ்டங்களுக்கு உள்ளாக நேரலாம்" என்று மகாத்மா எச்சரிக்கை செய்தார். எந்தவிதமான கஷ்டத்துக்கும் தயார் என்று அந்தச் சகோதரிகள் சொன்னார்கள். அவர்களில் ஆறு பேர் கைக் குழந்தைக் காரிகள். ஒரு ஸ்திரீ கர்ப்பிணி. இப்படி யெல்லாமிருந்தும் அவர்கள் சிறிதும் தயங்கவில்லை.
"போராட்டத்தில் ஈடுபட்டே தீருவோம் என்று முன்வந்த அந்தச் சகோதரிகள் அவ்வளவு பேரும் தமிழ்நாட்டுப் பெண்கள்" என்று மகாத்மா மகிழ்ச்சியுடனேயே குறிப்பிட்டிருக்கிறார். அவர்களுடைய பெயர்களையும் எழுதி யிருக்கிறார் : 1. ஸ்ரீமதி தம்பி நாயுடு, 2. ஸ்ரீமதி என். பிள்ளை, 3. ஸ்ரீமதி கே. முருகேச பிள்ளை, 4. ஸ்ரீமதி பெருமாள் நாயுடு, 5. ஸ்ரீமதி பி. கே. நாயுடு, 6. ஸ்ரீமதி கே. சின்ன சாமி பிள்ளை, 7. ஸ்ரீமதி என். எஸ். பிள்ளை, 8. ஸ்ரீமதி ஆர். ஏ. பூதலிங்கம், 9. ஸ்ரீமதி பவானி தயால், 10. குமாரி மீனாட்சிப் பிள்ளை, 11. குமாரி முருகேச பிள்ளை.
மேலே கண்ட பெயர்களைக் காந்திஜி "தென்னாப்பிரிக்கா சத்தியாக்கிரஹம்" என்ற நூலில் குறிப்பிட்டிருக்கிறார். பெண்களுடைய பெயர் ஞாபகமில்லாதபடியால் பெரும்பாலும் அவரவர்களுடைய கணவன்மார்களுடைய பெயரால் இங்கிலீஷ் முறைப்படி 'மிஸ்ஸஸ்' என்ற அடைமொழி சேர்த்திருக்கிறார்.
"சத்தியாக்கிரஹத்தில் சேர முன்வந்த பெண்மணிகள் அனைவரும் தமிழ்நாட்டுப் பெண்களே !" என்று மகாத்மா எழுதியிருப்பதைப் படிக்கும் தமிழன் - எவ னுக்குத்தான் தோள் பூரியாமல் இருக்கும் ? இதைப் படித்த பிறகு, பழைய தமிழ் நூல்களில் தமிழ்நாட்டு வீரத் தாய்மார்களின் அரு பெருஞ் செயல்களைப்பற்றிப் படிக்கும்போது, அவை முன்னைக் காட்டிலும் உண்மை ஒளி அதிகம் பெற்று விளங்கும் அல்லவா?
* * *
காந்தி மகான் டால்ஸ்டாய் பண்ணை யிலிருந்து போனிக்ஸ் ஆசிரமத்துக்குச் சென்றார். அங்கிருந்தவர்களில் 'இந்தியன் ஒப்பீனியன்' பத்திரிகை நடத்துவதற்காக இரண்டொருவரையும் குழந்தைகளையும் தவிர மற்றவர்கள் எல்லாரும் சத்தியாக்கிரஹப் போரில் ஈடுபட வேண்டும் என்று சொன்னார். ஆண்மக்கள் உடனே சம்மதித்தார்கள், பிறகு அங்கிருந்த சகோதரிகளை அழைத்து மகாத்மா பேசினார். போனிக்ஸ் ஆசிரமத்தில் வசித்த குஜராத்திப் பெண்கள் வெளி உலகிலே சென்று பழகியவர்கள் அல்ல ; சத்தியாக்கிரம இயக்கத்தில் அவர்களுக்குப் பயிற்சியும் கிடையாது. ஆயினும் மகாத்மா அவர்களை ஓரிடத்தில் சேர்த்து டால்ஸ்டாய் பண்ணையில் வசித்த தமிழ் நாட்டுப் பெண்மணிகளின் தீரத்தை உதாரணமாக எடுத்துச் சொன்னார். சத்தியாக்கிரஹத்தில் சேர்வதினால் ஏற்படக்கூடிய கஷ்டங்களையும் கூறினார். அந்த ஸ்திரீகளில் பலர் மகாத்மாவுக்கு உறவினர். 'எனக்காக நீங்கள் இந்தக் காரியத்தில் இறங்க வேண்டாம். மனத்தில் பரிபூரண உறுதியிருந்தால் இந்தப் போராட்டத்தில் சேருங்கள். இல்லாவிடில் சும்மா இருந்து விடுங்கள். ஒரு தடவை போரில் சேர்ந்த பிறகு சோர்ந்துபோய்ப் பின் வாங்கினால் எனக்கு அதைக் காட்டிலும் துன்பம் வேறு ஒன்றும் இல்லை.
இயக்கத்துக்கும் அதனால் பெருந் தீமை விளையும்" என்று எச்சரித்தார். எல்லாவற்றையும் கேட்ட பிறகு அச்சகோதரிகள் "நாங்களும் இயக்கத்தில் சேர்ந்தே தீருவோம்" என்று தீர்மானமாகக் கூறினார்கள்.
போனிக்ஸில் வசித்த பெண்களில் பலர் காந்தி மகானின் உறவினர் என்று பார்த்தோம் அல்லவா ? அந்த உறவினருக்குள்ளே மிக நெருங்கிய உறவினர் ஒருவர் இருந்தார். அவர் தான் மகாத்மாவின் வாழ்க்கைத் துணைவியான ஸ்ரீமதி கஸ்தூரிபாய். எல்லாப் பெண்களையும் காந்திஜி அழைத்துப் பேசியபோது கஸ்தூரிபாயை மட்டும் கூப்பிடவில்லை. அவரிடம் இந்த விஷயத்தைப் பற்றி பிரஸ்தாபிக்கவும் காந்திஜி விரும்பவில்லை. ஸ்ரீமதி கஸ்தூரிபாயின் குணசீலத்தை நன்கு அறிந்தவராதலால், தாம் சொல்லுகிற காரியத்தை அவர் உடனே ஒப்புக்கொண்டு விடுவார் என்றும் அது நல்லதல்ல வென்றும் மகாத்மா கருதினார்.
மற்றச் சகோதரிகளை அழைத்து மகாத்மா பேசிய விஷயம் ஸ்ரீமதி கஸ்தூரிபாயின் காதில் விழுந்தது. அவர் உடனே காந்திஜியிடம் வந்து, "என்னை மட்டும் எதற்காக ஒதுக்கி வைத்தீர்கள்? என்னிடம் என்ன குற்றத்தைக் கண்டீர்கள் ? தாங்கள் மற்றவர்களுக்குக் காட்டுகிற வழியில் நான் அல்லவா முதலில் நடந்து காட்டவேண்டும் ? என்னை நீங்கள் இவ்விதம் ஒதுக்கிவிட்டதை எண்ணினால் எனக்கு ரொம்பவும் வருத்தமா யிருக்கிறது!" என்று சொன்னார்.
அதற்கு மகாத்மா காந்தி கூறியதாவது :- 'உனக்கு வருத்தம் கொடுப்பதில் எனக்கு ஒன்றும் சந்தோஷமில்லை. வேண்டுமென்று அப்படிச் செய்ய மாட்டேன். நீ சத்தியாக்கிரஹப் போரில் சேர்ந்து சிறைக்குச் சென்றால் எனக்கு அளவில்லாத மகிழ்ச்சி உண்டாகும். ஆனால் நான் சொல்வதற்காக நீ சிறைக்குச் செல்வது என்பது கூடாது. இந்த மாதிரி இயக்கங்களில் அவரவர்கள் தங்கள் சொந்த அபிப்பிராயத்தின்படி, சொந்த பலத்தையே நம்பி, ஈடுபட வேண்டும். என்னுடைய வார்த்தைக்காக நீ இப்போது இயக்கத்தில் சேர்ந்துவிட்டு அப்புறம் கோர்ட்டில் நிற்கும்போது பயப்பட்டாலும், சிறைக் கஷ்டங்களைப் பார்த்துப் பின் வாங்கினாலும், என்னுடைய நிலைமை என்ன ஆகும் என்று பார் ! அப்படி நடந்துவிட்டால் பிறகு உன் முகத்தை எப்படி நான் பார்ப்பேன் ? உலகத்தின் முன்னிலையில் எப்படி நான் நிமிர்ந்து நிற்கமுடியும் ? மற்ற ஸ்திரீகளுக்கும் உனக்கும் இந்த வித்தியாசம் இருப்பதினாலேயே நான் உன்னைச் சிறைக்குப் போகும்படி கேட்கவில்லை."
கஸ்தூரிபாய் என்னும் தெய்வப் பெண்மணி பதில் கூறினார்:- "நீங்கள் அனுபவிக்கிற கஷ்டம் எதுவாயிருந்தாலும் அதை நானும் பகிர்ந்து அனுபவிப்பேன். என்னுடைய குழந்தைகள் சிறைச்சாலை சென்று அடையும் கஷ்டங்களை நானும் அடைவேன். கோர்ட்டிலோ சிறைச்சாலையிலோ நான் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு விடுதலை யடைந்தால், அப்புறம் என் முகத்திலேயே நீங்கள் விழிக்க வேண்டாம்; நான் உங்களுடைய பத்தினி அல்லவென் று நிராகரித்து விடுங்கள் !"
இந்தப் பதிலினால் மகாத்மா எல்லையற்ற மகிழ்ச்சி யடைந்தார். ஆயினும் இன்னும் ஒரு முறை எச்சரிக்கை செய்தார் : “நீ இவ்வளவு பிடிவாதமாகச் சொல்லுகிறபோது நான் உன்னைச் சேர்த்துக்கொண்டே ஆகவேண்டும். ஆனால் இன்ன முங்கூட நீ யோசிப்பதற்கு அவகாசம் இருக்கிறது. உன்னுடைய தீர்மானத்தை மாற்றிக் கொள்வதில் அவமானம் ஒன்றும் இல்லை. நன்றாக மறுபடியும் யோசித்துச் சொல்லு." "இனிமேல் யோசிப்பதற்கு ஒன்றுமேயில்லை. முடிவான தீர்மானம் செய்து விட்டேன். ஒருநாளும் மாறமாட்டேன் " என் றர் கஸ்தூரிபாய்.
தமது வாழ்நாள் இறுதி வரையில் ஸ்ரீமதி கஸ்தூரிபாய் மாறவேயில்லை. மகாத்மாவின் ஒவ்வொரு இயக்கத்திலும் அவர் சேர்ந்து சிறை சென்று தாங்கொணா கஷ்டங்களைப் பட்டார், கடைசியாக, சிறைச் சாலைக்குள்ளேயே கணவருடைய மடியில் படுத்துக் கொண்டு உயிர் நீத்தார். இந்தியப் பெண் குலத்தின் சலியாத மன உறுதிக்கு ஸ்ரீமதி கஸ்தூரிபாயைப் போன்ற சிறந்த உதாரணம் வேறு ஏது ?
-------
62. வள்ளியம்மை
டிரான்ஸ்வால் மாகாணத்திலிருந்த டால்ஸ்டாய் பண்ணையிலும், நேட்டால் மாகாணத்திலிருந்த போனிக்ஸ் ஆசிரமத்திலும் வசித்த பெண்கள் எல்லாரும் சத்தியாக்கிரஹப் போரில் ஈடுபட ஆயத்தமாகி விட்டார்கள். ஆனால் எந்த முறையில் சத்தியாக்கிரஹம் செய்வது? - இது முக்கியமான பிரச்னை ஆயிற்று. ஏனென்றால், சத்தியாக்கிரஹத்தின் இயல்பை அறிந்த பிறகு தென்னாப்பிரிக்கா சர்க்கார் காந்திமகானைச் சேர்ந்தவர்களைக் கைது செய்வதில்லை யென்று சண்டித்தனம் செய்தார்கள். சாதாரண இந்தியர்கள் சட்டத்திலிருந்து அணுவளவு வழுவி நடந்தாலும் கைது செய்யப்பட்டார்கள். ஆனால் மகாத்மாவின் சத்தியாக்கிரஹப் படையைச் சேர்ந்தவர்கள் என்ன தான் சட்டத்தை மீறி நடந்தாலும் கைது செய்யப்படுவது தில்லை.
டால்ஸ்டாய் பண்ணையைச் சேர்ந்த சகோதரிகள் லைஸென்ஸ் சட்டத்தை மீறித் தெருத் தெருவாகப் பண்டங்களைக் கொண்டுபோய் விற்றார்கள். ஆனாலும் அவர்களைக் கைது செய்யவில்லை.
இதன் பேரில் மகாத்மா காந்தி தீர்க்கமாக ஆலோசித்துச் சத்தியாக்கிரஹத்துக்கு ஒரு திட்டம் வகுத்தார்.
ஆசியாக்காரர் சட்டத்தின்படி ஒரு மாகாணத்திலுள்ள இந்தியர்கள் இன்னொரு மாகாணத்துக்கு அநுமதிச் சீட்டு இல்லாமல் போகக் கூடாதல்லவா ? ஆகையால் டால்ஸ்டாய் பண்ணையைச் சேர்ந்த சகோதரிகளைப் பார்த்து, "நீங்கள் டிரான்ஸ்வால் எல்லையைத் தாண்டி நேட்டால் மாகாணத்துக்குள் பிரவேசியுங்கள். எல்லையில் உங்கள் பெயர்களைக் கேட்டால் சொல்லவேண்டாம். அப்படியும் உங்களைக் கைது செய்யாவிட்டால் நேட்டால் மாகாணத்துக்குள் இருக்கும் 'நியூகாஸில்' என்னும் பட்டணத்தை நோக்கிச் செல்லுங்கள். நியூகாஸில் பட்டணத்தில் உள்ள நிலக்கரிச் சுரங்கங்களில் இந்தியத் தொழிலாளிகள் ஆயிரக்கணக்கானவர்கள் வேலை செய்கிறார்கள். அவர்கள் மூன்று பவுன் தலைவரியினால் பாதிக்கப்பட்டவர்கள்; பெரும்பாலோர் சென்னை மாகாணத்தைச் சேர்ந்தவர்கள், நீங்கள் நியூகாஸில் பட்டணத்தை அடைந்து அங்கேயுள்ள தொழிலாளிகளிடம் வேலை நிறுத்தம் செய்யும்படி கேட்டுக் கொள்ளுங்கள். அதற்குமேல் என்ன நடக்கிற தென்று பார்த்துக்கொண்டு நிலைமைக்குத் தக்கபடி யோசனை சொல்கிறேன் !" என்றார் காந்திஜி.
அதன்படியே டால்ஸ்டாய் பண்ணையைச் சேர்ந்த தமிழ்ப் பெண்மணிகள் நியூகாஸிலை நோக்கி யாத்திரை கிளம்பினார்கள்.
அதே சமயத்தில் காந்திஜியின் யோசனைப்படி போனிக்ஸ் ஆசிரமப் பெண்மணிகள் டிரான்ஸ்வாலை நோக்கிப் புறப்பட் டார்கள். அவர்கள் நேட்டால் எல்லையைத் தாண்டும் சமயத்தில் அதிகாரிகள் அவர்களிடம், "அநுமதிச் சீட்டு எங்கே?" என்று கேட்டார்கள்.
போனிக்ஸ் சகோதரிகள், "அநுமதிச் சீட்டு இல்லை" என் று சொன்னார்கள்.
"உங்கள் பெயர் என்ன? " என்று அதிகாரிகள் கேட்டார்கள். அதற்கும் பதில் சொல்ல அந்தச் சகோதரிகள் மறுத்தார்கள். அந்தப் பெண்மணிகள் காந்தி மகானைச் சேர்ந்த சத்தியாக்கிரஹிகள் என்று அதிகாரிகளுக்குத் தெரியாது. எனவே, அவர்கள் கைது செய்யப்பட்டார்கள், கோர்ட்டில் விசாரணையும் நடந்தது. தலைக்கு மூன்று மாதம் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. தண்டனை யடைந்தவர்களில் ஸ்ரீமதி கஸ்தூரிபாயும் ஒருவர். 1913 செப்டம்பர்மீ 23 இச்சம்பவம் நடந்தது.
ஆனால் டால்ஸ்டாய் ஆசிரமப் பெண்மணிகளுக்கு அவ்வளவு சுலபத்தில் அதிர்ஷ்டம் கிட்டவில்லை. அவர்கள் சத்தியாக்கிரஹிகள் என்பதை அதிகாரிகள் தெரிந்து கொண்டு கைது செய்யாமல் விட்டார்கள். எனவே அவர்கள் மகாத்மாவின் யோசனைப்படி நியூகாஸில் பட்டணத்துக்குச் சென்றார்கள். நிலக்கரிச் சுரங்கத்தில் வேலை செய்த இந்தியத் தொழிலாளிகளிடம் மூன்று பவுன் தலைவரி, கலியாணரத்துத் தீர்ப்பு, ஆசியாக்காரர் தடை முதலிய அநீதிகளைப் பற்றிச் சொல்லி வேலை நிறுத்தம் செய்யும்படி கேட்டுக் கொண்டார்கள். மேற்கூறிய அநீதிகளினால் ஏற்கெனவே உள்ளம் கொதித்துக்கொண்டிருந்த இந்தியத் தொழிலாளிகள் மேற்படி சகோதரிகளின் வார்த்தைகளினால் உணர்ச்சி வசப்பட்டு வேலை நிறுத்தம் செய்தார்கள். ஆயிரக்கணக்கான தொழிலாளிகள் வேலை நிறுத்தம் செய்தபடியினால் சுரங்கங்களில் வேலை அடியோடு நின்று விட்டது. இந்த விபரீதத்தைக் கண்டதும் அதிகாரிகள் விழித்துக் கொண்டார்கள். டால்ஸ்டாய் பண்ணைப் பெண்மணிகளைச் சும்மா விட்டது தவறு என்று உணர்ந்து அவர்களைக் கைது செய்தார்கள். அவர்களுக்கும் கோர்ட்டில் மூன்று மாதக் கடுங்காவல் தண் டனை விதிக்கப்பட்டது. 1913-ம் வருஷம் அக்டோபர் 21-ந் தேதி இது நடந்தது.
இவ்விதமாகப் பெண்மணிகள் சிறை புகுந்த சம்பவம் தென்னாப்பிரிக்காவிலிருந்த சகல இந்தியர்களின் உணர்ச்சியையும் எழுப்பி விட்டது. தாய் நாடாகிய இந்தியாவிலும் பெரும் பரபரப்பை உண்டாக்கியது. இதுவரையில் தென்னாப்பிரிக்கா விஷயமாகச் சிரத்தை காட்டாதவர்கள் எல்லாம் இப்போது சிரத்தை கொண்டார்கள். ஸர் பிரோஸிஷா மேத்தா 1901-ம் வருஷத்தில் காந்திஜியிடம் "நீர் தென்னாப்பிரிக்காவுக்குப் போக வேண்டாம்!" என்று புத்திமதி கூறினார். “இந்தியா சுதந்திரம் அடையாதவரையில் தென்னாப்பிரிக்கா இந்தியருக்கு நாம் என்ன உதவி செய்ய முடியும்?" என்று சொன்னார். இதுவரையில் தென்னாப்பிரிக்கா சத்தியாக்கிரஹத்தில் அவர் அநுதாபமே காட்டவில்லை. ஆனால் பெண்கள் சிறை புகுந்த செய்தி அவர் மனத்தைக் கலக்கிவிட்டது. பம்பாய் டவுன் ஹாலில் நடந்த பொதுக் கூட்டத்தில் அவர் பேசும் போது, "உத்தமிகளான இந்திய சகோதரிகள் கொலைக்காரர்களும் திருடர்களும் அடைக்கப்படும் சிறையில் கிடந்து வாடுகிறார்கள் என்பதை எண்ணினால் இரத்தம் கொதிக்கிறது!" என்று அலறினார்.
தண்டனை விதிக்கப்பட்ட எல்லாப் பெண்மணிகளும் மோட்ஸ்பர்க் சிறையில் வைக்கப்பட்டார்கள். அவர்கள் சிறையில் பட்ட கஷ்டங்களை விவரித்தால் கல்லும் உருகிவிடும். அவர்களுக்குக் கொடுத்த உணவு வாயில் வைக்க முடியாது. சிறைக் கைதிகளின் துணி வெளுக்கும் வேலை அவர்களுக்குக் கொடுக்கப்பட்டது. சிறை புகுந்த பெண்களில் அநேகர் வெளியில் வரும்போது எலும்புந் தோலுமாக வந்தார்கள்.
முதற் படையில் சேர்ந்த பெண்மணிகளைத் தவிர வேறு சிலரும் பிற்பாடு சேர்ந்தார்கள். இவர்களில் குமாரி வள்ளியம்மை பதினாறு பிராயத்து இளம் பெண். மூன்று மாதம் சிறையி லிருந்துவிட்டு வெளிவந்தபோது வள்ளியம்மை மிக மெலிந்து எலும்புக் கூடாகக் காட்சி தந்தாள். காந்தி மகாத்மா அந்த வீரத் தமிழ்ப் பெண்ணைப் பார்ப்பதற்காக வந்தார்.
"வள்ளியம்மா ! நீ சிறை சென்றது பற்றி வருத்தப்படும் கிறாயா?" என்று மகாத்மா கேட்டார்.
"வருத்தமா? மறுபடியும் என்னைக் கைது செய்தால் சிறைக்குப் போகத் தயார்!" என்றாள் வள்ளியம்மாள்.
"ஒருவேளை உன் உயிருக்கு ஆபத்து வரலாம் என்பதை யோசித்துப் பார்த்தாயா?" என்று காந்திஜி கேட்டார்.
"வந்தால் வரட்டும். தாய்நாட்டின் மானத்தைக் காப்பதற்காக உயிர்த்தியாகம் செய்வது பெரிய பாக்கியம் அல்லவா?” என்றாள் அந்தப் பதினாறு பிராயத்துப் பெண்.
இந்தச் சம்பாஷணை நடந்த சில நாளைக்கெல்லாம் வள்ளியம்மை இந்த மண்ணுலகை நீத்துச் சென்றாள். வள்ளியம்மையின் மகா தியாகத்தைப்பற்றியும் பொதுவாக இந்திய சகோதரிகளின் சிறைவாசத்தைப் பற்றியும் மகாத்மா காந்தி எழுதி யிருப்பதாவது:
"வள்ளியம்மையின் உடல் மறைந்துவிட்டது. ஆனால் வள்ளியம்மையின் பெயர் சிரஞ்சீவித்வம் பெற்றிருக்கிறது. வள்ளியம்மையின் ஞாபகம் இன்றைக்கும் அநேக இருதயங்களில் குடி கொண்டிருக்கிறது. இந்தியா தேசம் உள்ள அளவும் தென்னாப்பிரிக்கா சத்தியாக்கிரஹத்தின் சரித்திரம் மறக்கப்பட மாட்டாது. தென்னாப்பிரிக்கா சத்தியாக்கிரஹ சரித்திரம் உள்ள வரையில் வள்ளியம்மையின் புகழும் நிலை பெற்றிருக்கும்.
"தென்னாப்பிரிக்கா சத்தியாக்கிரஹத்தில் ஈடுபட்ட சகோதரிகளின் தியாகத்தை எவ்வளவு பாராட்டினாலும் அது மிகைப் படுத்துவ தாகாது. அந்தச் சகோதரிகளில் பலர் தாய் நாடாகிய இந்தியாவைப் பார்த்ததேயில்லை. அவர்களுக்கு இந்தியா என்பது ஒரு பெயர் தான். அவர்கள் பத்திரிகை படிப்பவர்களும் அல்ல. அவர்களுடைய தேச பக்தி நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டது. இந்தியாவின் கெளரவத்துக்குப் பங்கம் இழைக்கப்படுகிறது என்பதை மட்டும் அவர்கள் அறிந்திருந்தார்கள். அந்த கெளரவத்தை நிலை நாட்டுவதற்காக எத்தகைய தியாகத்தையும் செய்ய முன் வந்தார்கள். அவர்கள் சிறை சென்றது மகா பரிசுத்தமான தியாகமாகும். அத்தகைய தூய்மையான தியாகமே கடவுளுக்கு உகந்தது. எனவே, அப்படிப்பட்ட தியாகம் ஒருநாளும் வீண்போகாது. தென்னாப்பிரிக்கா சகோதரிகளின் தியாகம் சிறந்த பலன் அளித்தது என்பதில் சந்தேகமில்லை."
இவ்விதம் மகாத்மா காந்தி நம் தமிழ் நாட்டுச் சகோதரிகளின் தியாகத்தை வியந்து பாராட்டி எழுதியிருக்கிறார். அச் சகோதரிகளின் தியாகம் எந்த முறையில் பலன் அளித்தது என்பதை அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்.
-----------
63. தொழிலாளர் தியாகம்
டால்ஸ்டாய் பண்ணையிலிருந்து புறப்பட்டுவந்த பெண்மணிகள் நியூகாஸில் பட்டணத்தில் கைது செய்யப்பட்டார்கள் அல்லவா ? அந்தப் பட்டணத்தை அடுத்திருந்த சுரங்கங்களில் ஆயிரக்கணக்கான இந்தியத் தொழிலாளிகள் வேலை செய்து கொண்டிருந்தார்கள். மேற்கூறிய பெண்மணிகளின் தியாகம் இந்தியத் தொழிலாளரின் உணர்ச்சியைத் தூண்டி விடவே அவர்கள் வேலை நிறுத்தம் செய்துவிட்டுக் கூட்டம் கூட்டமாய் நியூகாஸில் பட்டணத்துக்குள் பிரவேசிக்கத் தொடங்கினார்கள்.
இதற்கிடையில் காந்தி மகாத்மாவும் நியூகாஸிலுக்கு வந்து சேர்ந்திருந்தார். மிஸ்டர் டி. லாஸரஸ் என்னும் தமிழ்க் கிறிஸ்துவரின் வீட்டில் அவர் தங்கினார். நியூகாலில் பட்டணத்தில் பணக்கார இந்திய வியாபாரிகள் சிலர் இருந்தனர். முன் தடவைகளில் மகாத்மா நியூகாஸில் வந்தபோது அந்த வியா பாரிகள் வீட்டில் தங்குவது வழக்கம். ஆனால் இந்தத் தடவை போராட்டம் நடந்துகொண்டிருந்தபடியால் வியாபாரிகள் பயப்பட்டார்கள். மிஸ்டர் லாஸரஸ் பணக்காரர் அல்ல, கொஞ்சம் நிலமும் அதன் மத்தியில் ஒரு சிறிய வீடும் அவருடைய உடைமைகள். ஒப்பந்தத் தொழிலாளியாக வந்த குடும்பத்தை அவர் சேர்ந்தவர்.
அவரும் அவருடைய குடும்பத்தாரும் மூன்று பவுன் தலைவரி கொடுத்து வந்தார்கள். ஆகையால், ஏழைத் தொழிலாளிகளின் கஷ்டங்களை மிஸ்டர் லாஸரஸ் நன்கு அறிந்திருந் தார். டால்ஸ்டாய் பண்ணையிலிருந்து வந்த ஸ்திரீ சத்தியாக் கிரஹிகளை அவர்தான் வரவேற்று உபசரித்துத் தமது வீட்டில் தங்குவதற்கு இடம் கொடுத்தவர். இப்போது காந்தி மகானு அவருடைய வீட்டிலேயே தங்கினார். இது காரணமாக லாஸரஸ் வீட்டுக்கு வருவோரும் போவோரும் பலர் ஆயினர். அவ்வளவு பேருக்கும் லாஸரஸ் தம்பதிகள் முகமலர்ச்சியுடன் உணவு அளித்து உபசரித்தார்கள்.
எனினும், தொழிலாளிகள் ஆயிரக்கணக்கில் வரத் தொடங் கிய பிறகு லாஸரஸின் சிறிய வீட்டில் எப்படி எல்லாருக்கும் இடம் இருக்கும் ?
* * *
சுரங்கங்களில் வேலை செய்த இந்தியத் தொழிலாளருக்குச் சொந்த வீடு கிடையாது. சுரங்கச் சொந்தக்காரர்கள் கட்டிக் கொடுத்திருந்த சிறிய குடிசைகளில் அவர்கள் வசித்து வந்தார்கள். அவர்கள் வசித்த வீதிகளில் விளக்குப் போட்டவர்களும் தண்ணீர்க் குழாய்கள் வைத்துத் தந்தவர்களும் சுரங்கச் சொந் தக்காரர்களே. தொழிலாளிகள் வேலை நிறுத்தம் செய்தவுடனே வீதிகளில் போட்டிருந்த விளக்குகள் அணைக்கப் பட்டன. குழாய்த் தண்ணீர் நிறுத்தப்பட்டது. குடிசைகளைக் காலி செய்யும்படி உத்தரவும் பிறந்தது. உடனே காலி செய்யாதவர்களுடைய சாமான்கள் தெருக்களில் வீசி எறியப் பட்டன. அப்படி எறிவதைத் தடுக்க முயன்றவர்கள் அடிக்கப் பட்டார்கள். ஆனால் தென்னாப்பிரிக்காவில் வசித்த இந்தியர்கள் அனைவரும் இதற்குள்ளே மகாத்மாவின் அஹிம்சைத் தத்துவத்தைப் பற்றித் தெரிந்துகொண்டிருந்தபடியால் தொழிலாளி யாரும் பலாத்காரத்தைக் கையாள வில்லை. அதிகாரிகளின் பலாத்காரத்தைப் பொறுமையுடன் சகித்துக் கொண்டிருந்தார்கள்.
அப்படிச் சகித்துக் கொண்டிருந்த ஸையது இப்ராஹிம் என்னும் பட்டாணியர் ஒருவர் மகாத்மாவிடம் வந்து தம் முதுகைக் காட்டினார். " என்னை எப்படி அடித்திருக்கிறார்கள், பாருங்கள் ! நான் பட்டாணியன். அடியைப் பொறுத்துக் கொண்டு சும்மாயிருப்பது எனக்கு வழக்கமில்லை. ஆயினும் உங்களுடைய வார்த்தைக்குக் கட்டுப்பட்டுச் சும்மாயிருக்கிறேன்!" என்று சொன்னார்,
"உங்களுடைய பொறுமையைப் பாராட்டுகிறேன். உண்மையான தைரியம் இதுதான். உங்களைப் போன்றவர்களின் தீரத்தினால் நிச்சயம் வெற்றியடைவோம் !" என்றார் மகாத்மா.
ஆனால் இந்தப் பட்டாணியருக்கு நேர்ந்தது மற்ற எல்லாத் தொழிலாளருக்கும் நேரும் பட்சத்தில் இயக்கம் எத்தனை நாள் நடக்கும் என்ற சந்தேகம் மகாத்மாவுக்கு உதித்தது. அவர்களுக்கு ஏதாவது ஒரு வழி சொல்லியாக வேண்டும். மகாத்மா கவலையுடன் யோசித்துக் கடைசியில் ஒரு முடிவுக்கு வந்தார். இந்தியத் தொழிலாளிகள் சுரங்க முதலாளிகள் வீடுகளைக் காலி செய் துவிட்டு, அநாவசியமான சாமான்களை யெல்லாம் தூர எறிந்துவிட்டு, அவசியமாக வேண்டிய துணிமணிகளையும் பாத்திரங்களையும் மட்டும் எடுத்துக் கொண்டு வந்துவிட வேண்டும் என்றார். இதற்குத் துணிச்சல் இல்லாதவர்கள் வேலைக்குத் திரும்பிப் போய்விடலாம் என்றும் கூறினார்.
ஆனால் ஒருவராவது திரும்பிப் போகவில்லை. தொழிலாளிகளும் அவர்களுடைய குடும்பத்தாருமாக ஆயிரக்கணக்கானவர்கள் காந்தி மகாத்மா காட்டிய வழியில் நடப்பதற்குத் தயாராக வந்துவிட்டார்கள்.
அவ்வளவு பேருக்கும் உணவும் தங்க இடமும் கொடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. இந்தச் சமயத்தில் இந்திய வியாபாரிகள் உதவி செய்வதற்குத் தாங்களாகவே முன் வந்தார்கள். மூட்டை மூட்டையாக அரிசியும் பருப்பும் சமையல் பாத்திரங்களும் மற்ற அவசியமான பண்டங்களும் சேகரித்துத் தந்தார்கள். பண வசதி இல்லாதவர்கள் தொண்டு செய்வதற்கு முன் வந்தார்கள். எனவே, வேலையையும் விட்டு, வீட்டையும் விட்டு வெளிவந்த தொழிலாளிகளுக்குச் சாப்பாடு போடுவது சாத்தியமாயிற்று.
நல்ல வேளையாக அப்போது மழை காலமோ, குளிர் காலமோ இல்லை யாதலால், திறந்த வெளியிலேயே தொழி லாளர் எல்லாரும் தங்கி யிருக்க முடிந்தது.
நாளுக்கு நாள் அத்தொழிலாளிகளின் கூட்டம் அதிகமாகிக் கொண்டு வந்தது. ஐயாயிரம் பேர் வரையில் சேர்ந்துவிட்டார்கள். அத்தனை பேரையும் எத்தனை நாளைக்கு வேலையில்லாமல் வைத்துக் கொண்டிருக்க முடியும் ? மேலும் அந்த ஏழைத் தொழிலாளிகள் கல்வியறிவு இல்லாதவர்கள் ; சுகாதார விதிகளை அறியாதவர்கள். தங்குகிற இடத்தைச் சுத்தமாக வைத்திருக்க அவர்களுக்குத் தெரியவில்லை. சுற்றுப் புறத்தில் எங்கே பார்த் தாலும் ஆபாசம் அதிகமாகிக் கொண்டு வந்தது தொற்று வியாதி தொடர்ந்து விட்டால் அபாயமாகப் போய்விடும்.
மேலும் அவ்வளவு பேருக்கும் மூன்று வேளை உணவு கொடுத்து எத்தனை நாளைக்கு வைத்துக் கொண்டிருக்க முடியும் ? எவ்வளவு காலம் திறந்த வெளியிலேயே அவர்கள் வசிக்க முடியும் ?
எனவே, காந்தி மகாத்மா கவலையுடன் சிந்தனை செய்து கடைசியில் ஒரு வழி கண்டுபிடித்தார். இந்தப் பெரிய தொழிலாளர் படையைக் கால் நடையாக டிரான்ஸ்வாலுக்கு அழைத்துச் செல்வது என்று தீர்மானித்தார்.
ஐயாயிரம் பேர் அடங்கிய சத்தியாக்கிரஹிகள் படை ஒரு மாகாணத்திலிருந்து இன்னொரு மாகாணம் செல்லும்போது சர்க்காருடைய நிலைமை என்னவா யிருக்கும்? அவ்வளவு பேரையும் சர்க்கார் கைது செய்வார்களா? கைது செய்து தான் தீரவேண்டும்; அல்லது ராஜி செய்து கொள்ள முன்வர வேண்டும்.
நியூகாஸில் நேட்டால், மாகாணத்தில் இருந்தது. அங்கிருந்து டிரான்ஸ்வால் மாகாண எல்லைக்கு 36 மைல். எல்லைப் புறத்தில் கைது செய்யாவிட்டால் அப்புறம் டால்ஸ்டாய் பண்ணை வரையில் நடத்தி அழைத்துப் போக மகாத்மா எண் ணியிருந்தார். அவ்வளவு தூரம் நடப்பதற்கு யாருக்காவது ஆட்சேபம் உண்டா என்று காந்திஜி இந்தியத் தொழிலாளரைக் கேட்டார். ஆட்சேபம் உள்ளவர்கள் திரும்பி வேலைக்குப் போய்விடலாம் என்றும் சொன்னார். ஒருவரும் திரும்பிப் போக முன் வரவில்லை. எல்லாரும் சத்தியாக்கிரஹ யாத்திரைக்குத் தயார் என்று சொன்னார்கள்.
* * *
யாத்திரைக்கு வேண்டிய ஆயத்தங்கள் செய்யப்பட்டு வந்த காலத்தில் டர்பனிலிருந்த சுரங்க முதலாளிகளிட மிருந்து மகாத்மாவுக்கு ஓர் அழைப்பு வந்தது. மகாத்மாவும் உடனே புறப்பட்டுச் சென்றார். முதலாளிகளின் தலைவர் மகாத்மாவைக் கடிந்து பேசினார். மூன்று பவுன் தலைவர் அரசியல் சம்பந்தமான பிரச்னை என்றும், தங்களுக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லையென்றும், ஆகையால் தொழிலாளிகளின் வேலை நிறுத்தம் சரியல்ல வென்றும், அவர்களை உடனே வேலைக்குத் திரும்பிப் போகும்படி செய்ய வேண்டும் என்றும் கூறினார்.
அரசாங்கத்தின் காரியத்துக்கு முதலாளிகளுக்கும் பொறுப்பு உண்டு என்றும், முதலாளிகளுக்கு வேலை செய்ய ஆட்கள் வேண்டி யிருப்பதினாலேயே ஒப்பந்தத் தொழிலாளி முறை ஏற்பட்ட தென் றும், ஆகையால் மூன்று பவுன் தலைவரியை எடுக்கும்படி முதலாளிகள் சர்க்காரை வற்புறுத்த வேண்டுமென்றும் காந்திஜி கூறினார். இந்த விவாதத்தினால் உடன்பாடு ஒன்றும் ஏற்படவில்லை. எனினும் பலன் இல்லாமற் போகவில்லை, சுரங்க முதலாளிகள் சர்க்காரோடு கடிதப் போக்குவரவு தொடங்கினார்கள்.
காந்திஜி நியூகாஸில் நகருக்குத் திரும்பி வந்ததும் படை கிளம்புவதற்கு வேண்டிய ஏற்பாடுகள் முடிவடைந்தன.
புறப்படுவதற்கு முன்னால், பிரயாணத்தின்போது அனுசரிக்க வேண்டிய விதிமுறைகளை இந்தியத் தொழிலாளிகளுக்கு மகாத்மா நன்கு எடுத்துக் கூறினார். வழியில் தலைக்கு ஒன்றரை பராத்தல் ரொட்டியும் ஒரு அவுன்ஸ் சர்க்கரையுந்தான் கொடுக் கப்படும் ; அத்துடன் திருப்தி அடையவேண்டும். அவசியமான துணிகளைத் தவிர அதிகமாகக் கொண்டு வரக் கூடாது. ஒருவர் இன்னொருவருடைய சாமான்களைத் தொடக்கூடாது. வழியில் ஐரோப்பியர்கள் செய்யும் தொந்தரவுகளையும் பொறுமையுடன் சகித்துக்கொள்ள வேண்டும். அதிகாரிகள் கைது செய்தால் முக மலர்ச்சியுடன் செல்ல வேண்டும், காந்திஜி மட்டும் கைது செய்யப்பட்டால் மற்றவர்கள் நின்றுவிடாமலும் கலைந்து விடாமலும் யாத்திரையைத் தொடர்ந்து டால்ஸ்டாய் பண்ணை வரையிலும் போய்த்தான் நிற்கவேண்டும். டால்ஸ்டாய் பண்ணையிலும் கைது செய்யப் படாவிட்டால், அங்கே விவசாய வேலை செய்து ஜீவனம் தேடிக்கொள்ள வேண்டும்.
இந்த நிபந்தனைகளை யெல்லாம் அத்தனை தொழிலாளிகளும் அறிந்துகொண்டு அவற்றின்படி நடக்க ஒப்புக்கொண்டார் கள். இதன்பேரில், 1913-ம் வருஷம் அக்டோபர் மீ 28 மகாத்மாவின் தலைமையில் ஆண்களும் பெண்களும் குழந்தைகளுமாகச் சுமார் ஐயாயிரம் பேருக்குமேல் அடங்கிய சத்தியாக்கிரஹப் படையின் யாத்திரை தொடங்கியது.
டிரான்ஸ்வால் எல்லைக்குச் சமீபத்திலிருந்த சார்லஸ்டவுன் என்னும் ஊர் வரையில் எல்லாரும் பத்திரமாகப் போய்ச் சேர்ந்தார்கள். அந்தப் பட்டணத்தில் சில நாள் தங்குவது என்று மகாத்மா உத்தேசித்திருந்தார். ஏனெனில் அங்கிருந்து சர்க்காருக்கு ஒரு கடிதம் எழுதிப் பதில் வருகிறதா என்று பார்க்க விரும்பினார். சார்லஸ்டவுன் மிகவும் சிறிய ஊர். அங்கே குடியேறியிருந்த இந்திய வியாபாரிகள் சத்தியாக்கிர ஹிகளுக்கு வேண் டிய அரிசியும் பருப்பும் கொடுத்து உதவ முன் வந்தார் கள். திறந்த வெளியிலேயே எல்லாரும் தங்க வேண்டி யிருந்தது. சமையல் செய்தல், பரிமாறுதல், தங்கும் இடத்தைச் சுத்தமாக வைத்திருத்தல் ஆகிய காரியங்களை நடத்துவதில் பெரும் சிரமம் ஏற்பட்டது. காந்திஜியே முன்னின்று இந்தக் காரியங்களைச் செய்தபடியினால் தான் சமாளிக்க முடிந்தது. மற்றவர்களை வேலை செய்யும்படி ஏவுவதுடன் மகாத்மா திருப்தி யடையவில்லை. அவரும் அவருடைய பிரதம சகாக்களும் குப்பையைப் பெருக்கித் தள்ளித் தங்குமிடத்தைச் சுத்தமாக்குவதில் முதன்மையாக நின்றார்கள்.
சமையல் விஷயத்திலும் பரிமாறும் விஷயத்திலும் அடிக்கடி சண்டை சச்சரவு நேர்வதா யிருந்தது. காந்திஜியே பரிமாறும் வேலையின் முழுப் பொறுப்பையும் ஒப்புக்கொண்டார். அதற்குப் பிறகு சமையல் 'நன்றாயில்லை' என்றோ, 'சாப்பாடு போதவில்லை' என்றோ புகார் செய்யத் தயங்கினார்கள். யாராவ து புகார் செய்தாலும் காந்திஜியின் சாந்தமான பதிலைக் கேட்டு அடங்கினார்கள்.
இதற்கிடையில் தென்னாப்பிரிக்காவின் மத்திய சர்க்காருக்கு மகாத்மா காந்தி கடிதம் எழுதினார். "ஐயாயிரத்துக்கு மேற்பட்ட தொழிலாளிகளுடன் டிரான்ஸ்வால் எல்லைக்கருகில் வந்திருக்கிறேன். டிரான்ஸ்வாலில் நிலையாகத் தங்கும் உத்தேசம் இல்லை. மூன்று பவுன் தலைவரியைக் கண்டிப்பதற்கு அறிகுறியாகவே மாகாணத் தடைச் சட்டத்தை மீறி டிரான்ஸ்வாலுக்குள் புகப்போகிறோம். எல்லைப்புறத்திலேயே எல்லாரையும் சர்க்கார் கைது செய்ய முன் வந்தால் அதற்குத் தயாராயிருக்கிறோம். திருட்டுத்தனமாகச் சட்டத்தை மீறும் எண்ணம் கிடையாது. பகிரங்கமாகவே மீறப்போகிறோம். மூன்று பவுன் தலைவரியை ரத்து செய்ய சர்க்கார் ஒப்புக்கொண்டால் தொழிலாளிகள் உடனே திரும்பிச்சென்று பழையபடி சுரங்க வேலையில் ஈடுபடுவார்கள்."- இதுதான் மகாத்மா காந்தி எழுதிய கடிதத்தின் சாராம்சம்.- கடிதத்தை எழுதிவிட்டு மகாத்மா சில நாள் பதிலுக்காகக் காத்திருந்தார். பதில் ஒன்றும் வரவில்லை. தந்தி கொடுத்திருந்தார், அதற்கும் பதில் இல்லை. மகாத்மா மேலும் ஒரு முயற்சி செய்ய எண்ணி, பிரிடோரியாவில் இருந்த தளபதி ஸ்மட்ஸின் காரியதரிசியை டெலிபோனில் கூப்பிட்டுப் பேசினார். கடிதத்தில் எழுதிய விஷயத்தை ஞாபகப்படுத்திப் பதில் வேண்டும் என்று கேட்டார். கடைசியாக, டெலிபோனில் பதில் வந்தது. "தளபதி ஸ்மட்ஸ் உம்முடன் எந்தவித சம்பந்தமும் வைத்துக்கொள்ள விரும்பவில்லை. உம்முடைய இஷ்டம்போல் நீர் செய்யலாம்" என்பதுதான் பதில்.
இதற்கு மேலே உத்தேசித்த காரியத்தை நடத்துவதைத் தவிர வேறு வழியில்லை. எனவே 1913-ம் வருஷம் நவம்பர் மாதம் 63 அதிகாலையில் கடவுளுக்குப் பிரார்த்தனை செலுத்தி விட்டு மகாத்மா சத்தியாக்கிரஹப் படையுடன் சட்டத்தை மீறி மாகாணத்தின் எல்லையைக் கடப்பதற்குப் புறப்பட்டார்.
------------
64. அக்னி பரீட்சை
சார்லஸ்டவுன் பட்டணத்திலிருந்து ஒரு மைல் சென்றதும் ஒரு சிறு மதகு இருந்தது. அதைத் தாண்டியதும் டிரான்ஸ்வால் மாகாணந்தான். அந்த மாகாணத்தில் முதல் பட்டணத்தின் பெயர் வோக்ஸ்ரஸ்ட் என்பது. இந்தப் பட்டணத்திலிருந்த ஐரோப்பியர்கள் இரண்டு நாளைக்கு முன்பு ஒரு பொதுக்கூட்டம் கூட்டியிருந்தார்கள். காந்திஜியின் நண்பரான மிஸ்டர் காலன்பாக் கூட்டத்துக்குப் போயிருந்தார். கூட்டத்தில் பேசிய ஐரோப்பியர்கள் இந்தியர்களின் சத்தியாக்கிரஹ இயக்கத்தை மிகவும் கண்டித்துத் தாக்கிப் பேசினார்கள். டிரான்ஸ்வாலுக்குள் இந்தியர்கள் நுழைந்தால் அவர்களைச் சுட்டுத் தள்ளிவிடுவதாகப் பயமுறுத்தினார்கள். அப்படிப் பேசியவர்களை எதிர்த்து மிஸ்டர் காலன்பாக் பேசினார். இந்தியர்களின் கட்சி நியாயமான து என்று வற்புறுத்தினார். இதற்காக மிஸ்டர் காலன்பாக் மீது எல்லாரும் எரிந்து விழுந்தார்கள். அவர்களில் ஒருவர் தம்முடன் துவந்த யுத்தத்துக்கு வரும்படி அறை கூவினார். மிஸ்டர் காலன்பாக் நல்ல தீரர். அவர் மேற்படி மிரட்டலுக்குப் பயப்படவில்லை.
இந்தக் கூட்டத்தைப்பற்றிக் காந்திஜி தெரிந்து கொண்டிருந்த படியால் டிரான்ஸ்வாலுக்குள் பிரவேசித்ததும் ஐரோப்பியர்களால் தொல்லை ஏற்படக்கூடும் என்று எதிர்பார்த்து முன் ஜாக்கிரதையுடன் இருந்தார். எல்லைமதகுக்கு அப்பால் குதிரைப் படைப் போலீஸார் நின்றுகொண்டிருப்பதைப் பார்த்தார். இந்தியர்களிடம் தாம் சமிக்ஞை செய்ததும் அமைதியாக மதகைக் கடந்து வரும்படி சொல்லிவிட்டுத் தாம் மட்டும் முதலில் சென்று போலீஸாரிடம் பேசிக்கொண்டிருந்தார். பேச்சு முடிவதற்குள்ளேயே இந்தியர்கள் கட்டுப்பாட்டைக் காற்றிலே பறக்கவிட்டுத் தடதடவென்று பாலத்தைத் தாண்டி வரத் தொடங்கினார்கள். போலீஸார் விரைந்து சென்று அவர்களைச் சூழ்ந்தார்கள். ஒரு நிமிஷம் என்ன விபரீதம் ஏற்படுமோ என்ற கவலை ஏற்பட்டது. ஆனால் காந்திஜி இந்தியர்களின் முன்னிலையில் வந்து கையமர்த்திச் சில வார்த்தைகள் சொன்னதும் அமைதி ஏற்பட்டது. பின்னர் மகாத்மாவின் கட்டளைப்படி இந்தியர்கள் நாலு நாலு பேராக வரிசைப் படுத் திக்கொண்டு நடந்தார்கள். சத்தியாக்கிரஹப் படை எல்லையைத் தாண்டியது ; சட்டமறுப்பு யாத்திரை ஆரம்பமாகியது.
போலீஸார் இந்தியர்களைக் கைது செய்யவில்லை ; தடை செய்யவும் இல்லை. இந்தியர்கள் அமைதியாகவும் ஒழுங்காகவும் யாத்திரை செய்ததைப் பார்த்த வோக்ஸ்ரஸ்ட் பட்டணத்து ஐரோப்பியர்களும் ஒன்றும் செய்யவில்லை. இவ்விதம் எட்டு மைல் பிரயாணம் செய்து பாம்போர்டு என்னும் இடத்தில் முதல் நாள் இரவு இந்தியர்கள் தங்கினார்கள். எல்லாரும் தங்களுடன் கொண்டுவந்திருந்த சொற்ப உணவை உட்கொண்டார்கள். ராமநாம பஜனை செய்தார்கள். இரவு முதல் ஜாமம் ஆனதும் எல்லாரும் படுத்துத் தூங்கலானார்கள்.
மகாத்மா ஜியும் முதல் நாள் யாத்திரை அசம்பாவிதம் எதுவும் இல்லாமல் நடந்து முடிந்தது குறித்து ஆண்டவனுக்கு நன்றி செலுத்திவிட்டுப் படுத்துத் தூங்குவதற்கு ஆயத்தம் செய்யலானார். அச்சமயம் கையில் லாந்தருடன் ஐரோப்பியர் ஒருவர் வருவதைக் கண்டார். அதன் காரணம் மகாத்மாஜிக் குத் தெரிந்துவிட்டது. வந்தவர் போலீஸ் அதிகாரிதான்.
காந்திஜியின் அருகில் அவர் வந்து, "உங்களைக் கைது செய்ய வாரண்டு கொண்டு வந்திருக்கிறேன். என்னுடன் வருக !" என்று சொன்னார்.
உடனே மகாத்மா தம் அருகில் படுத்துத் தூங்கிய ஸ்ரீ பி. கே. நாயுடுவை எழுப்பி, விஷயத்தைக் கூறினார். மற்ற யாருக்கும் இதைப் பற்றி இப்போது சொல்லவேண்டாம் என்றும், அதிகாலையில் சூரியோதயத்துக்கு முன்னால் எழுந்து யாத்திரை தொடங்கவேண்டும் என்றும், மத்தியானம் சாப்பிடுவதற்காகத் தங்கும் இடத்தில் தாம் கைதியானதுபற்றி எல்லாருக்கும் சொன்னால் போதும் என்றும் கூறினார். வழியில் இந்தியர்கள் எல்லோரையும் கைது செய்தால் சிறைக்குப் போகவேண்டும் என்றும், இல்லாவிட்டால், யாத்திரையை உத்தேசத் திட்டத்தின்படி டால்ஸ்டாய் பண்ணையில் போய்த்தான் நிறுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார். காந்திஜியின் கட்டளையை நிறைவேற்றிவைப்பதாக ஸ்ரீ. பி. கே. நாயுடு ஒப்புக்கொண்டார்.
மகாத்மாவைப் போலீஸ் அதிகாரி வோக்ஸ்ரஸ்ட் பட்டணத்துக்கு அழைத்துச் சென்றார். அங்கே மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டில் அவரைக் கொண்டுபோய் நிறுத்தினார். சாட்சியம் தயாராக வில்லை யாதலால் வாய்தா கொடுக்க வேண்டும் என்று சர்க்கார் வக்கீல் கேட்டார். மாஜிஸ்ட்ரேட் வாய்தா கொடுத்தார். மகாத்மாஜி தாம் ஆயிரக் கணக்கான இந்தியர்களுக்குப் பொறுப்பு வகிப்பதால் ஜாமீனில் விடவேண்டும் என்று கேட் டார். சர்க்கார் வக்கீல் அதை எதிர்த்தார். ஆனால் மாஜிஸ்ட் ரேட் ஜாமீனில் விட உத்தர விட்டார். மிஸ்டர் காலன் பாக் ஜாமீன் கொடுத்து மகாத்மாவை விடுதலை செய்தார். உடனே காந்திஜி புறப்பட்டு அன்று சாயங்காலத்துக்குள் சத்தியாக் கிரஹ யாத்திரீகர்களை அடைந்தார்.
இதே மாதிரி ஸ்டாண்டர்டன் என்னுமிடத்தில் மறுபடியும் காந்திஜியைக் கைது செய்துகொண்டு போனார்கள். இங்கே யும் மாஜிஸ்ட்ரேட் காந்திஜியை ஜாமீனில் விட்டு விட்டார். சத்தியாக்கிரஹ யாத்திரீகர்கள் மூன்று மைல் தூரம் போவதற்குள் மகாத்மா அவர்களோடு சேர்ந்துவிட்டார். - இதனால் டால்ஸ்டாய் பண்ணை வரையில் யாத்திரை தடைப் படாமல் நடந்து பூர்த்தி யடைந்துவிடும் என்ற நம்பிக்கை மகாத்மாவுக்கு ஏற்பட்டது. ஆனால் காந்தி மகாத்மாவின் அந்த நம்பிக்கை நிறைவேறவில்லை.
யாத்திரையைப் பூர்த்தி செய்யும்படி விட்டு விட்டால் தங்களுடைய மதிப்பு ரொம்பவும் குறைந்து விடும் என்று அரசாங்கத்தார் கருதினார்கள். இரண்டு தடவை காந்திஜியைக் கைது செய்ததினால் மற்ற இந்தியர்கள் பீதி அடைந்து சிதறிப்போய் விடவில்லை என்பதையும் கண்டுகொண்டார்கள். இந்தியர்கள் எங்கேயாவது பலாத்காரத்தைக் கையாண்டிருந்தால் அதை ஒரு வியாஜமாக வைத்துக்கொண்டு கடும் நடவடிக்கை எடுத்திருக்கலாம். இந்தியர்கள் அமைதியாக யாத்திரை செய்தது சர்க்காருக்குப் பெருந்தொல்லை அளித்தது. ஜெனரல் ஸ்மட்ஸ் இதை வெளிப்படையாகவே சொன்னார்.
கடைசியாக ஏதேனும் கடுமையான நடவடிக்கை எடுத்து யாத்திரையைத் தடுத்தே தீரவேண்டும் என்று தளபதி ஸ்மட்ஸ் முடிவு செய்தார்.
மகாத்மா காந்தி அந்த யாத்திரையின் போது மூன்றாவது தடவையாகக் கைது செய்யப்பட்டார். முதலில் ஹெயிடல் பர்க் என்னும் இடத்துக்கு அவரைக் கொண்டு போனார்கள். அந்த ஊர் மாஜிஸ்ட்ரேட்டிடமும் காந்திஜி முன் தடவைகளில் கேட்டதுபோல் ஜாமீனில் விடும்படி கேட்டார். ஆனால் இந்தத் தடவை அவருடைய கோரிக்கை மறுக்கப் பட்டது. அவரை ஜாமீனில் விடத் தமக்கு அதிகாரம் இல்லை என்றும் சர்க்கார் அநுமதி வேண்டும் என்றும் சொல்லிவிட்டார். நேட்டாலில் உள்ள டண்டி என்னுமிடத்திலிருந்து இந்த மூன்றா வது வாரண்டு வந்திருந்தது. ஒப்பந்தத் தொழிலாளிகளை ஒப்பந்தத்தை மீறும்படி தூண்டியதாகக் குற்றம் சாட்டப்பட் டிருந்தது. எனவே, காந்திஜியை அன்றைக்கே ரயிலில் ஏற்றி டண்டிக்குக் கொண்டுபோனார்கள்.
விசாரணை சட்பட்டென்று முடிந்தது. மகாத்மாவுக்கு ஒன்பது மாதம் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. பிறகு இன்னொரு வழக்கு விசாரணைக்காக வோக்ஸ்ரஸ்ட் கோர்ட்டுக்கு மகாத்மாவை அழைத்துச் சென்றார்கள். இங்கே மகாத்மாவுடன் மிஸ்டர் காலன்டாக், மிஸ்டர் போலக் ஆகியவர்களும் விசாரிக்கப் பட்டார்கள். மூவருக்கும் தலைக்கு மூன்று மாதம் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. சில காலம் வோக்ஸ்ரஸ்ட் சிறைச்சாலையில் மூன்று பேரும் சந்தோஷமா யிருந்தார்கள். இன்னும் சில சத்தியாக்கிரஹத் தலைவர்களும் இதே சிறைக்கு வந்துசேர்ந்தார்கள். இப்படிக் காந்திஜியையும் மற்றவர்களையும் அதிக காலம் ஒரே சிறையில் விட்டு வைக்க சர்க்கார் விரும்பவில்லை. காந்தி மகானைத் தனிமைப் படுத்தி புளோம்பாண்டீன் என்னும் இடத்திலிருந்த சிறைக்குக் கொண்டுபோனார்கள். இங்கே காந்திஜியைத் தவிர வேறு இந்தியக் கைதி யாரும் இல்லை. மற்றவர்கள் எல்லாரும் ஐரோப்பியர்களும் நீக்ரோவர்களுந்தான். இந்தக் கடும் சிறையில் காந்திஜி தனி அறையில் பூட்டி வைக்கப்பட்டார். இன்னும் எத்தனையோ அசெளகரியங்கள் இந்தச் சிறை வாசத்தில் அவருக்கு நேரிட்டன. அவற்றை யெல்லாம் மகாத்மா சிறிதும் பொருட்படுத்தவில்லை. “சத்தியமே ஜயம்" என்ற பூரண நம்பிக்கையுடன் தனிச் சிறையில் காலங்கழித்தார்.
காந்திஜியைக் கைது செய்ததற்கு மறுநாள் பெரும் போலீஸ் படையினர் வந்து இந்திய சத்தியாக்கிரஹ யாத்திரீகர்களைச் சூழ்ந்து கொண்டனர். எல்லாரையும் கைது செய்திருப்பதாகச் சொல்லி ரயிலில் ஏற்றி நேட்டாலுக்குக் கொண்டு போனார்கள். வழிப் பிரயாணத்தில் அவர்களுக்கு உணவு அளிக்கக்கூட ஏற்பாடு செய்யவில்லை.
அவ்வளவு இந்தியர்களையும் சிறையில் அடைத்து உணவு அளிப்பதென்பது கஷ்டமான காரியம் அல்லவா ? இதற்காக ஒரு கேவலமான யுக்தியைக் கையாண்டார்கள். அவ்வளவு பேரையும் நியூகாஸில் பட்டணத்துக்குக் கொண்டுபோனார்கள். அங்கே நிலக்கரிச் சுரங்கங்களைச் சுற்றி இரும்பு வேலி எடுத்து, "இது தான் சிறைச்சாலை!" என்று சொன்னார்கள். கடுங்காவல் கைதிகள் வேலை செய்யவேண்டும் அல்லவா ? "முன்னே ஒப்பந்தத் தொழிலாளிகளாகச் செய்து கொண்டிருந்த அதே வேலையைக் கைதிகளாகச் செய்யுங்கள்!" என்றார்கள்.
இது அநியாயம் என்று கருதிய இந்தியத் தொழிலாளிகள் கண்டிப்பாக வேலை செய்ய மறுத்து விட்டார்கள். இதன் பலனாக அவர்கள் சவுக்கடி முதலிய பல கொடுமைகளுக்கு உள்ளாக நேர்ந்தது. எல்லாக் கொடுமைகளையும் தொழிலாளிகள் பொறுமையுடன் சகித்துக் கொண்டிருந்தார்கள். ஆனாலும் சுரங்கங்களில் வேலை செய்ய அவர்கள் இணங்கவில்லை.
இந்த அநீதிகளையும் கொடுமைகளையும் பற்றி ஸ்ரீ கோகலேக்குத் தந்திச் செய்திகள் போய்க்கொண்டிருந்தன. ஸ்ரீ கோகலேயின் உடல்நலம் அப்போது குன்றி யிருந்தும் அதைப் பொருட்படுத்தாமல் அவர் பெருங்கிளர்ச்சி நடத்தினார். இதனால் இந்தியா தேசமெங்கும் கொதிப்பு ஏற்பட்டது. அச்சமயம் இந்தியாவில் வைஸ்ராய் பதவி வகித்த லார்ட் ஹார்டிஞ்சு நல்ல மனிதர். தென்னாப்பிரிக்காவில் இந்தியர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளையும் கொடுமைகளையும் பற்றி லார்ட் ஹார்டிஞ்சு பகிரங்கமாகக் கண்டித்துப் பேசினார். இதைக் குறித்து இங்கிலாந்தில் அவர் கண்டனத்துக்கு உள்ளானார். அதை அவர் பொருட் படுத்தாமல் மேலும் உறுதியாகப் பேசினார். தென்னாப்பிரிக்கா சர்க்காரைக் கண்டித்ததோடல்லாமல், இந்தியர்களின் சத்தியாக்கிரஹ இயக்கத்தைப் பலமாக ஆதரித்துப் பிரசங்கமும் செய்தார். இதனால் விளைந்த பலன் என்ன வென்பதை அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்.
நியூகாஸில் சுரங்கங்களில் வேலை செய்த இந்தியத் தொழிலாளிகள் மொத்தம் ஆறாயிரம் பேர் இருக்கலாம். ஆனால் தென்னாப்பிரிக்கா முழுவதிலும் அறுபதினாயிரம் இந்தியத் தொழிலாளிகள் வேலை செய்து வந்தனர். அவர்களில் பெரும்பாலோர் கடற்கரை ஓரத்தில் வேலை செய்து வந்தவர்கள். நியூகாஸில் தொழிலாளிகள் வேலை நிறுத்தம் செய்ததிலிருந்து நடந்த சம்பவங்கள் எல்லா இடங்களுக்கும் பரவின. இதன் காரணமாக ஆங்காங்கே ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் திடீர் திடீரென்று வேலை நிறுத்தம் செய்தார்கள். அப்போது தென்னாப் பிரிக்கா சர்க்காரின் அடக்குமுறை மிகவும் கொடுமையாயிற்று. குதிரைப் போலீஸார் தொழிலாளிகளைத் துரத்தித் துரத்தி அவர்கள் வேலை செய்யும் இடத்தில் கொண்டு வந்து சேர்த்தார்கள். பலவந்தப்படுத்தி வேலை வாங்கினார்கள். எங்கேயாவது ஒரு சிறு கலவரம் ஏற்பட்டாலும் துப்பாக்கிப் பிரயோகம் சர்வ சாதாரணமாக நடந்தது. பலர் இறந்தார்கள்; பலர் காய மடைந்தார்கள். மேலும் மேலும் அடக்கு முறை வலுத்தது. விவரிக்க முடியாத கொடுமைகளைச் சர்க்கார் கையாண்டனர். அவ்வளவையும் இந்தியத் தொழிலாளிகள் தாங்கிக்கொண்டு உறுதியைக் கைவிடா திருந்தார்கள். இத்தகைய மிகக் கடுமையான அக்கினி பரீட்சையில் இந்தியர்கள் தேறிய பிறகு போராட்டத்தின் இறுதிக் காலமும் நெருங்கி வந்தது.
----------------
65. சத்தியமே ஜயம்
ஸ்ரீமதி கஸ்தூரிபாய் முதலிய ஸ்திரீ சத்தியாக்கிரஹிகள் 1913-ம் வருஷம் செப்டம்பர் மாதம் 23-ந் தேதி சிறைத் தண்டனை விதிக்கப் பட்டார்கள். அதிலிருந்து மூன்று மாத காலம் தென்னாப்பிரிக்கா சத்தியாக்கிரஹ இயக்கம் தீவிரமாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான தொழிலாளிகள் சட்ட மறுப்புச் செய்து அளவற்ற கஷ்ட நஷ்டங்களை அநுபவித்தார்கள். இயக்கத்தின் தலைவர்கள் அனைவரும் சிறை புகுந்தார்கள். ஆயினும் இயக்கத்தின் வேகம் குன்றவில்லை ; கொந்தளிப்பு அதிகமாகிக் கொண்டிருந்தது. இந்தியாவில் ஸ்ரீ கோகலேயின் முயற்சியினால் பெருங் கிளர்ச்சி ஏற்பட்டிருந்தது: இந்தியாவின் பிரிட்டிஷ் வைஸ்ராய் ஹார்டிஞ்ச் தென்னாப் பிரிக்கா சர்க்காரின் செயலைப் பகிரங்கமாகக் கண்டனம் செய்தார். உலகம் தென்னாப்பிரிக்காவில் நடந்த அதிசயமான போராட்டத்தைக் கவனிக்க ஆரம்பித்தது.
"சத்தியமே ஜயம்" என்னும் மகா வாக்கியத்தின் உண்மை உலகமறிய ஸ்தாபிக்கப்படும் காலம் வந்தது. தென்னாப்பிரிக்கா மந்திரிகளின் பிடிவாதம் தளர்ந்தது. தளபதி ஸ்மட்ஸின் மனம் இளகியது. இந்தியர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை நிவர்த்தி செய்தே ஆகவேண்டும் என்ற முடிவுக்கு வந்தார். தம்முடைய அரசாங்கத்தின் மதிப்புக் குறையாமல் அதைச் செய்வதற்கு வழி என்ன என்று தேடினார்.
இந்த மாதிரியான சந்தர்ப்பங்களில், அதாவது சர்க்கார் பொதுஜனக் கிளர்ச்சிக்கு விட்டுக் கொடுக்க வேண்டிய நிர்ப் பந்தம் ஏற்படும் போதெல்லாம், ஒரு விசாரணைக் கமிஷனை நியமிப்பது அரசியல் துறையில் அனுசரிக்கப்படும் உபாயம் மாகும். அதே உபாயத்தைத் தளபதி ஸ்மட்ஸ் இப்போது கடைப்பிடித்தார்.
இந்தியர்களுடைய குறைகளைப் பற்றி விசாரித்துத் தக்க சிபார்சுகளைச் செய்வதற்காக மூன்று பேர் அடங்கிய ஒரு கமிஷனை நியமனம் செய்தார்.
இந்தக் கமிஷனின் முதல் கூட்டத்தில், "விசாரணை சரியான முறையில் நடைபெறுவதற்காகக் காந்தி, காலன்பாக், போலக் இந்த மூவரையும் நிபந்தனை யின்றி விடுதலை செய்ய வேண்டும்" என்று சிபார்சு செய்யப்பட்டது. அதன்படியே 1913-ம் வருஷம் டிசம்பர் மாதம் 18 காந்திஜியும் அவருடைய துணைவர்கள் இருவரும் விடுதலை-யானார்கள்.
காந்திஜி சிறையிலிருந்து வெளி வந்ததும் கமிஷன் நியமனத்தைப் பற்றித் தெரிந்து கொண்டார். நண்பர்களுடன் கலந்து ஆலோசித்தார். இரண்டு நிபந்தனைகள் பூர்த்தியானால் தான் மேற்படி கமிஷனுடன் இந்தியர்கள் ஒத்துழைக்க முடியும் என்று தீர்மானித்தார். அதாவது, (1) கமிஷனில் இந்தியர்களின் சார்பாக ஒரு அங்கத்தினராவது சேர்க்கப்பட வேண்டும் ; (2) சிறையில் உள்ள சத்தியாக்கிரஹிகள் எல்லாரையும் விடுதலை செய்ய வேண்டும். இந்த இரண்டு நிபந்தனைகளையும் குறிப்பிட்டுத் தளபதி ஸ்மட்ஸுக்குக் கடிதம் எழுதினார்.
இதற்கிடையில், தென்னாப்பிரிக்காவில் நடந்த சத்தியாக் கிரஹ இயக்கத்தைக் கவனிப்பதற்காகவும் உதவி செய்வதற்காகவும் இரண்டு உத்தம புருஷர்கள் இந்தியாவிலிருந்து வந் திருந்தார்கள். ஒருவர் தீனபந்து ஆண்ட்ரூஸ் ; இன்னொருவர் அவருடைய ஆத்ம சிநேகிதர் பியர்ஸன். இருவரும் ஐரோப்பியர்கள் தான் ; ஆனால் இந்தியாவிடத்திலும் இந்தியர்களிடத்தி லும் அன்பு கொண்டவர்கள்.
தென்னாப்பிரிக்காவில் நடந்த இயக்கத்தைப் பற்றி காந்திஜியின் ஐரோப்பிய நண்பர் மிஸ்டர் வெஸ்ட் அவ்வப்போது ஸ்ரீ கோகலேக்குத் தகவல் தெரிவித்து வந்தார். இந்தத் தொண்டு செய்வதற்காகவே காந்திஜியின் விருப்பத்தின் படி அவர் போராட்டத்தில் சேராமலிருந்தார். ஆனால் தென்னாப்பிரிக்கா சர்க்கார் அவரைச் சும்மா விட்டிருக்க வில்லை. கைது செய்து சிறைக்கு அனுப்பிவிட்டார்கள். இந்தச் செய்தி அறிந்ததும் ஸ்ரீ கோகலே மேற்கூறிய இருவரையும் தென்னாப்பிரிக்காவுக்கு அனுப்பிவைத்தார். அவர்கள் வந்து சேர்ந்தபோது காந்திஜி சிறையிலிருந்து விடுதலை அடைந்து விட்டபடியால் டர்பனுக்குச் சென்று அவர்களை நேரில் வரவேற்றார்.
இந்த நண்பர்கள் வந்து சேர்ந்த இரண்டு நாளைக் கெல்லாம் தளபதி ஸ்மட்ஸின் பதில் வந்தது. கமிஷனில் புதிய அங்கத்தினர் யாரையும் சேர்த்துக்கொள்ள முடியாது என்றும், சர்க் கார் தங்களுடைய கொள்கையின்படி விசாரணைக் கமிஷன் நியமித்திருக்-கிறார்களே யல்லாமல் எந்தக் கட்சியையும் திருப்தி செய்வதற்காக நியமிக்கவில்லை யென்றும் பதிலில் கண்டிருந்தது.
எனவே 1914ல் ஜனவரி 15 மறுபடியும் டர்பனிலிருந்து காந்திஜியும் அவருடைய சகாக்களும் சட்ட மறுப்பு யாத்திரை தொடங்க வேண்டும் என்று தீர்மானமாயிற்று.
இவ்விதம் தீர்மானித்த பிறகு காந்திஜி தளபதி ஸ்மட்ஸ்க்கு இன்னொரு கடிதம் எழுதினார். கடிதம் எழுதுவதற்குக் காரணமா யமைந்தது ஸ்மட்ஸின் பதிலில் காணப்பட்ட ஒரு வாக்கியம். "பாரபட்சமில்லாத கமிஷனை நாங்கள் நியமித்திருக்கிறோம். கமிஷன் நியமனத்தில் இந்தியர்களைக் கலந்து கொள்ளவில்லை யென்றால், தோட்ட முதலாளிகளையும் சுரங்க முதலாளிகளையும் கூடக் கலந்து கொள்ள வில்லை" என்று ஸ்மட்ஸ் எழுதியிருந்தார். காந்திஜி இதைக் குறிப்பிட்டு, "இந்தியர்களுக்கு நியாயம் செய்வது சர்க்காரின் நோக்கமா யிருந்தால் தங்களை நேரில் கண்டு சில உண்மைகளைத் தெரி வித்துக் கொள்ள விரும்புகிறேன்" என்று எழுதினார்.
அவ்வாறே காந்திஜியை நேரில் பார்க்கச் சம்மதிப்பதாக தளபதி ஸ்மட்ஸிடமிருந்து பதில் வந்தது. எனவே, அந்தப் பேட்டி முடியும் வரையில் டர்பனிலிருந்து யாத்திரை கிளம்புவதை ஒத்தி வைப்பதென்று தீர்மானம் ஆயிற்று.
இதற்கிடையில் இந்தியாவிலிருந்து ஸ்ரீ கோகலே காந்திஜிக்கு ஒரு நீண்ட தந்திச் செய்தி அனுப்பினார். மறுபடியும் சட்டமறுப்பு யாத்திரை ஆரம்பிப்பது உசிதமல்லவென்றும் லார்ட் ஹார்டிஞ்சும் தாமும் செய்து வரும் முயற்சிகளுக்கு அதனால் குந்தகம் ஏற்படும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
மகாத்மா இதற்குப் பதில் தந்தி அனுப்பினார்:- "தங்களுக்கு மன வருத்தம் அளிக்கச் சிறிதும் விரும்பவில்லை. ஆனால் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் ஆண்டவன் சாட்சியாக எடுத்துக் கொண்ட சபதத்தின் அடிப்படையில் சத்தியாக்கிரஹ இயக்கம் நடைபெறுகிறது. அந்தச் சபதத்தைக் கைவிடுவது சரியாகுமா ? ஆகையால் இயக்கத்துக்குத் தங்களுடைய ஆசியை யும் ஆதரவையும் கோருகிறோம்."
இந்தத் தந்தியினால் ஸ்ரீ கோகலேயின் உடல் நிலை பாதகம் அடைந்தது. ஆயினும் அவருடைய உற்சாகம் குறையவில்லை. காந்திஜியையும் தென்னாப்பிரிக்கா இந்தியர்களையும் அவர் கைவிடத் தீர்மானிக்கவும் இல்லை. முன்னைக் காட்டிலும் அதிக ஊக்கத்துடன் காந்திஜியின் கட்சியை ஆதரித்து நின்றார்.
இந்தச் சமயத்தில் தென்னாப்பிரிக்கா ரயில்வேக்களின் ஐரோப்பிய ஊழியர்கள் பெரும் வேலை நிறுத்தம் செய்தார்கள். இதனால் தென்னாப்பிரிக்கா சர்க்கார் பெரும் கஷ்டத்துக்கு ஆளானார்கள். சர்க்கார் கஷ்டத்துக்கு ஆளாயிருக்கும் சமயத் தில் இந்தியர்கள் சட்ட மறுப்பு யாத்திரை தொடங்கிவிட வேண்டும் என்று சிலர் சொன்னார்கள். காந்திஜி இதற்கு உடன்படவில்லை. வேலை நிறுத்தம் சம்பந்தமான சர்க்காரின் கஷ்டம் தீர்ந்த பிறகுதான் இந்தியர்கள் சத்தியாக்கிரஹம் ஆரம் பிக்க வேண்டும் என்றும், எதிராளிகளின் கஷ்டத்தைப் பயன் படுத்திக் கொள்வது சத்தியாக்கிரஹம் அல்ல வென்றும் கூறி விட்டார்.
இந்த முடிவு இங்கிலாந்தில் நல்ல பயனை அளித்தது. இந்தியர்களுடைய பெருந்தன்மையைப் பாராட்டி லார்ட் ஆம்த்தில் வாழ்த்துத் தந்தி கொடுத்தார்.
இத்தகைய சூழ்நிலையில் காந்திஜி தளபதி ஸ்மட்ஸைப் பேட்டி காண்பதற்குப் பிரிடோரியா சென்றார். அவருடன் ஸ்ரீ ஆண்ட்ரூஸம் போனார்.
இந்தத் தடவை ஜெனரல் ஸ்மட்ஸ் முன்னெல்லாம் அகம்பாவமாய் நடந்து கொண்டதுபோல் நடந்து கொள்ளவில்லை. சமரச தோரணையில் பேசினார். அவர் காந்திஜியிடம் கூறியதாவது :- 'கமிஷனில் புதிதாக அங்கத்தினரைச் சேர்த்துக் கொள்வது முடியாத காரியம். அவ்விதம் செய்தால் அரசாங்கத்தின் கௌரவத்துக்கு ஹானி ஏற்படும். அப்படி ஏற்பட் டால் நான் செய்ய விரும்புகிற சீர்திருத்தங்களைச் செய்ய முடியாமற் போய்விடும். கமிஷனைப்பற்றி உங்களுக்கு என்ன கவலை ? அரசாங்கம் உங்களுடைய கோரிக்கைகளை ஒப்புக் கொள்ளத் தீர்மானித்து விட்டது. அதற்குக் கமிஷனுடைய சிபார்சுகள் தேவை. இப்போது கமிஷனில் அங்கத்தினரா யிருப்பவர்கள் இந்தியர்களுக்கு விரோதமானவர்கள் என்று பெயர் பெற்றவர்கள். அவர்களே மூன்று பவுன் தலைவரியை எடுக்க வேண்டும் என்று சிபார்சு செய்துவிட்டால் அரசாங்கத்தின் பளு குறைந்துவிடும். உத்தேசித்திருக்கும் காரியங்களைச் சுலபமாகச் செய்துவிடலாம். உங்களுடைய நிலைமையையும் நான் அறிந்திருக்கிறேன். இந்தக் கமிஷன் முன்னிலையில் நீங்கள் சாட்சியம் விட விரும்பவில்லை யென்றால், விடவேண்டிய தில்லை. ஆனால் எதிர்ப் பிரசாரம் செய்யாமலிருங்கள் ; சத்தியாக்கிரஹத்தை நிறுத்திவையுங்கள். இதனால் உங்களுடைய நோக்கம் நிறைவேறுவதற்கு அநுகூலம் ஏற்படும் ! ”
தளபதி ஸ்மட்ஸ் இவ்வாறு சமரசமாகப் பேசினார். அத்துடன் சர்க்காரின் நோக்கம் இன்னதென்பதையும் தெரியப் படுத்திவிட்டார். இதற்குமேல் போராட்டத்தை நடத்துவதில் அர்த்தமில்லை. காரியம் ஆகவேண்டியதுதான் முக்கியம். கமிஷன் அமைப்பு எப்படி யிருந்தால் என்ன ? கமிஷன் முன்பு சாட்சியம் விடவேண்டியதுதான் என்ன முக்கியம்?
சாட்சியம் விடாவிட்டால் ஒரு காரியத்துக்குக் குந்தகம் ஏற்படும். வேலை நிறுத்தம் செய்த தொழிலாளிகளைப் போலீஸாரும் இராணுவத்தாரும் கொடுமையாக நடத்தினார்கள் என்று இந்தியத் தலைவர்கள் புகார் செய்திருக்கிறார்கள். அதைப்பற்றி விசாரிக்கவும் கமிஷனுக்கு அதிகாரம் தரப்பட்டிருந்தது, சாட்சியம் விடாமற் போனால் மேற்படி கொடுமைகளை நிரூபிக்க முடியாமற் போய்விடும். ஆனால் இதை ஒரு முக்கிய விஷயமாகக் காந்திஜி கருதவில்லை. முதலாவது, போலீஸ் கொடுமைகளைப் பற்றிச் சாட்சியம் தயாரித்து நிரூபிப்பது மிகவும் கடினமான காரியம். அந்த மாதிரி நிரூபித்துப் பழிக்குப் பழி வாங்குவது சத்தியாக்கிரஹ தர்மமும் அல்ல. சத்தியாக்கிரஹிகள் கஷ்டப் படுவதென்றே கங்கணம் கட்டிக்கொண்டவர்கள். அதைப் பற்றி இப்போது புகார் சொல்லுவதில் என்ன லாபம் ?-புகார் சொல்லாம லிருந்தால் காரியசித்திக்கு அதிக அநுகூலம் ஏற்படும்; இதை யெல்லாம் காந்திஜி யோசித்து, கமிஷன் விசாரணையில் கலந்து கொள்வது மில்லை, விசாரணை முடிவு வெளியாகும் வரையில் சத்தியாக்கிரஹம் தொடங்குவது மில்லை என்ற முடிவுக்கு வந்தார்.
மறுபடியும் சில முறை ஸ்மட்ஸம் காந்திஜியும் சந்தித்துப் பேசினார்கள். சந்திப்புகளின் முடிவில் காந்திஜி பின்னால் தகராறு ஏற்படுவதற்கு இடமில்லாமல் செய்யும் பொருட்டு தளபதி ஸ்மட்ஸுக்கு ஒரு கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்தின் சாராம்சம் பின் வருமாறு:
"இப்போது அமைக்கப்பட்டிருக்கும் கமிஷன் முன்னிலையில் சாட்சியம் விடுவதற்கு இந்தியர்களின் மனச்சாட்சியைப் பொறுத்த காரணங்கள் தடை செய்கின்றன. ஆனால் இந்தியர்களுடன் கலந்தாலோசிப்பது என்ற கொள்கையைத் தாங்கள் ஒப்புக் கொண்டிருக்கிறீர்கள். ஆகையால் கமிட்டியின் சிபார்சுகளும் அவற்றின் பேரில் சர்க்காரின் முடிவுகளும் வெளியாகும் வரையில் சத்தியாக்கிரஹத்தை நிறுத்திவைக்கவும், கமிஷனுக்கு எதிரான பிரசாரம் செய்யாம லிருக்கவும் இந்தியர்களுக்கு யோசனை சொல்லத் தயாரா யிருக்கிறேன்.
சத்தியாக்கிரஹத்தை நாங்கள் நிறுத்தி வைக்கிறபடியால் சிறையிலுள்ள சத்தியாக்கிர ஹிகளைச் சர்க்கார் விடுதலை செய்ய வேண்டு மென்று கோருகிறேன்.
இந்தியர்கள் எந்தெந்தத் துறைகளில் நியாயம் வேண்டு மென் று கோருகிறார்கள் என்பதை இங்கே வரிசைப்படுத்தித் தெரிவிக்க விரும்புகிறேன் :
(1) மூன்று பவுன் தலைவரியை எடுத்துவிட வேண்டும்.
(2) ஹிந்து மத வழக்கப்படியும், இஸ்லாமிய மத வழக்கப் படியும் நடந்த கலியாணங்களைச் சட்ட பூர்வமாக அங்கீகரித்து அமுல் செய்ய வேண்டும்.
(3) படித்த இந்தியர்கள் சம்பந்தமான தடைகள் நீக்கப் படவேண்டும்.
(4) ஒரு மாகாணத்தில் இந்தியர்களுக்குள்ள உரிமைகள் மற்ற மாகாணங்களிலும் ஒப்புக்கொள்ளப்பட வேண்டும்.
(5) இந்தியர்களைப் பாதிக்கும் சட்டங்கள் நியாயமாகவும் மாமூல் உரிமைகளுக்குக் குந்தக மில்லாமலும் அமுல் நடத்தப் படவேண்டும்.
மேலே கண்ட கோரிக்கைகளைத் தாங்கள் அநுகூலமாகக் கவனிப்பதாயிருந்தால் இந்தக் கடிதத்தின் ஆரம்பத்தில் கூறியபடி இந்தியர்களுக்கு நான் யோசனை சொல்லக் கூடும்."
காந்திஜி எழுதிய மேற்படி கடிதத்துக்குத் தளபதி ஸ்மட்ஸ் பதிலின் சாராம்சம் வருமாறு:
"கமிஷன் முன்னால் நீங்கள் சாட்சியம் விட முடியாதது பற்றி வருந்துகிறேன். பழைய புண்களைக் கிளறவேண்டாம் என்கிற தங்களுடைய நோக்கத்தைப் பாராட்டுகிறேன். உங்களுடைய கடிதம் வருவதற்கு முன்பே எல்லாச் சத்தியாக்கிரஹக் கைதிகளையும் விடுதலை செய்யச் சர்க்கார் உத்தரவு பிறப்பித்தாகி விட்டது. நீங்கள் குறிப்பிட்டிருக்கும் கோரிக்கைகளைப் பொறுத்தவரையில் விசாரணைக் கமிஷனுடைய சிபார்சுகளைப் பார்த்து சர்க்கார் தக்க நடவடிக்கை எடுப்பார்கள்."
மேற்கண்ட இரண்டு கடிதங்களும் ஸ்மட்ஸ் - காந்தி ஒப்பந்தம் என்று தென்னாப்பிரிக்கா சரித்திரத்தில் பிரசித்தி பெற்றன. ஏன், உலக சரித்திரத்திலேயே பிரசித்தி பெற்றன என்றும் சொல்லலாம். சர்வாதிகாரமும் இராணுவ பலமும் படைத்த ஒரு சர்க்காரை நிராயுதபாணிகளான மக்கள் பலாத்காரத்தைக் கையாளாமல் அஹிம்சை முறையினால் எதிர்த்துப் போராடிச் சமரசத்துக்கு இணங்கும்படி செய்தது உலக சரித்திரத்திலேயே ஓர் அற்புதம் அல்லவா ?
காந்திஜி இத்தகைய சமரசம் செய்து கொண்டதுபற்றி அவர் பேரில் சிலர் புகார் சொல்லாமல் விடவில்லை. 1908-ம் வருஷத்தில் இதேமாதிரி, தளபதி ஸ்மட்ஸின் பேச்சை நம்பி மோசம் போனதை எடுத்துக் காட்டினார்கள். மறுபடியும் அதே கதிதான் நேரிடும் என்றார்கள். இப்போது சத்தியாக் கிரஹத்தை நிறுத்தினால் மறுபடி இயக்கத்தை ஆரம்பிக்கவே முடியாது என்று எச்சரித்தார்கள்.
இதற்கெல்லாம் தக்க சமாதானம் காந்தி மகான் கூறினார். எதிராளிகளிடம் நம்பிக்கை வைப்பது சத்தியாக்கிரஹ தர்மத்தின் அடிப்படை என்று சுட்டிக் காட்டினார். எத்தனை தடவை ஏமாந்தாலும் மறுபடி நம்பியே தீரவேண்டும் என்று சொன்னார். மேலும் இந்தத் தடவை சமரசப் பேச்சுகளின் போது ஸ்ரீ சி. எப். ஆண்ட்ரூஸ் கூட இருந்திருப்பதாலும், இந்திய சர்க்காரின் சார்பாக வந்திருக்கும் ஸர் பெஞ்சமின் ராபர்ட் ஸன் நிலைமையைக் கவனித்து வருவதாலும், மோசம் போக இடமில்லை என்றும் தைரியம் கூறினார். கடைசியாக இந்தியர்கள் அனைவரும் காந்தி மகாத்மாவின் யோசனைகளை ஏகோபித்து ஒப்புக் கொண்டார்.
கமிஷனுடைய சிபார்சுகள் வெகு சீக்கிரத்தில் வெளியாகி விட்டன. எதிர்பார்த்ததுபோல் அவை இந்தியர்களுக்குச் சாதகமாகவே இருந்தன. மூன்று பவுன் தலைவரியை எடுக்க வேண்டும் என்றும் இந்தியர்களின் கலியாணங்களை அங்கீகரிக்கச் சட்டம் செய்ய வேண்டும் என்றும் கூறியதுடன், இந்தியர்களுக்குச் சாதகமான இன்னும் சில சில்லறைச் சிபார்சுகளும் செய்திருந்தார்கள். ஸ்மட்ஸ் கூ றியது உண்மையாயிற்று. மேற்படி சிபார்சுகளை யொட்டிப் பார்லிமெண்டில் சட்டங்கள் சீக்கிரத்தில் நிறைவேற்றப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்தச் செய்தியைத் தெரிந்துகொண்டு ஸ்ரீ ஆண்ட்ரூஸ் இங்கிலாந்துக்கும் ஸர் பெஞ்சமின் ராபர்ட்ஸன் இந்தியாவுக்கும் பிரயாணமானார்கள்.
கமிஷன் அறிக்கை வெளியான சில தினங்களில் இந்தியர் குறை நிவாரண மசோதா என்ற பெயருடன் சர்க்கார் மசோதா அரசாங்க கெஜட்டில் பிரசுரமாயிற்று. அதில் ஒன்பது பிரிவுகள் இருந்தன. ஒரு பிரிவின் மூலம் மாஜி ஒப்பந்தத் தொழிலாளரின் மீது விதிக்கப்பட்டிருந்த மூன்று பவுன் தலைவரி நீக்கப்பட்டது. மற்றொரு பிரிவின் மூலம் ஹிந்து - முஸ்லிம் மத சம்பிரதாயப்படி செய்த கலியாணங்கள் சட்டபூர்வமானவை என்று ஒப்புக் கொள்ளப்பட்டது. நேட்டாலில் ஒரு தடவை கொடுக்கப்பட்ட சர்ட்டிபிகேட் தென்னாப்பிரிக்கா முழுவதி லும் செல்லும் என்று அங்கீகரிக்கப் பட்டது. மாகாணத்துக்கு மாகாணம் இந்தியர்கள் செல்வதில் உள்ள தடைகள் நீக்கப் பட்டன.
தென்னாப்பிரிக்கா பார்லிமெண்டில் மசோதா விவாதத் துக்கு வந்தபோது காந்தி மகாத்மா கேப் டவுனுக்குச் சென் றிருந்தார். விவாதம் நல்ல முறையில் நடந்து, மசோதா வெற்றி கரமாக நிறைவேறியது.
இதற்குப் பிறகு தளபதி ஸ்மட்ஸ் காந்திஜிக்கு எழுதிய கடி தத்தில், "இந்தியர் சம்பந்தமான சட்டங்களெல்லாம் தர்ம நியாயமாக அமுல் நடத்தப்படும் " என்று உறுதி கூறினார்.
இவ்விதமாக 1906-ம் ஆண்டில் ஆரம்பமான சத்தியாக் கிரஹப் போராட்டம் 1914-ம் ஆண்டில் மகத்தான வெற்றியுடன் முடிவடைந்தது. காந்திஜி ஸ்ரீ கோகலேக்கு வாக்குக் கொடுத்திருந்தபடி தாய்நாட்டின் தொண்டில் ஈடுபடுவதற்காக இந்தியாவுக்குப் பிரயாணப்படத் தீர்மானித்தார். இருபது வருஷ காலம் வசித்து, இன்ப துன்பங்களை அநுபவித்து, வாழ்க்கை இலட்சியத்தைக் கண்டு, பெரும்போர் நடத்தி வெற்றி பெற்ற நாட்டிலிருந்து புறப்படுவது எளிதாக இல்லை. அத்தனை நாளும் கலந்து பழகிச் சிநேகங் கொண்டிருந்த நண் பர்களிடமிருந்து பிரிவதும் கஷ்டமாகத்தான் இருந்தது. ஆயினும் காந்திஜி மனத்தைத் திடப்படுத்திக் கொண்டு, 1914- ஜூலை 18 தென்னாப்பிரிக்கா இந்தியரிடம் முடிவாக விடைபெற்றுக் கொண்டு பிரயாணமானார்.
அச்சமயம் ஸ்ரீ கோகலே இங்கிலாந்தில் இருந்தார். அவருடைய விருப்பத்தின் படி இங்கிலாந்து சென்று அவரைப் பார்த்துவிட்டு இந்தியா போகலாம் என்று எண்ணி இங்கிலாந்து சென்ற கப்பலில் மகாத்மா ஏறினார்.
காந்தி மகாத்மா தென்னாப்பிரிக்காவில் நடத்திய மகத்தான சத்தியப்போரின் சரித்திரம் இத்துடன் முடிவடைகிறது. இதைப் படிக்கும்போது நமக்குத் தற்சமயம் தென்னாப்பிரிக்காவிலுள்ள இந்தியரின் நிலைமை ஞாபகம் வராமல் இராது. ( இன்னும் தென்னாப்பிரிக்கா இந்தியர்கள் கஷ்டப்பட்டுக் கொண் டுதானே இருக்கின்றார்கள் ? அவர்களுடைய துயரங். கள் தீர்ந்த பாடாக இல்லையே ? " என்று தோன்றும்.
ஆனால் ஒரு வித்தியாசத்தை ஞாபகப்படுத்திக்கொள்ள வேண்டும். அந்தக் காலத்தில் தென்னாப்பிரிக்கா இந்தியர்களின் கஷ்டம் வேறு, இப்போதுள்ள கஷ்டங்கள் வேறு.
அன்றைய நிலைமையில் மகாத்மா காந்தி போராட்டம் நடத்தி வெற்றி அடைந்திராவிடில், இப்போது தென்னாப்பிரிக்காவில் இந்தியர்களே இருந்திருக்க மாட்டார்கள். மூன்று பவுன் தலைவரி, கலியாண ரத்துத் தீர்ப்பு, கட்டாயப் பதிவுச் சட்டம் முதலியவற்றின் கொடுமையினால் இந்தியர்கள் ஒன்று இந்தியாவுக்குத் திரும்பி வந்திருப்பார்கள் ; அல்லது அடியோடு தென்னாப்பிரிக்காவில் அழிந்திருப்பார்கள்.
மகாத்மா தென்னாப்பிரிக்காவை விட்டுப் புறப்பட்டு இப்போது முப்பத்தைந்து வருஷம் ஆகிறது. இந்த முப்பத்தைந்து வருஷத்தில் அங்கே இந்தியர்கள் வாழ்ந்து, தொழில் செய்து, பொருள் தேடி, பல்கிப் பெருகியிருக்கிறார்கள். இதன் காரணமாகவே ஐரோப்பியர்கள் -ஆப்பிரிக்கர்கள் ஆகிய இரு சாராரின் பொறாமைக்கும், துவேஷத்துக்கும் ஆளாகியிருக்கிறார்கள். எனினும், எதிர்த்து நின்று போராடும் சக்தி இன்று தென் னாப்பிரிக்கா இந்தியர்களுக்கு இருக்கிறது. அந்த சக்தியை அவர்களுக்கு அளித்தது காந்தி மகாத்மாவும் அவருடைய சத்தி யாக்கிரஹ இயக்கமுந்தான்.
காந்திஜியுடன் ஒப்பந்தம் செய்துகொண்ட தளபதி ஸ்மட்ஸ் பிறகு தம் வாக்குறுதியிலிருந்து மாறவில்லை யென்பதை முக்கியமாகக் குறிப்பிடவேண்டும்.
இன்றைய தினம் நிறத்துவேஷ இனத்துவேஷ வெறி கொண்டு காரியம் செய்யும் டாக்டர் மலான் சர்க்காரை எதிர்ப்பவர்களில் தளபதி ஸ்மட்ஸ் முதன்மையாக இருக்கிறார். இதனால் தென்னாப்பிரிக்கா இந்தியர்களின் கட்சிக்கு இன்று உலக மெங்கும் ஆதரவு ஏற்பட்டு வருகிறது. இதற்கு மூலகாரணம் காந்தி மகாத்மா நடத்திய மகத்தான போராட்டத்தான் என் பதில் எள்ளளவும் ஐயமில்லை.
இப்போதும் டாக்டர் மலான் சர்க்கார் இந்தியர்களைத் தென்னாப்பிரிக்காவிலிருந்து துரத்திவிடும் நோக்கத்துடனேயே காரியம் செய்கிறார்கள். இதற்காகச் சட்ட பூர்வமான நிர்ப் பந்தங்களைக் கையாளுவதுடன் ஆப்பிரிக்காவின் சுதேசிகளையும் இந்தியர்கள் மீது கிளப்பி விட்டிருக்கிறார்கள், ஆனால் காந்திஜி காட்டிய சத்தியப் போர் முறையைத் தென்னாப்பிரிக்கா இந்தியர்கள் கையாண்டு, வெற்றி பெறலாம்.
தளபதி ஸ்மட்ஸை வென்ற ஆயுதத்தினால் டாக்டர் மலானையும் வெல்லலாம் என்பதில் சந்தேகம் என்ன ?
----------
This file was last updated on 04 Nov. 2019
Feel free to send the corrections to the .